ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

முகநூலில் நாங்கள்

அன்பு ஜெ.. 

வாசிக்க நினைப்பவர்கள் எதையாவது வாசித்துக்கொண்டேதான் இருப்பார்கள். 

முகநூலில் இருந்து விலகிவிட்டால், அவன் புத்தகமும் கையுமாக இருப்பானா என்ன.?

முகநூல் அக்கவுண்ட்’ஏ இல்லாத எத்தனை பேர், புத்தகப்புழுவாக இருக்கின்றார்கள். ? 

புத்தகத்திலேயே மூழ்கி இருப்பவன் மட்டும் என்ன அறிவாளியா?

முகநூலே கதியாக இருக்கவேண்டாம் என்பதைப் பற்றிய தெளிவு உள்ளவர்களும் இங்கே இருக்கின்றார்கள்தான். இருப்பினும் தினமும் எதேனும் புதிய செய்திகள் உள்ளனவா, என்று எட்டிப்பார்த்து, மனதில் தோன்றுவதைப் பதிவேற்றி குதூகலிப்பது, தவறா?

ஒரு சினிமா படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா? என்கிற சிந்தனையில் இங்கே நுழைந்தால், உடனே தெளிவு கிடைக்கலாம்.! பலரின் பகிர்வுகள் சினிமா பற்றியதே..

எங்களுக்கே தெரியாத சில பண்டிகைகளை தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கொண்டாடி மகிழும்போது, நாங்களும் அதனின் தத்துவ அடிப்படைகளை ஆராய்ந்து பின்பற்றத்துவங்குகிறோம். கலாச்சார செயல்பாடு. உகத்தமிழர்கள் இணையத்தின் வழி இணைகிறோமே.. நன்மைதானே.. !? (அம்மா அப்பா சொல்லித்தரவில்லையா? என்று கேட்டால், அவர்களே கூலித்தொழிலாளிகள். பண்டிகையாவது பலகாரமாவது.. என்று ஓடி ஓடி உழைத்தவர்கள். சொல்லிக்கொடுக்கவில்லை என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.)

நிறைய நண்பர்கள் மூலமாக பலர் வியாபாரத்திலும் உலக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். export import, travel agencies என.!

நட்புக்குள் திருமணமும் நடந்துள்ளது. சிறப்பாகவே வாழ்கின்றார்கள்.

படித்ததில் பிடித்த பகிர்வுகள் அதிகம் நம்மையும் கவர்கின்றன. எழுதத்தூண்டுகின்றன..

பத்திரிகைகளுக்கு டாட்டா காட்டியாகிவிட்டது.. எல்லோரும் நிருபர்களாக மாறி இங்கே தகவல்களைப் பகிர்வதால், சுடச்சுட செய்திகள் உடனுக்குடன் கிடைக்கின்றன.

சில பிரபல எழுத்தாளர்கள், முகநூலை விட்டு விலகுங்கள் என்கிற கோரிக்கையினை வைக்கின்றார்கள். இருந்தபோதிலும், அவர்களின் எழுத்துகளின் மேல் காதல் வந்ததிற்கு முகநூல் பாலமாக இருந்துவந்துள்ளது என்பதனை மறுக்கத்தான் முடியுமா, அவர்களால்?

உலகம் சுருங்கிவிட்டது என்பதனை முகநூல் போன்ற சமூகவலைத்தளங்கள் பறைசாற்றிவருகிறன.

தமிழில் தட்டச்சு செய்யவேண்டும் என்கிற வேட்கை, தமிழ் படிக்காதவர்களுக்கும் ஏற்பட்டதிற்குக் காரணம் இந்த முகநூல் என்றால், இல்லை என்போமா?

தமிழில் நாம் செய்யும் எழுத்துப் பிழைகளை உடனே கண்டித்து திருத்தித் தருகிற தமிழ் நட்புகள் இங்கே அதிகம். தனியாளாக புத்தகமும் கையுமாக இருப்பவர்களுக்கு இது சாத்தியமா? நாம் செய்வதுதான் சரி என்கிற இறுமாப்பு அதிகரிக்காதா? இது அவலமில்லையா.?

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது என்பதைப்போல், ஊறுகாய் போல் முகநூல் சகவாசம் இருக்கின்றபோது, வாசிப்பிற்கு அது சுவை சேர்க்கிறது, என்று நான் சொன்னால் என்மேல் கோபப்படுவீர்களா?

நான் முகநூலின் மூலமாக நிறைய கற்கிறேன். இல்லையேல் கற்கால மனிதர்கள் போல், எதுவுமே தெரியாமல், எதையும் கற்காமல், சுற்றியுள்ள பலரை வெட்டிப்பேச்சால் வெறுப்பேற்றிக்கொண்டே இருப்பேன் என்பது மட்டும் நிச்சயம்..

விலகுங்கள் என்று சொல்லாதீர்கள். தேவையற்றதைப் பேசுகிறவர்களை நட்பு வட்டத்தில் இருந்து நீக்குங்கள் என்று மட்டும் சொல்லுங்கள் சார்..