சனி, ஜனவரி 24, 2015

ரசித்து நெகிழாமல்

ஐ-
ஏற்கனவே எழுத்தப்பட்ட விமர்சனங்களையெல்லாம் மாங்கு மாங்கு என நெட்டில், முகநூலில் வாசித்துவிட்டு படம் பார்க்கச்சென்றிருந்தீர்கள் என்றால், நிச்சயம் அந்தப்படம் உங்களுக்குப் பிடிக்காமல்தான் போகும்.
படம் பார்க்கப்போகிறபோது நமது பார்வை நமதானதாக மட்டும் இருக்கட்டுமே. நமக்குப்பிடித்திருந்தால் அது நம் ரசனையைப் பொருத்தது. நமக்கு பிடிக்குமா பிடிக்காத என்பது கூட அடுத்தவர் பார்க்கின்ற பார்வையில்தான் அமையுமென்றால் நமக்கென்று இருக்கின்ற அடையாளம் இல்லாமல் போகும்தானே. !
அடேயப்பா எவ்வளவு காரசாரமான விமர்சனங்கள் நெட்’இல்.
அவைகளையெல்லாம் வாசிக்கின்றபோது, அடக் கடவுளே, நாம் அவசரப்பட்டு ஐ- படத்தைப் புகழ்ந்து தள்ளிவிட்டோமே, என்கிற சிந்தனை எழாமல் இல்லை. நம் ரசனை குறித்து நாமும் வெற்கித் தலைகுனிகிற நிலைக்குத்தள்ளிவிடுகிறது அவ்விமர்சனங்கள்.
சரி அது கிடக்க்கட்டும். ஒரு திரைப்படத்தைப் பார்க்கின்றபோது அப்படத்தின் கதையினுக்குள் நாம் நுழையவேண்டும். நாம் ஒரு பாத்திரமாக அங்கே இணையவேண்டும். நடக்கின்ற நல்லது தீயதுக்கெல்லாம் நாம்தான் சாட்சி அங்கே. அப்போது அடாவடித்தனம் புரிந்து நாம் நல்லவர் என்று காட்சியகப்படுத்தியிருக்கின்ற நாயகனையோ அல்லது நாயகியையோ வில்லன் என்கிற தீயவன் துன்புறுத்துகிறபோது, அந்த வில்லனாகப்பட்டவன் எந்நிலையில் பழிவாங்கப்படுவான் என்கிற எதிர்ப்பார்ப்பு இல்லாமல் படம் பார்க்கமுடியாது.
மற்றவர்களைப் பற்றி தெரியாது ஆனால் நான் ஆழ்ந்த ரசிப்பில் இருக்கின்றபோது அங்கே நடக்கின்ற கிண்டல் கேலி பார்வைகள் வில்லன்களை குறிவைத்து எடுக்கப்பட்டிருந்தால் ரசிக்கத்தான் செய்வேன்.
உதாரணத்திற்கு இறுதிக்கட்டத்தில் சந்தானம் செய்கிற கேலிகிண்டல்கள் படத்தை முழுமையாகக் கண்டு ரசித்து நெகிழாமல் அந்த இறுதிக்காட்சியை மட்டும் பார்த்திருந்தேன் என்றால், எனக்கும் சங்கரின் மேல் கடுமையான கோபம் வந்திருக்கும். நோய்வாய்ப்பட்டிருப்பவர்களையும் ஊனமானவர்களையும் ஏன் இப்படி நையாண்டி செய்திருக்கின்றார் என. ஆனால் காட்சிகளை அணுவணுவாக ரசித்து அதில் மூழ்கித் திளைத்திருக்கின்ற நமக்கு அக்காட்சிகளாகப்பட்டது குதூகலத்தையே கொண்டு வந்தது.
அதர்மம் தர்மத்திடம் தோற்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு கடை நிலை ரசிகனுக்கு எப்போதும் இருக்கின்ற ஒன்றுதான்.. அது நாவலாகட்டும் சினிமாவாகட்டும்.
அடுத்து, விளம்பர நடிகையின் மேல் சாதாரண ஆண்மகனுக்கு பார்த்த மாத்திரத்திலேயே காதல் பொங்கிவருகிறது என ஒரு குற்றச்சாற்று.
காதலைப்பொருத்தவரை, சினிமா என்றைக்குமே அப்பட்டமான பொய்களைத்தான் புகுத்திவருகிறது. சேரியில் வாழும் பரம ஏழை மீது கோடிஸ்வரிஅல்லது கோடிஸ்வரன் காதல் கொண்டு திருமணம் நடப்பதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம். நிஜவாழ்வில் 0.001%தான். அதை அழகாகச் சொல்லவில்லையா நம் சினிமா? ஏற்றுக்கொள்கிறோம்தானே நாம்.!
அடுத்து கொளுந்துவிட்டு எரிகிற ஒரு பிரச்சனை, திருநங்கைகள் அவமதிக்கப்பட்டுவிட்டார்கள் படத்தில். நானும் கூனிக்குறுகினேன் நகைச்சுவை என்கிற பெயரில் சந்தானம் செய்கிற ஆரம்ப கட்ட கலாட்டாவில். அது மட்டுதான் குறையாக இருந்தது எனக்கு. இருந்தபோதிலும் திருநங்கையான அந்நடிகை, நான் இதுமாதிரியான காட்சிகளின் நடிக்கமாட்டேன். இதுபோன்ற வசனங்களை வைக்காதீர்கள் என கட்டளை பிறப்பித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை.? சங்கர் படமென்றால், உலக ரசிகர்களால் ரசிக்கப்படுகிற ஒரு படமாக அமையும் என்பதால், தமது பக்களிப்பை உலகமே கண்டு ரசிக்கவேண்டும் என்பதற்காக, தம்மைச் சார்ந்தவர்கள் கேவலப்பட்டாலும் பரவாயில்லை என அந்தப் பிரபல ஒப்பனைக் கலைஞர் அப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதுதான் கண்டிக்கத்தக்கது.
சரி உனக்கு என்ன வந்தது.? நீ ஏன் இந்தப் படத்திற்கு இப்படிப் பாடுபடுகிறாய்.? என்றால், படம் பார்த்துவிட்டு நல்ல படம் என விமர்சனம் எழுதிவிட்டேன். அது தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது என்கிற நினைவுறுத்தல் சில முகநூல் நண்பர்களால் என் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனால்தான் இதை எழுதுகிறேன். இதனால் எனக்கு ஒன்றுமில்லை. எனது ரசனை எப்போதும் சரியானதாகத்தான் இருக்கும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில் நான் எப்போதும்...

ஞாயிறு, ஜனவரி 18, 2015

ஐ - படம் சூப்பர்.
ஒரு சராசரி ரசிகையான எனக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுத்திருக்கின்றார் சங்கர்.
எல்லாத்துறையிலும் ஒருவரின் வளர்ச்சியின் மேல் பொறாமைகொள்கிறவர்கள் சிலர் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள்.. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சில கெடுதல்கள் செய்வதற்கு பலமுயற்சிகள் எடுப்பார்கள். அது அவதூறு செய்வதில் ஆரம்பித்து அயல் நாடுகளுக்குச்சென்று செய்வினை செய்வதுவரை தொடரும்.
எதிலுமே சாதிக்காத நாம்,முகநூலில் கொஞ்சம் கூடுதல் `லைக், கமெண்ட்ஸ்’ வாங்கிவிட்டாலே சிலர் வயிற்றெரிச்சலில் புகைந்து வெளியே அவதூறு பரப்பிவருவது கண்கூடு.
பொறாமை வயிற்றெரிச்சல் எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுத்து வாழத்துடிக்கின்ற ஒரு சாதாரண அப்பாவி இளஞனை வீழ்த்துகிறது, பாதிக்கப்பட்ட அவன் எப்படி அவர்களையெல்லாம் பழிதீர்க்கிறான் என்பதுதான் கதை. அதை சராசரி ரசிகனுக்கு பரபரப்பாக பிரமாண்டமாகக் கொடுத்திருக்கின்றார் சங்கர்.
சோர்வில்லாத கதையோட்டம்.
அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பு.
நகைச்சுவை கொஞ்சம் தேவலாம்.
பழிதீர்க்கப்பட்டவர்களின் நிலையினைப்பார்த்து சந்தானம் அடிக்கும் லூட்டி ரகளை.
பாடல்கள் அருமை.
சண்டைக்காட்சிகள் பிரமிப்பு.
படம் முடிந்துவிட்டது. பெயர் பட்டியல் வரத்துவங்கிவிட்டன. மக்கள் இருக்கையை விட்டு எழவே இல்லை. லிங்கேசனுக்கு ஒரு விடிவு வராதா? என காத்திருக்கின்றனர். இறுதியாக அந்த பரிதாபத்திற்குரிய பாத்திரத்தின் கொஞ்சம் தேறிய முகத்தைப் பார்த்த பிறகுதான் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுத்து நகர்கின்றார்கள்.
சியான் விகரம் - உங்களின் உழைப்பு உங்களை மிக உயரத்தில் அமரவைத்துவிட்டது.. வாழ்க. கண்கலங்க வைத்துவிட்டீர்கள். அற்புத நடிப்பு ( மற்றவர்கள் உழைக்கவில்லையா? என்பவர்களுக்கு... கலைக்காக உழைப்பதும், நான் என் குடும்பம் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக உழைப்பதும் ஒன்றாகாது. கலை என்பது பரபரப்புச்சூழலில் வாழ்கிற ஒரு மனிதனின் உணர்வு சம்பந்தப்பட்டது.)
மலேசியாவில் அரங்கம் நிறைய கூட்டம். வார இறுதியில் டிக்கட் கிடைக்கவில்லை. திரையரங்கில் அலையலை என கூட்டம் அலைமோதுகிறது.
வசூல் சாதனையை முறியடிக்கின்ற அற்புத படம் - குடும்பத்துடன் ரசித்து மகிழலாம்.
வரிசையாக பல படங்கள் நம்மை ஏமாற்றிய பிறகு சங்கரின் ஐ- தெம்பைத்தந்துள்ளது.
மனதார ரசித்தேன். கண்டு களியுங்கள்

திங்கள், ஜனவரி 05, 2015

பிடிக்காதவனையும் பகைத்துக்கொள்வதில்லை.

நீ எழுது, உன் எழுத்துக்கு நான் அடிமை என்று இதுவரையிலும் யாரும் சொன்னதில்லை.
ஊரைத் திருத்தப்போகிறேன். உலகைத்திருப்போகிறேன் என்கிற சபதத்தோடு எழுத முயன்றதில்லை.
நாலு பேரு நல்லா பாராட்டுவாங்க.. என்றும் மூளையைக் கசக்கிப் பிழிந்ததில்லை.
புத்தகம் போட்டு எல்லோரும் வாசிக்கவேண்டும் என்றும் சிந்தித்ததில்லை.
எழுதி எதையும் சாதித்ததில்லை. சாதிக்கவேண்டும் என்கிற எண்ணமும் இல்லை.
எழுத்து தொழிலும் அல்ல.
இருந்த போதிலும் நான் எழுதுகிறேன்.. ஏன்?
பெண்ணான என் உள்ளக் குமுறலைக் கேட்க ஆளில்லை. எழுதி வெளிப்படுத்துகிறேன்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் அண்டை அயலாரோடு எந்த ஒரு பிக்கல் பிடுங்கள். பிரச்சனைகளில்லாமல் இருந்து வந்தவர்கள் நாங்கள். அதற்குக்காரணம் நான் நல்லவள் என்பதைவிட, எனது அண்டை அயலார்கள் மிகவும் நல்லவர்களாகக் கிடைப்பெற்றதுதான் எனது பாக்கியம். 

என்று நான் வீடு மாற்றலாகி இங்கே வந்தேனோ, அன்றிலிருந்து பிடித்தது எனக்குச் சனியன். 

தொட்டதிற்கெல்லாம் குற்றம் சொல்கிற் ஒரு தொல்லைப்பேர்வழி தற்போதைய அயலார்.

வந்த புதிதில், `ஏர்காண்ட்’ இன் தண்ணீர் என் வீட்டில் விழுகிறது, வாசல் அசுத்தமாகிறது. பாசி பிடிக்கிறது.’ என்கிற முனகல் முதல் கோணல். சரி, தவறு நம்முடையதுதான் என்று ஏற்றுக்கொண்டு, கூரைமேல் ஏறி ஏர்காண்ட் ட்டீயூப்’ஐ நகர்த்தி அது என் வீட்டு வாசலில் விழும்படி வைத்தோம்.

அவர்களின் பூமரம் பூத்துக்குலுங்கி எங்களின் வீட்டு வாசலை வந்தடைந்து மணம் பரப்புகிறதென்று, நான் கதற கதற, என் வீட்டுப்பக்கம் பூத்துக்குலுங்கிய கொடிகளை கத்தரித்துவிட்டார்கள். காய்ந்து வாடியது என் பக்கக்கொடிகள். 

மரமாக வளர்ந்து வருகிற வேப்பமரத்தை குறிவைத்து அவர்களின் பேச்சுகள் வட்டமடிக்கத்துவங்கின. 

இரவானால் பேய் வரும். வீட்டிற்கு நல்லதல்ல. மரமாக வளர்ந்தால், காற்றில் முறியும்.வீட்டின் மேல் விழும். மரம் பெரிதாக வளர வளர வேர்கள் கீழே படர்ந்து, கால்வாயைப்பிளக்கும். வாசலின் டயில்ஸ் எல்லாம் விரிசல் விழும்.. இலையுதிர் காலத்தில் இலையாகக் கொட்டும். யார் கூட்டிப்பெருக்குவது.? என ஓயாத எச்சலூட்டும் எச்சரிக்கைகள். 

என்னால் முகத்திலடித்தாட்போல் ஒன்றும் சொல்லமுடியவில்லை. காலையில் எழுந்தவுடன் முகத்தப்பார்க்கவேண்டுமே.! சிலவேளைகளில் எரிச்சலின் உச்சத்தில் எதையாவது உளறி வைத்தாலும், பெரும்பாலான நேரங்களின், பயிரைக்கொஞ்சும் நான், சக உயிருக்கு மதிப்பளிக்கத் தவறுகிறேனே, சதா எதையாவது கேட்டுக்கொண்டு  என்னோடு பேசுபவர்கள் அவர்கள்.. அவர்களின் எண்ணம் அவர்களோடு. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ, என பரிதாபம் மேலிட, என்னை நான் கட்டுப்படுத்திக்கொண்டு மௌனமாகவே இருந்தேன்.

இருப்பினும் தொல்லைகள் தொடர்கின்றன.

வீட்டில் குடியேறுவதற்கு முன், வீட்டைச் சீரமைத்தோம். பின் பக்கம் சுவர் எழுப்பி, சமையல் அறையினை இழுத்துக்கட்டினோம். இழுத்துக்கட்டுகிறபோது, வீடுகள் வரிசையாக இருப்பதால் இரண்டு பக்கமும் சுவர் எழுப்பித்தான் சமையலறையை கட்டிமுடிக்கவேண்டும். சீரமைப்பு செய்பவர் எங்களுக்கு சில அலோசனைகளை வழங்கினார். அக்கம் பக்கத்தில் கேட்டுக்கொள்ளுங்கள், நாம்முடைய சுவரை அவர்களும் உபயோகமாக இருக்கும், பணம் ஏதும் கொடுத்து சுவர் கட்டுவதில் அவர்கள் எதேனும் பங்கு கொள்கிறார்களா? என்று எதற்கும் கேட்டுக்கொள்ளுங்களேன், என்றார்.
என் கணவரோ, வேண்டாம். நமக்குத்தேவைப்படுகிறது. நாம் கட்டுகிறோம். அவர்கள் சீரமைப்பு செய்கிறபோது பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்று, பங்கு பற்றி அக்கம் பக்கத்தில் கேட்டுக்கொள்ளாமல் வேலைகளை முடித்தோம்.

அதேபோல் தான் முன் பக்கமும். இடது வலது பக்கம் நாங்கள் சுவர் எழுப்பினால், அவர்கள் ஒரு பக்கம் மட்டும் சுவர் எழுப்பினால் போதுமானது. அவர்களின் வாசற்பக்கம் முழுமையடைந்துவிடும். இதனால் நாங்கள் செய்கிற செலவில் பாதிதான் அவர்களுக்குச் செலவாகும். சீரமைப்புப் பணியின் பாரம் குறையும். கோலாலப்பூரில் சீரமைப்புப் பணி, சிலவேளைகளில் வீடுகளின் விலையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர் எழுப்பினால் மட்டும் போதுமா.? இந்தப்பக்கம் என்ன செய்கிறோமோ அதேபோல் அந்தப்பக்கமும் செய்யவேண்டும். சுவரை வழவழவென சிமெண்ட் போட்டு மொழுகுவது. சாயம் பூசுவது என எல்லா வேலைகளையும் எங்களின் செலவிலேயே செய்தோம். அக்கம் பக்கத்தை எதிர்ப்பார்க்காமலேயே. இதற்காகச் சிலர் பத்திரமெல்லாம் தயார் செய்து வக்கீல் வைத்து கையொப்பம் வாங்கி பணம் வசூல் செய்வதும் உண்டு,

வலது பக்கம் உள்ள மலாய் அன்பர். `மிக்க நன்றி. தற்போது என்னிடம் பணம் இல்லை. நான் நன்றாக வயரிங் வேலைகள் செய்வேன். எதாவது உதவிகள் வேண்டுமென்றால் என்னை அழையுங்கள், நான் வந்து பணம் வாங்கமலேயே செய்துதருகிறேன்.’ என்று சொல்லி சில எலஃக்ட்ரனிக் வேலைகளை இலவசமாகச் செய்து தந்து தமது நன்றியினை வெளிப்படுத்திக்கொண்டார். மேலும் நாங்கள் எழுப்பியிருந்த சுவர்பக்கம் சாயம் பூசவேண்டாம். எங்கள் வீட்டில் நாங்கள் பூசியிருக்கின்ற சாயத்தைப்போலவே நான் பூசிக்கொள்கிறேன். என்று சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அத்தோடு அவர்களால் எந்தத் தொல்லையும் எங்களுக்கு இல்லை. இதுவரையிலும்.. இனியும் வராது காரணம் நிஜமாலும் புரிந்துணர்வு உள்ள நல்ல மனிதர்கள் அவர்கள்.

இந்தப்பக்கம் உள்ள நம்ம ஆள், ஓயாமல் எங்களுக்கு ஆலோசனை அறிவுரைகளை வழங்கியவண்ணமாகவே இருக்கின்றார். முன் தினம் எங்களை அழைத்து, `நான் வீட்டிற்கு சாயம் பூசப்போகிறேன். உங்களின் சுவர் மழை நீர் பட்டு அசுத்தமாக மாறிக்கொண்டு வருகிறது, சாயம் பூச, உங்களின் பங்கிற்கு நீங்கள் ஒரு டின் சாயம் வாங்கிக்கொடுங்கள், எங்கள் வீட்டிற்கு சாயம் பூசும்போது நீங்கள் எழுப்பிய இந்தச் சுவருக்கும் சேர்த்தே சாயம் அடிக்கச்சொல்கிறேன், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்னங்க இது அநியாயமா இருக்கு.! உன் வீட்டுப்பக்கம் சுவர் அழகாக இருக்கவேண்டுமென்று நீ நினைத்தால், சாயம் வாங்கிப்பூசு. எங்களிடம் முறையிட என்ன வேண்டியிருக்கிறது.! நாங்கள் எழுப்பிய சுவர்தான் என்றாலும், அது  உனது சுமையைக் குறைத்து உனக்கும் பாதுகாப்பாக இருக்கின்றதுதானே. !? அறி(ய)வில்லையா?

கூடுதலாக மேலும் ஆலோசனைகளை வாரி வாரி வழங்கியிருக்கின்றார்.. மழை நீர் கூரையின் மேலிருந்து சுவரில் பட்டுத்தெறிக்காமல் நேராக கால்வாயினுற்குள் செல்வதைப்போல் ப்ளாஸ்டிக் குழாய்கள் பொருத்திவிடுங்களேன். சாயம் அடித்தாலும் நீண்ட நாள் மழை நீரால் அழிந்துபோகாமல் அப்படியே இருக்குமே.! எப்படி.??

என்னிடம் மட்டும் இதையெல்லாம் சொல்லியிருந்தால், நான் எப்போதே சில விஷயங்களைச் சொல்லிக்காட்டி சண்டை  போட்டிருப்பேன். என் கணவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். அவர் பல விஷயங்களைப் பலகோணத்தில் ஆராய்ந்து யோசித்துக்கொண்டிருப்பவர். என் வாயை அடைத்துவிடுபவர்.

``போடா.. நீ என சொல்வது. நாங்கள் என்ன கேட்பது.!’’ என்பதைப்போல் எதையும் பொருட்படுத்தாமல் மௌனமாகவே இருப்பதாக முடிவு செய்துவிட்டோம்.

மீண்டும் அழைப்பான்.. தலையை ஆட்டிவிட்டு. அமைதியாக இருந்துவிடவேண்டியதுதான். எனது வீழ்ச்சியில் அவன் மகிழ்வான் என்பதால் பகைத்துக்கொள்ள மனமில்லை.      

வெள்ளி, ஜனவரி 02, 2015

பதிவர்

ஒருவருடைய ப்ளாக் செல்கிறோம். அங்கே அவர்கள் இட்ட பதிவுகளை நாம் வாசிக்கின்றோம். அப்பதிவாகப் பட்டது நம்மை கவரவோ அல்லது காட்டத்தை ஏற்படுத்தவோ செய்கிறபோது, நாம் நமது கருத்துகளை அங்கே பகிர்ந்து நமது மன உணர்வுகளை எழுத்துகள் மூலமாக வெளிப்படுத்துகிறோம். அப்போது, அக்கருத்தாகப்பட்டது அந்தப்பதிவரின் அனுமதிக்குப்பிறகே பிரசுரிக்கப்படும் என்கிற சமிக்ஞையோடு விடைபெறுகிறது.
கருத்தைச் சொல்லிவிட்டு வந்த நாம் அக்கருத்திற்கு எம்மாதிரியான எதிர்மறை அல்லது நேர்மறை கருத்துக்கள் பதிவர் மூலம் கிடைக்க்கப்பெறும் என்று காத்திருக்கின்ற போது, அக்கருத்தாகப்பட்டதை அப்பதிவர் ஒரு பொருட்டாகக் கருதாமல், அனுமதித்து பிரசுரிக்காமல்அலட்சியம் செய்துவிட்டும் போது, வாசகர், கருத்துப்பகிர்கிறவர் என்கிற கோணத்தில் நாம் நமது நேரத்தை தேவையில்லாமல் இவரின் பதிவின் கீழ் வீனடித்து விட்டோமே, என்கிற எண்ணம் தோன்றாமல் இல்லை. (அதற்குப்பிறகு அப்பதிவர் என்ன சொன்னாலும் அங்கே சென்று வாசிக்கவேண்டும் கருத்துப்பகிர வேண்டும் என்கிற எண்ணமே வராது என்பது வேறு விஷயம்.)
இதுபோன்ற பதிவர்கள், அனுமதிக்குப்பிறகு பிரசுரிக்கப்படும் என்று சொல்லாமல், பெரிய எழுத்தாளர்கள் போல், கருத்துகளுக்கு அனுமதியில்லை, என்று, கருத்துப்பகிர்வு பகுதியை எடுத்துவிடலாமே..!
வாசகர்களின் கருத்து முக்கியம். அதுதான் வளரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி பூஸ்ட் என்று பொதுவில் அப்பாவியாய் சொல்லிவிட்டு கருத்து சொல்கிறவர்களை அலட்சியம் செய்கிற வளரும் எழுத்தாளர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆமாம் இவர் பெரிய கருத்து கந்தசாமி - இவரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று முகநூலில் அலுத்துக்கொள்கிறார்; என்று முணுமுணுப்பவரா நீங்கள்...? அப்படியென்றால் நீங்கள் நிஜமாலுமே பரிதாபத்திற்குரியவர்