செவ்வாய், ஏப்ரல் 02, 2013

காலை சூரியன் (மாமிகதை)


மாமிகதை..

தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்தியம் செய்தும் ஒன்றும் சரியாகவில்லை. ஒரு நாள் விட்டு மறுநாள் அதே போல் ரணமாகிறது.. தாங்கமுடியாத அரிப்புவேறு பரிதாபம்தான். என்ன செய்ய? சக்கரைவியாதி இருந்தால் தோல் அரிப்பு வருமாம். புண் ஆறுவது கொஞ்சம் கஷ்டமே. மருத்துவரும் சொன்னார்.

ஏற்கனவே தன் தாத்தாவை கவனித்துக்கொண்ட என் தோழி ஒரு ஐடியா கொடுத்தாள்.. காலை சூரியன் தோலில் படும்படி, பத்து அல்லது இருபது நிமிடங்கள் வெயிலில் அமரவைத்துப்பார். கொஞ்சம் நிவாரணம் கிடைக்கலாம் என்றார்.

என் வீட்டு பணிப்பெண்ணிடம், இன்று வேலைக்குக் கிளம்பும்போது, பாட்டியை வெயிலில் கொஞ்சநேரம் அமர வை. என்றேன்.

நான் அலுவலகம் சென்று சேர்வதற்குள் தொலைப்பேசியில் அழைத்தாள்.. அக்கா வெளியே உட்காரவைக்கவா..? என்று.

சாப்பாடு கொடுத்துவிட்டு பிறகு செய், இல்லையேல் மயக்கம் வந்துவிடப்போகிறது, என்று கூறி அழைப்பைத்துண்டித்தேன்.

வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்தவுடன் ...
புகார் செய்தார் மாமி...

யம்மா, மொட்டை வெயிலில் என்னை உட்காரவைத்து வாட்டி எடுத்து விட்டாள். அவளைப் போகச்சொல். நான் போறேன்..

என்னடி ஆச்சு? என்ன பிரச்சனை? ஏன் பாட்டி இவ்வளவு கோபமா..!!! பணிப்பெண்னிடம் கேட்டேன்.

மதியம் சாப்பிட்ட பிறகு , பாட்டியை வெயிலில் உட்காரவைத்தேன்.

உச்சிவெயிலில்...

அடிப்பாவி.. மூட்டாளா நீ? யாராவது மொட்டை வெயிலில் உட்காரவைப்பார்களா?

நீதானே சொன்னாய்.. சாப்பிட்டபிறகு உட்காரவை என்று. அதான் அதேபோல் செய்தேன்.

அடக்கடவுளே....!!!!!

கொழுத்துகிற வெயிலின் கீழ் கிழவியை அமரவைத்து, முகமெல்லாம் கருத்துப்போய் சோர்ந்துதான் போயிருந்தார்.. பாவம்.

நீ இனி ஒண்ணும் செய்யவேண்டாம் தாயி.. எல்லாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என கும்பிடுபோட்டேன்.

வேலை சொல்வதைவிட, எருமை மேய்க்கலாம் போலிருக்கு.