ஞாயிறு, ஜூன் 23, 2013

அபசகுனப்பேச்சு

ஒரு பெண் பிரசவத்திற்குத் தயாராகும்போது, குடும்பம், கணவன் உறவுகள் என எல்லோரும் அதற்குத் தயாராகிக்கொண்டிருப்பார்கள்.

எங்கே பிரசவிப்பது.., என்னென்ன பொருட்கள் வாங்கலாம்.., யார் கவனித்துக்கொள்வார்கள்.. எங்கே கொண்டு விடுவது.. எப்படிப் பாதுகாப்பது.. எவ்வளவு பணம் தேவைப்படும்.. ஆண் குழந்தை என்றால் என்ன வாங்குவது.. பெண் குழந்தை என்றால் என்ன வாங்குவது.. என்ன பெயர் வைக்கலாம்.. வீட்டில் பூஜைகள் போட என்ன செய்யவேண்டும்.. போன்ற ஆயத்தப்பணிகளில் அப்பெண் ஒன்பது மாதபிரசவ நிலையில் இருக்கின்ற போதே மும்முரமாக ஈடுபடத்துவங்கிவிடுவார்கள். குதூகலத்துடன் அக்குடும்பமே ஆவலாய் காத்துக்கொண்டிருக்கும் ஒர் புதிய உறவை வரவேற்க.

இது சகஜம்தான். ஆனால் மனித உறவுகள் ஒருவரின் இறப்பை எதிர்ப்பார்த்து எந்த ஆயத்தப்பணியிலும் ஈடுவது கிடையாது. இந்த நவநாகரீக காலத்திலும் மரணத்தை ஓர் அபசகுனக் காரியமாகவே கருதி, பிறப்பு போல் இறப்பும் இயற்கை என்பதனை ஏற்றுக்கொள்ள தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது நம்சமூகத்தில் கண்கூடு.

சோகம் ஏற்படும் என்பதற்காக அதை அபசகுனச் செயலாகக் கருதி, உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்து, அதைப்பற்றிப் பேசினாலே அக்காரியம் நிகழ்ந்துவிடும் என்பதைப்போல் நினைத்து, அத்தகைய பேச்சுகளுக்கு கதவடைப்பு செய்துவிடுகிறார்கள் நம்மவர்கள்.  அல்லது திடுக்கென்று பயந்து நெஞ்சைப்பிடித்துக்கொண்டு `போய் முதலில் வாயைக்கழுவு’ என்று அதட்டி நம்மை நிந்திக்கத்துவங்கிவிடுவார்கள். என்னமோ இக்காரியம் இதுவரையில் யாருக்கும் நிகழாதது போலவும் அல்லது இனி யாருக்கும் இது நிகழவே நிகழாது என்பதைப்போலவும் அவர்களின் பேச்சுகள் இருக்கும். இப்படி மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் மரணத்தை அபசகுனமாகக் கருதுவது, அது நம் வீட்டில் மட்டும் நிகழாது  என்கிற அசட்டு குருட்டு நம்பிக்கையேயன்றி வேறென்ன.!

வீட்டில் தள்ளாத வயத்துக்காரர் ஒருவர் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இன்றோ அல்லது நாளையோ அல்லது அடுத்த வாரமோ அடுத்தமாதமோ மரணமடைந்துவிடுவார் என்கிற நிலை இருக்கின்றபோது, வீட்டில் உள்ளவர்கள் அதற்குத்தயார் நிலையில் இருக்கவேண்டுமா இல்லையா, இப்படி நினைப்பது தவறா.?

ஒருவேளை இச்சம்பவம் நிகழ்ந்தால்.. வீட்டில் இருக்கின்ற நாம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளாக  என்ன செய்யவேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது பாவச்செயலாகுமா.! பாவச்செயலாகவே கருதி பலர் அக்காரியங்களை வெறுத்து ஒதுக்குகின்றனர்.

மரணம் யாருக்கும் எந்த நேரத்திலும் நிகழலாம். இளமையில் மரணம் என்பது கொடுமையே. ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றுதான். இருப்பினும் கொடுத்தவனே எடுத்துக்கொண்டான் என்கிற இறை சிந்தனை இங்கே கைக்கொடுத்து ஆசுவாசப்படுத்தி நம்மை ஏற்றுக்கொள்ளவைக்கிறது.

என் மலாய்தோழியின் மகன் கார்விபத்தில் மரணமடைந்து விட்டான். பத்தொன்பது வயது. கல்விக்கேள்விகளில் சிறந்துவிளங்கும் ஓர் மாணவன் அவன். மருத்துவமனையில் ஆசிரியர்கள் மாணவர்கள் என குவிந்துவிட்டார்கள். அவர்கள் நம்போல் வீட்டில் கிடத்தி சொந்தபந்தகங்கள் வரும்வரையில் ஒப்பாரி வைத்து ஓலமிடமாட்டார்கள். வீட்டிற்கு வராவிட்டாலும் பரவாயில்லை, மருத்துவமனையில் இருந்து பள்ளிவாசலுக்கு எடுத்துச்சென்று சுடுகாட்டிற்குக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

கொடுமைதான். சாகிறவயதா அது.! அழுதார்கள் நண்பர்கள். ஆசிரியர்கள் ஆறுதல் சொன்னார்கள். தாய் கண்ணீர் சிந்தினாலும் ஓர் வாசகத்தை மட்டும் முனகிக்கொண்டே இருந்தார். `இறைவன் கொடுத்தார். அவருக்கு உரிமை உண்டு எடுத்துக்கொள்ள, இருப்பினும் இவ்வளவு விரைவாக எடுத்துக்கொள்வாரென்று நான் நினைக்கவேயில்லை. என் மகனுக்கு, இந்த பிஸ்கட் பிடிக்கும். இந்த ஐஸ்கிரிம் பிடிக்கும். கோழிசம்பல் பிடிக்கும்.. இந்தந்த உணவுகள் பிடிக்கும்..  இறைவா உன்னிடம் அனுப்புகிறேன், இனி நீதான் அவனுக்கு இவற்றையெல்லாம் கொடுக்கவேண்டும்’ என்று இறைவனிடம் உரையாடிக்கொண்டிருந்தார். உருக்கமாக இருப்பினும். பக்குவப்பட்ட மக்களின் நிலை பார்ப்பதற்கு ஆச்சிரியமாகவே இருந்தது.

சென்றவார புதன்கிழமை, மாலை நான்கு மணி இருக்கும்.. என் மாமி மரணமடைந்துவிட்டார் என்று என் பணிப்பெண் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். தகவல் அறிய தொலைபேசி வழி உடனே அழைத்தேன். பதற்றமாக, தீடிரென்று மூச்சுபேச்சு இல்லை. நாக்கு வெளியே தள்ளிவிட்டது, உடபெல்லாம் சில்லென்றாகிவிட்டது அசைவு இல்லை.. என்றாள். தொடந்து என்னசெய்வதென்றறியாமல் அவரை உலுக்கி உலுக்கி நெஞ்சில் குத்தி உயிரை மீட்டுக்கொண்டுவந்துள்ளாள். திடுக்கென்று கண்விழித்த மாமி, ஏன்டி இப்படிக்கத்தற.? என்றவுடன்தான் அவளுக்கு பெருமூச்சே வந்துள்ளது.

இது பற்றிப்பேசுகையில், நிஜமாலுமே அவர் (மாமி) இறந்து விட்டால் நமது அடுத்தக்கட்ட நிகழ்வுகள் என்ன என்பதைப்பற்றிய ஆலோசனைகள் சிலவற்றை வழங்கினாள் என் தோழி. காரணம் இறப்பை நாம் எதிர்க்கொள்ள ஆயத்தமாக இல்லாத நிலையில் அது நடந்துவிட்டால் என்னென்ன செய்யலாம் என்கிற  விழிப்புநிலை பலருக்கு வருவதே இல்லை. அதைப்பற்றிய அக்கறையும் நமக்கில்லை.

முன்பெல்லாம் வீட்டில் இறப்பு நடந்துவிட்டால், பிணத்தை நடுவீட்டில் கிடத்தி, உற்றார் உறவினர்கள் என எல்லோரும் வந்து அழுதுபுரண்ட பிறகு காரியங்கள் நடைபெறும். காரியங்கள் நடைபெறும்போது அந்தப்பிணம் படுகிற அவஸ்தை இருக்கே.. நம் இனத்தில் மட்டுமே இவ்வளவு கொடுமைகள்.

பிணம் பெண்ணாக இருந்தால் ஆண்கள் எல்லோரும் அந்தப்பக்கம் திரும்பிக்கொள்ளுங்கள், என்று சொல்லி பிணத்தின் உடைகளையெல்லாம் கலற்றி வாளிவாளியாக நீர் ஊற்றி சவர்க்காரம் போட்டு குளிப்பாட்டுவார்கள். பிறகு சலசலப்புகள் எழும்.. உயிர் நிலையில் நீர் வடிகிறது, மலம் வெளியேறுகிறது, வாய் பிளந்துகொண்டது, இரத்தம் வழிகிறது .. என்று. அங்கே நிற்கிற நமக்கு அருவருப்பாகவே இருக்கும். பலர் கால்களில் செருப்பு அணியாமல் கூட நிற்பார்கள்.. பிணத்தைக்கழுவுகிற நீர் நம் கால்களில் பட்டுச்செல்லும். பிறகு புடவையை எடு, பொட்டு எங்கே..நகைகள் எங்கே என ஒரே பரபரப்பாகும் சூழல். இதை நான், தேவையே இல்லாத ஆர்ப்பாட்டம் என்றே சொல்வேன்.

இப்போது அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் மருத்துவமனையிலேயே நன்கு தூய்மைப் படுத்தி பெட்டியில் வைத்து அனுப்பிவிடுவார்கள். முறைப்படி காரியங்கள் செய்தால்தான் ஆத்மா சாந்தியடையும் என்று சொல்லி நமது சடங்கு சம்பிரதாயங்களை உச்சத்தில் வைத்து,  பெட்டியில் பவ்வியமாக இருக்கின்ற பிணத்தை வெளியே எடுத்து காரியங்கள் செய்கிறார்கள் இன்னமும். கல்யாணம் எல்லாம் செய்வார்கள்.. நானும் பார்த்துள்ளேன். வாழை மரத்திற்கு  இறந்தவர் தாலிகட்டுவதைப்போன்ற கூத்துகளையெல்லாம் பார்க்கலாம் அங்கே,

அப்படி மருத்தவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்ற வயதுமுதிர்ந்த பெரியவர்களுக்கு மரணம் ஏற்பட்டால்..!? அனுபவப்பட்ட யாழ்ப்பாண வர்க்கத்துத் தோழி ஒருவள் என்னிடம் பகிர்ந்த சில விஷயங்கள்..

இறந்த ஒரு மணிநேரத்திற்குள், பிணத்தை எடுத்துச்சென்று குளியலறையில் வைத்து குளிப்பாட்டவேண்டும். அப்போது அவரின் மலம் எல்லாமும்வெளியேறும். மலம் வெளியேறும்வரை காத்திருந்து நன்கு குளிப்பாட்ட வேண்டும்.  குளித்தவுடன் பிணத்தின் உடலை சுத்தமாகத்துடைத்துவிட்டு விபூதியைக்கொண்டு உடல்முழுக்க பூசுதல் வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விபூதி.. முடிந்தால் அருகில் உள்ள கடைகளில் கூடுதல் இரண்டு மூன்று பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு வந்து பூசி விடவேண்டும். அதன்பின் இரண்டு பெரிய பாக்கெட் மஞ்சள் பொடிவாங்கி அதை நீரில் கட்டியாகப் பிசைந்து கழிவுகள் வெளியேறும் மர்ம்ம உறுப்புகளான கீழ்பகுதியிகளில் வைத்து நுழைத்து, துணியோ அல்லது உள்ளாடையைக்கொண்டோ கழிவுகள் வெளியேறாமல் இருக்க இறுக்கமாகக் கட்டிவிடவேண்டும். அதன்பின் பிணத்தை அலங்கரிக்கலாம். பெட்டிக்கு ஆடர் கொடுத்து அது வந்தவுடன் சவத்தை அதில் வைத்து யாரும் தொடாமலும் பிணத்தின் மீது விழுந்து அழாமலும் பார்த்துக்கொள்வது நல்லது. சடங்குகள் பிணத்தைத்தொடாமல் நடைபெறுவதுபோல் இருப்பது அனைவருக்கும் நன்மையே.  இறப்பு வீட்டிற்கு வருகிறவர்களுக்கு பிணத்தின் மீதிலிருந்து வெளிப்படும் கிருமிகள் தாக்காமல் இருப்பதற்கு இதுவே சிறந்தவழி.

நல்ல ஆலோசனையாகவே பட்டது. மனதில் வாங்கிக்கொண்டேன். இதை வெளியில் யாரிடமாவது பகிர்ந்தால், அடப்பாவமே உயிரோடு இருக்கும்போதே ஈமச்சடங்கு பற்றிப்பேசுகிறாளே.! பேயா பிசாசா இவ.. என்று மனதிற்குள் நிந்திக்கக்கூடும்.

இருப்பினும் மனிதனாகப் பிறந்தவர்களுக்கு எது நிகழ்கிறதோ இல்லையோ இறப்பு மட்டும் நிச்சயம். கல்யாணச்சடங்கு, கருமாதிச்சடங்கு வளைக்காப்பு நிகழ்வு, பூப்பெய்தல் சடங்கு, தீட்டுக்கழிப்பு, பலவிதமான இறைவழிபாட்டுச் சடங்குகளைவிட, ஒருவர் இறந்தவுடன் என்ன செய்யவேண்டும் என்கிற அணுகுமுறைகளை அவசியம்  அனைவரும் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.