வியாழன், நவம்பர் 01, 2012

சகலகலாவள்ளி உமாவுடன் ஒரு நேர்காணல்

வேதனைகள் சோதனைகளை எல்லாம் களைந்து சாதனை செய்தவர்களை   நேர்காணல் செய்வதுதான் பேட்டி.  ஆனால் இங்கே நான் எடுத்துள்ள  இந்த நேர்காணல் சற்று வித்தியாசமானது சுவாரஸ்யமானதும் கூட. 

இந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது. நான் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதின் பேரில், பலவேலைகளுக்கு மத்தியில், தீபாவளி பலகாரங்கள் செய்கிற வேலைகளையெல்லாம் தள்ளிப்போட்டுவிட்டு, எனக்காக இந்த பேட்டியை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய திருமதி உமாசெபஸ்தியன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றியினை சமர்ப்பித்துக்கொள்கிறேன்.

இவரின் சாதனைகளின் பட்டியல் மிக நீளம், முடிந்த வரையில் கிளறியுள்ளேன். ஞாபகப்படுத்தி யோசித்து யோசித்து, நினைவுக்கு வந்ததையெல்லாம் பகிர்ந்துள்ளார். எல்லாவற்றையும் சேர்த்துள்ளேன் என்பதைவிட, மக்கள் புரிந்துகொள்கிற அளவிற்கு இதனின் உள்ளடக்கத்தில்  போதிய தகவல்கள் உள்ளன என்பதில் எனக்கு வெற்றியே.

எல்லா சாதனைகளிலும், வெற்றிகளிலும், முயற்சிகளிலும் வலிகள் வேதனைகள் நிறைந்திருப்பது சகஜம்தான். அதுவும் இவரின் வெற்றி என்பது பொது ஊடகங்களில் (பத்திரிகை, வானொலி,  தொலைக்காட்சி)  உடனே விளம்பரத்திற்குள்ளாகி அறிமுகப்படுத்தப்படும் என்பதால், இவர் பலரின் வெறுப்பான குத்தலான சூடான தாக்குதலுக்கு இரையாகின்ற நிலை ஏற்பட்டிருப்பினும், எல்லாவற்றையும் ஜாலியாக அலட்சியம் செய்து விட்டு தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலகல பேர்வழி. நல்ல தோழி. இனிமையாகப் பாடுவார், நடனமாடுவார், ஒப்பனைக்கலையில் கைத்தேர்ந்தவர், பின்னல் தையல் கைவினைப்பொருட்கள் என பின்னி எடுப்பது, ஓவியம் வரைவார், கவிதை எழுதுவார், வீட்டு அலங்கரிப்பில் கைத்தேர்ந்தவர், வித்தியாசமாக சமைப்பதில் வல்லவர், பலகுரலில் பேசுவார், நாய், பூனை, வாத்து, கோழி போல் சத்தங்களை எழுப்புவார், சரி வாருங்கள் இனியும் அறிமுகம் என்கிற பேரில் நீட்டி முழங்காமல், அவரின் சாதனை எனன என்பதனை அறிந்துகொள்வோம்.

*வணக்கம் உமா, உங்களைப்பற்றி சொல்லுங்கள். பெயர் ஊர், அம்மா அப்பா, திருமணம், குழந்தை..இப்படி?
என் பெயர் உமாபதி செபஸ்தியன் ராஜ்.  அம்மா திருமதி பூபதி நடராஜ். அப்பா இல்லை. ஒரு மகன். அவனின் வயது நான்கு.

*உங்களிடமுள்ள தனித்திறமைகள் பற்றி..., மக்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமே.., பலகுரல், பிரபல பாடகிகள் போல் பாடுவது.. கண்டசால குரல்.. என் இன்னும்?
பாடுவது எனக்குப்பிடித்தமான ஒன்று. மேலும் மற்றவர்களை சிரிக்க வைப்பதும் எனக்குப்பிடித்தமானது. குரலை மாற்றி மாற்றிப்பாடுவேன். உங்களிடம் கூட பல முறை சீனர் போலும், பஞ்சாபி போலும், மலாய்க்கார பெண்மணி போலவும், வயதான பாட்டி போலவும் பேசியுள்ளேன். நீங்கள் கண்டு பிடிக்கவே இல்லை. ஒரு முறை போனில் உங்களைத் திட்டியுள்ளேன், நீங்கள் அரண்டு போனீர்கள்.. நானே சிரித்துக் காட்டிக்கொடுத்தாலொழிய உங்களுக்குத் தெரியப்போவதில்லை என்பதை பல வேளைகளில் கண்டுள்ளேன். கண்டுகொண்ட பிறகு இருவரும் சிரிப்போம். அதுதான் என் நோக்கம். எல்லோரும் எப்போதும் கலகலப்பாக இருக்கவேண்டும்.  பலகுரல்களில் பேசி பாடி பயிற்சி எடுத்து, முயன்று பார்ப்பேன். குழந்தைகள்போல் பேசுவேன். நாய் பூனை போல் கத்துவேன். டோனல்ட் டக் போல் பேசுவேன். கண்டசாலா குரலில் பாடுவேன். வாழ்க்கையை எப்போதும் ஜாலியாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதுவே என் பாலிஷி..  

*உமாசெபஸ்தியன் – மெரு கிள்ளான் என்றாலே, வானொலி தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒலிக்கும் ஒரு பெயர் அல்லவா.! உள்ளூர் தமிழ் வானொலி தொலைக்காட்சி ரசிகர்களுக்கு உங்களின் முகமும் குரலும் பரிச்சயம். எப்படியென்று நீங்களே சொல்லுங்கள்.?
பெரிய பிரபலமெல்லாம் கிடையாது’க்கா. வானொலியும் தொலைக்காட்சியும் எனது உற்ற நண்பர்கள். தொலைக்காட்சியை விட வானொலி என் வாழ்க்கை. எங்கு சென்றாலும் காதில் `வர்க்மேன் பூட்டியிருப்பேன். வானொலி மட்டும், இரவு பகல் பாராமல் என்னுடனேயே இருக்கும். நான் வானொலியின் பரம ரசிகை என்றுகூட சொல்லலாம். பழைய புதிய ஹிந்தி தமிழ் பாடல்களைக் கேட்பதோடல்லாமல், அங்கே ஒலிபரப்பாகும் நேயர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் என்னை இணைத்துக்கொள்வேன். கருத்துப்பகிர்தல், பலவிதமான போட்டி நிகழ்வுகள் போன்றவற்றில் பங்கெடுத்துள்ளேன். அற்புதமான பரிசுகளையெல்லாம் அதிகமாக வென்றுள்ளேன். பரிசுகள் ரொக்கமாகவும், விலையுயர்ந்த ஆபரணங்களாகவும், பொருட்களாகவும், பட்டுப்புடவைகளாகவும், லப்டாப், ஐபோட், கைப்பேசி என பலவடிவங்களில் என்னை நோக்கி வந்துள்ளன.  பலவற்றை முதல் நிலையிலேயே வென்றுள்ளேன். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பரிசு நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிவிடுவேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக்கொடுக்கிறது. கவலைகள் வீட்டுப்பிரச்சனைகள் என எதுவும் என்னை அலைக்கழிக்காது. தொடந்து முயல்வேன், வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும்.. கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும். இதன் மூலமும் நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். இது எனக்குள் ஒரு வேகமான விவேகமான தேடலை விதைத்துச்செல்கிறது .    

*உங்களால் மறக்க முடியாத சவால் நிறைந்த ஒரு போட்டி என்றால்?
பாபாஸ் (பிரபல மசாலா நிறுவனம்) நடத்திய BABA's & U என்ற வரிகளை வித்தியாசமாக வரைந்து அனுப்பும் போட்டி.  இதில் நான் முதல் பரிசை வென்றேன். ரொக்கம் ரிங்கிட் மலேசியா ஆயிரம். பலர் கலந்துகொண்ட இந்த போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது பெரிய அங்கீகாரமாக கருதினேன். தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் எனது புகைப்படம் வந்தது. பலருக்கு அறிமுகமானேன். உறவுகள் பலர் என்னைப் பாராட்டினார்கள். நண்பர்கள் உற்சாகமூட்டினார்கள்.

*அதிக பணம் அல்லது விலையுயர்ந்த பரிசுகளை வென்ற போட்டிகள் எது?
ஆஸ்ட்ரோ வானவில்  நடத்திய வேட்டையாடு விளையாடு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மறக்க முடியாத அனுபவமே. அந்நிகழ்ச்சியில் வீட்டிலிருந்து பார்க்கும் ரசிகர்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். வாரம் ஒரு கேள்வி என மொத்தம் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தப் போட்டிகளிலும் நான் பங்கெடுத்தேன். அதாவது நான், என் அண்ணன், கணவர் என மூவரின் பெயரிலும் நானே பங்கெடுத்தேன். அடித்தது யோகம், முதல் மூன்று நிலை பரிசுகளை நாங்கள் மூவரும் பெற்றுவிட்டோம். grand prizes எங்களின் மூவரின் பெயரில்தான் வந்துகொண்டிருந்தது. என்னால் இன்னமும் அந்த மகிழ்வான பரவசநிலையை மறக்கவே முடியாது. அனைத்துமே அற்புதமான பரிசுகள்.. முதல் பரிசு, இரண்டாவது பரிசு - 1800 ரிங்கிட் பெருமானமுள்ள கைக்கடிகாரம். மூன்றாவது பரிசு - 1300 ரிங்கிட் பெருமானமுள்ள ciacomo dinner set, 108pcs. எல்லாமும் எனக்கே என்றாலும் அண்ணனின் பெயரைப் பயன்படுத்தி எழுதிப்போட்டதால்கைகடிகாரம் ஒன்றை அவருக்கே பரிசாகக் கொடுத்து விட்டேன்.  

*நீங்கள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசி இல்லை, பணி செய்யும் பெண்மணி. இருப்பினும் உங்களால் எப்படி இது போன்ற   போட்டிகளுக்கு நேரத்தை ஒதுக்க முடிகிறது?
என்னிடமுள்ள திறமைகளை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும். மனிதனாகப்பிறந்து விட்டால் எல்லோருக்கும் எதாவது ஒரு வகையில் தனித்திறமைகள் இருக்கும். அதை நிச்சயம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மனதிற்கு உற்சாகத்தைக்கொடுக்கிறது. அற்புதமான பரிசுகளும் கிடைக்கிறன. வருட முழுக்க வேலை செய்தாலும் சில விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு நாம் பலமுறை யோசிப்போம், இப்படி கலந்துகொண்டு, அவைகள் நமக்கு பரிசாகக் கிடைக்கபெறும் போது, அது நல்ல யோகமே. பெரும்பாலும் நம் இனப் பெண்கள் இது போன்ற போட்டிகளில் பங்கெடுப்பதற்குத் தயங்குகின்றார்கள். நான் கலந்துகொண்ட பல நிகழ்வுகளில், தமிழ் பகுதிபோல் மலாய், சீன, ஆங்கில பிரிவுகளில் அந்தந்த இனப் பெண்களின் பங்கேற்பு வியப்பை ஊட்டுகிறது. அதிகமானோர் பங்கு பெறுகிறார்கள். நம் பெண்களுக்கு தோல்வியைத்தாங்கிக்கொள்கிற சக்தியில்லையோ அல்லது போட்டி என்கிற விளம்பரத்தைப் பார்த்தவுடன், `ஆமாம்..கொடுப்பானுங்க இவ்வளவு காசு...., இவ்வளவு விலையுயர்ந்த பொருளை அப்படியே கொடுப்பார்கள் பாரு..என்கிற அலட்சியம் வேறு. இப்படிச்சொல்லியே நிகழ்வுகளில் பங்கெடுக்காமல் போனவர்களில் நீங்களும் ஒருவர்தானே அக்கா!?. பரிசு கிடைத்து விட்டது என்றவுன்.. ``அப்படியாஆஆ?’ என்று வாய்பிளப்பது.  இதுதானே நம் பெண்களின் நிலை.! சம்பந்தப்பட்ட நிறுவனம்அவர்களின் பொருட்களை விளம்பரம் செய்ய நிகழ்ச்சிகளைப் படைக்கின்றார்கள். அதில் கொடுக்கப்படும் கவர்ச்சிகரமான பரிசுகளை நாம் தட்டிச்செல்வதால்   நமக்கு என்ன கௌரவக்குறைச்சல் வந்து விடப்போகிறது. மெககெட்டு முயலணும், இதுவும் ஒரு சிலருக்குப்பிடிப்பதில்லை. எல்லாமும் சுலபமாக வந்துவிடும்மா என்ன..!!

*இந்த விளையாட்டுகளில், உங்களோடு போட்டியிட்டு தோற்றுப்போனவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? நல்ல திறமைசாலியான உங்களின் இந்த சிறப்புப்பங்கேற்பு சில வேளைகளின் பலரின் எதிர்ப்புக்குரலுக்கு ஆளாக நேரிடுகிறதே, அவற்றை எப்படி சமாளிக்கின்றீர்கள்?  
எனக்கு அறிமுகமான, தெரிந்த அன்பர்கள் வெற்றி பெற்றால் மனதார வாழ்த்துவேன், பாராட்டுவேன். ஆனால் எனக்கு என்று வரும்போது இந்த தாராள மனதைப் பார்ப்பது அரிதாகவே உள்ளது. `ஏன் நீயே பரிசு வெல்கிறாய்அடுத்தவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கலாமே? உனக்கு வேற வேலையே இல்லையா? இதே பொழப்புன்னு அலையுதுங்க..! என்று சொல்லி மனதைப் புண்படுத்துவார்கள். சில நட்புகள், எனது இந்த தொடர் வெற்றிகளைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் என்னிடம் பேச்சு வார்த்தைகளை நிறுத்திக்கொண்டு போய்விட்டவர்களும் உண்டுதான். போட்டி என்பது அவரவர் திறமைகளை வெளிக்கொணர்ந்து வெற்றிபெறுவது. பங்கேற்பது மட்டுமே நம் கையில், பரிசு வழங்குவது எல்லாம் தேர்ந்தெடுப்பவர்களின் கையிலேயே உள்ளது. என்னை யார் என்று கூட தெரியாத நிலையில் அவர்கள் என்னைத்தேர்தெடுக்கின்றார்கள் என்றால் என்னிடமுள்ள திறமைதானே முக்கியக் காரணம். இதற்காக பொறாமை கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.!எதைப்பற்றியும் கவலையில்லை. நம்மைக்கண்டு பொறாமைப்படுகிறவர்களால் நமக்கு ஒன்றும் ஆகப்போறதில்லை. நம் வழியை நாம் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

*கணவரின் ஒத்துழைப்பு பற்றி சொல்ல முடியுமா, அவரின் பெயரில் கூட பல போட்டிகளின் பங்கெடுத்துள்ளீர்களே..?
ஆமாம், பலபோட்டிகளில் அவர் பெயரில் நான் பரிசை வென்றுள்ளேன். ஆனாலும் அவர்தான் மேடையேறி பரிசைப்பெறுவார். அப்போது அங்கே கேட்கப்படும் கேள்விகளின் போது திருதிருவென விழிப்பார்.. நான் சிரிப்பேன். அவருக்கும் இப்படி பங்கேற்று பரிசை வெல்வது பிடிக்கின்றது. பலரை ஆர்வமூட்டுவார், கலந்துகொள்ளச்சொல்லி அலோசனை வழங்குவார். அவரின் மூலமாகக் கூட சிலர் என்னை அழைத்து, `இதில் பங்கேற்க வேண்டும், அதில் பங்கேற்க வேண்டும், வழிகாட்டுங்கள் உதவி செய்யுங்கள்என கேட்டுள்ளனர். நானும் உதவுவேன்.


*தமிழ் பள்ளிக்குச் செல்லாத உஙகளை தமிழின் பக்கம் இழுத்த்து எது, யார் என்று சொல்லமுடியுமா?
தமிழராய் பிறந்து விட்டு தமிழ் படிக்காமல் போனதே அவமானமான ஒரு செயல். தமிழ் பள்ளியில் அப்பா என்னைச் சேர்க்கவில்லை, அதற்காக அவரும் பலமுறை வருத்தப்பட்டுள்ளார். அப்பாவின் தூண்டுதலின் பேரில் மலாய் பள்ளியில் பயின்றுக்கொண்டே, தமிழ் வகுப்பிற்கு தவறாமல் செல்வேன். எனக்குக் கிடைத்த தமிழாசிரியர் திரு.பத்மநாதன் மிகவும் சுவாரிஸ்யமானவர். அவர் தினமும் எங்களுக்குக் கதைகள் சொல்வது வழக்கம். பெரும்பாலும் திகில் கதைகள்தாம். கதைகளை முடிக்கும்போது மர்மம் தொற்றிக்கொண்டிருப்பதைப்போல் முடிப்பார். கதையைத் தொடர்ந்து கேட்க வேண்டுமா? நாளையும் தமிழ் வகுப்பிற்கு வாருங்கள் என்று சொல்லி, எங்களை தொடந்து வகுப்பிற்கு வரவழைப்பார். அவரின் தூண்டுதலிலும், சொந்த முயற்சியிலும் நிறைய கற்றுக்கொண்டேன். அப்பா வாங்கி வரும் தமிழ் தினசரிகளை நாள் தவறாமல் படிப்பேன். அப்படியே வந்ததுதான் தமிழ் பற்று. மேலும் உங்களைப்போன்ற தமிழ் பற்றுள்ள நண்பர்கள் என்னைச்சுற்றி இருப்பதும், தமிழைத்தொடந்து கற்பதற்கு உந்துதலாக அமைந்து விட்டதும் வரப்பிரசாதமே.  
                             
*எழுத்துத்துறையிலும் கால் பதித்துவிட்டீர்களே அதைப்பற்றி..?
அதுவும் ஒரு விபத்துபோல் நிகழ்ந்து விட்டது. போட்டி நிகழ்ச்சி என்கிற அறிவிப்பைப் பார்த்தவுடன், தமிழ் படிக்காத நான், என்னுடைய முழுமுயற்சியில் முதல் முதலாக ஒரு சிறுகதை எழுதினேன். முற்றிலும் அறிமுகமில்லாத புதிய எழுத்தாளர்கள் பங்குபெறுகிற ஒரு போட்டி என்றவுடன், உத்வேகம் மனதைக்குடைந்தது. பெரிய எழுத்தாளர்களிடம் போட்டி போடமுடியுமா என்ன? ஆக, முயன்றுதான் பார்ப்போமே என்று எழுதிப்போட்டேன். பிரசுரம் ஆனது, இரண்டாவது பரிசும் கிடைத்தது. 500ரிங்கிட், சுற்றுலா செலவிற்கான பற்றுச்சீட்டு அது. நானும் கணவரும் மீண்டும் ஒரு ஹனிமூன் சென்றுவந்தோம்.  அந்த சிறுகதையை எழுதுகிறபோது..  இதுக்கு எந்த `றர, ழளல, நனண, போடுவது? ச்ப்த்க்வருமா? என சதா அழைத்து உங்களை துன்புறுத்தியுள்ளேன் என்பதையும் மறக்கவேண்டாம். இவ்வேளையில் பத்திரிகை ஆசிரியர்களை நினைக்கும் போதும் பெருமையாகவே இருக்கின்றது. யாருடைய எழுத்துக்களையும் புறகணிக்காத ஒரு அற்புத ஆசிரியர்களை நாம் பெற்றுள்ளோம். எப்படி எழுதினாலும் திருத்திப்போட்டு பிரசுரித்து அங்கீகரிக்கின்றார்கள். எல்லோரும் எழுதவேண்டுமென்று மறைமுகமாக உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள். இது நமக்கு நல்லதொரு வாய்ப்பு. இதை ஒவ்வொரு வாசகரும் நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இப்போது எனக்கு எழுத்திலும் ஆர்வம் வந்துவிட்டது.

*அழகு போட்டியில் கூட பங்கேற்று `டாப் 10 ஆக வலம் வந்த்தைப்பற்றி.....
அக்கா என்ன வச்சு காமடி கீமடி எதும்...!!!! வம்பில் மாட்டி விட்டுடாதிங்க.. அது அழகு போட்டி இல்லை, சேலை அழகு ராணி போட்டி. அழகான சேலைக்காக கிடைத்த பரிசு அது. நான் அழகி என்றால் ஐஸ்வரியாராய் யாராக்கும்..!? நல்லா கிளப்பறாங்கய்ய்யா புரளிய.....

*மிக அண்மையில் கலந்துகொண்டு பரிசை வென்ற நிகழ்ச்சி எதும்?
டி.எச்.ஆர் வானொலியில் `தலதளபதிஎன்கிற போட்டியில் பங்கேற்று ரிங்கிட் மலேசியா ஐநூறை வென்றேன். அதனைத்தொடந்து `tesco தீபாவளி வாங்க பாடலாம்என்கிற போட்டியிலும் ரொக்கம் வென்றுள்ளேன். தீபாவளிக்கு செலவுகளுக்கு கூடுதல் வருமானமாக உதவுகிறது.  

*தீபாவளி வருகிறதே.. பல விளம்பரங்கள் போட்டிகளாக அறிமுகப்படுத்துவார்களே, கலந்துக்கொள்வீர்களா?
நிச்சயமாக. என்னால் முடியுமென்றால், வாய்ப்புகிடைத்தால் பங்கெடுத்துக்கொள்வேன்.

*இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும்போது உங்களின் மனநிலை என்ன?
வெற்றி பெறும் போதும், எனது பெயர், குரல் ஊடகங்களை அலங்கரிக்கும், அப்போது நானும் பொதுவில் அங்கீகரிக்கப்படுகிறேன் என்கிற எண்ணம், உள்ளொளி சுடரைத்தூண்டும். இது அவசியமென்றே படுகிறது மனசிற்கு. மனசு மகிழ்ச்சியாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

*தொடர்ந்து முயற்சி செய்யவேண்டுமென்றால், பலரின் உதவி உங்களுக்கு அவசியமே. அந்த வகையில் யாரெல்லாம் உதவுவார்கள்? இந்த பயணத்தில் நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் நபர்கள்?
நான் மலாய் பள்ளியில் பயின்றதால், தமிழை பிழையில்லாமல் எழுத வராது. சில போட்டிகளில் பங்கேற்பதற்கு தூய தமிழ் பயன்படுத்தவேண்டும். அப்போது எனக்கு நிறைய நண்பர்கள் உதவி புரிவார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால்- ஷா ஆலம் விஜயா (ஸ்ரீவிஜி), கஸ்தூரி கிள்ளான். அக்காவின் மகள் திரேசா. தம்பி மனைவி புஷ்பவாணி, மைத்துனர் சேவியர் போன்றோர்கள் எனக்கு பெரிதும் உதவிய நபர்கள். அதுவும் கணவரின் தம்பி சேவியரோடு  சேர்ந்து பல முயற்சிகள் செய்து பரிசுகளை வென்றுள்ளேன். 

*இறுதியாக, இதுவரை நீங்கள் வென்ற பரிசுகளைப் பற்றிய பட்டியலை பகிரமுடியுமா..ஆட்சேபனை இல்லையென்றால்....?
நிறைய உள்ளனவே. நினைவுக்கு வந்தவரை பகிர்கிறேன். டர்பல் வெர்திக்க அன்றும் இன்றும் - 100ரிங்கிட். ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கே - 50ரிங்கிட். சிலிமிட்டா டீ- இரண்டு இலவச பக்கெட் டீ பக்ஸ் மற்றும் ஒரு டிவிடி பிளேயரும் பிரஷர் கூக்கரும். ப்ரூ உங்கள் சாயிஸ் - 50ரிங்கிட். உன்னிமேனன் மேடை நிகழ்ச்சிக்கு - இரண்டு டிக்கட். சங்கீதா சலங்கை ஒலி. கிளாசிக் நிகழ்விற்கு டிக்கட் வென்றுள்ளேன். ஹெர்பல் டானிக் - 100ரிங்கிட்.  நூறுவெள்ளி காயத்திரி பட்டுமாளிகையின் சேலை. நூறுவெள்ளி ஸ்ரீகுமரன் பட்டு மாளிகையில் சேலை. வித்யா ஹேர் ஆயில் 100ரிங்கிட். பாபாஸ் சமையலுக்கு ஒரு சவால் - 3900ரிங்கிட்.  டீன் ஜூவலர்ஸ் - 250ரிங்கிட் பற்றுச்சீட்டு. திருச்சி மசாலா - 50ரிங்கிட் பற்றுச்சீட்டு. QBB நெய் 100ரிங்கிட். தெலிகோம் அழைப்பு போட்டி 50ரிங்கிட் டாப் ஆப்.  ஃபேர் க்ளோ- 100ரிங்கிட் பெருமானமுள்ள முக ஒப்பனை பற்றுச்சீட்டு. எவரிடே பால்மாவு 100ரிங்கிட். கண்டுபிடிச்சா காசு - 1000ரிங்கிட்.  பணம் பணம் பணம் போட்டி - 2000ரிங்கிட். (கணவர்தங்கைதம்பி) என எல்லோரையும் பங்கு கொள்ளச்செய்து வென்றேன். பாபாஸ் & யூ -100ரிங்கிட். அலாம் ப்ளோரா 100ரிங்கிட்.  ஐஸோடோனிக் டிரிங்ஸ் - 200ரிங்கிட். மெக்னம் டி.எச்.ஆர் - 100ரிங்கிட். மெக்னம் அறிவிப்பாளர்களுடன் விருந்து நிகழ்ச்சி போட்டி. தலதளபதி - 500ரிங்கிட்.  ஆஸ்ட்ரோ தங்கத்திரை - 1800ரிங்கிட் பெருமானமுள்ள ipad2. எம்.பி.லிங்கம் & சன்ஸ் - 100ரிங்கிட் அவர்களின் பொருள்களுக்கான பற்றுச்சீட்டு. டிரிங்ஹோ படம் வரையும் போட்டி - KFC கூப்பன். மிஸ்.நிஹார் - grand winner......... ம்ம்ம் இவ்வளவுதான் நினைவில்.

*வாசகர்களுக்கு எதாவது சொல்ல நினைக்கின்றீர்களா?
நீங்கள் நீங்களாகவே இருங்கள். அதுவே உங்களின் அடையாளம்.
 

மிக்க நன்றி உமா.