புதன், ஆகஸ்ட் 20, 2014

பொய் கோபம்...



`ஹாலோ சாரி சாரி சாரி... எனக்குத்தெரியும் நீ கோபமாக இருப்பாய்.. சாரி லா.. ’ இன்று மதியம் தோழி என்னை அழைத்து சாரி புடவை என்று என்னமோ உளறிக்கொண்டிருந்தாள்..

என்னாச்சு.? கேட்டேன்.

இல்லெல்லா, சனிக்கிழம, சரியான மழ. எங்கும் வெளியாக முடியல. ப்ரொமீஸ் பண்ணிய மாதிரி அவரும் சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வரல.. சாரி லா.. கோவிசுக்காதே..!

என் மண்டையில் நண்டு ஓட ஆரம்பித்தது. என்ன இது, என்னமோ உளறுது.. என்ன சொல்ல வருது.. பேஸியல் போகலான்னு சொல்லியுருந்தோமே, அதுவா? இல்லே அன்று மார்கெட் போயிட்டு பசியாறிட்டு வரலாம்னு ஒரு அப்பாயின்மெண்ட் வைத்திருந்தோமே அதைச் சொல்றாளா?.. ஜிம் போகலாம்னு சொல்லிக்கொண்டு அலைந்தோமே.. அதைச் சொல்றாளா.! எனக்கு ஒண்ணும் புரியல. இருப்பினும் கேட்க மனமில்லை. அவளின் பரபரப்புப் பேச்சின் அலைவரிசையில் நானும் சுழல ஆரம்பித்தேன்..

அதுக்கென்ன.. இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்.! புரிந்ததுபோல் கலந்துகொண்டு பங்கிற்கு சில வரிகளை உதிர்த்து வைத்தேன்.

கேளு என்ன நடந்துச்சுன்னா.., என் நாத்தனா திடீர்ன்னு கூப்பிட்டு, நாட்டு வைத்தியர்கிட்ட போகணும், வா எனக்கு இடந்தெரியாதுன்னு சொல்ல, நான் காடிய எடுத்துட்டுக் கிளம்பும்போதா எங்க சின்னம்மா வரணும்.. குடும்பத்தோட வந்துட்டாங்க..’ தொடர்ந்தாள்..

ஐய்யோ அப்புறம்.? சுமந்த கேள்விக்கணைகளை மனதில் புதைத்துக்கொண்டு, ஆர்வமாகக் கேட்பதாக பேச்சில் புகுந்துகொண்டேன்.

அப்புறம் என்ன .. நாட்டு வைத்தியர பார்க்கமுடியாது, இன்னொரு நாளைக்குப் போகலாம்னு அவ கிட்ட சொல்லிட்டு, மார்கெட் ஓடி சாமான் எல்லாம் வாங்கி வந்து சமைச்சு முடிக்க மணி ஏழு.

ஐய்யோ...

அதான் நம்ம நிலம.. சரி நீ வேற இரண்டு வாரமா போன் பண்ணல, கோவிச்சுக்கிட்டியோன்னு நினைச்சு நானே கூப்பிட்டேன்..

நான் ஏன் கோவிச்சுக்கறேன்.. உன்னுடைய வேலை உனக்கு.. நினைச்ச நேரம் வா’ன்னு கூட்டிக்கிட்டு கிளம்பமுடியுமா.! இன்னும் சரியாக புரிபடாத மங்கிய நிலையிலேயே என் பேச்சு இருந்தது..

அப்பாடா, கோபம் இல்லியே. அது போதும்.. இருந்தாலும் மகள் பட்டமளிப்பு விழா விருந்து ரொம்ப முக்கியம். தேர்ந்தெடுத்த நட்புகளை மட்டுமே அழைக்கிறேன். மனதார வாழ்த்தும் நல்லுள்ளங்கள் கண்டிப்பாக வரவேண்டும். வாழ்வில் மறக்கமுடியாத நாள். நிச்சயமா வந்திடு. வரலன்னாத்தான் இருக்கு உனக்கு’ன்னு, வார்னிங் பண்ணின.. அதான் தயங்கி தயங்கி, எதிர்ப்பாத்திருப்பியே என்னிய....?  சாரிலா இன்னொரு நாளைக்கு நிச்சயம் வரேன்.. ‘ என்றாள், குலாவியவண்ணம்.

ஆஹா. அப்போதுதான் எனக்கே நினைவுக்கு வந்தது, அவள் அன்றைய விருந்துக்கு அழைப்பு கொடுத்தும் வரவில்லை என்று.. இருந்தாலும் என்னுடைய மெத்தனப்போக்கைக் காட்டிக்கொள்ளாமல்.. இறுதியில் கோபங்கொண்டதுபோல் நடித்துவிட்டுத்தான் தொலைபேசியை வைத்தேன்..