சனி, மார்ச் 08, 2014

வெண்ணிற இரவுகள் - என் பார்வையில்..


தியேட்டர் வெரிச்சோடிக்கிடந்தது. டிக்கட் எடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமெல்லாம் ஏற்படவில்லை. யாருமே இல்லை நான் டிக்கட் எடுக்கச் சென்றபோது.

என்ன படத்திற்கு டிக்கட் வேண்டும்?  என்று கேட்டார், டிக்கடி விற்பனைக் கவுண்டரில் அமர்ந்திருந்த பணிப்பெண்.

வெண்ணிற இரவுகள் என்றேன். ரிங்கிட் மலேசியா பன்னிரண்டு என்றார். கட்டினேன். கனிணி ஸ்கிரீனில் எந்த இடம் வேண்டுமென்று தேர்வு செய்யச்சொன்னார் அவ்வூழியர்.

இதுவரையில் எனக்கு திரைப்படங்களுக்கு டிக்கட் எடுக்கின்ற அவசியம் இருந்ததில்லை. எப்போதும் மகன் அல்லது கணவர் எடுத்துவிடுவார்கள், ஆன்லைனில். நேற்று எடுக்கச்சொல்லி கேட்டபோது, ஒரு மாதிரியாகச் சிரித்துவிட்டு, `போ, ஆன்லைனில் டிக்கட் எடுக்கவேண்டிய அளவிற்கு இப்படத்திற்கு ஆட்கள் முட்டிமோதி நிற்கமாட்டார்கள். படம் ஆரம்பிக்க இரண்டு நிமிடம் இருக்கின்ற போது கூட செல்லலாம். டிக்கட் கிடைக்கும்.’ என்றார்கள். நிலைமை அப்படியேதான் ஆனது.

ஆக, டிக்கட் எடுத்த கையோடு அமர்கின்ற இடத்தையும் நாமே தேர்வு செய்யவேண்டும்.  அவர்கள் காட்டிய அந்த ஸ்கிரீன்’ஐ பார்த்தவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி. காரணம் அங்கே இரண்டே இரண்டு இடங்களில்தான் ஆட்கள் இருப்பதாகக் காட்டியது அந்த ஸ்கிரீன். சரி, எதாவதொரு இடத்தில் போடு, என்றேன்.

என்ன, யாருமே கவனம் செலுத்திப் பார்க்க நினைக்காத படத்தையா நாம் பார்க்கச்செல்கிறோம். ! என்னமோ, பார்ப்போம்.! ஆஹா ஓஹோ என்கிறார்களே..! என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டு, மலேசியத் திரைப்படங்களின் மேல் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை ஒரு ஓரமாகத் தள்ளிவைத்துவிட்டு, மனதை மிக அகலமாகத்திறந்து வைத்துக்கொண்டு தியேட்டர் உள்ளே நுழைந்தேன்.

மூன்றே பேர்தான் அமர்ந்திருந்தோம் அவ்வளவு பெரிய அரங்கில். அமைதியாகவே ஆரம்பித்தது அத்திரைப்படம்.

படம் ஆரம்பிக்கின்றபோது மலேசியப்படம்போலவே இல்லை. தமிழகத்திரைப்படம்போலவே அழகான காட்சியமைப்புகள் மென்மையான இசை என நகர்ந்தது.  பேச ஆரம்பித்தார்கள். எனக்கு வெறுப்புத்தட்ட ஆரம்பித்தது. வசனங்களில் ஒரு அழுத்தம் இல்லை. அழுத்தம் என்றால், புராணக்கால படங்கள் போல் தமிழில் பேசுவதல்ல. அதாவது, சில காட்சிகளைப் பேசாமல் புரியவைப்பது. நல்ல வசனமாகப்பேசுவது. நல்ல அழுத்தமான வரிகளைப் பேசுவது. உதாரணத்திற்கு; பேசியதையே திரும்பத்திரும்ப பேசுவது. குறிப்பிட்டுச்சொல்ல... `இப்போ உனக்கு என்ன?.. உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எதுக்கு? சும்மா இரு..  அய்யோ.. , என்னாச்சு.? சொல்றத கேட்கிறியா? பேசாம இருக்கியா? காசு கொடு.. என்று தர்க்கம் செய்கிற வசனங்கள் மீண்டும் மீண்டும் வருவது .. அதுவும் சங்கீதா காட்டுக்கூச்சல் போடுவது போல் அமைத்திருப்பது, படுபோர்.
இது நடைமுறையில் நாம் பேசுகிற பாணிதான் என்கிறபோதிலும், திரைப்படம் என்று வருகிறபோது, வசன அமைப்புகளில் சில நேர்த்திகளை ரசிகனாகப் பட்டவன் எதிர்ப்பார்ப்பான். அது இல்லாத பட்சத்தில், எழுந்து ஓடிவிடலாமா என்கிற சிந்தனை வரும்.

ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. காத்திருந்தேன். இரண்டு மணிநேர படம். படம் முழுக்க இப்படியேவா இருக்கப்போகிறது.!. காட்சிகள் மாறலாம். அது நம்மைக் கவரலாம், என்கிற சிந்தனையுடன் தொடர்ந்து பயணித்தேன் வியட்நாமிற்கு.

ஆஹா, அருமை. கதையை அழகாகச் சொல்லியிருக்கின்றார்கள். நடிப்பு ஒளிப்பதிவு, காட்சிகள் என படம் அற்புதமாக நகர்கிறது. வசனத்தில்தான் சில கோளாறுகள். அதுதான் மலேசிய பாணி பேச்சு என்றால் நான் என்ன செய்ய.? எனக்கு அந்த பாணி பரிச்சயம் இல்லை.

வெளிநாடு என்றால், எங்கெங்கோ சென்று பல திரைப்படங்களை தமிழ்நாட்டுத்திரைப்படங்கள்  எடுத்துக் காட்டியிருப்பினும், வியட்நாம் காட்சிகள், அங்கே தமிழர்கள் இருக்கின்றார்கள்/வாழ்கின்றார்கள் என்று சொன்ன முதல் படம் என்றால் அது இந்த வெண்ணிற இரவுகள்தான். ஒரு மலேசியத்திரைப்படத்தில் இம்முயற்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இருப்பினும், இங்கேயும் சில குளறுபடிகளைக் காணலாம். அதாவது, திரைப்படம் ஸூட்டீங்க் எடுப்பதை மக்கள் ஒரு ஓரமாக நின்று பார்ப்பதைப்போன்ற காட்சிகள் படத்தில் வந்துள்ளதைத் தவிர்த்திருக்கலாம். . தகுந்த திட்டமிடல் இல்லாமல், ஷூட்டிங் நடத்திருப்பதை இது காட்டுகிறது. சில காட்சிகளில், வியட்நாம் மக்கள் ஸூட்டிங் நிகழ்த்தப்படுகிற தளத்தின் காட்சிகளை இரசித்துப்பார்ப்பதையும் சேர்த்து படத்தில் இணைத்திருக்கின்றார்கள். கதை நகர்தல், எடுத்தவிதம், நடிப்பு என எப்படி அற்புதமாக விருவிருப்பாக நகர்த்திச்சென்றிருந்தாலும் இதுபோன்ற காட்சிகள் தலைகாட்டுகிறபோது, ரசிகன் நிஜத்தன்மையை மறந்து, நிழல்படம் பார்க்கின்றோம், என்கிற தாக்கத்திற்குள் நுழந்துவிடுகிறான். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சம்.

இசை மற்றும் பாடல்களும் அற்புதம். படம் முழுக்க வியாப்பித்திருக்கும் இசை மிக ரம்மியமாகவே ரீங்காரமிடுகிறது.

ஒளிப்பதிவு என்று எடுத்துக்கொண்டால், வியட்நாம் கிராமிய சூழலை இன்னும் கொஞ்சநேரம் நமக்காகக் காட்டியிருக்கலாமே என்கிற ஏக்கத்தை நம்மிடம் விட்டுச்செல்கிறது சில காட்சியமைப்புகள். மாடு, சக்கரவண்டி, விவசாய நிலம், கன்னத்தில் சந்தனம் பூசிய மக்கள், சொக்கா மற்றும் லுங்கி அணிந்த கலாச்சார சூழல், காய்கறி சந்தை, சில தெருவோர வியாபார காட்சிகள், உணவுக்கடைகள், டீக்கடை சூழல், கோழிசண்டை, படகுசவாரி என இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் காட்டி இருக்கலாம் என மனம் ஏங்குகிறது. பரவாயில்லை. அது என்ன டாக்குமெண்டரி சித்திரமா.? கதைக்குத்தேவையானதை மட்டும் காட்டிச்சென்று, கதையோடு மீண்டும் இணைந்து கொண்டார்கள். அற்புதம்.

கதையைப்பற்றி நிறைய சொல்லலாம். இதுவரையில் இப்படிப்பட்ட கதையினை எந்தத் திரைப்படத்திலும் சொல்லவில்லை, என்று சொல்வதற்கு இல்லை. இருப்பினும் அதை நகர்த்திச்சென்ற விதம் நிஜமாலுமே பாராட்டுக்குரியது. பாசம் காதல் என்று ஏமார்ந்த பெண், தான் கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்கு  கதாநாயகனைத்தேடி வியட்நாம் செல்கிறாள். அங்கே அவர்கள் இருவருக்கும் நடக்கின்ற கூத்துகளைத்தான் கதையை பின்நோக்கியும் முன்நோக்கியும் காட்சியாக்கம் செய்திருக்கின்றார்கள். அதில் காதலும் கசிகிறது. மிக ஜாலியாக சுவாரஸ்யமாக நகர்கிறது காட்சிகள்.

காதல் இருப்பினும். இது காதல் கதையும் அல்ல. வேறுமாதிரி அழகாகச் சொல்லியிருக்கின்றார்கள். ஜாதி பிரச்சனை வருகிறது. அதையும் ஒரே காட்சியில் மிகவும் சாதூர்யமாக இணைத்துவிட்டு, காட்சியை முடித்திருக்கின்றார்கள். (மீசையை முறுக்கிக்கொண்டு அரிவாள் சண்டையெல்லாம் இல்லை.) அதிகம் பேசப்படவேண்டிய அதேவேளையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியமில்லாத கரு இது என்பதால் ஊறுகாய்போல் தொட்டிருக்கின்றனர். இங்கே `அது’ இருக்கு ஆனா இல்லை என்பதால்...

பல்கலைக்கழகத்தில் நடக்கின்ற ரெஃகிங் தொடங்கி, அங்கே நடைபெறும் காட்சியாக்கங்கள் அனைத்தும் மண்மணம். யதார்த்தம். இங்குதான் மலேசியபாணியை உலக மக்களும் கண்டு ரசிக்கலாம். இதுதான் எங்களுக்கே உரித்தான பாணி. கொஞ்சங் கூட தமிழ்நாட்டு தாக்கமில்லாமல் காட்சிகளை அமைத்திருப்பது அற்புதம்.

நடிப்பில் மஹேன், என மனதில் நிற்கிறார். சில இடங்களில் குறும்பு, சில இடங்களின் காமடி நடிகர்கள்போல் நகைச்சுவை, சில காட்சிகளின் குணச்சித்திர நடிப்பு வழங்கினாலும், இறுதியில் பரிதாபத்திற்குரிய கதாபாத்திரமாகவே மனதில் அரியணையிட்டு அமர்ந்துவிடுகிறார்.  எல்லா குணாம்சமும் நன்கு பொருந்திவிடுகிற கதாப் பாத்திரமாகவே மஹேன் திகழ்கிறார். யதார்த்த நடிப்பு. நடிப்பு என்பதைவிட பாத்திரத்திற்கு சிறந்த தேர்வு. நல்ல எதிர்காலம் உண்டு அவருக்கு. வாழ்த்துகள்.

சங்கீதா மலேசிய நடிகைதானா என்கிற சந்தேகம் வந்துவிட்டது எனக்கு. தமிழ்நாட்டு சினிமா நடிகைகளை கண்முன் நிறுத்துகிறார். சுத்தமான நடிப்பு. நடிப்பில் கொஞ்சம் கூட போலித்தனம் இல்லை. அழுகை , சிரிப்பு, கோபம் என எல்லாமும் அற்புதம். கண்கள் பேசுகின்றபோது காஜல் அகர்வால் மனக்கண்முன் தோன்றி மறைகிறார். அழகுப்பதுமை. வாழ்த்துகள்.

ஒரே ஒரு காட்சியில் லோகன் வருகிறார். அடடா..  பக்குவப்பட்ட நடிப்பாற்றால் திறன் அவரிடம். அந்தக் காட்சிதான் படத்தின் திருப்புமுனை. கொஞ்ச நேரம்தான் என்றாலும் மனதில் பதிகின்றார்.  சிறப்பு.

படம் முழுக்க நாயகனும் நாயகியுமே மாறி மாறி காட்டப்படுகிறார்கள். சிலர் முகங்காட்டினாலும் மனதில் நிற்கவில்லை.  திரைக்கதைக்கு இந்தச் சின்ன கரு போதாதுதான். இருப்பினும் அதை மிக நேர்த்தியாக நகர்த்திச்சென்றவிதம் ஆர். பிரகாஷ்’ஐ சேரும். பாராட்டுகள்.

நல்ல படம். நம் நாட்டு தயாரிப்புகளின் மேல் நம்பிக்கை லேசாக எட்டிப்பார்க்கத்துவங்கியிருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கம்.  தொடரட்டும் முயற்சிகள்.

திரையரங்குகளில் சென்று பாருங்கள். நிச்சயம் ஏமாரமாட்டீர்கள்.