வெள்ளி, மார்ச் 30, 2012

காதல் சுவாரிஸ்யங்கள்

நமது வாழ்வு சரியான தடத்தில் சென்றுகொண்டிருப்பதைப் போல் தான் நமக்குத்தோன்றும். ஆனாலும் சில வேளைகளின், சில இடங்களில் திடீரென தடம் புரளும். நாம் செய்துக்கொண்டிருக்கும் காரியத்தில் எதோ கோளாறு நிகழ்ந்திருக்கின்றதென்று, சில நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும்.

 வாழ்வின் சுவாரிஸ்யங்கள் - பருவம் சார்ந்ததாகவும், அறிவின் முதிர்ச்சி சார்ந்ததாகவும், சேர்கிற சுற்றங்கள் சார்ந்ததாகவும், நம்முடைய பக்குவம் சார்ந்ததாகவும், சில கசப்பான அனுபவங்கள் சார்ந்ததாகவும், பெறப்படுகிற நன்மை தீமை சார்ந்ததாகவும், பல வேளைகளில் நம்முடைய சொந்த ஈடுபாடு, அதையொட்டி நம் செயல்பாட்டின் நடவடிக்கைகள் சார்ந்ததாகவும் இருக்கும் பட்சத்தில், சுவாரிஸ்யங்கள் தொடர்வதில் இடையூறுகள் இருப்பதை கண்டுக்கொள்ளலாம்

இந்த சுவாரிஸ்ய உணர்வு கொஞ்ச காலம் நீடிக்கும், இது நீடிக்கும் வரை, நாம் எதிர்க்கொள்ளும் சில நிகழ்வுகளையும் சம்பவங்களையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்து, சாதக பாதக, ஏற்ற இறக்கங்களை சீர் தூக்கிப்பார்க்கதுவங்கி, அதே போன்ற நிகழ்வுகள் வேறு எங்கேனும் யாருக்கேனும்  நிகழும் போது,  நமக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை அவைகளோடு ஒப்பீடு செய்து,  இதற்கு இதுவே காரணம், இதற்கு இதுவே தீர்ப்பு, இதனால் தான் இது நடைபெற்றது, இப்படியில்லாமல் இருந்திருந்தால் இது வர வாய்ப்பில்லை என்றெல்லாம் உரை நிகழ்த்துவோம்.

கொஞ்ச காலம் சென்றவுடன்,  மறுபடியும் வாழ்வு அதே வட்டத்திற்குள் உருலும். முன்பு இருந்த அதே இடத்திற்கே திரும்பவும் வந்துவிடுவோம். இப்போது பிடிப்பு வேறு வடிவில் சுழல ஆரம்பிக்கும். ஆனாலும் அதுவும் அதே வட்டத்திற்குள்.! ஏற்கனவே செய்த தவற்றை மீண்டும் படு சுவாரிஸ்யமாகச் செய்துக்கொண்டிருப்போம்.

இந்த இடத்தில், தவறு என்று சொல்வது, கொஞ்சம் அபத்தமாகப் படலாம். செய்வது தவறா இல்லையா என்பது, செய்தபின்பு வரும் வினைப் பயன்களைப் பொருத்தே அது வடிவமைக்கப்படுகிறது. சில நிகழ்வுகள் தவறாகப் படுவதற்கு எது மூலக்காரணமாக இருக்கிறதென்றால், நம்மை உறுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து செய்து வருவதுவே. மனசாட்சியின் குரல்  பலவாறாக உணர்த்திக்கொகொண்டே இருந்தாலும், நியாயப்படுத்தி, நாம்,  நமது சிந்தனைகளை, சில சுவாரிஸ்ய ஒப்பீடுகளால் நிரப்பிக்கொண்டு, மனசாட்சியின் குரலுக்கே டிம்மிக்கி கொடுத்துவிடுவோம்.

சரி, நியாயப்படுத்துதல், சுவாரிஸ்ய ஒப்பீடுகள் என்பது, எதில் அதிகமாக இருக்குமென்று ஆராய்ந்தோமென்றால், காதலில், கள்ள உறவுகளின், உடலின்பத்தில், அருவருக்கும் இச்சைகளில்.

மனித உறவுகளை எடுத்துக்கொள்வோமே.! உறவுகள் என்றால்..!! காதலை எடுத்துக்கொள்வோமே.! காலகாலமாக, காதல் நம் சமூகத்தில் கெட்டவார்த்தையாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. சில சமூக சீர்த்திருத்தவாதிகளால் காதல் என்கிற உணர்வு கொச்சைப் படுத்தப்பட்டுவிட்டது. காதல் வயப்படுபவர்கள், எங்கோ ஒரு மூளையில், அறை எடுத்து தமது இச்சைகளை தீர்த்துக் கொள்ளத்துடித்துக் கொண்டிருக்கும் இரண்டு உயிர்களின் தீவிர முயற்சி என்றே முடிவு கட்டப்பட்டுவிட்டது. இதற்காக ஆதாரங்களும் ஆய்வுகளும் எழுத்து வடிவில் அரிதியிட்டுக் கூறி விட்டதால்தான், காதலுக்கு இந்த அவச்சொல்.

புலனாசைகளில் காமம் சிற்றின்பமாகக் கருதப்பட்டாலும், காதல் எப்போதுமே பேரின்பமாச்சே! இதை பக்தி இலக்கியங்களும்,  ஆன்மிக சிந்தனைகளும் பறைசாற்றுகின்றனவே.  பிறகு ஏன் அதை சிற்றின்பச் சிந்தனையோடு கலந்து கொச்சைப் படுததுகிறார்கள்.! எல்லா காதலும் படுக்கையறையில் தான்  முடியுமென்று கருத்துரைப்பது அபத்தமில்லையா!?

சரி, அது ஒரு புறமிருக்கட்டும், நாம் இங்கே சொல்லவந்தது, வாழ்வின் சுவாரிஸ்ய இழப்பிற்கு, சில அநியாயங்கள் நியாயப்படுத்தப் படுவதுவே முக்கிய காரணமாகக் கொள்ளலாம். நல்ல சிநேகங்கள் பாழ்படுவதற்கு, மனித நட்பு நேச உறவில் ஒரு சீரான ஒழுங்கு முறை கடைபிடிக்காமின்மையே காரணமாகிறது.

காதல் என்றால் என்னவென்று இதுவரையில் உணர்ந்திராத ஒருவருக்கு, காதல் என்கிற உணர்வு ஊட்டப்பட்டு உணர்த்தப்படுகிறபோது, அது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் அபரீதமான மாற்றங்களைக் கொண்டுவந்துவிடுகிறது. இந்த தீடீர் உணர்வு தாக்குதலுக்கு உள்ளானவர்கள், பல மாதிரியான சீர்கேடுகளை நிகழ்த்துவதற்குக் கூட தயாராகிவிடுகின்றனர். சீர்கேடுகள் என்பது மனசாட்சியின் குரல்வலையை நெறிப்பது.  வாழ்வியல் தேடல்களை சீர் தூக்கிப்பார்க்கின்ற ஆற்றலை வலுவிழக்கச் செய்கிற இந்த உணர்வால் பலருக்கு அவஸ்தையே.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, திருமணமானவர்களாக இருந்தாலும் சரி, ஆகாதவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுபோது அவர்களின் உச்சபட்ச நிலையாகப்பட்டது, உடல் சுகத்தைத் தேட ஆரம்பிக்கிறது. அந்த சுகம் அனுபவிக்கக் கிடைத்தாலேயொழிய இதற்கு விடிவு காலமே இல்லை என்கிற பரிதாமான சூழலுக்குத்தள்ளப் பட்டுவிடுகின்றனர்.  அதன் பிறகே ஆரம்பமாகிறது, சூழ்ச்சியும் வஞ்சகமும், குழிபறிக்கும் நிலையும்.

இந்த வஞ்சக சூழ்ச்சியில் செய்யப்படுகிற துரோகங்களும் அக்கிரமங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. நன்றாகப் போயிக்கொண்டிருந்த அனைத்தும் தவறான பார்வையில் பார்க்கப்பட்டு விடுகிறது. நல்ல கணவன் மனைவி உறவு வேம்பாகக் கசக்க ஆரம்பிக்கிறது. நல்ல பெற்றோர்கள் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டு விடுகின்றனர். நல்ல சுற்றங்கள் உறவுகள் நட்புகள் என எல்லோரையும் நயவஞ்சகர்களாக பார்க்கத்துவங்கி விடுகின்றனர். காதல் என்கிற வட்டத்தில் இருப்பவரைத்தவிர வேறு யாரையும் நேசிப்பதில்லை. நல்ல குடும்பங்கள் சீரழிந்து போயிருக்கின்றன. சிலர் கொலைகாரர்களாகவும் மாறி கம்பி எண்ணிக்கொண்டிருப்பது உண்மையே.

மிக அண்மையில் ஒரு பத்திரிக்கைச் செய்தியை படிக்க நேர்ந்து அதிர்ந்துப்போனேன். தமது காதலியை வேறொருவனும் காதலிக்கிறான் என்பதற்காக அவனை கொலை செய்துவிடுகிறான் ஒரு மாணவன். தாயின் கதறல், என் மகன் ரொம்ப நல்ல பிள்ளை.. அமைதியானவன், அவன் செய்திருக்கமாட்டான், அவனை ஏன் பிடித்துப்போகிறீர்கள் என்று.! அந்த குடும்பம் அவனை நல்லவனாக வளர்த்திருக்கின்றதுதான், ஆனால் எது இந்த கதிக்கு ஆளாக்கியது என்றால்!! அது காதல் அல்ல, காதல் என்று வேடமிட்டுக்கொண்டிருக்கிற காமமே.

இதுபோன்ற அபத்தங்கள் நிகழும்போது, பெரும்பாலானோர்களின்  பார்வையில் காதல் என்கிற உணர்வு அசிங்கப் படுத்தப்படுகிறது, அருவருப்பாக்கப்படுகிறது, புறக்கணிக்கபடுகிறது, வெறுக்கப்படுகிறது. காதல்தான் இங்கு பலிகடாவாகிறது. இன்னமும் நம்மவர்கள் காதலை எதிர்ப்பதற்கு இதுவே காரணம்.

காதல் ஒரு தெய்வீக உணர்வு. காதல் வயப்பட்டவர்கள் தெய்வத்தன்மை நிறைந்தவர்கள். காதல் நுழையும் மனது அன்பின் வடிவமாக, சாந்த சொரூபமாக உருமாறுகிறது. சக்தி ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒளிவட்டம் பிரகாசமாய், அழகாய் மாறுகிறார்கள். மனிதர்களை வளர உயர வைக்கிறது காதல். பால் வேறுபாடுகள் கலைந்து ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் மதித்து   உயர்ந்த நிலைக்கு மனிதர்களை மாற்றக்ககூடிய ஆற்றல் காதலுக்கு உண்டு.

ஆனால் இந்த நிலையைக் கொடுப்பதற்கும் பெறுவதற்கும் நாம் தான் தயாராக இல்லை என்பதுவே இங்கு நிதர்சனம். நமக்கு ஆசைகள் அதிகம். பின்னிக்கிடக்கின்றோம் ஆசையென்னும் வலையில். எல்லாமே விரைவாக தேவைப்படுகிறது நமக்கு. எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கின்றோம், எதையோ தேடி.

ஒரு வாசகம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால், எங்கு படித்தேன் என்பது சரியாக நினைவில்லை.

`எனக்கு ஒரு பெண்ணின் உடம்பு மட்டும் வேண்டும், காதலிக்கப்போகிறேன்’

இப்படியும் யோசிப்பவர்கள் இருப்பதால் தான், காதல் என்றாலே அலறுகிறார்கள் பலர்.

அவசர யுகத்தில் காதலும் ஒரு ‘ஃபாஸ்ட் ஃபூட்’
எல்லாமே `வேஸ்ட்’


சில சிதறல்கள்

பரப்ரப்பு

நேரமாகும் போதெல்லாம்
நாற்காலியை விட்டு எழுந்துவிடுகிறேன்
கால தாமததிற்கு
கொடுக்கும்
மரியாதையாய்..

எழுத்து

என் எழுத்து
எனக்கே பிடிக்காமல்
போகிறது.
பிறரின் எழுத்து
அதிகம் பிடித்து விடுவதால்..

கவிதை

ஓய்வுப்பொழுதுகளில்
சாவகாசமாக
வருவதல்ல
அவை பரபரப்பு வேளையில்
உடனே உதிர்பவை

வேடம்

மற்றவர்களுக்கா தைக்கப்பட்ட
ஆடைகளில்
நான் நுழைந்துக்கொள்ளும் போது
எனக்கான கோமாளி
வேடமும்
தயாராகிவிடுகிறது

மூச்சு

உளைச்சலின் போது
வேகமாக ஊதுகிறேன்
யாரை `அணைக்க’
என்பதுதான் தெரியவில்லை..

காதல்

உன்னிடம் கேட்பதற்கு
என்னிடம் ஒரு கேள்வி உண்டு
என்ன பதில் வரும் என்பதை
நானே யூகித்து விட்டதால்
கேள்வியை கிடப்பில் போட்டுவிட்டேன்.
பதில் இதுதான்
``சத்தியமா இல்லை!’’

புதன், மார்ச் 28, 2012

ஆண்டு விழா சின்னம்

கம்பனியின் நூறு ஆண்டு விழாவை முன்னிட்டு, 100 என்கிற எண்கள் பதித்த, கருப்பு மற்றும் தங்க நிறத்தில், வட்ட வடிவத்தில் ஜொலிக்கும் ஒரு அழகான பேட்ஜ் எல்லோருக்கும் வழங்கியிருந்தார்கள். கண்டிப்பாக எல்லோரும் அதை அணிந்துக்கொண்டு தான் வேலைக்கு வர வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டது. சிலர் அணிந்துகொண்டு வருவார்கள் பலர் அதை பொருட்படுத்தவேயில்லை.

இந்த ஆண்டு கொடுக்கவிருக்கும் கம்பனி சீருடையில் (யூனிபோர்ம்) அந்த சின்னம் பதித்தக்கப்பட்டுதான் தைக்கப்பட விருக்கிறது. அதன் ஷேம்பள் காட்டப்பட்ட போது, இடது புறத்தில், இதயம் இருக்கும் இடத்தில் இந்த சின்னம் பதிக்கப்பட்டிருந்தது.

அந்தச் சின்னம் மார்பில் உராயும் போதெல்லாம், கம்பனியின் மேல் விசுவாசம் வரவேண்டுமென்பதற்காக பதிக்கப்படுகிறதா! செய்யும் தொழிலே தெய்வம், அதன் நிறுவனமே கோவில் என்கிற உணர்வு வரவேண்டுமென்பதற்காக  பதிக்கப் படுகிறதா! நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறோம் என்கிற பெருமை ஒவ்வொரு பணியாளர்களுக்கும் இருக்கவேண்டுமென்பதற்காக பதிக்கப் படுகிறதா! அல்லது, நாங்கள் அணிந்து ஏந்திச்செல்லும் இந்த சின்னம், காண்போருக்கு, நிறுவனப் பொருட்கள் ஒரு விளம்பரமாக இருக்க வேண்டுமென்பதற்கா பதிக்கப்படுகிறதா! என்பதைப்பற்றியெல்லாம் யாருக்குமே கவலையில்லை. காரணம் அதை யாரும் அணிந்துகொண்டு வரவில்லை.  நான் மட்டும் என்ன விதிவிலக்கா?

இன்று காலையிலே ஒரு வி.ஐ.பி வந்திருந்தார். எங்களின் ஆசிய நிறுவனங்களின் துணைத்தலைமை நிர்வாகி அவர். எவ்வளவு பெரிய ஆள் அவர், இருப்பினும், இந்த 100 ஆண்டு பதித்த அந்த சிறிய நினைவுச்சின்னத்தை தமது கோர்டின் இடது புறத்தில், இதயத்தை உரசி ஒட்டியவாறு அணிந்துகொண்டு வந்தார்.

ஜப்பானியர்களின் அதிவேக வளர்ச்சியில், இந்த விசுவாச உணர்வு முதன்மை வகிக்கிறது என்று தாராளமாக்ச் சொல்லலாம். எது எப்படியாயிருப்பினும், மேலிடத்தில் அமல் படுத்தப்படுகிற சட்டதிட்டங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப் படவேண்டும் என்கிற ஒழுங்கு முறையில் மிக கவனமாக இருப்பவர்கள் அவர்கள். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் நமக்குப் பாடம்.

அதைப் பார்த்த எனக்கு, அவமானமாகி, எங்கேயோ போட்டுவிட்ட அந்த பேட்ஜ்’யைத் தேடி எடுத்தேன். நல்லவேளை கிடைத்தது. உடனே எனது சீருடையின் இடது புறத்தில் அதைக் குத்திக்கொண்டேன். மனதில் கமபீரம் குடிகொண்டதை என்னால் உணரமுடிந்தது. நடையில் ஒரு மிடுக்கு வந்தது. பொறுப்பு மிக்க ஒரு ஊழியராக பவனி வருவதைப்போன்றதொரு உணர்வு மேலிட்டது. (பேட்ஜ் கையில் கிடைத்து, ஒரு மாத காலமாகிறது, இப்பொதுதான் அதை அணிகிறேன் என்பதும் குறிப்பிடத்தக்கதுவே.)

உடனே எதிரே வந்த ஒரு சக ஊழியரிடம், எனது சட்டாம்பிள்ளைத்  தனத்தைக் காட்ட ஆரம்பித்தேன்.. நாம் அணிந்து விட்டோம்ல...

`` எங்கே, அந்த எனிவர்சரி பேட்ஜ், ஏன் அணிந்துக்கொள்ளவில்லை?’’

செவ்வாய், மார்ச் 27, 2012

நிஜம்

பிடித்தவரோடு இருக்கும் போது, 
பிடிக்காதவரை நாம் நினைப்பதேயில்லை. 
பிடித்தவர் பகைக்கும் போது
பிடிக்காதவரை பிடிப்புக்குள் கொண்டு வருகிறோம்.
இது மனிதனின் பிடிப்பற்ற நிலையேயானாலும்,
இதுவே பலரின் வாழ்வியல் சூட்சமம்.!
உறவை வெற்றிக்கொள்ள
போடப்படும் இந்த நாடகத்தில்
எனது பங்களிப்பு அறவே இல்லாமல் இருக்க
எனக்காகவே நான் போட்டுக்கொள்ளும் கவசம்..
நிஜமான, மாசுமருவற்ற அன்பு.
ஆமாம் உன் மேல் நான் கொண்ட நேசம்,
நிஜம்..நிஜம்..நிஜம்

சித்தி வளர்ப்பு

``என் மகளுக்கு எப்படியாவது வேலை வாங்கிக்கொடுங்க, சிஸ். ’’ ஒருவர் என்னிடம் வந்து மன்றாடினார்.

அவர் வேலை கேட்பது அவரின் முதல் மனைவியின் மகளுக்கு.  குழந்தைக்கு ஆறு வயது இருக்கும் போது,  இவருக்கும் வேறொரு பெண்ணிற்கும்  தீவிர காதல். காதல்ன்னா காதல் அப்பேர்பட்ட காதல். அவர்களின் காதல் தழும்புகூட இன்னமும் இவரின் நெஞ்சில் பச்சை குத்தலாக. ஒருமுறை அதைக் காட்டுவதற்காக, தமது சட்டையை கீழே இறக்கினார். ஐயோ.. எதுக்குங்க இதெல்லாம், அவளின் படிப்பிற்கு தோதான வேலை காலி இருந்தால், நிச்சயம் நான் உங்களிடம் சொல்கிறேன், என்று கூறி, கண்களை வேறு பக்கம் திருப்பினாலும், அவரின் மார்பில் பச்சைக் குத்தியிருந்த அந்தப் பெண்ணின் பெயரை ஜாடை மாடையாக பார்த்தும் விட்டேன்.

ஒரு நல்ல வாழ்கையை அந்தப் பிள்ளைக்கு (மகளுக்கு) நான் கொடுத்து விட்டால், அவளின் அம்மாவிற்கு நான் செய்த கொடுமைகள் எல்லாம் என்னை விட்டு விலகும் என்றார்.

காதல் ஜோரில், நான் எனது முதல் மனைவிக்குச் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னுடைய இரண்டாவது மனைவியின் காதல் வலையில் சிக்கி, அவளை படாத பாடுபடுத்தினேன். அவளுக்கு எங்களின் காதல் பிடிக்கவில்லை, (எப்படிப் பிடிக்குங்க.!?) போராடிப் போராடிப்பார்த்தாள், இறுதியில் தற்கொலை செய்துக்கொண்டாள்.

என்னுடைய இந்த  ஆறுவயது மகளை வைத்துக்கொண்டு, நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. என் காதலியையே நான் திருமணம் செய்துக்கொண்டேன். அப்போது அவள் வேறு கர்பமாக இருந்தாள், இவள் வேறு மரணம், இந்த பிள்ளை வேறு என் கையில் அநாதையாக. நான் என்ன செய்வேனுங்க..! (ஹுக்கும்.. ரொம்ப சோகம்தான், ஒழுங்கா இருந்தால் ஏன் இவ்வளவு சிக்கல்!?)

என் இரண்டாவது மனைவிதான் இவளையும் வளர்த்தாள். எனக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தைகள் மூன்று. பையன், இரண்டு பெண் பிள்ளைகள். இவளோடு சேர்த்து நான்கு பிள்ளைகள். மற்ற பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இவள்தான் பாவம்.! எந்த குறையும் இல்லாமல் எல்லோரையும் நன்றாகத்தான் வளர்த்தாள் என் மனைவி. இருந்தாலும் அவளின் அம்மா இருந்திருந்தால், இந்த பிள்ளை இன்னும் நல்லா செல்லமாக வளர்த்திருப்பாள். அவ்வளவு பாசமாக இருந்தாள். இவளை இப்படி வளர்க்கனும் அப்படி வளர்க்கனும், நல்லா படிக்கவைக்கனும்’னு அடிக்கடி சொல்வாள். என்ன செய்வது? எல்லாம் தலைவிதி. (விதி???)

போலிடெக்னிக்கில் படித்தாள், டிப்ளோமா வைத்திருக்கின்றாள். ரொம்ப தாழ்வுமனப்பான்மை’ங்க. எப்போதும் தன்னை மற்றவர்களிடம் ஒப்பிட்டு, தாழ்வாகவே புலம்பிக்கொண்டிருக்கின்றாள். உங்களைப்போன்ற தெளிவான நண்பர்கர்கள் இருக்கும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்துக்கொண்டால், அவளின் தன்னம்பிக்கை வளரும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

எவ்வளவோ கம்பேனிகளுக்கு வேலைக்குச் சென்று விட்டாள்,  ஆனாலும்  தாக்குப்பிடிக்காமல் பாதியிலே வேலையை விட்டு வந்து விடுகிறாள்.   வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால், அவளின் அம்மா (சித்தி) ஜாடை மாடையாகப் பேசுகிறாள், பார்ப்பதற்குப் பரிதாபமாக இருக்கிறது, அவளின் நிலைமை. எவ்வளவோ கொடுமைகளை நானும் அவளும் அனுபவித்து விட்டோம். இனி என்னால் முடியாதுங்க, வயசு ஆயிகிட்டே போகுது, திடீரென்று செத்துப்போயிட்டா, அவளுக்கு யாருமே இல்லை. அவளின் பாட்டி வேறு, என்னால் தான் அவர்களின் மகள் செத்துப்போனாள், என்று சொல்லி, என்னை சுத்தமாக வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள்.  (பின்னே சேர்த்துக்குவாங்களாக்கும்!)

எப்படியாவது உதவி செய்யுங்கள், என்று என்னிடம் அவளின் ரெஸுமி’யைக் கொண்டு வந்துக்கொடுத்தார்.

அவர், கணவரின் பழய நண்பர் என்பதாலும், அவரின் நிலைமை எனக்கு ஓரளவு புரிந்து போனதாலும், (மற்றபடி குடும்பம் பிள்ளைகள் பற்றி எதுவும் தெரியாது) மேலும் அந்தப் பெண், அரசாங்க தேர்வுகளில் சிறப்பான புள்ளிகள் வாங்கியிருப்பதாலும், அதை விட, தற்போது அவளின் தகுதிக்கு ஏற்றாட்போல் ஒரு வேலையும் காலியாக இருப்பதால், அவரின் நச்சரிப்பிற்கும் புலம்பலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய  நேரமும் வந்துவிட்டது.

இதுவரையில் நான் யாருக்கும் சிபாரிசு செய்ததில்லை. ஆதலால், இவளின் ரெசுமி’யை எடுத்துக்கொண்டு, நேராக அந்தப் பகுதியின் தலைமை நிருவாகியைச் சந்தித்து, சிபாரிசு செய்தேன். அவரும் அவளின் தேர்வு சான்றிதழ்களை நோட்டமிட்டு விட்டு, அதில் அவர்களுக்குத் தேவையான தகுதிகள் இருந்து விட்டபடியால், நேர்முகதேர்விற்கு தேதி குறித்தார். அவசரமாக அப்பிரிவிற்கு ஆட்கள் தேவை என்பதும் கூடுதல் தகுதியே.

நேர்முகதேர்விற்கு வந்தாள். சிபாரிசு, அவரசமாக ஆட்கள் தேவை, அவளுக்கும் வேலை அனுபவம், கணினி என இன்ன பிற தகுதிகள் இருப்பின், உடனே அப்பாயிண்ட்மெண்ட் கடிதம் கிடைத்தது.

என் சிபாரிசு தயவால்தான் உடனே வேலை கிடைத்தது என்றெண்ணி, அவளின் அப்பா, விட்டால் காலிலே விழுந்து விடுவார் போலிருக்கு. அப்படி ஒரு பவ்வியம். அவர் ஒரு பக்கம் நன்றி..நன்றி என்று கூறியவண்ணமாகவும்..! மகள் ஒரு பக்கம்.. தினமும் தொலைபேசியில் தொல்லை..

வேலை எப்படிக்கா? எனக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராதே! நிறைய டைப்’ வேலைகள் இருக்குமா? தவறு செய்தால் திட்டுவார்களா? வேலைக்கு வரும் போது, என்ன டிரஸ் போட்டுக்கிட்டு வரணும்? சுடிதார் போடலாமா? யூனிபோர்ம் எனக்கும் கிடைக்குமா? கண்டிப்பா ஷூ தான் போடணுமா? என்னிடம் நிறைய செருப்புகள்தான் உள்ளன. ஷூ இல்லையே, செருப்பு போட்டுக்கொண்டு வேலைக்கு வரலாமா!? கம்பனியில் ஷூ கொடுப்பார்களா? என்ன மாதிரியான கணினி வேலைகள் அதிகம்.? என்ன சிஸ்டம் பயன்படுத்துகிறார்கள்? நான் கருப்பா குண்டா இருக்கிறேனே, ஈவ் டீசிங் செய்வார்களா? நிறைய ஆண் பணியாளர்கள் வேலை செய்கிறார்களா? தமிழர்கள் ஜாஸ்தியா, இல்லை மற்ற இனத்தவர்கள் ஜாஸ்தியா? அந்த டிப்பார்ட்மெண்டில் யார் அதிகாரி? அவர் எப்படிப்பட்டவர்? சீனரா, மலாய்க்காரரா, தமிழரா? ஆரம்பத்திலேயே இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களே, வேலை கஷ்டமா? ஆறு மாதம் கழித்து நிரந்தரமாக்காவிட்டால், என்ன செய்வது? எனக்கு முன்னாடி அந்த இடத்தில் வேலை செய்த அந்தப் பெண், ஏன் வேலையை விட்டுச்சென்றாள்? நீங்கள் எத்தனை ஆண்டுகள் அங்கே வேலை செய்கிறீர்கள்? வருடா வருடம் சம்பள உயர்வு சரியாகக் கிடக்குமா? போனஸ் எத்தனை மாதம்? எல்லா பொதுவிடுமுறையும் லீவா? லீவு எடுக்கச் சுலபமா, கஷ்டமா? மெடிக்கல் லீவு எடுத்தால் திட்டுவார்களா? அங்குள்ளவர்களெல்லாம் நல்லா பார்த்துக்குவாங்களா........!!! ???

இப்படி தினமும் எதாவதொரு கேள்விகளோடு, தொலைப் பேசியில்  என்னைத்  தொடர்புக் கொள்கிறாள்.! அடுத்த மாதம் வேலைக்குச் சேர்கிறாள்.

திங்கள், மார்ச் 26, 2012

நான்கு சுவர் ரகசியம்தான்

இன்று கொஞ்சம் சோர்வாகவே உள்ளேன். உணவு எடுப்பதற்குக் கூட மூட் வரவில்லை. இருப்பினும் கடுமையான பசிதான். தாமதமாகவே மதிய உணவை எடுத்துமுடித்தேன்.

சரியான முறையில் காலை உணவும் எடுக்கவில்லை. உடம்பெல்லாம் அடித்துப்போட்டதைப் போன்ற வலி.

பேருக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை. வேலைக்கு மட்டுமே விடுப்பு. வீட்டில் ஏது ஓய்வு.!? வார நாட்களில் தள்ளிப்போடப்பட்ட வேலைகளையெல்லாம் வார இறுதியில் முடித்தாக வேண்டும். இல்லையென்றால், தேங்கி நிற்கும் அனைத்து வேலைகளும் அப்படியே நின்றுபோகும். முடிவே இல்லாதது வீட்டு வேலைகள் தான். இரவு படுக்கைக்குப்போகும் வரை ஓயாது.

நேற்றைய பரபரப்பின் அழுத்தம் கூடுதலாக இருந்ததால், இன்றைய காலைப் பொழுதில் கொஞ்சம் தாமதமாக எழுந்து, அரக்கப்பறக்க வேலைக்கு வர நேர்ந்ததால் காலை உணவு எடுக்கவில்லை

முதல் நாள் சமைப்பதை,  காலைவேளைகளில் மீண்டும் சுடவைத்து அதை மதிய உணவிற்கு அலுவலகத்திற்குக் கொண்டுவந்துவிடுவது என் வழக்கம்.

நான் சமைப்பது சாதாரண அரிசி கிடையாது. பொன்னி அரிசி. அதனின் விலை இங்கே அதிகம். ஒரு கிலோ எட்டு ரிங்கிட் விகிதம் விற்கப்படுகிற அரிசி அது. இதன் காரணத்தாலே அதனின் ஒரு பருக்கைக்கூட விரையம் செய்ய எனக்கு மனம் வராது. விலை அதிகம் என்பதால் விரையம் செய்யமாட்டேன் என்பதல்ல, பொதுவாகவே உணவுகளை விரையம் செய்வது எனக்குப் பிடிக்காது.

உலகத்தில் பசி பட்டினியால் வாடித்துடிக்கின்ற மக்களை நினைக்கின்றபோது, உணவுகளை விரையமாக்க எனக்கு மனம் வராது என்கிற போலித்தனமான அனுதாபங்களையெல்லாம் வரவழைத்துக்கொண்டு, கேட்பவர்களின் மனதில் இடம்பிடித்து, தம்மை உலகமகா கருணையாளினியாகக் காட்டிக்கொள்வதற்கு எனக்கு இஷ்டமில்லை... !

நாம் எதற்காக உழைக்கின்றோம்? வாழ்வின் அத்தியாவசிய தேவையில் உணவுதான் முதல்நிலை. வயிறு மட்டும் இல்லையென்றால், நாம் எதற்காக ஒன்பது மணி நேரம் ஓடி  ஓடி வேலை செய்யப்போகின்றோம்.!?  இதன் தேவைக்காகத்தானே படாத பாடுபடுகிறோம்.! அதை ஏன் வீண் விரையமாக்குவானேன்.!

பொதுவாக விடுமுறையென்றால் ஒன்பது மணிக்குமேல் எழுவதுதான் வழக்கம். நேற்று கூடுதலாக அரை மணிநேரம் தூங்கிவிட்டேன். எழும்போது காலை மணி ஒன்பதரை. மாமியார் வேறு மருத்துவமனையில் இருப்பதால், எழுத்தவுடன் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கிளம்பினார் கணவர்.

எதாவது சமைத்துக்கொடுக்கவா அம்மாவிற்கு? என்றவுடன், இல்லை நேரமாச்சு, வழிவழியப் பார்ப்பார் அம்மா, நான் கிளம்புகிறேன் என்று சொல்லிக் கிளம்பினார்.

அதன்பிறகு, நான் தனிமையில்! எனது நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, மெது மெதுவாக என் வார இறுதி வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். வாசலைப் பெருக்கி, நன்கு தேய்த்துக் கழுவினேன். மேலும் கீழும் மோப், வஃக்யூம் செய்தேன். வாரம் ஒரு முறை செய்யும் வேலைகள் தான் இவை. இடையிடையே மற்ற மற்ற வேலைகளையும், மெத்தை தலையணைகள் உலர வைப்பது, துணிமணிகளைத்தேடி, துவைக்காத துணிகளை துவைக்கப்போடுவது என என் வேலைகள் தொடர்ந்தன. மணி பதினொன்றாகிவிட்டது.

காய்கறி சந்தைக்குக் கிளம்பினேன். தாமதம்தான் இருப்பினும் பொருட்களை மதியம்வரை விற்பனை செய்வார்கள்.

மார்கெட் சென்றுகொண்டிருக்கையில், ஒரு அழைப்பு வந்தது. கணவர்தான். அம்மாவிற்கு மருத்துவமனை உணவு அலுத்துவிட்டதாம், சுடச்சுட ரசம் வைத்து, கொழகொழன்னு சோறு ஆக்கியும் எடுத்து வரமுடியுமா, மதியம் ஒரு மணிக்குள்.? என்றார்.

அழைப்பு வரும் போது காலை மணி பதினொன்று முப்பது. நான் மார்கெட் சென்று சாமான்கள் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்வதற்கு எப்படியும் பனிரெண்டு அல்லது பனிரெண்டு முப்பதாகும்.

சரி, மதியம் ஒரு மணிக்குள் சமைத்துவிடமுடியும்தான் இருந்தபோதிலும் மருத்துவமனைக்கு வீட்டிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் செல்லவேண்டும். தாடால் புடால் என்று அவசர அவசரமாக சமைத்து எடுத்துச்சென்றாலும், மதிய உணவுவேளை முடிந்த பிறகே சென்று சேர முடியும். நோயாளிகளின் மதியஉணவு நேரம் 11.30யில் இருந்து 12.30 வரைதான். மேலும் அங்கு மாமிபோன்ற நோயாளிகளுக்கு கஞ்சிதான் உணவு. கொடுக்கும் கஞ்சியில் உப்பு போடமாட்டார்கள், நாம் கொஞ்சம் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். ஒண்ணும் பிரச்சனையில்லை.!

காலையிலே இப்படி வெறுப்பேற்றினால் கோபம் வருமா வராதா? எனக்குக் கோபம் வந்தது. எல்லாம் ரிமோர்ட் மாதிரி நடைபெற வேண்டுமென்றால் முடியுமா? மேலும் யாராவது என்னை இப்படி அவசரப்படுத்தினால், அது என்னைத் துன்புறுத்துவதற்குச் சமம். எனக்கு வாழ்க்கையில் பிடிக்காத ஒன்று, அவசரப்படுத்துவது. நானும் யாரையும் அவசரப்படுத்த மாட்டேன், அதே போல், என்ன தலை போகிற காரியமாக இருந்தாலும், என்னையும் யாரும் அவசரப் படுத்தக்கூடாது. இதனாலேயே, ஆளாய்ப்பறக்கும் அவசர கூட்டங்களுக்கு நான் போகிறதே இல்லை. அவசரப்படுத்தும் பலரை நான் பாதியிலே கலற்றிவிட்டுள்ளேன். அவசர அவசரமாகக் கிடைக்கும் எதையுமே நான் எற்பதுமில்லை. இதுவே என் பாலிஷி.

என்னால் முடியாது. இப்பவே மணி 11.30ஆகிவிட்டது, இனிமேல் வந்து சமைத்து, ஜேம்மில் மாட்டிக்கொண்டு ஆஸ்பித்திரி வந்து சேர எப்படியும் மணி ரெண்டு மூணு ஆகும். அதனால், பக்கத்து ரெஸ்டரெட்ண்டுகளில்
கொஞ்சம் ரசம் வாங்கி, அங்கே கொடுக்கப்படும் கஞ்சியில் அதை ஊற்றி கலந்துகொடுங்கள், இரவு உணவிற்குப் பார்க்கலாம் என்றேன்..சொல்லி முடிப்பதற்குள் தொலைப்பேசி துண்டிக்கப் பட்டுவிட்டது. பேசுவதை நிதானமாகக் கேட்பதற்குக்கூட நேரமில்லாமல் எவ்வளவு அவசரம் பார்த்தீர்களா.!

வீட்டிற்கு வந்து சமையல் வேலைகளைத் தொடங்கினேன். திடீரென்று கேஸ் முடிந்து விட்டது. தொலைப்பேசியில் கேஸிற்குச் சொல்லிவிட்டு, வாங்கி வந்திருக்கும் ஞாயிறு பத்திரிகைகளைப் புரட்டினேன்.  பத்திரிகைகளைப் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு அழைப்பு வந்தது.

இங்கே, பத்திரிகைகளுக்கு எழுதும் சில வாசக எழுத்தாள நண்பர்கள் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு சில இலக்கிய விஷ்யங்கள் குறித்துப்பேசுவது வழக்கம். எல்லோரிடமும் இலக்கியம் குறித்து பேசமுடியாது. யாராவது ஒரு சிலர் அத்திப்பூத்தாட்போல் கிடைப்பார்கள். எதாவது சந்தேகம் என்றால் உடனே அழைப்பார்கள். எல்லோரையும் நண்பர்களாக வைத்துக்கொள்ளலாம், ஆனால் குழந்தை குணமுள்ள சிலரிடம் மட்டுமே தொலைபேசி வழியும் பேசுவேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தாள வாசக நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். ஜெயகாந்தனின் கதை ஒன்றினைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தார். என்னிடம் ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு எதுவுமில்லை. கூகுளில் தேடிப்பார்க்கிறேன் என்று சொல்லி, ஒரு கையில் தொலைபேசி மறுகையில் கூகுளில் தேடல். பேசிக்கொண்டே இருவரும்... அவர் சொல்ல நான் தேட, இடையிடையே நகைச்சுவையாக கிண்டல் வேறு. பேருக்குத்தான் எழுத்தாளர், ஆனால் யாருடைய கதைகளையும் வாசிப்பதில்லை, எல்லாவற்றிற்கும் இந்த விஜி ஒருவள் கிடைத்து விடுவாள், தொல்லை செய்ய..  சரியான போங்கு எழுத்தாளர்கள்,
என்று நையாண்டி செய்தேன்.. ஒரே சிரிப்பு.  கலகல சத்தத்துடன். சிரிப்பு, பிறகு உரையாடல் கதையைப்பற்றி சின்ன அறிமுகம் என தொடர்ந்தது எங்களின் பேச்சு. எப்போதுமே தொல்லை செய்பவரல்ல அவர், ஆதலால், கொஞ்ச நேரம் பேசினேன்.

தொலைப்பேசியை வைத்து விட்டு வெளியே வந்தேன், ஹாலில் கணவர். அவர் வந்து எவ்வளவு நேரமாகிவிட்டதென்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் பேசியதைக் கேட்டிருப்பார். எனக்குத்தான் குசுகுசுவென பேசத்தெரியாதே. மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும்.! கள்ளங்கபடமில்லா எனக்கு எந்த சங்கடமும் தோன்றவில்லை.

கோபக்கனல் அவரின் முகத்திலும் கண்களிலும்.

``சமையல் ஆச்சா?’’ குரலில் கொடூரம்.

``இல்லை, கேஸ் தீர்ந்துவிட்டது, ஆடர் கொடுத்தாச்சு, இன்னும் வரவில்லை, நீங்க போய் எடுத்து வரமுடியுமா?!’’ எப்போதும்போலவே நான்....

வாசகர்களை, எழுதுத்தாளர்கள் யோசிக்க வைக்க வேண்டுமல்லவா!? அதனால், அதன் பிறகு வந்த படுமோசமான வாசகங்களை, வாசர்களான நீங்களே கோர்த்துக்கொள்ளுங்கள். எப்படி வேண்டுமானாலும் கெட்டவார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். என்ன மாதிரியான கேவலமான வாசங்களையும் நீங்கள் இணைத்துக்கொள்ளலாம். அது உங்களின் சாமார்த்தியத்தையும், உங்கள் வளர்ப்பின் தராதரத்தையும் பொருத்தது.

நான்கு சுவருக்குள் நடப்பதை, ஒருவரிடம் மட்டும் பகிர்ந்தால் அது ரகசியமாக இருக்காது. பொதுவில் வைக்கும் போது பலரின் மனதில் அது ரகசியமாக பாதுகாப்பாக இருக்கும்.

சொல்லாமலும் இருக்க முடியாது, சொன்னால் பாரம் குறையும்.


ஞாயிறு, மார்ச் 25, 2012

பழைய வீடு

முன்பு நாங்கள் வசித்த இடம், வீடு, எங்களை அவ்வளவாகக் கவரவில்லை. பெரும்பாலும் மலாய்க்காரர்கள் வசிக்கும் ஓர் இடம் அது.

அவர்களால் எந்தப்பிரச்சனையும் இல்லைதான். இருந்தபோதிலும், அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பூனை வளர்ப்பார்கள். அவர்களின் அந்த வளர்ப்புப் பூனைகள் இரவு வேளைகளில் அந்த ஏரியாவையே சுற்றும். நாம் கதவை மூடிவைத்திருந்தாலும் அது நம் வீட்டிற்குள் எப்படியாவது நுழைந்து அடுப்பங்கரையில் குடும்பம் நடத்திக் குட்டிகள் போடும்.

ஒரு முறை அப்படித்தான், மகள் தூங்கும் அறையின் கட்டிலுக்கு அடியில் அமைதியாகப் படுத்துக்கொண்டது ஒரு கருப்புப்பூனை. நடு இரவில் அங்கே ஒரு எலி வர, அந்த எலியைப்பிடிப்பதற்குத் தாவிய பூனை, மகளில் மேல் பாய்ந்தது. அதைக்கண்டு அவள் அலற (பயங்கரமாக)  ஓரே அமளித்துமளியாகிவிட்டது.

அதுமட்டுமல்ல, இரவு நேரங்களில் வீட்டின் கூறையில் பூனைகளின் ராஜ்ஜியம் தாங்க முடியாத ஒன்று. நள்ளிரவு வேளைகளில் திடுதிமென தாறுமாறாக சத்தங்களை எழுப்பிக்கொண்டு ஓடும். ஓடுகளைப் பிராண்டும்.. அயர்ந்து உறங்கும் நமக்கு தீடிரென்று விழிப்பு வரும், அதன் பிறகு உறக்கம் களைந்து, உறங்காமலேயே எத்தனையோ இரவுப்பொழுதுகள் பாழாய்ப்போயின, இந்தப் பூனைகளால்..

பூனைகளுக்குள் பயகரச்சண்டையெல்லாம் வரும். சண்டைகள் கடுமையாகவே நிகழும். சண்டை என்று இறங்கிவிட்டால் அதுகளில் பேச்சையே அதுகள் கேட்காதுகள் போலிருக்கு. விடாமல் போராட்டம் நடக்கும்.

சிலவேளைகளில் குழந்தைகள் அழுவதைப்போன்ற சத்தத்தில், ஊளையிடும் பாருங்க, கேட்கவே பரிதாபமாக இருக்கும்.  சில நேரங்களில் பொழுது விடியும் வரை அதே போல் கத்திக்கொண்டே இருக்கும். ஒரு முறை கடுமையான கோபத்தில் வீட்டில் வைத்திருந்த பிரம்பால் வசமாக மாட்டிய ஒரு பூனையை வாங்கு வாங்கு என வாங்கினேன். அப்போது என் மகனுக்கு ஏழு வயது இருக்கும்..

``ஏம்மா, பேசவே முடியாத இந்த ஜீவனை அடிக்கிறீங்க? பாவம் இல்லையா? இந்த பிரம்பால் (ரோத்தான்) அடித்தால் எப்படி வலிக்கும் தெரியுமா? குடுங்க நான் உங்கள திருப்பி அடிக்கிறேன், எப்படி இருக்குன்னு அப்புறம் தெரியும்!. எனக்கு நீங்க சோறு ஊட்டறீங்க, அதுக்கு அவங்க அம்மா சோறு ஊட்டல, அதான் அது அழுவுது, அத போய் இப்படி அடிக்கிறீங்களே அறிவிருக்கா!?’’ என்று கைகளை முகத்திற்கு நேராக நீட்டி என்னைத் திட்டினான்.

அன்றுமுதல் எனக்கு பிடிச்சது சனியன் என்றுதான் சொல்லவேண்டும். வீட்டில் சமைப்பதை, தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை, பூனைகளுக்குக் கட்டாயம் போட்டாகவேண்டுமென்று, சமைத்து வைத்த உணவுகளை அப்படியே எடுத்து பூனைகளுக்கு உணவாகக் கொடுப்பான். ஒரு முறை மார்க்கெட்டில் இருந்து அப்போதுதான் வாங்கிவந்த வஞ்சரை மீன் துண்டு ஒன்றை அப்படியே தூக்கி பூனைக்குப் போட்டான்.

``மீன் விக்கிற விலைக்கு, பூனைக்கு மீன் கேட்குதா?, இரு உன்ன என்ன பண்ணுகிறேன் பார் என ஒரு முறை அவனையும் அடித்தேன். அசரவில்லை, தொடர்ந்து வீட்டில் உள்ள கருவாடு, சார்டின், நெத்திலி என ஓயாமல் எடுத்துப் போட்டுக்கொண்டே இருப்பான். இதனாலேயே, அவனைக்கண்டால் சில பூனைகள் உடனே ஓடிவந்து விடும்.

வீட்டு வாசட்படியில் உட்கார்ந்திருப்பான், அவனைச் சுற்றி பூனைகள் வட்டமடித்தவண்ணமாகவே இருக்கும் `மீயாவ்,மீயாவ்’ என. என்னன்னவோ பேசிக்கொண்டிருப்பான் பூனைகளோடு.

அந்த பழைய வீட்டு வாசலில் ஒரே பூனை மலமாக இருக்கும். பூனையின் மலம்  துர்நாற்றம் வீசும். வீடே நாறும். நான் நட்டுவைத்துள்ள செடிகள் அனைத்தும் செத்துப்போகும் இந்தப் பூனை மலத்தின் கொடுமையால். பூனையின் மலம் புல்லில் பட்டால் கூட அந்த புற்கள் கருகிப்போகும். எத்தனையோ முறை முயன்று தோற்றுப்போனேன் துளசி செடியை முளைக்க வைப்பதற்காக.. பூனைகளின் அராஜகத்தால் துளசி செடி வளரவே வளராது. பூச்செடியில் உள்ள பூவைப் பறித்து பூஜைக்குப் போடுவதற்குக்கூட மனம் ஒவ்வாது, காரணம் அந்த செடியின் கீழ் ஒரே பூனை மலமாக இருக்கும். ஒரு முறை, என் மகனைத் திட்டினேன், உன் பூனைகளால் தான், அம்மாவிற்கு பூஜைக்குக் கூட பூக்கள் கிடப்பதில்லை என்று. !

மறுநாள் குழந்தை, பூனை மலங்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான். என்ன கொடுமை.!! நான் மலம் அல்லினாலும் அல்லுவேனேயேயொழிய அவைகளை விரட்டவே மாட்டேன் என்று பிடிவாதமாகவே இருந்தான்.

இதுவாவது பரவாயில்லை, ஒரு நாள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, மழையில் நனைத்து குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு பூனைக் குட்டியை, கால்வாயில் இறங்கித் தூக்கிக்கொண்டு வந்து விட்டான். கால்வாயில் இறங்கியது எப்படித் தெரியுமென்றால், அவனின் வெள்ளைச் சட்டையெல்லாம் அழுக்கு.

பூனை தொப்பையாக நனைந்து, வெடவெட என நடுங்கிக்கொண்டிருந்தது. பள்ளிச் சீருடையைக்கூட கலற்றாமல், அந்தப் பூனைக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தான். பால் கலக்குங்க, பாவம் பூனை என, எனக்கு வேறு ஆடர் கொடுத்துக்கொண்டிருந்தான். எங்கேயோ கிடந்த ஒரு காகிதப் பெட்டியைக் கொண்டு வந்து அதை அதனுள் வைத்து இங்கேயும் அங்கேயும் தூக்கிக்கொண்டு, அவனின் அக்காவிடமும் திட்டு வாங்கிக்கொண்டு, பள்ளி வீட்டுப்பாடங்களைக் கூட செய்யாமல், பூனைகளிலேயே கவனத்தைச் செலுத்தி பொழுதை ஓட்டினான்.

கணவர் அவனைத் தொடர்ந்து மிரட்டி எச்சரித்து, படிப்பில் கவனம் வைக்கச்சொல்லி,  கொஞ்சம் கொஞ்சமாக அவனின் பூனை பாசத்தை விலக்கினார்.

இப்படியாக பூனைக்கதைகள்...

மேலும் அந்தப் பழைய வீட்டில் கொசு தொல்லை அதிகம். அங்கே வசிப்பவர்கள் அதிக அளவில் டிங்கி காய்ச்சலுக்கு பலியாவார்கள். இதற்குக்காரணம், முறையான கால்வாய் துப்புறவுப் பணி  நடைபெறாததுவே. வீட்டின் பின்புறமிருக்கும் கால்வாயில் கழிவுகளின் அடைப்பு அடிக்கடி நிகழும். நான் வசித்த வீட்டின் எதிர் வீட்டில் மலாய்க்காரப்பெண்மணி ஒருவர் வீட்டிலேயே அதிக அளவில் சமைத்து கம்பனி கம்பனியாக கேட்டரிங் சப்ளை செய்து வியாபாரம் செய்கிறாள். அவள் சுத்தம் செய்கிற மீன்,கோழி, இறைச்சி, இரால், நண்டு போன்றவற்றின் கழிவுகள் அனைத்தும் அந்த கால்வாயிலேயே தேங்கி இரவுவேளைகளில் துர்நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். கடுமையான மழைவந்தால் ஒரிரு நாட்கள் விடுதலை கிடைக்கலாம், இல்லையேல் மூக்கைத்துளைக்கும் நாற்றத்திலேயே நாள்பொழுதுகள் நகரவேண்டியிருக்கும். இரவில் வெளியே ஆட்கள் நடமாட முடியாத அளவிற்கு நாற்றம். எல்லோரும் மூக்கை மூடிக்கொண்டுதான் என் வீட்டையும் அவள் வீட்டையும் கடப்பார்கள்.

மக்கள் குடியிருக்கும் வீடமைப்புப் பகுதிகளில் இது போன்ற வியாபாரங்களுக்குத்  தடைவிதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.  அதுவும் பானை பானையாக சமையல் செய்து கேட்டரிங் வியாபாரம் செய்வது கூடவே கூடாது. பிடித்தால் அபராதத்தொகை செலுத்துவதோடல்லாமல் வியாபாரத்திற்குப் பயன்படுத்துகிற பொருட்களையும் பறிமுதல் செய்துவிடுவார்கள்.

இருப்பினும் அப்பெண்மணியை மட்டும் யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதற்கு மூலக்காரணம் அவளின் கணவன் ஒரு போலிஸ் அதிகாரி என்பது கூடுதல் தகுதி அங்கே.  மேலும் அவர்கள் மலாய்க்காரர்கள். நாங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் வசிக்கின்ற தமிழர்கள் சிலர் ஒற்றுமையாக செயல் பட்டு புகார் கொடுத்தால், புகாரைத்தூக்கிக்கொண்டு, இன்னார் இன்னார்தான் இப்படிப்புகார் கொடுத்தார்கள் என்று ஒளிவுமறைவின்றி நம்மைக் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் அதிகாரிகள்.

ஏற்கனவே ஒருமுறை அப்படித்தான் நடந்தது. புகார் கொடுத்த அந்த தமிழ் குடும்பத்தை அப்படியே புறக்கணித்தார்கள் அங்குள்ள மலாய்க்காரகள். அவர்களின் புறக்கணிப்பு நம்மை ஒன்றும் செய்துவிடாதுதான் இருப்பினும், ஊருடன் கூடிவாழ் என்பது நமது தாரகமந்திரமாச்சே. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்தான் நமது முதல் சொந்தங்கள். பகைத்துக்கொள்ள முடியுமா?  இதற்கு பயந்துகொண்டே, புகார் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பொறுத்துக்கொண்டோம் நாற்றத்தை.

நாம் ஒரு நாய் வளர்த்தால் போதும் உடனே முனிசிபலுக்கு புகார் போகும்.. நாயைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்.

அந்த இடத்தில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், எங்களின் வீட்டு வரிசையின் பின்புற இறுதியில்தான் பொதுத்தொலைபேசிக் கூடாரம் உள்ளது. அதன் அருகிலேயே பஸ் நிறுத்தும் இடம் வேறு அமைந்துவிட்டதால், காலை மாலை இரவு என எந்த நேரமாக இருந்தாலும் ஆட்களில் நடமாட்டத்திற்கு குறைவே இருக்காது.

வேலை முடிந்து வந்து இரவாகும் நான் சமைத்து முடிக்க. இப்படித்தான் ஒருநாள் இரவுவேளையில் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு பெண் அலறும் குரல் கேட்டது,  ‘அக்கா கதவைத்திறங்கக்கா...! ஒருவன் என்னைத்தொடர்கிறான்..’ என்று என் பின் வாசல் அருகில் நின்றுக்கொண்டு மன்றாடினாள். எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. யார், எவர் என்று தெரியாத பட்சத்தில் எப்படி வீட்டைத்திறந்து உதவுகிறேன் என்கிற பெயரில் அடைக்கலம் கொடுப்பது? காலம் வேறு கெட்டுக்கிடக்கிறது. நான் திருதிருவென முழித்து யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.. துரத்திவந்த அந்தத் திருட்டு ராஸ்கல், அவளை நெருங்கி, அவள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைக் கதற கதற பிடுங்கிச்சென்றான். என் கண் முன்னேயே நடந்தது அச்சம்பவம்.
கத்துகிறாள் கதறுகிறாள், காப்பாற்றுங்கள் திருடன் திருடன் என்று.. எந்த மலாய்க்காரர்களும் தமது கதவுகளைத் திறக்கவேயில்லை. சாட்சியாக நின்ற நானும் வாய்பேசா மௌனியாக உரைந்து போனேன்.

அவ்வீட்டின் சமையல் அறை பின் பக்கம் உள்ள ஒரு தாழ்வாரத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கும். வீட்டோடு ஒட்டியிருந்தாலும் சமையல் அறை தனியாகவே இருந்தது. நான் கேட்டுக்கொண்டதின் பேரில் அதுமாதிரி கட்ட உத்தரவு போட்டார் கணவர். அங்கே பாதி சுவர், பாதி ஃகிரில் போடப்பட்டிருக்கும். பின் பக்கமாக போவோர் வருவோரெல்லாம் என் சமையல் மணத்தை நுகரலாம் அதோடு நான் சமைப்பதையும்   நன்றாகப்பார்க்கலாம். அவ்வேளையில் சிலரை அடிக்கடி சந்திப்பதால், சந்திக்கின்றபோதெல்லாம் ஒரு `ஹை’ சொல்லுவார்கள்.

பொதுவாக அதிகாலையில் எழுத்தவுடன் நேராக அடுப்பங்கரைக்குச் செல்வது என வழக்கம். அப்படிச்செல்லும் போதெல்லாம், யாராவது நடமாடுக்கிறார்களா என்று பார்ப்பது வழக்கமான ஒன்று. ஒரு நாள் அந்த அதிகாலைவேளையில்  இருட்டில் ஒரு பெண் மறைவாக நின்றுகொண்டு, என் வீட்டையே கண்காணித்துக்கொண்டிருந்தாள். யாராக இருக்கும்.!?  மனதிற்குள் கேட்டுக்கொண்டே, நானும் குனிந்து அவளை உற்று நோக்கினேன். அவள் வைத்தக்கண் வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ``யாருங்க?’’ அவள் பதிலே பேசவில்லை. மீண்டும் குரல் கொடுத்தேன். அவள் பதில் சொல்லாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். இரத்தமே உரைந்து விடுவதைபோன்றதொரு பயம் கவ்வியது எனக்குள். கதவை விரைவாக மூடிவிட்டு உள்ளே ஓடினேன். வேலை முடிந்து வீடு திரும்பியதும், பக்கத்து வீட்டு மலாய் பெண் மூலமாகத்தெரிந்தது அவள் ஒரு போதைப் பித்தர், இரவில் பசங்களோடு தெருத்தெருவாக சுற்றுபவள் என்று.

அக்கம் பக்கத்தில் வீடுடைத்து உள்ளே நுழைந்து திருடுகிற திருட்டுச் சம்பவங்கள் வேறு சதா காதில் விழுந்தவண்ணமாகவே இருக்கும். நான் வசித்த வீட்டின் நேர் எதிர் வீட்டில், மகளை பள்ளி பஸ் ஏற்றிவிட்டு வீடு திரும்புவதற்குள், உள்ளே நுழைந்து பணப்பை, கடிகாரம், கைப்பேசி என எல்லாவற்றையும் எடுத்துச் சென்று விட்டார்கள்.

ஊறுகாய் வியாபாரி, கார்பெட் வியாபாரி, தர்மம் கேட்பவர்கள், சிப்ஸ் பொறிகடலை வியாபாரிகள், ஜாதகம் ஜோசியம் பார்ப்பவர்கள் என சர்வசதா காலமும் யாராவது வீட்டின் வாசலில் கதவைத்தட்டி நின்ற வண்ணமாகவே இருப்பார்கள். பகல் வேளைகளில் நிம்மதியாக தலை சாய்க்கமுடியாது. (இப்போது தங்கியிருக்கும் வசிப்பிடத்தில் இந்தத் தொல்லைகளெல்லாம் இல்லை - நுழைவாசலில் இருக்கும் காவலாளிகள் யாரையும் எவரையும் லேசில் உள்ளே விட மாட்டார்கள், நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் கூட, நிஜமாலுமே விருந்தாளிகள்தானா.!? என்பதனை அவர்களின் பின்னாலேயே வீடுவரை வந்து உறுதிபடுத்திக்கொள்வார்கள். )

அங்கே நடந்த இன்னோரு பயங்கரம், ஒரு நாள், நான் குளித்துக் கொண்டிருந்தேன். பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரமாதலால், முன் கதவை தாழிடாமல் குளித்துக்கொண்டிருந்தேன். கதவு தட்டும் சத்தம் கேட்கவில்லை, ஆனால் யாரோ உள்ளே நுழைந்து விட்டதை என்னால் உணரமுடிந்தது. பிள்ளைகள் தான் வந்திருப்பார்கள் என நினைத்து, நானும் ஜாலியாகக் குளித்து விட்டு வெளியே (மாராப்புடன்) வந்தேன். ஒரு மலாய்க்காரன் சோபாவில் உட்கார்ந்து கொண்டு, என்னைப் பார்த்து, வணக்கம் ஆச்சி என்றான்.  என் கை கால்கள் எல்லாம் வெடவெட என்று நடுங்கத்துவங்கி விட்டன. பட்டென்று மகளின் அறையில் புகுந்துகொண்டு, அவளின் ஒரு நைட்டியை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்தேன். அதற்குள் மகனும் வந்துவிட்டான்.மகனின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, எங்கள் வீட்டில் உனக்கு என்ன வேலை.? என்று பதற்றத்துடன் கேட்டேன். தமது வீங்கிய கால்களைக் காட்டி, நான் தர்மம் வாங்கத்தான் வந்தேன் வேறு எந்த கெட்ட நோக்கமும் எனக்கில்லை அக்கா, என்னைத்திட்டாதே, என்றான். கையில் உள்ள நோட்டுகளை கொடுத்து அனுப்புவதைப்போல் அனுப்பிய பின் அவனை போலிஸில் பிடித்துக்கொடுத்தோம்.

அதுதான் முதல் முதலில் போலிஸுக்குப் அழைப்பு விடுத்த முதல் அனுபவம். போலிஸ்காரர்கள் கேட்டார்கள், `அவர் என்ன சட்டை போட்டிருக்கார்? என்ன கலர் ஆடை? முழு பேண்ட்’டா அரைக்கால் பேண்ட்’டா? அவன் உயரம் என்ன? அவன் கருப்பா சிகப்பா? எப்படி வந்தான்? நீ ஏன் கதவைப் பூட்டவில்லை? மோட்டார் ஓட்டி வந்தானா? இதற்கு முன் நீ அவனைப் பார்த்தாயா? அவன் எங்குள்ளவன்? புத்திசுவாதினமா? இப்போ அவன் எங்கே? இனிமேல் ஜாக்ரதையாக இரு...’ என்றார்கள். அவன் மலாய்க்காரர் என்றதுதான் போதும், நன்றாகத்திட்டினார்கள் என்னை. எப்படி நீ அப்படிச் சொல்லலாம்? இந்தோனிசியராகக் கூட இருக்கலாம்.! பங்களாதேசியாகக் கூட இருக்கலாம்.! ஏன் தமிழராகக்கூட இருக்கலாம்...! தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து இனத்தை அடையாளப்படுத்தாதே.. என்று கொஞ்சம் கடுமையாகவே எச்சரித்தார்கள். ஏன் தான் அழைப்புவிடுத்தோமே என்றிருந்தது.
ஒரு நாள் கடுமையான மழை, என் வீட்டு வாசலில் ஒருவன் விடிய விடிய உட்கார்ந்திருந்தான். மழைக்கு ஒதுங்க வந்திருப்பான் போலிருக்கிறது. உள்ளிருந்து நானும் என் கணவரும், ஜன்னல் வழியே அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டே இருந்தோம். தாழ்வாரத்தின் கீழ், கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான். காத்திருந்து காதிருந்து நாங்களும் உறங்கச்சென்று விட்டோம். காலையில் வீட்டு வாசலில், தீப்பெட்டி, சிகரெட் என சிதறிக்கிடந்தது.

இப்படியே ஒரு வழியாக விடுதலை கிடைத்தது அந்த இடத்திலிருந்து, புது வீடு வாங்கியப்பிறகு இறைவனுக்குக் காணிக்கை செலுத்தினேன். விடுதலை அவ்வளவு ஆறுதலாக இருந்தது...!!!

தற்போது தங்கியிருக்கின்ற வசிப்பிடத்தில் எந்தத் தொல்லையும் கிடையாது. காரில் ஸ்ட்டிக்கர் இருந்தால் தான் உள்ளே நுழைய  முடியும். வியாபாரிகள் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை. பால்காரர், பூக்காரர், ரொட்டிபாய் ஆகியோரைத்தான் பார்க்கலாம்.

அழகிய நந்தவனம் இந்த இடம். சுற்றிலும் அரசாங்க போலிஸ் அதிகாரிகள் காவல் காக்கும் அழகிய அடர்ந்த காடு. காட்டிற்குப் பாதுகாப்பு கொடுப்பதால், போலிஸ்காரர்கள் வட்டமிட்ட வண்ணமாகவே இருப்பார்கள். பெரிய பெரிய அரசாங்க அதிகாரிகள், வக்கில், டாக்டர், தொழிலதிபர்கள்,அரசியவாதிகள், ஆன்மிகவாதிகள், தீயான மடம் என பெரிய பெரிய ஆட்கள் குடியிருக்கும் ஒர் குடியிருப்பு இது. தூய்மையாக அழகா இருக்கும்.

அண்மையில் கூட, சிலாங்கூர் மாநில சுல்தான் வருகை புரிந்திருந்தார்.  கோத்தோங் ரோயோங் முறைப்படி அவ்விடத்தை துப்புறவு செய்தார்கள். காட்டிற்குச் செல்ல எங்களின் பகுதி வழியாகத்தான் செல்லவேண்டும், அவர் காட்டிற்கு வருகை புரிந்திருந்தார். அந்த காட்டின் உள்ளே, ஒரு பல்கலைக்கழக  (யூ.பி.எம்) ஆய்வுக்கூடமென்று மிக கம்பீரமாக இருக்கிறது. ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால், ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சியும் உள்ளது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற, ஒன்று கூடல் நிகழ்வின் போது, பாதுகாவலாளிகளின் உதவியோடு நாங்களும் அங்கு சென்று வந்தோம்.

இன்று காலையில்,  எனது அந்தப் பழைய வீட்டை வாங்கிய மலாய் தோழி, என்னைத் தொலைப்பேசியில் அழைத்திருந்தாள். இன்னமும் அந்த வீட்டின் முகவரிக்குச் செல்லும் எங்களின் சில கடிதங்களை அவள் பத்திரமாக எடுத்து வைத்து, எங்களிடம் ஒப்படைப்பாள். மாதம் ஒரு முறை சென்று அவைகளை எடுத்துவருவேன். போன மாதம் செல்லவில்லை, அதனால் அதிகமான கடிதங்கள் வந்திருப்பதாகச் சொல்லி அழைத்தால். அப்படியே இந்தக் கேள்வியையும் கேட்டாள்.

``புது வீடு எப்படி இருக்கிறது, என்ன சொல்கிறது?’’

``என்ன இருந்தாலும், அந்த பழைய வீடு மாதிரி வராது, அங்குதான் அதிக மகிழ்ச்சி, எல்லா வசதிகளும் உண்டு.. ஏன் தான் விற்றோம், என்று கவலையாக உள்ளது.’’ என்றேன்.

நாங்கள் அதிர்ஷ்டசாலி என்று சொல்லி பெருமிதம் கொண்டாள்....




  

வெள்ளி, மார்ச் 23, 2012

ஆணாதிக்கம்

கொஞ்சம் சோகமான குட்டிக்கதை - யாரும் அழவேண்டாம்.

``ஹை பேபி, என்ன சமையல் இன்று?’’

``முட்டைக் குழம்பு வைத்தேன் மாமா.’’

``சாப்பாடு எடுத்து வை, மாமா குளித்து விட்டு வருகிறேன்.!’’

``சரி மாமா..’’

``ம்ம்ம்..சுவையோ சுவை. நல்லா சாப்பிட்டேன். என்ன மசாலா போட்டு சமைத்தாய் பேபி, மணம் தூக்கலாக இருக்கிறதே..?’’

``எல்லாம் தமிழ்நாட்டு மசாலாதான் மாமா’’.

``நானே நான்கு முட்டைகள் போட்டுச் சாப்பிட்டுவிட்டேன். உனக்கு இருக்கா?’’ அக்கறையோடு கேட்கிறார் மச்சான்.

``இருக்கு மாமா, பத்து முட்டைகள் போட்டுச் சமைத்தேன். இன்னும் இருக்கு, வேணுமா?’’ அப்பாவியாகச் சொல்கிறாள். தாய்மையுணர்வோடு.!

``என்ன!!!! ரெண்டு பேருக்கு பத்து முட்டைகளா? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இருக்கிறேயே? எதுக்கு இந்த அநாவசிய செலவு எல்லாம்? சிக்கனமா இருக்கத்தெரியாதா? ஐந்து முட்டைகள் போட்டுச் சமைத்தால் போதாதா? மீதம் ஐந்து முட்டைகளை வேறு நாள் பயன்படுத்தலாமே.! இப்படியா ஊதாரியா இருப்ப!?’’  சொல்லம்புகள் பாய்கின்றன, இதயத்தைத் துளைக்கின்றன. இதை அவள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.

``மாமா, ஐந்து முட்டைகள் போட்டுச் சமைத்தால், நீங்க நான்கு முட்டைகள் சாப்பிட்டு விட்டீர்கள், அப்போ எனக்கு?? ’’ கலங்கிய நெஞ்சத்துடன் பேபி.

``உண்டிக்குறைத்தல், பெண்டிற்கழகு... உனக்கு ஒண்ணு போதும். அலையாதே.!’’ .

.டிங்..டிடின்..டிங்..டிடின் ..டிங்..தென்பாண்டிச்சீமையிலே தேரோடும் வீதியிலே, மான் போல வந்தவள, யார் அடிச்சாரோ, யார் அடிச்சாரோ?

எங்கே இருக்கு சம உரிமை? பார்த்தீர்களா எப்படியெல்லாம் அடிமை படுத்துகிறார்கள் என்று?!? ஆணாதிக்கம் ஒழிக.

புதன், மார்ச் 21, 2012

மாம்பழம்


`லில்லி’ மாம்பழங்கள் வாங்கினேன். சாப்பிடத்தான் நேரமில்லை. மறந்துவிட்டேன் என்று கூட சொல்லலாம். வாங்கியபோது இந்தியா மாம்பழங்கள் போல் தோலேல்லாம் பளபள என மஞ்சளும் லேசான சிகப்பும் கலந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

பிள்ளைகள் இருந்தார்கள் என்றால், அந்த மாம்பழத்தின் கொட்டை கூட முளைத்திருக்கும், சாப்பிட்டு, சப்பி எடுத்து வீசியிருப்பார்கள், காரணம் அவ்வளவு இனிப்பு. தித்திப்பான மாம்பழம். திகட்டாதா மாம்பழம். 

நேற்றுகூட அவர்,  பழம் வாங்கினாயே, எங்கே?  வெட்டி எடுத்திட்டு வா, சாப்பிடலாம் என்றார். வேலை செய்யுமிடத்தில், தோழி சில மாங்காய்களை வெட்டி வேகவைத்து, அதில் கச்சானை (கடலை) அரைத்து, ஊசி மிளகாய், உப்பு, கிச்சாப், ஒய்ஸ்ட்தெர் சாஸ் என ஊற்றி கலந்து ஒரு பாட்டலில் அடைத்துக்கொடுத்தாள். அதை அவர் முன் வைத்தவுடன், வாங்கி வைத்திருந்த  மாம்பழங்களை இருவரும் மறந்து, இந்த மாங்காய் பச்சடியின் ருசியில் மூழ்கினோம். உண்மையிலே சுவைதான். புளிப்பு,இனிப்பு, காரம், கச்சானின் சுவை என அசத்தல் தான் போங்க. இன்று கூட வேலை முடிந்து வந்தவுடன் அந்த மாங்காய் கச்சான் பச்சடி மீதமிருக்கா, என்று கேட்டுவிட்டு, மிச்ச மீதியெல்லாம் காலியாக்கினார். 

நானும் மாம்பழம் இருப்பது நினைவுக்கு வர, சரி, சமையல் வேலையெல்லாம் முடிந்த பிறகு, இன்று அதில் ஒன்றைச் சாப்பிடலாம் என மனதில் நினைத்துக்கொண்டு, வேலையெல்லாம் முடித்தவுடன், பழம் வைத்திருக்கும் கூடையைத் திறந்தேன். பெரிய பெரிய பழங்கள் மூன்று, பத்திரமாக இருந்தது. ஆனால், அதன் தோளில் இருந்த அந்தப் பளபளப்பு குறைந்து காணப்பட்டது. நிறம், மஞ்சள் மற்றும் சிகப்பு கலந்து அப்படியே.! 

ஒரு பழத்தைக் கையில் எடுத்தேன்.. கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தேன். நன்கு பெருத்த பழம். ஒரு பழமே குறைந்தது முக்கால் கிலோ இருக்கும். அதன் தோளில் கருப்புப் புள்ளிகள் அங்காங்கே. காம்பு உள்ள இடத்தில் கொஞ்சம் கருப்பு அதிகமாகவே இருந்தது. அதன் மூக்கு அப்படியே சிவந்து, பளப்பளப்பாகவே.. பழம் முழுக்கக் கருப்புப்புள்ளிகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் பழம் அழுகவில்லை. 

கழுவினேன், கை நழுவி, கழுவும் இடத்தின், வஷிங் பேஷனில் பொத்தென்று விழுந்தது. விழுத்த பழத்தை பட்டென்று எடுத்து அதை மீண்டும் கழுவி தட்டில் வைத்தேன். பார்த்தேன். விழுந்த இடத்தில், பழத்திற்கு அடிப்பட்டு நீர் வடிந்தது. கரும்புள்ளிகள் உள்ள இடத்தில், கை வைத்து அழுத்திப்பார்த்தேன், உள்ளே சென்றது, அதிலும் நீர் வடிந்தது. கொஞ்சம் பலங்கொண்டு அழுத்தினால் ஓட்டை விழுத்துவிடும் அளவிற்கு அந்த கரும்புள்ளிகள் உள்ள இடங்கள் அழுகியதுபோல் இருந்தது. இருந்தாலும் சாப்பிடலாம்.

இதுபோலவே இருந்த ஒரு பெண்ணின் காலை நேற்று நான் மருந்துவமனையில் பார்த்தேன். சக்கரை வியாதியின் கொடுமையால், அவளின் காலுக்கு ஏற்பட்ட கதி. இந்த மாம்பழம் போலவே இருந்தது, அவளின் காலும். அநேகமாக காலை எடுக்கவேண்டிய நிலை வரலாம்.   

அந்தக்காட்சி நினைவுக்கு வர, பழத்தை மீண்டும் கூடையிலே வைத்தேன். நாளைக்குத்தான் ஃப்ரூட் லாசி செய்யவேண்டும், மாம்பழங்களை வெட்டி தயிர் விட்டு கிரைண்டர் செய்தால் ப்ரூட் லாசி தயார்.


செவ்வாய், மார்ச் 20, 2012

காலநேரம்


மருத்துவமனைக்குச் சென்று வந்தேன். மாமி அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளார். மாமியின் கிட்னி ரெண்டும் பழுதாகிவிட்டதால், சிறுநீர் கழிக்கும் இடத்தில் ஒரு குழாயும் இடது கையில் ஒரு குழாயும் பொருத்தி, ஒன்றினில் நீர் இறங்கிக்கொண்டும், ஒன்றினில் நீர் வெளியேறிக்கொண்டும் இருந்தது. இரண்டு கால்களிலும் புண். நடக்க முடியாதபடி கால்கள் வீங்கியவண்ணமாகவே இருந்தன. மருத்துவமனை ஸ்பெஷலிஸ்ட் என்பதால், நல்ல கண்காணிப்பு, தரமான சிகிச்சை முறை, இரவு பகல் பாராமல் தாதிகளின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது.

நாங்கள் சென்றபோது பயங்கர குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார் மாமி. கூடுதலாக போர்வைகள் வாங்கிப்போர்த்தியும் குளிர் விட்டபாடில்லை. ஏர்கோண்ட் அதிக குளிராக இருப்பதால் வந்த நிலை இது. அந்த ஏர்கோண்ட்’ஐ கொஞ்சம் குறைக்க முடியுமா.? என்று அங்குள்ளவர்களிடம் கேட்டேன். குறைக்க மாட்டார்களாம். சூழல் உஷ்ணமாக இருந்தால் கிருமிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடுமாம்! சூடான சிதோஷ்ண நிலையில் அது அதிவிரைவாகப் பெருகுமாம், பரவுமாம்.. (சொன்னார்கள்)

பசியில்லை தூக்கமில்லை என்றார். கணவர் வெளியே டாக்டரிடம் எதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அம்மாவிடம் பேச்சுக்கொடுத்தேன்.

காலையில் யாரோ பக்கத்து வீட்டில் (வார்ட் என்பதற்கு வீடு என்றார்) இறந்துவிட்டார்களாம், அந்த பையனின் அம்மா பயங்கரமாகச் சத்தம் போட்டார். கொஞ்ச நேரத்தில் ஆட்கள் குவிந்து விட்டார்கள். மாலை பூ என எக்கச்சக்கமாக.. என்னம்மா பெட்டியெல்லாம் கூட கொண்டுவந்து விடார்கள்! அப்படிக்கத்துகிறார்கள், மனசே நல்லா இல்லை. தோ நல்லா கேள், மோட்டார் சத்தம் இன்னமும் கேட்கிறது பார், என்றார்.

அது மோட்டார் சத்தம் அல்ல, ட்ரோலியின் சத்தம். அழுக்குத்துணிகளை பணியாட்கள் எடுத்துச்செல்கிறார்கள், என்றேன்.

ம்ம்ம்.. பக்கத்தில் ஒரு சீனத்தி இருக்கின்றாள், ஓயாமல் எதையெதையோ சாப்பிடுகிறாள் ஆனால் என்னிடம் மட்டும் பேசவில்லை, யார் இறந்தார்கள்? என்ன ஆச்சுன்னு கேட்கிறேன் பதிலே சொல்ல மாட்டேன் என்கிறாள். ரொம்ப மோசம்மா டவுன்’ல உள்ளவர்கள். அங்கெல்லாம் அப்படியில்லை, கேட்காமலேயே சொல்வார்கள்.

ஆஸ்பித்திரி என்றால் இதெல்லாம் சகஜம். நீங்க ஏன் அதெல்லாம் பார்கறீங்க?

ச்சே, மக்க மனுஷாளுங்க.. என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? எதையுமே கண்டுக்காமல் இருந்தால் என்ன புண்ணியம்?

சரி மணியாச்சு தூங்குங்க என்றேன்.

எங்கம்மா தூக்கம் வருது? பசியே எடுக்க மாட்டேங்கிறது. துக்கமும் வரமாட்டேங்கிறது... கதை பேசறாங்க டாக்டர் நர்ஸ் எல்லாம், விடிய விடிய...,  கல்யாணமான பொண்ணுங்க, நம்ம தமிழ் பொண்ணுங்கக் கூட ஆம்பள பசங்கக்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுதுங்க. தொட்டுத்தொட்டு பேசுதுங்க.. படித்த டாக்டரெல்லாம் கூட.. ச்சே, என்ன கண்றாவியோ..!

அதற்குள் பக்கத்து சீனத்தி என்னமோ சொல்ல, விரலை உதட்டருகே வைத்து உஸ்ஸ் என்று சொல்லிவிட்டு, அவள் சொல்வதைக் காது கொடுத்துக்கேட்கிறார். எப்படி விளங்கும், அவள் சீன மொழியில் பேசுகிறாளே?

உதடுகளைப் பிதுக்கி, கண்களை ஓரமாகக் கொண்டு ஜாடை காட்டினார், அவர்களின் பேச்சு விளங்கியதைப்போல..!

சரி இதற்கு மேலும் இருப்பது சரியல்ல, நோயாளிகள் தூங்க வேண்டும், விளக்கை எல்லாம் பணியாட்கள் அணைக்கத்துவங்கியதைப் பார்த்தவுடன். நாங்களும் கிளம்பவேண்டுமே.!


ம்ம்ம், சரி நாங்க கிளம்பறோம்மா. நாளைக்கு காலையிலே அண்ணி வருவாங்க.. சரியா? என்றேன். அதற்குள் கணவரும் அருகில் வந்தார். கிளம்பறோம் என்றோம்.

ரெண்டு வெள்ளியிருந்தா கொடுய்யா.. அம்மா காலையிலே பசியாற எதாவது வாங்கிக்கொள்கிறேன் என்றார். நடக்கவேமுடியாதபடி உடம்பெல்லாம் ட்யூப். இதில் எப்படி. ? சரி, குழந்தையான அம்மாவிற்கு ரெண்டு வெள்ளி கொடுத்து விட்டுக்கிளம்பினோம்.

வெளியே வரும்போது, ஒரு நர்ஸ் எதிரில் வந்தார், அவரிடம் கேட்டேன், என்ன சிஸ், காலையிலே யாரோ இறந்து ஒரே அமளிதுமளியாச்சாமே?

நர்ஸ் சொன்னார், அப்படி எதுவும் நடக்கவில்லை, மெம்.

வாசகர் கடிதம்

ஒரு அழைப்பு வந்தது. இதுவரையிலும் பேசாத ஒரு எழுத்தாளார். என் உற்ற நண்பர் ஒருவரிடமிருந்து எனது தொலைப்பேசி எண்களை வாங்கி அழைத்திருந்தார்

“வணக்கம் விஜி, நான் தான் ..................”

“வணக்கம் எழுத்தாளரே.. மிக்க மகிழ்ச்சி உங்களின் அழைப்பிற்கு. எதிர்ப்பார்க்காத திடீர் அழைப்பு இது. நலமா?”

“நலமுங்க, நீண்ட நாள் ஆசை உங்களிடம் பேச வேண்டுமென்று, இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது.  நந்தாவிடம் தான் தொலைப்பேசி எண்களை வாங்கினேன். உங்களிடம் கேட்காமல், உங்களின் எண்களைக் கொடுத்துவிட்டார் என்பதற்காக அவரைத் திட்டாதீர்கள்.!”

“அது நீங்க எப்படி பேசறீங்க என்பதைப்பொருத்துத்தான் இருக்கு.!”

“ஐயோ..அப்படின்னா, பார்த்துத்தான் பேசணும் போலிருக்கு..!!”

“இல்லை, இல்லை..பேசுங்க, பிரச்சனையில்லை.!”

“ஏங்க, உங்களுக்குள் எவ்வளவு திறமை.! உங்க எழுத்திற்கு நான் ரசிகணுங்க. அற்புதமா எழுதறீங்க, கவிதை கூட நல்லா வருது உங்களுக்கு. அன்னிக்கு ஒரு நான்கு வரி கவிதை எழுதியிருந்தீங்களே, ஆஹா என்றிருந்தது. உங்களின் திறமைகள் வீணடிக்கப்படுகின்றன. தேவையில்லாமல் வாசகர் கடிதங்கள் எழுதுவதால் ஒரு புரோஜனமுமில்லை. எவன் படிக்கிறான் அதையெல்லாம்..? வாசிப்பு அனுபவத்தில் கொஞ்சம் கூட வளராத சில வாசகர்கள் போடும் சண்டையில், ஏன் நீங்க வீனாக உங்களின் சக்தியை செலவழிக்கின்றீர்கள்!? உங்களின் எழுத்து பலரால் வாசிக்கப்படுகிறது, நீங்க சிறியதாக எதை எழுதினாலும் அதை முதலில் வாசிக்க நிறைய பேர் காத்துக்கிடக்கிறார்கள். உங்களுடைய ஒரு கட்டுரை கூட அண்மையில் ஒரு இதழில் வந்திருந்தது, படித்து வியந்துபோனேன். எவ்வளவு அற்புதமாகச் சொல்லப் பட்ட விவரம் அது...!!”

”அப்படிங்களா? நான் எழுதினேனா? என்ன கட்டுரை, எங்கே? ”

“அதாங்க... ஒரு கட்டுரை, அந்ந்ந்த இதப்பத்தி...!! இது..!! சரியா ஞாபகத்தில் இல்லை... ”

“எதைப்பற்றிங்க..? கட்டுரைகள் எழுதியே ரொம்ப நாளாச்சு.., வாசகர் கடிதத்தைப் பற்றி சொல்கிறீர்கள் போலிருக்கு! ”

“ஆங்.. ஆமாம் ஆமாம் வாசகர் கடிதம், அதேதான், பிச்சு விளாசு விளாசுன்னு விளாசுனீங்களே..அதான் அதான்.....”

“விளாசினேனா.. !@#$%^ ?? இல்லையே,  நையாண்டியா நகைச்சுவையா சொல்லியிருப்பேனே, வாசிப்பு பழக்கைத்தைப் பற்றி...! வாசகர்கள் இன்னமும் சின்னச் சின்ன பகிர்வுகளிலேயே ஈடுபாடு காட்டி பொழுதைக்கழிப்பதால், நல்ல வாசிப்புப் பழக்கமில்லாமல் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிக்குண்டுக்கிடக்கின்றார்கள் என்கிற, ஒரு பகிர்வையல்லவா பகிர்ந்திருந்தேன்.., நீங்களே போட்டுக் கொடுப்பீர்கள் போலிருக்கு, விளாசுகிறேன் என்று... தேவையா இதெல்லாம்.!?”

“ஹிஹி.. உங்களச் சீண்டி விடுவதில் தான் எல்லோரும் ஆர்வமாக இருக்கின்றார்கள்... அதைத் தான் நானும் சொல்ல வந்தேன், இப்படிப் போய் அதுகளிடம் மாட்டிக்கொண்டு தேவையில்லாமல் வாக்குவாதம் செய்து என்ன வரப்போகிறது? நீங்க என்ன சொன்னாலும் அங்கே எடுபடாதுங்க. அவர்களை மாற்றவே முடியாது. அவர்கள் அப்படியே இருந்து பழகிப்போயிட்டாங்க. எங்க வாசகர் வட்டக் குழுவிற்கும் அதான் கவலை. உங்களின் வாசிப்புத் திறன் அபாரமுங்க. நிறைய வாசிக்கறீங்க.. அன்னிக்குக் கூட ஒரு புத்தகத்தைப்பற்றிய விவரமொன்றை சிறிய விமர்சனமாகச் சொல்லியிருந்தீங்க.. அந்தப் புத்தகத்தை நான் கோலாலம்பூரில் தேடி அலையாத கடை கிடையாதுங்க..”

மனதிற்குள்... எந்த புத்தகத்தைப் பற்றிச் சொன்னேன்!!?? இந்த ஆளு எதுக்காக இப்போ கதை விட்டுக்கொண்டிருக்கிறார்..! கட் பண்ணலாமா? சரி கொஞ்ச நேரம் பேசுவோம்.. எதோ ஆர்வத்தில் உளறுகிறார், கேட்டுப்பார்ப்போம்.

“ஓ..அப்படிங்களா? அப்புறம் அந்த புக்கு கிடைத்ததா இல்லையா? என்ன புக்குபத்தி சொன்னேன்னு நினைவிலே இல்லைங்க எனக்கு, கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்..”

“அது எனக்கும் சரியா நினைவுல இல்லை, எழுதி வைச்சுருக்கேன், அப்புறமா சொல்றேங்க..”

“ம்ம்ம்...”

“அதாங்க, நாங்க எல்லோரும் ஒண்ணு சேர்ந்தா, உங்க கதையைத்தான் பேசுவோம், எவ்வளவு அருமையா எழுதறாங்க, ஏன் இப்படிப் போய் சர்சைகளில் மாட்டிக்கொண்டு, வாசகர் கடிதமெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்கறாங்க?  வம்பளக்கும் பெண் வாசகின்னு பெயர் எடுக்கறாங்க’ன்னு பேசிக்குவோம். எழுத்தாளர்/கவிஞர் அந்தஸ்துக்கு நீங்க உயர்ந்துட்டீங்கங்க..பின்னே ஏன் இன்னும்..!!? இப்படின்னு தான் எங்களுக்குள் பேசிக்கொண்டு குழம்புவோம். உங்களை எல்லோரும் நல்ல வாசகி, விமர்சகர் என்பதைவிட நல்ல கவிஞர், எழுத்தாளர்’ன்னு சொல்லணும். மலேசியாவில் முத்திரைப்பதிக்கின்ற இலக்கியவாதிகளில் ஒருவராக நீங்க வரணும்ங்கிறது எங்களின் தீராத ஆசை..”

“ஏங்க இப்படி ஓரேடியா?? எழுதுபவர்களை எதோ எழுதறாங்க, எழுத்தாளர்கள்’ன்னு சொல்லிக்கலாம், ஆனால் கவிதை என்று எதையெதையோ கிறுக்கிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் கவிஞர்களா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.? நான் எங்கேங்க கவிதை எழுதறேன்.. சில எண்ணக்குவியல்களை எழுத்துக்களால் அடுக்கியிருப்பேன், அது கவிதையா?”

“உங்களின் திறமைகள் உங்களுக்குத்தெரியாது, பிறர் சொல்லும் போதுதான் அது வெளிப்படும்..என்ன நாஞ்சொல்றது?”

“சரிங்க, நீங்க சொல்வதாகவே இருக்கட்டுமே, கவிதை எழுதினேன், கவர்ந்தது என்கிறீர்களே, அப்படியென்றால், என்னுடைய கிறுக்கள்களில் உங்களை அதிகம் கவர்ந்தது?” (மாட்டிகிட்டியா மகராசா), மனதிற்குள்.

“ அந்த... இந்த... புக் ல எழுதினீங்களே..!!!?? அட என்ன கவிதை அது..!!!??? அந்த இது..இது..இது !!!”

“சரிங்க, ரொம்ப நன்றி, யோசித்து நினைவிற்கு வரும் போது, மீண்டும் கூப்பிடுங்க..கொஞ்சம் வேலையிருக்கு..ஒகே வா?”

“அட என்னங்க நீங்க, இருங்க.., என்னுடைய ரெண்டு கதைகள் இந்த வாரம் சூப்பரா வந்திருக்கே, படிச்சீங்களா?”

“ஆமாங்க, எல்லாவற்றையும் படிப்பேன், அந்த ரெண்டு கதைகளில் ‘மதில் மேல் பூனை’ நல்லா இருக்குங்க. அந்தக் கதையின் நடை அற்புதம். நல்லா எழுதியிருக்கீங்க. தமிழ் ஆளுமையும் சிறப்பாக இருக்கு. வாழ்த்துகள்.”

“உண்மைக் கதைங்க..!”

“அட அப்படியா? அப்போ அந்தப் பொண்ணு இப்போ விபச்சாரத்தில்.!!? அப்படின்னா அந்த ஆண் குழந்தைக்கு யாருங்க அப்பா, நீங்களா?” சிரித்துக் கொண்டுதான் கேட்டேன்.

“நினைச்சேன் கேட்பீங்கன்னு.. இல்லேங்க, என் நண்பரின் கதை அது. அவளை இன்னமும் வைச்சிருக்கார்..”. அவரும் சிரித்துக்கொண்டே.

“ஓ..அப்படியா..! ஒகே ஒகே..!”

“எழுதுங்களேன் இதைப்பற்றி ஒரு விமர்சனம், நல்ல அறிமுகமா இருக்கட்டுமே.!”

“எழுதினாலும் வாசகர் கடிதத்தில் தான் வரும், பரவாயில்லையா?..”

“ஏங்க வாசகர் கடிதம்னா கேவலமா? நீங்க எழுதுங்க ஜோரா..!”




அணுவணுவாக....

உன் ஞாபகம் போக்க
எல்லாவற்றிலும் நுழைகிறேன்
வடிவின் சின்னமாய்
அணுவிலும் நீ இருப்பதை
வெளியேறும் போதும்
உணர்கிறேன்

என் காதல்
உன்னை ஒன்றும் செய்யாது
ஏன் தெரியுமா?
அந்த உணர்வு
எனக்கும் எதிரிதான்.!

தவிப்பு வரும் போதெல்லாம்
என்னை நானே
கொலை செய்துகொள்கிறேன்
அருவருப்பில்...

செத்துக்கொண்டிருப்பதால்
மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்
குழந்தையாகவே..

அதற்காகவே உன்னைப் பிரியேன்


ஞாயிறு, மார்ச் 18, 2012

மடல்தான்

நீ அப்பாவியா இரு, ஆனால் உன்னைப்பற்றி தப்பாகப்பேசப்படுகிறதே, அதில் உனக்கு தெளிவு வேண்டாமா? எப்படி உன்னிடம் சொல்வது? அதை நான் உன்னிடம் சொல்கிற போது, அட இப்படி எதார்த்தமாக இருந்துவிட்டோமே, என்கிற குற்றவுணர்வு உனக்கு வரும், அதை எப்படி நான் ஜீரணிப்பது? அந்த முக பாவனையை நான் எப்படி எதிர்க்கொள்வது!? நீ எதார்த்தவாதியாகவே இரு, ஆனால் எதார்த்தத்தை போற்றத்தெரியாதவர்களை அடையாளங் கண்ட்டுக்கொள். அப்பாவியாக இருக்காதே. சுற்றியிருப்பவர்கள் சூழ்ச்சிக்காரர்கள். அதற்காக சூழ்ச்சிக்காரியாக மாறு என்று நான் சொல்ல மாட்டேன், வாழ்வதற்கு அதுவும் கொஞ்சம் தேவை என்கிறேன். துளி கூட சொரணை இல்லாமல் எப்படி வாழ்வது? 

வெள்ளி, மார்ச் 16, 2012

எழுத்து

ஒரு புத்தகத்தை வாசிக்கின்றோம். அது நாம் நினைக்கின்ற, செய்துகொண்டிருக்கின்ற அத்தனை விடங்களையும் நியாயப்படுத்திக்கொண்டே வருகிறது. நாம் மேலே ஆகாயத்தில் பறக்கின்றோம். சொல்ல முடியாத பரவசத்தில் சிறகடிக்கின்றோம். பாதியிலே நிறுத்தி, சில நண்பர்களிடமும் இப்புத்தகத்தைப்பற்றிச் சொல்லி பூரித்துப்போகின்றோம்.

தொடர்ந்து வாசிக்கின்றோம். திடீரென்று, ஒரு திருப்புமுனை,  நம்மையறியாமலேயே  ஒரு இருள் சூழ்கிறது, நெஞ்சில் லேசான வலி ஆரம்பமாகிறது, நிற்கவைத்து சாட்டையால் யாரோ நம்மை விடாமல் அடிப்பதைபோன்ற ஒரு உணர்வு வருகிறது. அதை குற்றவுணர்வாகக் கூட வைத்துக்கொள்ளலாம்.  அழுகிறோம், யாருக்கும் தெரியாமல். மனம் கனக்கிறது. வாழ்வை  திரும்பிப்பார்க்கின்றோம்,  புத்தகத்தையும் புரட்டிப்பார்க்கின்றோம். எடுகள் காற்றில் பறக்கின்றன. பேய் பிசாசுகள் நம்மை அமுக்குகின்றன. மூச்சு திணறுகிறது...

சரியென்று நினைத்த அனைத்தும் தலைகீழாய் புரள்கிறது. நாம் செய்து வந்த அனைத்துச்செய்களும் அருவருப்பாகிறது. இன்னும் மனிதனாக வாழ ஆரம்பிக்கவில்லையோ, என்கிற சிந்தனை  எட்டிப்பார்க்கத் துவங்குகிறது. தலைசுற்றுகிறது.

யோசிக்கின்றேன்... எப்படி, இப்படி மனித மனங்களில் நுழைத்து மனிதர்களைப் படிக்கின்றார்கள் இந்த இலக்கியவாதிகள்.!? என்கிற சந்தேகம் எழுகிறது. நாம் செய்து விட்ட, செய்கின்ற, செய்யத்துடிக்கின்ற சாட்சிகளற்ற அனைத்திற்கும் சாட்சிகள் யார் மூலமாகவோ எங்கேயோ இருக்கின்ற ஒருவருக்குச் சென்றுள்ளது. யார் அவர்? அட்டமா சித்திகள் கைவரப்பெற்றவரோ!? மந்திரவாதியோ? தெய்வத்தன்மை நிறைந்தவரோ.!? அப்படியே பிட்டுப்பிட்டு வைக்கின்றாரே நம் மனதில் உள்ளவைகளை.!

என் கூடவே இருக்கின்ற மனசாட்சியாக ஒலிக்கும் இந்த குரல் யாருடையது? எப்படித் தகவல் அங்கே சென்றிருக்கும்.? மறைவில் ஒளித்து, மனதில் மறைத்து, நினைத்து நினைத்து செய்யப்பட்ட அனைத்தும் வெட்டவெளிச்சமாக, யாரோ ஒருவரின் எழுத்து வடிவில்.! எப்படி? இதுதான் இலக்கியமா?

படைப்பாளிக்கு; படைப்பாளி என்று எப்படிப் பெயர் வந்தது?  இறைவனின் குணமிருப்பதாலோ? அடபோங்க, இறைவன் எங்கு இருக்கிறார்? ஒரு படைப்பை உருவாக்கி,  மனிதனாக வாழாத மனிதனின் மனிதத் தன்மையை மீட்டெடுக்கும் படைப்பாளி தான் இறைவன். படைப்பாளிதான் குரு, படைப்பாளிதான் ஞானி, படைப்பாளிதான் தந்தை, படைப்பாளிதான் காதலன் (காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி - சைவ சித்தாந்தம் சொல்லும் காதல் இது).

புறையோடிக்கிடப்பதெல்லாம் புல்லட்’ஆல் சுடப்பட்டு, கீறி கிழித்துக்கொண்டு வெளியே வருகிறது!  சரியென்று நாம் செய்ததையெல்லாம் சரியல்ல என்கிற போது, மனம் எதையோ தேடுகிறது. அது தூக்குக் கயிறாகவும் இருக்கலாம் அல்லது கடிவாளமாகவும் மாறலாம்.  செய்கின்ற தவற்றைப்பொருத்து அல்ல, புரிந்துகொள்கின்ற மனப்பக்குவத்தைப் பொருத்தது அது. அந்த ஆயுதமும் வேறுபடலாம்  மாறுபடலாம்.   புரிந்துகொள்வோம்,  நம்மை நாமே குற்றவாளிக் கூண்டில் நிற்கவைப்போம்..! நாமே குற்றவாளி, நாமே நீதிபதி.

இலக்கியமே இறைவன் - இதுவே இறுதியான உறுதியான புரிதல் 

திங்கள், மார்ச் 12, 2012

உன் குரல் கேட்டால்

இன்று ஏனோ தெரியவில்லை, காலையிலிருந்து அப்பாவின் ஞாபகம் என்னை வாட்டுகிறது. எப்படியிருப்பார் அப்பா?  கண்களை மூடிக்கொண்டு அவரின் முகத்தை ஞாபகத்திற்குக்கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருந்தேன்.

என் முகத்தைக் கண்ணாடியில் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தேன், ‘நீ, உன் அப்பா போலவே சிரிக்கிறாய்’ என்று பாட்டி முன்பு ஒரு முறை சொல்லியிருந்ததை ஞாபகப்படுத்திப்பார்த்தேன். கண்ணாடி முன் நின்று, சிரித்துப்பார்த்தேன்.. ம்ம் இல்லையே!! அப்பா இப்படி இருக்க மாட்டாரே.!

சரி, சில நிகழ்வுகளை அசை போட்டுப்பார்க்கலாமே என, கன்னத்தில் கைவைத்து, தலையைச் சாய்த்து ஆள் காட்டி விரலை, நெற்றிப்பொட்டில் வைத்துக்கொண்டு யோசித்தேன்.

மாநிறம், உயரமல்ல குள்ளமுமல்ல, வரிசையான பற்கள், கூரிய மூக்கு. ஓரளவு முகம் வந்துவிட்டது.  ஜீ.. அப்படித்தான் அழைப்பார் என்னை.. குரல் ஞாபகத்திற்கு வரவில்லையே..

ஒரு முறை, தாத்தா வீட்டிற்குப் போக வேண்டுமென்று ஒரே ஆர்ப்பாட்டம். சித்தப்பா சின்னம்மா மகள் மகன்கள் எல்லோரும் திருவிழாவிற்கு வருவார்கள், அவர்களோடு விளையாட வேண்டும், திருவிழாவில் பொம்மலாட்டம் பார்க்கவேண்டும், பிடிவாதமாக அழுதோம், போயே ஆகவேண்டும் என்று. கூலிக்கார அப்பா, கையில் காசு இல்லை. ஏழை அப்பா அம்மாவைச் சந்திக்க, கையில் பணமில்லாமலா செல்வது? சைக்கிளை எடுத்தார், கடன் கேட்டார் ஒருவரிடம், கிடைத்தது. வாங்கிவந்தார். வாடகைக்காரில் பாட்டி வீட்டிற்குச் சென்றுவந்தோம்.
அப்போ அப்பா எப்படியிருந்தார்? இளமையாக இருந்தார். பலம், உடலிலும் உள்ளத்திலும். காரில் நிறைய பேசினாரே அன்று, செல்லும் வழியெல்லாம், காண்கிற காட்சிகளையெல்லாம் எங்களிடம் விளக்கிக்கொண்டே வந்தாரே. ம்ம்ம்... குரல் எப்படியிருக்கும்?

யோசிக்கிறேன்.. ஒரு நாள், டியூஷன் வகுப்பிற்குச் சென்று, வேகுநேரம் வரை காத்திருந்தோம், நானும் தம்பியும்..! அப்பா வந்து எங்களை அழைத்துச் செல்லவேண்டும், வரவில்லை. முன்பு கைப்பேசி வசதியெல்லாம் இல்லை, வீட்டிலும் தொலைபேசி வசதியும் இல்லை, உடனே தகவல் சொல்ல. இரவு வெகு நேரமாகிவிட்டது, தம்பி பயத்தில் அழ ஆரம்பித்து விட்டான். எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவனை ஆசுவாசப்படுத்திவிட்டு வழிய வழியப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரே அமைதி எங்கும். எனக்கு எதாவதொன்று என்றால் பரவாயில்லை, தம்பியைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்..

அப்பாவின் லோரி (வாகன ஓட்டுனர்) சர்ர்ர்ர் என்று வந்தது நின்றது. தம்பி அழுவதைப் பார்த்தவுடன், `ஏன்யா அழுவற, அதான் அப்பா வந்துட்டேன்ல.. ’ என்றார். கையில் வைத்திருந்த சாக்லெட்களை, உங்க சின்னம்மா கொடுத்தாங்க என்று சொல்லி இருவரிடமும் கொடுத்தார். நான் அமைதியாக இருந்தேன். தம்பி சாக்லெட்டைச் சாப்பிட்டான்.

வீடு வந்து சேர்ந்ததும், பானை சட்டி விறகு கட்டை எல்லாம் பறக்க ஆரம்பித்தன, `மணி என்னா இப்போ? எவ வீட்டுக்குப்போயிட்டு வர?வயதுக்கு வந்த பொம்பளைப்பிள்ளையை எவனாவது தூக்கிட்டுப்போய், கெடுத்துக்கொலை செய்த்தாத்தான், நீ எல்லாம் அடங்குவ, அவனே, இவனே அந்த மவனே இந்த மனவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம். அப்பாவும் பதிலுக்கு சண்டை போட்டார், கத்தினார் வேகமாக, என் நிலைமை புரியாமல், என்னடீ என்னடீ என்று குரலை உயர்த்தி சண்டையெல்லாம் போட்டார், என்னன்னவோ பேசினார்.. நினைவுக்கூர்கிறேன், குரல் நினைவில் இல்லை.

அப்போது அப்பா எப்படியிருந்தார்.? எல்லாவற்றையும் சிரித்த முகத்தோடு, அவமானங்களை எல்லாம் சகித்துக்கொண்டு அதே புன்னகையுடன்...  எங்களிடம் மட்டும் அன்பும் அக்கறையும் கொஞ்சம் கூட குறையாமல்.. ஐம்பது வயதிலேயே, முதுமை எட்டிப்பார்க் கத்துவங்கியது.  அதிகமாகக் குடிப்பதால், இந்தக் கோலம் வெகுவிரைவாக வந்துவிட்டது,  என, அம்மா இடித்துக்கூறி வசை பாடுவார்.

எங்களுடைய கிழிந்த துணிகளை அப்பாதான் ஒட்டு போட்டுத்தருவார். பழுதான கைக் கடிகாரத்தை, படிக்காத அப்பா ஒரு டெக்னிஷன் போல் பழுது பார்ப்பார். புதிதாக வாங்கியப்பொருளை உடனே போட்டுப் பார்க்கச்சொல்லி அழகு பார்ப்பார். மூக்குத்தி அணிந்த புதிதில், பார்த்துப்பார்த்து ரசிப்பார், எங்க அம்மா மாதிரி இருக்கு எம்மவ என்பார்.
எப்படியோசித்தாலும் குரல் ஞாபகத்திற்கே வரவில்லை. அப்பாவின் குரல் எப்படியிருக்கும்..!!??

இருபது வருடங்களுக்குப் பிறகும் நினைவை விட்டு அகலாமல் இருக்கும் அப்பாவின் அன்பு, சாதாரணமானதல்ல. எங்களைச் சுதந்திரமாக சிந்திக்க விட்டவர். எங்களின் மேல் அதீத நம்பிக்கை வைத்திருப்பார். அடித்துச்சொல்வார் என் பிள்ளைகள் தவறே செய்ய மாட்டார்கள் என்று. எங்களுக்கும் திருட்டுத்தனம்  செய்வதற்கு மனசே வராது. அப்பாவின் முகத்தை நினத்த மாத்திரத்திலேயே, சில அசிங்கமான  சிந்தனைகள் ஓடி மறைந்துவிடும்.

மஹாத்மா காந்தியையும், பாரதியையும் அறிமுகப்படுத்தியவர்.  எதிர்ப்பார்ப்பு என்கிற எந்த சுமையையும் எங்களின் மீது ஏற்றிவைத்ததில்லை, குற்றவுணர்வுக்கும் உற்படுத்தியதில்லை. யாரிடமும் எங்களை ஒப்பிட்டு குறை கூறியதில்லை (அம்மா செய்வார் இந்த வேலையை நன்கு) கண்டிப்பு உண்டு ஆனால் அடித்ததில்லை. எப்படியிருந்தாலும், நீ என் பிள்ளை என்கிற அவரின் அன்பு என்றுமே நிறைகுடம்தான்.

அவரின் குரல் கேட்கவேண்டும் போல் இருக்கிறது. ஒரு நடிகராக இருந்திருந்தால், ஒரு பாடகராக இருந்திருந்தால்... குரலை மீண்டும் கேட்டுப்பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்குமே.! இப்படி ஏங்குவேன் என்று தெரிந்திருந்தால், எதாவதொரு சந்தர்ப்பத்தில் குரலை பதிவு செய்தாவது வைத்திருக்கலாமே.!

உன்னிடம் பேசவேண்டும் போல் இருக்கு. உன் குரல் கேட்டால் என் ஏக்கத்திற்கு தீர்வு பிறக்கலாம்.
.

வியாழன், மார்ச் 08, 2012

உனது முகவரி வேண்டும்

யாருக்கும் தெரியாமல் ஒருவரிடமும் சொல்லாமல் உனக்கும் தெரிவுபடுத்தாமல், உனக்கு ஒரு பரிசு வாங்கித்தர எண்ணியுள்ளேன். சரி,எப்படி யாருக்கும் தெரியாமல், இந்த வேலையைச் செய்வது?

கடைக்குச் செல்வேன், உனக்கு எது பிடிக்குமென்று எனக்குத் தெரியும் என்பதால், அதை எடுப்பேன் பணம் கொடுப்பேன். இது முழுக்க முழுக்க எனது கட்டுப்பாட்டில்தான். நான் உழைப்பதால் யாரிடமும் கையேந்தும் நிலை எனக்கு இருந்ததில்லை.

வாங்கி வந்தவுடன், அதை அழகாக பேக்கிங் செய்யவேண்டும்.! எப்படிச் செய்வது? வீட்டிலா? முடியுமா? மனம், சித்தம், புத்தி எல்லாம் இறைவனை நினைக்கவேண்டுமோ இல்லையோ, அவரையே நினைக்கவேண்டுமென்று நினைக்கிற ஒரு சர்வதிகாரியிடம் செல்லுபடியாகுமா நமது நியாயங்கள்.!?

ஒரு பெண்ணாக இருப்பதால், வேறொரு ஆணுக்கு அனுப்பப்படுகிற பரிசுப்பொருட்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிற குடும்ப உறுப்பினர்கள் கிடைக்கப்பெறுகிற அளவிற்கு பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா, நம் சமூகத்தில்? மூன்று முடிச்சு தாலிக்கயிறு தூக்குக் கயிறாய் மாறிவிடாதா.! அவருடைய பெண் தோழிகளுக்கு நான் எல்லாம் செய்ய வேண்டும், பெண் என்பதால் பெண் மூலமாக மறைமுக தூது அனுப்பலாம், திறந்த மனதோடு. செய்தும் உள்ளேன். ஆனால் எனக்கு என்று வரும் போது, அது அவலமாகும் அவமானமாகும்..!

சரி, அதையும் வெகு சாமர்த்தியமாக செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவள் தான் நான். எவ்வளவோ விஷயங்களை மறைத்து மறைத்து செய்தாகி விட்டது, இனி என்ன??

அடுத்தது என்ன? உனது முகவரி என்னிடமில்லை. கேட்கத் தோன்றவில்லை, இப்போது கூட உடனே உன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  அழைத்துக் கேட்கலாம் தான்.! கேட்டால், ஏன்? எதற்கு? என்பாய். திடீரென்று கேட்பதால் நான் என்னமோ உனக்கு வாங்கி அனுப்பப்போகிறேன் என்பதை நீ யூகிப்பாய், இதை ரகசியமாக வைத்திருக்க நினைக்கும் எனக்கு அதில் சுவாரஸ்யமில்லாமல் போய் விடுமே..! .

அடுத்த  வாரம் என் தோழி ஒருவள், நீ வசிக்கும் இடத்திற்குத்தான்  சுற்றுலா செல்லவிருக்கிறாள். எனக்குள் பொறி தட்டியது. அவளிடம் கொடுத்து விடலாமா? போஸ்டல் சார்ஜ் செலவு மிச்சம்...!

சில வேளைகளில், நாம் வாங்கி வைத்திருக்கும் பொருட்களை விட,  அவற்றை நாம் அனுப்பிவைப்பதற்கு செய்யப்படுகிற செலவு அதிகமாகவே இருக்கும். அதற்கு அந்த அத்தியாவசியப் பொருட்களை இரண்டாக வாங்கி அனுப்பி விடலாம், நீண்ட நாள் நீ அதை உபயோகப்படுத்தி பயன்பெறலாம். நாடு விட்டு நாடு எடுத்துச்செல்லும் கடுகிற்குக்கூட அதிக விலை, போஸ்டல்  சார்ஜில்.

சரி, அவளிடம் எப்படிச் சொல்வது?

அப்படியே அவளிடம் அதைக்கொடுத்து அனுப்பினாலும், அதை வாங்கிச் செல்ல, உனது சேவகனையல்லவா நான் தொடர்பு கொள்ளவேண்டும்! அவன் உடனே ஓடோடி வந்துவிடுவான் சேவகம் செய்ய, சர்ப்ரைஸ்சாக உன்னிடம் ஒப்படைப்பான், அவனை நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால், இவள்...!!? எல்லாம் நல்லபடி நடக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, எதாவதொரு சந்தர்ப்பத்தில் நட்பில் சின்ன விரிசல் என்று வந்துவிட்டால், சமயம் பார்த்து போட்டுக்கொடுத்து விட்டால்..! அனுபவப்பட்டுள்ளேன்..

இங்கு தலை போகிற அளவிற்கு எந்தத் தவறும் நடக்கவில்லைதான், இருப்பினும் திரித்துக் கூறுகிற போது, என்னிடம் ஏன் ஒரு வார்த்தைச் சொல்லவில்லை? என்கிற அர்த்தமற்ற கேள்விக்கு எத்தனை ஆண்டுகள்தான் பதில் சொல்லிக்கொண்டிருப்பது!? 

மேலும், அவள் எனக்குத்தோழிதான். அதற்கு முன்பு அவளின் கணவனும் இவருக்கு நல்ல நண்பர்.. எதாவதொரு சந்தர்ப்பத்தில் விஷயம் தெரியவந்தால், வில்லங்கமாகிவிடுமே.! மேலும் உன் சேவகனுக்கும் இதுபற்றி தெரிய வரும்போது, அது ரகசியமல்லவே....

உனக்கு ஒரு பரிசை வாங்கி வைத்துக்கொண்டு, நான் இப்படியெல்லாம் புலம்பிக்கொண்டு மனவுளைச்சலில் உழல்கிறேன், என்பது உனக்குத் தெரியவந்தால்.. நிச்சயமாக உனக்குக் கோபம் வரும். உன் கோபத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. நான் உன்னிடம் கேட்டேனா? என்று கூட நீ சினங்கொள்வாய்.. உனது கோபம் என்னை சாகடிக்கும்.. வேண்டாம் சொல்ல மாட்டேன்.

யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிய வேண்டுமென்றால், முகவரி கேட்டு போஸ்டல் மூலமாக அனுப்புவதுவே முறை. கொஞ்சம் செலவாகும், பரவாயில்லை, செலவை விட, மனவுளைச்சல் கொடியது.

எனக்கு உனது முகவரி வேண்டும்.. 

புதன், மார்ச் 07, 2012

வர்ணனை

சில பெண்களின் அழகு 
வர்ணிக்கப்படும் போது, 
நானும் கொஞ்சம் 
எட்டிப் பார்க்கிறேன் 
நிலைக் கண்ணாடியை.

கூலி

சலவை செய்யும் போதெல்லாம், 
அவரின் பாக்கெட்டுகளிலிருந்து 
கிடைக்கப்பெறும் 
சில்லரை காசுகளும் 
நனைந்த நோட்டுகளும் 
எனக்குக் கூலி கொடுத்துக்கொண்டிருக்கிறது 
பல வருடங்களாக.

சோறு

கவிதையைப்பற்றி 
யார் எப்படி பயமுறுத்தினாலும், 
நான் வடிப்பதை மட்டும்
நிறுத்தவே மாட்டேன்...

மெயில்

உனது பதிலுக்காக
காத்திருக்கும் போது
எனக்குக் கேள்வி
அனுப்பியவர்களை
பழிவாங்கினேன்

புனைவுப் பின்னணியில்.....

எழுதும் கதைகளை
நிஜமாக்க..
நிஜவாழ்கையே
புனைவுகளுக்கு
தாரைவார்க்கப்படுகிறதா?

கதை நிஜமா அல்லது
நடைமுறையில்
நடந்து விட்டதெல்லாம்
கற்பனையா?

ஒத்து ஊதுவதற்கு
ஆள் சேர்க்கப்படுகிறதா, அல்லது
ஓட்டி ஓட்டி விரட்டியடிப்பதற்கு
ஆள் சேர்கப்படுகிறதா?

எல்லாமும்
நாடகமாய்
நடைமுறையையும்
வேடமுமாய்..!!

கொஞ்சம் தீர்க்கப்பார்வை
தரிசித்து விட்டதால்
நானும் விலகிக்கொள்கிறேன்
சாதாரண வாசகியாய்...

திங்கள், மார்ச் 05, 2012

கொலை

புனையப்படும்
ஒவ்வொரு
மர்ம கதைகளிலும்
மர்ம நாவல்களிலும்........

ஒலிபரப்பப்படும்
ஒவ்வொரு
வானொலி தொலைக்காட்சி
மர்ம நாடகங்களிலும்.........

ஒரு வாசகனும்
ஒரு ரசிகனும்..!
கொலை செய்யப்படுகிறார்கள்.

சனி, மார்ச் 03, 2012

சில தற்கொலைகள்

சில சம்பவங்கள்
தூக்க மாத்திரையால்
என்னைச் சாகடிக்க
பார்த்துள்ளன

சில வார்த்தைகள்
தூக்குக் கயிறாய்
என்னை நோக்கிப்
பாய்ந்துள்ளன

சில நிகழ்வுகள்
பாதாளம் வரை
நுழைய வைத்து
உயிர் மாய்க்க
வைத்துள்ளன

தண்டவாளத்தின்
கனவில் கூட
நான் தலை வைத்துள்ளேன்
இரைச்சலான சத்தத்தில்
உறக்கம் கலைந்து
பெருமூச்சு விட்ட
இரயில் பயணம்

நல்ல கத்தரிக்காய்
எப்படி இருக்குமென
தெரியாத நிலையில்
என் கணவன் பிள்ளைகள்..

நல்ல வேளை
நான் இருக்கேன்..


(அதீதம் இணைய இதழில் வந்த எனது கவிதை)

வெள்ளி, மார்ச் 02, 2012

கடை சாப்பாடு

வெறும் புளியின் சார் - ரசமாம்
பருப்புக் கலவை, கொஞ்சம் மஞ்சளாக - சாம்பார் என்கிறார்கள்
கோழியின் காலகள் மிதக்கின்ற நீர் - கோழிக்குழம்பு
வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளிய
பெரிய பெரிய மீன் தலைகளின் கலவை - மீன்குழம்பு
குருவிக்கு உணவாக வைத்திருக்கும் அரிசியில் பொங்கிய - சோறு...
அதிலும் ஒரே ஒரு மயிர் இருந்து விட்டதால்
அருவருப்பாகி துக்கிப்போட்டுவிட்டு வந்துவிட்டேன்..
காலையில் கிண்டிய புளிசாதம் -
பஞ்சாமிர்தமாய் இன்னும் அதிக சுவையுடன்...

.?

எதற்குமே
விடைகொடுக்காமல்
கேள்வியாகவே
இருக்கின்றாய்
உன்னை நான்
தொடரவேண்டும் என்பதற்காக.?

உயிரின் ஓசை

ஒவ்வொரு முறையும்
விழுங்கப்படுகின்ற மாத்திரைகள்
தொண்டையத் தாண்டி
இதயத்தை வருடிச்செல்லும் போது
நம்பிக்கை ஜீவிக்கிறது
ஆயுளாய்