வியாழன், செப்டம்பர் 25, 2014

இதழோரம்

தம்பியும் நானும் ஒரே இடத்தில் தான் இருக்கின்றோம். என் தம்பியின் மகனுக்கு ஐந்து வயது. சில வேளைகளில் என் வீட்டுக்கு வருவான். `அத்தே, என்ன செய்யுறீங்க.? அண்ணன் இல்லே. மாமா இன்னும் வரல.?’ என்கிற கேள்விகளோடு சமையல் அறையில் என்னிடம் பேச்சு கொடுப்பான்.

``நீ ஏன்யா, ஒண்டியா இருக்கே.? அண்ணன்கள் எல்லாம் எங்கே.? அம்மா எங்கே? அப்பா எங்கே.? ’’

``அப்பா இருக்கார். டீவி பார்க்கிறார். நான் இங்கே வந்தேன். ஹ்ம்ம்...’’ என்று முனகிக்கொண்டே, குளிர்ச்சாதணப்பெட்டியின் அருகில் செல்வான். நான் கண்டும் காணாததுபோல் இருப்பேன்.

என் வீட்டு குளிர்ச்சாதணப் பெட்டியில் எப்போதுமே தின்பண்டங்கள் குவிந்துகிடக்கும். சாக்லட், கேக், அல்வா, ஐஸ்கிரீம், மிட்டாய் என. என் வீட்டில் சாப்பிட ஆள் இருக்காது. எங்கிருந்தோ வருவதை அங்கே கடாசி வைத்திருப்பேன்.. யாராவது குழந்தைகள் வந்தால் கொடுப்பேன். பெரும்பாலும் அக்கா தம்பி பசங்க வந்தால் ஒரே மூச்சில் தின்று தீர்ப்பார்கள். குழந்தைகளுக்குக் கிடைக்காது.

குளிர்ச்சாதணப்பெட்டியைத் திறந்தான். நான் தெரியாததுபோல் இருந்தேன். மூடினான்.மீண்டும் திறந்தான்.

என்னய்யா?

``அத்தே,  அது என்னாது?’’ சாக்லட் பாக்கெட்’ஐ கையில் எடுத்துக் கொண்டு கேட்டான். நான் என் சமையல் வேலையில் மூழ்கினேன். அவனைக் கண்டு கொள்ளாதது போல் பாவனை செய்தேன். அதை என்னிடம் கொண்டு வந்து காட்டி..

``அத்தே, இது என்னாது?”

``தெரியலையே’ய்யா.!’’ பதில் சொன்னேன்.

``சாக்லெட் ஆ? ’’ மீண்டும் கேட்டான்.

``ஹ்ம்ம்.. ’’ என்றேன்.

``இப்படி கல்லு மாதிரி இருக்கு.! சாப்பிடலாமா.?’’ கேட்டான். அவன் கொஞ்ச நேரம் என்னிடம் பேசவேண்டும் என்பதற்காக, நான் வேலையில் மூழ்கியிருப்பதைப்போல் நடித்தேன். அவனின் செய்கையினைக்கூர்ந்து கவனித்த வண்ணம்.

``தெரியலையே சாப்பிடலாமான்னு.. சாக்லட்தானே அது.?’’ மிளகாய் நறுக்கிக்கொண்டே கேட்டேன்.

``அப்படித்தான் இருக்கு..!’’ சொல்லிக்கொண்டே பாக்கெட்’ஐ பிரித்தான்.
முகர்ந்து பார்த்தான். வாயில் வைத்துக்கடித்தான். கடிக்கமுடியவில்லை. பிரிட்ஜ் குள்ளேயே இருந்ததால், கட்டியாக இறுகி இருந்தது.

அசட்டுச் சிரிப்பு சிரித்தான். ``அத்தே பல் வலிக்கும்போலிருக்கு. கராஸா இருக்கு..’’ என்றான்.

வாங்கி உடைத்துக்கொடுத்தேன். அமைதியாகச் சாப்பிட்டான்.

ஒரு கையில் ஒரு பொம்மை.  வாயில் சாக்லெட்.சாமார்த்தியமாக என்னிடம் பேசி வாங்கிவிட்ட திமிர் தொனியில், கால்களை நீட்டி, அதை ஆட்டிக்கொண்டே, கடக் முடக் என்று சுவைத்துச் சாப்பிட்டான் அந்த சாக்லெட்’ஐ.

இதழோரம் எச்சிலும் சாக்லெட்டும் சேர்ந்தாட்போல் வடிந்தது...
இரசித்தேன் கள்ளங்கபடமில்லா குழந்தைத்தன்மையை,.....
கொஞ்ச நேரம் குழந்தையாக மாறி..


புதன், செப்டம்பர் 24, 2014

சுமங்கலி

குடும்பமாகப் பழகிய எனது பழைய நண்பர் ஒருவரின் அம்மா இறந்துவிட்டார். இரண்டு மாதங்கள் கழித்து இன்றுதான் அத்துயர சம்பவத்தை என்னிடம் பகிர்ந்தார் என் நண்பர்.

``அடப்பாவி, ஏன் என்னிடம் சொல்லவில்லை.? அம்மா.. அடக்கடவுளே நல்ல மனுஷி அவங்க..அழகி, என்னாச்சு.? இளமையா இருப்பாங்களே.. ஏன் திடீர்ன்னு..?’’ என்று திட்டிக்கொண்டே அழ ஆரம்பித்துவிட்டேன்.

``அய்யோ அழாதிங்க விஜயா... சாரி சாரி.. நுரையீரல் கன்சர். வந்ததும் தெரியல, வீழ்ந்ததும் தெரியல.. எங்களாலே நம்ப முடியல.. சாரி..’’ என்று சமாதானம் சொன்னார்.

``என்னிடம் ஏன் சொல்லல.? பேராக்கில் இருந்தால் என்ன கெடாவில் இருந்தால் என்ன.! எப்படியாவது வந்திருப்பேனே..! கண்ணிலேயே இருக்காங்களே.. மங்களகரமான அழகி. அம்மா..’’ என்று கேவினேன்.

``இல்லை விஜயா.. நீங்க, பிள்ளைகளின் பட்டமளிப்பு விழா, விருந்து, மகளின் தேர்வு, என ஒரே மகிழ்வாக இருந்த காலகட்டம் அது.. இத்துயர சம்பவத்தைப் பகிர எனக்கு மனசு வரல..’’ என்றார்.

``இதெல்லாம் காரணமா..? ’’ அழுதுகொண்டே, என்னால் பேசமுடியவில்லை.

நான் முன்பு வேலை செய்த இடத்தில் என்னோடு வேலை செய்த நண்பர், பின்பு என் குடும்ப நண்பரானார். கணவருக்கு நண்பராகி. மனைவி என் தோழியாகி,  குழந்தைகளும் நண்பர்களாகி, என் மாமி மாமனாரும்நண்பர்கள் ஆனார்கள்.

ஒருமுறை பேராக்கில் நடைபெற்ற உறவுக்காரர் ஒருவரின் திருமண வைபவத்திற்குச் சென்றிருக்கையில், அங்கே இவர்களையும் சந்திக்க நேர்ந்தது.! யார், எப்படிப்பழக்கம்? என்று விசாரிக்கின்ற போது, ஒரு வகையில் தூரத்து உறவும் ஆனார்கள். அன்றிலிருந்து, நாங்கள் பேராக்கிற்குச் செல்கிறோம் என்றால், எங்களை வரவேற்க நண்பரின் அம்மாவும் அப்பாவும் காத்துக்கிடப்பார்கள். விதவிதமான சமையல்களைச் செய்து வைத்துக்கொண்டு. `கண்டிப்பாக வரணும்.இவ்வளவு தூரம் வந்துவிட்டு, இங்கே வரலன்னா, நான் கோவிச்சுக்குவேன்..’ என்று உத்தரவு போடுவார்.

இன்னொரு சிறப்பு என்னவென்றால்,  அவர்களின் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்துவிட்டார்கள். பெரிய பதவியில் உள்ளவர்கள் அவர்கள்.  கொஞ்சம் வசதியான குடும்பமும் கூட. கணவன் மனைவி இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல் ஒற்றுமையாக இருப்பார்கள். ஒன்றாகச்சேர்ந்தே ஊர் உலகமெல்லாம் சுற்றுவார்கள். அடுப்படி வேலைகள் தொடங்கி எடுபிடி வேலைகள் வரை அனைத்தையும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்தே செய்வார்கள்.நான் கூட அடிக்கடி என் நண்பரிடம் சொல்வேன்.. `பாருங்க புதுப்பொண்ணு மாப்பிள்ளை மாதிரி ஜிம்முன்னு இருக்காங்க இன்னமும்,’ என்று.

கோலாலம்பூர் வரும்போதெல்லாம்.. நான் எப்படி இருக்கேன்? என்று தவறாமல் கேட்பாராம் அம்மா. நானும் தொலைப்பேசியில் அழைக்கின்ற போதெல்லாம், புதுப்பொண்ணும் மாப்பிள்ளையும் எப்படி இருக்கின்றார்கள்? என்று தவறாமல் விசாரிப்பேன்.

அவரின் முகம் என் கண்முன்னே வந்து வந்து செல்கிறது. சோகம் கவ்வுகிறது. இருப்பினும் பிரார்த்தனை செய்து மனதை சாந்தப் படுத்தினேன்.

இதை யாரிடமாவது பகிர்ந்தால், மனதின் பாரம் குறையுமே என்று நினைத்து என் தோழிக்கு அழைத்தேன். அவளும் நானும் ஒருமுறை நண்பரின் வீட்டிற்கு மதிய உணவிற்குச் சென்றிருக்கையில் அம்மா இருந்தார். முருங்கைக்கீரை, முருங்கைக்காய் சாம்பார் என அவரின் சமையலை ஒரு பிடிபிடித்தோம் அப்பாதான் பரிமாறினார்.

அம்மா வந்துள்ளார், என்றால், அலுவலகத்திற்கு அழைப்பு வரும் மதிய உணவு நேரத்தின் போது. ``வரச்சொல் சாப்பிட, ’’ என்று உரிமையோடு அழைப்பார் அம்மா. அது ஒரு காலம்.

தோழியிடம் இத்துயரச் செய்தியினை பகிர்ந்தேன். அவளும் அதிர்ந்தாள். அதிர்ந்த அவள் ஒரு வார்த்தையை உதிர்த்தாள்.. நல்ல சாவு. சுமங்கலியாகச் சென்றுவிட்டார்.

இது எனக்கு இன்னும் வேதனையாக இருந்தது. சுமங்கலியாகச்செல்வது ரொம்ப முக்கியம் நம்மவர்களுக்கு .! இதுபோன்ற சிந்தனையில் இருந்து என்றுதான் விடுதலையோ.?

அம்மாவிற்குப்பிறகு அப்பா என்னசெய்வார்.? அம்மாதானே அவருக்கு உலகம்.! இன்னேரம் அப்பா என்ன செய்துகொண்டிருப்பார்.? தனியாக,?மருமகளுடன்? மகளுடன்? பேரப்பிள்ளைகளுடன்.? வெளிநாட்டில்? எங்கே இருப்பார். ? அவரை நினைக்க வேதனை இன்னும் கூடுகிறது.


சனி, செப்டம்பர் 13, 2014

reunion

ஒரு முக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம். அதாவது முன்பு நாங்கள் பணிபுரிந்த (PHILIPS AND JVC VIDEO COMPANY ) யின் பழைய ஊழியர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சி செய்யலாம் என்று..  கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக அதையொட்டிய ஆயத்தங்களைச் செய்தவண்ணமாக இருந்தோம்.

வட்சாப்பில் ஒரு குழுவை ஏற்பாடு செய்து, அங்கே ஒருவர் பின் ஒருவராக சேர்த்து. அங்கேயே ஏற்பாட்டுக்குழு, செயலவை உறுப்பினர்கள் என தேர்வு செய்து, பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு மாதகாலமாக இந்த வேலைகளில் மூழ்கியிருந்தோம். வட்சாப்பிலேயே எல்லா ஏற்பாடுகளையும் பகிர்ந்துகொண்டிருந்தோம்.


உணவு ஆடர்கொடுப்பது, பரிசுகளுக்கு ஏற்பாடு செய்வது. என்னென்ன விளையாட்டுகள் விளையாடலாம். கேக் வெட்டலாம். டோர் கிஃபிட் போன்றவவைகள் மகிழ்வுடன் பகிர்ந்து குதூகலித்தோம் 

PHILIPS AND JVC ஒரு பெரிய நிறுவனம். வீடியோ  கேமரா தயாரிக்கின்ற கம்பனி. கிட்டத்தட்ட ஆறாயிரம் ஊழியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஓர் நிறுவனம் இது.

நாங்கள் பணிபுரிந்த டிப்பார்மெண்ட் மிகப்பெரியது. pc board assemble செய்கிற இடம். அங்கேயே கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஊழியர்கள் பணிபுரிவார்கள். அங்கே அலுவலக ஊழியர்கள் தொடங்கி அடிமட்ட ஊழியர்கள் வரை எல்லோரும் ஒரு குடும்பமாகவே செயல் பட்டோம். மலாய்க்காரர்கள் சீனர்கள் பிறகு நம்மவர்கள்.

மலேசியாவில் நாம் இருந்தாலும், இனங்களுக்குள் பேணப்படுகிற சுமூக உறவுகளை நான் இங்கேதான் கற்றுக்கொண்டேன். மலாக்காரர்களின் நல்ல மனங்களை இங்கேதான் பார்த்தேன். அவர்களின் அன்பான பணிவான குணங்கள் எனக்குப் பாடம் போதித்தது இங்கேதான். வேலைகளைக் கற்றோம், சம்பாதித்தோம் என்பதையும் தாண்டி நண்பர்களைச் சேகரித்த இடமாக திகழ்ந்தது இந்த நிறுவனம்.  

நாங்கள் management staffs கிட்டத்தட்ட இருநூறு பேர் இருப்போம். நான் இவர்களுக்கெல்லாம் கிளார்க். அதாவது அட்மின். அனைத்து ஊழியர்களின் welfare’ரும் எனது பொறுப்பு.



வீடியோ மாறி குறுந்தட்டும் வந்து, ஸ்மார்ட் டீவியும் வந்து தொழில்நுற்பத்தின் அபரீதமான வளர்ச்சியில் இந்த வீடியோ தயாரிக்கின்ற துறை வீழ்ச்சி கண்டது. ஆறாயிரம் ஊழியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து குறைந்து, குறைத்து குறைத்து இப்போது கிட்டத்தட்ட ஐநூறு பேர் மட்டும் வேலை செய்கிற இடமாக அது மாறி இருக்கிறது. 

1989யில் தொடங்கிய இந்நிறுவனத்தில் நான் 1991யில் நுழைந்து 2000 த்தில் விலகினேன். வேலைப்பளு, இரவு பகல் பாராமல் வேலை. பணியிடம் நம்முடைய நேரத்தை முழுமையாக விழுங்கிக்கொள்வதால், வீட்டில், குழந்தைகளைக் கவனிக்க முடியாமல் போகவே நான் வேலையை ராஜீனாமா செய்தேன். அதன்பிறகு பிஸ்னஸ், இல்லத்தரசி என நகர்ந்து இப்போது SHARP யில், இன்றுவரை.


வேலை மாற்றலாகி பலர் பல்வேறு இடங்களுக்குச் செல்வது, திருமணம் செய்வது, வீடு மாறுவது, வெளிநாடுகளில் பணி செய்து அங்கே செட்டல் ஆவது என எல்லோரும் பிரிந்து போனோம். சமூகவலைத்தளங்களின் மூலம் சிலரை கண்டுகொண்டு அவர்களிடம் தொடர்பில் இருந்தோம். விடாமல் துரத்திப்பிடித்து நட்பு வைத்திருக்கும் ஒரு மலாய்தோழியும் (ரோஹானா) எப்போதும் என்னிடம் தொடர்பில் இருப்பாள். சாப்பிட்டாயா? தூங்கினாயா.? எங்கே போனாய்? என்ன செய்கிறாய்.? என அன்பாகக் கேட்டுக்கொண்டு.

திடீரென்று வட்சாப்பில் சந்தித்து, ஒன்று சேர, ஒருவர் பின் ஒருவராக வந்து, ஒரு மாதகாலத்திற்குள்  விட்ட குறை தொட்ட குறை என நிறைய பேர் ஒட்டிக்கொண்டார்கள்.

நேற்று (12/9/2014) ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வில் உண்டு களித்து கட்டித்தழுவி கண்ணீர்விட்டோம். சிரித்தோம் மகிழ்ந்தோம். இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் வீடு திரும்பினோம். பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். அந்த நிறுவனத்திற்குப் பிறகு எங்கே சென்றார்கள். என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள். யாரெல்லாம் அங்குள்ள அனுவத்தை வைத்து மேலே வந்தார்கள். நிறுவனத்தில் வேலை செய்வதையே வெறுத்து பலர் சொந்த தொழில் ஆரம்பித்துள்ளார்கள் என பல நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம்.

நிகழ்ச்சிக்கு முழுமூச்சாக உழைத்தது எனது மலாய்தோழி ரோஹானாதான். அவள் இல்லையென்றால் நாங்கள் இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து ஒன்று கூடியிருப்போமா, என்பது சந்தேகம்தான். இடையில் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தாள். என்ன பொருளை பரிசாகக் கொடுக்கலாம் என முடிவு செய்தாள். எங்கே இந்நிகழ்வை வைக்கலாம் என இடத்தைப் பார்த்து பணம் செலுத்திவிட்டு வந்தாள். இன்னும் நிறைய பொறுப்புகளை தாமே ஏற்றுக்கொண்டு செய்து வந்தாள். நிகழ்வுகளின் செயல்பாடுகளை உடக்குடன் வட்சாப்பில் பகிர்ந்தாள். தாம் நடத்துகிற சாப்பாட்டுக்கடையை கால்லேஜ் செல்லவிருக்கும் மகனின் பொறுப்பில் விட்டுவிட்டு, இந்த நிகழ்விற்காக உழைத்தாள். மகன் இந்த மாதம் இறுதியில் கால்லேஜில் சேரவிருக்கின்றான்.



நிகழ்வை முடித்துக்கொண்டு, நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். புகைப்படங்கள் தெளிவாக இருக்கட்டும். நான் ப்ளாக் எழுதுவேன். அதில் மகிழ்வாகப் பகிரப்போகிறேன் என்று நானும். நான் முகநூலில் போடுவேன் என்று பலரும் சொல்லி அதிகமான புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். வீடு வந்துசேர்வதற்குள் புகைப்படங்கள் வட்சாப்பில் குபுகுபுவென புகுந்துக்கொண்டே இருந்தது. போடப்பட்ட புகைப்படங்களைப்பார்க்கமுடியாமல் வட்சாப் ஜேம் ஆகிவிட்டது. புகைப்படங்களை எல்லாம் பார்த்தே ஆகவேண்டும் என்பதற்காக, நள்ளிரவு இரண்டு மணிவரை கைப்பேசியை நோண்டிக்கொண்டே இருக்கையில்.. ... என் தோழி ரோஹானாவிடம் இருந்து இந்த அதிர்ச்சி செய்தி வந்தது.

‘ என் மகன் கார்விபத்தில் இறந்துவிட்டான், எனபதை நான் என் நண்பர்களிடம் மிகவும் வறுத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று.

எல்லோரும் அதிர்ந்தோம். என்னாச்சு? ஏன் இப்படி.? அல்லாஹ் கொடுத்தார் அவரே எடுத்துக்கொண்டார். ! கலங்காதே... என, தொலைப்பேசி அலறிய வண்ணமாக. சில நண்பர்கள் உடனே மருத்துவமனைக்கு விரைந்தார்கள். நான் விடிய விடிய தூங்காமல் விழித்துக்கொண்டே இருந்தேன். என்னால் நம்பமுடியவில்லை.

கனவு காண்பதைப்போலவே இருந்தது. காலையில் மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து, நிஜமாகவா? என உறுதிப்படுத்திக்கொண்டு, முதல் முறையாக முஸ்லீம்களின் இடுகாட்டிற்குச் சென்று அங்கே நிகழ்கின்ற நிகழ்வுகளை நேரில் கண்டு சோர்ந்துபோய் வீடு வந்தேன்.

இரவெல்லாம் தூக்கமில்லை. பகல் பொழுதில் கொஞ்ச நேரம் தலை சாய்த்தேன். என்னால் எழவே முடியவில்லை. கண்கள் திறந்துதான் இருக்கின்றன. ஆனால் எழமுடியவில்லை. யாரோ என்னை பலங்கொண்டு அழுத்துகிறமாதிரி ஓர் உணர்வு. என்னை எழவிடாமல் என் மார்பின் மேல் அமர்ந்துகொண்டு அழுத்துகிறார்கள். சண்டை இடுகிறேன். விடு விடு என கத்துகிறேன். ஆனால் அந்தச் சத்தம் யார் காதிலும் விழாததைப்போன்று வாயில் மூச்சு மட்டுமே வெளிப்படுகிறது. எனக்குள் எல்லா உணர்வும் இருந்தது. சுற்றி இருக்கின்ற அனைத்தும் தெரிகிறது ஆனால் எழமுடியவில்லை. எழாதே. படு.. படு.. படு.. என அழுத்தம். போராடி போரில் வென்று எழுந்துவந்ததைப்போல் இருக்கிறது உடலும் மனமும்....

தலைக்குக் குளித்து, பூஜை செய்தேன். கணவர் விபூதி வைத்துவிட்டார். மனதிற்கு ஆறுதலாய் உள்ளது...

இன்னமும் மனம் கனக்கிறது.






வியாழன், செப்டம்பர் 11, 2014

தமிழ் அனுபவம்

மேடான் சென்றிருந்தபோது, சில தமிழர்களைச் சந்தித்தேன். கோவிலில் ..ஹோட்டலில் சாப்பிடும்போது. மோட்டார் ரிஃக்‌ஷா எடுக்கச்சென்ற இடத்தில்.

அங்கே ஒரு பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு சென்று வந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். உள்ளே விநாயகர் சதூர்த்தி நிகழ்வு பற்றிய அறிக்கையினை அச்சிட்டிருக்கின்ற காகிதத்தை எடுத்துப்பார்த்தேன். பாதி தமிழிலும் பாதி இந்தோனீசிய மொழியிலும் அச்சிட்டிருந்தார்கள்.

ஆஹா, தமிழ் தெரிகிற, பேசுகிற, படிக்கிறவர்கள் இருப்பார்கள் போலிருக்கு, என்று நினைத்து, போகிற வருகிறவர்களை எல்லாம் பார்த்து ஒரு புன்னகையை வீசினேன். பதிலுக்கு அவர்களும் புன்னகையைத் தந்தார்கள். ஆனால் யாரும் வாய்த்திறக்கவில்லை. பயபக்தியுடன் வழிப்பாட்டில் மூழ்கினார்கள்.

சீனர்களும் கோவிலில் விழுந்து விழுந்து வழிபாடு செய்துகொண்டிருந்தார்கள்..

பேச வாய்ப்பு இல்லயே என ஏங்கினேன். கோவில் பூசாரியும் முனகிக்கொண்டே பூஜை செய்தார். சத்தம் வெளியே வரவில்லை.

கோவில் கருவறையின் வெளியே, ` உள்ளே நுழையாதீர்கள்’ என்று இந்தோனீசிய (மலாய்) மொழியில் எழுதியிருந்தார்கள்.

என்ன? யாரிடம் பேசுவது,! என்று மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டே, அங்குள்ள ஒருவரிடம், தமிழில், டாயிலட் எங்கே.? என்று கேட்டேன். அவருக்கு விளங்கிற்று. வாயால் பேசுவதைவிட, கைகளால்.. அதோ.. அங்கெ அங்கெ..பின்னாடி போங்கொ.. என்றார்.

பின்னால் சென்றேன். அங்கே ஒரு கூட்டம்.. பெண்கள் அமர்ந்து காய்கறிகளை வாளி வாளியாக நறுக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் அருகில் சென்று,  டாய்லட் எங்கே.? கேட்டேன்.

சிரித்த முகத்துடன் ஒரு பெண் கைகளை நீட்டி, தோ.. என்றார்.

டாய்லட் சென்று வந்தவுடன். அவர்களிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.

இவ்வளவு காய்கறிகளை நறுக்குகின்றீர்கள். என்ன விஷேசம். விநாயகர் சதூர்த்திதான் முடிந்துவிட்டதே..!? மெதுவாகப்பேச்சு கொடுத்தேன். அவர்களின் முகங்களை உற்று கவனித்தேன்.

ஓ.. இல்லெ. நாளிக்கு கல்யாணம். அதா. நீங்க எங்குள்ளவங்க? என்னிடம் கேட்டார் ஒரு பெண்மணி.

கோலாலம்பூர்..

ஓ.. நா வந்திரிக்கெ அங்கே..

அப்படியா.? தமிழர்கள்தானே..!  நான் தான் கேட்டேன்.

ஆமா..ஆமா.. தமில்தான். பதில் சொன்னார் அவர். கஷ்டப்பட்டு பேசுவதை உணர்ந்த நான் மேலும் தொடர விரும்பவில்லை. கொஞ்ச நேரம் நின்று அவர்களைக் கவனித்தேன். வேலைகளில் மூழ்கினார்கள். அவர்களுக்குள் பேசுகிறபோது இந்தோனீசிய பாஷயிலேயே பேசி சிரித்துக்கொள்கிறார்கள். என்னிடம் கஷ்டப்பட்டு தமிழ் பேசிய அவர்கள். அவர்களுக்குள் மிகச்சரளமாக இந்தோனீசிய மொழியில் உரையாடிக்கொள்கிறார்கள்.

கோவிலின் வெளியே காலணிகளைக் கலற்றி வைக்கின்ற இடத்தில் தந்தையும் மகளும், இந்தோனீசிய மொழியில் பேசிக்கொண்டிந்தார்கள்.

கோவிலுக்கு எதிர்ப்புறத்தில்  நினைவுச்சின்னங்கள் விற்கப்படுகிற கடை ஒன்றில் நுழைந்தேன். அங்குள்ள கடை அக்கா எங்களைக் கண்டவுடன் பதற்றமடைந்துவிட்டார். ஆங்கிலத்தில் பேசினார். நான் தமிழில் பேசினேன். கஷ்டப்பட்டார். வேர்த்து விறுவிறுத்தது அவருக்கு. நா தஞ்சாவூர் போவே.. சாமா வாங்குவே.. என்றார். நான் இந்தியா அல்ல. மலேசியா, என்றேன். ஓ.. கோலாலபூர் போவே அடிக்கடி. ரொம்ப கூட்டாலி இருக்கெ.. என்றார். பதற்றமாகவே பேசினார். முடிந்தால் எங்களை கடையை விட்டு விரட்டியே விடுவார் போலிருக்கு..

அடுத்து, ஹோட்டலில் ஒருவரைச் சந்தித்தேன். உணவு சாப்பிடுகையில். தமிழரா.? கேட்டேன். அசட்டுத்தனமாக சிரித்துவிட்டு.. ஆமா.. நீங்க எங்கே உள்ளிவங்க? கேட்டார். மலேசியா. என்றேன்.
ஓ.. நான் டெஃக்டையிஸ் வைத்திருக்கேன். மலேசியால கடை இருக்கு. வருவேன். அடிக்கடி. என்றார். அவரும் விட்டால் போதும் என்கிற பாணியிலே பேசினார். துன்புறுத்த முயலவில்லை. பொழச்சுப்போ.. என்று விட்டுவிட்டேன்.

மோட்டார் ரிஃக்ஷா ஓட்டும் ஒரு வாலிபனைச் சந்தித்தோம். இன்னொரு ஓட்டுனரிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கையில் இவன் நுழைந்து இந்தோனீசிய பாஷயிலேயே `வராது அக்கா.. தூரம். ரேட் குறைவுதான், என்று அவர்களுக்குப் பரிந்து பேசினான். தமிழாய்யா? கேட்டோம். ஆம், என்றான். அபப்டினனா நீங்களே வாங்களேன். பேசிக்கிட்டே போகலாம். என்றோம்.

ஆ.. என்ன சொல்றீங்க? எனக்கு தமிழ் தெரியாது. என்று மலாய்மொழியில் அசடு வழிய சொல்லி, இடத்தைக் காலி செய்தான்..

இப்படியாக எங்களின் தமிழ் அனுபவம் அங்கே....

நல்லவேளை.. மலேசியாவில் தமிழ் கம்பீரமாக பீடு நடை போடுகிறது, என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக்கொண்டோம்.


சனி, செப்டம்பர் 06, 2014

மேடான் பயணம் - லேக் தோபா..

மேடான் சென்று வந்தேன்.

தோழியின் வற்புறுத்தலின் பேரில் அவளோடு சென்றேன். விமான டிக்கட் பணம் மட்டும் கொடு, மற்றவையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். அங்கே எல்லாம் மலிவுதான். பணம் அவ்வளவாக செலவாகாது. வீடு வேலை என மன உளைச்சலாக இருக்கிறது, வாங்களேன் என்னோடு.. நன்கு சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங் தூக்கம் என ரிலஃக்ஸ் ஆக இருந்து விட்டு வரலாம்.. என்றார்.

மேடான் தானே, மலேசியாவில் இருந்து விமானத்தில் சென்றால் கிட்டத்தட்ட அரை மணிநேரத்தில் செல்லக்கூடிய ஒரு இடம். கலாச்சார சூழலில் மொழி பயன்பாட்டில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது, ஏறக்குறைய மலேசியா போல்தான் இருக்கும்/இருக்கவேண்டும் என்கிற சிந்தனையில் அரை மனதோடுதான் சென்றேன்.






ஏமார்ந்துபோனேன்.!

விமானம் தரையிறங்கி, அவன்ஸா காரில் ஏறி, பட்டணத்தைவிட்டு கிராமிய சூழலில் நுழையும்வரை மலேசியாவில் இருப்பதைப் போலவே இருந்தது. அதற்கு அப்பால் செல்லச்செல்ல வீடுகளின் அமைப்புகளில் மாற்றங்களைக் காணமுடிந்தது. நீர்க்கப்பல் போல் அழகிய சிறிய சிறிய வீடுகள். குடிசைகள் போல் தென்னை ஓலையில் கூறைகள் இட்டுக் கட்டிருப்பினும், அதன் அமைப்பின் வேலைப்பாட்டில் அழகிய ஓவியமாகவே எனக்குக் காட்சியளித்தது.

மொழியில், மலேசியரான எங்களுக்குப் பிரச்சனை இல்லை. அவர்களுக்கு வேறு வட்டாரமொழிகள் இருப்பினும் மலாய் மொழியில் நன்கு உரையாடுகிறார்கள். `மலேசியர்களின் பாணி இது, இதற்கு மலேசியர்கள் இப்படித்தான் சொல்வார்கள். இறுதியில் `லா..’ என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்கள். நான் நீ என்பதை மட்டும் ஆங்கிலத்தில் யூ, மி என்று சொல்லிப் பேசுவார்கள்தானே.!?’ என்று கேட்டு கிண்டல் செய்துகொண்டே கலகலப்பாக பேசுகிறார்கள். அவர்கள் பேசுகையில் ஓரிரு வார்த்தைகள் புரியவில்லைதான். இருப்பினும் உரையினை நன்கு கூர்ந்து கேட்டோமென்றால் அந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்துவிடுகிறது.

உணவும் பிரச்சனைதான். எல்லாவற்றையும் அவித்து, பொரித்து மஞ்சள் பொடி தூவி தேங்காய்ப்பாலை அதன் மேல் ஊற்றி பரிமாறிவிட்டு, பழுத்த பச்சை மிளகாய் மற்றும் ஊசிமிளகாய்களை பூண்டு இஞ்சி தக்காளி கொண்டு மசித்து தாளிக்காமல் சட்னிபோல் அப்படியே வைத்துவிடுகிறார்கள். மலேசியாவிலும் மலாய்க்காரர்கள் உணவு பெரும்பாலும் இப்படித்தான் என்றபோதிலும், மற்ற உணவுகள் அதேவேளையில் சரிக்குச்சமமாகக் கிடைக்கக்கூடிய பட்சத்தில், பெரும்பாலும் மலாய்க்காரர்களின் உணவுகளை நான் தவிர்த்துவிடுவேன்.

தெம்பே, புச்சோக் பாக்கு, கங்கொங், புச்சோக் உபி, கச்சாங்கோரிங் வித் பொடி நெத்திலி என எல்லா சாப்பாட்டுவேளையிலும் இதே வகை உணவுகளைப் பரிமாறுகிறார்கள். கூடுதலாக கோழி பொரியல் அல்லது மீன் பொரியல். இவைகளையெல்லாம் காரத்தோடு சாப்பிடவேண்டுமென்றால் அதை அந்த மிளகாய் சட்னியில் தொட்டுக்கொண்டு கைகளைக் கொண்டே சாப்பிடலாம். வாழை இலையின் மேல் வைத்துத்தான் கோழி மீன் போன்றவைகளை பரிமாறுகிறார்கள். கோழிக்குழம்பு ஒரு உணவகத்தில் கொடுத்தார்கள். மசாலா நிறத்தில், தேங்காய்ப்பாலில் மூழ்கிக்கொண்டு..!  திருப்பதிக்கே லட்டா.? என்று கலாய்த்துவிட்டு, கொஞ்சம் நக்கிப்பார்த்தோம். ஒகே..லா. நாட் பேட்.

அதிர்ஷ்டவசமாக சிலவேளைகளில் பரிமாறிய உணவு சுவையாகவும் அமைந்துவிடுகிறது, சாப்பிடலாம். பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டில் ஒரு `புல்மீல்’ இறங்கிய மறு நொடி வயிற்றைக் கலக்க ஆரம்பிக்கும். இங்கே அந்தப் பிரச்சனையெல்லாம் இல்லை. நான்கு நாட்கள் சாப்பாடு குமட்டலும் இல்லை, வயிற்றுப்போக்கும் இல்லை.


ஷாப்பிங் செய்ய நல்ல இடம் என்கிறார்கள். நான் கணக்குப்போட்டுப் பார்த்ததில், ஏறக்குறைய மலேசிய விலையில்தான் பொருட்கள் விற்கப்படுகிறன. பாத்திக் துணிமணிகள் மலிவு. அதிகமான பாத்தேக் ஆடைகள் கடைத்தெரு முழுக்க குவிந்து கிடக்கின்றன. ஆடைகளின் வடிவமைப்புகள் கண்களைக் கவர்கின்றன. கலாச்சார ஆடைகளை விதவிதமான வடிவத்தில் தைத்து பொம்மையில் அணிந்து பார்வையாளர்களைக் கவர்கிறார்கள். நிஜமாலுமே அழகழகான ஆடை டிஸைன்’கள். மெலிந்து உயரமாக இருக்கின்ற மாடல் போன்ற பெண்கள் அணிந்து நடந்தால், அழகுப்பதுமைகள்தான். ஆடைகளைவிட மீட்டர் துணிகள்தான் ஜாஸ்தி.  வாங்கி வந்து சுடிதார் தைத்துப்போட்டால்.. ரொம்ப அழகாக இருக்கும். !

ஆண்களுக்கு ஜிப்பாவும் கிடைக்கின்றது. சூப்பரான காட்டன் துணியில். ஆனால் வெள்ளை வர்ணத்தில் மட்டும்தான் கண்டேன். மற்றவர்ணங்களின் காணோம். மலிவுதான்.

சந்தை

நான் எந்த ஊருக்குச்சென்றாலும் அந்த ஊரின் பசாருக்குச் செல்வது எனக்குப்பிடித்தமான ஒன்று. கோயம்பேடு சென்னை.. வியட்நாம் சந்தை, சாயம் ரீப், என எங்கு சென்றாலும் எல்லாச் சந்தைகளுக்குள்ளும் நுழைந்துவிடுவேன். அது எனக்கு ஒரு ஹோபி. கோயம்பேடுதான் பெரிய சந்தை. அதைவிட கொஞ்சம் குறைவு மேடான் சந்தை. நெத்திலி கருவாடு, மீன், இறைச்சி, பன்றி, கோழி, காய்கறிகள் என தனித்தனியாக மிகப்பெரிய இடத்தை அடைத்துக்கொண்டு வியாபாரம் பரபரப்பாக நடைபெறுகிறது.

என்னுடன் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த என் பணிப்பெண்ணின் ஊர் அது. நாங்கள் அங்கு உள்ளோம் என்று சொன்னவுடன் ஓடோடி வந்துவிட்டாள். அவளுக்கு எனக்கு என்னென்ன பிடிக்கும் என்று தெரிந்திருந்ததால், சந்தைக்குள் நுழைந்தவுடன், நெத்திலி கருவாடு விற்பனை செய்கிற கூடாரத்திற்குள் அழைத்துச்சென்றுவிட்டாள். வியர்ந்து போனேன். அங்குள்ள விதவிதமான நெத்திலி மீன்களைப் பார்த்தவுடன், நெத்திலி வகைகள் இவ்வளவு உள்ளனவா.? என்று ஆச்சரியம் அடைந்தேன். நாற்றமில்லாமல் மிக நேர்த்தியாக தூய்மையாக இருந்தது அந்தச் சந்தை.

பொடி நெத்திலி இங்கே கிலோ ஐம்பது ரிங்கிட் என்றால், அங்கே வெறும் இருபத்து நான்கு ரிங்கிட்தான். காய்ந்த இரால் இங்கே கிலோ அறுபது ரிங்கிட் என்றால் அங்கே அதில் பாதிதான். சாமான்கள் புதிதுபுதிதாக இருந்தன. கேட்கிற விலைக்கு சாமான்களைக் கொடுத்துவிடுகிறார்கள். என் பணிப்பெண் எனக்காக பேரம் பேசி வாங்கித்ததாள். சுற்றுலாப் பயணிகள் என்றால் விலையில் கொஞ்சம் விளையாடுகிறார்கள். ஆட்கள் ஈ மாதிரி மொய்க்கின்றார்கள். `தோ வந்துட்டேன்’ என்று சொல்லி அடுத்த கடையில் விலை கேட்டுவிட்டு வருவதற்குள், இங்குள்ள சாமான் காலி. பரபரப்பாக வியாபராம் நடக்கின்ற ஒரு சந்தை. பொடி நெத்திலி காய்ந்த ஊடான், பெத்தாய் என ஒவ்வொரு கிலோ வாங்கினேன். வாங்கிய பிறகு சுமார் ஒரு மணிநேரம் அந்த சந்தையைச் சுற்றினோம்.

லேக் தோபா

மேடான் செல்கிறோம் என்றவுடன், ஏற்கனவே அங்கு சென்று வந்த தோழி சொன்னாள், ஒண்ணுமில்லை அங்கே. மலை மேடு காடு என ஒரே போர். என்றாள்.




ஆனால் நீங்கள் மேடான் என்று கூகுளில் தட்டினால் அங்கே நம் கண்களை அகல விரிய வைக்கவைப்பது  அங்குள்ள ஓர் அழகிய ஏரி. அதை அமுக்கிப் படித்தோமென்றால், அந்த ஏரியின் சிறப்பு என்ன என்பதனைச் சொல்லியிருப்பார்கள். LAKE TOBA என்ற பெயரைக்கொண்ட ஏரிதான் அது. கிழக்காசியாவிலேயே மிக நீளமான ஏரி. உலகத்திலேயே மிக ஆழமான ஏரியும் கூட. 100 கிலோ மீட்டர் நீளமும் 30 கிலோ மீட்டர் அகலமும்  கொண்ட மிக அழகிய ஏரி. நிலத்தில் இருந்து கிட்டத்தட்ட 1000 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏரி எழுபத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வெடித்துச்சிதறிய எரிமலையின் எச்சம்.

PARAPAT வழியாகச் சென்று  லேக் தோபா அடைந்து, பின் அங்கிருந்து SAMOSIR தீவுக்குச்செல்லவேண்டும். பாராப்பாட் சாலை குறுகலானது. வளைந்து வளைந்து செல்கிறது. எங்களின் ஓட்டுனர் எங்கேயோ சொன்னார், நாம் பாராப்பாட் வந்துவிட்டோம் என்று, ஆனால் வளைந்து வளைந்து மேடு பள்ளம் என ஏறி இறங்கி கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் பிடித்தது லேக் தோபா வந்தடைய.

விமானம் தரை இறங்கியது காலை மணி 8.30. அங்கிருந்தே தொடங்கிவிட்டது எங்களின் பயணம் லேக் தோபா நோக்கி. இடையே ஓர் இடத்தில் காலை உணவு எடுத்தோம். அதைத்தவிர வேறு எங்கும் நிற்கவில்லை. கார் நிற்காமல் பயணத்தை மேற்கொண்டது. வேகக் கட்டுப்பாடு 60km or 80km/per hour தான். இதைவிட வேகமாகச் சென்றதை நான் உணரவில்லை. அற்புதமான இயற்கைச் சூழலை நாங்கள் ரசித்து மகிழ அந்த வேகக் கட்டுப்பாடு எங்களுக்குப் பேருதவியாக இருந்தது.

காரின் சன்னல்களைத் திறந்து வைத்துக்கொண்டு குளிர் காற்று, மலையின் மூலிகை வாசம். மலைவாசிகளின் வாழ்க்கைச் சூழல் என, வழி நெடூக ரசித்துக்கொண்டே சென்றேன்.

மலையில் கிடைக்கின்றன காப்பிக் கொட்டைகளை பதனப்படுத்துகிற காட்சிகள், சோளம் உலறப்போகிற காட்சிகள். கால் நடை வளர்ப்பு, மேய்த்தலுக்கு அழைத்துச்செல்லுதல்.. என எல்லாம் அற்புதமான கிராமிய சூழல்.

கொட்டிக்கிடக்கும் இயற்கைஅழகு

அவ்விடத்தை நேரில் சென்று கண்டபோது அதன் அழகை என்னால் உணரமுடிந்தது. வார்த்தைகள் இல்லை வர்ணிக்க. சில இடங்களில் ஏரியின் நீர் கரு நீலமாகவும், சில இடங்களில் லேசான நீலமாகவும், சில இடங்களில் பச்சை வர்ணமாகவும், பேர்ரி செல்லச்செல்ல நீர் கண்ணாடிப்போலவும், குளுகுளு என சொர்க்கத்தில் இருப்பதைப்போலவே இருந்தது. கானல் நீர் கண்முன்னே, காணும் இடமெல்லாம் பரந்துவிரிந்த நீர் தேக்கம். இடையிடையே பசுங்குன்றுகள். கார்பிட் புல் விரித்ததைப்போன்று மலையில் மேல் பஞ்சுபோன்ற புற்கள். அற்புதமான சூழல் அது. அனுபவித்த என்னால் அதை விவரிக்க முடியவில்லை. சொல்லவும் தெரியவில்லை. அழகு என்கிற ஒற்றை வார்த்தையில் அடக்கமுடியாத ஓர் அற்புத இயற்கைக் கொடை அது. கடவுளின் இல்லமாக இருக்குமோ என்கிற சந்தேகம் கூட வந்தது எனக்கு. மனதிற்கு அவ்வளவு மகிழ்வைக்கொடுக்கின்ற சூழல். இங்கே நீ எவ்வளவு மகிழ்வாக இருக்கின்றாய்.? என்று யாராவது கேட்டால். சிறு குழந்தைபோல் `அவ்வ்வ்வ்ளோ’ என்று கைகளை மிக மிக அகலமாக நீட்டி குதூகலித்துச் சொல்வேன்.

புகைப்படங்கள் எடுப்பதற்குக்கூட மனமில்லை. புகைப்பட கருவியை இயக்குகிற வேளையில் பொழுது கழிந்துவிடுமோ, பேர்ரி நகர்கிறது, காட்சிகள் நகர்கின்றன என்கிற சிந்தனை மூளையைக் குடைகிறது. அந்த எழில் பொங்கும் இயற்கையில் அப்படியே லயித்துவிட்டேன். சுற்றி இருக்கின்ற மலைகள் சூரியனின் ஒளி பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வர்ணத்தில் காட்சி கொடுக்கின்றன.

ஓ மை காட்.. ஓ மை காட்..  அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகுஅழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு.. எந்த முக்கில் நின்று பார்த்தாலும் அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு அழகு.. எனக்கு வேறு வார்த்தையே சொல்லத்தெரியவில்லை.




லேக் தோபாவில் இருந்து பேர்ரி எடுத்து ஒரு மணிநேர பயணம் SAMOSIR ISLAND சென்றோம். அங்கே வாழ்ந்த பழங்குடியினரின் கல்லரை அதன் வரலாறு பற்றித்தெரிந்துகொண்டோம். அங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சூழலை நேரில் காணலாம்.

இப்போது ஓரளவு கார் வீடு என வசதியாக வாழ்ந்தாலும், ஒரு காலத்தில் அவர்கள் மலைவாசிகளாக இருந்த அடையாளங்கள், இல்லங்கள், கலாச்சார ஆடை, உணவு, அரசியல் பின்னணி என இன்னமும் பின்பற்றி வருகிறார்கள் என்பது கண்கூடு. வாயில் வெத்தலையைக் குதப்பிக்கொண்டு மணக்கமணக்கப்பேசுகிறார்கள். சண்டைக்காரர்கள் போல் கத்திக் கத்திப்பேசுகிறார்கள். அதுதான் அவர்களின் பாணியாம்.! வித்தியாசமாக இருந்தது பார்ப்பதற்கு.



பலவிதமான கைவினைப்பொருட்களைச் செய்து சுற்றுலா பயணிகள் வருவார்களா என்று காத்திருந்து நம் கைகளைப் பிடித்து இழுக்காத குறையாக அவைகளை வாங்கச்சொல்லி கெஞ்சுகிறார்கள். இதுபோன்ற இடங்களின் பொருட்களை வாங்கவேண்டுமென்றால் பாதிக்குப் பாதி விலையினைக் குறைத்து வாங்கவேண்டுமென்று அங்கே சென்று வந்தவர்கள் சொல்லியிருப்பினும், நமக்கு ஓரளவு தெரியும் அப்பொருளை நாம், நம்நாட்டில் எவ்வளவு விலைக்கு வாங்கலாம். அந்த பொருளின் தேவை என்ன. தரம் என்ன, எவ்வளவு குறைக்கலாம், எவ்வளவு கொடுக்கலாம் என்று.! சும்மானாலும் குறைக்கலாம் என்பதால் குரைத்துக்கொண்டிருப்பது அவமானம். நல்லா இருக்கு. நமக்குத்தேவை. பயன்படுத்தலாம் என்றால் வாங்கலாம். பேரம் பேசி நாம் `ச்சீச்சீ’ என, வியாபாரி `ச்சீச்சீ’ என, ஒருவித கலவர சூழலை உருவாக்குவது கலாச்சாரக் கேடு. எனக்கு இதெல்லாம் ஒத்துவராத ஒன்று. என்ன விலை.? இதுதான் விலை. சரி எவ்வளவிற்குக் கொடுப்பீர்கள்.? இவ்வளவிற்கு தரலாம், என்றால். வாங்கிக்கொண்டு வரவேண்டியதுதான். ஏழைகள் என்று தெரிந்தும் பேரம் பேசி வாங்கிக்கட்டிகொள்வது கொடுமை. அப்படி ஒரு சம்பவம் எங்களின் பயணத்தில் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்டவர் என் தோழி. நான் இடத்தைக் காலி செய்து நகர்ந்துவிட்டேன்.

PARAPAT -

லேக்தோபாவில் இருந்து ப்ராப்பாட் செல்லும் வழி நெடூக லேக்தோபாவின் அழகிய காட்சிகளை ரசித்தவண்ணமாகச் செல்லலாம். மீன்பிடி கிராமத்தில் ஏரியின் ஓரமாக வாழும் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக நீரின் மேல் வீசப்பட்ட வலைகள் காண்பதற்கு நீரில் ரங்கோலி கோலம் போட்டமாதிரியே இருந்தது.


லேக்தோபா ஏரியைக் காண்பதற்கே நாம் நீண்ட தூரம் மலையேற வேண்டும். அந்த ஏரி எவ்வளவு பெரியது என்பதனை ப்ராப்பாட் செல்லும் வழியில் நின்று பார்த்தோமென்றால் அதனின்  பரப்பளவை ஏறக்குறைய கணிக்கலாம். sky view என்பார்களே அது போல் உயரமான இடத்தில் இருந்து காண்கின்ற பிரமிப்பைக் கொடுக்கும்.  அப்படியென்றால் ப்ராப்பாட் செல்ல இன்னும் கூடுதல் மலைப்பிரயாணம் மேற்கொள்ளவேண்டும். உச்சியில் SIPISO PISO நீர்வீழ்ச்சியும் இருந்தது. அந்த நீர் வீழ்ச்சி காண்போரை அதிசயத்தில் ஆழ்த்தியது. நீர் மலையின் உச்சியில் இருந்து வரவில்லை. மலையடிவாரம் லேக்தோபா ஏரி. மலை உச்சியில் மலைவாழ் மக்களின் சாதாரண வாழ்க்கைச்சூழல். அப்படியென்றால் அந்த நீர் வீழ்ச்சி எங்கிருந்து வருகிறது? இரண்டிற்கும் நடுவில் எங்கிருந்தோ மலையினைப் பொத்துக்கொண்டு ஊற்றுவதைப்போல் இருந்தது.  அற்புதம்.




ப்ராப்பாட் தேனிலவு கொண்டாடுபவர்களின் சொர்க்க வாசல்...! PARAPAT என்கிற சொல்லின் அர்த்தமே, நெருக்கம். அதாவது, முன்பு ஒரு காலத்தில், காதலர்கள் இருவர் குளிர்தாளாமல் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு இருந்ததைப் பார்த்தவர்கள், இந்த இடத்திற்கு parapat என்று பெயர் வைத்துவிட்டார்களாம். அதிலிருந்து அதன் பெயர் அதுவாகவே மாறியுள்ளதாக பயணவழிகாட்டி பகிர்ந்துகொண்டார். அவ்விடம் அதிகமாக குளிர்ந்தது. இரவில் உடல்கள் நடுங்கின. பரிமாறிய உணவு உடனக்குடன் சில்லிட்டது.


மேடான் பட்டணம்

மேடான் பட்டணத்தில் ஒரு நாள் முழுக்க ஷாப்பிங். நாங்கள் மட்டும் தனியாகச் சென்றோம். கார் தேவையில்லை. காரை நிறுத்திவைத்திருக்கின்ற நேரம் அதன் கட்டணம் நட்டமாகும்.

எங்குபார்த்தாலும் மோட்டார் ரிஃக்‌ஷா, குறைந்த விலையில் எடுத்துக்கொண்டு மூலை முடுக்கு எல்லாம் சுற்றிவரலாம். கார் எடுத்தால் பட்டணத்தில் பார்க்கிங் செலவு ஜாஸ்தி. அடிக்கடி சாலை நெரிசல் ஆகும். வீண் நேர பண விரையம், என்றார் எங்களின் வாகனமோட்டி.

பட்டணம் என்றாலே வழிபறிகொள்ளை, திருட்டு என களவானிகள் வதவத என்று இருப்பார்களே, எங்களின் உடமைகளின் பாதுகாப்பு எப்படி.? என்று நாங்கள் இருவரும் சேர்ந்தாற்போலவே கேட்கவே... அதற்கு அவர் கொடுத்த பதில் சுவாரஸ்யம்.

`இது ஒன்றும் கோலாலம்பூர் அல்ல. வழிபறி கொள்ளையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க. இது அதிக மக்கள் தொகை கொண்ட ஊர். எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம். ஒருவரின் கைப்பையை இழுத்துக்கொண்டு ஒரு களவானி எங்கும் ஓடி மறைய முடியாது. ஆட்கள் அவனைத் துரத்திப்பிடித்து அடித்துத்துவைத்து பாதியுயிரை எடுத்த பின்புதான் போலிஸில் ஒப்படைப்பார்கள். அதனால் இதுபோன்ற வேலைகளை இங்கே செய்வதற்கு தயங்குவார்கள். இருப்பினும் உங்களின் பொருட்களை நீங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். நேரம் சரியில்லை என்றால், புல் தடுக்கினாலும் பாதாளத்தில் விழவேண்டி சூழல் வரலாம்.. கவனம்.’ என்றார். உண்மைதான்.!


BATAK PEOPLE 

மேடான் சுற்றிப்பார்த்ததில் அதிக சுவாரஸ்யத்தை ஊட்டிய தகவல்கள், அங்கே வாழும் பாத்தாக் (batak) சமூகத்தின் கலாச்சார வாழ்க்கைச்சூழல்தான்.

இந்தோனீசியா உலகத்தில் அதிக முஸ்லீம்கள் வாழும் நாடாக இருப்பினும், மேடான் மலைப்பகுதிகளிலும் வளர்ச்சி காணாத தனிமை படுத்தப்பட்ட கிராமங்களில் வாழும்  தொண்ணூறு விழுக்காடு மக்கள்  இந்த பாத்தாக் சமூகத்தினர். கிருஸ்தவர்கள்.

லேக்தோபா, ப்ராப்பாட், ப்ராஸ்தாகி போன்ற இடங்களுக்குச்சென்றால் அங்கே வாழ்கின்ற அனைவரும் பாத்தாக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வழிநெடூக அவர்களின் வாழ்க்கைச்சூழலை ரசித்துக்கொண்டே செல்லலாம்.

பாத்தாக் மக்கள் நல்ல கலாரசனை உள்ளவர்களாம். இசை பாடல் நடனம் என எப்போதும் கலையின் பால் ஈர்ப்பு கொண்டவர்களாகவே காணப்படுவார்களாம். அவர்களின் இசைக் கச்சேரிகள் உலக மக்களால் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளதாம். அண்மையில்  மலேசியா ஒரு கலாச்சார நடனத்தை தங்களுடையது என்று உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க, இந்தோனீசிய பாத்தாக் சமூகத்தினர் வெகுண்டெழுந்துள்ளார்கள். காரணம் அந்நடனம் அவர்களுடைது. அந்தப் பிரச்சனையால் பாத்தாக் சமூகத்தினர் இந்தோனீசிய அரசாங்கத்திடம்  முறையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி பல நாட்கள் போராட்டம் நடத்தினார்களாம். நட்பு நாடான மலேசியர்களிடம் சகோதரத்துவ நேயத்துடன் அப்பிரச்சனையை அந்நாட்டு பிரதமர் சுமூகமாகத் தீர்த்து வைத்தாராம். `எங்கள் பிரதமர் எப்போது இப்படித்தான். மலேசியா என்றால் மட்டும் அமைதியாக இருந்துவிடுவார். அவருக்கு மலேசியா செல்ல நாடு. நாம் எல்லோரும் ஒருவர். எதற்கு பிரச்சனை.? என்பாராம்.!’ பயண வழிகாட்டியிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே வருகையில் அவர் பகிர்ந்த பல சுவாரஸ்யமான தகவல்களின் இதுவும் ஒன்று.

பாத்தாக் சமூகத்தினர் பெரும்பாலும் மீனவர்கள். விவசாயிகள். மண்ணின் ஆதிவாசிகளாக இருப்பதால், மிகப்பெரிய நிலங்கள் தமதாக்கிக்கொண்டு விட்டைச்சுற்றி காய்கறிகள் கிழங்குவகைகள் நெல் காப்பி சோளாம் போன்றவற்றைப் பயிர் செய்து, கோழி ஆடு, மாடு, பன்றி வாத்து, நாய் என கால்நடை வளர்ப்பிலும் அதிக ஈடுபாடு உள்ளவர்களாகவே காணப்படுகிறார்கள். உணவிற்காக யாரிடமும் கையேந்தும் நிலை இல்லாத வசதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களாகவே வாழ்கிறார்கள். பணம் இல்லை ஆனால் பணக்காரர்கள்.

அவர்களின் வீடுகள் கப்பல் போன்று இரு முனைகளும் கூர்மையாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் நுழைவாசல் மிகவும் குறுகலானது. யாரும் நெஞ்சு நிமிர்த்தி ஒருவரின் வீட்டிற்குள் நுழைவது கூடாது என்பதால், அதனைச் சிறியதாகச் செய்து வைத்திருக்கின்றார்கள். நம் வீட்டின் சன்னல் அளவு கூட இல்லை அந்தக் கதவின் நீளம். கட்டைகள் ஊன்றி படிக்கட்டுகள் வைத்து சற்று உயரமாகக் கட்டி கொள்கிறார்கள் வீடுகளை. கீழே காலியாக இருக்கின்ற இடங்களின் கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.




பாத்தாக் சமூகத்தின் ஸ்பெஷல் உணவு நாய்க்கறி மற்றும் பன்றிக்கறி. நாய் சமைக்கின்ற உணவுக்கடையை B1 என்கிறார்கள். காரணம் நாய் அவரிகளின் மொழியில் Biang. Biang'இல் ஒரு B இருப்பதால் அது B1 restaurant. B2 restaurant என்றால் அது பன்றி சமைக்கின்ற உணவகம். பன்றியை அவர்களின் மொழியில் Babi என்கிறார்கள். Babi'இல் இரண்டு B'க்கள் இருப்பதால் அது B2. கடைகள் பகல் பொழுதில் மூடியே கிடக்கின்றன. இரவில் வியாபாரம் தூள் பறக்குமாம். குறிப்பாக நாய்க்கறி. முன் கூட்டியே ஆடர் கொடுத்துத்துத்தான் வாங்கிச்செல்வார்களாம். இல்லையேல் கறி தீர்ந்துவிடும் என்கிறார் வாகனமோட்டி. காரில் செல்லுகையில் கால்நடை வளர்ப்புப் பிராணிகளான பன்றி, ஆடு, மாடுகளை லாரியில் ஏற்றிச்செல்வதைப்போல் நாய்களையும் ஏற்றிச்செல்கிறார்கள் இறைச்சியாக்கி சந்தையில் வியாபாரம் செய்ய.

ஒருமுறை ஆங்கிலேய பிரயாணிகளை ஏற்றிச்செல்லுகையில் எங்களிடம் சொன்ன இதே கதைகளைச் சொல்லி அவர்களை நாய் இறைச்சி கசாப்புக்கடைக்கு அழைத்துச்சென்றாராம் வாகனமோட்டி. (எங்களிடமும் கேட்டார். நாங்கள் நிராகரித்துவிட்டோம்.) தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தலை கீழாக தோல் உறிக்கப்பட்ட நாய்களைக் கண்டு, அந்தக்குழுவில் இருந்த ஆங்கிலேயப்பெண்மணிகள் கதறிக் கதறி அழுதார்களாம். வாகனத்தில் வந்து அமர்ந்து பல கீலோமீட்டர்கள் சென்ற பிறகும் அழுகையை நிறுத்த முடியாமல் திண்டாடினார்களாம் அவர்களின் கணவன்மார்கள். அன்று முழுக்க அவர்கள் எதுவுமே சாப்பிடவில்லை என்றும் சொன்னார்.

அவர்கள் நாய் மட்டுமல்ல, நாலு கால் கொண்ட அனைத்து மிருகங்களையும் சாப்பிடுவார்களாம். மூசாங், பூனை, காட்டுமிருகங்கள் என எல்லாவற்றையும்.

பாத்தாக் சமூகத்தினர் மாய மந்திரத்தில் கெட்டிக்காரர்கள் என்று ஏறகனவே இங்கே பரவலாகப் பேசப்படும் ஆரூடம். இதை உறுபடுத்திக்கொள்ள நான் எங்களின் வகனமோட்டியிடம் கேட்டேன். அவரும் ஆமாம் உண்மைதான். மனித இரத்தம், மயிர், நகங்கள், தொப்புள்கொடி என உடலின் எதாவதொரு பொருள் கிடைத்தால் அதைக்கொண்டு எதாவது செய்து விரோதிகளைத் தீர்த்துக்கட்டப்பார்ப்பார்கள். இருப்பினும் அதெல்லாம் உண்மை என்று நம்பினால் பலிக்கும். இல்லை என்று அலட்சியம் செய்தால் எதுவும் நம்மை அண்டாது.’ என்றார்.

அவர்களின் நம்பிக்கைகளின் எனக்கு உதறல் எடுத்த விஷயம் இறப்புச் சடங்கு மற்றும் பிணத்தைக் கிடத்திவைக்கும் இடம்.

அச்சமூகத்தின் தலைவர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்றோம். அவருக்கு ஒரே ஒரு மகனாம். அவன் பருவ வயதை நெருங்கும் தருவாயில் இருக்கின்றபோது மரணமுற்றுவிட்டான். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அத்தலைவன் தமது ஒரே மகன் மறைந்ததை எண்ணி  சோகத்தில் மூழ்கி மகனை கல்லரையில் கிடத்தாமல், தமது வீட்டின் வாசலில் நிறுத்தியபடி வைத்துவிட்டார். (சோளக்காட்டு பொம்மையை வைப்பார்களே அதேபோல்.)

நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற பிணத்தை காண்கையில் தன் மகன் உயிரோடு இருப்பாதாகவே நினைத்துக் காலத்தைக் கழித்து வந்தாராம் அந்தத்  தலைவர். அதைக் காண்போருக்கும் தலைவரின் வாரிசு உயிரோடு உலவுவதாகவே எண்ணிக்கொண்டார்களாம். இதில் அதிசயம் என்ன தெரியுங்களா.? நள்ளிரவு வேளைகளின் அந்த மகன் தலைவரோடு உரையாடியதையும் பலர் பார்த்துள்ளார்களாம். அந்தப் பிணம் கைகளை நீட்டி நீட்டி பேசியதை பலர் பார்த்து அவனை ஒரு சிறுதெய்வமாகவே வழிப்பட்டு வந்துள்ளனர்.

இன்னமும் அவ்வீட்டின் முன் மரத்தால் ஆன உருவபொம்மை ஒன்று  இருப்பதை நாம் காணலாம். கைகால்கள் தலை போன்றவைகளை அசைவதைதைப்போலவே அந்த பொம்மையினை செய்து வைத்திருக்கின்றார்கள். கைகளைக் குலுக்கி நாமும் அதனிடம் பேசுவதைப்போல் பாவனை செய்துகொள்ளலாம்.

ராஜா பாதுகாத்து வைத்திருந்த மகனின் உருவம் இன்னமும் இருக்கின்றதாம் பாதுகாப்பாக.. இந்த வீட்டின் முன் அதே போன்ற பொம்மையை செய்து வைத்துவிட்டு, அசலை எடுத்துச்சென்று விட்டார்கள்.




அச்சமூகத்தின் வீட்டின் சுற்றுப்புறத்தில் இரண்டு அடுக்கு மூன்று அடுக்கு என சிறிய வீடுகளைக் கட்டி இருப்பார்கள். அதாவது அவர்கள் வீடு இருக்கின்ற இடத்தின் அருகிலேயே அந்த மூன்று இரண்டு அடுக்கு மாடி வீடுகளும் இருக்கும். என்ன வீடு அது இவ்வளவு சிறிதாக இருக்கிறதே.? என்று டிரைவரிடன் கேட்டபோது. அருமையான கேள்வி, என்று சொல்லி, பாத்தாக் சமூக சடங்குமுறைகளை விளக்க ஆரம்பித்தார்.

இவர்களின் வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் குறைந்தது ஏழு நாள் அப்பிணத்தைக் கிடத்திவைத்து அழுதமேனியாக இருப்பார்களாம். அழுவார்களாம், சமைத்து  நன்கு சாப்பிட்டு, மீண்டும் அழுவார்களாம். இரவானால் எல்லோரும் ஒன்று கூடி அழுதுகொண்டே இருப்பார்களாம். உறவுகளை எல்லாம் வரவழைத்து ஒரு விழாபோல் நடத்துவார்களாம். எழு நாள் கழித்து, பிணத்தை வீட்டின் அருகில் கட்டியிருக்கின்ற இந்த சிறிய அடுக்கு மாடி விடுகளின் கீழ் அடுக்கில் கிடத்தி காற்று புழு பூச்சுகள் புகாதபடி வைத்து சிமெண்ட் செய்துவிடுவார்களாம். புதைக்கமாட்டார்கள். அப்படியே வைத்துவிடுவார்களாம்.

உயிரோடு இருக்கும்போதே கல்லரைகளைத் தயார் செய்துவிடுகிறார்கள்.

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து அந்த சிமண்டை உடைத்து அதில் உள்ள எலும்புக்கூடுகளை எடுத்து, ஆக உயரமான அடுக்கில் இருக்கின்ற சிறிய வீட்டுக்குள் வைத்துவிடுவார்களாம். இந்தப் பதினைந்து ஆண்டுகள் கழித்து உடைபடவிருக்கின்ற அந்தக் கல்லரை நாளை உறவுகளோடு கூடி சமைத்து சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் வழிப்பாடு செய்து விழாபோல் கொண்டாடுவார்களாம்.

கீழ் அடுக்கில் அம்மா அப்பா தாத்தா பாட்டி. இரண்டாவது அடுக்கில் பிள்ளைகள். மூன்றாவது அடுக்கில் பதினைந்து ஆண்டுகள் கழித்து சேகரிக்கப்பட்ட எலும்புக்கூடுகள்.

காரியங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு குடும்ப உறுப்பினர்கள் எந்தச் சச்சரவுகளாலும் பிரிந்துவிடாமல் இருப்பதற்காகவே இது போன்ற சடங்குகளைத் தொடர்ந்து கடைபிடித்து வருதாகவும் சொல்லப்படுகிறதாம்.



என் பணிப்பெண் ஒரு பாத்தாக் சமூகத்தைச் சேர்ந்தவள்தான். அவர்கள் தாங்கள் பாத்தாக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெளியே சொல்லிக்கொள்ளமாட்டார்களாம். என் பணிப்பெண்ணும் இதுவரையில் என்னிடம் இதுபற்றிச்சொன்னதே இல்லை. இவ்வளவு பழமையாக கலாச்சார பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்னோடு இரண்டு வருடங்கள் இருந்துள்ளாள் என்பது எனக்குப்பெருமையே. இருப்பினும்  இது முன்னமே தெரிந்திருந்தால், நானே அவளிடம் இன்னும் நிறைய தகவல்களைச் சேகரித்திருப்பேன்.

ஒரு இந்தோனீசிய பெண் வேலைக்கு வந்துள்ளாள். அது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். மற்றபடி பூர்வீகம் பற்றியெல்லாம் பேசியதே இல்லை. மேடான் சென்றிருந்தபோது அவள் தங்கியிருக்கின்ற ஊரில் முகவரியைச் சொன்னவுடன், அவள் கண்டிப்பாக பாத்தாக் சமூக பெண்ணாகத்தான் இருப்பாள் என்று வாகனமோட்டி உறுதிபடுத்தினான். அவன் சொன்ன சில குணாதிசய அடையாளாங்களை நான் அசைப்போட்டுப்பார்க்கையில் அது என் பணிப்பெண்ணின் குணாதிசயங்களோடு ஒத்துப்போனது. சத்தமாகப்பேசுவாள், சண்டை போடுவதைப்போல் முகபாவனைகள் இருக்கும் இருப்பினும் அங்கே எந்த ஒரு கோப உணர்வும் வெளிப்படாது. எல்லா நேரத்திலும் எல்லோரிடமும் ஒத்து போகிற குணம் கொண்டவள் அவள். நோயிற்கு மருந்தே எடுக்க மாட்டாள். மூலிகை என்று நம்பும் இலைகளை மசித்து அதனின் சாரை மட்டும் பருகுவாள். இலைகளைக்கொண்டு பேய் ஓட்டுவாள். மந்திரங்கள் சொல்லி கரப்பான்பூச்சி, எலி போன்றவைகளை விரட்டுவாள். எல்லா தெய்வங்களையும் வணங்குவாள். விபூதி இட்டுக்கொள்வாள். யா அல்லாஹ் என அடிக்கடி முனகிக்கொள்வாள். நாங்கள் விரதமெடுத்தால், அவளும் விரதமெடுப்பாள். பொங்கல் கார்த்திகை என்றால், சேர்ந்தே அலங்கரிப்பாள், விளக்கேற்றுவாள்.

பாத்தாக் சமூகத்தின் சின்னம் மார்பு. எங்கேயாவது சிலைகள் எதேனும் செய்துவைத்திருந்தால், அதன் பக்கத்திலேயே பருத்த தாயின் மார்புகளையும் செய்து வைத்திருப்பார்கள்.

தாங்கள் திருமணம் செய்துகொள்ளகூடிய பெண்ணிற்கு மார்புகள் பெரிதாக இருக்கின்றனவா என்று பார்த்துத்தான் திருமணம் செய்து கொள்வார்களாம் அச்சமூகத்தின் ஆண்கள். அதற்கு அவர்கள் தரும் விளக்கம் - மார்பகங்கள் பெரிதாக உள்ள பெண் நிறைய குழந்தைகளைப் பெற்றுத்தருவாளாம். மற்றும் பசிக்கின்ற குழந்தைகளுக்கு குறைவில்லாமல் பால் கொடுப்பதற்கும் அவர்களால் முடியும் என்கிற நம்பிக்கையும் கூடவே.


ஒரு காலத்தில் மனிதர்களையும் சாப்பிட்டுள்ளார்களாம் இந்த பாத்தாக் சமூகத்தினர்.

இறுதியாக நான் ஒரு கேள்வி கேட்டேன் வாகனமோட்டியிடம்.

நீ ஒரு முஸ்லீம். உனக்கு பாத்தாக் சமூக பெண்ணின் மீது காதல் வந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளேன்..., அவளை நீ கல்யாணம் செய்து கொள்வாயா.?

அவர் பதில் சொன்னார். `ஏன் கூடாது.!? அவர்களும் மனிதர்கள்தானே. அங்கிருந்துதானே நாம் எல்லோரும் வந்துள்ளோம். கடந்த காலம் முக்கியம் அல்ல. மார்க்கத்தைக் கடைபிடி. மனிதனாக வாழ். அவ்வளவுதான். பிரச்சனை இல்லை அக்கா..’ என்றார்..

பேசிக்கொண்டே  எங்களின் வாகனம்   லேக் தோபா வந்துசேர்ந்துவிட்டது.

கருமேகங்கள் சூழ இருந்த வானம் மழை நீரைச் சுமந்து பிரசவத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தது. அது மிக அழகிய காட்சியாக என் கண்களுக்குப் பட்டது.

அங்கே கடவுள் தெரிவதைப்போல் இருந்தது எனக்கு....  

        

  முற்றும்.....