செவ்வாய், மார்ச் 20, 2012

வாசகர் கடிதம்

ஒரு அழைப்பு வந்தது. இதுவரையிலும் பேசாத ஒரு எழுத்தாளார். என் உற்ற நண்பர் ஒருவரிடமிருந்து எனது தொலைப்பேசி எண்களை வாங்கி அழைத்திருந்தார்

“வணக்கம் விஜி, நான் தான் ..................”

“வணக்கம் எழுத்தாளரே.. மிக்க மகிழ்ச்சி உங்களின் அழைப்பிற்கு. எதிர்ப்பார்க்காத திடீர் அழைப்பு இது. நலமா?”

“நலமுங்க, நீண்ட நாள் ஆசை உங்களிடம் பேச வேண்டுமென்று, இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது.  நந்தாவிடம் தான் தொலைப்பேசி எண்களை வாங்கினேன். உங்களிடம் கேட்காமல், உங்களின் எண்களைக் கொடுத்துவிட்டார் என்பதற்காக அவரைத் திட்டாதீர்கள்.!”

“அது நீங்க எப்படி பேசறீங்க என்பதைப்பொருத்துத்தான் இருக்கு.!”

“ஐயோ..அப்படின்னா, பார்த்துத்தான் பேசணும் போலிருக்கு..!!”

“இல்லை, இல்லை..பேசுங்க, பிரச்சனையில்லை.!”

“ஏங்க, உங்களுக்குள் எவ்வளவு திறமை.! உங்க எழுத்திற்கு நான் ரசிகணுங்க. அற்புதமா எழுதறீங்க, கவிதை கூட நல்லா வருது உங்களுக்கு. அன்னிக்கு ஒரு நான்கு வரி கவிதை எழுதியிருந்தீங்களே, ஆஹா என்றிருந்தது. உங்களின் திறமைகள் வீணடிக்கப்படுகின்றன. தேவையில்லாமல் வாசகர் கடிதங்கள் எழுதுவதால் ஒரு புரோஜனமுமில்லை. எவன் படிக்கிறான் அதையெல்லாம்..? வாசிப்பு அனுபவத்தில் கொஞ்சம் கூட வளராத சில வாசகர்கள் போடும் சண்டையில், ஏன் நீங்க வீனாக உங்களின் சக்தியை செலவழிக்கின்றீர்கள்!? உங்களின் எழுத்து பலரால் வாசிக்கப்படுகிறது, நீங்க சிறியதாக எதை எழுதினாலும் அதை முதலில் வாசிக்க நிறைய பேர் காத்துக்கிடக்கிறார்கள். உங்களுடைய ஒரு கட்டுரை கூட அண்மையில் ஒரு இதழில் வந்திருந்தது, படித்து வியந்துபோனேன். எவ்வளவு அற்புதமாகச் சொல்லப் பட்ட விவரம் அது...!!”

”அப்படிங்களா? நான் எழுதினேனா? என்ன கட்டுரை, எங்கே? ”

“அதாங்க... ஒரு கட்டுரை, அந்ந்ந்த இதப்பத்தி...!! இது..!! சரியா ஞாபகத்தில் இல்லை... ”

“எதைப்பற்றிங்க..? கட்டுரைகள் எழுதியே ரொம்ப நாளாச்சு.., வாசகர் கடிதத்தைப் பற்றி சொல்கிறீர்கள் போலிருக்கு! ”

“ஆங்.. ஆமாம் ஆமாம் வாசகர் கடிதம், அதேதான், பிச்சு விளாசு விளாசுன்னு விளாசுனீங்களே..அதான் அதான்.....”

“விளாசினேனா.. !@#$%^ ?? இல்லையே,  நையாண்டியா நகைச்சுவையா சொல்லியிருப்பேனே, வாசிப்பு பழக்கைத்தைப் பற்றி...! வாசகர்கள் இன்னமும் சின்னச் சின்ன பகிர்வுகளிலேயே ஈடுபாடு காட்டி பொழுதைக்கழிப்பதால், நல்ல வாசிப்புப் பழக்கமில்லாமல் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிக்குண்டுக்கிடக்கின்றார்கள் என்கிற, ஒரு பகிர்வையல்லவா பகிர்ந்திருந்தேன்.., நீங்களே போட்டுக் கொடுப்பீர்கள் போலிருக்கு, விளாசுகிறேன் என்று... தேவையா இதெல்லாம்.!?”

“ஹிஹி.. உங்களச் சீண்டி விடுவதில் தான் எல்லோரும் ஆர்வமாக இருக்கின்றார்கள்... அதைத் தான் நானும் சொல்ல வந்தேன், இப்படிப் போய் அதுகளிடம் மாட்டிக்கொண்டு தேவையில்லாமல் வாக்குவாதம் செய்து என்ன வரப்போகிறது? நீங்க என்ன சொன்னாலும் அங்கே எடுபடாதுங்க. அவர்களை மாற்றவே முடியாது. அவர்கள் அப்படியே இருந்து பழகிப்போயிட்டாங்க. எங்க வாசகர் வட்டக் குழுவிற்கும் அதான் கவலை. உங்களின் வாசிப்புத் திறன் அபாரமுங்க. நிறைய வாசிக்கறீங்க.. அன்னிக்குக் கூட ஒரு புத்தகத்தைப்பற்றிய விவரமொன்றை சிறிய விமர்சனமாகச் சொல்லியிருந்தீங்க.. அந்தப் புத்தகத்தை நான் கோலாலம்பூரில் தேடி அலையாத கடை கிடையாதுங்க..”

மனதிற்குள்... எந்த புத்தகத்தைப் பற்றிச் சொன்னேன்!!?? இந்த ஆளு எதுக்காக இப்போ கதை விட்டுக்கொண்டிருக்கிறார்..! கட் பண்ணலாமா? சரி கொஞ்ச நேரம் பேசுவோம்.. எதோ ஆர்வத்தில் உளறுகிறார், கேட்டுப்பார்ப்போம்.

“ஓ..அப்படிங்களா? அப்புறம் அந்த புக்கு கிடைத்ததா இல்லையா? என்ன புக்குபத்தி சொன்னேன்னு நினைவிலே இல்லைங்க எனக்கு, கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்..”

“அது எனக்கும் சரியா நினைவுல இல்லை, எழுதி வைச்சுருக்கேன், அப்புறமா சொல்றேங்க..”

“ம்ம்ம்...”

“அதாங்க, நாங்க எல்லோரும் ஒண்ணு சேர்ந்தா, உங்க கதையைத்தான் பேசுவோம், எவ்வளவு அருமையா எழுதறாங்க, ஏன் இப்படிப் போய் சர்சைகளில் மாட்டிக்கொண்டு, வாசகர் கடிதமெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்கறாங்க?  வம்பளக்கும் பெண் வாசகின்னு பெயர் எடுக்கறாங்க’ன்னு பேசிக்குவோம். எழுத்தாளர்/கவிஞர் அந்தஸ்துக்கு நீங்க உயர்ந்துட்டீங்கங்க..பின்னே ஏன் இன்னும்..!!? இப்படின்னு தான் எங்களுக்குள் பேசிக்கொண்டு குழம்புவோம். உங்களை எல்லோரும் நல்ல வாசகி, விமர்சகர் என்பதைவிட நல்ல கவிஞர், எழுத்தாளர்’ன்னு சொல்லணும். மலேசியாவில் முத்திரைப்பதிக்கின்ற இலக்கியவாதிகளில் ஒருவராக நீங்க வரணும்ங்கிறது எங்களின் தீராத ஆசை..”

“ஏங்க இப்படி ஓரேடியா?? எழுதுபவர்களை எதோ எழுதறாங்க, எழுத்தாளர்கள்’ன்னு சொல்லிக்கலாம், ஆனால் கவிதை என்று எதையெதையோ கிறுக்கிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் கவிஞர்களா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.? நான் எங்கேங்க கவிதை எழுதறேன்.. சில எண்ணக்குவியல்களை எழுத்துக்களால் அடுக்கியிருப்பேன், அது கவிதையா?”

“உங்களின் திறமைகள் உங்களுக்குத்தெரியாது, பிறர் சொல்லும் போதுதான் அது வெளிப்படும்..என்ன நாஞ்சொல்றது?”

“சரிங்க, நீங்க சொல்வதாகவே இருக்கட்டுமே, கவிதை எழுதினேன், கவர்ந்தது என்கிறீர்களே, அப்படியென்றால், என்னுடைய கிறுக்கள்களில் உங்களை அதிகம் கவர்ந்தது?” (மாட்டிகிட்டியா மகராசா), மனதிற்குள்.

“ அந்த... இந்த... புக் ல எழுதினீங்களே..!!!?? அட என்ன கவிதை அது..!!!??? அந்த இது..இது..இது !!!”

“சரிங்க, ரொம்ப நன்றி, யோசித்து நினைவிற்கு வரும் போது, மீண்டும் கூப்பிடுங்க..கொஞ்சம் வேலையிருக்கு..ஒகே வா?”

“அட என்னங்க நீங்க, இருங்க.., என்னுடைய ரெண்டு கதைகள் இந்த வாரம் சூப்பரா வந்திருக்கே, படிச்சீங்களா?”

“ஆமாங்க, எல்லாவற்றையும் படிப்பேன், அந்த ரெண்டு கதைகளில் ‘மதில் மேல் பூனை’ நல்லா இருக்குங்க. அந்தக் கதையின் நடை அற்புதம். நல்லா எழுதியிருக்கீங்க. தமிழ் ஆளுமையும் சிறப்பாக இருக்கு. வாழ்த்துகள்.”

“உண்மைக் கதைங்க..!”

“அட அப்படியா? அப்போ அந்தப் பொண்ணு இப்போ விபச்சாரத்தில்.!!? அப்படின்னா அந்த ஆண் குழந்தைக்கு யாருங்க அப்பா, நீங்களா?” சிரித்துக் கொண்டுதான் கேட்டேன்.

“நினைச்சேன் கேட்பீங்கன்னு.. இல்லேங்க, என் நண்பரின் கதை அது. அவளை இன்னமும் வைச்சிருக்கார்..”. அவரும் சிரித்துக்கொண்டே.

“ஓ..அப்படியா..! ஒகே ஒகே..!”

“எழுதுங்களேன் இதைப்பற்றி ஒரு விமர்சனம், நல்ல அறிமுகமா இருக்கட்டுமே.!”

“எழுதினாலும் வாசகர் கடிதத்தில் தான் வரும், பரவாயில்லையா?..”

“ஏங்க வாசகர் கடிதம்னா கேவலமா? நீங்க எழுதுங்க ஜோரா..!”




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக