வெள்ளி, செப்டம்பர் 28, 2012

கொஞ்சம் சோகம் இன்று...

சீனா குவங்சிங்கில்,  இறந்துப்போன தமது மகனை ஆறுவருடமாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ள ஒரு தம்பதியினரின் செய்கை அம்பலத்திற்கு வந்துள்ளது.

வீட்டிற்கு வருகிற உறவுகள், எத்தனையோ முறை இந்த செய்கையைக் கண்டித்து, நோயின் காரணமாக இறந்துப்போன இக்குழந்தையை எரியூட்டச்சொல்லியும், அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் பிரேதத்தை பத்திரப்படுத்தி, ஏக்கமாக இருக்கின்ற சமயத்தில், பெட்டியைத் திறந்து  தமது மகனைப் பார்த்து கொஞ்சி திருப்திப் பட்டுக்கொண்டார்களாம்.

கிட்டத்தட்ட ஆறுவருடங்கள் இப்படிச் செய்து வந்ததிற்குக் காரணமும் இருந்திருக்கிறது. முதன் முதலில் பிறந்த இவர்களின் மூதத மகளையும் பதினைந்து வருடங்களுக்கு முன்பே நோய் பறித்துக்கொண்டது. இரண்டாவதாகப் பிறந்த இந்த மகனையும் இதே நிலையில் பறிகொடுக்க நேர்ந்ததை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

`என் மகன் குளிர்சாதனப்பெட்டியில் பார்ப்பதற்கு இன்னும் அழகாக உயிரோடு இருப்பதைப்போலவே இருக்கின்றான். அவனின் முகத்தைப் பார்த்தாலே போதும், கவலைகளெல்லாம் பறந்துப்போகிறது. அவன் எங்களுடனே இருப்பதைப்போன்ற ஓர் உணர்வைக்கொடுக்கிறது இந்நிலை. அதனால்தான் அவனை எரிப்பதற்கோ அல்லது புதைப்பதற்கோ எங்களுக்கு மனமில்லை..’ என்று சொல்லி  தாம் செய்து வந்த இச்செய்கைற்கு நியாயம் கற்பித்து வந்துள்ளனர் அத்தம்பதியினர்.

இச்செய்தியைப் படித்தவுடன் எனக்கு இன்னொரு சம்பவம் நினைவிற்கு வந்தது. கொஞ்சம் சோகம்தான். என்ன செய்வது வாழ்வில் இரவு பகல், மேடு பள்ளம், இன்பம் துன்பம் என எல்லாவற்றையும் இரண்டாகத்தானே வகுத்துள்ளார்கள்.

மிக அண்மையில் ஒரு பெண்மணியை உணவுக்கடையில் சந்தித்தேன். பழைய நட்பு. நட்பு என்பதை விட, முன்பு நான் சிறுவணிக முதலாளி. ஒரு கடை வைத்து வியாபரம் செய்துவந்தேன். விடுமுறை நாட்களில் கடையைத் திறப்பேன். `பியூட்டி ஷாப்’ அது, பலவிதமான அலங்காரப்பொருட்களை வாங்கி விற்பனைக்கு வைத்து வியாபாரம் செய்துவருவேன்.

அங்கு பொருட்கள் வாங்க வருபவர்களை விட, என்னோடு மணிக் கணக்காக  கதையளக்க சிலர் வருவார்கள்.  `கஸ்டமர்’ இல்லையென்றால் எனக்கும் பொழுது போகும் இவர்களால். அப்போது ஏற்பட்ட பல நட்புகளில் இவரும் ஒருவர். பெயர் மல்லிகா.

அவரும் ஒரு சிறுதொழில் வியாபாரிதான். அவரின் பொருட்கள், ஒரு பிரபலமான `டைரக்ட் சேலிங்’. அப்பொருட்களைக் கொண்டு வந்து என் கடையில் கொடுத்து விற்பனை செய்யச்சொல்லி தொல்லை கொடுத்த வண்ணமாக இருப்பார். ஒரு நாள், ``சரி விற்றுக்கொடுக்கிறேன், ஆனால் பணம் உடனே கொடுக்க முடியாது, வியாபாரம் ஓடினால் தான் தருவேன், இல்லையென்றால் பொருளை எடுத்துக்கொண்டு இடத்தைக் காலி செய்..” என்று எச்சரித்தேன்.

ஒரே சொற்பொழிவு மழைதான் போங்க. `தமிழர்கள் வாழ்வு, உருப்படாத நிலை, பணம் வைத்துக்கொண்டு கஞ்சத்தனம் செய்கிறார்கள். வாரி கட்டிக்கொண்டா போகப்போகிறார்கள்.! வியாபாரம் தெரியாதவர்கள். திடீர் பணக்காரர்கள், இவர்களைப் பாருங்கள், அவர்களைப் பாருங்கள். நாசமாய் போன இந்த சமூகத்தைப் பாருங்கள். என்னைப் பார், இன்னும் கொஞ்ச நாளில் நான் மெஸ் கார் வாங்குவேன், என்னைப் பார்த்து நீ ஆச்சிரியப்படுவாய். அப்போது நானே உனக்கு சாமான்களை இலவசமாகத் தந்துத் தொலைக்கிறேன்... ஆ..வூ....’ என, ஒரே பிதற்றல்.

இப்படிக் காரசாரமாகப் பேசினாலும், ஆள் படு உற்சாகமான பேர்வழி. என் கடைக்குள் நுழைந்து விட்டால், இடம் களைக்கட்டும். இதற்காகவே இவர் வருவாரா என காத்திருப்பேன். எல்லா சூழலிலும் நேர்மறையான பேச்சுதான். திட்டினாலும் சுவாரிஸ்யமான நட்பு.

இப்போது கடை இல்லை. உதவிற்கு ஆள் இல்லை மேலும் வியாபாரம் செய்வது அவ்வளவு சுலபமல்ல என்பதை அறிந்துகொண்டேன். கடையை விற்றுவிட்டேன். அதோடு அங்கே ஏற்பட்ட சில நட்புகளும்   தொடர்பில்லாமல்  போனது. ஐந்து ஆறு வருடங்கள் ஆகியிருக்கும்.

அன்று உணவுக்கடையில் அவரைச் சந்தித்தவுடன், முதலில் எங்கேயோ பார்த்ததைப் போலத்தான்  இருந்தது, அவருக்கும் அப்படியே தோன்றியிருக்கக்கூடும், என்னையே உற்று நோக்கினார். ஆனாலும் நானே  முதலில் கண்டுபிடித்து,

`ஹாலோ பிஸ்னஸ் லேடி, மெஸ் கார் வாங்கியாச்சா?’ என்றேன்.

`ஹாய் விஜி, எப்படியிருக்கீங்க? கடை இன்னும் இருக்கா?’  என, மிகவும் அமைதியான தொனியில் கேட்டார்.

`என்ன பழைய உற்சாகமெல்லாம் காணாமல் போச்சு. பிஸ்னஸ் பெரிய அளவில் வந்துவிட்டதோ, எங்களிடம் பேசக்கூட பிடிக்கவில்லை மேடத்திற்கு..’ என கிண்டல் செய்தேன்.  முகம் வாடியது, தலை கீழே கவிழ்ந்தது. கண்கள் பனித்தன. `என்னாச்சு? அட விடுங்க, பிஸ்னஸ் என்ன பிஸ்னஸ்.. அது எல்லோருக்கு சரிப்பட்டு வராது. இப்ப என்ன செய்றீங்க அத சொல்லுங்க! ’ என்றேன்.

வாடிய முகம் வாடியபடியே.. ` பிஸ்னஸ் நல்லா வந்ததுங்க.. வேகமா உயர்ந்து வந்தேன். எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடி எல்லாமே அமோகமாக வந்தவேளையில், கடவுள் என் இருபத்தொன்று வயது மகனை எடுத்துக்கொண்டான். ஒரு கார் விபத்தில் முழுசா எம்மவனைப் பறிகொடுத்து விட்டேன். என்னிக்கு அவனை இழந்தேனோ, அன்றிலிருந்து எனக்கு எதுவுமே வேண்டாம், என் பிள்ளைதான் வேண்டும். அவன் தான் என் உயிர்.. இந்த இரண்டு வருடமா நான் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம். அவன் ஒரு முறைதான் செத்தான், நான் தினம் தினம் சாகிறேன்.’ என்றார்.

என்ன சொல்ல? அந்த நிலையில் நாம் இருந்தால்தான், அதனின் வலிதெரியும், அதுவரையில், ஆறுதல் என்கிற பெயரில் காயங்களைச் சீண்டிப்பார்க்க எனக்கு எப்போதுமே இஷ்டமில்லை. பேச்சை வேறு பக்கம் திருப்பி, அட வாங்க சாப்பிடப்போகலாம் என்று சொல்லி,  அந்த பேச்சையே எடுக்காமல், அற்புதமான உணவுகளை ஆடர் செய்து, சாப்பிட்டு வந்தோம்.

பிஸ்னஸ், செய்யுங்கள். உங்களுக்கு அந்த திறமை இருக்கிறது. அது எல்லோருக்கும் வராது. என்று சொல்லி மட்டும் , விடைபெற்றேன்.    


வியாழன், செப்டம்பர் 27, 2012

விறால் மீன்

விறால் மீன் பற்றிய சில தகவல்கள்.



விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒரு மீன் கிடைத்துவிட்டாலே பெரிய வெற்றிபோல் குதூகலிப்பார்களாம். அடிக்கடி குளம், குட்டை, ஆறு, சேறு என மீன் பிடிக்க அலையும் எங்களின் சக பணியாளர் ஒருவரிடம் விசாரித்தேன். அவருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கு. ஏற்கனவே நிறைய மீன்கள் பிடித்து  வந்து காரிலேயே வைத்துக்கொண்டு சிலரிடம் விற்றிருக்கின்றார். விறால் மீன்களும் இருந்தன. மலிவான விலையில்தான் கொடுத்தார். மலிவாகக் கிடைக்கிறது என்பதால் பெரிய பதவியில் இருப்பவர்களும் இறங்கி வந்து வாங்கிக்கொண்டார்கள். நான் வாங்கவில்லை, அதை ஆய்ந்து சுத்தம் செய்வதென்பது அவ்வளவு சுலபமல்ல.  மார்க்கெட்டில் வாங்கினால் அங்கேயே சுத்தம் செய்து கொடுத்து விடுவார்கள்.

சேறு சகதியான இடங்களிலும் அழுக்கடைந்த நீர் தேக்கங்களிலும் தான் விறால் மீன் உயிர் வாழும். வயல்வெளிகளில் அதிகமாகக்கிடைக்குமாம்.

எலிகளைப்போல், நீரின் சேற்றின் உள்ளே உள்ள சில பொந்துக்களில் ஒளிந்துக்கொள்ளும் இந்த விறால் மீன், பார்ப்பதற்கு பாம்பின் தலைபோலவே இருக்கும். ஆங்கிலத்தில் பாம்பின் தலை (Snakehead) என்றே பெயர் வைத்துள்ளனர்.


சாதாரண மீன் பிடிப்பதைப்போல் விறால் மீன்களைப் பிடிக்கமுடியாது தவளையை தூண்டிலில் மாட்டிவிட்டு விறால் மீன்களைப்பிடிப்பார்களாம்.

விறால் மீன்களில் முப்பதுவகைகள் உள்ளன என்பதை கூகுளில் மூலம் தெரிந்துக்கொண்டேன்.

இங்கே மலேசியாவில் விறால் மீன்களின் விலை கிலோ முப்பத்தைந்து ரிங்கிட் (கூடலாம், குறையலாம்). பங்களாதேஷ் மற்றும் நேப்பாள் போன்ற நாடுகளில் இதனின் விலை மிகவும் மலிவாம். சர்வசாதாரணமாக வயல்களில் கிடைக்கும் இம்மீனை பிடித்துக்கொண்டு வந்து தினமும் சமைத்துச் சாப்பிடுவார்களாம். இங்கேதான் (மலேசியா) இதனை பவுன் விலையில் விற்கின்றார்கள் என ஆச்சிரியப்பட்டுப்போகின்றனர் சில வெளிநாட்டு வாசிகள்.

சேற்றில் கிடைக்கின்ற விறால் மீன்கள்தான் சுவை அதிகமாம். தற்போது சூப்பர்மர்க்கெட் மற்றும் சந்தையில் கிடைக்கின்ற விறால் மீன்கள் பெரும்பாலும் குளங்களில் வளர்க்கப்படுபவைகளாம். இவைகளில் அந்த அசல் ருசியை சுவைக்க முடியாது என்கிறார்கள்.

விறால் மீனை உயிரோடு பிடித்துவந்து தரையில் போட்டுவிட்டால், அது துடித்தாலும் நீண்ட நேரம் உயிரோடு இருக்கும் என்பதும் கேள்விப்பட்ட செய்தி.

மண் அல்லது சாம்பல் கொண்டு தூய்மையாகக்கழுவி, புளி நீரில் ஊறவைத்த பிறகுதான் சமைக்கவேண்டுமாம். இல்லையேல் குழம்பு வழவழ கொழகொழவென சுவைகுறைந்து பாழாய் போய்விடுமாம்.


பொரியல் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்குமென்கிறார்கள் தமிழர்கள். விறால் மீன் குழம்பு தேன்போல் தித்திப்பாக இருக்குமென்று சிலர் சொல்வதையும் கேட்டுள்ளேன். இருப்பினும் சீனர்கள், முழு மீனை அவர்களுடைய மருந்து மூலிகைகளைக்கொண்டு அப்படியே ஸ்டீம் செய்து, சூப்’ஆக சாப்பிடுவதற்குப் பிரியப்படுவார்கள்.



சீனர்கள் மத்தியில் இதனின் சூரணம் மிகவும் பிரபலம். பதனப்படுத்தி பாட்டல்களில் அடைக்கப்பட்ட விறால் சூப் அதிக விலையில் விற்கப்படுகின்றன. மீன் கிடைக்காத போது அல்லது இவ்வகை குளத்து ஆற்று மீன்களை விரும்பிச்சாப்பிடாதவர்கள், அல்லது சைவம் மட்டும் உண்பவர்கள் உடல் நலம் கருதி, இதனின் சூப்’ஐ மட்டும் வாங்கி குடித்துக்கொண்டு, மீன் சாப்பிட்ட முழு திருப்தியில் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையை விதைத்துக்கொள்கின்றனர்.


ஆஸ்த்மா வியாதி உள்ளவர்கள், அடிப்பட்டு தையல் போட்டவர்கள், குழந்தை பெற்றுக்கொண்டவர்கள், அறுவைசிகிச்சை செய்தவர்கள், பெரிய வெட்டுக்காயம் உள்ளவர்கள், வயிற்றில் புண் உள்ளவர்கள் போன்றோர், விறால் மீன்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புண்கள் விரைவாக ஆறும் நோய்கள் குணமாகும் என்கிற நம்பிக்கை பரவலாக இருப்பதால், இந்த விறால் மீன் சாப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இருப்பினும் இக்கூற்று அனைத்தும் உண்மைதானா என்பதனை ஆதாரப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக இன்னமும் நிரூபிக்கப்படாமலேயே இருக்கின்றது எனபதும் கூடுதல் தகவலே.






புதன், செப்டம்பர் 26, 2012

எழுத்தாளர்களே நில்லுங்கள்....

படித்ததில் பிடித்தது

தி.ஜா ஐயாவே இப்படிச்சொன்னால், நாமெல்லாம்???

*******
எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு thija4 இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.
எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல்எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் , வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்.
இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் நாவலோ, நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை. இதுதான் வேடிகக்கை. உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி, பத்திரிகைகளை நிரப்பலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும். இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?
தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும். இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத, அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான். ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன. செக்காவ், மாப்பஸான், ஹென்ரி ஜேம்ஸ், மாம், மெல்வில், ஸ்டீபன், க்ரேன், ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள். எனவே, பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும், பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம்,
சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ,நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் “ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.
சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள், நினைவோட்டங்கள், அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.
என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை, நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை, புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ், மாப்பஸான், போ, மாம், தாகூர், கு.ப.ரா. புதுமைப்பித்தன், லா.ச.ரா, ஸீன் ஓகாஸி, ஜாய்ஸ், ஸ்டீஃபன் க்ரேன், ஹென்றி ஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால், சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில், உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது, உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும்தன்மை, எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால், அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று, மண்ணுள் பல காலம் உறங்கி, திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி, பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.
எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் “நெக்லேஸை”யோ, “இரு நண்பர்களை”யோ, செக்காவ் “டார்லிங்”கையோ, “கோரஸ் பாடகி”யையோ, கு.ப.ரா. “நூருன்னிஸா”வையோ, பிச்சமூர்த்தி “பதினெட்டாம் பெருக்கை”யோ, டாகூர் “ஊர் திரும்புதலை”யோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல், ஆசைப்படாமல், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.
இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)
நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது. ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார். ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது. ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன். அவருக்கு வருத்தம், பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார். அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது. நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை. வண்டு அடையாளம் தெரிந்தது. (ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு.) சர்வரிடம் சொன்னதும், பீடி தோசை முதலாளி போலல்லாமல், அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து “கண்டாமணி’ என்ற கதையாக உருவாயின. இந்தக் கதைக்கு மையக்கரு, சந்தேகம் அல்லது பயம். ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது, குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார். கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள். செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை. கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம். சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன. சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார். ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம், தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது. கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார். சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார். கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது. அதிகாரி அதை எண்ணி, “போய்யா பைத்தியம்” என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார். விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம். பேசாமல் திரும்பிவிடுகிறார். இந்தக் கதையைச் “சிலிர்ப்பு” மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை. அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது. வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம்.
இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது. அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை.
என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் “ Choice-less Awareness” என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும்.
நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.

*********

எழுத்தாளர் தி. ஜானகிராமன், 1969 யில் எழுதிய `சிறுகதை எழுதுவது எப்படி?’ என்கிற கட்டுரை இது.  நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்று நேற்று சொல்லப்பட்டது போல், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தி வருவதுதான் இக்கட்டுரையின் தனிச்சிறப்பு.

என் மனதின் தேடலுக்கு ஒத்துப்போவதைப் போல் அமைந்த  ஓர்  அற்புதமான ஆய்வுக்கட்டுரை.  

நன்றி : அழியாச்சுடர்கள்.  

அழகான வரிகள்

மெயிலில் வந்தது. தினம் தினம் அழகழகான வரிகளைக்கொண்ட ஆங்கில தத்துவங்களை காலை வேளையில் அனுப்பி உற்சாகமூட்டிவரும் பார்த்தி. இது பார்த்தி அனுப்பிய பாப்பாத்த்தி.

நன்றி: பார்த்திபன்.

செவ்வாய், செப்டம்பர் 25, 2012

சிலவேளைகளில்....

சிகரெட் மற்றும் பலவிதமன மதுபானங்களை ஏற்றிச்சென்ற பெரிய சரக்கு லாரி ஒன்றும், இருவர் பயணித்த ஒரு காரும் சாலையில் மோதி விபத்துக்குள்ளாயின. பயங்கரமான சாலை விபத்து. காலையிலேயே பத்திரிகையின் முதல் பக்கத்தை அலங்கரித்த செய்தி அது. காரில் இருந்த இருவரும் அங்கேயே அகால மரணம். லாரி சாலையில் தடம் புரண்டதால் லாரி ஓட்டுனருக்கு கடுமையான காயம். பார்வையாளர்களும் சாலையில் பயணிப்பவர்களும் முதலுதவி செய்வதற்குப் பதில், உடையாத மதுபான பாட்டல்களையும், சிதையாத சிகரெட் பக்கெட்டுகளையும் சேகரிக்கும் மும்முரமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் புகைப்படத்தை பத்திரிகையில் போட்டு, இச்செய்கையையும் கோடிக்காட்டியிருந்தார்கள்.

%%%%%%%%%%

மும்பையில் நடந்த சம்பவமாம்.. பத்திரிகையில் படித்தேன். தமது பதினைந்து வயது மகளை, கணவன் புரிந்த கள்ளக்காதல் விவகாரத்திற்கு  சாட்சியாக, பெற்ற தாயே அழைத்துச் சென்றுள்ளார். இதைத் தாங்கிக்கொள்ளாத அந்த மகள், சாட்சி சொல்லி வீடு திரும்பியவுடன் விஷமருந்தி, தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டாளாம். . கொடுமை.

%%%%%%%%%%%%

சாலையின் செல்லுகையில், டோல் சாவடியின் அருகில் ஒரு விபத்து. கண்ணால் பார்த்த நிகழ்வு இது. குளிர்பான டின்களை பெட்டி பெட்டியாக ஏற்றிச்சென்ற லாரி அப்படியே தரம் புரண்டது. டின்கள் சாலையில் உருல்கின்றன. உடைந்த டின்களில் இருந்து பானங்கள் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. உதவிக்கு வந்த  Tow Truck Service ஆட்கள், முட்டை மூட்டையாக உடந்து நசுக்கிய காலி டின்களோடு, பானங்கள் உள்ள புதிய நசுங்காத டின்களையும், குப்பைகளை அப்புறப்படுத்துதல் போல், அபேஸ் செய்துக்கொண்டிருந்தார்கள். பொதுமக்களை நெருங்க விடாமல். எப்படி கண்டுபிடித்தேன் என்றால், காலி டின்கள் கனமில்லாமல் இருக்கும் தானே..! ஆனால் இவர்கள் டின்களின் மூட்டையைத் தூக்க முடியாமல் தூக்கி, அவர்களின் டிராக்கில் வைத்துக்கொண்டிருந்தார்கள்.  தேன் எடுக்கச்சென்றவன் புறங்கையை நக்காமல் வருவானா என்ன.!

%%%%%%%%%%%

இன்று இண்டர்வியூவிற்கு ஒரு இளைஞன் வந்திருந்தான். அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவனுடைய அம்மாவிற்கு வயது நாற்பத்திரண்டு. எப்படி? எனக்கு மண்டையில் நண்டு ஊறுகிறது. ஒருவேளை இரண்டாவது அம்மாவாக இருப்பாரோ..!? முடியாதே, பாரத்தில் நிஜமான தாய் தந்தையர் பற்றிய தகவல்கள்தானே போடவேண்டும். கேட்கவில்லை. எதுக்கு வம்பு?

%%%%%%%%%%%%

பெண்கள் ஒன்று சேர்ந்தால் எதாவது பேச்சு வரும். இன்று ஒரு பேச்சு வந்தது எங்களுக்குள். அதாவது எங்களின் செக்கரட்டரி ஒருவள், வயதிற்குத்தகுந்த உடல் இல்லை. உடலை சின்ன பெண் மாதிரி சிக்கென்று வைத்திருப்பாள். அழகாகவும் இருப்பாள். இன்று அவளிடம் இதுபற்றி பேச்சு கொடுக்கையில், அவள் ஒரு யுக்தியை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தாள். அதாவது, நேராக நின்று, இரண்டு கைகளையும் ஒன்றாகக்கூப்பி, எவ்வளவு உயரத்திற்கு தூக்கமுடியுமோ அவ்வளவு உயரத்திற்குத் தூக்கவேண்டும். உடல் நேராக இருக்கவேண்டும். மூச்சை மெதுவாக இழுத்து விடவேண்டும். அப்படித்தூக்கும்போது, கால்களும் நுனி பாதத்தில் நிற்க வேண்டும். இதை எங்கு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.  கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் எல்லாம் இதேபோல் செய்துக்கொள்வாளாம். தனியாக உடற்பயிற்சி மேற்கொள்வதைவிட இது எனக்குக் கைகொடுக்கிறது என்றாள். இதுபோல் தினமும் செய்வதால், மார்பகங்கள் கூட வயதின் காரணமாக ஏற்படும் தளர்ச்சியிலிருந்து விடுபட்டு, எப்போதுமே firm ஆக இருக்குமாம். சொல்லி வாய் மூடவில்லை, பக்கத்தில் இருந்த ஒருவள் தள்ளாடித்தள்ளாடி முயன்றுக்கொண்டிருந்தாள்.

%%%%%%%%%%%%%%%

விளக்குமாறு வாங்குவதற்குக்கூட சூப்பர் மர்கெட் தான் போகணும் போலிருக்கு. எல்லாமும் சூப்பர் மார்கெட் மயமாக இருப்பதால், அவசரத்திற்கு விளக்குமாறு வாங்கச்சென்றால், விடாதே அடிமை சிக்கிவிட்டது என்பதுபோல் அதன் விலையை இரண்டுமடங்காக ஏற்றி விற்கின்றார்கள் மளிகைக் கடைக்காரர்கள். நேற்று வாழைப்பழம் கிலோ 4.50காசிற்கு வாங்கிவந்தேன். அதே கடையில்... :((

திங்கள், செப்டம்பர் 24, 2012

மூஞ்சுறு

விரல்கள் கிடைக்காத
பொழுதுகளில்
விறகுகளை
துளையிட்டுச் செல்கின்றன
சுவையறியா
மூஞ்சுறுகள்..

ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

பாக்கியம் அக்கா மன்னியுங்கள்.

வாசகர் விழா.

பாலகோபாலன் நம்பியார் அவர்களின் தலைமையில் போர்ட் கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் சென்ற ஞாயிறு, மதியம் தொடங்கி இரவு வரை மிகச்சிறப்பாக நடந்தேறிய ஒரு அற்புத விழா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.


விழாவின் கருப்பொருள் ஒழுக்கமே விழுப்பம். கருப்பொருளுக்கேற்ப, நிகழ்விலும் ஒரு ஒழுங்குமுறை கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கெல்லாம்  ஒரே மாதிரியான ஆடைகள், பேச்சாளர்கள் மேடையில் முழங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளலாம் என்கிற நேர ஒதுக்கீடு, நிகழ்ச்சி நிரல் அறிக்கையிலேயே அச்சாகி இருந்தது. சீரான வழிநடத்தல், சோர்வில்லாத அறிவிப்புப்பணி, அற்புதமான நடனங்கள். நடனங்களைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும், பிரமாண்டமான நிகழ்சிகளில் அரங்கேறும் கலாச்சார நடனங்கள் போல், முழுமையாக நடன உடைகள் ஆபரணங்கள், முக ஒப்பனைகளோடு மிக அற்புதமாக அரங்கேறிய நடனங்கள். நன்கு பயிற்சி பெற்று, குழுவாக இயங்கி, கவனங்கள் சிதறாமல், ஒரே சீராக அபிநயம் பிடித்து, நடனங்களை வழங்கி நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்த அவர்களைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. நடன  ஆசிரியருக்கு ஒரு சபாஷ் இவ்வேளையில். நமது கலை கலாச்சாரங்களை வளர்த்து வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள்  இவர்களைப்போன்ற  நல்ல  கலையார்வம் கொண்ட நடன ஆசிரியர்கள்தான். வாழ்த்துகள் ஆசிரியர்களே.


எல்லாமே இலக்கியத்தனமாக இருந்தாலும் சோர்வாகிவிடுமென்பதால், இடையிடையே பலவிதமான கலைநிகழ்ச்சிகளும் குதூகலிக்கவைத்தன.

இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், ஸ்கைஃப் வழி, தமிழ் நாட்டு பிரமுகர், இலக்கியவாதி, இதழாசிரியர் கீழாம்பூர் சிவசுப்ரமணியன் அவர்களை தொடர்புக்கொண்டு சில கேள்விகளின் வழி அவர் எங்களோடு பேசியதுதான். இது எனக்கு இன்ப அதிர்ச்சி. மற்ற நிகழ்ச்சிகளில் செய்துள்ளார்களா என்பது தெரியவில்லை, ஆனாலும் இந்த முயற்சி வரவேற்கக்கூடிய ஒன்று. வெளிநாட்டுப் பிரமுகர்களை அதிக செலவில் வரவழைத்து உரையாற்றச்செய்வதை விட இப்படி ஒரு யுக்தி, புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. உலகத்தமிழர்கள்  எல்லோரும் தமிழால் ஒரே குடையின் கீழ் இணையத்தின் வழி கைகோர்த்து நிற்கின்றோம் என்பதில் பெருமகிழ்ச்சிதான். தொழில்நுற்ப வளர்ச்சியின் உச்சத்தைக்காட்டும் இவ்வரிய வாய்ப்பிலிருந்து மலேசியர்களான நாமும் விடுபட்டுவிடாமல் இருப்பது இன்னொரு மகிழ்ச்சியே.

அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்று, இலக்கியப்பத்திரிகை நடத்தும் உங்களின் கலைமகள் இதழுக்கு யாரெல்லாம் எழுதலாம்? 

அவருடைய பதில், யாருக்கெல்லாம் தாம் சரியாக எழுதுகிறோம் என்கிற எண்ணமும், தம்முடைய படைப்பின் மீது முழு நம்பிக்கையும் இருக்கின்றதோ, அவர்களெல்லாம் தாராளமாக படைப்புகளை அனுப்பலாம். என்றார். பதில் எவ்வளவு நாசுக்காக இருக்கின்றது பார்த்தீர்களா.! எல்லோரும் நம்பிக்கையோடுதான் படைப்புகளை அனுப்புகிறோம். ஆனால் கலைமகள், நந்தவனம், தீராநதி, காலச்சுவடு, குமுதம் போன்ற தமிழ் நாட்டு இலக்கிய இதழ்களில் நமது படைப்புகள் வருவதென்பது சாதாரணமா.!?

பாலகோபாலன் நம்பியார் நிகழ்ச்சிகளை அழகாக வழிநடத்துவதில் வல்லவர். இவருக்குப்பின், அரசாங்கத்தால் பதிவுபெற்ற இவ்வாசக இயக்கத்தை சரியாக வழிநடத்துபவர் யார் என்பது தான் அன்றைய நிகழ்வில் பலரின் உள்ளகிடங்கின் கேள்விக்குறியாக இருந்தது வினா. அள்ளிக்கொடுக்கவும், நிகழ்வுகளுக்கு முதுகெலும்பாக நிற்கவும், கொடைநெஞ்சர் கிள்ளார் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் ஆலயத் தலைவர் சங்கபூஷண் சித.ஆனந்தகிருஷ்ணன் எப்போதுமே இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பட்சத்தில், நிகவுகளை சரியான முறையில் வழி நடத்துவதற்கு திரு பாலகோபாலன் நம்பியாரைத் தவிர வேறொரு நபர் இன்னும் உருவாகவில்லை என்கிற அரசல் புரசல் பேச்சுகள் கூட செவிகளில் விழுந்தனவே. காத்திருப்போம். இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

வாசக இயக்கங்களைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு காலத்தில் மலேசிய தமிழ் பத்திரிகைகளுக்கு உயிர் நாடியாகத் திழந்தவை வாசக இயக்கங்களே. எண்பதுகளில் எழுத ஆரம்பிக்கும்போது, இப்பொழுது உள்ளதுபோல் மின்னஞ்சல், பெஃக்ஸ் வசதி, குறுந்தகவல் சேவை, நினைத்தமாதிரத்தில்  பத்திரிகை ஆசிரியர்களோடு தொலைப்பேசி வழி உடையாடல் போன்ற வசதிகளெல்லாம் கிடையாது. எழுதுவோம், சென்றதா, அல்லது பாதிவழியிலேயே காணாமல் போனதா, என்பனவற்றையல்லாம்  ஆராயவே முடியாது. பத்திரிகையைப் பார்த்தால்  தான் உண்டு. அந்த காலகட்டத்தில் வாசக இயக்கங்கள்தான் இவற்றிற்கெல்லாம் பாலமாக இருந்தது.


வாசகர்களை எழுத ஊக்குவிற்பதற்கு வாசக  இயகங்கள் பெரும் பங்கு வகித்தன. குறிப்பாக எங்களின் வாசக வட்டத்தலைவர் என்று சொன்னால் அது  எம்.கே.சுந்தரம் அவர்களே . அவரின் அழைப்பின் பேரில் பத்திரிகை அலுவலகங்களுக்கும் சென்றுள்ளோம். அவரிடம் சில கடிதங்களை எழுதிக்கொடுத்து அனுப்புவோம். சும்மாலும் ஒரு காகிதத்தைக் கிழித்து, மனதில் பட்டதை எழுத்துப்பிழைகளோடு எழுதி அனுப்பினால், அதை, வாசகவட்டத் தலைவரான இவர் இன்னும் கொஞ்சம் அழகாக மெருகேற்றி, திருத்தி ,பத்திரிகைகளுக்குக் கொண்டு சேர்ப்பார். படைப்புகள் பத்திரிகைகளில் வந்தாலே பெரிய அதிர்ஷ்டம். இந்நிலை, தொடர்ந்து எழுதுவதற்கு ஊன்றுகோலாக அமைந்தது. 

இன்னமும், அந்த காலகட்டத்தில் எழுதிய வாசகர்கள் பலர்தான்  இன்றும் எழுதி முத்திரைப் பதித்து வருகின்றனர். புதிதாக எழுத்துலகிற்கு வருபவர்கள் கொஞ்சநாளிலேயே காணாமல் போய்விடுகின்றனர். இதை மாற்றியமைக்க இன்றைய வாசக இயங்கங்கள் முன் வரவேண்டும். நமது பத்திரிகைகளும் இன்றை சூழ்லுக்கு ஏற்ப மாறிக்கொண்டு, குறுந்தகவல் மின்னஞ்சல் பயன்பாடுகளையும் பெரிய அளவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.  கணினி யுகத்தில் நாம் போட்டிபோட்டுக்கொண்டு தரமான படைப்புகளை மக்களின் பார்வைக்குக்கொண்டு வரவில்லை என்றால்,  சிறப்பானவற்றை விரும்பும் இளைய தலைமுறையினர், நம் நாட்டு எழுத்துகளை புறக்கணித்துவிட்டு இணையத்திலேயே உலா வருகிற நிலை வரலாம். நான் சொல்வது கணிப்பு அல்ல, உண்மை. நடைமுறையும் அதுவே.   இளைய சமூதாயத்தின் தாய் என்பதாலும், சிலரின் இலக்கிய ஆர்வங்களைக்கூர்ந்து கவனித்தவள் என்பதாலும்  இதைச்சொல்கிறேன். மற்றபடி யார் எழுத்தின் மீதும் காழ்ப்பு இல்லை எனக்கு.

நான் எழுதினால், அவர் எழுதக்கூடாது, அவர் எழுதினால் நான் எழுதமாட்டேன் என்கிற சிறுபிள்ளைத்தனமெல்லாம் எனக்கு எப்போதுமே வந்ததில்லை. பாக்கியம் அம்மையார் எழுத்திற்கு மறுமொழி எழுதிவிட்டேன், இலக்கிய உலகில் கருத்து மோதல்கள் சகஜம், புகைகின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அங்கேயும் இங்கேயும் மூட்டி விடும் சிலரை அடையாளங்காட்டியது இந்த சர்ச்சை.  அவர், நாடு போற்றும் ஒரு நல்ல பெண்படைப்பாளி என்பதை மனதார ஏற்கிறேன். புண்படும்படி எழுதியிருந்தால் மன்னியுங்கள் அக்கா. தொடர்ந்து படைப்புகளைக்கொடுங்கள். வாழ்க வளமுடன்.


இன்றைய தினக்குரலில் வந்த எனது கட்டுரை. வாசகர் விழா விமர்சனம்

நன்றி தினக்குரல். திரு.பி.ஆர்.இராஜன்.

சனி, செப்டம்பர் 22, 2012

ராட்டினம்

நேற்று இரவு ராட்டினம் என்கிற ஒரு படம் பார்த்தேன்.. ஆஹா போட வைத்த படம். அழகான காதல் போல் காட்டி, அதை இறுதியில் நாமெல்லாம் வெறுக்கும்படி செய்துவிட்டார் அந்த இயக்குநர். அந்த முதியவரின் இறுதிக்கண்ணீர் பல கதைகள் சொலதைப்போல..அற்புதம். - ஏன் சொல்கிறேனென்றால், மனதைக்குடையும் ஒரு கதை, பொழுதுவிடிந்தும் மனதைவிட்டு அகலவேயில்லை.

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

எனதானது..

கண் சிமிட்டல்

கண் சிமிட்டும்
கேமராக்களின் முன்
கலகலப்பாக இருக்கின்றோம்
காலம் கடந்த பொழுதுகள்
நம்மைப் பார்த்து
கண்சிமிட்டுவதற்காக..

%%%%%%%

நட்பு
தூசு படிந்த நீரை
பாதுகாத்துக்கொண்டிருக்கின்றேன்
மீன் செத்துவிடக்கூடாது
என்பதற்காக...

%%%%%%%

எனதானது

எனக்கென்ற பாணியில்
தொற்றிக்கொள்ளும் உன் பாணி
எனதானதை
உனதாக்கிக்கொண்டிருக்கின்றது.

%%%%%%%

விழுப்பம்


ஒழுக்கம் ஒளிந்துக்கொண்டு
நல்ல பெயர்
வாங்கிக்கொள்கிறது.

%%%%%%

இனி என்ன?

இரவு நன்றாகத்தான்
போய்க்கொண்டிருக்கு
இடையில் விரைவாக
உறக்கம் வருதே..

வேறொரு நான்

நான் தான் யோசித்தேன்
நான் தான் சொற்களை அடுக்கினேன்
நான் தான் எழுதினேன்
நான் தான் பெயர் வைத்தேன்
நான் தான் கவிதை என்றேன்
நானே வியந்தேன்
நானே புகழ்ந்தேன்
மறுவாசிப்பில்
வேறொரு நான்
முன்பிருந்த என்னை
எச்சரித்தேன்
இதுபோலும் இனி எழுதாதே...

வியாழன், செப்டம்பர் 20, 2012

பிரசுரமான எனது படைப்புகள்


எனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை.  அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்!? என எனக்குள் திடிரென்று ஒரு தேடல் பிறந்தது. அலசலுக்குத் தயாரானேன்.

எனக்கு இருக்கின்ற ஒரு நல்ல பழக்கம், நான் எழுதி பிரசுரமான படைப்புகள், என்னைப்பற்றிய செய்திகள் எதேனும் பத்திரிகைகளில் அச்சாகி பிரசுரமாகியிருந்தால், அவற்றை உடனே கத்தரித்துச் சேகரித்து வைத்துக்கொள்வேன். சிலது தவறியிருக்கலாம், ஆனாலும் பெரும்பாலும் சேகரித்தே வைத்துள்ளேன்.  அப்படி சேகரித்து வைத்துள்ளதை, வகை வாரியாகப் பிரித்து இங்கே பதிவு செய்துள்ளேன். இது என்னைப்பற்றிய ஓர் அலசல்தான், தம்பட்டமெல்லாம் கிடையாது. மேலும் இந்த எண்ணிக்கை முற்றுப்புள்ளியும் அல்ல, இது தொடரும் வாழும் காலம் வரை. பத்திரிகைகளில் இல்லாவிட்டாலும் வலைப்பூவில் எனது பதிவுகள் தொடரும். இத்துறையில் மட்டும் அலுக்காத நிலையில் ஆண்டவன் என்னைப் படைத்து விட்டான்.


எனது படைப்புகள் - (மன்னிக்கவும் வருடம் மற்றும் தேதிகள் தெரியவில்லை, படைப்புகளில் அதை எழுதிவைக்கத் தவறிவிட்டேன்)


சிறுகதைகள்

1. பூஜைக்கு வந்த மலர்
2. கதை சொன்ன கன்னி - தூதன் இதழ்
3. அண்டை வீட்டுக்காரர் -  மக்கள் ஓசை
4. நினைக்கத்தெரிந்த மனமே - தமிழ் நேசன்
5. சாந்தியிடம் சாந்தி - மக்கள் ஓசை
6. சகிப்புத்தன்மை - மலேசிய நண்பன்
7. கரிசனம் - மக்கள் ஓசை
8. கதவைத்திற... மலேசிய நண்பன்
9. பாலிக் கம்போங் - தீபாவளி சிறுகதை - மக்கள் ஓசை
10. பரீட்சைக்கு படிக்க்ணும் -  மக்கள் ஓசை
11. அவர்களுக்கு வயதானால் - மலேசிய நண்பன்.
12. தோள் கண்டேன் - தென்றல் வார இதழ்
13. இயந்திர வாழ்வுதான் - நம்நாடு
14. இப்போ என்ன? - மின்னல்
15. அந்த தோட்டக்காரி - தமிழ் நேசன்
16. தீபாவளி சிந்தனை - மலேசிய நண்பன்
17. கொஞ்ச நேரம் நில்லு - மக்கள் ஓசை
18. ஆபிஸ் - மக்கள் ஓசை
19. உன் குரல் கேட்டால் -  மின்னல்


குட்டிக்கதைகள்/ நிமிடக்கதைகள்/கடுகுக்கதைகள்

1.மூடுவிழா விற்பனை - மக்கள்  ஓசை
2.மாற்றம் - மக்கள் ஓசை
3.பேச்சுக்கலை - தென்றல்
4. முடியாது - மக்கள் ஓசை
5. தாய் அன்பு -  மக்கள் ஓசை
6. ஒப்பிடாதிங்க -தென்றல்
7. வார் ரொட்டி - தென்றல்
8. கலர்கலராய் கனவு - தென்றல்
9. என்னங்கடா சேவை - தென்றல்
10. ராங் நம்பர் - நிமிடக்கதை தென்றல்
11. அது - மலேசிய நண்பன்
12.சினிமாவில் என் நகைச்சுவை - தென்றல்
13.மகனோடு வாழ்க்கை - தென்றல்
14.மூன்றாவது எறும்பு - தென்றல்
15.சைக்கிள் கேப் - தென்றல்
16.நீண்ட ஆயுசு - தென்றல்
17.அந்த ஒன்னுதான் - தென்றல்
18. நானிருக்கேன் கவலைப்படாதே - தென்றல்
19. எனக்குள் சில ரகசியங்கள் - தினக்குரல்
20. ஐ மிஸ் யூ - மின்னல்
21. நகவெட்டி - தென்றல்
22. மின் குழல் - தென்றல்
23. மூன்று பெண்கள் சேர்ந்தால் - தென்றல்


கட்டுரைகள்

1. இது பெண்களுக்காக - மகளிர் கட்டுரை - தென்றல்
2. அழகிற்கு அழகூட்டுவது எப்படி? - மகளிர் கட்டுரை - மலேசிய நண்பன்
3. ஆள்பாதி ஆடை பாதி - மகளிர் கட்டுரை. - மலேசிய நண்பன்
4. பண்பாட்டு கூறுகளும் நாமும் - மகளிர் கட்டுரை - மலேசிய நண்பன்
5. செய்துதான் பாருங்களேன் - மகளிர் கட்டுரை -  மலேசிய நண்பன்
6. இலக்கியச்சோலை - விமர்சனக் கட்டுரை - தமிழ் நேசன்
7. மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்- மலர் மாத இதழ்
8. முருங்கை’னா சும்மாவா - மகளிர் கட்டுரை - மலேசிய நண்பன்
9. இரவிந்திரநாத் தாகூர் கவிதைகள் - அறிமுகக் கட்டுரை - தென்றல்
10.பிரபலமாகிப்போன சொல் வழக்கங்கள் - தினக்குரல்
11. இயம்பிட வார்த்தைகள் இல்லா சுயம்பு லிங்கம் - பயணக்கட்டுரை  மக்கள் ஓசை
12. கலகலக்கவைத்த கலைஞன் கோயாமணியம் (குடும்ப உறுப்பினர் மறைவு) - இரங்கல் செய்தி - மக்கள் ஓசை
13. கெல்லி ஸ்மித் - கனவுக்கோட்டை - பயண அனுபவக்கட்டுரை - தமிழ் நேசன்
14. இலக்கியவானில் ஒரு நிலா - இரங்கல் செய்தி - தமிழ் நேசன்
15. சின்ன நடிகவேள் மரணம் (ரகுவரன்) - இரங்கல் கட்டுரை - தமிழ் நேசன்
16. இறையன்பு ஓர் அறிமுகம் -  தமிழ் நேசன்


தொகுப்பு பதிவுகள்

1.ஓஷோவின் தேன் துளிகள் - மக்கள் ஓசை
2. ஓஷோவின் பார்வையில் - மக்கள் ஓசை
3. ஓஷோவின் தேன் துளிகள் - தென்றல்
4. ஒஷோ ஒர் அறிமுகம் - தத்துவக்கட்டுரை தென்றல்


சிறுகதை விமர்சனம்

1.முதியோர் எண்ண ஓட்டம் - தமிழ் நேசன்
2. இலக்கிய உலகம் உருப்பட்ட மாதிரிதான் - மலேசிய நண்பன்
3. வெற்றி பெற்ற படைப்பு - தமிழ் நேசன்
4. நல்ல சிறுகதை `துணைவி’ - தமிழ் நேசன்
5. சிறுகதைகளுக்குச் சன்மானம்- மலேசிய நண்பன்
6. போலி முகமூடிகள் - தென்றல்
7. படைப்பின் வெற்றி - தென்றல்
8.அனுபவ எழுத்தாளரின் சிறுகதையா? -  மக்கள் ஓசை
9.கணேசன் அப்பா ஆமை மண்டோர்- தமிழ் நேசன்
10.தொட்டுப்பார்க்கவா? - மக்கள் ஓசை
11.கவராத சிறுகதை - மக்கள் ஓசை
12. இலக்கிய பணியும் வானொலி அறிவிப்பும் -மக்கள் ஓசை
13. சிறுகதை திறனாய்வு - மக்கள் ஓசை
14. நகைச்சுவை கலந்த போதனை - மலேசிய நண்பன்
15. பழுதான விதை - மலேசிய நண்பன்



கவிதைகள்

1.குழந்தை- மக்கள் ஓசை
2.தழும்பு - தமிழ் நேசன்
3.அனுபவம் - தமிழ் நேசன்
4. பிரிவு,காதல், இதயம் - மக்கள் ஓசை
5. புரியவில்லை - தென்றல்
6. தாய்,ரம்மியம்,காதல் - மக்கள் ஓசை
7. மனசாட்சி - தென்றல்
8. முடியவில்லை - மக்கள் ஓசை
9. மனிதன் இல்லை, பயமும் இல்லை - மக்கள் ஓசை
10.கருணை காட்டு - மக்கள் ஓசை
11.ஏன் பெற்றாய்? - தமிழ் நேசன்
12.எனக்கு ஒன்று - மக்கள் ஓசை
13.அகத்தின் அழகு - செம்பருத்தி
14.பெண்ணுரிமை - தென்றல்
15.மனசு - நயனம்
16.விவாகரத்து - நயனம்
17.கருவறை - செம்பருத்தி
18.நிலையில்லா வாழ்வு - நயனம்
19.அன்னை - தென்றல்
20.பூஜிக்கிறேன் - நயனம்
21.ஈகோ -தமிழ் நேசன்
22. படிக்காமல் - செம்பருத்தி
23. மாற்றம் - நயனம்
24.சொன்னதும் செய்ததும் - தென்றல்
25.புதுமைப்பெண் - தென்றல்
26.மனித மனங்கள் - நயனம்
27.பெண்மை - மக்கள் ஓசை
28.தூறல்கள் - மின்னல்
29.மெய்காதல் - தென்றல்
30.காதல் ஆராய்ச்சி - தென்றல்
31.நவம்பரில் நாங்கள் - தென்றல்
32.தந்தையே தியாகி - மக்கள் ஓசை
33.ஆஸ்கார் விருது - மக்கள் ஓசை
34. இப்படிச்செய்ய எப்படியம்மா மனசு வந்தது! - தென்றல்
35.அன்னையின் தியாகம் - தமிழ் நேசன்
36.கண்ணீரில் கரை சேர்ந்தேன் - தமிழ் நேசன்



தீபாவளி மலருக்கான எனது பங்களிப்பு

1.தீபாவளி பரிசு - தமிழ் நேசன்
2.ஷோப்பிங் ரகளை - மக்கள் ஓசை
3.விடிந்தால் தீபாவளி - தமிழ் நேசன்
4.தீபஒளியும் தீபாவளி மலரும் - மக்கள் ஓசை
5.கேள்வி பதில் - தீபாவளி கலாட்டா - தென்றல்
6.மறக்கமுடியாத தீபாவளி - தமிழ் நேசன்
7.இதுவே இன்பத் தீபாவளி - மலேசிய நண்பன்
8. மீண்டும் வருமா அந்த நாள் - மலேசிய நண்பன்
9.தீபாவளி விருந்திற்குப் போகலாம் வாங்க - தீபாவளி கலாட்டா - தென்றல்


வாசகர் களம்

1.ஓஷோவின் நூல்கள் ஒர் அறிமுகம் - தமிழ் நேசன்
2. என்னைக் கவர்ந்த பாடகர்- ஏசுதாஸ் - தமிழ் நேசன்
3. உள்ளூர் பாடகர் திலிப்வர்மன் - தமிழ் நேசன்
4.நெஞ்சைக்கவர்ந்த டி.எம்.எஸ் - தமிழ் நேசன்
5.என்னைக் கவர்ந்த குற்றவியல் துறை - தமிழ் நேசன்
6. கன்னிமாடம் நாவல் விமர்சனம் - தமிழ் நேசன்
7. வட்டிமுதலைகளிடம் கடன் பெறுவது சிறப்பா? - தமிழ் நேசன்
8. என்னைக்கவர்ந்த புதிய பாடல்கள் - தமிழ் நேசன்
9. இன்றைய திரைப்படங்கள் கவர்கின்றனவா? - தமிழ் நேசன்
10.சினிமா ஒரு விழிப்புணர்வு மையம் - தமிழ் நேசன்
11. நம் நாட்டில் மொழி கலப்பு தவிர்க்கவியலாது - மலேசிய நண்பன்
12.அழகான கவிதைவரிகள் பழைய பாடல்கள் - தமிழ் நேசன்
13.கலாச்சார சீரழிவிற்கு மனமே காரணம் - தமிழ் நேசன் (50வெள்ளி பரிசு பெற்ற கட்டுரை)
14.புதுத்தெம்பை தருபவை டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் நூல்கள் - தமிழ் நேசன்


தொடர்கள் (மலேசிய நண்பன்)...

ஓஷோவைப் பற்றிய ஆன்மிகத் தேடலில் நான், தொடராக பதினைந்து வாரங்கள் பல எதிர்ப்புக்குரல்களைக் கடந்து வந்த கட்டுரைகள் இவை.:-

1ஓஷோவின் வாழ்வியல் உண்மை
2.எறும்புகள் தற்கொலை செய்து கொள்வதில்லை 
3.காயம் பட்ட மக்களை காமம் காயப்படுத்தி விட்டது
4.நிரந்தரமான நிரந்தரம் வாழ்க்கை
5. கோபம் பலமா?பவீனமா?
6.கட்டொழுங்கு இல்லையென்றால் விழிப்புணர்வு வராது
7. கடையைப்பாருங்கள் வீடு சரியாகிவிடும்
8.அழகே நீ யார்?
9.பெண்ணை நேசி, ஆராயாதே
10.காதலே தெய்வீகக் காதலே
11.அன்பு,நேசம்,காதல் - நேசிக்கத்தெரியாதவர்களின் வாழ்க்கை
12.எல்லோருமே உயிர்த்தன்மையுள்ள மனிதர்களா?
13.ஓஷோவின் பார்வையில், அறிவுப்பூர்வமும் உணர்ச்சிப்பூர்வமும்
14. அன்பின் நிலை இரண்டு
15. மனம் என்று ஒன்றுமில்லை

மலர் மாத இதழில் .
1. மூடப்பழக்கவழக்கங்களும் விஞ்ஞான விளக்கங்களும் - ஆய்வுத் தொடர்


சர்ச்சைக்குள்ளான எதிர்வினைப் பதிவுகள்

1.விமர்சனத்திற்குக் கிடைத்த பரிசு - மலேசிய நண்பன்
2. மின்னலே ஓ மின்னலே - (ஆசிரியரின் திட்டுதலோடு) தென்றல்
3. குண்டுச்சட்டி நிருபர்கள் - தென்றல்
4. குறைகளைச் சுட்டுங்கள்- வெட்டிவேலை வேண்டாமே - மக்கள் ஓசை
5. தெளிவில்லாத அச்சும் கோணல் முகங்களும் - பத்திரிகை தரம் குறித்து எனது குமுறல் - மக்கள் ஓசை
6. தனித்துவாழும் தாய்மார்களுக்கு மாநகர் வீடு கிடையாதா? - மக்கள் ஓசை
7. சிந்திக்கவைக்கும் படைப்பாளன் தானே எழுத்தாளன் - எதிரொலி தென்றல்
8. ஆண்களே காரணம்- தென்றல்
9.பெண்கள் பேருக்காக எழுதுகிறார்களா? - எதிரொலி தென்றல்
10. கிண்ணம் பாதி காலியா அல்லது பாதி நிறைந்துள்ளதா? - கண்டனக்கடிதம் - மலேசிய நண்பன்
11.எழுத்தின் விவேகம் - எதிரொலி தென்றல்
12. ஆதாரமேயில்லா பழிச்சொல் - எதிரொலி தென்றல்
13. இனி வேகாது இந்த பருப்பெல்லாம் - எதிரொலி தென்றல்
14. காழ்புணர்ச்சியை அடையாளங்காண்க - மலேசிய நண்பன்
15. மொழிபெயர்ப்பில் அசலைப்படித்துவிட்டு கருத்து கூறுவதே சிறப்பு - மலேசிய நண்பன்
16. நல்ல படைப்புகளுக்கு ஊக்கம் கொடுப்போம் - மலேசிய நண்பன்
17. வானொலி பெயரைப் பயன்படுத்தி லாபம் தேடும் அறிவிப்பாளர்கள் - மலேசிய நண்பன்
18. பெண்ணுரிமையும் சுதந்திரமும் - மலேசிய நண்பன்
19.தமிழை பிடித்துக்கொண்டு தமிழ் மரபை புறக்கணிப்பவர்கள் - மக்கள் ஓசை
20.யார் எழுத்தாளர்? - மக்கள் ஓசை
21.இதுதானா அரசியல்? - தென்றல்
22.பெண்களை இழிவு செய்யாதே (வானொலி நிகழ்ச்சி) - மலேசிய நண்பன்
23. வானொலிநாடகங்களும் நடக்கும் கூத்துகளும் - தினக்குரல்
24.இலக்கியமும் குழாயடி சண்டையும் - தென்றல்
25.எனது பதிவுகளில் வசீகரம் அதிகம் - எதிரொலி தென்றல்
26.சரக்கே இல்லாத கோணாங்கிகள் - எதிரொலி தென்றல்
27.கவிதை கருவிற்கா பஞ்சம்? பெண்களை ஏலம் போடுகிறார்கள் - எதிரொலி தென்றல்
28.மனம் நிறைய அழுக்கு - குமுறல் கட்டுரை -  தென்றல்


நேர்காணல்

1.ஷா ஆலம் விஜயாவுடன் ஒரு நேர்காணல் - தென்றல்
2.புனைவுகள் ஆய்வுகளின்றி படைக்கப்படுகிறதா? விஜயாவுடன் ஒரு நேர்காணல் - தினக்குரல்
3.முழுமை பெறாத சிற்பங்கள் - விஜயாவிடம் ஒரு விளக்கம் - நேர்காணல் மலர் இதழ்


ஏணைய இதழ்களில் என் பங்கேற்புகள்

அதீதம் - தமிழ்நாட்டு இணைய இதழ்
வல்லினம் - இணைய இதழ்
மௌனம் - கவிதை மாத இதழ்
The Malay Mail -


பட்டியலில் இடம்பெறாத இன்னும் நூற்றுக்கணக்கான விமர்சன, பாராட்டு, வாசகர் கடிதங்களும்..  சேகரிக்காமலும், தொலைந்துபோன பதிவுகளும், சேகரித்து வைத்து, என்னை நோக்கி வந்துள்ள மிக மோசமான விமர்சனங்களும், அற்புதமான பாராட்டுகளும் இதில் அடங்கா.


நன்றி வாசித்தமைக்கு.....
அன்புடன் - ஸ்ரீவிஜி

புதன், செப்டம்பர் 19, 2012

ஒத்திகை

 உன்னிடம்
பேசுவதற்குக்கூட
ஒத்திகை
பார்த்துவிட்டுத்தான்
எண்களை அழுத்துகிறேன்

விநாயகர் சதூர்த்தி ஆய்வுப் பதிவு -

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி விநாயக சதுர்த்திக்கு தமிழகம் தயாரானதா என்று வினா எழுகையில் யோசிக்காமல் விடை வந்து விழும் இல்லையே என்று.தமிழர்களெல்லாம் எப்போது இந்துக்களாக மாறிப்போனார்களோ அப்போதே கருப்பராயன்களையும் சுடலையாண்டிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு விநாயகனை முன்னுக்கு அமர வைத்தவன் தமிழன். 

இன்று கிராமம் தோறும் விநாயக சிலைகளை நிறுவி விழா எடுக்க ஆரம்பித்துவிட்டான் திராவிடத் தமிழன்.தமிழனின் பாரம்பரிய பண்டிகையாம் பொங்கல், அதை கொண்டாடுவதைக் காட்டிலும் சதுர்த்தியைக் கொண்டாடும் ஆவல் என்னமோ இந்த பத்தாண்டுகளில் தமிழனுக்கு அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது.தமிழ்க்கடவுள் என்று போற்றிக்கொண்டே முருகனை புறந்தள்ளி விநாயகனை முன்னுக்கு வைக்கிறானே தமிழன் பாழடைந்து சிதைந்து போய் கிடக்கும் குலதெய்வத்திற்கு சிலை திறக்காத தமிழன் வருடா வருடம் விநாயகனுக்கு சிலை திறக்க முதல் வரிசையில் வந்து நிற்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

 மூத்த தமிழர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவிற்கு இளைய தமிழன் முன்னவன் ஸ்தோத்திரம் முறையாகப் பாடுகிறான்.மாரியம்மன்களும் பராசக்திகளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.இங்கே யார் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம் தப்பில்லை..முன்னவன் ஆகும் அளவிற்கு விநாயகனுக்கு முக்கியத்துவம் யார் தந்தது என யோசிக்கப் பார்க்கத் தோன்றுகிறது.

 விநாயகன் யார்? தெய்வம் தானா? சிவபெருமானின் பிள்ளையா?பிறப்பெப்படி?பிறப்பில் சர்ச்சை இருக்கிறதே! பல கதைகளை புராணம் சொல்லுகிறதே! என நாத்திக பேசவும் விரும்பவில்லை.  விநாயகப்பெருமான் இன்று இவ்வுலகில் அவதரித்த நாள் ஆகவே  இன்றைய நாளில் நாம் எல்லோரும் இந்துக்கள் என சொல்லியபடி வாருங்கள் தமிழர்களே! சிலை தூக்கலாம்.. கடலில் சென்று கலக்கலாம் என்று நான் போற்றுவதிலும் அர்த்தமில்லை.
 
  மராட்டியர்களின் குலதெய்வமான விநாயகன் எப்போது தமிழகம் நோக்கி வந்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்னமே ஆய்வுகளை மேற்கொண்டு சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி பண்டை காலத்தில் இப்படி ஒரு தெய்வம் இருக்கும் செய்தி தெரியாமலே தமிழன் இருந்திருக்கிறான் என்ற உணமை பதியப்பட்டிருக்கிறது.அப்படியானால் விநாயகனை தமிழகத்திற்கு இறக்குமதி செய்தவன் யார்? விநாயகன் தமிழகம் வந்த பின்னணி என்ன என்பதையும் முன்னோர்களின் தேடல் நமக்கு பதிலாக நிற்கிறது.

 விநாயகன் என்றொரு வடிவமே கி.பி.5 ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தோன்றிருக்கும் என்று தமிழர் வேதத்தில் மறைமலை அடிகள் குறிப்பிடுகிறார். அப்படியானால் 4 ம் நூற்றாண்டில் குப்த பேரரசு ஆட்சி நடத்தியது.அது முற்றிலும் இந்து மத ஆட்சிதான்.அப்போது அங்கு விநாயன் என்றொரு இந்து கடவுள் இருந்ததாக எந்தவொரு வரலாறும் இல்லை.இடைச்செருகல் தான்.  பல்லவர் காலத்தில்தான் விநாயகன் தமிழகம் வந்திருக்கிறான் என்று தனது ஆராய்ச்சியின் முடிவில் 'ஞான விநாயகன்' எனும் கட்டுரை வாயிலாக முனைவர்.சோ.ந.கந்தசாமி சொல்கிறார். 

  முதலாம் நரசிம்மவர்மன் தானைத்தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத் தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட் டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.

        "பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட் டாக 
         கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே "

  என்று திருஞான சம்பந்தர் பாடுகிறார்.நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். என்றும் சொல்கிறார்.திருஞான சம்பந்தர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  விநாயகனை வாதாபியிலிருந்து பல்லவர்கள் கொண்டுவந்ததால் 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தால் விநாயகனை போற்றுவர் என்று சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தான் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

 வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும் சாளுக்கியர்கள் எந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தார்கள் என்று  .தன் தந்தையான முதலாம் மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை அவனது தலைநகரான வாதாபி சென்று அவனை வீழ்த்தி அந்நகரை தீக்கிரையாக்கி விட்டு 'வாதாபி கொண்டான்' என்ற பட்டப்பெயரோடு நரசிம்ம வர்மன் வந்தான் என்பது வரலாறு.இது நடந்தது கி.பி 642 ம் ஆண்டு.அந்த நேரத்தில் பல்லவர்களின் கண்ணுக்குப் பட்ட வித்தியாசமான உருவச்சிலைதான் யானைமுகத்தோடு இருந்த விநாயகச் சிலை. அதை தமிழகம் கொண்டுவந்திருக்கலாம் என்பது புலப்படுகிறது அப்படி கொண்டு வந்த சிலையை வைத்த இடம் கணபதீச்சுரமாக இன்றும்  நிற்கிறது.

 சரி விநாயகன் தமிழகம் வந்தாகிவிட்டது.விநாக சதுர்த்தி வீறு கொண்டு எழுந்தது எப்போது?

  சாளுக்கியர்கள் ஆண்ட வாதாபி இன்றைய மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.மராட்டியத்தை சத்ரபதி சிவாஜி ஆண்டபோது தேசிய விழாவாக இதை அறிவிக்க மராட்டிய மக்கள் தத்தம் வீடுகளில் வைத்து விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்து மத ஈர்ப்பு கொண்டவர்கள் அவ்விழாவைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவராக இருந்த பாலகங்காதர திலகர் இதை குடும்ப விழாவாகக் கருதாமல் ஊர் கூடி செய்யலாம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் செய்யலாம் என அறிவிக்க இந்துமத காங்கிரஸார்  ஆங்காங்கு நடத்த அது மெதுவாக தமிழகத்திற்கும் இடம்பெயர்ந்தது.இன்று தமிழ்ர்கள் கொண்டாடும் ஒரு முக்கிய விழாவாக மாறிப்போயிருக்கிறது.இந்துக்கள் கூடி பக்தியைக் காட்டாமல் தங்களின் சக்தியைக் காட்டுவதாக இந்த விழா மாறிப்போனதுதான் வருத்தப் பட வேண்டியதாயிருக்கிறது.

  நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள்.பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றாலே இந்துக்களுக்கு கொண்டாட்டத்தையும் மற்ற சிறுபான்மை மதத்தினருக்கு திண்டாட்டத்தையும் கொடுக்கும் என கடந்த காலம் சொல்கிறது.
 
சிலை ஊர்வலத்தின் போது மற்ற மதத்தவரை இழிவு படுத்தும் நோக்கில் இந்துக்கள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஒவ்வொரு சதுர்த்தியின் போதும் சிறுபான்மை இனத்தவர் குரலெழுப்ப கேட்டிருப்போம்.. சதுர்த்தி என்பது இந்துக்களின் பக்தியைக் காட்டுவதாக இல்லாமல் இந்துக்களின் பலத்தைக் காட்டுவது போல நாளடைவில் மாறிப்போனது வருத்தமளிக்கத்தான் செய்கிறது.

         மற்ற மதத்தினரோடு இருக்கும் பிரச்சனையை தீர்த்துகொள்ளவும் அவர்களைப் பழி வாங்கவும் இந்நாள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

         என்னதான் வேற்றுமையில் ஒற்றுமை என்று நம் நாட்டைப் போற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் அனைத்தும் பொய்மை என்பது புத்திக்கு புலனாகத்தான் செய்யும்.மனிதனுக்கு மனிதன் மதச் சாயம் பூசிக்கொண்டுதான் சமத்துவம் பேசுகிறான்.எந்த திருவிழாவிற்கும் இல்லாத பாதுகாப்பை அரசு இந்த விழாவிற்கு தருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.கலவரம் நடப்பது உறுதி என்று அரசுக்கும் தெரிந்திருக்கிறது.கலவரம் என்றால் தடுப்பதற்கான வழிமுறைகளை அரசு வகுத்து வைத்திருக்கிறது.மாறாக கலவரமே நடைபெறாமல் இருக்க என்ன வழிமுறை வகுத்திருக்கிறதென தெரியவில்லை.

       வட இந்தியாவில் இருந்து மத கலவரம் செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்பட்டது தான் இந்த விநாயகர் சதுர்த்தி என்னும் பிள்ளையார் பிறந்த நாள் (பிள்ளையார் உருவாக்கபட்ட நாள்). இந்த விநாயகர் சதுர்த்தி பல ஹிந்து மக்களால் அமைதியாக வீட்டிலே கொண்டாடபடுகிறது. சில ஹிந்து மத வெறியர்கள் விநாயகர் சதுர்த்தியை ஹிந்து முஸ்லிம் இடையே கலவரம் ஏற்படுத்துவதற்காகவே கொண்டாடுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த விநாயகர் ஊர்வலத்தால் நடந்த கலவரங்கள் ஏராளம் ஏராளம். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளுமே....

என்று ஒருசாரார் வேதனையைடவது தொடர வேண்டாமே என்று ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே விநாயகனை வணங்குபவர்கள் வேண்டிக்கொள்ளுங்கள்..
 
 
தொகுப்பு.. : நன்றி மதுமதி.
               

செவ்வாய், செப்டம்பர் 18, 2012

தீ

ஒரு புகைச்சல்
ஒரு தீக்குச்சி
ஒரு தணல்
மண்ணெண்ணய்
பற்றிக்கொள்ளல்
நீராய் ஒரு வத்தி
வருடலாம் ஒரு புகைச்சல்
தணலால் ஒரு பேருவகை
மீண்டும் தீப்பிடிக்கக்கூடும்..

திங்கள், செப்டம்பர் 17, 2012

ஒழுக்கம் விழுப்பம்

வெட்டி வேதாந்தம்,
வீண்கதை மன்னன்
பேச்சில் எப்போதும் கேலி கிண்டல்
எல்லாவற்றிலும் அலட்சியம்,
தேவையற்ற வீராப்பு
இவர்தான் தாத்தா..

வெற்றிலை உரலை
`டொக் டொக்’ என இடித்துக்கொண்டு
எல்லாரையும் பழித்துக்கொண்டு
வாயிற்கு வந்த வார்த்தைகளைப் புலம்பி
காறி உமிழ்ந்துக்கொண்டிருக்கும்
பாட்டி..

நானே சாகிறேன்
எனக்கு என்றுதான் விடுதலையோ
பொழுது போய் பொழுது வந்தா
குடிகாரனோடு பாடாயிருக்கு
எழவு..சனியனுங்க..
எமன் கொண்டுக்கிட்டு போகமாட்டானா.
இப்படி ஓயாமல் சாபங்களின் வழி
பெற்ற பிள்ளைகளையும் கட்டிய கணவனையும்
வசவுகளால் நிரப்பிக்கொண்டிருக்கும் அம்மா.....

அக்கம் பக்கத்தில் போடும்
குழாயடி சண்டையில்
வீதியில் பட்டமாய் பறக்கும்
ஆபாச வசனங்கள்
கெட்டவார்த்தைகளின் பல்கலைக்கழகம்..

சீர்க்கெட்ட உறவில்
உழலும் சுற்றுச்சூழல்கள்
தந்தையோடு மகள்
அண்ணனோடு தங்கை
அண்ணியோடு கொழுந்தன்
தம்பியோடு அக்காள்
கொல்லைப்புறத்தில் முகமூடிகளோடு
ஓடி மறைகிற கள்ளக்காதல்

தெருவெல்லாம் ஆர்ப்பாட்டம்
திருவிழா குண்டர் சண்டை
மது,போதை, கஞ்சா, கொலை, கொள்ளை
பெண் கடத்தல், கற்பழிப்பு
அரிவாள் வெட்டுக்குத்து
ஓயாத ரணகளம்

இப்படியே ஓடி மறைந்த
இருட்டு பின்புலத்தை நினைத்துப்பார்க்கின்றேன்
எதுவுமே என்னோடு ஒட்டிக்கொள்ளவில்லை
துணையாக வந்த
குறளும் வள்ளுவரையும் தவிர..


16/9/2012 கிள்ளானில் திரு பாலகோபாலன் நம்பியார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற 100வது  வாசகவட்ட இலக்கிய நிகழ்வில், கவிதைப்போட்டியில், ஒழுக்கமே விழுப்பம் என்கிற தலைப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட எனது கவிதை இது. விதிமுறை, 16வரிகள். எனது கவிதை விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை இருப்பினும் பங்குபெற்றதில் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்து, அற்புத பரிசை வழங்கி - மேடையிலேயே சிறப்புச் செய்தார்.  
நன்றி தலைவரே. 




சனி, செப்டம்பர் 15, 2012

விக்டோரிய ஸ்டேஷன் (Victoria Station)

ரம்லான் பெருநாள் தொடங்கி ஒரு மாதகாலம் முடிவுக்கு வருவதால், அதைக்கொண்டாடும் இறுதிகட்ட விருந்துகள்  கடந்த ஒரு வாரகாலமாக ஓயவேயில்லை எங்களின் அலுவலகத்தில். மதிய உணவு கொண்டுவரவேண்டாம் எங்களின் டிப்பார்ட்மெண்டில் விருந்து, வந்து கலந்துக்கொள்ளுங்கள் என்கிற மின்னஞ்சல் வந்த வண்ணமாக இருந்தது.

தினமும் அலுவலக வளாகத்திலேயே நடைபெற்ற விருந்துகளை விட, நேற்று கலந்துக்கொண்ட விருந்து எனக்கு சற்று வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. எங்களின் டிப்பார்ட்மெண்ட் ஏற்பாடு.

விக்டோரிய ஸ்டேஷன் என்கிற ஐரோப்பிய ரெஸ்டரண்டில் இந்த மதிய வேளை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு ஐரோப்பிய வகை உணவுகள். ஓரளவுதான், நம்மவர்களின் உணவுபோல் இல்லை. எப்பேர்பட்ட தங்கத்தட்டில் சாப்பாடு கொடுத்தாலும் வாழையிலையில் சாப்பிடுவதைப்போல் வராது. அது வேறு விஷயம். இருப்பினும் விருந்து என்று வந்து விட்டால் எல்லாவகை உணவுகளையும் ருசி பார்த்து உண்பதென்பது ஒருவித அனுபவமே.

அங்கே பரிமாறிய உணவுவகைகள் - Lobsters, fish & chip, chicken chop, beef chop, baked patato, corn stick, baked prawn, escargots, butter & bread, coffee, fruits juice  என இப்படிப் பலதரப்பட்ட உணவு வகைகள். உணவுகளின் சிறப்பு என்னவென்றால், எதிலுமே காரமில்லை, புளிப்பு இல்லை, அதிக கரிப்பு இல்லை, அதிகமான இனிப்பும் இல்லை, சோறு இல்லை. பொரியல் இல்லை, குழம்பு இல்லை. (இதெல்லாம் இல்லாமல் ஒரு தமிழனை சாப்பிட வைப்பதென்றால் சும்மாவா.!) அதனால் இவையெல்லாம் நமக்குச் சரிபட்டு வராது. விடுங்க.

உணவு ஒரு பக்கமிருந்தாலும், அந்த உணவு விடுதியின் சூழல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. பழைய பாணி ரயில் வண்டியின் பெட்டியில் அமர்ந்துக்கொண்டு சாப்பிடுவதைப்போன்ற உணர்வைக் கொடுத்துக் கொண்டிருந்தது.எங்கு பார்த்தாலும் பழைமை மாறாத தோற்றங்கள்.

1800களில் தொடங்கப்பட்டு இன்னமும் அதே பரபரப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் உலகப் பிரசித்திப்பெற்ற லண்டன் விக்டோரிய ரயில்வே ஸ்டேஷனின் ஆரம்ப கால நிலையைப் பறைச்சாற்றுகின்ற சூழலாகவே இருந்தது அந்த ரெஸ்டரெண்ட்.

பழைய வானொலிப்பெட்டி, கடிகாரம், நீர் கோதிக்கவைக்கும் கேத்தல், தொலைக்காட்சிப்பெட்டி, திசைகாட்டும் கைவிளக்குகள், புகைவண்டி நிலையத்தில் பயன்படுத்திய பழைய பொருட்கள் என எல்லாமே பார்ப்பதற்கு வித்தியாசமாகவே இருந்தது. சுற்றிலும் உள்ள பொருட்கள் மின்சாரம் இல்லாத பழைய காலத்தை நினைவுக்கூர்ந்தன.

ஆரம்பத்தில் எனக்குப்புரியவே இல்லை. ஏன் இந்த விக்டோரிய ஸ்டேஷன் ரெஸ்டரெண்ட் இப்படி வித்தியாசமாக இருக்கின்றதென்று.! எங்களின் குழுவில் உள்ள சக பணியாளர் ஒருவர், லண்டனுக்குச் சென்றிருக்கையில் இந்த ரயில்வே ஸ்டேஷனை நேரில் கண்டுள்ளதால், அங்கே உள்ள சூழல் பற்றி எங்களோடு பகிர்ந்துக்கொண்டார். கூடுதல் தகவல் பெற, விக்கிபிடியாவில் காணலாம்.

# பி.கு : உணவுகளின் விலையும் அதிகம் இங்கே - ஃபைவ் ஸ்டார் ரேஞ்சில்#


நாங்கள் பெண்கள் மட்டும் ஒரு மேஜையில் அமர்ந்துக்கொண்டோம்.. சாப்பிட்டுக் கிளம்பும்போது எடுத்த புகைப்படம் இது.

பழைய பாணி ரயில் பெட்டியின் அருகில் நானும் என் சக பணியாளரும்.


நாங்கள் சாப்பிட்ட உணவுகளின் வகைகள். முதல் முதலில் இருப்பது ஒருவகை நத்தை. 


அந்த ரெஸ்டரெண்டின் உள்ளே உள்ள சில காட்சிகள். 

ஒரு கதை ஒரு விளக்கம்

அற்புதமான சிறுகதை ஒன்றை அனுப்பியுள்ளேன், நம் நாட்டிலும் பின்நவீனத்துவம் வளர்ந்துள்ளது என்பதனைப் பறைச்சாற்றும் ஓர் கதை இது, வாசித்துப்பாருங்கள், உங்களின் கருத்து எனக்குத்தேவை. என, எனக்கு ஒரு மெயில் வந்தது. அனுப்பியவரும் இலக்கியத்துறையில் உள்ளவர்தான். அந்த சிறுகதையும் என் கைவசம் உள்ளது. இருப்பினும் அது வேண்டாம். தனி நபர் தாக்குதல் போலாகிவிடும்.

படித்துப்பார்த்தேன், என்னைக்கவரவேயில்லை அச்சிறுகதை. அழகான நடை, அற்புதமான தமிழ்.. அறவே ஆங்கிலக்கலப்படமில்லாத ஒரு கதைதான். இருப்பினும் அதில் ஒன்றுமேயில்லை.

முன்று பகுதிகளாகப்பிரித்து, அங்கேயும் இங்கேயும் தாவி, வாசகர்களை குழப்பி, முடிவு தெளிவில்லாமலும், கதையை எந்த கோணத்தில் வாசித்தாலும் கருவே தென்படாமலும் முடித்திருக்கின்றார் எழுத்தாளர். குழப்புவதுதான் பின்நவீனத்துவமா?, என்கிற என் கருத்தை, வழக்கம்போல் ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். நம்மவர்களுக்குத்தான் வெளிப்படை என்றால் பாகற்காய் போல் கசக்குமே.! முகஸ்துதியைத்தானே பெரும்பாலும் பால்பாயசம்போல் விரும்புவார்கள்.

`நான் நிறைய வாசிக்கின்றேன், என்னையே அவமதிப்பதைப்போல் உள்ளதே உன் கருத்து. அப்போ நான் என்ன ஒண்ணும் தெரியாதவனா(ளா)? இவ்வளவு காலம் எழுதுகிறேன் வாசிக்கின்றேன், எனக்குத் தெரியாதா, எது நல்ல கதை என்று..! ’ அப்படி மனதில் நினைத்திருக்ககூடும். ஆனாலும் சொல்லவில்லை. இருப்பினும், என்னிடம் மிக நாகரீகமாக ஒரு கோரிக்கையை வைத்தார்.

நீங்கள் எப்போது பார்த்தாலும் எல்லா சிறுகதைகளையும் நன்றாக இல்லை, அப்படி.. இப்படி என ஏதாவது குறைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றீர்களே, உங்களுக்குப் பிடித்த, உங்களைக் கவர்ந்த, ஒரு சிறுகதையைச் சொல்லமுடியுமா? காட்டமுடியுமா? அது எப்படி இருக்கு என்றும், என்னைக் கவர்கிறதா என்றும் பார்க்கப்போகிறேன், என்றார்.

நமக்குத்தான் அழியாச்சுடர்கள் கைவசமிருக்கே.. அங்கே நிறைய அற்புதமான சிறுகதைகளை அவ்வப்போது வாசித்துவருகிறேன். பெரும்பாலும் எல்லாக்கதைகளும் அற்புதமானவை. எதாவதொரு வகையில் நமக்குப் பாடம் புகட்டிக்கொண்டிருக்கும்.

அங்கே சென்றேன், சாரு எழுதிய முள் என்கிற சிறுகதையை எடுத்தேன், அந்த நபருக்கு அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, லிங்க் அனுப்பினேன். இதைப் படித்து விட்டு கருத்து பகிருங்கள் என்று. ஒரு நாள் முழுக்க மூச்சு பேச்சே இல்லை.

மறுநாள், மெயில் வந்தது.. அந்த சிறுகதையில் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லையே.! மீன்பிடித்தொழிலைப் பற்றி சொல்லியிருக்கின்றார் எழுத்தாளர், அதோடு அற்புதமான காதலையும் அங்கே இழையோடவிட்டிருக்கின்றார் அவ்வளவுதான், மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லையே, என்றார் பாருங்களேன், எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. என் தொண்டையில் முள் சிக்கிக்கொண்டது.

எது காதல் என்பது கூட சரியாகத் தெரியாதவர்களுக்கு, அந்த சிறுகதையைப்பற்றி நான் பக்கம் பக்கமாக எழுதினாலும், விளங்கிடும் பாருங்க...!

சரி, அது அவரின் புரிதல். அதை அப்படியே விட்டிடவேண்டியதுதான். நமக்கென்ன வந்தது.



  

வியாழன், செப்டம்பர் 13, 2012

நீண்ட கூந்தல் அவசியமா?

திருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்திருக்க  மிகவும் சிரமப்படவேண்டி இருக்கும்.  கூந்தல் பராமரிப்பு என்பது அவ்வளவு சுலபமானதல்ல. சரியான முறையில் கூந்தலைப் பாதுகாக்காவிடில் பேன் பொடுகு பிடித்துவிடும். முடி உதிரும். தலையில் புண்கள் வரும்.


முன்பெல்லாம் நான் மிகவும் மெலிந்து காணப்படுவேன். ஆனால் தலையில் பேன் மட்டும் அதிகமாக மொய்க்கும். இரட்டை இரட்டையாக மொய்க்கும். எப்போது பார்த்தாலும் கைகள் தலையையே பிராண்டிக்கொண்டிருக்கும். சாப்பிடுகிற சாப்பாட்டையெல்லாம் பேனுக்குக்கொடுக்கின்றீர்களா ? என்று கூட சிலர் கிண்டலாகக் கேட்பார்கள்.

நீண்ட கூந்தல் வைத்திருக்கின்ற காலகடத்தில், பள்ளிக்குச் செல்லுகையில், தலைவாரி சடை பின்னி பள்ளிக்குக் கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சரியாக வாரிக்கொள்ளாமல் சும்மானாலும் சுருட்டிக்கொண்டு பள்ளிக்குச்சென்றால், பொது மேடையில் பல மாணவர்களின் முன்னிலையில், இது சரியில்லாத தலைவாரல்; என்று உதாரணம் காட்டி அவமதிப்பார்கள். அதற்காகவே எண்ணெய் வைத்து, இழுத்து வாரி, இறுக்கமாக இரண்டு சடைகள் நுனிவரை பின்னி, அதை ரிப்பன்னால் தொடர்ந்துப் பின்னி, மடித்துக்கட்டிக் கொள்வோம். (மூணு படத்தில் பள்ளிக்குச்செல்லும் நடிகை ஸ்ருதி போல்.)


இந்த இரட்டைச் சடை பின்னல் பார்ப்பதற்கு சுலபம் போல்தான் இருக்கும், ஆனால் அதைப் பின்னுவதற்கு மிகவும் கடினம். முதலில் நேர்கோடு, அதன் பிறகு பின்பக்கம் நேர்கோடு எடுத்து முடியை இரண்டாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். வலதுபக்கம் வாரி சடை பின்னி, ரிப்பன் கொண்டு கட்டியபிறகு, இடதுபக்கம் வார வேண்டும். எல்லாம் சரியாக செய்துமுடித்து கண்ணாடியைப்பார்த்தால் ஒன்று மேலேயும் மற்றொன்று கொஞ்சம் இறங்கி கீழேயும் இருக்கும். ஒன்றை அவிழ்த்து சரி செய்து பின்னியபின் மற்றொன்று கோளாறாக இருப்பதைப்போல் இருக்கும். எல்லாம் சரியாக வந்ததுபோல் இருந்தால் ஒரு பக்கம் சடை மொத்தமாகவும் இன்னொரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கும். அப்படி இப்படி என பின்னிக் கொண்டு பள்ளிக்குச்சென்றால், தோழிகள் கிண்டல் செய்வார்கள், `உன் பின் பக்கம்  இருக்கின்ற பின்னல் வகிடு, கிள்ளான் ஆறு மாதிரி கோணல் மாணலாக செல்கிறதே.!’ என்று.

ஆக, யாருமே இல்லாமல் தனியாளாக நமது நீண்ட கூந்தலை நாமே பின்னி முடிப்பதென்பது கஷடமான காரியமே..

வாரத்திற்கு இரு முறை தலை குளிக்கவேண்டும். அதுவும் செவ்வாய் வெள்ளி கிழமைகளில்தான் தலை குளியல். மற்ற நாட்களில் மழையில் நனைந்தால் கூட, தலையைத் துண்டால் துடைத்துக்கொண்டு உடம்போடுதான் குளித்துவிட்டு வருவோம்.

நாங்கள் கூட்டுக்குடும்பம். ஆக, நிறைய பெண்கள் இருப்போம். வீட்டில் ஷம்பூ எல்லாம் வாங்க மாட்டார்கள். கட்டுப்படியாகாது என்பதால். கிலோ கணக்கில் சியக்காய்களை வாங்கிவைத்துக்கொண்டு, அதை ஒரு அண்டாவில் ஊறவைத்து, அம்மியில் நன்கு அரைத்துத்  தலையில் தேய்த்துக் குளிக்கவேண்டும். அதன் நுரையே ஷம்பூ போல் தான் இருக்கும்.

நாங்களே குளித்தால், மிக ஜாலியாக குளித்துவிட்டு வருவோம், சில வேளைகளில் அம்மா, தலை குளிக்கும்போது, குளியலறைக்குள் நுழைவார், திக்கென்றிருக்கும். அதாவது, தலை கசக்கி விடுகிறேன் என்று சொல்லி, தலை முடியை பிடித்து பிய்த்து இழுத்து, பலம் கொண்டு தேய்த்து கசக்கிக்குளிப்பாட்டி ஒரு வழி பண்ணிவிடுவார்.

அவர் தலை தேய்த்துக்குளிப்பாட்டி விட்டால், முடியில் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு காணவே இரண்டு நாள்கள் ஆகும். சடைமுனி மாதிரி முடி அப்படியே திரித்துக்கொண்டும் முறுக்கிக்கொண்டும் நிற்கும். எண்ணெய்யை விட்டு வழித்து வழித்து சீவுகிற போதுதான் பழைய நிலைக்கே வரும். கொடுமையாக இருக்கும் நிலைமை..

முன்பெல்லாம் மாலை வேளைகளில் வாசலில் அமர்ந்துகொண்டு ஒருவர் தலையை ஒருவர் பேன் பார்ப்பார்கள். கதறக்கதற பேன் சீப்பு கொண்டு சீவுவார்கள்..பேன்கள் அப்படியே கொட்டும், அங்கேயும் இங்கேயும் உதிரும். அதை பெருவிரல் நகங் கொண்டு படக் படக் என்று நசுக்கிச்சாகடிப்பார்கள். கையில் வாங்கிக்கொண்டு இரு நக இடுக்கிலும் வைத்துக்கொண்டு சாகடிக்க அவ்வளவு பிரியம்.

பேன் விடுகதைகளும் அப்போது மிகப்பிரபலம். கிளை இல்லாத மரங்களில் ஏறுவான், மரத்திற்கு மரம் தாவுவான், குரங்கு அல்ல, அவன் யார்? எல்லோருக்கும் கால்கள் கீழே இருக்கும், ஒருவனுக்கு மட்டும் கால்கள் தலையில் இருக்கும், அவன் யார்? என இப்படி....

நம் இனப் பெண்பிள்ளைகளின் தலைகளில் பேன் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். காரணம் எல்லோருக்கும் நிச்சயமாக பேன் பிடிக்கும். முன்பு, நான் பள்ளிப்பயிலும் காலகட்டத்தில், அரசாங்க கிளினிக்குகளில் பேன் மருந்து இலவசமாகக் கொடுக்கப்பட்டது. பேன்களை ஒழிப்போம் என்கிற பிரச்சாரப் பலகைகள் எல்லாத் தமிழ் பள்ளிகளிலும் காணலாம். பேன்கள் ஏற்படுத்துகிற விளைவுகளை நன்னெறி பாட நூலிலும் சேர்த்திருப்பார்கள்.

நீண்ட கூந்தலைச் சரியாகப் பராமரிக்கதெரியாமல் இருப்பவர்களுக்கு சடைமுனி மாதிரி திரிந்த கூந்தல் ஏற்படுகிற வாய்ப்பு அதிகம். அதிக எண்ணெய் விட்டு சரியாக வாரிவந்தால் இப்பிரச்சனைக்கு ஒரு விடிவு ஏற்படும்.

இப்படி எண்ணெயினை அதிகம் விட்டு வாரிவருவதால், நேரம் செல்லச்செல்ல அந்த எண்ணெய்யானது நெற்றியின் வழி முகமெல்லாம் வடியத்துவங்கிவிடும். எண்ணெய் வடிகிற முகத்தில் பளீரென்று படுகிற சூரியன் விட்டுச்செல்கிற கோலமானது, இன்னும் கொடுமை. முகத்திற்கு கருமையைக் கூட்டிவிட்டுச்செல்லும். பல இனங்கள் பயிலும் பள்ளிகளில், நம்மவர்களைக் கண்டாலே, ஒரு அடி தள்ளிதான் நிற்பார்கள். நமது எண்ணெய் வழிகிற முகம் கவரும்படியே இருக்காது. பழைய எண்ணெய்யின் நாற்றம் வேறு தூக்கலாக இருக்கும். அதுவும் ஒரு காரணம்.



இவ்வளவு அவஸ்தைகளிலும், நீளமான கூந்தலுக்குத்தான் காவியம் என்று கவிஞர் சொல்லிச்சென்றுள்ளார் என்பதால், நீண்ட கூந்தல் பிடிக்கவில்லை, முடி வெட்டிக்கொள்ளப் போகிறோமென்று சொன்னால், அப்பாவிற்கு அவ்வளவு கோபம் வரும். நீண்ட கூந்தல்தான் அழகு. முடி வெட்டிக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டாம் அப்படியே எங்கேயாவது குளம் குட்டையில் விழுந்து சாவுங்கள், என்று சொல்லி மிரட்டுவார்கள். சாபமிடுவார்கள். அவ்வளவு ஸ்டிரிக். கூந்தல் விஷயத்தில்.

சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா எல்லாம் விக் வைத்துக்கொண்டு குடும்ப பாங்கான படங்களின் நீண்ட கூந்தலைக் காட்டி  நடிக்கின்றார்கள். அவர்கள் மாதிரி நாங்களும் இருக்கவேண்டுமென்றால் எப்படி முடியும்? முடி வெட்டினால் காலை வெட்டுவேன், என்று கூட மிரட்டியிருக்கின்றார் அப்பா.

சில வேளைகளில், ஆரோக்கியமில்லாத நீண்ட கூந்தலின் நுனியில், கூந்தல் வெடிப்பு இருக்கும். அதாவது ஒரே முடிதான் ஆனால் அதன் நுனியில் மட்டும் வெடித்து இரண்டாகத்தெரியும். இப்படி இருந்தால் கூந்தல் வளராது என்று சொல்லி, பலவிதமான எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்திய அனுபவமும் உண்டு.

பாம்பு எண்ணெய் - எப்படித்தான் செய்வார்களோ தெரியாது, ஆனால் அதன் பெயர், பாம்பு எண்ணெய். பாம்பின் கொழுப்பில் செய்வார்கள் போலிருக்கு. கூந்தலின் நுனியில் அழுத்தித்தேய்த்து வந்தால் கூந்தல் கருகருவென வளரும் என்பார்கள். (அட முருகா, கூந்தலின் நுனிக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் சம்பந்தமிருக்கா என்ன.!) செம நாற்றம் தெரியுங்களா இந்த எண்ணெய். எங்க சின்னம்மா அடிக்கடி இதைப் பயன்படுத்துவார். வாடை, அவரின் பக்கமே செல்ல முடியாமல் செய்துவிடும்.

உடும்பு எண்ணெய் - கடவுளே இதுவும் பயங்கரமாக நாற்றமடிக்கும். கூந்தல் வளர்ச்சியில் நம்மவர்களுக்குத்தான் எவ்வளவு பேராசை பாருங்களேன்.

சொந்தமாகத்தயாரிந்த தேங்காய் எண்ணெய் - தேங்காய்ப்பாலை நன்கு காய்ச்சி எண்ணெய்யாக்கி அதில் செம்பருத்தி, பொண்ணங்கன்னி, செண்பகப்பூ, வெந்தயம், வேர்கள் என சேர்த்து வைத்துக்கொண்டு தலையில் தேய்த்துக்கொள்ளவார்கள். எங்களுக்கும் எங்களின் அம்மா இதைத்தான் செய்து கொடுப்பார்.

கடையில் விற்கிற பொண்ணாங்கன்னித்தையலம் - முன்பு இவ்வெண்ணெய் இங்கே மிகப்பிரபலம். ஒரு பெண் நீண்ட கூந்தலை அவிழ்த்து விட்டபடி போஸ் கொடுத்துக்கொண்டிருப்பார். கரும் பச்சை வர்ணத்தில் இருக்க்கும் இந்த எண்ணெய். இதைத் தேய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு பேன் புளுத்துக்கிடக்கும். காரணம் அதன் மணம் பேனுக்கு விருப்பமாம்.

இவற்றையெல்லாம் மாறி மாறி தேய்த்துக்கொண்டிருந்தாலும் கூந்தல் எலி வால் மாதிரி மெலிந்துதான் இருக்கும் சிலருக்கு. கூந்தல் வளர்ச்சியில் எண்ணெய்களின் பங்கு, சிக்கல் இல்லாமல் வாரிக்கொள்வதற்குத்தான், மற்றபடி உணவுப்பழக்கம், தூய்மை, நல்ல காற்று, நீர், வயது, சுற்றுச்சூழல், கவலையில்லா நிலை, வாழ்க்கை முறை, பரம்பரை போன்றவைகள்தான் கூந்தல் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கின்றதென்று இன்னுமும் நம்ப மறுப்பவர்களை மாற்றுவது கஷ்டமே.

அண்மையில், என் பள்ளித்தோழி ஒருவளை ஒரு திருமண வைபவத்தில் சந்தித்தேன். பள்ளியில் பயில்கிற போது, நான், நீ என போட்டி போட்டுக்கொண்டு நீண்ட கூந்தல் வைத்திருப்போம் இருவரும். இப்போது என் கூந்தல் எனக்கு தோள்வரைதான் இருக்கிறது, ஆனால் அவள் இன்னமும் அதே நீண்ட கூந்தல் வைத்திருக்கின்றாள். ஒற்றைச்சடை பின்னல் இட்டு பிட்டம்வரை ஆடிக்கொண்டிருந்தது அவளின் கூந்தல்.  அடிக்கிற காற்றில் உடைகள் கூட அசையவில்லை, ஆனால் அவளின் சடை அசைந்து கொண்டே இருந்தது. அவ்வளவு மெல்லிய சடை.

எதுக்கு இன்னமும் இந்த வால் போன்ற கூந்தலை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டதிற்கு, கணவர் வெட்ட விட மாட்டேன் என்கிறார், என்ன செய்ய! என்கிறாள்.  அடப்பாவமே இன்னமுமா? நீண்ட கூந்தலால் என்ன வந்து விடப்போகிறதோ தெரியவில்லை.!

என்ன செண்டிமெண்டலா இருக்கும்..!!?  இப்படி எலி வால் போல் இருக்கும் கூந்தலை விட மொட்டைத்தலையே மேல்.

நீண்ட அடர்ந்த கூந்தலை வைத்திருக்கும் போது, விதவிதமாக தலைவாரிக்கொள்வோம். ஒரு அனுபவம் பின்நோக்கி.....



இரட்டைப்பின்னல்

பூராண் சடை - இதை நாமே பின்ன முடியாது. யாராவது பின்னி விட்டால்தான் உண்டு.

சடையை ரிப்பன் கொண்டு மடித்துக்கட்டுவது

நன்றாக இழுத்து, பின்னே ஒரு ஒற்றைக்கொம்பு கட்டி, அதை சடையாக்கிக்கொண்டு பின்னி ரிப்பன் கட்டுவது.

நீண்ட சடை பின்னிய பிறகு அதை கொண்டையாகக் கட்டிக்கொள்வது

இரண்டு சடை பின்னி, வலதுபுற சடையை இடதுபுற சடையில் ரிப்பன் கொண்டு கட்டுவது. இடதுபுற சடையை வலது புற சடையில் கட்டுவது.

இரண்டு சடை பின்னி இறுதியில் இரண்டையும் சேர்த்து ஒன்றாகக்கட்டிக்கொள்வது.

முடியை லூஸ் செய்து, பாதியிலிருந்து சடை பின்னிக்கொள்வது. (80’ஸ் நடிகைகள் போல்..)

கோணல் சடை - முடியைச்சீவி ஒரு பக்கமாக வைத்து சடை பின்னிக்கொள்வது.

ரெண்டு கொம்பு - அதில் சடை.

தலையிலேயே வலதுபுறமாகப்பின்னிக்கொண்டு பிறகு இடதுபுறமாகக் கொண்டு வருவது.

நீண்ட சடை பின்னி, ரப்பர், ரிப்பன் எதுவும் பயன்படுத்தாமல் ஒரு முடிச்சு போட்டுக்கொள்வது.

எல்லாவற்றிலும் சடை இருக்கவேண்டும். தலைவிரி கோலமாக நடந்தால், கிழவி வெற்றிலை உரலை நம்மீது வீசும். (முன்பு நாங்கள் கூட்டுக்குடும்ப வாசிகள்)











  

Enlargement procedure - News View

New Jersey
A man who is only 22year old, seeking for penile enlargement procedure, treatment went wrong and causes him death the next day.

The lady who has  no midecal licence or training, administered a silicone shot to the man's penis end up tragedy.

His death was ruled as homicide after an investigation and a medical examiner's determination that he died of a silicone embolism.

Thank you THE STAR news paper.



புதன், செப்டம்பர் 12, 2012

என் நிலை

என் இடத்திற்கு வா
இந்த நிலை புரியும்
இடம் என்பது? 
வயது

இதையும் 
தாண்டிப்போனவர்கள்
என் இடத்திற்கு
இன்னும் பின்னே இருப்பவர்களும்
இங்கே வரலாம்
இங்கே என்பது?
நிலை

இதையும் தாண்டி
இன்னும் முன்னே இருப்பவர்கள்
முன்னும் பின்னும்
இருக்கலாம்
அங்கேயே இருங்கள்
அங்கே என்பது?
??