சனி, செப்டம்பர் 03, 2016

தாய்லாந்து பயண அனுபவம்.

 அலைகளே ஏன் கொந்தளிக்கின்றீர்கள், நீங்களும் தாய்லாந்துக்காரர்களா.?'

இப்படி ஒரு கவிதையை நான் வேடிக்கையாகச் சொன்னபோது, தோழிகள் கலகலவென சிரித்தனர். அப்படியென்றால் அதன் உள்ளர்த்தம் எவ்வளவு பெரிய பாதிப்பை அவர்களுக்கும் உண்டு பண்ணியிருக்கவேண்டும் என்பதை நாம் இங்கே உணரவேண்டும்.

நாங்கள் முன்று நாள்கள் தாய்லாந்து கிராபியைச் சுற்றிவந்தோம். ஜாலியான ட்ரீப். நடப்பது, நீந்துவது, நீச்சல் பழகுவது, மார்கெட் சென்று அங்குள்ள உணவுகளைப் பொறுக்கித்தின்பது, நடு ரோட்டில் நடந்துகொண்டே வாங்கிய பலகாரங்களைச் சுவைப்பது, ஐஸ்க்கிரிம் வாங்கி எல்லோரும் நக்கிக்கொள்வது, பப்புக்கு சென்று பாட்டு டான்ஸ்சு டிஸ்கோ....,இரவு அறைக்கு வந்து விடிய விடிய கதை பேசுவது என முன்று நாள் பொழுது அமர்க்களமாக கழிந்தது.

கிராபி பற்றிச்சொல்லவேண்டுமென்றால், அழகிய தீவு. வார்த்தைகளால் சொல்லமுடியாது. அவ்வளவு அழகு. கடல் நீரில் எவ்வளவு வர்ணங்கள் உள்ளன என்பதனை அங்கே காணலாம். கரு நீலம், நீலம், கரும்பச்சை,பச்சை, வெள்ளை, வெள்ளை நீலம் பச்சை கலந்து உள்ள நீர் என அங்குள்ள கடல் கொள்ளையழகு. வர்ண மீன்கள் துள்ளிவிளையாடும் அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது.

சரி முதல் வரியில் சொன்ன விஷயத்திற்கு வருவோம்.

யாரும் யாருடனும் நின்று அமைதியாகப்பேசமாட்டேன் என்கிறார்கள். எல்லோரும் பரபரப்பாக எதையாவது செய்துகொண்டேதான் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு முறை சொன்னால் சொன்னதுதான். மீண்டும் அதையொட்டி கேள்விகள் எதெனும் கேட்டால், தொலைந்தோம். பதிலுக்கு ஒரு அலட்சியப்பார்வைதான் வரும். அது நம்மை என்னமோ செய்யும்.

உதாரணம் சொல்லுகிறேன், டூர் பேகெஜ் ஏற்பாடு செய்தோம் . நாங்களே முதல்நாள் சென்று பலவிவரங்களைக் கேட்டு அறிந்து கொண்டு சொந்தமாக புக் செய்துகொண்டோம்.எஜென்டுகளின் மூலம் எடுக்கவில்லை. விலை அதிகம் என்பதால் ..

மொழிப்பிரச்சனை வேறு அவர்களுக்கு. ஆங்கிலம் தெரியவில்லை. பெகெஜ் விற்பனை செய்கிறவர்களுக்கு கொஞ்சம் மலாய் தெரிந்திருந்தது. அது எங்களுக்கு உதவியது. அப்படி இப்படி என்று பெகெஜ்' புரிந்துகொண்டு மறுநாள் மற்றும் மூன்றாம் நாள் என இரண்டு நாள்கள் பயணத்திற்கு பணம் செலுத்திவிட்டு இரவு சந்தைக்குச்சென்றோம் சாப்பிட. வாகன ஓட்டுனரிடம் நாங்கள் பட அவஸ்தை இருக்கே ..சந்தை எத்தனை மணிக்கு மூடும் ?, அமைதியாக இருந்தார். மீண்டும் எத்தனை மணிக்கு நாங்கள் வரவேண்டும்? அமைதியாக இருந்தார். கடிகாரத்தைக் காட்டி எத்தனை மணிக்கு நாங்கள் வரலாம் .? அமைதியாக இருந்தார். வேனை நிறுத்திய பின் .. தென் தேர்ர்டி என்று ஒரு சத்தம் போடடார் பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிட்டோம்.

முதல்நாள் காலைமுதல் மாலைவரை தீவுகளை ஸ்பீட் போட் ஏறிச்சென்று சுற்றிப்பார்ப்பது, இரண்டாவது நாள் காலை முதல் மாலைவரை நிலத்தில் இருக்கின்ற இடங்களைச் சுற்றிப்பார்ப்பது. இதுதான் எங்களின் பேகெஜ்.

எந்த பேகெஜ் எப்போது என்பதைப்பற்றிய குழப்பம் எங்களுக்கு இருந்ததால், நீச்சல் ஆடையுடன் இன்று செல்லலாமா அல்லது நாளை செல்லலாமா? என்கிற முக்கிய வினா எங்களுக்குள் எழுந்தது.

எங்களுக்கு பெகெஜ் ஏற்பாடு செய்த தாய்லாந்துக்காரனிடம் கேட்கச்சென்றோம். ஒரு பெண் அங்கே அமர்ந்திருந்தாள். எங்கே அவன்.? அவளுக்குப் புரிந்தது. நைட் ஷிஃப்ட் என்றாள் ஒரே வார்த்தையில் . நாங்கள் இப்போ எங்கே செல்லவேண்டும்.? ரசீதைக் காட்டினோம். கைகளை ஒரு சந்தில் நீட்டி, அந்த பிங்க் போர்ட் தொங்குகிறதே அங்கே நில்லுங்கள், என்றாள். இன்று தீவு டூரா,லன்ட் டூரா? கேட்டோம். முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, ஆள்காட்டி விரலை மட்டும் முதலில் காண்பித்த இடத்தை நோக்கிக் காண்பித்தாள்.

அங்கே சென்றோம். ஒரு பெண்மணி முகத்தில் ஒரு பயங்கர வெட்டு காயம் காய்ந்து ஆறிபோன தழும்புடன் பாதி மூக்கு காணாமல் போன நிலையுலும் கருத்தமேனியுடன் நின்றிருந்தாள். கோரமுகம் அவளுக்கு . அவளிடம் கேட்டோம். ஆங்கிலம் பேசினாள். அங்கே உட்காருங்கள், என்று ஓர் இடத்தைக் காண்பித்தாள்.

நாம் தான் எப்போதும் கேள்விக்கணைகளோடு உலா வருபவர்கள் ஆயிற்றே, கேள்விகள் கேட்க்காமல் இருக்கமுடியாதே, கேட்டோம்,

இன்று எங்கே செல்கிறோம்.? ''

பேகெஜ் ஏற்பாடு செய்தவர்கள் சொல்லவில்லையா.?'' கேட்டாள், கோபமாக.

சொன்னார்கள் ஆனால் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்வதற்குக் கேட்கிறோம்,'' என்றோம்.

ஒன்பது முப்பதுக்குச்சொல்கிறேன், அங்கே உட்காருங்கள்.'' என்று மீண்டும் விரட்டினாள் எங்களை .

மணி எட்டுமுப்பது அப்போது. வெறுமனே ஒரு மணிநேரம் காக்கவைக்கின்றார்களே, என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு, வெயில் சுளீரென்று முகத்தில் பட, அவளின் முகத்தைப்பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தோம்.

சரியாக ஒன்பது மணிக்கு கையில் ஒரு காகிதத்தை ஏந்தியவண்ணம் அந்தக்கடையில் இருந்து வெளியே வந்தாள். அதற்குள் பலர் அங்கே குழுமியிருந்தனர்.

ஹோட்டல் பெயரைச்சொல்லி அறை எண்களைச் சொல்லி அழைத்தாள் அனைவரையும். அழைப்பவர்கள் மட்டும் வந்து இந்தக் காகிதத்தில் கையெழுத்து போடுமாறு கேட்டுக்கொண்டாள். நல்லவேளை நாங்கள் அதில் இருந்தோம். ஒரு குழுவின் ஹோட்டல் பெயரும் இல்லை அறை எண்களும் இல்லை. சீன நாட்டவர்கள். அவர்கள் அவளை நாடி, எங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்க. நான் அழைத்தவர்கள் மட்டும் என்னோடு வந்தால் போதும், அழைக்கப்படாதவர்களைப் பற்றி எனக்குத்தெரியாது, என்று முகத்தில் அறைந்தாட்போல் சொல்லிவிட்டு காரியத்தில் கண்ணும் கருத்துமாக இறங்கிவிட்டாள் அந்தக் கோரமூக்கி.

எல்லோரும் அங்கே நிற்கின்ற வேனில் ஏறுங்கள், என்றாள். நாங்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறப்பார்த்தோம். அறை எண் ஹோட்டல் பெயரைச் சொல்லி சத்தமாக எங்களை இப்படி வருமாறு கூச்சல் போட்டாள். நான் உங்களைப் போகச்சொன்னேனா.! சொன்னேனா? என்று அதட்டினாள்.

என்ன இவ, நல்லா சொல்லவேண்டியதுதானே. இப்படிக் கத்தறா. இதுவே வேற இடமா இருந்தா, அவள உண்டு இல்லென்னு பண்ணிடலாம், என்று, என் தோழி முணுமுணுத்தாள்.

தெரியாத ஊர், விளங்காத பாஷை, பழக்கமில்லாத மக்கள், அமைதியாக இருந்தோம். முதலில் சென்ற குழுவிற்கு அழகான வேன் வந்தது. எங்களுக்கு நாய் பிடிக்கும் லாரி போல் ஒரு வண்டி வந்தது, அதில் ஏறு என்றார்கள். ஏறி படகு துறைக்கு வந்தோம்.

நல்லவேளை நீச்சல் அடைகளை உள்ளே அணிந்திருந்தோம். வெள்ளைக்கார பெண்மணிகள் அனைவரும் நீச்சல் அடையிலேயே வந்திருந்தார்கள். அவர்களைக்கண்டவுடன் , நாங்கள் எங்களின் மேலாடைகளைக் கழற்றிவிட்டு நீச்சல் அடையிலேயே பவனிவந்தோம்.

ஸ்பீர்ட் போர்ட் வந்தது. எண் 99, மஞ்சள் வர்ணத்தில். அது அங்கே எங்களுக்காக காத்திருந்தது. ஒரு விரைவு படகில் 22பேர் ஏறலாம்.

மீண்டும் கணக்கெடுத்தாள். அறை எண்களைச்சொல்லி ஹோட்டல் பெயரைச்சொல்லச் சொல்ல அனைவரும் கையைத்தூக்கவேண்டும். நாங்கள் தமிழர்களாக இருப்பதால், உங்கள் மொழியில் `சவடிக்கா' எப்படிச்சொல்லவேண்டும்.? என்று கேட்டாள், வணக்கம் என்றோம். மலாய் மொழியில்? கேட்டாள், சொன்னோம் செலமட் பாகி. பிறகு ஸ்வீஸ் காரர்களிடம் கேட்டாள், சீனாக்காரர்கள், சிங்கப்பூர், போர்த்துகல் என பல பிரிவினர்கள் அங்கே இருந்தார்கள். எல்லோரிடமும் கேட்டுவிட்டு அதே போல் சொல்லிக்காட்டினாள். எல்லோரும் உற்சாகமானார்கள்.

இதில் நாங்கள்தான் `அண்டிகள்'. மற்ற அனைவரும் துள்ளலோடு விரைவுப் படகில் ஏறினார்கள்.

செல்வதற்கு முன் சில நிபந்தனைகளை எல்லோரிடமும் வைத்தாள் அந்த கோரமுக தாய்லாந்து பெண்மணி.

படகு மிகவேகமாகச்செல்லும். கடல் மிக மிக ஆழமானது. நாங்கள் சொல்கிற இடத்தில்தான் நீங்கள் அமரவேண்டும். நண்பர்கள் போய்/கேர்ல் பிரண்ட் பக்கத்தில்தான் அமரவேண்டும் என்று அடம்பிடிக்கக்கூடாது,

படகில் நடமாடக்கூடாது. குதிக்கக்கூடாது. பாதுகாப்பு ஆடையினைக் கண்டிப்பாக அணிந்துகொள்ளவேண்டும். படகு நிறுத்தப்படுகிற இடத்தில் நாங்கள் சொல்கிற நேரத்திற்குள் வந்துவிடவேண்டும், இல்லையேல், நீங்கள் தீவுலேயே விடுபட்டுவிடுவீர்கள். மீண்டும் அடுத்த போர்ட் வரும்வரை காத்திருக்கவேண்டும். அதில் 22பேர் இருந்தால், அடுத்த போர்ட் வரும்வரை காத்திருக்கவேண்டும். ஆக, எல்லாம் சரியாக நிகழவேண்டும் என்றால் தயவுசெய்து ஒத்துழைப்பு கொடுங்கள்.

நீச்சல் அடிக்க நினைப்பவர்கள் அங்கே கட்டப்பட்டிருக்கின்ற கையிற்றைச்சுற்றியே நீச்சல் அடிக்கவேண்டும். அதைதாண்டி சென்று ஆபத்துகள் எதேனும் ஏற்பட்டால் அதற்கு நாங்கள்பொறுப்பல்ல. சென்ற வாரம் ஒரு சீனப்பெண்மணி சொல்பேச்சு கேட்காமல் வட்டத்தைத்தாண்டி நீச்சல் அடிக்கச்சென்றபோது நீர் அவளை இழுத்துச்சென்றது, நாங்கள் அனைவரும் இறங்கி அவளைக் காப்பாற்ற முயன்றோம், இழுத்துவருகிறபோது உயிர் இருந்தது, கரை சேருகிறபோது இறந்துவிட்டார். பெரிய பிரச்சனையாகிப்போனது, அதன் பிறகு நாங்கள் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. ஆக, நாங்கள் சொல்வது அனைத்தும் உங்களின் பாதுக்காப்பிற்காகவே.. என்று முடித்தார்.

எங்கள் நால்வரின் முகத்தில் ஆடவில்லை. என்ன இவ்வளவு ஆபத்தான பயணத்தில் நாமே புகுந்துகொண்டோமே, என்று நடுக்கமாக இருந்தது.

அனைவரும் படகில் ஏறினோம். நாங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் ஏறினோம். காரணம் கால் வைத்து ஏறுகிற கம்பிப்படிகள் ஒரு இடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்தது. உதவிக்கு உள்ளவர்கள் எங்களைக்கைப்பிடித்து ஏற்றிவிட்டார்கள்.

படகு கிளம்பியது, இதுவரையில் நான் அனுபவித்திராத பயணம் அது. போகிற வேகத்தில் படகு சாய்வதைப்போல் இருந்தது. தோழி உட்காருகிற இடத்தில் இருந்து பொத்தென்று கீழே விழுந்தாள். ஒருவள் பைகளை கைகளில் ஏந்தி வாந்தி எடுத்தமேனியாக இருந்தாள். எனக்கு கிறுகிறு என்று வந்தது.

கீழே விழுந்த தோழியை நாங்கள் தூக்க எழுந்தபோது, யாரும் நகராதீர்கள், அலை மோசமாக இருக்கின்றது, கொஞ்சம் பொறுங்கள் நாங்கள் வருகிறோம், என்று சொல்லி, குண்டான பெண்மணியை எழச்சொல்லி இந்தப்பக்கம் வரவழைத்துவிட்டு,இருவர் ஒன்றுசேர வந்து, என் தோழியை தூக்கி உட்காரவைத்தார்கள்.

படகு பயணத்தின் போது அதே கோரமுகம் கொண்ட தாய்லாய்ந்து பெண்மணி பாட்டுப்பாடி டிஸ்கோ ஆடினாள். அருமையாக கைத்தேர்ந்த நடக்காரி போல் ஆடினாள். வியந்துபோனோம். ரசித்தோம். நன்கு பாடினாள். ஆங்கிலம், மலாய்ப் பாடல், தாய்லாந்து பாடல் என்று அருமையான குரல்வளம் கொண்ட அவள் பாடிக்கொண்டே ஆடினாள். படகில் வேகமான இசை ஒலித்துக்கொண்டே இருந்தது. எல்லோரும் கைகளைத்தட்டி உற்சாகமூட்டினோம்.

செல்கிற ஒவ்வொரு இடத்திற்கும் அங்கே நிகழ்ந்த சில சுவாரிஸ்ய நிகழ்வுகளை கதைகள்போல் எங்களிடம் சொல்லி பயணத்தை உற்சாக மூட்டியபடியே இருந்தாள் அந்த கோரமுகம் கொண்ட பெண்மணி. ஜேம்ஸ்போடண்ட் ஐலண்ட், மங்கி ஐலண்ட், பெர்ட் நெஸ்ட், மஞ்சள் குகை என்று அனைத்தையும் படகில் நின்றபடியே ரசித்தோம். சில இடங்களில் நீச்சல் செய்தோம்.

பி பி ஐலண்ட் வந்துசேர்ந்தோம். அங்கேதான் மதிய உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. படகை நிறுத்திவிட்டு, இந்த பி.பி ஐலண்டைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா.! கேட்டாள். எல்லோரும் ஆம் என்பதைப்போல் தலையை ஆட்டினார்கள். நாங்கள் டியூப் லைட் கொஞ்சம் தாமதமாகத்தாம் எல்லாமும் புரிந்தது. 24/12/2004 நினைவிருக்கிறதா.? கேட்டாள். எல்லோரும் அமைதியானோம்.

சுனாமி வந்து , கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டமனிதர்களை விழுங்கிய இடம் இது. இந்த பி.பி ஐலண்டில் உள்ள அனைத்தையும் சுனாமி அடித்துச்சென்றது. இதுபுதிய பி.பி ஐலண்ட், கடைகள் அனைத்தும் முற்றிலும் புதியது.

அதோ அங்கே தெரிகிறதே மொட்டையான தென்னை மரம், அதுவரையில் வந்தது சுனாமி, என்றதும் அனைவரும் ஒன்றாக அந்த மரத்தை நோக்கிவிட்டு ச்ச்ச் ச்ச்ச் என்று சோகஒலி எழுப்பினார்கள். எங்களின் வீடு இங்கேதான் இருந்தது. இப்போது இல்லை காரணம் என் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி தங்கைகள் என அனைவரையும் நான் இங்கே பலிகொடுத்துவிட்டேன். குடும்பத்தின் ஆறுபேரையும் சுனாமி அடித்துச்சென்றுவிட்டது. நான் எப்படித்தப்பித்தேன் என்கிறீர்களா.!?

உயிர் மட்டும்தான் இருந்தது எனக்கு மற்ற எல்லமும் போச்சு. நான் எவ்வளவு அழகி தெரியுமா.! என் முகம் இப்படி மாறியதற்கே, இந்த சுனாமிதான் காரணம் என்று நகைச்சுவையாகச்சொல்லி கண்களை சிமிட்டினாள். அனைவரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். என் மனதில் சோகம் படர்ந்தது. அவளின் கோரமுகம் என் மனதை விட்டு மறைந்தது. அவள் அழகானாள்.

மீண்டும் படகு ஏறி இக்கரைக்கு வந்தாக வேண்டுமே, மிகுந்த கலவரத்தில் படகு ஏறினோம். காரணம் கடுமையான மழை. நீர்மட்டம் கடலில் அதிமாக இருந்ததைப்போல் இருந்தது.

வரும்போது முட்டிவரை இருந்த நீருக்கே நான் பரதநாட்டியம் ஆடினேன். இப்போது இடுப்புவரை நீர், கால் வைத்து ஏறுகிற இடம்வேறு ஊஞ்சள் போல் வேகமாக ஆடியது. எல்லோரும் ஏறியாகிவிட்டது நாங்கள் தத்தளித்தோம். பரிடா வந்தாள், கைகளைப்பற்றிக்கொள் என்றாள், வேகமாக இழுத்து மேலே சுலபமாக ஏற்றினாள். அப்படி ஏறியபோது அவளை அணைக்கின்ற வாய்ப்பும் கிடைத்தது.

அத்தருணத்தின் போதுதான் தோளில் தொங்கிக்கொண்டிருந்த எனது ஹென்பேக் முழுமையாக நீரில் மூழ்கியது. ஸ்மார்ட் கைப்பேசி பாழாய்ப்போனது. வாங்கி இரண்டே மாதம்தான்... :(

எல்லாமும் முடித்து படகு கரைக்கு வர மாலை மணி நான்கு முப்பதாகி இருந்தது. விரைவாக இருட்டாகிப்போனதுபோல் தென்பட்டது . கடல்தாயே நன்றி, என்று கும்பிடு போட்டுவிட்டு ஹோட்டல் அறைக்குச்சென்றோம்.

அன்று முழுக்க உடல் அடித்துப்போட்டதுபோல் இருந்ததால், இரவு வொட்கா அருந்தினோம். உற்சாகம் பிறந்தது, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்