செவ்வாய், மார்ச் 27, 2012

நிஜம்

பிடித்தவரோடு இருக்கும் போது, 
பிடிக்காதவரை நாம் நினைப்பதேயில்லை. 
பிடித்தவர் பகைக்கும் போது
பிடிக்காதவரை பிடிப்புக்குள் கொண்டு வருகிறோம்.
இது மனிதனின் பிடிப்பற்ற நிலையேயானாலும்,
இதுவே பலரின் வாழ்வியல் சூட்சமம்.!
உறவை வெற்றிக்கொள்ள
போடப்படும் இந்த நாடகத்தில்
எனது பங்களிப்பு அறவே இல்லாமல் இருக்க
எனக்காகவே நான் போட்டுக்கொள்ளும் கவசம்..
நிஜமான, மாசுமருவற்ற அன்பு.
ஆமாம் உன் மேல் நான் கொண்ட நேசம்,
நிஜம்..நிஜம்..நிஜம்

சித்தி வளர்ப்பு

``என் மகளுக்கு எப்படியாவது வேலை வாங்கிக்கொடுங்க, சிஸ். ’’ ஒருவர் என்னிடம் வந்து மன்றாடினார்.

அவர் வேலை கேட்பது அவரின் முதல் மனைவியின் மகளுக்கு.  குழந்தைக்கு ஆறு வயது இருக்கும் போது,  இவருக்கும் வேறொரு பெண்ணிற்கும்  தீவிர காதல். காதல்ன்னா காதல் அப்பேர்பட்ட காதல். அவர்களின் காதல் தழும்புகூட இன்னமும் இவரின் நெஞ்சில் பச்சை குத்தலாக. ஒருமுறை அதைக் காட்டுவதற்காக, தமது சட்டையை கீழே இறக்கினார். ஐயோ.. எதுக்குங்க இதெல்லாம், அவளின் படிப்பிற்கு தோதான வேலை காலி இருந்தால், நிச்சயம் நான் உங்களிடம் சொல்கிறேன், என்று கூறி, கண்களை வேறு பக்கம் திருப்பினாலும், அவரின் மார்பில் பச்சைக் குத்தியிருந்த அந்தப் பெண்ணின் பெயரை ஜாடை மாடையாக பார்த்தும் விட்டேன்.

ஒரு நல்ல வாழ்கையை அந்தப் பிள்ளைக்கு (மகளுக்கு) நான் கொடுத்து விட்டால், அவளின் அம்மாவிற்கு நான் செய்த கொடுமைகள் எல்லாம் என்னை விட்டு விலகும் என்றார்.

காதல் ஜோரில், நான் எனது முதல் மனைவிக்குச் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னுடைய இரண்டாவது மனைவியின் காதல் வலையில் சிக்கி, அவளை படாத பாடுபடுத்தினேன். அவளுக்கு எங்களின் காதல் பிடிக்கவில்லை, (எப்படிப் பிடிக்குங்க.!?) போராடிப் போராடிப்பார்த்தாள், இறுதியில் தற்கொலை செய்துக்கொண்டாள்.

என்னுடைய இந்த  ஆறுவயது மகளை வைத்துக்கொண்டு, நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. என் காதலியையே நான் திருமணம் செய்துக்கொண்டேன். அப்போது அவள் வேறு கர்பமாக இருந்தாள், இவள் வேறு மரணம், இந்த பிள்ளை வேறு என் கையில் அநாதையாக. நான் என்ன செய்வேனுங்க..! (ஹுக்கும்.. ரொம்ப சோகம்தான், ஒழுங்கா இருந்தால் ஏன் இவ்வளவு சிக்கல்!?)

என் இரண்டாவது மனைவிதான் இவளையும் வளர்த்தாள். எனக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தைகள் மூன்று. பையன், இரண்டு பெண் பிள்ளைகள். இவளோடு சேர்த்து நான்கு பிள்ளைகள். மற்ற பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இவள்தான் பாவம்.! எந்த குறையும் இல்லாமல் எல்லோரையும் நன்றாகத்தான் வளர்த்தாள் என் மனைவி. இருந்தாலும் அவளின் அம்மா இருந்திருந்தால், இந்த பிள்ளை இன்னும் நல்லா செல்லமாக வளர்த்திருப்பாள். அவ்வளவு பாசமாக இருந்தாள். இவளை இப்படி வளர்க்கனும் அப்படி வளர்க்கனும், நல்லா படிக்கவைக்கனும்’னு அடிக்கடி சொல்வாள். என்ன செய்வது? எல்லாம் தலைவிதி. (விதி???)

போலிடெக்னிக்கில் படித்தாள், டிப்ளோமா வைத்திருக்கின்றாள். ரொம்ப தாழ்வுமனப்பான்மை’ங்க. எப்போதும் தன்னை மற்றவர்களிடம் ஒப்பிட்டு, தாழ்வாகவே புலம்பிக்கொண்டிருக்கின்றாள். உங்களைப்போன்ற தெளிவான நண்பர்கர்கள் இருக்கும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்துக்கொண்டால், அவளின் தன்னம்பிக்கை வளரும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

எவ்வளவோ கம்பேனிகளுக்கு வேலைக்குச் சென்று விட்டாள்,  ஆனாலும்  தாக்குப்பிடிக்காமல் பாதியிலே வேலையை விட்டு வந்து விடுகிறாள்.   வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால், அவளின் அம்மா (சித்தி) ஜாடை மாடையாகப் பேசுகிறாள், பார்ப்பதற்குப் பரிதாபமாக இருக்கிறது, அவளின் நிலைமை. எவ்வளவோ கொடுமைகளை நானும் அவளும் அனுபவித்து விட்டோம். இனி என்னால் முடியாதுங்க, வயசு ஆயிகிட்டே போகுது, திடீரென்று செத்துப்போயிட்டா, அவளுக்கு யாருமே இல்லை. அவளின் பாட்டி வேறு, என்னால் தான் அவர்களின் மகள் செத்துப்போனாள், என்று சொல்லி, என்னை சுத்தமாக வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள்.  (பின்னே சேர்த்துக்குவாங்களாக்கும்!)

எப்படியாவது உதவி செய்யுங்கள், என்று என்னிடம் அவளின் ரெஸுமி’யைக் கொண்டு வந்துக்கொடுத்தார்.

அவர், கணவரின் பழய நண்பர் என்பதாலும், அவரின் நிலைமை எனக்கு ஓரளவு புரிந்து போனதாலும், (மற்றபடி குடும்பம் பிள்ளைகள் பற்றி எதுவும் தெரியாது) மேலும் அந்தப் பெண், அரசாங்க தேர்வுகளில் சிறப்பான புள்ளிகள் வாங்கியிருப்பதாலும், அதை விட, தற்போது அவளின் தகுதிக்கு ஏற்றாட்போல் ஒரு வேலையும் காலியாக இருப்பதால், அவரின் நச்சரிப்பிற்கும் புலம்பலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய  நேரமும் வந்துவிட்டது.

இதுவரையில் நான் யாருக்கும் சிபாரிசு செய்ததில்லை. ஆதலால், இவளின் ரெசுமி’யை எடுத்துக்கொண்டு, நேராக அந்தப் பகுதியின் தலைமை நிருவாகியைச் சந்தித்து, சிபாரிசு செய்தேன். அவரும் அவளின் தேர்வு சான்றிதழ்களை நோட்டமிட்டு விட்டு, அதில் அவர்களுக்குத் தேவையான தகுதிகள் இருந்து விட்டபடியால், நேர்முகதேர்விற்கு தேதி குறித்தார். அவசரமாக அப்பிரிவிற்கு ஆட்கள் தேவை என்பதும் கூடுதல் தகுதியே.

நேர்முகதேர்விற்கு வந்தாள். சிபாரிசு, அவரசமாக ஆட்கள் தேவை, அவளுக்கும் வேலை அனுபவம், கணினி என இன்ன பிற தகுதிகள் இருப்பின், உடனே அப்பாயிண்ட்மெண்ட் கடிதம் கிடைத்தது.

என் சிபாரிசு தயவால்தான் உடனே வேலை கிடைத்தது என்றெண்ணி, அவளின் அப்பா, விட்டால் காலிலே விழுந்து விடுவார் போலிருக்கு. அப்படி ஒரு பவ்வியம். அவர் ஒரு பக்கம் நன்றி..நன்றி என்று கூறியவண்ணமாகவும்..! மகள் ஒரு பக்கம்.. தினமும் தொலைபேசியில் தொல்லை..

வேலை எப்படிக்கா? எனக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராதே! நிறைய டைப்’ வேலைகள் இருக்குமா? தவறு செய்தால் திட்டுவார்களா? வேலைக்கு வரும் போது, என்ன டிரஸ் போட்டுக்கிட்டு வரணும்? சுடிதார் போடலாமா? யூனிபோர்ம் எனக்கும் கிடைக்குமா? கண்டிப்பா ஷூ தான் போடணுமா? என்னிடம் நிறைய செருப்புகள்தான் உள்ளன. ஷூ இல்லையே, செருப்பு போட்டுக்கொண்டு வேலைக்கு வரலாமா!? கம்பனியில் ஷூ கொடுப்பார்களா? என்ன மாதிரியான கணினி வேலைகள் அதிகம்.? என்ன சிஸ்டம் பயன்படுத்துகிறார்கள்? நான் கருப்பா குண்டா இருக்கிறேனே, ஈவ் டீசிங் செய்வார்களா? நிறைய ஆண் பணியாளர்கள் வேலை செய்கிறார்களா? தமிழர்கள் ஜாஸ்தியா, இல்லை மற்ற இனத்தவர்கள் ஜாஸ்தியா? அந்த டிப்பார்ட்மெண்டில் யார் அதிகாரி? அவர் எப்படிப்பட்டவர்? சீனரா, மலாய்க்காரரா, தமிழரா? ஆரம்பத்திலேயே இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களே, வேலை கஷ்டமா? ஆறு மாதம் கழித்து நிரந்தரமாக்காவிட்டால், என்ன செய்வது? எனக்கு முன்னாடி அந்த இடத்தில் வேலை செய்த அந்தப் பெண், ஏன் வேலையை விட்டுச்சென்றாள்? நீங்கள் எத்தனை ஆண்டுகள் அங்கே வேலை செய்கிறீர்கள்? வருடா வருடம் சம்பள உயர்வு சரியாகக் கிடக்குமா? போனஸ் எத்தனை மாதம்? எல்லா பொதுவிடுமுறையும் லீவா? லீவு எடுக்கச் சுலபமா, கஷ்டமா? மெடிக்கல் லீவு எடுத்தால் திட்டுவார்களா? அங்குள்ளவர்களெல்லாம் நல்லா பார்த்துக்குவாங்களா........!!! ???

இப்படி தினமும் எதாவதொரு கேள்விகளோடு, தொலைப் பேசியில்  என்னைத்  தொடர்புக் கொள்கிறாள்.! அடுத்த மாதம் வேலைக்குச் சேர்கிறாள்.