இறைவழிபாடு

.

இக்கருத்தை மஹாகவி காளிதாஸர் தனது ரகுவம்சத்தில் விளக்குகிறார்.அதாவது திலீப மன்னனுடைய அரசாட்சியில் மக்கள் மனுகாலம் முதல் பின்பற்றி வந்த வாழ்க்கை முறையையே பின்பற்றினார்கள் என்றும், அவ்வழியை ஒரு நூலளவும் மீறவில்லை என்றும் கூறுகிறார். அதை விளக்கும் வண்ணமாக ஒரு உதாரணமும் தருகிறார். அதாவது பல நாட்கள் ஒரே பாதையில் ரதத்தை செலுத்தினால் ரதத்தின் சக்கரங்கள் பதிந்து ஒரு பள்ளம் ஏற்படும் அதற்கு பின்னர் அவ்வழியில் வேறு ஒரு ரதம் செல்லும்போது கூட அந்த ரதமானது அவ்வழியை ஒட்டியே செல்ல முடியும். மீறவே முடியாது. அதுபோல முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையிலிருந்து ஒரு அணுவளவும் மீறாமல் திலீப மன்னனது மக்கள் கடைபிடித்ததாக கூறுகிறார் மஹாகவி காளிதாஸர். எனவே வழிபாடு என்பதன் பொருள் பொதுவாக வணங்குதல் என்றாலும் நுண்மையாக அது வேத சிவாகம நெறியைப் பின்பற்றுதலையே உணர்த்துகிறது.


வழிபடும் பக்தனின் மனப் பக்குவத்திற்கேற்ப வழிபாட்டின் நோக்கமும் வேறுபடுகிறது. அவ்வகையில் வழிபாடானது உத்தம பக்தி, மத்யம பக்தி, மந்தபக்தி என்று மூன்று வகையாகக் கூறப்பட்டுள்ளது.மந்த பக்தி என்பது கடவுளிடம் பூரணமான நம்பிக்கை இல்லாத ஒரு நிலை. அந்நிலையில் பக்தன் தனக்கு எப்பொழுது தேவை ஏற்படுகிறதோ அதாவது தோஷங்கள், கஷ்டங்கள் நீங்கவேண்டும் என்பதற்காகவும் அல்லது ஏதாவது பொருள் கிடைக்கவேண்டும் உதாரணமாக, திருமணம் ஆகவேண்டும். குழந்தை பிறக்கவேண்டும், வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே வழிபடுவான். எனவே இந்த நிலைக்கு மந்தபக்தி என்றும், இதை உடையவன் மந்த பக்தன் என்றும் அழைக்கப்படுகிறான். ஒரு சிலர் இவ்வகைப்பட்ட பக்தி தவறு என்று கூறுவர். ஆனால் சாஸ்த்ரம் அங்ஙனம் கூறவில்லை. அவனையும் பக்தன் என்றே அங்கீகாரம் செய்துள்ளது. ஆனால் கடைசிவரையில் இந்நிலையிலேயே இருப்பது சிறப்பல்ல என்றும் கூறுகிறது.
