வெள்ளி, நவம்பர் 29, 2013

குரு வருவார்

இன்று மதிய உணவின் போது, எனது மூன்று நாள் `மைஃக்ரென்’ தொல்லைக்கு மருந்து எடுக்கலாமென்று, அருகில் இருந்த கிளினிக் ஒன்றிற்குச்சென்றேன். மருந்து எடுத்துவிட்டு அப்படியே சாப்பிடச்செல்லலாம் என்றும் நினைத்திருந்தேன். 

தோழியும் வருவதாகச் சொன்னாள், பிறகு அவளுக்கு எதோ பிரச்சனை வர, வரமுடியாது என்று குறுந்தகவல் அனுப்பினாள்.

தனியாளாக உணவகங்களின் சாப்பிடப்பிடிக்காமல், ஏற்கனவே சக பணியாளர் ஒருவர் சொன்ன விவரம் ஒன்று ஞாபகத்திற்கு வரவே, கிளினிக் அருகில் இருந்த பாபா செண்டருக்கு மதிய உணவு எடுப்பதற்குச்சென்றேன்.

அங்கே அற்புதமான சைவ உணவு கிடைக்கும். சாப்பிட்டுவிட்டு இருப்பதைக் கொடுத்துவிட்டு வரலாம் அல்லது கொடுக்காமலும் வரலாம் என்பது அங்குள்ள நியதி, அவரவர் விருப்பமும் கூட...

செண்டருக்குள் நுழைந்தேன். அழகழகான பெரிய பாபா சிலைகள். பாபா புத்தக நூல் நிலையம் என மிகவும் தூய்மையாக அழகாக இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தேன்.. சோறு போடுவதற்கான அறிகுறிகளே இல்லை.

பாபா பக்தர்கள் விளக்கு போட்டு, தியானத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மிகத்தூய்மையான குளுகுளு வசதி கொண்ட பிரமாண்ட அறை அது.

எங்கே சாப்பாடு போடுவார்கள்? என்று கேட்க கூச்சமாக இருந்தது. கேட்கவில்லை

ஒரு ஓரமாக, மிக நீண்ட மேஜை ஒன்றினில், லட்டு, ஜிலேபி, பால்கோவா என அடுக்கிவைத்திருந்தார்கள். அங்கே சென்று இரண்டு லட்டுகள் எடுத்து ஒரு தட்டில் வைத்து, அங்கே பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்தவரை அழைத்து, ஐந்து ரிங்கிட் கொடுத்தேன்.

ஒரு வெள்ளியை எடுத்துக்கொண்டு மீத நான்கு ரிங்கிட்’ஐ என்னிடமே திருப்பிக்கொடுத்தார்.வேண்டாம் என்றேன்.
இந்த லட்டுகள் யாருக்கு? என்றார்.
எனக்குத்தான், நான் சாப்பிடப்போகிறேன் (பசி), என்றேன்.
உடனே அவர், ஒரு குட்டி தட்டினை எடுத்து, அதில் இன்னும் சில பலகாரங்களை வைத்து என்னிடம் நீட்டினார்.
எதுக்கு? கேட்டேன். அவர் என்னையே உற்று நோக்கிவிட்டு, இதற்கு முன் நீங்கள் இங்கே வந்ததில்லையா ? என்று கேட்டார். ஹூஹும் வந்ததில்லை, என்றேன். சரி வாங்க, என்று என்னை பாபாவின் பெரிய சிலைக்கு முன் அழைத்துச்சென்று, அவர் பாதத்தின் கீழ் நான் வாங்கிய லட்டு பலகாரங்களை என் கைகளாலேயே வைத்து வணங்கச்சொல்லி, பாபாவில் மேல் இருந்த ஒரு பெரிய மாலையினை எடுத்து அவரின் பாதத்தில் வைத்து, பிரார்த்தனை செய்து, அதை என்னிடம் வழங்கி, இனி உங்களின் வாழ்வில் நடப்பதனைத்தும் சிறப்பானவையே. இனி நீங்கள் அடிக்கடி இங்கு வருவீர்கள். பாபா உங்களை அழைத்துவருவார் என்று சொல்லி, சீரடி பாபாவின் சீடி ஒன்றினையும் எனக்கு வழங்கினார்.

நிஜமாலுமே ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினேன். அங்கே இருக்கின்ற அத்தனை பேரில், புதிதாக வந்த எனக்கு மட்டும் அவ்வளவு பெரிய மாலை ஒன்று கிடைத்திருப்பது மகிழ்வைத்தந்தது.

சீடி என்ன விலை? கேட்டேன்

நீங்கள் முதலில் அதைப் பாருங்கள். உங்களுக்கு இஷடமென்றால் பணம் கொடுங்கள் இல்லையேல், பரவாயில்லை. என்றார்.
கொஞ்ச நேர மௌன நோட்டத்திற்குப்பிறகு அலுவலகம் வந்துசேர்ந்தேன். வந்தவுடன், என் சக ஊழியரை அழைத்து, பாபா செண்டரில் மூன்றுவேளை உணவு கிடைக்கும் என்றாய். அப்படி ஒன்று தெரியவில்லையே..!

அதற்கு அவள், கீழே தியான பஜன் மடம். மேலேதான் உணவு வழங்குவார்கள். நீங்கள் முதல் மாடிக்குச் செல்லவில்லையா? அங்கே யாரிடமாவது கேட்டிருக்கலாமே.. யக்கா.. என்றாள்.

ஓ.. ஒகே ஒகே.