செவ்வாய், ஜனவரி 21, 2014

நான்

உன் எழுத்தில் இருக்கின்ற `நான்’னில் எனக்கு உடன்பாடில்லை. 
வாசகியாகிய நான், அதில் தெரிகிற`நான்’ஐ வாசிக்கின்றபோது, சோர்ந்துபோகிறேன். 
உன் `நான்’ என்னைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவனைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவளைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவர்களைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ உயர்திணை மற்றும் அக்றிணையைச் சொன்னாலும் நான் பொறுத்துக்கொள்வேன்.
முழுக்க முழுக்க உன் `நான்’னில் நீயே மறைந்திருப்பதை நான் எப்படி ஏற்றுக்கொள்வது.?
உனது `நான்’ எதையும் பறைசாற்றாமல், `நான்..நான்’ என நீயே உன்னை வடித்துக்கொண்டிருப்பதால், நான் அதில் எதைக் கற்க.?
உனது `நான்’ சொல்லவரும் செய்திதான் என்ன?
உனது `நான்’னில் நான் என்ன தெளிவு கொள்ளமுடியும்.?
நீ கேட்கலாம், நீயும் எழுதுகிறாய், உனது `நான்’ என்ன சொல்லவருகிறது?
எனது `நான்’னில் நான் மட்டும் இருக்கமாட்டேன். நாசுக்காக நான் சொல்லும் `நான்’ நான் அல்ல. நீ.
நல்ல `நான்’ நீரோடைபோல், செல்கிற வழியெங்கும் பயிர்களைச் செழிக்கச்செய்யலாம்.
ஆனால், உனது நான்’னில் நீ மட்டுமே தெரிகிறாய்.
எதற்கு இந்த `நான்’...
விடு விடு..
வாசிக்கப்படுவாய்...
வாசகியாய் வேண்டுகிறேன்
நான்..

வியாழன், ஜனவரி 09, 2014

தேங்காய்கள்

தைபூசத் திருநாள் நெருங்கினாலே தேங்காய்களின் விலை கிடுகிடுவென ஏறும்.

அதுவும் இந்த முறை அனைத்துப்பொருட்களும் அதிக அளவில் விலையேற்றம் கண்டுள்ளதால், தைபூசத்திருநாளில் தேங்காய்களைக் குறிவைத்து அவைகளின் விலையையும் அதிக அளவில் ஏற்றிவிட்டார்கள். விளைப் பொருட்களின் பற்றாக்குறையால் அவைகளின் விலை, ஏற்றம் காண்கிறது என்பது ஒருபுறமிருந்தாலும், தைபூசத் திருநாளில் தெருவில் உடைப்பதெற்கென்றே பலகோடி தேங்காய்கள் தேவைப்படுவதால், தேங்காய்களின் விலை இரண்டு மடங்கிற்கு மேலாக உயர்வு கண்டு பக்தர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய பத்திரிகைச் செய்தியின் நிலவரப்படி, ஒரு தேங்காயின் விலை, சென்ற ஆண்டு ஒரு ரிங்கிட் இருபதுகாசு. இன்றைய விலை, இரண்டு ரிங்கிட் எண்பது காசு என உயர்வு கண்டுள்ளது. விலை உயர்ந்தால் என்ன..!?  நாங்கள் அவைகளை சாலையில் தெருவில் உடைத்து பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்வோம், என்பதிலிருந்து பின்வாங்கமாட்டார்கள் நம்மவர்கள்.

பண்டிகைக்காலமென்றாலே நமது இனத்தவர்கள் அதிக அளவில் பயிர்களையும் காய்கறிகளையும் தேவையில்லாமல் வீணடிக்கின்றனர் என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதன் பயன், பாதிப்பு, விலை யேற்றம், உணவுக்கு பயிர்கள் பற்றாக்குறை, விளை நிலங்கள் போதாமை என்பனவற்றைப் பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பயிர்களை நாசம் செய்து குதூகலிக்கின்ற பண்டிகைக் கொண்டாட்டங்கள் எல்லாமும் நம்மவர்களது என்றாகிவிட்டது.

சென்ற ஆண்டு நவராத்திரி விழாவின் போது நாங்கள் தமிழ் நாட்டில் இருந்தோம், தீபாவளி ஷாப்பிங் செய்துகொண்டு.

விஜயதசமி, ஆயுதபூஜை செய்கிற நாட்களில் பயிர்கள், வாழைக்கன்றுகள், தென்னங்குறுத்துகள், மா இலைகள், வெற்றிலை, தேங்காய்கள் என வெட்டி வீதியெங்கும் நாசம் செய்திருந்த கலாச்சாரத்தைக் கண்டு திடுக்கிட்டோம்.

ஒவ்வொரு வாகனத்திலும், வீடுகளிலும், தெருவிலும், கடைகளிலும் எங்கு பார்த்தாலும் கொலையுண்ட பயிர்கள், கழுத்து அறுக்கப்பட்ட வாழைக்கன்றுகள்,  வீசி எறியப்பட்ட தாணியங்கள், தேங்காய்கள் என குப்பைக்குவியல்களாக வீதியெங்கும். காண்பதற்கு வியப்பாகவே இருந்தது எங்களுக்கு. தமிழர்களாக இந்துக்களாகப் பிறந்திருப்பினும்  இவ்வளவு மோசமான முறையில் பயிர்களை நாசம் செய்கின்ற கலாச்சாரத்தை இதுவரையில் எங்கும் கண்டதில்லை. இங்கே மலேசியாவில் தமிழர்கள் வாழ்கிற சிறிய வட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் இவைகள் நடந்திருக்கலாம், அவை எங்களின் பார்வையில் படாமலும் இருந்திருக்கலாம். ஆனால்அங்கே (தமிழ்நாட்டில்), காண்கின்ற இடமெல்லாம் விழாக்கோலம் என்கிற பெயரில் பயிர்கள் நாசம் செய்யப்பட்டிருப்பதை ஜீரணித்துக்கொள்ளத்தான் முடியவில்லை.

பயிர்களை நாசம் செய்து விழாக்கோலம் காண்கிற இந்தக் கலாச்ச்சாரம் தற்போது இங்கேயும் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து பெரிய அளவில் முகாமிட்டு நாடு தழுவிய நிலையில் விரிவடைந்து வியாபார  நோக்கமாக மாறி வருவது கண்கூடு.

தமிழர்கள் இந்துக்கள் பண்டிகைகள் என்றால் எதாவதொரு பயிர் நாசம் செய்யப்படுவதென்பது இயல்பான ஒன்று என்றாகிவிட்டது. ஒருகாலத்தில் அவைகள் நல்ல நோக்கத்திற்காக அமல்படுத்தப்பட்டிருப்பினும் தற்போதைய சூழலில் பண்டிகைகளுக்குப் பயன்படுத்துகிற பயிர்கள் தாணியங்கள் பெரும்பாலும் வீதியில் வீசியெறிகிற உபயோகமற்ற பொருளாகவே மாறிவிட்டது. அப்படியில்லையேல் மரியாதை நிமித்தமாக பொட்டலங்கட்டி ஆற்றில் வீசியெறிவதும் உண்டு. என்னைப் பொருத்தவரையில் இரண்டுமே வீண் விரையம்தான். இது காலத்தின் கோலமேயென்றாலும், இந்த நவநாகரீக காலகட்டத்தில் மனிதர்கள் சுற்றுப்புற சூழலின் மகத்தும் புரியாமல் கற்கால மனிதர்கள் போல் அறியாமையில் உழல்வதுதான் சிக்கல் இங்கே.  

கூடியவிரைவில் பொங்கலை வரவேற்கக் காத்திருக்கின்றோம். அதற்குத்தயாரான நிலையில் ஆங்காங்கே கரும்புகளுக்கும் வேரோடு பிடுங்கிய மஞ்சள் செடிகளுக்கும், `ஆடர்கள்’ வேண்டி அழைப்புகள் ஒலித்தவண்ணமாகத்தான் இருக்கின்றன. சாங்கியத்திற்காவது வாசலில் கட்டிவைக்கவேண்டுமென்று வாங்கி, இரண்டு மூன்று நாட்கள் கழித்து வீதியில் குப்பைக்கூலங்களில் வீசி எறிவதைத்தவிர வேறொன்றும் சிறப்பாக நடந்துவிடாது.

கரும்பைக் கடித்து மென்று துப்புவதை யார் செய்கிறார்கள் இப்போதெல்லாம்.? மஞ்சள் இலை ஏன் கட்டுகிறோமென்பது கூட தெரியாத நிலையில், ஊரார் பார்த்து மெச்சுவதற்காகவே சில ஏற்பாடுகள் செய்யப்படுகிறன. சிலர் பொங்கலுக்குப் பொங்கிய பொங்கச்சோற்றைக்கூட சாப்பிட ஆள் இல்லாமல்/கிடைக்காமல் வீசிவிடுகிறார்கள்.  இனிப்பு கெடுதல் என்கிற கலாச்சரம் வேறு விஷவாயு போல் மிக வேகமாகப் பரவி விட்டது. பழத்தின் இயற்கையான இனிப்பு என்றாலும் கூட, “ஐய்யோ இனிப்பா? வேண்டாம்.” என்கிற நவநாகரீக சூழலில் நாம் சிக்குண்டுக்கிடக்கின்றோம்.

பண்டிகைகளின் மகத்துவத்தை மறந்து, உலகிற்கு நாம், நமது கலை கலாச்சாரங்களை விடாமல் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம் என்பதைப் பறைச்சாற்றுவதற்காகவே பலவிதமான பயிர்தாணிய விரைய வேலைகளில் ஈடுபட்டு சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறோம் என்கிற உணர்வில்லாமல் வாழ்ந்து வருகிறோம்.

தைப்பொங்கல்தான் வருடத்தின் முதல் பண்டிகை. அதற்குப் பிறகு வரிசையாக வரும் அனைத்துப்பண்டிகைகளிலும் எதாவதொரு பயிர் பலிகடா ஆகும் என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா.?

திருஷ்டி சுற்றிப்போடுவதிலும் மிளகாய் ,எலுமிச்சை, பூசணி, பூ என நம்மையறியாமலேயே பல விளைப்பொருட்களை விரையம் செய்துகொண்டிருக்கின்றோம்.

யோசிப்போம்...