ஞாயிறு, ஜூன் 16, 2013

பற்கள் தெரியலாம் உணர்வு ஒன்றாகுமா?

கேக் அலங்கரிக்கும் வகுப்பு இங்கே மிகப்பிரபலம். ஒரு கேக்’ஐ செய்து, பின் அதைப் பலவடிவங்களில் வெட்டி, கோவில், டோனல்டக், கார், கோபுரம் என இன்னும் பலவடிவங்களில் செதுக்கி அதன்பின் மேலே வர்ண கிரீம்களால் அலங்கரிக்கவேண்டும். 

கட்டனம் கொஞ்ச நஞ்சமல்ல - அதிகம்தான். 

எனக்கு ஒரு டவுட்டு. அலங்கரிப்பது என்பது அவரவர்களின் கிரேயேட்டிவிடி’யைப் பொருத்தது. ஒருவரின் கிரியேட்டிவிடியை நாம் படித்துக்கொள்ளமுடியுமா? அவரால் கற்றுக்கொடுக்கத்தான் முடியுமா?

சரி முடியும் என்றால்.. அவர் செய்த கேக் ஒன்று அழகாக உள்ளது. டோனல்டக். அதை வெட்டி ஒட்டி, கிரீம்களால் வர்ணமடித்துள்ளார். அழகாக வந்துள்ளது. அந்த ஒருவகையை அவர் எப்படிச்செய்தார் என்று கற்றுக்கொடுக்கமுடியும், நாமும் கற்றுக்கொள்ளலாம். அவரின் கிரியேட்டிவிட்டியை நாம் காப்பி அடிப்போமேயொழிய அவர்போல் சிந்திக்க அவரால் சொல்லிக்கொடுக்கமுடியுமா? அது ஒரு நுண்ணிய கலையுணர்வுதானே..! அதை வியாபாரமாக்குபவர்களின் வலைகளில் நாம் ஏன் விழுவானேன்.

நானும் முன்பு பின்னல் வகுப்பிற்குச்சென்றுள்ளேன். மாமிவீட்டில் இருக்கும் சில விரிப்புகள் எனது பின்னல் கைவண்ணம்தான். இருப்பினும் கிரியேட்டிவிடி இல்லாததால் கற்றது அத்தோடு நின்றுபோனது. தொடர் ஆர்வமும் இதற்கு ஊன்றுக்கோல்.

நமக்கு என்ன வருமோ அதில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதுமானது. பலர் இப்படித்தான், பலமாதிரியான வகுப்புகளுக்குச்சென்று எதையும் உருப்படியாக செய்தபாடில்லை. மற்றவரின் கிரியேட்டிவிடியை படிக்கப்போகிறேனென்று பணம் மற்றும் நேரத்தை ஏன் வீண் விரையம் செய்வானேன்.

கலைகளை போதிக்கத்தான் முடியுமா?
ஓவியம் பழகமுடியுமா? கவிதையைக் கற்றுக்கொள்ளமுடியுமா? இலக்கியம் போதிக்கமுடியுமா?

உன்னைப்போல் நான் சிரிக்கலாம். பற்கள் தெரியலாம், உணர்வு ஒன்றாகுமா?