செவ்வாய், அக்டோபர் 30, 2012

முடிச்சு

``ஹேய் லதா இன்னிக்கு நான் புது டிரஸ் போட்டிட்டு வேலைக்கு வந்திருக்கேன்’’

``என்ன தீபாவளி டிரஸ்’ஆ?, வாங்கியவுடன் போட்டிடணும் இல்லேன்னா தல வெடிச்சிரும் உனக்கு..!”

``அடிப்பாவி என்ன ஒரு வில்லத்தனம் உனக்கு..  சனிக்கிழமை தீபாவளி ஷாப்பிங் போனேன். எனக்கு டிரஸ் வாங்கணும்னு நினைக்கல, ஆனால் நீண்ட நாளாக நான் தேடிய ஒரு டிரஸ் கண்ணில் பட்டது. எப்போதுமே மற்றவர்களுக்கு ஷாப்பிங் செய்வேன். இந்த முறைதான் எனக்காகச் சென்றேன். பார்த்தவுடன் அந்த டிரஸ் மனதைக் கவரவும் உடனே வாங்கினேன்..  செம விலைதான். அழகா இருந்தது. போட்டுக்கொள்ளணும் போல் தோணுச்சு, போட்டுக்கிட்டேன். வாழ்க்கையில் என்ன இருக்கு? நினைத்ததை நிறைவேற்ற முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை.!’’ இன்று காலையில் நிகழ்ந்த ஒரு பிரச்சனையைச் சொல்வதற்காக எனது உற்றதோழி லதாவை அழைத்திருந்தேன். அழைப்பை எடுத்தவுடன் பிரச்சனையைப்பற்றி பேசாமல், ஆடை வாங்கினேன், தீபாவளி ஷாப்பிங் போணேன் என, நீட்டி முழக்கினேன்.

`` சரி சரி..எஞ்ஜாய் பண்ணுப்பா..!” என்ன கலரு என்ன மாதிரியான ஆடை என்கிற கூடுதல் தகவல்களைப் பரிமாறிய பிறகு விஷயத்திற்கு வந்தேன்.

``காலையிலே ஒரு பிரச்சனை..லதா?’’

``என்னாலா, என்னாச்சு.. பெரியண்ணன் பொண்டாட்டி மீண்டும் வம்பிற்கு வறாளா?”

``அய்யே..குடும்பப்பிரச்சனை இல்லை.. ஆபிஸில்..’’

`` என்ன, கோழ் சொல்லி போட்டுக்கொடுத்துட்டாளா?..” வழக்கமான பிரச்சனைகளையே கிளறினாள் லதா.

``அதுவும் இல்லை லதா.. சரி யூகிக்காதே, நானே சொல்கிறேன்.. புதிய துணிகளை வாங்கியதும், பழய துணிகள் அலமாரியை அடைத்துக்கொண்டிருந்தது. நேற்று எல்லாவற்றையும் கழித்து, அலமாரியைத் தூய்மைப்படுத்தினேன். அப்போது சேராத பல நல்ல துணிமணிகளை ஒரு பையில் கட்டி ஆபிஸுக்குக் கொண்டு வந்தேன், கிளினிங் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்துவிடலாமே என்று. பை பெரிதாக இருக்கவும், என்னால் தூக்க முடியல. சரி, அந்த கிளினரிடமே கார் கீ’யை கொடுத்து, காரில் இருந்து எடுத்துக்கொள்ளச்சொல்லலாமே என அவளைத் தேடினேன்..”

``அவளைக் காலையிலே தேடினால் கிடைப்பாளா..? அங்கேயும் இங்கேயும் போய் ஊர்கத பேசறவளாச்சே அவ.”

லதாவிற்கு இங்குள்ள நிலவரங்கள் பற்றி நன்கு தெரியும். ஏற்கனவே இங்கே வேலை செய்தவள் லதா. லண்டனில் இருக்கும் அம்மா நோய்வாய்ப்பட்டபோது, அங்கு சென்று அவரைக் கவனித்துக்கொள்வதற்கு, தொடர்ந்து சில மாதங்கள் விடுப்பு கேட்கவும், இதுபோன்ற நீண்ட விடுமுறைகளுக்காகான சட்டத்திட்டங்கள் இங்கே இல்லை என்று நிர்வாகம் சொல்லிவிட்டதால், வேறு வழியில்லாமல்  அரை மனதோடு வேலை விட்டுச்சென்று விட்டாள். அவள் இங்கே வேலை செய்த போது நாங்கள் இருவரும் இணைபிரியா தோழிகள். ஆக, சில விஷயங்களைச்  சொன்னவுடன் புரிந்துகொள்வாள் என்பது கூடுதல் தகுதி. மேலும் எனது சில நடவடிக்கைகளில் ஏற்கனவே தொடர்பு இருப்பதால், மீண்டும் `தாத்தா பாட்டி’ கதைகள் எல்லாம் சொல்லி ஆவியை வீணடிக்கின்ற வேலையெல்லாம் இருக்காது. சம்பந்தமே இல்லாத சிலரிடம் சொல்லுகிற போது, அவர் யார்? இவர் யாரு? இது எப்போ நடந்தது? அது எப்போ நடந்தது? மொதல்லே இருந்து சொல்லு, புரியல... விளங்கல.. என வாட்டி எடுப்பார்கள். அதனால் நம்மோடு சில செயல்களில் கூடவே இருப்பவர்களிடம் தான் பிரச்சனைகளைப் பகிரவேண்டும். எல்லோரிடமும் என்றால், சக்தி விரையமாகும். உதாரணம் : இலக்கியம் பற்றி அறவே வாசிப்பு பழக்கமில்லாதவர்களிடம் பேசுவது போல்..!  ஒருவர் கிடைத்தாலே போதும். ஆனால் அந்த ஒருவர் கிடைப்பதுதான் அபூர்வம். அதுவே சிக்கல்.

``ஆமாம் லதா. கண்டீனில் அங்கே உள்ள வர்க்க்ஸிடம் கதையளந்துக் கொண்டிருந்தாள். நான் நுழைந்தவுடன் அந்த கண்டீன் காரி வாளுவாளுன்னு சத்தம் போட ஆரம்பித்து விட்டாள். என்ன கதை என்றால், இந்த கிளினர் அடிக்கடி அங்கே போய் கதை பேசுவதால், அங்கே வேலை செய்பவர்கள் வேலையை ஒழுங்காகச் செய்யாமல் சாப்பாட்டில் உப்பு புளி மிளகாய் அதிகமாகப்போட்டு விடுகிறார்களாம். மெனெஜ்மெண்டில் அதிக கம்ப்ளெயின் போகிறது என என்னிடம் சொல்லி சத்தம் போட்டாள்.”

``அடியே கோவில்பட்டி வீரலட்சுமி சாரி விஜயலக்ஷ்மி, உடனே நீ என்ன பண்ணினாய்..!?”

``நான் என்ன பண்ணுவேன், எதையும் காது கொடுத்துக்கேட்காமல், பேசிக்கொண்டிருந்த கிளினரை அழைத்து, கார் கீ’யை அவளிடம் கொடுத்து, `காரில் துணிமணிகள் இருக்கு, போய் எடுத்துக்கோ’ என்று சொல்லி, அந்த கண்டீன்காரி கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததை அவளிடம் சொல்லி, `இனி அங்கே போகாதே, பிரச்சனை வரும்’ன்னு மட்டும்தான் சொன்னேன். அவ்வளவுதான் என் பங்கு. அதற்கப்புறம் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ எனக்குத்தெரியாது. அந்த பொம்பள வரிஞ்சி கட்டிக்கொண்டு வந்துட்டா சண்டைக்கு காலையிலே... `ஏய், நான் என்ன சொன்னேன், நீ என்ன வத்தி வச்சே.. இங்கேயும் அங்கேயும் சொல்றதுதான் உன் வேலையா? அவ வந்து அங்கே கத்தறா. எங்க ஆயி ஆத்தா வரைக்கும் இழுக்கறா..ஆச்ச போச்சா’ன்னு சத்தம் போடறா அந்த மனுசி.”

``ம்ம்ம்..தேவதான்..அப்புறம்?”

`` நான் பொறுமையா.. `நடந்தது என்னன்னு நிதானமா கேளு.. சத்தம் போடாதே. போஸ் வந்திடப்போறாரு. பிரச்சனையாகும், இது வீடு இல்லே’ன்னு நிதானமா சொல்றேன் கேட்க மாட்டேன் என்கிறாள். இஷடத்திற்கு வாயிற்கு வந்தபடி கத்துகிறாள்.., சமாதனப்படுத்திப்பார்த்தேன், பக்கத்து அறையில் உள்ளவர்கள் எல்லோரும் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. எனக்கு என்னமோ ஒண்ணு மண்டைக்கு மணியடிக்க.. பொறுமையை எழந்துட்டேன் `ஏய், உனக்கு என்ன கீலாவா, சொல்றதைக்கேட்க மாட்டே, அவ வெளியூர்காரி எதாவது உளறுவாள், உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை இப்போ, ஏன் என்னிடம் வந்து கத்துகிறாய்? உங்க போஸை அழைக்கவா? ஸ்டூப்பிட் இடியட், அறிவிருக்கா, இது என்ன உன் வீடா?, சண்டைப்போட ஆசையா இருந்தா, தெருவுக்க்ப்போ, உனக்கு மட்டும்தான் கத்த முடியும்னு நெனைக்கிறியா? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே உம்மனசுல, நீ சொன்னதைத்தானே நான் சொன்னேன், வேறு எதாவது புதிதாக உளறினேனா?  தைரியம் இருந்தா பின்னாடி பேசாதே, போய் அவளுக்கு நேராக பேசு.. கூப்பிடு அவளை. நான் என்ன சொன்னேன் என்று அவளே சொல்லுவாள். லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு பவ்யமா வேலைக்கு வருவதால், என்னை என்ன லூசுன்னு நெனைச்சியா? பக்கா லொக்கலு நானு, இறங்கினேன்.. நாறிடும் பிஞ்சிடும் ஜாக்ரதை..’ன்னு கத்திட்டேன். ஆபிஸே குழாயடி மாதிரியாயிடுச்சு.., நான் என்னமோ அந்த பொம்பலைய அடிக்கப்போறதா எல்லோரும் நினைச்சுக்கிட்டு, என்னை இறுக்கிப்பிடிச்சுக்கிட்டாங்க.. `வேணாம் மேடம் விடுங்க விடுங்க’ன்னு.. கொடுமை’லா படு டென்ஷன்..”

``அய்யையோ.. அப்புறம்?” லதா ஆர்வமாக கதை கேட்டாள்.

`` ஆடிப்போயிட்டா அவ.. குரல் தாழ்த்தி, `இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி குதிக்கிறீங்க மேடம்’ன்னு முகமெல்லாம் வெளிறி பயந்துட்டா. இந்த பவ்யம் மொதல்லே இருந்திருக்கணுமா இல்லையா? வெட்கம் நம்மவர்களோட.. ச்சே.”

``கடைசியா என்னதான் ஆச்சு..?”

``ம்ம்ம்.. அந்த பொம்பளையோட போஸ் போன் பண்ணினான். நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். மன்னிப்பு கேட்டான். அவள திட்டியிருப்பான் போலிருக்கு.. காப்பி கலக்கி எடுத்துக்கொண்டு வந்து, `குடி குடி.. சாரி கீரி’ன்னு காலில் விழாத கொறையா மன்னிப்பு கேட்டா.. காப்பியும் வேணா ஒண்ணும் வேணா போயிக்கோ’ன்னு முகத்தைத்திருப்பிக்கொண்டேன். அழுதாள்.. எல்லாம் சரியாயிட்ட மாதிரி ஒரு தோற்றம் வந்தது. ஆனாலும் எனக்கும் ஒரு ` வார்னிங் மெமோ’ வந்தது .. ஆபிஸில் ரௌடித்தனம் செய்கிறேன் என்று..தேவையா இதெல்லாம் எனக்கு.. !!?”

`` விஜி, எனக்கு ஒண்ணு தோணுது, சொன்னா திட்டுவ...!” பீடிகை போட்டாள் லதா.

``என்ன?”

``நீ போட்டிருக்கிற புதிய டிரஸ் உனக்கு ராசி இல்லை. சிகப்பு கலர் அசம்பாவித கலர். டேஞ்சர் கலர். இனிமே சிகப்பு கலர் டிரஸ் வாங்காதே.. நான் சொன்னா நீ நம்பமாட்டே. ஆனால் அதுதான் உண்மை. ப்ளீஸ் இனிமே அந்த டிரஸைப் போடாதே...’’

``நல்லா போடு முடிச்சு.. நீயும் உன் ஐதீகமும்.. லூசு..” முணகிக்கொண்டே போனை வைத்தேன்.

ஞாயிறு, அக்டோபர் 28, 2012

எல்லாமே தலைகீழ்



தீபாவளிக்கு curtain ஆடர் செய்து தைக்கக்கொடுத்திருந்தேன். பெரிய பிரபல  பேரங்காடியில் துணி வாங்கி அங்கேயே professional curtain  tailors களிடம் தைக்கக்கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு மாதத்திற்கு முன்  எல்லாம் ரெடி என அழைப்பு வரவும், வேலை முடிந்தவுடன்  அவசர அவசரமாகச் சென்று எடுத்து வந்து ஒரு இடத்தில் போட்டு விட்டேன், நம்பிக்கைதான்.

இன்று நேரமிருக்கவும் அதை எடுத்துப்பார்த்தால், எல்லாம் தலைகீழ். தையல் சரியாக இல்லை..மேலும் கீழுமாகத் தைத்து, அலங்கோலமாக இருந்தது பார்ப்பதற்கு. கோபம், கோபம்.. காரணம் விலை மலிவு அல்லவே...

அழைத்தேன் அந்த கம்பனிக்கு. ஒரு மலாய் பெண்மணி அழைப்பை எடுத்தாள். பேசுகிற நான் தமிழ்பெண் என்று தெரிந்தவுடன் ஒரு தமிழ்ப்பெண்ணிடம் அழைப்பைக்கொடுத்தாள்.

தமிழ்ப்பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இன்று ஞாயிற்றுக்கிழமை நாளை எடுத்துக்கொண்டு வாருங்கள், சூப்பர்வைசர் இருப்பார், அவர் செட்டல் செய்வார் கவலை வேண்டாம், என்றார். எல்லம் சரியே, ஆனால் தையல்காரி யார்? என்று கேட்டபோது, `ஒரு நாட்டுக்காரிதான்’ என்றார் பாருங்கள். எனக்கு கடுமையான எரிச்சல். அவள் நாட்டுக்காரி என்றால் நீ யார்?  அவர்களை (மலாய்க்காரர்களை) சிறுமைபடுத்துவதாக நினைத்துக்கொண்டு, நம்மை நாமே சிறுமை படுத்திக்கொள்வதுதான் எங்க ஊரில் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். பேசிக்கொண்டிருந்த விவரத்தை விட, இது இன்னும் கூடுதல் கடுப்பேற்றியது என்னை. நம்ம பெண்ணை கொஞ்சம் கண்டித்து, இனி மேல் அவள் நாட்டுக்காரி, இவன் நாட்டுக்காரன், என்கிற அடையாள அடைமொழி எல்லாம் வேண்டாம். நாம் எல்லோரும் வந்தேறிகள்தான். இப்போது இது நம் நாடு. அது எல்லோருக்கும் சொந்தம், என எச்சரித்து விட்டு,  தொலைப்பேசியை வைத்தேன்.

அதற்குள் என் மகன்.. `ஏம்மா எல்லார் கிட்டேயும் சண்டை போடறீங்க?’ என்றான். அவனும் என் கணவரும் ஒன்று. எதையும் தட்டிக்கேட்கக்கூடாது. பொருள்களில் சேதமென்றால், பரவாயில்லை பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமென்றே செய்தார்களா, எதோ தவறு நடந்திருக்கும் .. நாம் என்ன பர்ஃபெக்ட்’ஆ? என்கிற தத்துவமெல்லாம் பேசி, புதிதாக வாங்குவார்களேயொழிய ஒரு போதும் நியாயம் கேட்க படையெடுக்கமாட்டார்கள்.

எல்லோர் வீட்டிலும் ஆண்கள் இப்படித்தானா?

வியாழன், அக்டோபர் 25, 2012

பத்திய விடுதி

இன்று மதியம் வித்தியாசமான தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்தேன்.

மிகப்பெரிய எண்ணிக்கையில் மின்சாரப்பொருட்களை வாங்க எங்களின் கம்பனி ப்ரொஜெக்ட் ஜெனரல் மானேஜரை சந்திக்க வந்திருந்தார்.

சம்பந்தப்பட்ட அவ்வுயரதிகாரி உணவருந்திவிட்டு திரும்புவதற்கு வெகுநேரமானதால், என்னிடம் சில விவரங்களை சேகரித்துக்கொண்டிருந்தார்.

கம்பனியின் உற்பத்திப்பொருட்களின் தரம் பற்றியும், எங்களின் கம்பனிப்பொருட்களை அவர் இதுவரையில் பயன்படுத்தியதில்லை என்றும், பொருட்களில் பிரச்சனை என்று வரும்போது, விரைவு சேவை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும், அதனின் உபரி பொருட்களின் விலை பற்றியும் அவைகள் சுலபமாக எங்கும் கிடைக்குமா என்பதையும், அதிக எண்ணிக்கையில் வாங்கும் போது அதனின் கழிவு எத்தனை விழுக்காடு  வரை குறையும் என்பதனைப்பற்றியும் ஓர் அறிமுக உரையாடல் நிகழ்ந்ததுக்கொண்டிருந்தது எங்களுக்குள்.

நம்மவர் என்பதால் எனக்குத்தெரிந்த சில விவரங்களை பகிர்ந்துகொண்டிருந்தேன்.பேச்சுவாக்கில் கேட்டேன் `எதற்கு சார், இவ்வளவு ஏர்கோண்ட், டீவி மற்றும் காற்று தூய்மைப்படுத்தும் (air purifier)  கருவிகள், புதிதாக ஹோட்டல் எதும் திறக்கவிருக்கின்றீர்களா?’.  ஒவ்வொன்றிலும் எண்ணிக்கை தலா அறுபது வரை ஆடர் செய்ய, பட்டியலை கையோடு தயார் செய்து வைத்திருந்தார்..

`CONFINEMENT CENTRE ஆரம்பிக்கவுள்ளோம். முதலில் வீட்டில்தான் சிறிய அளவில் செய்து வந்தோம், இப்போது பிஸ்னஸ் வளர்ச்சியடைந்து விட்டது, வீடு கொள்ளவில்லை. நிறைய பேருடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது, ஆறு மில்லியன் செலவில் இந்த  CONFINEMENT CENTRE கட்ட ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது. இரண்டு மாடி கடைவீடுகளைச் சேர்த்து வாங்கி முழுமையாக இதற்கே பயன்படுத்தி  அதைப் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றோம். கீழே முப்பது அறைகள், மேல் மாடியில் முப்பது அறைகள். எல்லா அறைகளிலும் ஏசி, டீவி, air purifier என பொருத்த உள்ளோம். கட்டும்போதே முழுமையாக இவற்றையெல்லாம் செய்துவிட்டால், பிரச்சனை குறையும், இல்லையென்றால் அதற்கென்று வரும் செலவு சங்கடம் இன்னும் அதிகமாகும்..’ என்றார்.



எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.  `CONFINEMENT CENTRE?? அப்படின்னா என்ன சார்?’ கேட்டேன்.

`ஆமாம், இங்கே உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்க, அதுவும் அநேகமா தமிழர்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். காரணம், இது சீனர்கள் மற்றும் மேலை நாட்டவர்களின் கலாச்சாரம். நமது அண்டை நாடான சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இந்த செண்டர் பிரபலம். சீனாவிலும் பரபரப்பாக இயங்கிவருகிறது. இங்கே நம் நாட்டை எடுத்துக்கொண்டால், நான் தான் முதல் முதலில் பெரிய அளவில் ஆரம்பிக்கவுள்ளேன். சிலர் தங்கியிருக்கின்ற வீட்டை விரிவுபடுத்தி லைசன்ஸ் எதுவுமில்லாமல் பணம் சம்பாதிக்க இந்த சேவையை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். கேள்விப்பட்டவரை பெரிய அளவில் செண்டர் திறப்பது நானாகத்தான் இருக்கனும். என் மனைவியின் (சீனப்பெண்) அம்மா சீன நாட்டுவைத்தியத்துறையில் கைத்தேர்ந்தவர். அதுவும் அத்துறையில் அவர் தேர்ச்சிப்பெற்றவர் என்கிற சான்றிதழ் எல்லாம் கைவசம் வைத்திருக்கிறார். வீடுவீடாகச் சென்று, பிரசவித்த பெண்மணிகளுக்கு சீன மூலிகை உணவுகளைத் தயார் செய்வது, பிறந்த குழந்தைகளைப் பராமறிப்பது, மகப்பேறு காலத்தில் தாய் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைக் களைவது, தாயயையும் சேயையும் பாதுகாத்துக்கொள்வது, போன்ற பல வேலைகளை பல வருடங்களாகச் செய்து வந்துள்ளார். என் மனைவி நவீன மருத்துவத் தாதி. பல மருத்துவர்களிடமும் எங்களுக்குத் தொடர்பு உள்ளது. இது அரிய வாய்ப்பாகவே பட்டதால் இந்த செண்டரை ஆரம்பிக்க நானும் துணிந்து விட்டேன். முக்கால்வாசி வேலைகள் முடியும் தருவாயில், கூடிய விரைவில் திறப்புவிழா நடைபெறும் கலந்துக்கொள்ளுங்கள்..’ என, அவரின் பெயர் அட்டையை என்னிடம் வழங்கினார்.

இத்துறை எனக்குப் புதுமையாகவும் சுவாரிஸ்யமாகவும் இருந்ததால் மேலும் தகவலறிய.. `ஓ, குழந்தை பிறந்தவுடன் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் பத்தியமாக இருப்பார்களே, அந்த காலகட்டத்தில் தாய் சேய் போன்றவர்களைக் கவனித்துக்கொள்கிற நர்சிங் ஹோம் மாதிரியா? ’

`ம்ம்..ஏறக்குறைய அதுபோல்தான்..’

`அப்படியென்றால் நிறைய ஆட்களை வேலைக்கு வைக்கவேண்டுமே.!, அது என்ன லேசுபட்ட வேலையா? அந்த துறையில் கைத்தேர்ந்தவர்களை தேடி எடுத்து வேலைக்கு அமர்த்த வேண்டுமே.. கஷடம் இல்லெ..ம்ம்.!!’

`அப்படியெல்லாம் இல்லிங்க, அவங்க அம்மா இருக்காங்க, அந்த கால ஆயம்மா. என் மனைவி இருக்காங்க இந்த கால நர்ஸ், அதற்கு மேலே, பொதுவான உதவியாளர்கள் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக்கொள்ளலாம். பிரச்சனையில்லை. மெயின் வேலைகளை அவர்கள் இருவரும் பார்த்துக்கொள்வார்கள், மற்ற மற்ற  உதவிகளை சாதரண வேலையாட்கள் செய்வார்கள்.’ 

மேலும் விவரமறிய..`எப்படிங்க, அங்கே வந்து பிரசவித்துக்கொள்வார்களா? ’

`அடடா, அது பிசவ செண்டர் இல்லிங்க. எப்படின்னா.. ஆஸ்பித்திரியில் குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்கள். வீட்டிற்கு வந்தவுடன் சில தாய்மார்களுக்கு பணம் இருக்கும், ஆனால் முறையாக பாதுகாப்பு வழங்குகிற உறவுகள் இருக்காது. உங்களுக்குத்தான் தெரியுமே, குழந்தை பெற்றபின் எவ்வளவு வேதனைகளை ஒரு தாய் அனுபவிக்கின்றாள் என்று..! குழந்தையைத் தூக்கி பால் கொடுக்கக்கூட முடியாமல் சிரமப்படும் பெண்கள், ஆப்ரேஷன் மூலமாக குழந்தையைப் பிரசவித்த பெண்கள் சிலர் நடக்கக்கூட முடியாமல் அவதிப்படுவது, பிரசவம் முடிந்தவுடம் கடுமையான காய்ச்சல், பால்கட்டிக்கொண்டு வலி, பயங்கர முதுகுவலி, நரம்பு வலி, அடிபாதம் வலி போன்ற அவஸ்தைகள் சொல்லி மாளாது. சில பெண்கள் அப்படியே மனதில் வைத்துக்கொண்டு வலிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு, எல்லாம் தானே சரியாகிவிடுமென்று அமைதியாய் இருந்து விடுவார்கள். இதுபோன்ற காலகட்டத்தில் இவற்றிற்கெல்லாம் நாங்கள் நல்ல தீர்வு வழங்குவோம். வீட்டில் உள்ள யாவருக்கும் தொல்லை கொடுக்காமல், பெரிசுகளையும் துன்புறுத்தாமல், எங்களின் செண்டரில் ரெஜிஸ்டர் செய்துகொண்டு எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கலாம்..’

`நீங்கள் சொல்கிற தீர்வு என்பது?’ இன்னும் அதிகாரி வரவில்லை..பேச்சைத்தொடர்ந்தேன்.

`தாயிற்கு, நேராநேரத்திற்கு பத்திய உணவு சமைத்துக்கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியம் பேணுவது, நல்ல முறையில் குளிப்பாட்டுவது, சருமங்களைப் பாதுகாப்பது, உடம்பு பிடித்து விடுவது, நன்கு உறக்கம் கொள்ளவைப்பது. அதாவது குழந்தைகளை அவர்களின் அருகில் விடாமல் அவர்களை ஓய்வெடுக்கவைப்பது. சமசீர் உணவு வழங்குவது, அழுக்குத்துணிகளை துவைப்பது, மெல்லிசையில் தாலாட்டுவது, மூலிகை மருந்தளிப்பது போன்ற பராமறிப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறும். குழைந்தகளுக்கும் அதே போன்ற சேவைகளை வழங்குவோம், தாயிடம் தாய்ப்பால் உறிஞ்சுவதற்கு பயிற்சி அளிப்பது, அமைதியாகத் தூங்கும் முறைகளைப் பழக்குவது, வேளாவேளைக்கு பால் அருந்தக்கொடுப்பது, நோய் வராமல் பார்த்துக்கொள்வது, முறையாகக் குளிப்பாட்டுவது, என அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக்கொள்வோம்...’ சொல்லிமுடித்தார், அவர் யாருக்காக காத்திருந்தாரோ அந்த அதிகாரியும் வந்துவிட்டார்.  இருவரும் மீட்டிங் அறைக்குள் நுழைந்தார்கள்.

எனக்கு ஆச்சிரியமாகவே இருந்தது. என்னன்னமோ சேவைகள். அந்த சேவைகள் அனைத்தும் என் கண்முன் நிழலாடின.

குழந்தை பிறந்த மறுகணம் எவ்வளவு அவஸ்தைகள். அம்மா பாட்டிமார்கள் பார்க்கிறேன் என இன்னும் கூடுதல் கொடுமைகளையல்லவா கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நம்மை நிம்மதியாகவே விடமாட்டார்களே.!

``நாங்களெல்லாம் அந்த காலத்திலே..எ.. எ.. எ.. வேலைக்குப்போய் வந்து வீட்டிலே பெத்துபோட்டோம். காலையிலே பெத்துட்டு, மாலையிலே காண்டா போட்டு வாளியில் தண்ணி தூக்கியிருக்கோம். பத்தியமெல்லாம் கிடையாது, வெந்தத சாப்பிட்டு விதியேன்னு கிடப்போம்.. ஆத்துல போய் துணிதுவச்சு கொண்டுவரணும். பதினாறு இருபது பேருக்கு மூணு வேளையும் சமைச்சுப்போடணும், புட்டி பால் எல்லாம் கிடையாது, மார்ல சொறக்கிற பாலத்தான் ஆறு வயசு வரைக்கும் குடுப்போம்.. ம்ம்ம், இப்போ என்னாடான்னா, பார்க்க ஆளு இருக்கு, ஆனாக்கா வீட்டுல வேலை செய்யவே நோவுது இதுகளுக்கு.. அங்க வலி இங்க வலின்னு கத்தறாளுங்க.. தொட்டா குத்தங்கிறாளுங்க. பெத்த புள்ளய தூக்கமாட்டேகிறாளுங்க.. நடக்க முடியலங்கிறாளுங்க, ஒரு புள்ள பெத்துட்டு இப்படி பெருத்து கிடக்கறாளுங்க, கண்டதெல்லாம் திங்கணுங்கிறாளுங்க, எண்ணெயில பொரிச்சதெல்லாம் விலாசறாளுங்க, வாயக்கட்டமாட்டேங்கிறாளுங்க, நொறுக்குத்தீனி திங்கறாளுங்க... எஹேம்ம்ம்.. !!!’’ இப்படி அலுத்துக்கொண்ட பெருசுகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க தம்கட்டி வலிகளைப்பொருத்துக்கொண்டு மனவுளைச்சலில் உழன்று அமைதி காத்துள்ளோம். இந்த மாதிரி ஒரு செண்டர் அப்பவே இருந்திருந்தால், உடலை நன்கு தேற்றியிருக்கலாம்.. நினைவுகளை அசைப்போட்ட வண்ணம் கண்கள் எதையோ கணினியில் தேட, ஒரு மணி நேரங்கழித்து..

 `சரிங்க பேசியாச்சு..quotation கொடுக்கறேன் என்றிருக்கார். பார்ப்போம்.. அப்ப நான் கிளம்பறேன். எதுவொண்ணுன்னா கூப்பிடுங்க.. யாராவது இருந்தா ரெகமெண்ட் பண்ணுங்க, என்னுடைய பெயர் அட்டையை கூடுதலாக கொடுக்கிறேன், விசாரிப்பவர்களுக்கு கொடுங்கள், சரியா..!’ என்று சொல்லி விடைப்பெற்றவரை அழைத்து..

` பீஸ் எவ்வளவு வருங்க ஒரு மாசத்திற்கு?’

`நம்ம பணம் நாலாயிரத்தி எண்ணூறு (RM4,800) வெள்ளிங்க.. !’

@#$%^&

நல்லவேளை.. அம்மாவிற்கு நான் வெறும் நூற்றைம்பது வெள்ளிதான் கொடுத்தேன்.. என்னையும் குழந்தையையும் குளிப்பாட்டி விட்ட  பாட்டிக்கு ஒரு புதுப் புடவை மட்டுமே..

செவ்வாய், அக்டோபர் 23, 2012

நவராத்திரி அறியாமல் கொண்டாடப்படும் திருநாளா?

இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படும் முக்கியத் திருநாள்களில் ஒன்று நவராத்திரி ஆகும். 

நவராத்திரி : வடமொழியில் நவராத்திரி என்றால் - ஒன்பது இரவுகள் என்று பொருள்படும். பெயரே சொல்லிவிடும் இது தென்னாட்டு திருவிழா இல்லை என்று. பெரும்பாலும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளில் வாழ்வோரும் வேறுவேறு விதமாகவே நவராத்திரியைக் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் சொல்லும் காரணக் கதைகளும் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றது. 

ப்ரௌஸ்தபாத மாதம், அதாவது இந்திய நாட்காட்டியின் படி ஆறாவது மாதம் பிரதம் திதி முதல் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் நோன்பு நோற்று கொண்டாடுவதே இந்த நவராத்திரி ஆகும். நம் எத்தனை இந்துக்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது இது ஒன்று மட்டும் நவராத்திரி அல்ல, ஆண்டுக்கு ஐந்து முறை நவராத்திரிக் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் மிக முக்கியமானவை குளிர்க்காலம், வசந்தக் காலம் / வெயில் காலம் ஆகியவற்றின் தொடக்கத்தில் கொண்டாடப்படும் இந்த இரு நவராத்திரிகளே ஆகும். 

பின்னணி புனைவுகள் : இந்தக் குளிர்க்காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியே மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது. இவற்றைப் பிண்ணி பல புனைவுக் கதைகள் இருக்கின்றன, அதாவது ராமன் - ராவணன் யுத்தம் நடந்த காலமாகவும், கிருஷ்ணன் - நரகாசூரனை வதம் செய்ததாகவும், துர்க்கா - மகிஷாசூரனை வதம் செய்ததாகவும் பல புனைவுக் கதைகள் நிலவுகின்றன. உண்மையில் இக்கதைகள் உண்மை இல்லை என்பதை ஒரு ஒற்றுமை பாங்கில்லாமல் கதைகள் உலாவுவதில் இருந்தே அறிந்துக் கொள்ளலாம். அல்லது இதனை ஆரியர் - திராவிடர் மீது தொடுத்த போர்களின் வெற்றியின் பின்னணியில் எழுந்தவையாகக் கூட இருக்கலாம். ஏனெனில் இலங்கையை ஆண்ட ராவணன், அசாமை ஆண்ட நரகாசூரன், கருநாடகத்தை ஆண்ட மகிஷாசூரன் போன்ற திராவிட முதற்குடி மன்னர்கள் அழிவில் இருந்து வந்தவையாகக் கூட இருக்கலாம். ஆனால் இக்கதைகள் ஒன்றுமே நான்கு வேதங்களில் இல்லை என்பதால், இவை யாவும் பிற்கால இடைச் செருகல் என்பதில் ஐயமே இல்லை. 

ஐரோப்பியத் தொடர்பு : ஆனால் என்னைக் கேட்டால் நவராத்திரி பண்டிகை என்பது தாய்வழி சமூகம் சார்ந்த மக்களால் குறிப்பாக மத்திய ஆசியாவில் வாழ்ந்த ஆதி - ஆரியக் குடிகளிடம் இருந்து தோன்றி இருக்க வேண்டும். ஏனெனில் இரண்டு முக்கிய நவராத்திரிப் பண்டிகையும் பெண் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்புடையாதாக இருப்பதோடு மட்டுமில்லாமல், இலையுதிக் கால முடிவிலும், வசந்தக் காலத் தொடக்கத்திலும் கொண்டாடப்படுகின்றது. அதாவது மத்திய ஆசியா உட்பட ஐரோப்பா பகுதிகளில் இந்த நாளில் தான் குளிர் காலம் மிகச் சரியாகத் தொடங்குகின்றது. அத்தோடு குளிர் கால ஆயத்தங்களைச் செய்யவும், கோடைக் காலத்தில் கிடைத்த விளைச்சல்களைப் பத்திரப்படுத்தவும், விளைச்சல்களுக்கு நன்றி சொல்லவும் இயற்கை அன்னையை அவர்கள் வணங்கி இருக்கக் கூடும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. 

தென்னாட்டில் நவராத்திரிக் கொண்டாடங்கள் இருந்தமைக்கான சான்றுகள் சங்க இலக்கியத்தில் இல்லை எனலாம், சங்கம் மருவிய காலப் பகுதியில் எழுந்த இலக்கியத்தில் தான் தென்படத் தொடங்குகின்றது. அத்தோடு இந்து மதம் ஆதிக்கம் செலுத்தாத இலங்கை, மியன்மார் போன்ற பகுதிகளில் இப்பண்டிகை இல்லை எனலாம். ஆகவே நிச்சயம் இது வடக்கில் இருந்து வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 

அத்தோடு இன்று கற்பனைக் கடவுளாகச் சரஸ்வதி, லக்ஷ்மி, துர்க்கா ஆகியோர் இடம்பெற்றுவிட்ட போதும், முன்புக் காலங்களில் விளைச்சலைக் கொடுத்த இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் தினமாகவே இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றச் செய்கின்றது. அத்தோடு வேட்டைக் கருவிகள், விவசாய உபகரணங்களைச் சீர்ப்படுத்திப் பத்திரப்படுத்தி வைக்கும் தினமாகவே ஆயுதப் பூஜைகள் இடம்பெற்றிருக்க வேண்டும். 

இந்தத் திருநாளானாது இரு காலநிலையைக் கொண்ட வெப்ப மண்டலப் பகுதியைக் காட்டிலும், நான்கு கால நிலையைக் கொண்ட குளிர் பகுதிகள் சார்ந்த வாழ்க்கை முறைக்கே பெரிதும் பொருந்திவருகின்றது. 

இயற்கைத் தாய் : மனித சமூகம் நாகரிகம் அடைந்த காலக் கட்டத்தில், அதாவது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவை பெரும்பாலும் தாய்வழி சமூகமாகவே இருந்தது. மண், பெண் இரண்டும் முக்கியமாகக் கருதப்பட்டன. இரண்டும் விளைச்சலைத் தருவதாக எண்ணினார்கள். மண்ணைப் பெண் உருவில் கண்டார்கள். தாய் மொழி, தாய் நாடு, பூமித் தாய், ஆறுகள், குளங்கள் கூடப் பெண்ணாகக் கருதப்பட்டன. ஆகவே ! விளைச்சலைத் தந்த பூமிக்கும், இயற்கைக்கும் நன்றி சொன்னார்கள், படையல் இட்டார்கள், உண்டு மகிழ்ந்து பகிர்ந்துக் கொண்டார்கள். குளிர் காலம் கொடுமையாக இருக்கும் என்பதால் அதற்குத் தேவையான ஆயத்தங்கள் செய்தார்கள். இதுவே நவராத்திரியின் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். பின்னர் மத்திய ஆசிய மக்கள் நகர்ந்து நகர்ந்து தெற்கே வரவும், அவர்களின் வாழ்க்கைச் சார்ந்த குண நலங்களும் இங்கும் வந்துவிட்டன. 

கற்பனைக் கடவுளர்கள் : மண்ணைப் பெண்ணாக்கி, கடவுளாகக் கருதிய மக்கள். காலம் செல்ல செல்ல மண்ணை மறந்து பெண் கடவுளர்களை மட்டும் வழிப்படத் தொடங்கி விட்டார்கள். இயற்கை அன்னைக்கு நன்றி சொல்வதை மறந்து கற்பனை தேவதைகளுக்கு நன்றி சொல்லி விழா எடுத்தார்கள், வரங்கள் கிடைக்கும் என நம்பினார்கள். பழங்குடி வழிப்பாடுகள் கட்டமைக்கப்பட்டு வைதிக மதமாக உருமாறிய போது பிராமணர்கள் பல புனைவுக் கதைகளை உருவாக்கி பரப்பி விட்டுள்ளார்கள் என்பது தான் உண்மை. 

ஆகவே ! இன்றைய காலக்கட்டத்தில் இந்தப் பண்டிகை அவசியமா என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் விதமாகவும், குளிர் காலத்தை எதிர்க்கொள்ளவும் திருவிழாக் கொண்டாடுவது பிழையல்ல. ஆனால் ! அதன் அடிப்படைக் குணங்களை மறந்து அதீத கற்பனைக் கடவுள்களை வணங்கியும், உணவு உட்படப் பல்வேறு பொருட்களை வீணடித்தும் ஒரு மாபெரும் விழா தேவையா என்பது தான் எனது கேள்வியே. முக்கியமாகப் பெண்ணை ஒரு மண்ணாகக் கூட மதிக்காமல் அவளை அடக்கி, துன்புறுத்தி, காமப் பொருளாகப் பாவித்து, பாலியல் தொழில் தள்ளிவிட்டு, பாலியல் வன்புணர்வுகள் செய்துவிட்டு, அதிகாரங்களைக் கூடப் பகிர முடியாமல் திணறும் நிலையில் - வெறும் கற்பனையில் உருவகித்துக் கொண்ட பெண் தெய்வங்களை மட்டும் வணங்குவதால் என்ன பயன் சொல்லுங்கள். 

இதற்கு கொலு வைப்பதும், கொலுக்கட்டை அவிப்பதும், பார்ப்பனர்களுக்கு காசினை வாரி இழைப்பதும் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் அடிப்படையில் நல்ல நிலையில் தோன்றிய ஒரு திருவிழா மிக மோசமாக வன்புணரப் பட்டு மாற்றப்பட்டு உள்ளது. 

பெண்ணுக்கு சமமான கல்வி இல்லாமல் கலைமகளையும், பெண்ணுக்கு போதிய சொத்து உரிமைகள் இல்லாமல் திருமகளையும், பெண்ணுக்கு அதிகார பலங்கள் இல்லாமல் மலைமகளையும் வணங்குவதைக் கண்டு என்னால் நகைக்கத் தான் முடிகின்றது. இந்திய மக்கள் வெறும் மரபுகளுக்காகவே எதனையும் செய்பவர்கள், ஆழமாகச் சிந்திக்கவோ, எதார்த்த மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளவோ தவறியவர்கள் என்பதன் வெளிப்பாடே இந்த நவராத்திரி. பெண்கள் சமமாக மதிக்கப்படாமல், பெண் உருவாகக் கருதப்பட்ட நிலமும், நீரும், வளங்களும் சுரண்டப்பட்டு அழிக்கப்படுவதைத் தடுக்காமலும் வெறும் சடங்குகளுக்காகக் குளிர்க்காலப் பண்டிக்கையைக் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.


தொகுப்பு...
நன்றி இக்பால் செல்வம்.


அவரின் வலைத்தளம், பகுத்தறிவுப்பெட்டகம்.

திங்கள், அக்டோபர் 22, 2012

பற்று

நாம் தான்
Breakfast
Lunch
Dinner
supper, என
உணவுவேளைகளைப் பிரித்து வைத்துள்ளோம்
தமிழர்கள்
காலை உணவு
மதிய உணவு
இரவு உணவு
என்று மட்டுமே சொல்வார்கள்
நம் மொழியே சிறந்தது
ஒரு ஐரோப்பியனும்
எங்கோ ஒரு மூலையில்
மொழிப்பற்றை பறைசாற்றலாம்.

சனி, அக்டோபர் 20, 2012

நவராத்திரி பூஜை


நவராத்திரி ஒன்பது பத்து நாள் பூஜை செய்கிறேனோ இல்லையோ.. ஆனால் சரஸ்வதி பூஜை மட்டும் கண்டிப்பாகச் செய்வேன். செய்வேன் என்றால் வடை பாயாச விருந்தெல்லாம் கிடையாது.. (செய்கிறேன் வா, என்றால்.. என்ன சமைக்கின்றாய் என்றுதான் கேட்பார்கள் அதனால் சொல்கிறேன்)

வீட்டிலேயே பூஜை செய்வேன், வீட்டில் வீணை மற்றும் மிருதங்கம் இருப்பதாலும், எனக்கும்  தொடர் வாசிப்பு பழக்கம் இருப்பதாலும், புத்தகங்கள் போன்றவைகளை வைத்து சிறப்புப்பூஜை செய்வது வழக்கம். பூஜையை நானே செய்வேன். தெய்வீகம் நிலைத்திருக்க.

அதற்குத்தயாராகும் நிலையில், கிடப்பில் உள்ள வீணையையும் மிருதங்கத்தையும் சுத்தம் செய்கிற போது.. சில நிகழ்வுகள் பின்நோக்கி நகர்ந்தன..

என் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும் போது வீணை மற்றும் மிருதங்க வகுப்பில் சேர்த்து விட்டேன். அவைகளைக் கற்றுக்கொண்டு வீட்டிலும் வாசித்து வந்தார்கள். அமைதியான சூழலுக்கு வருடலாய் வரும் கீதங்கள் அவை. அதுவும் என் மகள் தேவார திருவாசங்களைப் பாடிக்கொண்டே வீணையை மீட்டுவாள். வீடே களைக்கட்டும். ரசிப்பேன்.

இப்போதும் அவைகளைத் தொடர்ந்து வாசிப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தால், `மறந்தாச்சு, மீண்டும் கற்க வேண்டும். நேரமில்லை..பிறகு பார்க்கலாம்’ என்கிறார்கள். படிப்பதற்கே எவ்வளவு இருக்கு, எங்கே அதைத் தொடுவது என்கிறார்கள்.!

அதுவும் என் மகன் இருக்காரே, `வேண்டாம் நான் வாசிக்கல, வெட்கமாக இருக்கிறது..’, என்கிறார். மகளாவது மற்றவர் முன்னிலையில் வாசித்து பாராட்டு பெற்றுள்ளார். ஆனால் மகன், தெரிந்ததை தெரியுமென்று காட்டிக்கொள்ளாமல், யாருமில்லாத சமையத்தில்தான் வாசிப்பார். நான் கூட மறைந்திருந்துதான் கேட்டு ரசித்துள்ளேன். ஆட்களைப் பார்த்தால், வாசிப்பதை நிறுத்திவிடுவார்.

செமஸ்டர் ப்ரெக், மூன்று வார விடுமுறையில் வந்துள்ளார் மகன், எஞ்ஜினியரிங் காலெஜ் படிக்கிறார். படிப்பு படிப்பு என உளைச்சலாகி இருப்பியே, விடுமுறையில் எதாவது கலை சம்பந்தப்பட்டதில் உன்னை ஈடுபடுத்திக்கொள், மீண்டும் குருவிடம் செல், மிருதங்கம் தொடர்ந்து கற்றுக்கொள், என்றால்.. ஆள விடு, எனக்கு இதெல்லாம் சரி பட்டு வராது, என்கிறார்..

இப்போது ஓரளவு வசதியாய் இருக்கின்றோம், ஆனால் இந்த மிருதங்கம் மற்றும் வீணையை வாங்குவதற்கு பதினைந்து வருடங்களுக்கு முன் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? குருவி மாதிரி சேமித்து வைத்த பணத்தை அப்படியே ரொக்கமாகக் கொடுத்து வீணையை வாங்கினேன்.

வகுப்பில் மற்ற மாணவிகளின் வீணையை இரவல் வாங்கி வாசிக்கின்றாள் உங்களின் மகள். மற்றவர் வாசிக்கும் வரை, அவர்களையே பார்த்துக்கொண்டு சும்மா இருக்கின்றாள், கண்டிப்பாக நீங்கள் ஒரு வீணையை வாங்கியே ஆக வேண்டும் என்று வீணை ஆசிரியை என்னிடம் சொன்ன போது, நிஜமாலுமே கலங்கிப்போனேன். எனக்குக் கிடைக்காதது எல்லாம் என் பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டுமென்கிற ஆதங்கம் எனக்கு எப்போதுமே இருக்கும்.

இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடைகளுக்குப் படையெடுத்தேன். எங்குமே கிடைக்கவில்லை . `ஆடர் செய்து தமிழ்நாட்டிலிருந்து வர கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாகலாம். முன் பணம் செலுத்தி பதிவு செய்துக்கொள்ளுங்கள்’, என்றார்கள் கடைக்காரர்கள். எனக்கு உடனே வேண்டுமே என்று பல இடங்களுக்கு அலைந்து திரிந்து கிள்ளானில் ஒரு கடையில்  ஒரே ஒரு வீணை மட்டுமே இருந்தது. அதை உடனே வங்கிக்கொண்டேன்.


மகள், இசை வகுப்பிற்குச்செல்லுகையில் அதைத்தூக்கிக்கொண்டு இரண்டு மாடி ஏறி இறங்குவேன். வகுப்பு இரண்டு மணி நேரம், வீடு வந்து செல்வது சரிப்பட்டு வராது என்பதால், அருகில் உள்ள ப்ளே கிராவுண்டில், ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு தனிமையில் உட்கார்ந்திருப்பேன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இதே போல் கழிந்தது என் சனிக்கிழமை பொழுதுகள்.

மிருதங்க ஆசிரியர் சர்மா அவர்கள், `பையன் நல்லா வாசிக்கின்றார். என்னுடைய மிருதங்கத்தைத் தருகிறேன். தஞ்சாவூர் இசைக்கச்சேரி மேடைகளில் பல வித்துவான்களின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட மிருதங்கம் இது. தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. நல்ல ராசியான மிருதங்கம். இதை வீட்டில் வைத்திருப்பதே ஐஸ்வரியம். வைத்துக்கொள்ளுங்கள், பையன் படிக்கட்டும், நன்கு வாசிக்கட்டும், பணம் இருக்கும் போது மட்டும் கொடுங்கள். ஒண்ணும் அவசரமில்லை, என்றார். கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி முடித்தேன்.
பார்க்கச் சிறியதாகத்தானே இருக்கின்றது.! மிகவும் கனமானது. தூக்கமுடியாது. இதையும் நான் தான் தூக்கிக்கொண்டு அலைவேன். என் கணவர் என்ன செய்வார் என்று கேட்க நினைப்பவர்களுக்கு. அவருக்கு இதுபோன்ற நுண்கலைகளில் ஆர்வமில்லை. எனது ஆர்வத்தை பிள்ளைகளிடம் நுழைத்தேன். அதனால் நான் தான் எல்லாவற்றையும் செய்தேன்.

வீணை ஆசிரியை முன்பெல்லாம் தொலைப்பேசியில் அடிக்கடி அழைத்து, அரங்கேற்றத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த உங்களின் மகள் அற்புதமான இசைப்பிரியர். விடாமல் கற்றுக்கொள்ளச்சொல்லுங்கள் என்பார்.

மிருதங்க குருவை கோவிலில் சந்தித்தேன். எப்போது வேண்டுமானாலும் பையனை வரச்சொல்லுங்கள். இதுபோன்ற கலையில் இங்கே பலருக்கு ஆர்வமிருப்பதில்லை. ஆர்வம் இருந்தாலும் கலையைக் கற்கின்ற களம் சரியாக அமைவதில்லை. நல்ல குருவும் கிடைப்பதில்லை.நான் இந்த பூமியில் இருக்கும் வரை, எத்தனை பேரை உருவாக்க முடியுமோ அத்தனை பேரை உருவாக்கிவிட்டுச் செல்கிறேன், என்கிறார்.

என்ன செய்ய..! குழந்தைகளாக இருக்கும் போது நாம் சொல்வதை அவர்கள் கேட்பார்கள். இப்போது அவர்கள் சொல்வதை நாம் கேட்டுக்கொள்கிறோம்! உலகம் மட்டுமல்ல வாழ்வும் வட்டமே.





வியாழன், அக்டோபர் 18, 2012

தொட்டில் பழக்கம்

குழந்தைப்பருவத்தில்
கதைப்புத்தகங்களில்
ஓவியங்களையும் புகைப்படங்களையும்
கண்குளிர கண்டுகளித்த பின்
கதைகளில் நுழைகின்ற நிலை
இன்னமும் தொடர்கிறது
தொட்டில் பழக்கமாக..

மிகவும் பிடித்த ப்ளாக்

எழுத்தாளர் சாருவின் அறிமுகத்தால் பல தமிழ் எழுத்தாளர்களைக் கண்டு கொண்டேன். அவ்வரிசையில் புதிதாக அறிமுகமானவர் கவிஞர் கலாப்பிரியா

இன்று காலையிலேயே கலப்பிரியா அவர்களின் ப்ளாக்’ஐ வலம் வந்துக்கொண்டிருந்தேன். அவரைப்பற்றிய தேடலில், அவர் follow பண்ணும் ப்ளாக்’குகளைக் கண்ணுற்றேன். அங்கே என்னை அதிகம் கவர்ந்த ஒரு வித்தியாசமான வலைப்பூவைப் கண்டவுடன் மனம் குதூகலித்தது.

அற்புதமான இனிய கானங்களின் இசைத்தொகுப்புகள் அடங்கிய ப்ளாக் அது. ஞானவெட்டியான் திண்டுக்கல் அவர்கள் தேர்ந்தெடுத்த செவிக்கினிய பாடல்கள்

இதுபோனறதொரு தொகுப்பைத்தான் நான் பலநாட்களாகத் தேடிக்கொண்டிருந்தேன். அதைக் கண்டெடுத்த மகிழ்ச்சியில் உடனே பாடல்களைக் கேட்கத்துவங்கிவிட்டேன். 

என்ன இனிமையான பாடல்கள் அனைத்தும். நாமே முயன்று தேடினாலும் கிடைக்காது இதுபோன்றதொரு இசைக் கலவை. முதல் பாடலே என்னைத்தாலாட்டிச்சென்றது..

பாடல்களுக்கு இசையமைப்பதில் அறுபது எழுபதாம் ஆண்டு சினிமா இசைமேதைகள் முத்திரை பதித்ததுவிட்டுச்சென்றுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கலாகாது. நான் இந்த பூமியில் பிறக்காத காலகட்டமாக அவைகள் இருப்பினும், அக்காலக்கட்ட பாடல்களே என்னை அதிகமாக ஆக்கிரமிக்கின்றன.

எங்களின் காலகட்டமான எண்பதாம் ஆண்டுப்பாடல்களில் ஒரு வித சோர்வு வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், பலமுறை கேட்ட பாடல்களையே மீண்டும் மீண்டும் ஒலியேற்றி சலிப்பை ஏற்படுத்தி விட்டனர் வானொலி நிலையத்தினர்.

அறுபதாம் எழுபதாம் ஆண்டுப்பாடல்களை முற்றாக புறக்கணித்த நிலையில் இன்றைய வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன (மலேசிய சூழலில்). அப்படித்தேன்றும் ரசிகர்களுக்கு இந்த ப்ளாக் புத்துணர்வைக்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

கேட்டுப்பாருங்கள் நீங்களும் மயங்கிவிடுவீர்கள். முதல் பாடலே...

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்...



செவிக்கினிய பாடல்கள்

புதன், அக்டோபர் 17, 2012

அன்புள்ள....

நீண்ட நாட்களுக்குப்பிறகு
ஒரு கடிதம் எழுதினேன்..

பள்ளியில் படித்ததைப்போல்
அப்பா தமது உறவுகளுக்கு எழுதச்சொன்னதைப்போல்
பக்கத்து வீட்டுப்பையன்
எனக்காக எழுதிய காதல் கடிதம்போல்
கண்மணி அன்போடு காதலன் எழுதும் லெட்டர் போல்
காதலிகளுக்கு காதலர்கள் எழுதி அனுப்பிய கடிதம்போல்
அவருக்கு நான் எழுதியது போல்
அக்காவிற்கு வந்த சர்ச்சைக் கடிதம்போல்
வெறும் உதட்டுச்சாயத்தால் முத்தமிட்டது போல்
இரத்தத்தால் எழுதியதுபோல்
எழுதி கண்ணீரால் அழித்ததைப்போல்


பெயர்
முகவரி
தேதி
வணக்கம்
அன்புள்ள நீ ....
நாங்க நலம். நீங்க நலமா?
இடையில் நிற்க; என்கிற சொல்லும் மறவாமல்..

இதுவரைதான் பழயபாணி
அதற்குப்பிறகு?

மனதில் வந்த அனைத்தையும் எழுதினேன்
கொட்டித்தீர்த்தேன்,
எழுதிக்கொண்டே அழுதேன்
நிறுத்தினேன்..
வேதனையைச் சொன்னேன்
வேண்டாமென்றேன்
வேண்டுமென்றேன்
கிடைக்காது, நிலைக்காது என்றேன்
ஏமாற்றத்தின் சீற்றம்
இச்சையாகி கொச்சையாகி
பீடிகையோடு பல கேள்விக்குறிகள்..
தொடர்ந்தேன்
ஒன்று இரண்டு மூன்று போதாது என்றேன்
உன்னையும் நொந்தேன்
என்னையும் நொந்தேன்
இடையில் ஒரு கவிதையையும் நுழைத்தேன்
சிறிய உதாரணமாக ஒரு விளக்கமும் அங்கே
அவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டேன்
போதவில்லை போதவில்லை
மனம அமைதியடையவில்லை
இன்னும் இன்னும் என்னன்னமோ
கிறுக்கினேன்..
கண்ணம்மா வந்தாள்
கலீல் ஜிப்ரான்
மைக்கெல் எஞ்சலா
கம்பர் காளிதாசன் கண்ணதாசன்
நீயும் அங்கே
யார் யார் என்று..
புரிந்தும் புரியாமலும்..
எனக்கே ஒன்றும் விளங்காமல்
என்னையே அவை குழப்பியதால்
ஒரு ஹைக்கூ’வை எழுதி
முற்றுப்புள்ளி வைத்தேன்..

இப்படிக்கு,
அன்புடன் உன் விஜி
மற்றவை நேரில்.

முடித்துவிட்டேன்,  
கடிதம் எங்கே?





திங்கள், அக்டோபர் 15, 2012

புதிதாக புரிவதற்கு ஒன்றுமில்லை

புழு நெளியும் ரவையில்
புதிய உப்புமாவா?

வண்டு மொய்க்கும் அரிசியில்
ஆத்தாவுக்கு கூழ்..?

காம்புகள் காய்ந்த
கனிகள் என்ன
பறி(ழ)க்கப்படாததோ?

நுணி உடையா
வெண்டை
பிஞ்சாகுமா?

தேன் தீர்ந்த மலரில்
இன்னும் என்ன இருக்கு
உதிரும் இதழ்களைத்தவிர..!?

புகைப்போட்ட கனியின்
சுவையும் ருசியும்
நம்(பிக்)கையில் இல்லை

செவுல் கறுத்த செத்த மீன்
கடல் நீரை
முத்தமிட்டு நாளாகியிருக்கலாம்..

களையிழந்த கண்களையாவது
பதுக்கி வை
ஒளியற்ற ரகசியங்களை
வெளியே சொல்கின்றன..


ஞாயிறு, அக்டோபர் 14, 2012

அனுபவங்கள் பேசுகின்றன

இன்றைய தினக்குரலில் வெளிவந்துள்ள எனது வாசகர் கடிதம் - அனுபவங்கள் பேசுகின்றன

இன்றைய சூழலில், நவீன பாணியில் பல விதமான எழுத்துகள் சிறுகதைகள் போலவே வந்துவிட்டன. குறிப்பாக, அனுபவங்கள் பேசுகின்றன என்கிற பகுதியில் வாசகர்களின் கைவண்ணங்கள் அனைத்தும் அற்புதமான சிறுகதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. போட்டிகளில் சேர்த்துக்கொள்கின்ற கதைகளை விட வாசகர்கள் தங்களது அனுபவங்களைக் கதைகளைப்போல அற்புதமாகச் சொல்லி வருவதைப் படிக்கின்றபோது வியப்பாகவே இருக்கின்றது. நல்ல முயற்சி. இது தொடரவேண்டும். ஐம்பது வெள்ளி சன்மானம் பெரிதேயல்ல. வாசகர்களின் எழுத்துப்பயிற்சியை ஊக்குவிக்கின்றது இப்பகுதி. இவைகளைக் குட்டிக்கதைகளாக்க் கூட தொகுக்கலாம், காரணம் அனைத்தும் உண்மை நிலவரங்களைச் சொல்லும் அற்புதக் கதைகள்.   

அப்பகுதியை விடாமல் வாசித்து வருகிறேன். ஆனந்தி ஆறுமுகம், ஆசுகவி கே.எஸ்.மணியம், நேசமணி, ஆர்.லோகநாதன், பாரதிசெல்லம்மா மற்றும் பலரின் அனுபவங்கள் அனைத்தும் அற்புதமான சிறுகதைகள். எழுத்துகள், வர்ணனைகள் போன்றவைகள் கொஞ்சம் குறைவாக இருப்பதால் அவைகளை சாதரணமாக எடைபோட்டுவிடவே கூடாது. தற்போது உலக அளவில் பிரபலமாகப் பேசப்படும் சிறுகதைகள் அனைத்தும் இந்த வடிவில்தான் உள்ளன. பிரபல ஆங்கில எழுத்தார்கள் எழுதும் பாணி இது. நாம்தான் இக்கருவில் கூடுதல் வர்ணனைகளை நுழைத்து, நடப்பது, நிறபது, நகர்வது, ஊர்வது, பறப்பது, சுழல்வது என நீட்டிமுழக்கி விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். அப்படிச்சொன்னால்தான் அது சிறுகதை என்கிற வட்டத்திற்குள் நிற்கும் என நினைத்துக்கொண்டு, இதுபோன்ற வர்ணனைகளற்ற நிஜக் (சிறு) கதைகளை சிறுகதை பட்டியல்களில் சேர்த்துக்கொள்ளாமல் புறந்தள்ளுகிறோம்.

நவீன பாணி கதைகள் என்றால்; அது, இதுபோன்ற கதைகளே. வாழ்கிற வாழ்வை கூர்ந்து நோக்கினால், நிகழ்கின்ற அனைத்துச் சம்பவங்களும் சிறுகதைகளே. இனியும், இப்படித்தான் சிறுகதைகள் இருக்கவேண்டுமென்று யாருமே வரையறுக்கவேண்டியதில்லை. நம் கண்முன் நிகழ்வதை அப்படியே எழுதவேண்டியதுதான். தேவை மொழியாற்றல் மட்டுமே. அதில் கூடுதல் கவனம் செலுத்தினால் நாம் எல்லோரும் எழுத்தாளர்களே. கதைகள் எதைப்பற்றி, எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கதைசொல்வது மட்டுமே கதையல்ல என்கிற புரிதல் அவசியம்.

சென்ற வாரம், போட்டிக்கதைகளின் வரிசையில் இடம்பெற்றிருந்த டாக்டர் ஜி.ஜான்சனின் `எதிர்வினை என்கிற சிறுகதையும் இதே பாணிதான். கதையில் கூடுதல் தகவல்களை வலுக்கட்டாயமாக நுழைக்கவேண்டுமென்றால், மருந்துகளின் பட்டியல்களையும், மருத்துவத்துறையின் சிக்கல்களையும், குவிகின்ற நோயாளிகளின் தன்மைகளையும் குணாதிசயங்களையும், கிளினிக் சூழலையும், தாதியர்களின் நிலைப்பாடுகளையும் சொல்லி நீட்டி முழக்கியிருக்கலாம். 

ஆனால், அக்கதை கணக்கச்சிதமாக மிக எளிமையாக மலர்ந்து, மருத்துவத்துறையில் ஏற்படுகிற சிறிய சிக்கலைக் களைத்து, வாசகர்களுக்கு தெளிவைக் கொடுத்துச்சென்றது. என்னைப்பொருத்தவரை இதுதான் எழுத்து. எளிமையான ஆரம்பம், அழகான நடை, ஒரு சின்ன திருப்பம், தெளிவான முடிவு. (மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால், இதைப்பற்றிய அலசல்கள் ஆராய்ச்சிகள் இன்னும் தொடரலாம். ஆனால் சிறுகதைக்கு இந்த சின்ன `ட்டுவிஸ்ட்போதுமானது.)    

எனக்குத் தெரிந்தவரை, கடந்த பத்து ஆண்டுகாலமாக, நம்நாட்டு அனைத்து பத்திரிகைகளில் பிரசுரமாகும் சிறுகதைகள், வாசக எழுத்தாளர்களின் எண்ண ஓவியங்கள், கட்டுரைகள், கவிதைகள் என விடாமல் வாசித்து விமர்சனம் செய்பவர் டாக்டர் ஜி.ஜான்சன் அவர்கள் மட்டுமே. பெரிய எழுத்தாளர், மருத்துவர் என்கிற பேதமெதுவும் இல்லாமலும், நல்ல விமர்சகராகவும், யார் மனதையும் காயப்படுத்தாத அற்புத மனிதராகவும், நல்ல இலக்கிய ஆர்வலராகவும், அதேவேளையில் நல்ல இலக்கிய மருத்துவராகவும் (பல வருடங்களாக மருத்துவ கேள்வி பதில் அங்கத்தில் விளக்கம் சொல்பவர்) இளகிய மனம்படைத்தவராகவும், இரக்க்குணமுள்ளவராகவும், பல அறிஞ்ர்களின் (குன்றக்குடி அடிகளார்) நேரிடையாக ஆசி பெற்றவருமாகிய, பந்தாபகட்டு இல்லாத தன்னடக்கவாதியாகவும், திறந்த பன்மொழி வாசிப்பு பழக்கமுள்ளவராகவும், நாவலாசிரியராகவும், நல்ல வழிகாட்டியாகவும் எனக்கு நல்ல நண்பராகவும், குருவாகவும் நான் காண்கிறேன் அவரை. இதுவே அவரின் தனிச்சிறப்பும் கூட.

மருத்துவத்துறையின் மர்மங்களைச்சொல்லும் `உடல் உயிர் ஆத்மாஎன்கிற நாவல், மலேசிய மண்ணில் மட்டுமல்லாது உலக இலக்கியத்திலும் முத்திரை பதித்தவிட்ட அவ்வற்புத நாவலுக்குச் சொந்தக்காரர்தான் டாக்டர் ஜி.ஜான்சன் தான். தொடரட்டும் எழுத்துப்பணி. இன்னும் அதிகம் படைக்கவேண்டுகிறேன்.

நன்றி தினக்குரல்..

வெள்ளி, அக்டோபர் 12, 2012

ரகசிய மைக் (குட்டிக்கதை)

“விக்கி, என்ன திடீரென்று போலிஸ்காரர்கள் வந்திருந்தார்கள்?” முன் வாசலின் வழியே நுழைந்த விக்கியை வழிமறைந்து விவரம் கேட்டாள் சுதா.

“ என்னது போலிஸ் வந்ததா? ஏன்? நீதான் உள்ளே இருக்க, என்னைக்கேட்டால், எனக்கு எப்படித்தெரியும்!” விவரம் தெரியாத விக்கி, மேலும் விஷயத்தை அறிய ஆவலாய், நடையைத் தளர்ந்தி அங்கேயே நின்றான்.

“நான் கேள்விப்பட்டேன், ஸ்டோரில் சில திருட்டு வேலைகள் நடக்குதாம்.  திருட்டுத்தனமாக சில பொருட்கள் லாரிகளில் ஏற்றுகிறார்களாம். நூறு ஏற்றும் இடத்தில் நூற்றியொன்றாக ஏற்றப்படுகிறதாம்.” சுதா விளக்கினாள். விலையுர்ந்த மின்சாரப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. ஒரு பொருளே ஆயிரக்கணக்கான விலையில் விற்கப்படுபவை..

முகம் வெளிற.. “அட அப்படியா? எப்படி சொல்றே,” கேள்விக்குறியோடு மேலும் விவரமறிய காத்திருந்தான் விக்கி.

“நான் கேள்விப்பட்டேன்?”

“கதை விடாதே, போலிஸ் வந்தால் வேறு எதாவது ரீசனா இருக்கலாம்... நீ இருக்கியே, நல்லா கிளப்பி விடு..!”

“அய்யோ, நிஜமாலும் விக்கி. போலிஸுடன் சேகரும் வந்திருந்தார்..”

“சேகருமா..?” அதிர்ந்தான் விக்கி. சேகர் அங்கே நிருவியுள்ள செஃக்யூரிட்டி நிறுவனத்தின் முதலாளி.

“ஆமாம், இல்லேன்னா எனக்கு எப்படி விஷயம் தெரியப்போவுது.!” பீடிகையோடு தொடர்ந்தாள் சுதா.

“சேகர் சொன்னாரா?”

“ஆமாம்!?”

“ என்னன்னு?”

“முதலில் போலிஸில் இருந்து இருவர் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் பூனைப்படை போல், பெரிய பிஸ்டோலை கையிலேயே ஏந்திக்கொண்டிருந்தார். மற்றொரு போலிஸ்காரர் முழுக்கைச்சட்டை போட்டிருந்தார். இரண்டு கைகளிலும் நிறைய ஸ்டார்கள் குத்தப்பட்டு இருந்துச்சு. முகம் அப்படியே தங்கப்பதக்கம் சிவாஜி கணக்கா, உர்ர் என்றிருந்தது.!”

“ஓ..நீட்டுக்கை சட்டை போட்ட போலிஸ் ஆபிஸ்ரா? அப்போ, பெரிய ஆள்தான் வந்திருக்கணும்..”

“அவர்கள் வந்தவுடன், நம்ம எம்.டி இறங்கிவந்தார், பிறகு உங்க போஸ், எங்க போஸ் இருவரும், போலிஸ்காரர்கள் என எல்லோரும் மீட்டிங் ரூம்மிற்குள் போனார்கள். அதன் பிறகுதான் சேகர் வந்தார்.., தனியாளாக அதுவும் நம்மவராக இருப்பதால், அவரிடம் என்ன சங்கதி என கேட்டேன், முதலில் சொல்லவில்லை, `இது கம்பனியின் ரகசியம், யாரிடமும் சொல்லக்கூடாது என்றார்கள், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்’ என்று உங்களின் டிப்பார்ட்மெண்டில் நடக்கின்ற திருட்டு வேலைகளைச் சொன்னார்.”

“யார் செய்யறா திருட்டு வேலைகளை? ஒருவேளை புதுசா வந்த காண்ட்ரெக்ட் காரனுங்க சிலர் செய்யறானுங்களோ..!? எப்படி கண்டுபிடிப்பானுங்க? சாட்சி வேணுமில்ல.!?” எதையோ நியாயப்படுத்துவதைப்போல் இருந்த விக்கியின் பேச்சை இடைமறித்தாள் சுதா.

“ஏய், என்ன ராசா, என்னமோ நீ திருட்டுவேலைகளைச் செய்வதைப்போல் இருக்கே உன் பொறுப்பற்ற பேச்சு. நீ இன்வல்ஃவ் பண்ணலன்னா விடு.. செய்தி கேட்டதிலிருந்து அரண்டுப்போயிருக்கே, என்ன சங்கதி.?”

“அப்படியெல்லாம் இல்லெ சுதா. நான் தானே அங்கே சூப்பர்வைசர். எதாவது பிரச்சனன்னா என்னைத்தானே கொடைவார்கள்.”

“யார் செய்யறான்னு பாரு, அவர்களைக் காட்டிக்கொடு..!”

“அவ்வளவு ஈசியா? மாட்டிக்கிற மாதிரியா செய்வானுங்க..!?”

“அதான் சில ரகசிய சி.ஐ.டி டெக்னிக்’குகளை பொருத்தப்போகிறார்களாமே..ஸ்ஸ்..” என்னமோ உளறியதை நினைத்து, உதட்டைக் கடித்துக்கொண்டாள் சுதா.

“என்ன டெக்னிக்?.. என்னமோ உனக்குத் தெரியுது, ஆனா சொல்லமாட்டேங்கிற இல்லே.., சரி விடு, விருப்பமில்லையென்றால்  பரவாயில்லை, தெரிந்ததைச் சொன்னால், உன்னைப் பற்றிய ஒரு விவரமும் என்னிடம் இருக்கு, அப்பதான் அதைச் சொல்லுவேன்..!” புதிர் போட்டான் விக்கி.

“ஐயோடா..என்னைப் பத்தி என்ன இருக்கு? நான் பாட்டுக்கு வேலைக்கு வரேன் போறேன்.. நான் என்ன திருடியா?..”

“நீ மொதல்ல அந்த சி.ஐ.டி டெக்னிக் என்னன்னு சொல்லு, பிறகு உன் கதையைச்சொல்கிறேன்..” போட்டுவாங்கினான் விக்கி.

“அது வந்து..அது வந்து.. யார் கிட்டேயும் சொல்லக்கூடாது..”

“ ச்சே..சே சொல்ல மாட்டேன், சொல்லு..”

“ ம்ம்ம்ம், சாமன்கள் ஏற்றுகிற லாரியில், யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமரா ஒண்ணு பூட்டியிருக்காங்களாம்.. லாரியில் ஏற்றுகிற சாமான்களை லிஸ்ட்ல உள்ள கம்பனிகளுக்கு இறக்கிய பிறகு, மீதமுள்ள பொருட்களை எங்கே கொண்டு போய் இறக்குகிறார்கள் என்பதை படம் பிடித்துக் காட்டும் கேமரா அது. லாரி எங்கெல்லாம் போகுதோ, அதை இங்கிருந்தே சி.சி.டீவியின் மூலம் பார்க்கலாம். திருட்டு வேலைகளைக் ஈசியா கண்டுபிடிச்சிடலாம். லாரியில் அந்த கேமரா எங்கு பூட்டியிருக்கு என்பதைக் கூட யாரும் கண்டுபிடிக்கமுடியாது, அதை அங்கே பொருத்திய டெக்னிஷன்களைத் தவிர.! இந்த விவரம் யாருக்கும் தெரியாது. அட்மின்’ல உள்ளவர்களுக்கும் சேகருக்கும்தான் தெரியும்.. சேகர் என்னிடம், நான் கேட்டுக்கொண்டதால் பகிர்ந்துக்கொண்டார். இப்போ இந்த விவரம் உனக்கும் தெரிந்து விட்டது. நம்மவர்கள் புள்ளகுட்டிக்காரர்கள், குடும்பமெல்லாம் இருக்கு, கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்னு  உன் கிட்டே சொல்றேன். கவனம், இது யாருக்கும் தெரிய வேண்டாம்...” அலுவலக ரகசியங்களை உளறிக்கொண்டிருந்தாள் சுதா. இந்த விவரம் அட்மின் நிர்வாகிகளுக்குத் தெரிந்தால், இவளின் வேலைக்கே ஆபத்து.

“ம்ம்.. இப்படியெல்லாம் நடக்குதா.. பையனுங்கள எச்சரிக்கையாக இருக்கச் சொல்லனும். எதிலாவது மாட்டிக்கப்போறாங்க..பாவம். சரி தகவலுக்கு ரொம்ப நன்றி..” கிளம்பினான் விக்கி..

“என்ன நன்றியா, அது கிடக்கட்டும், நீ என்னமோ என்னைப் பற்றிய ஒரு விஷயத்தை சொல்வதாகச் சொன்னியே, என்ன அது?, அத சொல்லாம போனே, தொலைச்சுபுடுவேன்..”

“ஓ..அதுவா, நீ போறவரவங்ககிட்ட எல்லாம், ஆபிஸ் விஷயத்தை லீக் செய்யறீயாமே..அதனால, உன் இடத்தில் ஒரு ரகசிய மைக் பூட்டியிருக்காங்களாம்... அந்த லிங்க் எம்.டி ரூம் வரை போகுதாம்.. அவர் அதை ஆன் செய்தால், நீ என்னவெல்லாம் பேசறீயோ, அது அப்படியே அங்கேயும் கேட்குமாம்.. எதுக்கும் நீயும் கொஞ்சம் ஜாக்ரதையா இரு. பாவம் புள்ளகுட்டிக்காரி. வேலையிலிருந்து தூக்கிடப்போறாங்க.. ஹிஹி..” சிரித்துக்கொண்டே இடத்தைக்காலி செய்தான் விக்கி.









RED GIANT STAR


RECENT RELEASED IMAGE OF A SPIRAL SHELL OF COSMIC DUST AND GAS SURROUNDING A RED GIANT STAR

டெலெஸ்கோப் மூலமாக வின்வெளி உலாவில் நிகழ்ந்த ஓர் நட்சத்திர வெடிப்பை சித்தரிக்கும் அரிய படம். அறிவியல் வரலாற்றுப்படம். பார்ப்பதற்கு தீபாவளி பட்டாசு போல் மிகவும் அழகாக இருந்ததால் உங்களிடமும் பகிர்கிறேன்.

கூடுதல் தகவலுக்கு

செவ்வாய், அக்டோபர் 09, 2012

அலைகரை

உன் நினைவுகள்
அவ்வப்போது வந்து வந்து மோதுகிறது
நீ என்ன கடலலையா
அல்லது, நான்தான் கரையா?

திங்கள், அக்டோபர் 08, 2012

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

மூவின சமையலறை


கறிவேபில்லை வாசமென்றால்
என்ன கறிக்குழம்பா?

செராய் வாசமென்றால்
என்ன `ரெண்டாங்’ஆ?

டாவுன் பாண்டான் வாசமென்றால்
என்ன `நாசிக் லெமக்’ வா?

Yometsu மணமென்றால்
என்ன `பாக் குத் தே’ வா?

என்கிற பரிமாற்றங்களோடு
எங்களின் அக்கம் பக்க
சமையலறை உரையாடல்கள்..

கதையின் கரு


நிலத்தில் உதிர்ந்த பவளமல்லியில்
புனிதமேது அசுத்தமேது
நானறியேன்..
எடுத்து சேகரிக்கப்பட்ட
வழிப்போக்கனின் கூடையில்
மந்திரங்களை மட்டும்
உச்சரித்து விட்டுச்செல்கிறேன்
சேர வேண்டிய இடத்தில் சேரும்
என்ற நம்பிக்கையில்
யாரோ எழுதிய விமர்சனத்தில்
உன் கதையின் மூலக்கருவை
தேடுவதைப்போல
இறையடி சேரும்
மலர்களின் புனிதத்தன்மையை
தேடியபடி நான்...

வெள்ளி, அக்டோபர் 05, 2012

முட்டை தேர்வு.


முட்டை சாப்பிடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம் இது. எனக்கு இது புதிய செய்தியாக இருப்பதால், உங்களிடமும் பகிர்கிறேன்.

வாங்கிய முட்டைகள் ஊளை என்பது தெரியாமல், குழம்பு வைக்க அவித்து அதனில் ஓடுகளை அகற்றும்போது துர்வாடை வீசியது. ஏன் இப்படி துர்வாடை வீசுகிறதென்று ஆராய்ந்துப்பார்த்தால், வாங்கி வந்த முட்டைகளில் பல முட்டைகள் ஊளை. அட்டையில் உள்ள முப்பது முட்டைகளை அப்போதுதான் வாங்கிவந்தேன். மீண்டும் கடையில் கொடுத்து மாற்றலாம் தான் ஆனால் வாங்கிய அத்தாட்சியான அதனின் பில்’ஐ எங்கேயோ போட்டுவிட்டேன். எப்படி மாற்றுவது.? மேலும் அவித்த பத்து முட்டைகள் போக, இன்னும் இருபது முட்டைகள் மட்டுமே இருந்தன. அவைகளை என்ன செய்ய!? சரி ஓரு ஆய்வு செய்யலாமே என்றெண்ணி, ஒவ்வொன்றாக உடைத்து உடைத்து பரிசோதித்தேன், சில முட்டைகளின் மஞ்சள் கரு, மஞ்சளாகவும்,  சில முட்டைகளின் மஞ்சள் கரு, கருப்பு வெள்ளையாகவும் தூர்வாடை வீசிய வண்ணமாக இருந்தது.  எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் போட்டேன்.

ஒரு பாத்திரத்திரத்தில் நீரை நிரப்பி, முட்டைகளை அதனுள் இட்டு நீரில் உள்ள முட்டைகளில் நிலைப்பாட்டினைக் கொண்டு அவைகளை நல்ல ஊளை முட்டைகளா என்பதனைப் பரிசோதித்துக்கொள்ளலாம்.

மேலே உள்ள படத்தில் :-

முட்டை 1 - புதிய முட்டை. இந்த முட்டை நீரில் முழுமையாக மூழ்கி பாத்திரத்தை உரசிக்கொண்டிருக்கும்.

முட்டை 2 - கோழி இட்டு ஒரு வாரகாலமாகியிருக்கும் முட்டை இது. மஞ்சள் கரு இருக்கும் பகுதி கொஞ்சம் லேசாக மேலே தூக்கியவாறு மிதந்துக்கொண்டிருக்கும். பயன்படுத்தலாம்.

முட்டை 3 - இந்த முட்டை முழுமையாக பாத்திரத்தில் ஒட்டவில்லை. கொஞ்சம் தூக்கியபடி ஒட்டியும் ஒட்டாமலும்.. லேசான மிதப்பில்.

முட்டை 4 - முழுமையான மிதப்பில் உள்ள முட்டை இது. கெட்டுப்போன முட்டை, பயன்படுத்தக்கூடாது. இதுதான் ஊளை முட்டை.  


முட்டைகளில் எது நல்ல முட்டை, எது ஊளை முட்டை என்பதனைக்கண்டு கொள்ள இப்படி ஒரு யுக்தி உள்ளதென்பதை இப்போது அறிந்துக்கொண்டேன். இனி முட்டையைப்பற்றிய சந்தேகம் வந்தால், இப்படிப் பரிசோதித்துப்பார்த்து, பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனாலும், மிக அண்மையில் போலி முட்டைகள் சீனாவின் தயாரிப்பாக வந்து சில பயனீட்டாளர்களை கதிகலங்க வைத்தது. நாடு முழுக்க விற்பனையில் இருந்த இந்த போலி கோழி வாத்து முட்டைகளைக் கண்டுபிடிக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இணையத்திலும் அந்த முட்டையை எப்படித்தயாரிக்கின்றார்கள் என்பதனைக் காட்டும் `வீடியோ க்ளிப்’களும் பரவலாகப் பகிரப்பட்டது. இதை எப்படி அடையாளங்காண்பது என்பதைப்பற்றிய போதனைகள் இன்னமும் குழப்பமானவே இருந்து வருகிறது. அப்படியே நிஜமான முட்டைகள் போலவே தயாரித்திருக்கின்றார்கள்.  இந்த சம்பவத்திற்குப்பிறகு பலர் முட்டை சாப்பிடுவதையே நிறுத்திவிட்டனர்.

முட்டைகளுக்கு மட்டுமல்ல, இன்னும் பலவிதமான பொருட்களில் எது தரமானது, எது நிஜமானது, எது போலி, எது விலைகொடுத்து வாங்க தகுதியானது, எது பயனுள்ளது, எது பயனற்றது என்பதனை சரியாக அறிந்துக்கொள்ளாமலேயே பல பொருட்களை பணவிரையம் செய்து வாங்கி ஏமார்ந்துப்போகிறோம்.   குறிப்பாக சில;  ஸ்படிக மாலை. அதிர்ஷ்ட கற்கள், ருத்திராட்சம், ஐம்பொன் தங்கம், வெள்ளிப்பொருட்கள், போலித்தயாரிப்பில் உள்ள பிரண்டட் மதுபானங்கள், நறுமண வாசனத்திரவியங்கள், அலங்காரப்பொருட்கள் என பலவற்றில் போலிகள் உலவுகின்றன. ஏமாளிகள் இருப்பதால் ஏமாற்றத் தெரிந்தவர்களுக்கு கொள்ளை லாபம்.

சுயதேன் வாங்கும் விஷயத்தில் நான் பலமுறை ஏமார்ந்துள்ளேன். `இது ஒரிஜினல் தேன். மலைவாழ் பகுதிக்குச்சென்று நானே கொண்டு வந்ததேன், பாருங்கள், தேனீக்கள் கொட்டி, கைகள் கூட வீங்கிப்போயிருக்கிறது.’ என எதோ ஒரு ஜந்துக்கள் கடித்த இடத்தைக் காட்டி தேன் வியாபாரம் செய்தவர்களையும் பார்த்துள்ளேன். வாங்கி ஏமார்ந்தும் உள்ளேன். கருப்பட்டி பாகை தேன் என்று சொல்லி பல மடங்கு லாபத்தில் விற்பனை செய்பவர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள்.

இதுவும் பத்திரிகை செய்தியே - ஒரு சிறிய அறையை மட்டும் வாடகைக்குக்கு எடுத்துக்கொண்டு நாட்டில்  மிகப்பிரபலமான நிறுவனத்தால் தயாரிக்கப்படும்  `பீர்’ ஒன்றை, சில பணியாட்களை வேலைக்கு வைத்துக்கொண்டு சொந்தமாக போலியான முறையில் தயாரித்து பெட்டிப்பெட்டியாக பல உணவுக்கடைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்த ஒரு கும்பல் கூட அண்மையில் பிடிபட்டது. மது பிரியர்களுக்கு இந்த செய்தி மனஉளைச்சலைக் கொடுத்தது எனலாம். உஷார்.

மினரல் வாட்டருக்கும் இதே கதிதான். நாடு தழுவிய நிலையில் போலியாக பல முத்திரைகளில் மினரல் வாட்டர்கள் தயாரிக்கப்படுவதாகவும் செய்திகள் பலவாறாக வந்த வண்ணமே.

வெளிநாட்டுப் பிரபல நறுமண வாசனைத்திரவியங்களிலும் இப்போது போலிகள் மலிந்து விட்டன. ஒரிஜினல் திரவியங்கள் மலிவான விலையில் கிடைப்பதற்கு வாய்ப்பேயில்லை. இருந்தபோதிலும், `சுங்கத்துறை நண்பர்கள் கொடுத்தார்கள், பொருட்கள் வந்து இறங்குகிற கொன்டேனா போர்ட்’யில் தெரிந்தவர்கள் வேலை செய்கிறார்கள், விமானப்பணிப்பெண் என் உறவுக்காரர், சரக்கு கடத்தல் கப்பல் பிடிப்பட்டதில் பல பொருட்கள் பரிமுதல், பிரபல பேரங்காடி மூடுவிழா,’ என, பல மாதிரியான புரட்டுகளைச் சொல்லி பல போலி பொருட்களை  அசலைவிட கொஞ்சம் குறைந்த விலையில் எமாளிகளின் தலையில் கட்டுகிறார்கள். இதுவும் கண்டுபிடிப்பதற்கு சிக்கலான ஒன்று.

அசல் பொருளைப்பற்றிய போதிய ஞானம் இருந்தால்தான் இதுபோன்ற போலி பொருட்களை அடையாளங்கண்டு கொள்வதில் சிரமம் இருக்காது. இல்லையேல் இதில் தொடர் ஏமாற்றம் உறுதி.

(படம் மெயிலில் வந்தது, அனுப்பியவர் பாலகோபாலன் நம்பியார். நன்றி)

//#பி.கு:  ஊளைக்கு எந்த லை/ளை போடுவது என்கிற நீண்ட தேடலில் ஈடுபட்டிருந்ததால், இந்த பதிவு ஒரு நாள் முழுக்க கிடப்பில் கிடந்தது  :))) //




.

வியாழன், அக்டோபர் 04, 2012

நான் கர்ப்பமாக இருக்கின்றேன்

இன்று மதிய உணவுவேளைக்கு வெளியே  சாப்பிடச் செல்லவில்லை. சாப்பிட மூட்  இல்லை.

ட்ரொவரில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மெஃகி மீ’யில் (நூடல்ஸ்) சூடுநீர் ஊற்றி, இதமாக வேகவைத்து, சுவைத்துக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்றுதான் மெஃகியை சாப்பிடுகிறேன். அதற்குள் போவோர் வருவோர் எல்லாம், `இது உடம்பிற்குக்கெடுதல், அதிகமான அஜினாமோட்டோ, வயசாச்சு, இதுபோன்ற உணவுகளைத் தவிர்த்து விடு,  சாப்பாட்டு நேரத்தில் இதை ஏன் சாப்பிடுகிறாய்? முடி உதிரும், சூடு, அந்த பேஸ்ட் கெடுதல்..’ அப்படி இப்படி  என  ஆலோசனைகள்  கூற  ஆரம்பித்துவிட்டார்கள்.

எல்லாவற்றிற்கும் ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக்கொடுத்து விட்டு, எனது மெஃகி சூப்’ஐ சுவைத்துக்கொண்டு, ஒரு அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.

எங்களின் அலுவலக கால் செண்டரில் ஒரு வேலை காலியாய் இருந்தது. அந்தக் கால் செண்டர் டிப்பார்ட்மெண்டில் ஏற்கனவே நிறைய மலாய்க்காரப் பெண்மணிகள் வேலையில் இருப்பதால், ஒரு தமிழ்ப்பெண்ணை வேலைக்கு நியமிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள்.

இரண்டு வாரங்களாய் தேடியும், இந்த தேர்விற்கு இன்னும் சரியான ஆள் கிடைக்கவில்லை. தமிழ் பெண்கள் வந்தால், நன்கு படித்த பெண்களாக வருகிறார்கள், கேட்பதைவிட கூடுதல் தகுதியோடு வந்து, சாதாரண வேலையாக இந்தக் கால் செண்டருக்கு சரியில்லாத நபர்களாகி தேர்வாகாமல் போய்விடுகிறார்கள். அல்லது, அறவே தகுதி இல்லாமல், வேலை அனுபவமும் இல்லாமல், ஆங்கிலமும் சரியாக பேசதெரியாமல் வருகிறார்கள், அதுவுமில்லாமல் சிலர் அதிக அளவில் சம்பளம் எதிர்ப்பார்த்து, நேர்முகத் தேர்வின் போது  தோல்வியடைந்து விடுகிறார்கள்.

தமிழ்ப்பெண்களை வேலைக்கு எடுப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதனை இப்போதுதான் தெரிந்துக்கொண்டேன். நிஜமாலுமே லேசில் சிக்க மாட்டேன் என்கிறார்கள். பெரிய கம்பனிகள், பெரிய பதவிகள் என ஒரு எதிர்ப்பார்ப்போடு வருகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான்கு பெண்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அங்கேயும் இங்கேயும் நண்பர்கள் தோழிகள் என சிலரிடம் சொல்லிவைத்து, வரவழைத்தேன். அதில் ஒரு தற்காலிக தமிழாசிரியயை தேர்வாகிவிட்டார். கேட்ட சம்பளத்திற்கே வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்கள். இவரிடம் வேலை அனுபவமும், திறமையான பேச்சாற்றலின் மூலம் நேர்முகத்தேர்வில் அசத்திவிட்டார் போலும். தேர்வு முடிந்த மறுநாளே, தொலைப்பேசியில் அழைத்து, வேலை கிடைத்து விட்டது என்கிற விவரத்தைச் சொல்லச்சொன்னார்கள்.

நான் தான் அழைத்துச் சொன்னேன். பேசும்போது, நல்ல அரசாங்க வேலையான ஆசிரியர் வேலையை விட்டுட்டு எப்படி இந்த பிரைவர்ட் கம்பனி வேலைக்கு.!? கேட்டேன். அந்த வேலை நிரந்தரம் இல்லை. தற்காலிகம்தான். மேலும் இப்போது ஆசிரியர் வேலைக்கும் கெடுபிடிகள் ஜாஸ்தி. தொடர்ந்து பேர்போடமுடியுமா, என்பது தெரியாததால் வேலையை விட்டுட்டேன். இப்போது தமிழர் ஒருவரின் செகரட்டரியா வேலை செய்கிறேன். தனி ஆளாய் நான் மட்டும்தான் அங்கே வேலையில், அவசரத்திற்கு லீவு எடுக்கக்கூட கஷ்டமாக இருக்கிறது மெம். அதான் வேறு வேலை தேடினேன், உங்கள் மூலமாகக் கிடைத்தும் விட்டது. முதல் வேலையாய், அந்த செகரட்டரி வேலையை ராஜினாமா செய்யவேண்டும், என்கிற உற்சாக குரலோடு விடைபெற்றார்.

அடுத்தவாரம் அவர் வேலைக்குச் சேர வேண்டும், அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரும் தயாராகிவிட்டது, இப்போது செய்கிற வேலையையும் தூக்கிப்போட்டுவிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன், மயக்கமாகவும் வாந்தி வருவதைப்போல் இருக்கவும், கிளினிக் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர், நான்கு வார கர்ப்பம் என்றிருக்கின்றார். மகிழ்ச்சியான செய்திதான்,  இருப்பினும், புதிய வேலையில் சேர இது தடையாக இருக்காதா?, என்கிற ஒரு நெருடல் அவருக்குள். என்னை அழைத்தார்.

``மெம்..நான் அடுத்த வாரம் வேலைக்குச்சேர வேண்டும்..’’

``ஆமாம்..’’

`` ஒரு பிரச்சனை..ம்ம்’’

``என்ன பிரச்சனை?’’

``நான் நாலு வாரம் கர்ப்பம் மெம்..’’

``ஓ..’’

``என்ன செய்யலாம்.? இப்போ செய்கிற வேலையை வேறு ராஜினாமா செய்துவிட்டேன்.!’’

`` நீங்க முதலில் வேலையில் சேருங்கள், பிறகு அதைப்பற்றி பேசலாம்..’’

``தெரிந்தால் பிரச்சனையாகாதா மெம்?’’

``சொன்னால்தானே தெரியும், ஏன் சொல்லனும்..!?’’

``ம்ம்ம்ம்.....’’

`` வேலைக்குச் சேருங்கள். நீங்கள் இருக்கிற சைஸ்சுக்கு, இந்த கர்ப்பம் வெளியே தெரிய கொஞ்ச நாள் ஆகும், அப்போது சொல்லிக்கலாம். சரியா, ஒண்ணும் பிரச்சனை இல்லை. ’’ என்றேன்

``சரி, மெம்’’ என்கிற சிறு சிரிப்பொலியோடு தொலைப்பேசியை வைத்தார்.

இன்று காலையிலேயே, எங்களின் அட்மினில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த வேலை இன்னமும் காலியாகவே உள்ளது. ஆள் பார்,என. எனக்கு அதிர்ச்சி. ஏன் என்னாச்சு என்று விசாரித்தால். அவர் கர்ப்பம் என்பதை, அந்த நேர்முகத்தேர்வு அதிகாரியிடம் சொல்லி விளக்கம் கேட்டுள்ளார்.! அதற்கு அந்த அதிகாரி, அப்படியென்றால் நீ இப்போது வேலைக்குச் சேரவேண்டாம், குழந்தை பிறந்து, உடல் நலம் தேறிய பிறகு வா, என்றிருக்கின்றார்.

தேவையா இது?  காலையிலிருந்து தொலைப்பேசி ஓயவேயில்லை. நான் தான் சொன்னேனே.. அதற்குள் என்ன அவசரம், இப்போ என்ன செய்ய முடியும்?

அவளைப் பேசி விட்ட என் தோழி வேறு, `பாவம், எப்படியாச்சும் சொல்லி, கேட்டுப்பார்..’, என, தொலைப்பேசியில் கெஞ்சியவண்ணமாக இருந்தார்.. எப்படிக் கேட்டாலும் முடியாது. பெண்களின், அதுவும் கர்ப்பிணிப்பெண்களின் உடல்நல ஆரோக்கியத்தில் எங்களின் அதிகாரி கூடுதல் கவனம் செலுத்துபவர். எப்படி நான் பேச முடியும்.!? எல்லாம் நன்மைக்கே, என ஆறுதல் சொல்லி, வளவளா பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.

தொலைப்பேசி மணி அடித்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த மெஃகி கப்பை கீழே வைத்து விட்டு, தொலைப்பேசியை எடுத்தேன்.

``வேலை காலி என்றீர்களாமே.. எப்போது இண்டர்வியூ?’’ மறுமுனையில் ஒரு பெண் குரல்.



செவ்வாய், அக்டோபர் 02, 2012

பின்நவீனத்துவமும் கற்பனைக்குதிரை ஓட்டிகளும்

எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு இலக்கிய வியாதி அதி வேகமாகப்பரவி வருகிறது. அது என்னவென்றால், ஒரு பிரபலமான எழுத்தாளரின் படைப்பு, அதை வாசிக்கின்ற மற்றொரு எழுத்தாளருக்குப் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தி, எதோ ஒரு பரவச நிலையைக் கொடுத்து விட்டால், எழுதப்பட்ட அதனின் உள்ளர்த்தத்தைச் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல், இப்படிப் புரியாமல் எழுதுவதுதான் இலக்கியம் போலும் என தவறாகப் புரிந்துக்கொண்டு,  தாமும் அதேபோல் புரியாமல் எதையாவது எழுதி, தனக்கும் பின்நவீனத்துவ பாணி வந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிற  நிலை இப்போது தொற்றுவியாதியைப் போல் துரத்தி வருகிறது இலக்கிய உலகை.

கதை எழுதுபவர்களை என் பார்வையில், (கவனத்தில் கொள்ளவும் `என் பார்வையில்') இரண்டு விதமாகப்பிரித்துள்ளேன். ஒன்று; முதல்நிலை. அதாவது, நடைமுறை வாழ்வியலை அழகாகவும், அவலம் என்பதை மறைமுகமாகவும், எங்குமே போதனைகளை நுழைக்காமல்,  ஒரு கருப்  பொருளை அடையாளமாகக் காட்டி  அதில் இரண்டு அல்லது அதற்கும் மேலான புரிதல்களை மறைமுகமாகப் புகுத்தி, வாசிப்பவர்களை அவர்களின் போக்கிலேயே யோசிக்கவைத்து, வாசிப்பனுபவத்தில் பரவச நிலையைக்கொடுக்கின்ற அற்புதப் படைப்பாக மலர்ந்து, வாசகர்களுக்குப் புதிய புதிய அனுபவங்களைக் அடையாளங்காட்டி பிரமிக்க வைக்கும் படைப்பாளிகள் இந்த ரகத்தைச்சேர்ந்தவர்கள்.

வாசகர்களை எழுத்தால் கட்டிப்போட்டு வசீகரிக்கும் ஆற்றல் பெற்ற எழுத்தாளர்களுக்கு இந்த பாணி சரளமாக வந்துவிடும். தமிழ்நாட்டு எழுத்துகள் பல இந்த வடிவில் இருப்பது கண்கூடு. சாரு, அசோகமித்திரன்,  நகுலன், விமலாதித்த மாமல்லன், பிரேமிள், சுப்ரபாரதிமணியன், இ.பா, சுஜாதா, சுரெஸ்குமார் இந்திரஜித், ஆதவன், தி.ஜா, பிரபஞ்சன்,  என இன்னும் பலரின்  படைப்புகளைப் படித்து விட்டு அப்படியே பிரமித்துப் போயியுள்ளேன்.  இவர்களின் எழுத்துகளை வாசித்து முடித்த பின்பும் அதனின் எதிரொலி இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் ரீங்காரமிட்ட வண்ணமாகவே இருக்கும். யோசிக்க யோசிக்க விடுகதைகளின் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதைப் போன்ற பரவச நிலையில் இவர்களின் எழுத்து ஓலமிட்டுக்கொண்டே இருக்கும். எப்படி இவர்களுக்கு இப்பேர்ப்பட்ட  அற்புத எழுத்தாற்றல் கைவசம், என, பலமுறை  அதிர்ந்துள்ளேன். இங்கே மலேசியசூழலில், நான் படித்தவரையில், வல்லின இணைய இதழ் ஆசிரியர் மா.நவீன் இதில் கைத்தேர்ந்தவராகத் திகழ்கின்றார்.  இவர்  இலக்கிய உலகில் பேர் சொல்லும் பிள்ளையாக முத்திரை பதிப்பார் என்பதில் ஐயமில்லை.

இரண்டாவது நிலை என்பது,  நேரிடையாக விஷயத்திற்கு வந்து, அழகான புரிதல்களைக்கொடுத்து விட்டு, அற்புதமான நடையில், இடையிடையே போதனைகளையும் நுழைத்து, இறுதியில் ஒரு சின்ன  திருப்பத்தைத்தந்து,  அழகான சுபம் அல்லது மனதை வருடும்  சோகம் அல்லது ஒரு கேள்விக்குறியோடு கதைகளை முடிக்கும் எழுத்தாளர்கள். இதுபோல் எழுதுபவர்கள் இங்கே மலேசிய இலக்கியச்சூழலில் அதிகம்தான். ஏன், நான் கூட இதே பாணியில்தான் எழுதுவேன். இதில் கைத்தேர்ந்த எழுத்தாளர்கள் எண்ணில் அடங்கா. இவர்கள் வழக்கம்போல், பல அரிய விவரங்களை; படித்தது, கேட்டது, பார்த்தது, அனுபவித்தது என,  சாதாரண நடையிலேயே மிக எளிமையாக பலருக்குப் புரியும்படி, அழகான தமிழில் எழுதிக்குவித்து, நிறைய படைப்புகளைக் கொடுத்து,  எழுத்தாளர் என்கிற முத்திரையைத் தக்கவைத்துக்கொண்டு, தொடர்ந்து பெயர் போட்டு வருகின்றனர்.  இதில்  தப்பேதும் இல்லை. இந்த பாணிதான் இன்னமும் பலரை எழுத்தாளர் என அடையாளங்காட்டி வருகிறது. எழுத்துக் கலையை வளர்த்துக்கொள்ள  இது ஒரு நல்ல அணுகுமுறை.

இதையும் தாண்டி இன்னொரு கூட்டம் ஒன்று இருக்கிறது. இப்படி இரண்டு நிலையிலும் இல்லாமல், தம்மை ஒரு சிறந்த படைப்பாளியாக பறைசாற்ற வேண்டும் என்பதற்காக, இரண்டாவது நிலையை விட ஒரு படி மேலே நின்று, முதல் நிலைக்கும் போக முடியாமல், இரண்டாவது நிலைக்கும் வர மனமில்லாமலும், பின்நவீனத்துவ புயலாய் மாறி, நேற்றைய மழையில் பூத்த காளான்களாய் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பது இவர்களுக்கே புரியுமா என்பதுதான் இங்கே புரியாத புதிர். தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டிக்கொள்ளும் என்பதைப்போல், அங்கேயும் இங்கேயும் தாவி, சிறுபிள்ளைத்தனமாகக் கிறுக்கி, படைப்புகளைத் தாறுமாறாகக் குழப்பி, அகராதியைக் கொண்டு யாருமே இதுவரையில் பயன்படுத்திராத சில தமிழ் சொற்களையோ அல்லது சமஸ்கிருத வாசகங்களையோ  நுழைத்து, படைப்பை வெற்றிகரமாக முடித்திருப்பார்கள்.

இவர்கள், இவர்களின் கதைகளைத் தேர்தெடுக்கின்ற பத்திரிகை ஆசிரியர்களையும் அந்த படைப்புகளை வாசிக்கின்ற வாசகர்களையும் வார்த்தை ஜாலங்களைக்கொண்டும், அழகிய தமிழ்ச்சொற்களாலும், புதுமையான வர்ணனைகளாலும், ஒண்ணுமே இல்லாத மர்ம முடிச்சுகளாலும் தலைசுற்றலை ஏற்படுத்தி, படைப்பை நிலை நிறுத்தப் போராடியிருக்கின்ற யுக்தியை வெகு சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதுவும் ஒருவகை சித்துவேலையே. கண்கட்டி வித்தைக்காரனின் ஜாலம் போல், அங்கே வித்தைகள் மட்டுமே இருக்கும், பார்வையாளர்களின் கண்களை அகல விரியவைக்கும் வித்தைகளை, நுண்ணிய பார்வை கொண்டு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி, ஆரய்ந்துப் பார்த்தோமென்றால், அங்கே ஒன்றுமேயிருப்பதில்லை. அதுபோல்தான் இவர்களின் கதைகளும், படிக்கும்போது எதோ ஒன்று இருப்பதைப் போன்ற தோற்றத்தைக்  கொடுக்குமேயொழிய அவைகள் காலங்கடந்து நிற்குமா என்பது கேள்விக்குறியே.

அதிகமான வர்ணனைகளையும் வார்த்தை ஜாலங்களையும் புகுத்தி, இழுவையாய் இழுத்து, மர்மத்தை நுழைத்து, அங்கேயும் இங்கேயும் தாவி, இறுதியில் இறந்து போன தாத்தாவின் பிணத்தை வாசகர்களின் பார்வைக்குக்கொண்டு வருகிறார்கள். இந்த இறப்பைச் சொல்வதற்கு எதற்கு வாசகர்களின் பொறுமையை சோதிக்கவேண்டும்.!? தாத்தா இறந்து விட்டார் என்பதில் என்ன நீதி இருக்கப்போகிறது? ஓ...தாத்தா எப்படி வாழ்ந்தார் என்பதைச் சொல்லுகின்றார்கள் போலிருக்கு! அவரவர்  தாத்தாக்கள்  வாழ்ந்த நிலையை பலர் பலவிதமான பாணியில் ஏற்கனவே சொன்ன விதமாகத்தானே இருக்கின்றார்கள், இன்னும் என்ன புதிய பாணியில்..?? கேட்டால், அதற்கும் இவர்களிடம் தட்டையாக மொக்கையாக  ஒரு விளக்கமும் இருக்கும், உப்புசப்பில்லாமல்.

இவர்களின் கெட்டிக்காரத்தனம் என்ன தெரியுங்களா, சராசரி வாசகர்கள், இவர்களின் எழுத்துகளில் எதுவுமே இல்லை என்று புறக்கணிக்க முடியாமல் திணறடிக்கச் செய்துவிடுவதுதான். எப்படிப் புறக்கணிப்பது? நல்ல தமிழ் இருக்கின்றது. அற்புத வர்ணனைகள் இருக்கின்றது, சூரிய ஒளி, ஜன்னல் வழியாக படுக்கையறைக்குள் நுழைந்து எப்படி வியாப்பித்திருக்கின்றது என்கிற வர்ணனை எவ்வளவு நீளமான விளக்க வரிகளில். எதுக்கு? இப்படியும், வாசிப்பவர்களை தலைசுற்றல் ஏற்படுத்துகிற ஆற்றல் வேறு, இன்னும் என்ன வேண்டும்?  வேறு வழியே இல்லாமல் இவைகள்தான் நல்ல கதைகள், நல்ல எழுத்துகள் என்கிற ஒரு மாயத்தோற்றதை உருவாக்கி விடுகிற புத்திசாலித்தனம் இவர்களின் சாமர்த்தியக் கலை.

இப்படிப்பட்டவர்களுக்கு வாசிப்பின் மகத்துவம் தெரிந்திருக்கவேண்டிய அவசியமே  இல்லை. அவர்கள் எழுதுவதையே அவர்கள் வாசித்துக்கொள்வார்கள். அட எதையும் வாசிக்காமல் கூட இருக்கலாம். தமிழில் பிழையில்லாமல் எழுதக் கற்றுக்கொண்டு,  இவர்கள் காண்கின்ற கற்பனைக் கனவுகளை மொழிபெயர்த்துக்கொண்டு, அதற்கும் புரியாத நிலையில் ஒரு தலைப்பை வைத்து விட்டு, அப்படியே கற்பனைக் குதிரையை  தட்டிவிட்டு, அது எங்கெல்லாம் ஓடுகிறதோ, அங்கெல்லாம் தமது எழுதுகோலை மேயவிடுவார்கள். நன்கு கூர்ந்து கவனித்தால், அதில் ஒன்றுமே இருப்பதில்லை வர்ணனைகளைத்தவிர.  ஆனால் இவர்கள்தான் சிறந்த படைப்பாளிகள் என்கிற முத்திரையை வெகு விரைவில்  மிகச்சுலபமாகத்  தட்டிச்சென்றுவிடுவார்கள். முதல் நிலை பரிசுகளைப் பல முறை வென்றவர்களான இவர்களின் படைப்புகள் இலக்கியப் போட்டிகள் நடைபெறுகிற போதுதான் அதிகமாகத் தலைக்காட்டும். இந்த முறையில்  வெல்பவர்கள்  மக்கள் மத்தியில் சிறந்த படைப்பாளர்களாகப் பார்க்கபடுவதால்,  நிஜங்களைச் சொல்லும் அற்புத எழுத்துகள் தொடர்ந்து தோற்றுப் போகின்றன.

இன்னொரு நெருடும் உண்மை என்னவென்றால், கதைகளைத் தேர்ந்தெடுக்க  நியமிக்கப்படும் கதைக்குழு ஆசிரியர்களுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ பரந்த வாசிப்பனுபவமும், வாழ்வியல் கூறுகளை கூர்ந்து நோக்கும் நுண்ணறிவு ஆற்றலும் போதிய அளவில் இல்லாமல் இருப்பதால்,  புதிய பாணியில் எழுதப்படும் கதைகளின் போக்கு புரியாமல் போகவே, வெறும் வார்த்தை ஜாலக் கற்பனைக்கதைகளில் மது உணட வண்டாய் கிறங்கிப்போய், அவற்றையே சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுத்தும்   விடுகின்றனர்.

இதுபோன்ற கதைகளுக்குத் (பரிசு கிடைப்பதை வைத்து) தொடர்ந்து ஆதரவு இருப்பதைக் காண்கின்ற  அடுத்த தலைமுறையினரும், அதே போல்  `கோக்குமாக்காக’ படைப்புகளை எழுதி விரைவாக எழுத்தாளர் என்கிற முத்திரையைப் பதிக்க, தற்காலிக புகழுக்காக  குளறுபடியான கதைகளை எழுத ஆயத்தமாகிவிடுகின்றனர். இந்நிலையில் எழுதப்படுகின்ற கதைகள்தான்  ஏராளமாக பிரசுரமாகி தற்போதைய ஏடுகளை அலங்கரித்து வருகின்றன. ஃபாஸ்ட் பூட் இஸ் ஆல்வேஸ் வேஸ்ட் ஃபூட்.

இது இலக்கியச் சூழலின் ஆரோக்கியமின்மையைப் பிரதிபலிக்கும்  எரிச்சலூட்டும் ஓர் நிலைப்பாடு. பத்திரிகையில்  பிரசுரமாகுகின்ற கதைகளைத் தேர்ந்தெடுகின்ற கதைக்குழு ஆசிரியர்கள், கதைகளுக்குப் புள்ளிகள் வழங்குகின்ற நீதிபதிகள் போன்றோருக்கு பரந்த வாசிப்பனுபவம் இருப்பதை உறுதி செய்த பிறகே கதைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தி.ஜா, பிரபஞ்சன், சுந்தரராமசாமி, புதுமைப்பித்தன் போன்றோர்கள்  யார் என்பது கூட தெரியாத நிலையில் இருப்பவர்களை கதைத் தேர்வுக் குழுவில் நியமித்தால், நல்ல கதைகள் அடையாளங் காணப்படாமல் புறந்தள்ளப்படும் என்பது உறுதி.

எழுத்தாளன் என்பவன் முதலில் நல்ல வாசகனாகத் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதே சிறப்பு. கற்பனையில் குதிரை ஓட்டுகிற சில வார்தை ஜால ஆசாமிகளைப் பிடித்து, வாசிப்பனுபவத்தை பரிசோதித்துப்பாருஙக்ள்.

பூஜியம் பூஜியம் பூஜியம் தான்.
  

திங்கள், அக்டோபர் 01, 2012

கவர்ந்த குட்டிக்கதை - படித்ததில் பிடித்தது

தலைப்பு : உலகத்திலேயே மிகவும் வேகமானது எது???
உலகப் பிரசித்திப்பெற்ற நிறுவனம் ஒன்றில் மிகவும் கௌரவமிக்க வேலை ஒன்று
காலியாக இருந்தது.  பலர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் சிலரை ஒரு பிரபல ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிக்கு நேரடி பேட்டிக்கு
வரும்படி அழைத்திருந்தது அந்த நிறுவனம்.

அவர்களில் நால்வர் மிகச்சிறந்தவர்களாகக் காணப்பட்டனர்.  நால்வரும்,
பல்கலைக்கழகப் பட்டதாரிகள்அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில்
அந்த நிறுவன அதிபருக்குக் குழப்பம்.

"
போக்குவரத்துச் செலவு, தங்கும் செலவு எல்லாவற்றையும் ஏற்றுக்
கொள்கிறோம், பிரிதொரு நாளில் இறுதிப் பேட்டிக்கு வாருங்கள்" என்று கூறி அந்த நால்வரையும் அனுப்பி வைத்தார்.
வேறொரு தேதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டிக்கு அந்த நால்வரும் வந்தனர்.
அவர்களுடன் இரவு உணவில் கலந்துகொண்ட நிறுவன அதிபர், "நீங்கள் நால்வரும் உண்மையிலேயே மிகவும் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள்; முடிந்தால் உங்கள் அனைவரையுமே வேலைக்கு அமர்த்திக்கொள்ள ஆவலாக உள்ளேன்.  ஆனால், உங்கள் தகுதிக்குரிய வேறு வேலைகள் காலியில்லைஆகவே, இந்த கௌரவமிக்கப் பதவிக்கு உங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாளை காலையில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன்.  அதில் யார் சிறந்த பதிலைக் கூறுகிறீர்களோ, அவருக்கே அந்த வேலை" என்று கூறிச்சென்றார்.
மறுநாள் காலை பேட்டி ஆரம்பமானது.
முதல் நபரிடம், "உலகிலேயே மிகவும் வேகமானது எது?" என்று கேட்டார் அதிபர்.

"
நொடிப்பொழுதில் வந்துபோகும் சிந்தனை" என்றார்.
இரண்டாமவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார் அதிபர்.

"
இமைகளை மூடித்திறப்பது" என்றார் அவர்.
மூன்றாவது நபரிடமும் அதே கேள்வி.

"
மின்சாரம்தான் உலகிலேயே வேகமானதுஇங்கிருந்து விசையைத் தட்டினால் அந்த நொடியில் பல மைல்களுக்கு அப்பால் உள்ள விளக்கு எரிகிறது" என்றார்.

"
ஓ நல்ல பதில்" பாராட்டினார் அதிபர். இப்பொழுது நான்காவது நபர்.

"
வயிற்றுப் போக்கு, அதாவது பேதி" என்றார் பீதியுடன்.
பதில் கேட்டு முகம் சுளித்த அதிபர், "எப்படி?" என்றார்.

"
நேற்று இரவு உணவுக்குப்பின் அறையில் படுத்திருந்தேன்என் வாழ்நாளில் என்றுமே ஏற்படாத வயிற்றுக் கலக்கல் ஏற்பட்டதுகழிவறைக்குப்போக நான் 'சிந்திப்பதற்குள்'...
'
இமைகளை மூடித்திறப்பதற்குள்'... 'விளக்கின் விசையைத் தட்டுவதற்குள்'... ... சோரி... அங்கேயே பேதியாகிவிட்டது!"
அந்த நான்காவது நபர் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.


                        ***
முற்றும்***
 எழுதியவர் : பாலகோபாலன் நம்பியார்.