செவ்வாய், ஜூலை 31, 2012

கஸ்டமர்ஸ் ஆர் ஆல்வேயிஸ் ரைட்டு

தனிமனித ஒழுக்கம் என்பது குடும்ப சூழல் சார்ந்த விவகாரம். இந்த விஷயத்தில், குடும்பத்தில் அலட்சியப்போக்கு  தாண்டவமாடினால்,  தனிமனித ஒழுக்கக்கேடு வெளியே தலைவிரித்தாடும். இதில் அரசாங்கமே முழுமூச்சாக இறங்கி கெடுபிடிகளை கடுமையாக்கி, சட்டதிட்டகங்களை அமலுக்குக் கொண்டுவந்தாலும், தனி ஒரு மனிதனுக்கு ஒழுக்கமென்பது இல்லையென்றால், மாற்றமென்பது குதிரைக்கொம்புதான்.

அண்மையில், எங்க ஊரின் பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு ஆய்வு வந்திருந்தது. அதாவது மலேசியர்களின் அலட்சியப்போக்கினால் பேரங்காடி வணிகர்கள் லட்சக்கணக்கில் நஷ்டத்தைத் தழுவுகின்றார்கள்  என்பதனை, ஆதரத்தோடும், புகைப்படங்களோடும், புள்ளிவிவரத்தோடும் அப்பட்டமான உண்மைகளைச் சொல்லும் அரிய செய்தியாக வந்திருந்தது.

அச்செய்தி வந்த மறுநாள், அதையொட்டிய உரையாடல்களும் கருத்துப்பரிமாற்றங்களும் மலேசிய வானொலிகளை அலங்கரித்தன.

செய்தி என்னவென்றால்; பேரங்காடிகளுக்குச் செல்லும்போது, விஸ்தாரமான இடைவெளியில், நம்மிடமுள்ள தள்ளு வண்டியை (ட்ரோலி) தள்ளிக்கொண்டு, நமக்குத்தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்து அந்த வண்டியில் வைத்துக்கொண்டு, பின் வண்டியை கேஷியர் கவுண்டருக்குக்கொண்டு சென்று, அதன்பின் பொருட்களுக்கான பணத்தை அதன் விலைகளுக்கேற்ப செலுத்துவோம்.

அப்படி தேர்ந்தெடுக்கின்ற சமையத்தில், பொருட்களைச் சேதமாக்குகின்ற பொறுப்பற்ற பயனீட்டாளர்களின் அருவருக்கத்தக்க செயல்களால் அந்த பேரங்காடி, பெருத்த நஷ்டத்தில் மூழ்குவதாக அந்த ஆய்வு காட்டுகிறது.

குழந்தைகளை அழைத்துச்செல்லுகிற போது, பாட்டல் பொருட்களை கீழே போட்டு உடைப்பது.! பருகும் பானங்களை, பருகி விட்டு காலியான பாட்டல்களை அந்த இடத்தில் வைப்பது. ! பிஸ்கட்களை பாதி சாப்பிட்டுவிட்டு, பாதியை, கேஷியர் கவுண்டர் வருவதற்குள் எங்கேயாவது பதுக்கி வைப்பது.! கடலை போன்ற பொருட்கள் வரிசைப் படுத்தியிருக்கும் இடங்களில், கடலைகளை அள்ளி இரைப்பது.! அரிசி பாக்கெட்டில்  ஓட்டை  இட்டு, அவைகளை கீழே சிதற விடுவது.! பட்டர், ஜேம் போன்றவற்றில் கைகளை விட்டு நோண்டுவது.! பழங்களைக் குத்திக்குத்திப் பார்ப்பது.! காய்கறிகளை பலங்கொண்டு அமுக்குவது. !!

எடுத்த பொருட்களை வேண்டாமென்றால் மீண்டும் அதே இடத்தில் அடுக்கிவைக்காமல் அதை வேறு ஒரு இடத்தில் கடாசி விடுவது. குறிப்பாக, ரொட்டியை எடுத்த இடத்தில் வைக்காமல், மீன் இறைச்சி போன்ற இடங்களின் அதைப் போட்டு விட்டு வருவது. பொருட்களை இஷ்டம்போல் ட்ரோலியில் அடுக்கிவிட்டு, அவைகள் வேண்டாம்ன்று அதை எதாவது ஒரு இடத்தில் அப்படியே விட்டு விட்டு சென்றுவிடுவது.!!

பேஃக்கரி போன்ற இடங்களில் கேக் பலகாரங்களை எடுத்துச் சாப்பிடுவது, துணிமணிகளை போட்டுப்பார்த்து விட்டு, அவைகளை போட்டுக்கொண்டே கிளம்பிவிடுவது. உள்ளாடைகளை போட்டுப்பார்ப்பது (ப்ரா, பென்ட்டிஸ்), காலணிகளை, பெரிய கால்களைக்கொண்டு அமுக்கி, அழுத்தி, உள்ளே நுழைத்துப் போட்டுப் பார்ப்பது  ... என இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். பட்டியல் நீண்டுதான் இருந்தது அங்கே.

பேரங்காடி என்றால் மூலை முடுக்கெல்லாம் கேமராக்களை பொருத்தியிருப்பார்கள். எல்லாப் பொருட்களின் வரிசைகளிலும் விற்பனை உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள். இவற்றையெல்லாம் மீறி, இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறதென்றால், நிலைமை கட்டுக்குள் இல்லாமல், பேரங்காடிகள் பெருத்த நஷ்டத்தில் உழன்றுக்கொண்டிருப்பதாக அச்செய்தியின் புள்ளி விபரம் பறை சாற்றுகிறது.

விற்பனை உதவியாளர்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒரு சில விற்பனை உதவியாளர்கள் எப்பொழுதுமே வாய் பேசா மௌனியாகவே இருந்து விடுகிறார்கள்.  இதற்குக் காரணம்,  `கஸ்டமர்ஸ் ஆர் அல்வேயிஸ் ரைட்’ என்கிற உருப்படாத தாரகமந்திரத்தை பல பயனீட்டாளர்கள் தெரிந்து வைத்துக்கொண்டு, `ஆச்..பூச்’ என்றால், `நான் ஒரு கஸ்டமர், நான் புகார் செய்து, உன் வேலையை காலியாக்கிவிடுவேன், ஜாக்கிரதை!’ போன்ற வசனத்தை எல்லா நேரத்திலும் பயன்படுத்துவதால், பல விற்பனை உதவியாளர்கள் ஊமையாகவே இருந்து விடுகிறார்கள். `எதற்கு வம்பு, இது என்ன நமது பாட்டன் கடையா?’ என்பதைப்போல.

இங்கே ஒரு சம்பவம் நினைவிற்கு வருவதால், அதை உங்களிடமும் பகிர்கின்றேன். தமிழ்நாட்டிற்குச் சென்றிருக்கையில், எங்களின் மனதை உருக்கிய ஒரு சம்பவம் இது. படித்துப் பாருங்கள், நம்மவர்கள் செய்யும் கூத்துகளை. !

ஒரு ஸ்வீட் கடைக்குச் சென்றோம். அங்கே காலெஜ் மாணவர்கள் போல் சில சுட்டிப் பையன்கள்  துறுதுறுவென பணியில் மூழ்கியிருந்தார்கள். முதலாளி கல்லாவில் மீசையை முறுக்கிக்கொண்டு, முகத்தை உர்ரென்று வைத்த வண்ணம் பணத்தை வாங்கி பெட்டிக்குள் போட்டுக்கொண்டிருந்தார்.

நாங்கள் பத்து பேர்கள் அடங்கிய குழு, கடையின் உள்ளே நுழைந்தவுடன் கடையே நிறைந்து விட்டது. ஒருவருக்கு ஒரு பணியாளர் என எங்களை `அக்கா, அக்கா’ என்று மிக அன்பாக, மரியாதையாக அக்கறையெடுத்து கவனித்து, பொருட்களை பொட்டலம் கட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, அங்கே வந்த ஒரு பருவமங்கை.. சுமாரான பெண்தான், பெரிய அழகியெல்லாம் ஒண்ணும் கிடையாது, ஒய்யாரமாக நுழைந்து, `எனக்கு அல்வா அரை கிலோ கொடு’, என, கடுமையான தொனியில் உத்தரவு இட்டாள். எல்லோரும் எங்களை கவனித்துக்கொண்டிருந்ததால், அதில் ஒருவன் அக்கறை எடுத்து, `அல்வாதானே? தோ தருகிறேன்.’ என்று சொல்லி சிரித்துள்ளான்.

வெளியே நின்றுக்கொண்டிருந்த அந்தப்பெண்ணின் அப்பா உள்ளே நுழைந்து, தாறுமாறாகக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, அந்த பையனை அவமானப்படுத்தினார்.

``எப்படி நீ, என் மகளைப் பார்த்து, உனக்கு அல்வா தறேன், என்று சொல்லிச் சிரிக்கலாம்? அதுக்கு என்ன அர்த்தம்?  என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்கடா, நீங்கள் எல்லோரும்?  நான் ஒருவன் வெளியே நிற்பதையே நீங்கள் யாரும் கவனிக்காமல், என் மகளைக் கிண்டல் செய்கிறீர்கள்?’’

டேய்.. வாடா.. போடா, அடா.. புடா, என ஒரே அமளி. அந்த பையன் வெளிறிப்போனான். முகமெல்லாம் வேர்த்து விருவிருத்தது. மீசையை முறுக்கிக்கொண்டிருந்தவர், எழுந்து வந்தார், அவனை பளார் என்று ஒரு அரை விட்டார். அந்த ஆள், அல்வாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாமென்று அமைதியாகச் சென்று விட்டார். நாங்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியில் உரைந்துப்போனோம்.  இந்த சம்பவத்தால் மனசங்கடம் அடைந்த  எங்களின் குழுவில் உள்ள ஒரு பெண்மணி,

``என்னங்க அய்யா, அவன் பாட்டுக்கு எங்களுக்குப் பொருட்களைக் கட்டிக்கொடுத்துக் கொண்டிருக்க, அவனைப் போய் அடிக்கின்றீர்களே.. !?’’ என்று கேட்க, `என்னம்மா செய்வது, அவன் இப்படி உள்ளே வந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறானே, அவனை அமைதிப்படுத்த எனக்கு இந்த யுக்தியை விட்டால், வேறு வழி தெரியவில்லை. என் பிள்ளைகளைப் பற்றி எனக்குத்தெரியாதா? அந்த ஆள், இதை ஒரு விஷயமாக பெரிதாக்கி, வியாபாரத்தையே கெடுக்கப்பார்ப்பான்’ம்மா. சரி விடுங்க, உங்களுக்குத் தேவையில்லாத விஷயமிது. பொருட்களை வாங்கிக்கொண்டு கிளம்புங்கள்.’’ என்றார் அந்த மீசைக்காரர்.

அன்று இரவு முழுக்க, எங்களின் கண் முன் நிழலாடியது `கஸ்டமர் ஆல்வேயிஸ் ரைட்’, என்கிற இந்த சம்பவம்.

பயனீட்டாளர்களின் சுயநலப்போக்கினால் ஏற்படும் காயங்கள் நஷடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்கிற இது போன்ற நிகழ்வுகளை இன்னும்  நிறைய  அடுக்கிக்கொண்டே போகலாம்.

சாப்பாட்டுக்கடைகளில், ஆடர் செய்யப்பட்ட உணவு தாமதமாக வந்து விட்டது என்பதால், அந்த உணவே வேண்டாமென்று, முகத்தில் அரைந்தாட்போல சொல்லி ஆர்ப்பாட்டம் செய்பவர்களும் நிறைபேர் இங்கே.

பேரங்காடிக் கடைகளுக்குச் சென்றால், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துண்மணிகளைக் கலைத்துப்போட்டு விட்டு, தமக்கு வேண்டிய துணிகளைத் தேடுவதாக அக்கப்போர் செய்பவர்களைப் பார்க்கும் போதும், வேதனையாக இருக்கும்.

மனித நேயமற்ற மற்றொரு செய்கை. கழிவறைகளை சுத்தம் செய்கிற ஆட்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை. இது அவர்களுடைய வேலை, நாம் ஏன் தூய்மைப் படுத்த வேண்டுமென்று,  கழிவறைக்குச்சென்றால், பயன் படுத்திய பின், முறையாக சுத்தம் செய்யாமல் வந்து விடுவது சிலரின் வாடிக்கை. சிறுநீர் கழித்தாலும், குழாயில் வரும் நீரைத் திறந்து ஊற்றி சுத்தம் செல்வதில் என்ன குறை வந்து விடுமோ, தெரியவில்லை.!?

எங்களின் நிருவனத்தில், கிளீனிங் சர்வீஸ்’ற்கு, ஒப்பந்த அடிப்படையில் பல பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கின்றார்கள். எல்லோரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். அவர்களைக் கண்காணிக்கும் வேலைக்கு மட்டும், ஒரு உள்ளூர்காரரை மேற்பார்வையாளராக நியமித்து இருப்பார்கள்.

இந்த பணியாளர்கள் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது.
அருவருக்கத்தக்க வேலைகளுக்கிடையே, பல மாதிரியான இன்னல்களையும் சந்தித்த வண்ணமாகத்தான் இருக்கின்றார்கள். துப்புறவு பணியாளர்கள் இந்தோனீசிய முஸ்லீம் ஊழியர்களாதலால், இந்த சூழலில், நோன்பு வேறு இருக்கின்றார்கள். உள்ளூரில் பணி புரிபவர்கள் பலரும், நோன்பு காலகங்களின் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, இந்த கிளீனிங் சர்வீஸ் ஆட்களை, தமது வேலைகளைச் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மேலே ஏறி பொருட்களை எடுப்பது, வந்திருக்கும் டாக்குமெண்ட்ஸ்களை எடுத்துச்செல்வது, இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்வது, விளக்குக்ளை புதிதாகப் பொருத்துவது, கஸ்டமர்களின் கனமான பொருட்களைத் தூக்குவது, என, இப்படி இன்னும் பல எடுபிடி வேலைகளுக்கு அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களும் நிராகரிக்காமல் சொல்கிற வேலைகளையெல்லாம் செய்கிறார்கள். என்ன செய்வது, பிழைக்கவந்து விட்டால், தாங்கிக்கொள்ள வேண்டும்ன்கிற தர்மசங்கடமே. !?

கழிவறையைப் பயன் படுத்தி விட்டு, மலத்தைக்கூட தூய்மையாகக் கழுவாமல் அப்படியே விட்டு விட்டு வருகிறவர்களும் உண்டுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்களின் துப்புறவு பணியாளர் ஒருவர், காலையிலேயே கைத்தொலைப் பேசியின் மூலமாக ஒரு காட்சியைப் புகைப்படம் எடுத்து வந்து என்னிடம் காண்பித்தாள். எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. அவ்வளவு மோசமாக, அசிங்கமாக.. !

அவர்களின் மேற்பார்வையாளரான எங்கள் ஊர் ஆசாமியின் காதில் இச்செய்தியினைப் போட்டேன். அதற்கு அவர், `ஏன் அதிகமான புகார்களைக் கொடுக்கின்றார்கள்.!? இது அவர்களின் வேலையல்லவே..! செய்துதானே ஆக வெண்டும்.! அவர்களின் ஊரில் கலெக்ட்டர் வேலை காலியாக இருந்தால் போகவேண்டியதுதானே! இவர்களுக்கெல்லாம் முகங்கொடுத்தால், நம்மையே ஏய்த்துவிடுவார்கள்.’ என, கடுஞ்சொற்களை உதிர்த்தார். 

இப்படிப் பேசினால், நான் என்ன செய்ய முடியும்? என் பங்கிற்கு புகார் கொடுத்துப்பார்த்தேன். மனிதாபிமானம், மனிதநேயம் உள்ளவர்களாக இருந்தால், யோசிப்பார்கள். இல்லாதவர்களிடம், நாம் எதை எதிர்ப்பார்க்க முடியும்.!? அவர்களின் மனவேதனையை உள்வாங்கிக் கொண்டாலும், உதவி செய்கிற அளவிற்கு, எனக்கு அதிகாரமில்லையே.!?

தனிநபர் ஒழுக்கம் சார்த்த விஷயங்களில், நாம் என்ன குட்டிக்கர்ணம் போட்டாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை. இது போன்ற நிகழ்வுகளில் சிக்கிக்கொள்ளும்போது,  மனிதர்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்லவே, கூசுகிறது.!

     




.   

ஞாயிறு, ஜூலை 29, 2012

பாறையும் கரையவேண்டுமே...

புள்ளி இல்லாமல், 
துணை கால் போடாமல்
இடைவெளி இல்லாமல்
பிழையோடு சொல்வதுபோல்
நடித்துவிட்டு
என் ஈகோவை சீண்டிச்செல்கிறது
உன் வாசகம்


%%%%%%


மண்ணில் விதைத்ததுதான் மரமாகுது
என மனமும் விளை நிலமோ
உன் நினைவுகளும் மரமாகுதே..!!


%%%%%%%


பேனா வாங்கினால் 
எழுதிப்பார்க்கின்றோம்
கத்தி வாங்கினால் 
வெட்டிப்பார்க்கின்றோம்
மொன்னையல்ல கூர்`மை’க்காக..!


%%%%%%


என்றோ ஒரு நாள் 
நடக்கவிருக்கும் அசம்பாவிதத்திற்காக, 
ஓயாமல் சிமிட்டிக்கொண்டே இருக்கின்றது; 
ரகசிய காமிரா..


%%%%%%%%


எனக்கு நேரமில்லை என்று சொல்லி 
பாராமுகமாக விலகிச் சொல்லலாம்.. 
என்ன செய்ய; நேரமிருக்கே.!


%%%%%%


எழுந்தவுடன் ஒரு சிக்கல்
சினத்தோடு சில வேலைகள்
படபடப்பு குறைந்தபோது
சமையல்
என் குழந்தைகளுக்கு (செடிகள்)
முடி,நகம் வெட்டுதல்
அவைகளோடு கொஞ்ச நேரம் 
கொஞ்சுதல்
தாழ்வாரத்தில் இறங்கிய 
சூரியனை துரத்திக்கொண்டே
மசாலா, துணிகள் உலரவைத்தல்
கவலை மறக்க ஒரு குட்டித்தூக்கம்
எழுந்து ஒரு கப் சூடான காப்பி
தனிமை மனதிற்கு சுகமளிக்கும் சில
கானங்கள்
ஷவரின் கீழ் அரை மணி நேரம்
வெளியூர் சென்றிருந்த கணவரின் வருகை
உல்லாச பொழுதாக்க
இரவு உலா செல்கிறோம்...
ஞாயிறும் சாய்கிறது..



%%%%%%%


நீ மெழுகாய்
உருகினாலும்
பாறை அது
கரையவேண்டுமே..!?



%%%%%%


புறக்கணிப்போம் 
என்கிற வாசகத்திலும் 
விளம்பரம் தெரிகிறது.


%%%%%%%


தோழியிடம்
தெரிந்த ஒன்றைப் பற்றி
கேள்வியாகக் கேட்பேன்
சொல்லிக்கொடுத்து
பூரித்துப்போவாள்
தோழமையில் நெருக்கம்
அவளைவிட அறிவில்
நான் குறைந்திருப்பது..



%%%%%%%


நன்றி 
பண்பின் வெளிப்பாடுதான்
எனக்கு அது வேண்டாம்
உன்னிடமிருந்து..
நன்றி


%%%%%



பற்றுதல்கள்

சிலர்
வாசனைப்பொருட்களின் மீது பைத்தியமாக இருப்பார்கள்
நமக்கு அருமையான மணம் இலவசமாகக் கிடைத்து விடுகிறது

சிலர்
செடிகளின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்
நமக்குப் பூக்கள் இலவசமாகக் கிடைத்து விடுகிறது.

சிலர்
சாமி பைத்தியமாக இருப்பார்கள்
கோவிலுக்குச்செல்லும் போதெல்லாம் நமக்கும் பிரசாதம் வீடு தேடி சுலபமாகக் கிடைத்து விடுகிறது.

சிலர்
உணவுப் பதார்த்தங்களின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்..
நமக்கு அதில் பாதி பலகாரங்கள் இலவசமாகக் கிடைத்து விடுகிறது

சிலர்
துணிமணி ஆடை அணிகலன்களின் மேல் பைத்தியமாக இருப்பார்கள்.
அவகளால்தான் ஏழைகளுக்கு இலவசமாக விலையுயர்ந்த ஆடைகள் கிடைக்கின்றன.

சிலர்
எழுத்துப்பைத்தியமாக இருப்பார்கள்
நமக்குக் கருத்துகள் எல்லாம் இலவசமாகக் உடனே கிடைத்து விடும்.

எதிலாவது பைத்தியமாக இருக்கனும், அப்போதுதான் அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்.

பைத்தியங்கள் தான் நல்லவர்கள்.
பற்றுப் பைத்தியங்களை கிண்டல் கேலி செய்யாதீர்கள் அவர்களால்தான் பலர் வாழ்கிறார்கள்.

இப்படிக்கு,
window shopper
விஜி.

சனி, ஜூலை 28, 2012

மூர்ச்சையானேன்


முன்பு நான் எழுதிய கதைகள்,கட்டுரைகள், கவிதைகள் என எல்லாவற்றையும் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்கிற நோக்கோடு, டைப் செய்கிற போது சில தவறுகள், கருத்துப்பிழைகள், எழுத்துப்பிழைகள் என கண்களுக்குத் தெரிந்தவண்ணமாகவே இருக்கிறது.

அதை திருத்திப்போடலாமா அல்லது பத்திரிகையில் வந்ததுபோலவே அப்படியே பதிவேற்றி விடலாமா, என்கிற யோசனையில் எல்லாமும் அப்படியே பையில் பத்திரமாக இருக்கின்றன. சோர்வாகவும் இருக்கின்றது, மீண்டும் வாசித்து தட்டச்சு செய்வதற்கு..! திரும்பியே பார்க்கவேண்டாம் என்று கூடத்தோன்றுகிறது. என்ன செய்ய, அன்றைய சிந்தனையோட்டம் அப்படி..! இப்போது சிந்தனையில் மாற்றம் உள்ளது போன்ற பிரமை. இன்னும் மாறலாம்..

எங்கள் ஊரின் நிலவரப்படி, பத்திரிகைகளில் பிரசுரமாவதை பெரும்பாலும் யாருமே அவ்வளவாக அக்கறை எடுத்து, ஈடுபாடு காட்டி வாசிப்பதில்லை. பல வருடங்களாக எழுதிவருகின்றோம் (மொக்கைகள்தான்),  அதில் அதிகமாக எழுதித்தள்ளிய, அதிகமான படைப்புகள் வெளியான ஒரு பத்திரிகையில், அங்கே வேறொரு பொறுப்பில் இருக்கும், பெரிய பதவி ஆசிரியருக்குக்கூட,  நாம் யார் என்றே தெரியவில்லை. அட, எழுத்தாளராக அடையாளங்காண வேண்டாம்’ங்க, ஒரு தீவிர வாசகியா!? ..ம்ம்ம்

முன்றாம் பிறை கமல் மாதிரி குட்டிக்கர்ணம் போட்டு சொல்லவேண்டியதாக உள்ளது, நான் தான்.. தெரியுதா? ஆடரா ராமா ஆடு என!.

எனக்குத்தெரிந்த ஒரு பிரபல எழுத்தாளர் - நிஜமாலும் எழுத்தாளர், பலவருடங்களாக எழுதுகிறார். அவரின் புகைப்படத்தோடு பல
சிறுகதைகள் படைப்புகள் பத்திரிகையில் வருகிறது, வந்தவண்ணமாகவும் இருக்கின்றது. ஆனாலும்  அவரின் பக்கத்து வீட்டுக்காரருக்கு, அவர் ஒரு எழுத்தாளர், பத்திரிகைகளில் எழுதுவார், என்கிற விஷயம் இன்னமும் தெரியாதாம்..! இத்தனைக்கும் அந்த அண்டைவீட்டுக்காரர்  தமிழ் பத்திரிகைகள்தான் வாங்குவாராம். ! அவரின் சோகக் கதை அப்படி.

அண்மையில் ஒரு பத்திரிகை ஆசிரியரை தொலைப்பேசியில் அழைத்து உரையாடினேன். உடையாடல் சென்றது இப்படி...  

“சார், நான் தான் விஜி, நிறைய எழுதுவேன், எனது பதிவுகளை உங்களுக்கு மெயிலில் அனுப்பலாமென்றிருக்கின்றேன். உங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?”

“ எனது மின்னஞ்சல் முகவரி உனக்கு எதற்கு? மின்னஞ்சல் பதிவுகளையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.! அது சரிப்பட்டு வராது’ம்மா. உங்களின் பதிவுகள் எங்களுக்கு எப்போதும் ரகசியமாகக் கிடைக்கவேண்டும். மிக மிக முக்கியமானவை அவை!. மின்னஞ்சலில் அனுப்பினால், பலர் பார்க்கக்கூடும், வாசிக்கக்கூடும். அது நல்லதல்லவே.! என்ன நாஞ்சொல்வது.? வரும் கடிதங்களையெல்லாம் நாங்கள் பிரித்துக்கூட பார்க்காமல், அப்படியே சம்பந்தப்பட்டவர்களின் மேஜையில் வைத்து விடுவோம். அதுதானே நியாயம்’ம்மா? நீ என்ன செய்.! எழுதியோ, டைப் செய்தோ, ஒரு என்வலஃப் வாங்கி, அதை அதனுள் போட்டு, பசை கொண்டு ஒட்டி, தபால்தலை வாங்கி, ஒட்டி, தபால் நிலையத்திற்குச்சென்று ரிஜிஸ்டர் செய்து விடு, அப்போது அவர்கள் உன்னிடம் ஒரு ஸ்லீப் கொடுப்பார்கள் அதை பத்திரமாக வைத்துக்கொள் - அத்தாட்சி அதுதான். புரியுதா?” என்றார்.

நான் மூர்ச்சையானேன்.




வெள்ளி, ஜூலை 27, 2012

தட்டலும் திட்டலும்

ஒட்டாத போது
ஓயாமல் வருகிறாய்
ஒட்டியவுடன்
ஓடிவிடுகிறாய்

சரி, எட்டிச்செல்லலாம்
என்றால்
இதயவாசலை
மீண்டும் தட்டிச்செல்கிறாய்

தட்டும் போதெல்லாம்
திறந்துக் கொ(ல்)ள்கிறது
பூட்டப்படாத என் வாசல்

சாவியை நான்
பூட்டும்வரை
உன் தட்டலுக்கு
திறக்கும் என் வாசல்

வியாழன், ஜூலை 26, 2012

யோசிக்காமல்..

உள்ளே நுழைவதைவிட, நுழைந்து விட்ட பின் எப்படி வெளியே வரவேண்டுமென்பதைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அன்பு வலையாக இருந்தாலும் கூட.

பார்த்ததில் பிடித்தது




புதன், ஜூலை 25, 2012

இந்த இரவில் கூட

நான் இருக்கின்றேன்
பாடிக்கொண்டிருக்கின்றேன்
சாமான்களை உருட்டிக்கொண்டிருக்கின்றேன்
கதவை திறக்கின்றேன்
கிரிச் என்கிற சத்தத்துடன் மூடுகின்றேன்
கால்கள் தரையில் உரசுவதைப்போல்
நடக்கின்றேன்
நீரை கீழே விடுகின்றேன்
`ஸ்வீட்ச்’ஐ தட்டுகின்றேன்
மின் விசிரியை சுழல விடுகின்றேன்
மேஜையில் தாளம் போடுகின்றேன்
`ஹம்மிங்’ செய்கிறேன்
உட்கார்ந்திருக்கின்ற நாட்காலியை
முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டிருக்கின்றேன்
வானொலி தொலைக்காட்சியை
முடக்கிவிடுகின்றேன்
தும்முகின்றேன்
கொட்டாவி விடுகின்றேன்
கொசு அடிக்கின்றேன்
கை விரல்களை நெட்டி உடைக்கின்றேன் 
சொந்தமாகவும் பேசிக்கொள்கின்றேன்
இப்படியெல்லாம் அமைதியைக் குலைப்பதால்
நான் உயிரோடு இருக்கின்றேன்.!


மனசு

மனசு இன்று பூக்கவில்லை
மனசு இன்று மகிழவில்லை
மனசில் இன்று அமைதியில்லை
மனசில் எதோ ஒரு வலி
மனசில் எதோ ஒரு சிந்தனை
மனசே சரியில்லை
கவிதையும் வரவில்லை

செவ்வாய், ஜூலை 24, 2012

காலை வணக்கம்

பழகிப்போன
பதிந்துப்போன
உனது வாசகம்
பாதி நாள் வரை
வராமல் இருந்தால்
பதறிப்போகிறது
இந்த மனசு

மதியமானதும்
மங்கிப்போனாலும்

மாலையிலும்
மயக்கச்சுவடு இல்லாமல்
மறைவதில்லை
என் இரவுப்பொழுது

திங்கள், ஜூலை 23, 2012

தென்றல்தான்..

நல்லனவை
மென்மையாக வருவதில்லை

கெட்டனவை
புன்னகையோடும் நுழையலாம்

நல்லனவை
வருடும் தென்றலல்ல

கெட்டனவை
புரட்டிப்போடும் புயலும் அல்ல

நீ சிரித்துக்கொண்டே
என்னைக் கொல்லவரலாம்

நான் திட்டினாலும்
உன் தோழியே

சனி, ஜூலை 21, 2012

இப்போ என்ன?

ஒரு முக்கியமான டாக்குமண்ட் தொலைந்து விட்டது  எங்கள் அலுவலகத்தில். எப்படித் தொலைந்தது எனத் தெரியவில்லை. அது ஒரு ரெஜிஸ்டர்எங்க சி.இ.ஒ செகரட்டரியின் (அவருக்கு நிறைய செகட்டரிகளில் இவளும் ஒருவள்)  கார் ரோட் டஃக்ஸ். ஏற்கனவே, மூன்று நாட்களுக்கு முன்னமே அவள் என்னிடம் சொல்லி வைத்திருந்தாள். 


``ரொம்ப அர்ஜெண்ட், எங்க அப்பா அனுப்பி வைப்பார், பத்திரம் பத்திரம்..’’ என.! 


``சரி, வந்தால் நிச்சயம் எடுத்து வைக்கிறேன்’’ என, நானும் உறுதி வழங்கியிருந்தேன்.


முடிந்த சனிக்கிழமை எங்களுக்கு வேலை. நான் செல்லவில்லை. பொங்கல், வீடு சுத்தம் செய்யனும் என்பதால் லீவு எடுத்துக்கொண்டேன். ஒரு போலிஸ் புகார் செய்வதற்காகவும்,  வெளியே சென்றிருந்தோம். தொலைப்பேசி தொல்லை என்பதால், அதை அடைத்துப்போட்டு விட்டு, எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின், தொலைப்பேசியை ஆன்செய்தேன். என்ன ஆச்சிரியம், 19 மிஸ்டு கால்கள். எல்லாமே அவளுடைய எண்கள். பதறிப்போய், பதில் அழைப்பு விட்டேன்.

ஹாலோ, என்னுடைய அந்த ரெஜிஸ்டர் வந்து மூனு நாளாச்சாம்..

அப்படியா?, என்னிடம் இல்லையே.!

யாரோ..ஷம்சூல் என்பவன் சையின் பண்ணி எடுத்திருக்கான்..

, அவனா? பக்கத்து பில்டிங்கில் ஸ்டோரில் வேலை செய்பவன்.. அவனிடம் போய் கேளு..!

இன்னிக்குச் சனிக்கிழமை, அவர்களுக்கு வேலை இல்லை..

அப்போ இரு, திங்கட்கிழமை கேட்போம்..

நான்..திங்கட்கிழமை வெளியூர் போறேன், அந்த ரோட் டக்ஸ் இல்லாமல் என்னால் நகர முடியாது..” மனதிற்குள் திட்டினேன் அவளை, அதற்கு நான் என்ன பண்ண முடியும். !? சொல்றது விளங்குதா பாரு.. இவளை.... இர் இர் இர் !


ஹாலோ, என்ன பண்ண முடியும்? எப்படிப் பார்த்தாலும், திங்கட்கிழமை வரை காத்திருந்துதான் ஆக வேண்டும்.
மீண்டும் தொடர்கிறாள் .. குருட்டுத்தனமான கேள்விகளோடுஷம்சூலுக்கு போன் போட்டால்?”

ம்ம்..போடு நம்பர் இருந்தால்.. என்னிடம் அவன் நம்பர் இல்லை.!’’

நீ, இப்படிப் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது விஜி..


எனக்குக் கோபம் வந்துவிட்டது.. இப்போ நம்மால் எதுவும் பண்ண முடியாது, காத்திரு திங்கட்கிழமைவரை.. பிறகு பார்க்கலாம்.. என் போனில் கிரெடிட் வேறு ரொம்ப குறைவா இருக்கு..போனை வை.என துண்டித்து விட்டு வேலைகளைக் கவனித்தேன். இருப்பினும் என் மனம் அவளைச் சுற்றியே.. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், இங்கிதமென்பது ரொம்ப குறைவாகவே தான் இருக்கு, ஒரு சின்ன விஷயத்தைக்கூட புரிந்துக்கொள்ள முடியாமல், இப்படிச் சூழ்நிலை கைதியாகிக் கிடக்கிறாளே! இதனைக்கும் அவள் வெளி நாடு சென்று படித்து பட்டமெல்லாம்(!) வாங்கியவள்.


திங்கட்கிழமையும் வந்தது.
அவள் வேலைக்கு வரவில்லை. சொன்னது போலவே வெளியூர் பணயம் சென்று விட்டாள். நான் காலையில் காரில் வந்துக்கொண்டிருக்கும் போதே, என் கைத் தொலைப்பேசி சிணுங்கியது. அவள் தான். நினைவூட்டினாள், அந்த ரெஜிஸ்டர் விவகாரத்தை. 


``கவலைப்படாதே, நினைவில் இருக்கு.’’, என சொல்லிவிட்டு, அலுவலகம் கூட நுழையாமல், ஷம்சூலைத் தேடி அடுத்த பில்டிங்கிற்குச் சென்றேன்.
அவன் இன்னும் வரவில்லை. அங்குள்ள மற்றொரு ஊழியரிடம் கேட்டேன், “லேட் ஆகும், பிறகு வா!என்றான்.
சரி என கூறி, சரியாக ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அவனைத்தேடிச் சென்றேன். அவன் இன்னும் வரவில்லை. நமக்குன்னு ஒரு பிரச்சனையென்றால் இப்படித்தான் கடவுள் சோதிப்பார்..இது தெரிந்த விஷயம் தானே.! அதற்குள் அவள் என்னை நிறைய முறை தொல்லை தந்த வண்ணம்.
மீண்டும் ஒரு மணி நேரம் கழித்துச் சென்றேன். அவன் அறையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஷம்சூல் எங்கே?” கேட்டேன்.

அவன் இன்று, இமெர்ஜென்சி லீவு, பிள்ளைக்கு உடம்பு சரியில்லையாம்..பதில் அவளிடமிருந்து. போச்சுடா என்றிருந்தது எனக்கு. இந்த லூசுக்கு வேறு பதில் சொல்லித்தொலைக்கனுமே.. நினைக்கும் போதே, தெலிஃப்பதி வேலை செய்தது. அவள் அழைத்தாள்.

என்னாச்சு?”

ஷம்சூல் வேலைக்கு வரவில்லை..அங்குள்ளவர்களிடம் கேட்டேன், யாருக்கும் தெரியாது என சொல்லிவிட்டார்கள். நாளை வரை பொறு.!என்றேன். அவள், விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். முணகினாள், வேலைக்கு வராத அவனைக் கெட்ட வார்த்தையில் திட்டினாள்.. என்னிடம் சலித்துக்கொண்டாள். சமாதானம் சொன்னேன், அவளால் பொறுமையாகவே இருக்க முடியவில்லை.


மறுநாள், எனக்கு முன், என் இருக்கையில் எனக்காகக் காத்திருந்தாள். சரி வா இருவரும் ஷம்சூல் அறைக்குச் செல்வோம் என சென்றோம். அவன் இருந்தான். காலைப் பசியாற, தட்டில் வைத்திருந்த மீ கொரிங்கை (நூடல்ஸ் பிரட்டல்)  பொறுமையாக சுவைத்த வாறு.. புருவத்தை உயர்த்தி என்ன? என்பதைப்போல் எங்களைப் பார்த்துக்கேட்டான். பதற்றத்துடன் விளக்கிக்கொண்டிருந்தாள் அவள். அவன் சாப்பிடுவதைக்கூட நிறுத்தாமல், “நானா? என்னிடம் கொடுக்கப்பட்டதா? எப்போ?” என கேட்டவாறு, மெதுவாக எழுந்து, கடிதங்கள் அடுக்கியிருக்கும் இடத்தில் எட்டிப்பார்த்தான்.


``நீ சாப்பிடு, எங்கிருக்கும் என்பதை மட்டும் சொல்லு, நாங்கள் தேடிக்கிறோம்..’’ என அவசரப்படுத்தினாள் அவனை.


``அங்க பாரு, இங்க பாரு..’’ என இடத்தை மட்டும் காட்டி விட்டு, சாப்பாட்டைத்தொடர்ந்தான். ரெஜிஸ்டர் கிடைக்கவில்லை. குப்பைத்தொட்டியில் கிளறினாள், மேலே அடுக்கி வைத்திருக்கும் டாக்குமெண்ட்ஸ் பெட்டிகளில் தேடினாள். (யாராவது அவ்வளவு உயரத்தில் எடுத்து வைப்பார்களா என்ன!!) அவனின் அனுமதி இல்லாமல் அவனுடைய பேஃகைத் திறந்தாள், தேடினாள். அவனின் ட்ரேய், ஒவ்வொன்றாகத்தேடினாள், பக்கத்தில் இருந்த அலமாரியை அலசினாள், நானும் எதையோ தேடுவதைப்போல் பாசாங்கு செய்தேன். ஒரு சின்ன ரெஜிஸ்டர் அவ்வளவு பெரிய கடிதக் குப்பையில் சுலபமாகக் கிடைத்து விடுமா என்ன!?
ஷம்சூலும், கைகளைக் கழுவச் சென்று விட்டான். மெதுவாக உள்ளே நுழைந்தான். ஒரு துண்டை எடுத்து, வாய் கை என மெதுவாக துடைத்துக்கொண்டே.கிடைத்ததா?” என்றான். அவனின் பதற்றமில்லாத இந்த செய்கை வேறு அவளை எரிச்சல் ஊட்டியது.

நீ, இப்படி ரெஸ்பான்சிபல் இல்லாமல் இருக்காதே.! உன்னுடைய சையின் தான் இருக்கு. நீ தான் சையின் பண்ணி ரெஜிச்டரை எடுத்திருக்கின்றாய். இதற்கு நீதான் பொறுப்பேற்கனும்!அவனை எச்சரித்தாள். அவன் அதைக் கொஞ்சங்கூட சட்டை செய்யவில்லை.

அப்படியா? உன்னுடையது ஏன் இங்கு வருது? சரியான முகவரி நீ கொடுக்கலையோ!?” அதே அமைதியான தொணியில் அவனிடமிருந்து பதில். நான் அந்தக் காட்சியை உற்று கவனித்துக்கொண்டிருந்தேன். அவள் நெருப்பில் இட்ட புழுவாய் நெளிந்துக்கொண்டிருந்தாள் படபடப்பாக.!


அவளின் சுபாவமே அப்ப்டித்தான். அவசரக்குடுக்கை. ஒரு நாள் இப்படித்தான், நான் அமர்ந்திருக்கும் இடத்தின் முன்னே உள்ள கண்ணாடிக்கதவு திறப்பதற்குள் வேகமாகச் சென்று முட்டிக்கொண்டாள். படார் என்று ஒரு சத்தம், நான் பதறிப்போனேன்.. அவளின் மூக்குக் கண்ணாடி உடைந்து நொருங்கியது. தலையில் காயம். மண்டையைப் பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டாள். எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு, சிரிக்கக் கூடாதுதான் ஆனால் சிரிப்பு வருதே, இது போன்ற கோமாளிகளை நினைக்கும் போது என்ன செய்ய!? விபத்தைப் பார்த்துச் சிரிக்கக் கூடாது ஆனால் அரக்கப் பறக்கச்சென்று எதிலுமே பொறுமையில்லாமல் பீடு நடைபோட்டு, முட்டி மோதுபவர்களைக் கண்டால் குழந்தைகள் கூட சிரிக்கும். 


அப்போதும் கூட அவள் ஆள் தேடினாள், யார் மேல் பழி போடலாமென. நல்ல வேலை கதவு என்னுடையதல்ல.! இருப்பினும் எனக்கு அறிவுறுத்தல் வந்தது, கதவு திறக்கும் முன் சென்று விட வேண்டாமென, வருவோர் போவோருக்கு எச்சரிக்கை வாக்குமூலம் கொடுக்க வேண்டுமென்கிற பைத்தியக்கார நிபந்தனையும் அவள் மூலமாகக் கொண்டுவரப் பட்டது. சரி செய்கிறேன் என்றுச் சொல்லி, பின்னால் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.!


சரி, ரெஜிஸ்டர் போஸ்டைக் காணவில்லை. நாம் அங்கு தானே விட்டோம்.!? அவனின் பதிலும் திருப்தியளிக்கவில்லை. அவள் புழுவாய். நான் ஒரு பாத்திரமாய்...


அவள் தான். நான் சரியான முகவரி தான் கொடுத்திருந்தேன், தவறிப்போய் இங்கு வந்திருக்கும், நீ என்ன செய்யனும்!, உங்களுடையது இல்லையென்றால் அந்த போஸ்ட்மென்னிடமே கொடுத்திருக்க வேண்டும்.. அதை நீ செய்தாயா?” அவளிடம்.
அவனுக்குக் கொஞ்சம் கூட பதற்றமே இல்லை. ஆமாம், நான் எடுத்தேன், என்னுடைய சையின் தான் இருக்கு. ஆனால் உன் பெயர்போலவே எங்களுக்கும் இங்கே ஒரு ஸ்டாஃவ் இருக்காங்களே, அவர்களுடையது என நினைத்து எடுத்திருப்பேன்....!
பதற்றத்தோடு அவள்.. இல்லை அங்கேயும், நான் கேட்டுப் பார்த்து விட்டேன், அந்த ஸ்டாஃவ்யிடமும் இல்லை..

அப்படியில்லையென்றால், அந்த கடிதம் மீண்டும் போஸ்ட் ஆபிஸிக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கும்.....அவனின் பதில்.

சரி விஜி, இப்போ நீ, இங்கேயே போஸ்ட் ஆபிஸூக்கு அழை.என்னை உருட்டி எடுத்தாள். நானும் அழைத்தேன். எல்லாத்தகவல்களும் கொடுக்கப்ப்ட்டது.. அங்கிருந்து பதில், “இல்லை, இன்னும் எங்களுக்கு அந்த ரெஜிஸ்டர் திருப்பி அனுப்பப்படவில்லை. அப்படி அனுப்பியிருந்தால் எங்க ஊழியர்கள் நிச்சயம் அதை கணினியில் பதிவு செய்திருப்பார்கள்.”...


மீண்டும் அவன் பக்கம் திரும்பி, “பார்த்தாயாஅங்கும் இன்னும் செல்லவில்லை. இங்கு எங்கேயாவது தான் இருக்கனும், தேடு தேடு இல்லையேல், நீ தான் அதற்காக நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்..சொன்னதுதான் போதும்ஷம்சூலுக்குக் கோபம் வந்தது..
கொஞ்சம் குரலை உயர்த்த ஆரம்பித்தான்.


``இது என்ன பணமா, எடுத்து வைத்துக்கொண்டு உன்னிடம் வித்தைக் காட்டுவதற்கு! நாக்கு வழிக்கக்கூட உதவாத அந்த ரோட் டாக்ஸை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவதாம்.!? எங்கேயாவது போயிருக்கும், கிடைத்தால் கொண்டு வந்து கொடுக்கிறேன், இடத்தைக் காலி பண்ணு, எனக்கு நிறைய வேலைகள் இருக்கு, என ஓட்ட ஆரம்பித்தான்.

சரி நான், உன்னுடைய போஸ்சைத் தொடர்புக்கொள்கிறேன்.!என முணகிக் கொண்டே, என்னோடு நடந்தாள் எங்களின் அலுவலகம் நோக்கி.. அவனும், “உன்னால் முடிந்ததைச் செய், இனி எதுவென்றாலும் போஸிடமே பேசிக்கொள்..எனக் கூறிகணினியை ஆன் செய்துக்கொண்டிருந்தான்.


கோபத்தில் என்னன்னமோ உளறினாள்அவனை என்ன பண்ணுகிறேன் பார், என என்னிடம் மங்கம்மா சபதமெல்லாம் போட்டுக் கொண்டே வந்தாள்.....


நான் மௌனமாக அவளின் வசவுகளைக் கேட்டுகொண்டே வந்தேன்..


இதை வாசிப்பவர்களுக்கு, இன்னேரம் ஒரு கேள்வி தோன்றியிருக்குமே!?
ஆம், அந்தக் கேள்வியை நான் அவளிடம் கேட்டவுடன் தான் அவள் அடங்கினாள். வாயை மூடினாள்.


(
ரெஜிஸ்டர் கிடைத்துவிட்டது - செவ்வாய்க் கிழமை மாலையில்) 


சென்ற மாத மின்னல் வாரப்பத்திரிகையில், போட்டிக் கதைகளுக்குத் தேர்வாகி பிரசுரமான கதைகளில் ஒன்று.. எனது சிறுகதை...

வெள்ளி, ஜூலை 20, 2012

ஒற்றை எழுத்து சொற்கள்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்



இவை எனக்கான சேமிப்பு... (நன்றி ஸ்மிலி பிரபு திருச்சி) 

வட்ட மேசை

ஒரு வார
முதல் பக்க நாளிதழ்
செய்திகளை வாசித்து
மீள்பர்வை செய்துகொண்டேன்

நாட்டு அரசியலில் நிகழும்
மாற்றங்கள் குறித்து
தெரிந்து வைத்துக்கொண்டேன்

அலுவலக அரசல் புரசல்
செய்திகளையும்
சேகரித்துக்கொண்டேன்

நாட்டு நிலவரம்
சாலை நெரிசல்
நித்தமும் நிகழும்
வாகன விபத்துகள் குறித்து
தகவல் தெரிந்துக்கொண்டேன்

போன மாதம்
மருத்தவமனையில் சேர்க்கப் பட்ட
ஜேம்ஸ்சின் நிலை குறித்து
அறிந்து வைத்துக்கொண்டேன்

கூட்டுபவர்கள்
பெருக்குபவர்களின்
பிரச்சனைகளை உள்வாங்கிக்கொண்டேன்

என்னை சதா
`டார்ச்சர்’ செய்யும்
ஒரு மேலதிகாரியைப் பற்றிய
சம்பவங்களை மனதில்
ஓடவிட்டுக்கொண்டேன்

சுற்று வட்டார உணவகங்களின்
அறுசுவை உணவுகள் குறித்து
சில ‘பில்டாப்’கள்
செய்துவைத்துக் கொண்டேன்

இன்று
உயர் அதிகாரியோடு
சாப்பிடச் செல்கிறோம்

ஒரே மேஜையில் சாப்பிடும்போது
பேசுவதற்கு ஒன்றுமில்லாமல்
போய்விடக்கூடாதே..

அங்குதான்
அவர்
நாங்கள்
சொல்வதைக்கேட்பார்..

வியாழன், ஜூலை 19, 2012

நேற்றைய நான்

நேற்றைய நீ
இன்றைய நீயாகவே இரு
நாளைய நான்
இன்றும் இல்லை
நேற்றும் இல்லை

நேற்றைய என்னை
நீ என்ன தேடுவது?
நானே தேடுகிறேன்
பிரம்பால் அடித்து
மரண தண்டனை கொடுக்க

அங்கிருந்து தான் வந்தேன்
ஆனால், அது நான் இல்லை
கடந்து போன நாளில்
நாளும் இல்லை
நேரமும் இல்லை
நானும் இல்லை

செல்வேன் இன்னும்
பல அவதாரங்களில்
பொழுதுகளை
நாளையாக்கிக் கொள்ளும்
நேற்றைய நான்


புதன், ஜூலை 18, 2012

என்னுள் எழும் சில வினாக்கள்??

சில கேள்விகள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும், அவைகள்தான் சிலவேளைகளில் உணர்வுக் கொந்தளிப்பாக  விஸ்வரூபம் எடுக்கும்.


இதோ இவைகள் :-

எல்லார் மீதும் எரிந்து விழும்போதுதான் இலக்கியவாதி என்கிற அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்கிற அற்ப சிந்தனை வருவது எதனால்?


யாருமே அவரை வாசித்திருக்கமாட்டார்கள், ஆனால் அவர் நாடுபோற்றும் இலக்கியவாதி. எப்படி?


இணையத்தில் எழுதினால் எழுத்தாளர்கள் இல்லையா?


கதை எழுதினால்தான் எழுத்தாளரா?


பேட்டி எடுக்கப்படும் இலக்கியவாதிகளிடம், அம்மாவிற்கு பிடித்தவை, மனைவிக்கு பிடித்தவை, கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்கிற கேள்விகளையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு, இலக்கியதைப் பற்றி மட்டும் பேசினால் நல்லா இருக்குமே.! இலக்கியப் புரிதல் பேட்டி கொடுப்பவரை விட, பேட்டி எடுப்பவருக்கு அவசியம்.. சரியா?


திட்டுகிறவர்களை திட்டிவிடலாம். பாராட்டுகிறவர்களை என்ன செய்யலாம்?


சினிமா பாடல்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு, பேச்சின் போது இடையிடையே அதில் வரும் கருத்தினை நுழைத்துப் பேசுகிறவர்களை பெரிய இலக்கியவாதியாகப் பார்க்கப்படுவது எதனால்?


மேடையில் முழங்கிவிட்டால் பெரிய இலக்கியவாதியா?


தமிழ் எழுத்துக்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு, தமிழ் பற்றில் உச்சத்தில் இருப்பதைப்போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறவர்களைப் பார்த்தால் எனக்கு வெறிவருகிறது. ஏன்?


நாத்திகம் பேசுகிறவர்கள் பெண்களின் நிலையை யோசித்திருக்கின்றார்களா? பெண்களால் நாத்திகம் பேசமுடியாது என்பதைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாமல் இருந்தால், பல பெண்கள் மனநோயாளியாகியிருப்பார்கள்! யோசித்துப்பாருங்கள்!?


பரிசு பெற்ற சிறுகதை/நாடகம் ஒரு சினிமா படக் கதையின் காப்பி என்கிற கருத்தை நாம் முன்வைத்தால், ஏன் பரிசு கொடுக்கக்கூடாது!? எத்தனையோ பேர் அந்த சினிமா படத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள்!! (சினிமா பார்க்க மாட்டார்களாம், இவர் எழுதிய கதை/நாடகத்தை உட்கார்ந்து கேட்பார்களாம், படிப்பார்களாம்.. இது எப்படியிருக்கு?) சரி அப்படியே சினிமா கதையாக இருந்தால் என்னவாம்!? அது போன்ற கதைகளை மீண்டும் எழுதினால் தப்பா? கதை எழுதுவது எவ்வளவு கடினமான வேலை... பேனா பிடித்து எழுதிப்பாரும், பிறகு தெரியும்!!? இப்படியெல்லாம் வெட்டியாக எழுதுபவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் செய்பவர்களை  என்னவென்று சொல்வது?


இலக்கியத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது எது? பல இலக்கியவாதிகளிடம் கேட்கப்பட்ட கேள்வி? இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லலாம்.?  கஷ்டமான கேள்விதானே.!?


தமிழ் மொழியில் மாஸ்டர்/ பி.எச்.டி பட்டம் வைத்திருப்பவர்களுக்கு, இலக்கியப் புரிதல் வந்துவிடுமென்று நம்பலாமா? நான், ஒரு தமிழ் பேராசிரியர் ஆய்வு செய்த கதைகளைக் கவனித்தேன், அவர் ஒரு அற்புதமான கதையில் ஒன்றுமேயில்லை என்று சொல்லி ஆய்வு செய்திருந்தது  இன்னமும் எனக்கு வருத்தம்.


இலக்கியப் புரிதல் எனபது ஒரு ஜென்.. ஆன்மிகப் புரிதல் போல். வெளியே சொல்ல முடியாத ஒரு உணர்வு அது. எல்லோருக்கும் வந்து விடாது. ஏற்றுக்கொள்கிறீர்களா?


மாற்றத்தைக் கொண்டு வர முடியாத ஒரு துறை, நம் இலக்கியத்துறை (தமிழ்). வாய் சவுடால்களும் வெட்டிப்பேச்சுகளும்தான்  அதிகம் இங்கே.!?

ஏதோ முட்டாள் போல் உளறுவதாக இருந்தால், மன்னிக்கவும். என் மனதில் பட்டது.  ஏற்றுக்கொள்ளமுடியாதவர்கள் அமைதி அமைதி...