ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

இலக்கியவாதிகளுக்கு எது அளவுகோல்?


தினக்குரல் - வாசகர் குரல், மக்கள் குரலாக மாறி வருவது மனதிற்கு உற்சாகத்தை அளிக்கின்றது. எவ்வளவோ அவலங்களைச் சொல்வதற்கு களங்களைத் தேடியலைந்து, நிஜமாகவே மக்களின் எதிரொலிக் குரலாக ஒலித்து, தற்போது நமது சொந்தக்குரலாக மாறியிருக்கின்ற தினக்குரலையும் அதன் ஆசிரியர் மற்றும் அவர்தம் குழுவினரையும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். பல சவால்களை எதிர்நோக்கி, ஆசிரியரின் அயராத உழைப்பில், அதிகவேகமாகப் பலரைச் சென்று அடைந்துக்கொண்டிருக்கின்ற ஒரு உரிமைக்குரல், நிச்சயமாக உச்சத்திற்கு வரவேண்டும் என்பதுவே என் பிரார்த்தனை.  

போகிற போக்கில், யாரோ ஒரு வாசகர், தாம் படித்த, கேள்விப்பட்ட ஒரு விவரத்தை ஆதாரத்தோடு எடுத்தியம்பிய மறு வினாடி, அதனை கவனத்தில் கொண்டு, ஆராய்ந்து, அதன் விவரமென்ன, சங்கதி என்ன, அதனால் வரும் சங்கடங்கள் என்னென்ன போன்றவற்றை மனதில் கொண்டு, எந்த கொம்பனாக இருந்தாலும், எப்பேர்பட்ட கல்வியாளராக இருந்தாலும், இலக்கியம் என்று வரும் போது, அதன் கீழ் எல்லோரும் சமம்; அதேவேளையில், சில விஷயங்களுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டுமென்கிற, ஞாயிறுகுரல் கதைக்குழுவின் துணிச்சலான முடிவால், நிஜமாகவே வாயடைத்துப்போனேன்.  

நம் நாட்டு இலக்கியம், உலகளவில் பேசப்படவேண்டுமென்றால், இந்தக் கெடுபிடிகளை அவசியம் கடைப்பிடித்தே ஆகவேண்டும். போட்டிக்கதையில் இருந்து `பி.கே.ஜி 6391’ என்ற சிறுகதையை நீக்குகின்றோம் என்கிற முடிவே சிறப்பானது. இதுவே நியாயமான முடிவும் கூட; அது குறித்து ஆசிரியரின் விளக்மும் மிக நன்று. யார் மனதையும் புண் படுத்தாமல், நாகரீகமாக எழுதியிருந்தார். இந்நேரம் கதாசிரியரும் புரிந்துக்கொண்டிருப்பார்.

 அக்கதையின் கரு, தழுவல் என்றாலும், கதை போக்கு அற்புதம் அழகான நடை. கைதேர்ந்த எழுத்தாளர்களால் மட்டுமே இது சாத்தியம். அந்த வகையில் எழுத்தாளர் சிறந்த கதாசிரியர், அதில் எந்த நெருடலும் இல்லை.

ஆனாலும், பிரபல எழுத்தாளரும், ஒரு பெண் வாசகியுமான (சரஸ்-பினாங்கு) பார்வையில் வந்திருந்த கடிதம் ஒன்றை பலரால் ஜீரணிக்கவே முடியாது என்பதனையும் இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவரின் இலக்கியப்பார்வை, சராசரி வாசக நிலையைவிட மோசமாக இருப்பதைக் கண்டு குமுறுகிறேன். இப்படி பாமரத்தனமாக எழுதிக்கொண்டு, மற்றவர்களுக்குத் தமிழ்ப் பாடம் போதிக்கும் நிலை, மற்றொரு அவலம்.  

ஒரு எழுத்தாளர்; படித்தவர், முனைவர், பல பட்டங்களைப் பெற்றவர், மொழியியல் வல்லுநர் என்றெல்லாம் கூறிக்கொண்டு, இலக்கியவாதிகளுக்கு அளவுகோல் வைப்பது, இலக்கியச்சுழலில் நடக்கும் மிக மோசமான கூத்து. அதுவே அந்த எழுத்தாளர், ஒரு மாடு மேய்ப்பவராகவோ அல்லது 'மிஷின் ஆப்பரேட்டரா'கவோ இருந்திருந்தால், போனால் போகிறது என, வாளாவிருந்து விடுவாரோ இந்த அம்மணி.?!  இலக்கிய உலகிற்கு சமாதி கட்டும் செய்கையல்லவா இது! 

படித்துப் பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் தலைசிறந்த இலக்கியவாதிகளா? நம் நாட்டு இலக்கியப் பார்வை எப்படிப் போகிறது பார்த்தீர்களா? உருப்படுமா இலக்கியம் இங்கே.? ஒரு படைப்பு, எழுத்து வடிவில் (இலக்கண, எழுத்துப்பிழைகள்) எவ்வளவு மோசமாக வந்திருந்தாலும், எழுதியவரின் மனதைப்பார்ப்பதுதான் இலக்கியம். எப்படியாவது மோசடிகள் செய்து பேர் புகழ் சேர்ப்பவர்கள் எல்லாம் இலக்கியவாதிகளாகிவிட முடியாது. அவர் கோடீஸ்வரரா அல்லது மிகச் சிறந்த கல்வியாளரா என்பதெல்லாம் இலக்கிய உலகிற்கு ஒத்துவராத அளவுகோல். இது போன்ற சிபாரிசுக் கடித்தை இனி வரும் காலங்களில் பார்க்காமல் இருக்க வேண்டுகிறேன்.

கல்விக்கும், இலக்கியப் பார்வைக்கும், அறிவிற்கும், எப்போதுமே சம்பந்தமில்லை என்பதனை எப்போது நாம் உணர்கின்றோமோ, அப்போதுதான் இலக்கியம் என்கிற விதை மெல்லத் துளிர்விட ஆரம்பிக்கும். அதுவரை எல்லாமும் பூஜியம்தான்.!!

இன்று ஞாயிறு குரலில் வந்த எனது வாசகர் கடிதம்