புதன், மார்ச் 28, 2012

ஆண்டு விழா சின்னம்

கம்பனியின் நூறு ஆண்டு விழாவை முன்னிட்டு, 100 என்கிற எண்கள் பதித்த, கருப்பு மற்றும் தங்க நிறத்தில், வட்ட வடிவத்தில் ஜொலிக்கும் ஒரு அழகான பேட்ஜ் எல்லோருக்கும் வழங்கியிருந்தார்கள். கண்டிப்பாக எல்லோரும் அதை அணிந்துக்கொண்டு தான் வேலைக்கு வர வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டது. சிலர் அணிந்துகொண்டு வருவார்கள் பலர் அதை பொருட்படுத்தவேயில்லை.

இந்த ஆண்டு கொடுக்கவிருக்கும் கம்பனி சீருடையில் (யூனிபோர்ம்) அந்த சின்னம் பதித்தக்கப்பட்டுதான் தைக்கப்பட விருக்கிறது. அதன் ஷேம்பள் காட்டப்பட்ட போது, இடது புறத்தில், இதயம் இருக்கும் இடத்தில் இந்த சின்னம் பதிக்கப்பட்டிருந்தது.

அந்தச் சின்னம் மார்பில் உராயும் போதெல்லாம், கம்பனியின் மேல் விசுவாசம் வரவேண்டுமென்பதற்காக பதிக்கப்படுகிறதா! செய்யும் தொழிலே தெய்வம், அதன் நிறுவனமே கோவில் என்கிற உணர்வு வரவேண்டுமென்பதற்காக  பதிக்கப் படுகிறதா! நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறோம் என்கிற பெருமை ஒவ்வொரு பணியாளர்களுக்கும் இருக்கவேண்டுமென்பதற்காக பதிக்கப் படுகிறதா! அல்லது, நாங்கள் அணிந்து ஏந்திச்செல்லும் இந்த சின்னம், காண்போருக்கு, நிறுவனப் பொருட்கள் ஒரு விளம்பரமாக இருக்க வேண்டுமென்பதற்கா பதிக்கப்படுகிறதா! என்பதைப்பற்றியெல்லாம் யாருக்குமே கவலையில்லை. காரணம் அதை யாரும் அணிந்துகொண்டு வரவில்லை.  நான் மட்டும் என்ன விதிவிலக்கா?

இன்று காலையிலே ஒரு வி.ஐ.பி வந்திருந்தார். எங்களின் ஆசிய நிறுவனங்களின் துணைத்தலைமை நிர்வாகி அவர். எவ்வளவு பெரிய ஆள் அவர், இருப்பினும், இந்த 100 ஆண்டு பதித்த அந்த சிறிய நினைவுச்சின்னத்தை தமது கோர்டின் இடது புறத்தில், இதயத்தை உரசி ஒட்டியவாறு அணிந்துகொண்டு வந்தார்.

ஜப்பானியர்களின் அதிவேக வளர்ச்சியில், இந்த விசுவாச உணர்வு முதன்மை வகிக்கிறது என்று தாராளமாக்ச் சொல்லலாம். எது எப்படியாயிருப்பினும், மேலிடத்தில் அமல் படுத்தப்படுகிற சட்டதிட்டங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப் படவேண்டும் என்கிற ஒழுங்கு முறையில் மிக கவனமாக இருப்பவர்கள் அவர்கள். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் நமக்குப் பாடம்.

அதைப் பார்த்த எனக்கு, அவமானமாகி, எங்கேயோ போட்டுவிட்ட அந்த பேட்ஜ்’யைத் தேடி எடுத்தேன். நல்லவேளை கிடைத்தது. உடனே எனது சீருடையின் இடது புறத்தில் அதைக் குத்திக்கொண்டேன். மனதில் கமபீரம் குடிகொண்டதை என்னால் உணரமுடிந்தது. நடையில் ஒரு மிடுக்கு வந்தது. பொறுப்பு மிக்க ஒரு ஊழியராக பவனி வருவதைப்போன்றதொரு உணர்வு மேலிட்டது. (பேட்ஜ் கையில் கிடைத்து, ஒரு மாத காலமாகிறது, இப்பொதுதான் அதை அணிகிறேன் என்பதும் குறிப்பிடத்தக்கதுவே.)

உடனே எதிரே வந்த ஒரு சக ஊழியரிடம், எனது சட்டாம்பிள்ளைத்  தனத்தைக் காட்ட ஆரம்பித்தேன்.. நாம் அணிந்து விட்டோம்ல...

`` எங்கே, அந்த எனிவர்சரி பேட்ஜ், ஏன் அணிந்துக்கொள்ளவில்லை?’’