செவ்வாய், ஜூன் 26, 2012

அசைந்தாடி



நான் ஒரு செடி வளர்க்கின்றேன்
கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக
ஒரு செடியின் சிறிய கிளை அது.
அதன் வளர்ச்சி
ஒரு குழந்தையின் வளர்ச்சி போல்
அசைந்தாடி அசைந்தாடி
கொஞ்சம் கொஞ்சமாக..
என் நிலையை பிரதிபலிக்கும்
மகிழ்ச்சி என்றால்
அது மலரும்
சோகமென்றால்
அது வாடும்
என் கோபம்
என் விரக்தி
என் காதல்
என் ரகசியம்
என் சூழ்ச்சி
என் வஞ்சகம்
எல்லாம் தெரியும் அதற்கு
இன்றும் என்னோடுதான்
இப்போது அதனருகில் நான்
என் நிலையை கவனித்துக்கொண்டு
இன்று என் உயரத்திற்கு வளர்ந்து விட்டது
என்னை விட வளரும்
இன்னும் இன்னும் இன்னும்
அதனால் நிறுத்திவிட்டேன்
அதன் முன் நாடகமாடுவதை..

பஃக் சங் (Bak Chang)

நான் மலேசியர், மூவினங்களோடு வாழ்வதால், எல்லா இனப் பண்டிகைகளும் எங்களுக்குக் கொண்டாட்டமே.

மலாய்க்காரரகளின் (முஸ்லீம்) முக்கிய பெருநாட்கள் இரண்டு. ஒன்று ரமலான் மற்றொன்று ஹஜ்ஜிப் பெருநாள். அந்த நாட்களில் பலவிதமான பலகாரங்கள் தின்பண்டங்கள் தயார் செய்து அண்டை அயலாரோடு பகிர்ந்து உண்பார்கள். பெரும்பாலும் ஒன்று கூடிய வழிபாடுதான் அவர்களின் விஷேச நாட்களில் முக்கிய நிகழ்வு.



நம்மவர்களின் விஷேசங்கள் என எடுத்துக்கொண்டால், வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் வடை பாயசத்தோடு விருந்து என்பது அங்கே மறுக்கமுடியாத ஒன்றாகும். ஒரே மாதிரியான ஒரே விதமான பலகாரங்களை பரிமாறி உண்பது வழக்கம். உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும் வடை பாயசத்தோடு இலையில் விருந்துண்பதென்பதுவே விஷேசம்தான். அதுவே முழுமையான விருந்தாக மனதிருப்தியைக் கொடுத்துவிடுகிறது.



ஆனால் சீனர்களை எடுத்துக் கொண்டீர்களென்றால், அவர்களுக்கும் நம்மைப்போல் மாதம் ஒரு முறை விஷேச திருநாள்கள் வரும். அந்த விஷேச திருநாளில் கோவில் வழிபாடு என்பது ஒருபுறமிருந்தாலும், அதற்கென்றே பிரத்தியேகமான ஒரு பலகாரம், பிரதான பலகாரமாகத் திகழ்ந்து, அந்த விஷேச நிகழ்வின் போது அந்த பலகாரமே பிரபலமாகப் பேசப்பட்டும். அந்நாளில் அப்பலகாரம் எல்லா இடங்களிலும் விற்பனைக்கு வருவது இயல்பான ஒன்று.  அந்த நாளைத் தவற விட்டால், அப்பலகாரம் மிகுந்த சுவையுடன் சிறப்பானது கிடைக்காது என்பார்கள் சீனர்கள். (கிடைக்கும் ஆனால் சாதாரணமானதுதான் கிடைக்கும்) ஆக, கிடைக்கின்ற நாட்களிலே சாப்பிட்டுக்கொள்ளவும் என, அவ்விஷேச நாட்களின் போது, வருவோர் போவோரெல்லாம் அந்த பிரத்தியேக பலகாரத்தை கையோடு கொண்டுவந்து கொடுத்து நம்மை திக்குமுக்காடச் செய்துவிடுவார்கள்.



முடிந்த சனியன்று, பஃக் சங் என்கிற ஒரு பெருநாளைக் கொண்டாடி முடித்திருந்தார்கள் சீன சமூகத்தினர். அதற்கு முன்பே அப்பெருநாளில் சிறப்பாகப் பேசப்படும் `சங்’ என்கிற பலகாரம் பற்றிய தகவல்கள் எல்லா பத்திரிகைகளையும் அலங்கரித்த வண்ணமாக இருந்தது.

எப்படிச் செய்வது? எப்படி அலங்கரிப்பது? அதன் இலையை எப்படி மடிப்பது? சைவ அசைவ சங் செய்யும் முறைகள்? வயதான மூதாட்டி காலகாலமாக செய்து வரும் சங்’யின் சிறப்பு பற்றிய பேட்டி, இன்றைய தலை முறையினருக்கு சங் செய்யும் எளிய வழிமுறைகள் என, தினமும் இதையொட்டிய தகவல்கள் பத்திரிகையை அலங்கரித்தன. இன்று கூட ஒரு செய்தி; சங் தயாரிக்கும் போட்டியில், மாணவர்கள் பங்கு கொண்டு வெற்றி பெற்ற நிகழ்வை புகைப்படங்களோடு நடு பக்கத்தில் முழுமையாக பிரசுரமாகியிருந்தார்கள்.


 இதுதான் பஃக் சங்

இதை, நேற்றிலிருந்து எனக்குக் கொடுத்த வண்ணமாக இருக்கின்றார்கள் இங்கே உள்ள சில சீனத் தோழிகள். அந்த உணவின் சுவையை சொன்னால் புரியாது, சாப்பிட்டுப்பார்த்தால் தெரியும். அற்புதம். பெரும்பாலும் அவற்றில் பன்றி இறைச்சியை சேர்த்திருப்பார்கள், ஆனால் எனக்கு சைவமாக தயாரித்ததைத் தான் கொண்டுவந்து கொடுப்பார்கள்.  இங்கே எங்களுக்கு (தமிழர்கள்) இதுதான் பெரிய சிக்கல். மலாய்க்காரர்கள் என்றால் மாட்டிறைச்சி இருக்கும், சீனர்கள் என்றால் பன்றி இறைச்சி இருக்கும். இதனாலேயே சில விஷேசங்களுக்கு தமிழர்களை அழைத்தாலும் செல்லமாட்டார்கள். நம்மவர்களின் விருந்து என்றால் இருதரப்பினருக்கும் கொண்டாட்டம்.

இந்த பஃக் சங் பலகாரத்தை காலையிலேயே சுவைத்தவுடன், மதியம் வரை பசி எடுக்கவில்லை. Glutinous  அரிசியைக்கொண்டு தயார் செய்து, மூங்கில் இலையில் மடித்து மணக்க மணக்க அதிகமான தாணியங்களைச் சேர்த்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சங், ஒன்று சாப்பிட்டாலே போதுமானது.



அதை எப்படி தயார் செய்வது என சில சீனத்தோழிகளிடம் கேட்டேன்.. “உனக்கு எதுக்கு? நாங்களே கடையில் வாங்கித்தான் சாப்பிடுவோம், தயாரிப்பது பெரிய வேலை, ரொம்ப கஷ்டம். எங்க பாட்டி காலத்தில் செய்வார்கள்.. இப்போ எங்கே..!!!?” என பெருமூச்சு விடுகிறார்கள்.

சீனர்கள் உணவிலேயே நான் மிகவும் விரும்பிச்சாப்பிடுவது இந்த பஃக் சங் தான்.

ரெசிப்பி வேண்டுபவர்கள், இதைச் சொடுக்கவும்

http://www.soshiok.com/article/19483