வியாழன், அக்டோபர் 04, 2012

நான் கர்ப்பமாக இருக்கின்றேன்

இன்று மதிய உணவுவேளைக்கு வெளியே  சாப்பிடச் செல்லவில்லை. சாப்பிட மூட்  இல்லை.

ட்ரொவரில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மெஃகி மீ’யில் (நூடல்ஸ்) சூடுநீர் ஊற்றி, இதமாக வேகவைத்து, சுவைத்துக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்றுதான் மெஃகியை சாப்பிடுகிறேன். அதற்குள் போவோர் வருவோர் எல்லாம், `இது உடம்பிற்குக்கெடுதல், அதிகமான அஜினாமோட்டோ, வயசாச்சு, இதுபோன்ற உணவுகளைத் தவிர்த்து விடு,  சாப்பாட்டு நேரத்தில் இதை ஏன் சாப்பிடுகிறாய்? முடி உதிரும், சூடு, அந்த பேஸ்ட் கெடுதல்..’ அப்படி இப்படி  என  ஆலோசனைகள்  கூற  ஆரம்பித்துவிட்டார்கள்.

எல்லாவற்றிற்கும் ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக்கொடுத்து விட்டு, எனது மெஃகி சூப்’ஐ சுவைத்துக்கொண்டு, ஒரு அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.

எங்களின் அலுவலக கால் செண்டரில் ஒரு வேலை காலியாய் இருந்தது. அந்தக் கால் செண்டர் டிப்பார்ட்மெண்டில் ஏற்கனவே நிறைய மலாய்க்காரப் பெண்மணிகள் வேலையில் இருப்பதால், ஒரு தமிழ்ப்பெண்ணை வேலைக்கு நியமிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள்.

இரண்டு வாரங்களாய் தேடியும், இந்த தேர்விற்கு இன்னும் சரியான ஆள் கிடைக்கவில்லை. தமிழ் பெண்கள் வந்தால், நன்கு படித்த பெண்களாக வருகிறார்கள், கேட்பதைவிட கூடுதல் தகுதியோடு வந்து, சாதாரண வேலையாக இந்தக் கால் செண்டருக்கு சரியில்லாத நபர்களாகி தேர்வாகாமல் போய்விடுகிறார்கள். அல்லது, அறவே தகுதி இல்லாமல், வேலை அனுபவமும் இல்லாமல், ஆங்கிலமும் சரியாக பேசதெரியாமல் வருகிறார்கள், அதுவுமில்லாமல் சிலர் அதிக அளவில் சம்பளம் எதிர்ப்பார்த்து, நேர்முகத் தேர்வின் போது  தோல்வியடைந்து விடுகிறார்கள்.

தமிழ்ப்பெண்களை வேலைக்கு எடுப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதனை இப்போதுதான் தெரிந்துக்கொண்டேன். நிஜமாலுமே லேசில் சிக்க மாட்டேன் என்கிறார்கள். பெரிய கம்பனிகள், பெரிய பதவிகள் என ஒரு எதிர்ப்பார்ப்போடு வருகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான்கு பெண்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அங்கேயும் இங்கேயும் நண்பர்கள் தோழிகள் என சிலரிடம் சொல்லிவைத்து, வரவழைத்தேன். அதில் ஒரு தற்காலிக தமிழாசிரியயை தேர்வாகிவிட்டார். கேட்ட சம்பளத்திற்கே வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்கள். இவரிடம் வேலை அனுபவமும், திறமையான பேச்சாற்றலின் மூலம் நேர்முகத்தேர்வில் அசத்திவிட்டார் போலும். தேர்வு முடிந்த மறுநாளே, தொலைப்பேசியில் அழைத்து, வேலை கிடைத்து விட்டது என்கிற விவரத்தைச் சொல்லச்சொன்னார்கள்.

நான் தான் அழைத்துச் சொன்னேன். பேசும்போது, நல்ல அரசாங்க வேலையான ஆசிரியர் வேலையை விட்டுட்டு எப்படி இந்த பிரைவர்ட் கம்பனி வேலைக்கு.!? கேட்டேன். அந்த வேலை நிரந்தரம் இல்லை. தற்காலிகம்தான். மேலும் இப்போது ஆசிரியர் வேலைக்கும் கெடுபிடிகள் ஜாஸ்தி. தொடர்ந்து பேர்போடமுடியுமா, என்பது தெரியாததால் வேலையை விட்டுட்டேன். இப்போது தமிழர் ஒருவரின் செகரட்டரியா வேலை செய்கிறேன். தனி ஆளாய் நான் மட்டும்தான் அங்கே வேலையில், அவசரத்திற்கு லீவு எடுக்கக்கூட கஷ்டமாக இருக்கிறது மெம். அதான் வேறு வேலை தேடினேன், உங்கள் மூலமாகக் கிடைத்தும் விட்டது. முதல் வேலையாய், அந்த செகரட்டரி வேலையை ராஜினாமா செய்யவேண்டும், என்கிற உற்சாக குரலோடு விடைபெற்றார்.

அடுத்தவாரம் அவர் வேலைக்குச் சேர வேண்டும், அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரும் தயாராகிவிட்டது, இப்போது செய்கிற வேலையையும் தூக்கிப்போட்டுவிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன், மயக்கமாகவும் வாந்தி வருவதைப்போல் இருக்கவும், கிளினிக் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர், நான்கு வார கர்ப்பம் என்றிருக்கின்றார். மகிழ்ச்சியான செய்திதான்,  இருப்பினும், புதிய வேலையில் சேர இது தடையாக இருக்காதா?, என்கிற ஒரு நெருடல் அவருக்குள். என்னை அழைத்தார்.

``மெம்..நான் அடுத்த வாரம் வேலைக்குச்சேர வேண்டும்..’’

``ஆமாம்..’’

`` ஒரு பிரச்சனை..ம்ம்’’

``என்ன பிரச்சனை?’’

``நான் நாலு வாரம் கர்ப்பம் மெம்..’’

``ஓ..’’

``என்ன செய்யலாம்.? இப்போ செய்கிற வேலையை வேறு ராஜினாமா செய்துவிட்டேன்.!’’

`` நீங்க முதலில் வேலையில் சேருங்கள், பிறகு அதைப்பற்றி பேசலாம்..’’

``தெரிந்தால் பிரச்சனையாகாதா மெம்?’’

``சொன்னால்தானே தெரியும், ஏன் சொல்லனும்..!?’’

``ம்ம்ம்ம்.....’’

`` வேலைக்குச் சேருங்கள். நீங்கள் இருக்கிற சைஸ்சுக்கு, இந்த கர்ப்பம் வெளியே தெரிய கொஞ்ச நாள் ஆகும், அப்போது சொல்லிக்கலாம். சரியா, ஒண்ணும் பிரச்சனை இல்லை. ’’ என்றேன்

``சரி, மெம்’’ என்கிற சிறு சிரிப்பொலியோடு தொலைப்பேசியை வைத்தார்.

இன்று காலையிலேயே, எங்களின் அட்மினில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த வேலை இன்னமும் காலியாகவே உள்ளது. ஆள் பார்,என. எனக்கு அதிர்ச்சி. ஏன் என்னாச்சு என்று விசாரித்தால். அவர் கர்ப்பம் என்பதை, அந்த நேர்முகத்தேர்வு அதிகாரியிடம் சொல்லி விளக்கம் கேட்டுள்ளார்.! அதற்கு அந்த அதிகாரி, அப்படியென்றால் நீ இப்போது வேலைக்குச் சேரவேண்டாம், குழந்தை பிறந்து, உடல் நலம் தேறிய பிறகு வா, என்றிருக்கின்றார்.

தேவையா இது?  காலையிலிருந்து தொலைப்பேசி ஓயவேயில்லை. நான் தான் சொன்னேனே.. அதற்குள் என்ன அவசரம், இப்போ என்ன செய்ய முடியும்?

அவளைப் பேசி விட்ட என் தோழி வேறு, `பாவம், எப்படியாச்சும் சொல்லி, கேட்டுப்பார்..’, என, தொலைப்பேசியில் கெஞ்சியவண்ணமாக இருந்தார்.. எப்படிக் கேட்டாலும் முடியாது. பெண்களின், அதுவும் கர்ப்பிணிப்பெண்களின் உடல்நல ஆரோக்கியத்தில் எங்களின் அதிகாரி கூடுதல் கவனம் செலுத்துபவர். எப்படி நான் பேச முடியும்.!? எல்லாம் நன்மைக்கே, என ஆறுதல் சொல்லி, வளவளா பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.

தொலைப்பேசி மணி அடித்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த மெஃகி கப்பை கீழே வைத்து விட்டு, தொலைப்பேசியை எடுத்தேன்.

``வேலை காலி என்றீர்களாமே.. எப்போது இண்டர்வியூ?’’ மறுமுனையில் ஒரு பெண் குரல்.