வியாழன், ஆகஸ்ட் 15, 2013

அறிவுப்பூர்வ அறிக்கை

நண்பர்களே இன்றைய தினகுரல் பக்கம் 5-ல் வந்திருக்கும் 'மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுச் சிறுகதைத் தேர்வு நிறுத்தப்படுகிறது' என்ற கட்டுரையை யாரெல்லாம் படித்துவிட்டீர்கள். அது குறித்து என நினைக்கிறீர்கள்...? Taya G Vellairoja

// பிரச்சனை என்னவென்றால் - பெண்படைப்பாளிகள் தங்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவரை `சொற்பொழிவு’ ஆற்ற அழைத்துள்ளார்கள். இது நடந்தது சென்ற மாதம் பன்னிரண்டாம் தேதி.
தலைவரின் சொற்பொழிவின் போது, பெண்களைப் பற்றிய கருத்து ஒன்றினை தவறுதலாக உளறிவிட்டார். மைக் கையில் கிடைத்துவிட்டால் உளறல் எல்லாம் சாதாரணம் இங்கே. அதாவது பெண் படைப்பாளிகளின் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்குவது ஆண் படைப்பாளிகளின் பெருந்தன்மையையே காட்டுகிறது, என்று. இது தவறுதானே.? மன்னிப்பு கேட்டிருந்தால்,பிரச்சனையில்லாமல் போயிருக்கும். மன்னிப்பு கேட்கவில்லை. இது இளம் எழுத்தாள வாசகர் மத்தியில் கடுங்கண்டனத்திற்கு உள்ளானது.முகநூலிலும் விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது.
வாசகர்களான நாங்கள் இதையொட்டிய கண்டனக்கடிதங்களை வல்லினம் இணைய இதழில் பகிர்ந்திருந்தோம்.
நேற்று 15/8/2013 கிட்டத்தட்ட ஒருமாத காலங்கழித்து, எங்களின் எந்தக் கண்டனக் கடிதங்களுக்கும் பதிலடி கொடுக்கமுடியாத பட்சத்தில், தயாஜி என்கிற வாசகரின் கடித்தத்தில் இருக்கின்ற ஓரிரு வரிகளை மட்டும் எடுத்து (எழுத்தாளர்களைக் கேட்காமல் அவர்களின் கதைகளை புத்தகங்களாகப் போட்டு, விற்பனை செய்கின்றீர்களே. எழுத்தாளர்களின் ராயல்ட்டி எங்கே?).. அவர் இப்படிச்சொன்னதால் நாங்கள் எங்களின் எல்லா எழுத்தாளர் சங்க நடவடிக்கைகளையும் நிறுத்தப்போகின்றோம் என்று அறைகூவல் விட்டிருக்கின்றனர் ம.த.எ.சங்கம். நேற்றைய தினக்குரலில் ஐந்தாம் பக்கத்தில் வந்திருந்த அந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்கநேர்ந்தால் - அறவே இலக்கியச் சார்பில்லாத சாதாரண மனிதனும் சிரிப்பான்.
யாராவது உன்னைச் சப்பானின்னு கூப்பிட்டா, சப்புன்னு அறை. என்பதைப்போல பக்கா பாமரத்தனமாகவே இருக்கின்றது அந்தக் கட்டுரை. //



இது ஒரு சிறுபிள்ளைத்தனமான மிரட்டல் என்று பத்திரிகைப் பதிவினைப் படித்தவுடன் புரிந்துகொண்டேன். 

இவர்கள் இவ்வளவு மோசமான அறிக்கை மன்னர்களாக இருப்பார்கள் என்று நான் கடுகளவும் யோசிக்கவில்லை. ம.த.எ.ச பெரிய ஜாம்பவான்களின் குகை என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்.

தனி நபர் ஒருவரின் சாடலைக் காரணங்காட்டி ஒட்டுமொத்த சங்க நடவடிக்கைகளையும் முடக்கநினைக்கின்ற இவர்களின் வீரம் நிஜமாலுமே மெய்சிலிர்க்கவைக்கிறது.

இது இணைய இதழ் வல்லினத்திற்கு எதிராக ஆட்களைத் (எழுத்தாளர்களை) திரட்டி, சென்றமுறை வந்துள்ள எங்களின் கட்டுரைகளுக்கு எதிர்வினையினை ஆற்றத்தூண்டும் ஒரு யுக்தி என்றே எமக்குப் படுகிறது.

வல்லினத்தில் வந்துள்ள எதிர்வினைகளுக்கு எந்த எழுத்தாளரும் தமது கருத்தினை வைக்கவில்லை என்கிற மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதங்கத்தில் - பழிவாங்க எங்களோடு இணையுங்கள் என்கிற கூக்குரல் சத்தம் மட்டும்தான் கேட்கிறது.

ஏறக்குறைய ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கின்ற இந்தக் கட்டுரை, எவ்வளவு அறிவுப்பூர்வமாக இருக்கின்றதென்று உலகமறிய .. Navin Manogaran இதை அப்படியே வல்லினத்தில் பதிவேற்றம் செய்யவும்.

என்னைப் பொருத்தவரையில், தவறோ சரியோ - சரியான பதிலடி என்பது எதிரியைக்கூட மௌனங்காக்கவைக்கும். ஆனால் இதுபோன்ற கட்டுரையை எழுதி, `இனி நீங்களெல்லாம் பேனா பிடித்து எங்களை மிரட்டுவீர்கள்..? ம்ம்ம் ஜாக்கிரதை, நாங்களும் தாதா..’ என்பதைப்போல் உள்ளது.

இலக்கிய உலகில் நடக்கின்ற மற்றுமொரு வெட்கக்கேடான செய்கை இது.