வெள்ளி, டிசம்பர் 02, 2011

சில உணமைகள் நம்மைச்சுற்றி

ஆசைகளைச் சுமந்து சுமந்து
அடக்கி வைத்து, ஆசைகளைத்துறந்த துறவி போல்
காட்டிக்கொண்டு, ஆசைகள் விஸ்வரூபம் எடுக்கும் போது
அதை மறைப்பதற்கு கொடுக்கப்படும் சப்பைக்கட்டுகளின்
உளறல்களின் போது....

ஆணுக்கு, பெண்ணாசை..
பெண்ணுக்கோ, அவன் தன்மேல் ஆசை வைக்க வேண்டும், என்கிற ஆசை
ஆசையால் பல இம்சை.. அணல் மூச்சு, மயக்கம், பெருமூச்சு, ஏக்கம், வெறுப்பு, காமம், கோபம்.. அனைத்தையும் அமுக்கிக்கொண்டு போடும் நாடகத்தில் பலியாகும் சில ஏமாளிகளின் உணர்வுகளின் போது..
கண் ஒரு இடத்தில், பேசுவது ஒரு நிகழ்வை, காது ஒரு இடத்தில், மனமோ வேறொரு இடத்தில்,, நாசமாகும் சூழல். புண்ணியமேயில்லாத உரையாடலில்

ஆளுக்கு ஆள் மாறுபடும் சுயரூபத்தின் வெளிப்பாட்டை
நன்கு அறிந்தும், அறியாததைப்போல, நமது வேடத்தை நாமே வெறுக்கும் போது

சோம்பேறித்தனத்தில் திளைத்து
சொகுசு வாழ்வு வேண்டி
உழைப்பவர்களை உதாசினப் படுத்தி
வெட்டி வேதாந்தம் பேசி
ஊரையும் உறவை கெடுக்கும், உரையாடலின் போது
முகத்தில் அரைந்தாட் போல் பேச இயலாத
தருணத்தில்.....

பெண்ணின் அங்கங்களை அக்கு அக்காக வர்ணித்து
அவர்களின் புடவைகளைக் கிழித்துப்பார்த்து
உள்பாவாடைகளை தூக்கிப்பார்த்து
ரவிக்கைகளுக்கு ரிப்பன் கட்டி
தொப்புழில் கோலி விளையாடி
எழுதிய கவிதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்
கவிஞன்.. பெண்ணே நீ வேசி’ என
அப்படியென்றால் அவன் யார்..? கோபம் தான், ஒன்றுமே செய்யமுடியாமல்..

தமக்குச் செலவில்லாமலேயே,
அடுத்தவர் பணத்திலேயே
அடுத்தவரின் கதையைப் பேச அழைக்கும்
தொ(ல்)லைபேசி அழைப்புகளில்
அடுத்தவரின் நேரத்தை திருடும் போது ..

ஆளைப்பார்த்தா ஒரு பேச்சு
பார்க்கலன்னா ஒரு பேச்சு
தெரிந்தவரிடம் ஒரு மொழி
தெரியாதவரிடன் ஒரு மொழி
ஆண்களிடம் ஒரு குழைவு
பெண்களிடம் ஒரே ஜொள்ளு
வார்த்தை ஜாலங்கள்
காப்பிப் பதிவுகள்
என்னென்னமோ நாடகங்கள்
படிய வைக்க
மேதாவிததனத்தை காட்ட

ஆளை மயக்க போடும் ஆட்டம்,
காரியம் நடக்க போடும் நாடகம்
திரிக்கப்பட்ட கதைகளில் உதாசினப்படும் உள்ளங்கள்
பச்சைச் சிரிப்பும் ஊலைக்கும்பிடும்
பந்தா பகட்டும்
இருப்பதையும் இல்லாததையும்
ஒண்ணுக்குமே உதவாத காரியத்திற்காக
ஏலம் போடும் அவலம்..

காயப் படும்போதெல்லாம் ஆள் தேடி
மருந்திட்டு, காயம் ஆற ஆற கீறல்கள் வேண்டி
சாக்கடையில் விழுந்து..
நாற்றமெடுத்த நாயாய்
மீண்டு வந்து
மீண்டும் முதல் காயமே மேல் என்கிறபோது

திண்பண்டங்கள் மீது தீராத ஆவல்
காட்டிக்கொள்ளாமல் தொடாமல்
ஆளில்லா சமையத்தில் வெழுத்துக்கட்டி
இன்னொரு சுற்றுப் பெருத்து
பருத்திபோல் வெடிக்கக் காத்திருக்கும் போது
அடுத்தவருக்கு அறிவுரை...

கள்ளக்காதலில் தீராத பதிபக்தி
நட்பாம்..
பெண்பிள்ளைகளின் மாதப்போக்கு விவரம்
தமக்கு வரும் வயிற்று வலியின் விவரம்
போடும் ஃப்ராக்களின் அளவு, பாரம், வர்ணம்
குழந்தைகளின் கல்வி தேர்ச்சி நிலை
படுக்கையறை அம்பலம்
அவள் கனவில் இவன்
இவன் கனவில் அவள்
நினைத்தாலே, மணிக்கனக்காக தொலைபேசியில்
நினைத்த மாத்திரத்திலே சாட்டிங் வசதி
குடும்ப நிகழ்வுகளின் கொண்டாட்டங்கள்
அம்பலப்படுத்தி அசிங்கப்பட்டு, சோறு போடுபவனையும்
காவல் காப்பவனையும்
கேவலத்திற்குள்ளாக்கி...
ஆண் நட்பாம்(!) அவளுக்கு, பெண் நட்பாம்(!) அவனுக்கு

பொறுப்பில் இருந்து தவறுவது
அசம்பாவிதங்கள் நிகழும் போது
யாரையாவது குறைகூறுவது
எல்லா அவலங்களுக்கும், கழுதையாய் பொதி சுமக்க
யாரையாவது தேடுவது
சோம்பிக்கிடப்பது
தகுதி குறைந்தாலும்
மேல் நிலையிலே இருப்பதைப் போன்ற நினைவிலேயே வாழ்வதும்..

ஆடு கோழி அறுத்து
சுருட்டு பீடி பீர் குடிக்கும் சாமியை மறைமுகமாக
கும்பிடுவது, சீனன் கோவிலிலும் லாட்டரிக்கு
இரவில் ரத்த தானம் செய்து
கும்மாளமாக இருந்துவிட்டு
யாருக்காகவோ.. நான் சுத்த சைவன் எனும் போது

ஆடி அடங்கி நாடி தளர்ந்து, கூன் விழுந்து முதிர்ந்த நிலையிலும்
கூட, என்னால் முடியுமென்கிற் எரிச்சல் தன்னம்பிக்கையில்
எதுவுமே மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல்
உயிரோடு சாகடிக்கும் போது

இப்படிப்பல உண்மைகள், என்னால் உணர்ந்து உள் வாங்கியும் கூட
அதை வெளிப்படுத்த முடியாமல் தவிப்போடு நாடகத்தின் பாத்திரமாக


நானும்..








இப்படியுமா?

எங்களின் அலுவலகம், ஒரு சேல்ஸ் அண்ட் செர்வீஸ் செண்டர். அங்கு தினமும் பல விதமான மனிதர்கள் வருகை புரிவார்கள். ஒவ்வொருவரும் ஒரு விதம். பயங்கர காமெடியன்களையும் சந்திக்கலாம். இன்று ஒரு குடும்பம் (கணவன் மனைவி)  வந்திருந்தது.

தமது பழுதடைந்த பொருளை, பழுது பார்க்கக்கொடுத்து விட்டு, நான் இருக்கும் முன் பக்க அறைக்கு வந்து உட்கார்ந்துக்கொண்டார்கள்.

அங்கு தான் பல வசதிகள் இருக்கும், குடிக்க நீர், பெரிய தொலைகாட்சியில் சினிமா படம், நல்ல வசதியான சோஃபா செஃட்டுகள், பளிங்கு போல் பெரிய மேஜை, அதன் மேல் அலங்கரிக்கப்பட்ட பூ.. சுற்றுச்சுவரிலும் பெரிய பெரிய போஸ்டர்கள், அதன் உள் அழகான விளக்குகள்,  தலைவர்களின் புகைப்படங்கள் என மிக அழகாக, சுத்தமாக அதே வேளையில் சுகமான நறுமணத்துடன் (என் பெர்ஃப்யூம்)   மிகரம்மியமாக இருக்கும் அச்சூழல். அங்கே ஒரு விதமான அமைதி நிலவுவதால், அங்கு வந்து அமர்ந்துகொள்ள பலருக்குப்பிடிக்கும்.


அங்கே வி.ஐ.பிக்கள் அமர்ந்து சிறிய மீட்டிங் போட்டு பேசுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம். அதை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்கிற பயிற்சியிற்குக் கூட என்னையும் என் சக ஊழியரையும் அனுப்பி வைத்திருக்கிறது எங்களின் நிறுவனம்.

அப்படியிருக்கையில், இன்று ஒரு தம்பதியர் அங்கே வந்து அமர்ந்துக்கொண்டு, சாப்பாட்டு நேரமாதலால், (லே கார்டன் ரேஞ்சுக்கு)அடுக்கடுக்காக உணவுகளை பதார்த்தங்களோடு கொண்டுவந்து,  அவைகளை அந்த பளிங்குபோன்ற மேஜையின் மேல் வைத்து, கையோடு கொண்டுவந்த துணி, பேக் முதலானவற்றை ஒரு ஓரமாக கடாசிவிட்டு, மங்கு, கரண்டி (சீனர்கள், உண்ணும் போது பயன்படுத்துபவை) போன்றவற்றை உருட்டிக்கொண்டு (க்லிங், மங்.. சொங்) என்கிற சத்தங்களோடு ஒரு விருந்தை நடத்திக்கொண்டிருந்தார்கள்..!!

இதை நான் கவனிக்க வில்லை. ஒரு முக்கியமான மெயில் அடித்தாகிய பிறகு அதனின் பிழைத்திருத்தங்களைச் சரி செய்துகொண்டிருந்தேன்.

@#%^& என்ன ஒரு மாதிரியான மூலிகை வாசம் வருகிறதே!?  என நான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து தலையை உயர்த்தி எட்டிப்பார்த்தால்.. இருவரும் ‘’மச்சான் உனக்குக் கொஞ்சம், இந்தா புள்ள உனக்கும் கொஞ்சம்’’ என்கிற பாவனையில், பந்திபோஜனம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பார்த்தவுடன் நடுங்கியே போனேன்.  பெரிய அதிகாரிகள் யாராவது தற்செயலாக கீழே வந்து, இக்காட்சியைக் காண நேர்ந்தால், என்ன ஆவறது, என் கதை.!?  கந்தல்தான் போங்க..

உடனே அவர்களிடம் சென்று,  ஆண்டி இது கண்டீன் அல்ல, இங்கு உணவுகள் உண்ணக்கூடாது, தயவுசெய்து அப்புரப்படுத்துங்கள். என்றேன். (கஸ்டமர்களிடம் பணிவாக பேசவேண்டும், பயிற்சியில் போதிக்கப்பட்டது(!) எவ்வளவு கோபமாக இருந்தாலும். )

என்னை மேலும் கீழும் நோக்கிய அந்தப் பெண்மணி, அவருக்கு உடம்பு சரியில்லை, வெளி உணவு உடம்பிற்கு ஆகாது, கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள், முடித்துவிடுகிறோம், என்றார்.

பிறகு என்ன செய்வது. காத்திருந்தேன். முடித்து விட்டு,  பாத்திரங்களையெல்லாம் ’கடமுடா, கடமுடா’ என்கிற சத்ததுடன் கழுவ எடுத்துச்சென்றார். அவன் குச்சியில் பற்களைக் குடைந்துக் கொண்டிருந்தான்.

அவள் பாத்திரங்களையெல்லாம் கழுவிக்கொண்டு வருவதற்குள் எனது பொறுமை சோதனைக்குள்ளானது, மணி சரியாக 12.45ஐ நெருங்கிக்கொண்டிருந்தது, எல்லா பெரிய `தலை’களும் கீழே இறங்கும் நேரமது, மனது திக் திக் என்றது. (திகில்).

அவள் ஆடி அசைந்து வந்தாள், முகத்தைக் கடு கடுவென வைத்துக்கொண்டு, சீக்கிரம் சுத்தம் செய்து கொடுக்க முடியுமா? என்று கொஞ்சம் எரிச்சலாக சத்தம் போட்டு விட்டேன்.  அந்த மேஜை முழுக்க அவர்களின் பொருட்கள் தான். எடுத்தாள், அடுக்கினாள், வைத்தாள் பேக்’கைத் தூக்குகிறாள்,,,,, மேலிருந்து எங்க அழகு மன்மத போஸ், மெதுவாகக் கீழே இறங்கி வந்தார்..

இடம் சுத்தமானது. ஆனாலும்... சி.சி.டீவியில் பார்த்திருப்பாரோ!!?  பார்த்தால் என்ன.! சோறு, மங்கு கரண்டி எல்லாம் தெரியாது, மனிதர்கள் மட்டுமே தெரிவார்கள், என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன். இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். !!

( ஆமாம், சீனர்கள் (சென் செயி) சமையலின் மணம் இருக்கே..வாயில் நீர்.. ஹம்ம்ம்ம் எனக்கும் கடுமையான பசி வந்து விட்டது)