திங்கள், மார்ச் 17, 2014

புத்தகச்சிறகுகள் ஏற்பாட்டில் - கவிதை மாலை.. (16/3/2014)

புத்தகச்சிறகுகள் ஏற்பாட்டில் வல்லின பதிப்பகம் எடுத்து நடத்திய ’கவிதை மாலை’ என்கிற நிகழ்வு (16/3/2014) தலைநகரில் வெகு சிறப்பாக நடந்தேறியது. வல்லின ஏற்பாட்டில் நடைபெறுகிற நிகவுகள் என்றால், நாட்டின்  ` ஊடக, எழுத்தாள, இலக்கியப் `பிரபலங்களின்’ ஒத்துழைப்பு என்பது சிஞ்சிற்றும் இருக்காது. பேச்சு வழி, முகநூல் வழி, குறுந்தகவல் வழி ஒருவர் மற்றவர்களை அன்புடன் அழைத்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இது என்பதால், அதிகமான இலக்கிய ஆர்வலர்களை எதிர்ப்பார்க்க முடியாது என்கிற அவநம்பிக்கையுடன் சென்ற நான், ஏமார்ந்துதான் போனேன். நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் வருகை புரிந்து, அந்த சிறிய அரங்கமே நிரம்பி இருந்தது, நிகழ்ச்சிக்கு வெற்றியே.

மேலும் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்ற மிகமுக்கிய பிரச்சனைகளின் ஒன்றான, MH370 விமானம்  காணாமல் போன சம்பவம் குறித்த தொடர் திருப்பங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற சமயத்தில், இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளின்பால் ஆர்வம் குறைந்து, மனது சதா நடந்துவிட்ட விபரீதங்களிலேயே மூழ்கியிருக்கின்ற பட்சத்தில், இலக்கியமாவது மண்ணாவது என்கிற உள் உணர்வையையும் மீறி, இந்நிகழ்விற்கு வருகை புரிந்து நிகழ்வு சிறக்க உதவிய அனைவருக்கும் புத்தகச்சிறகுகள் மற்றும் வல்லினம் சார்பாக எனது நன்றி உரித்தாகுக.

நிகழ்ச்சியின் தலைப்பு `கவிதை மாலை’. சிறப்பு வருகையாளர் தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவாதி எழுத்தாளர் ஜெயமோகன். 
ம.நவீனின் `வெறி நாய்களுடன் விளையாடுதல்’ என்கிற நூலும், கே. பாலமுருகனின் `தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்’ என்கிற கவிதை நூலும் வெளியீடு கண்டன. இந்த நிகழ்வோடு `பறை’ என்கிற கால் ஆண்டு இதழும், அதன் ஆசிரிய குழுமங்களின் விளக்க உரைகளோடு அரங்கத்திற்குள் நுழைந்தது. எளிய தேநீர் விருந்து. புத்தகச்சிறகுகளின் புத்தக விற்பனை ஒருபுறம், என, நிகழ்வுகளை அழகாகவே கோர்த்திருந்தார்கள்.

சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் ஜெயமோகன் வரவிருந்த விமானம் சற்று தாமதமாக வந்திறங்கியதால், அவர் வருவதற்குக் கூடுதல் அரைமணிநேரம் ஏடுத்துக்கொண்டு நிகழ்வை ஆரம்பித்த போதிலும், காத்திருக்கின்ற சோர்வே இல்லாமல் அமைதியாகவே நகர்ந்தது `கவிதை மாலை’ நிகழ்வு. 

நிகழ்வின் தலைப்பில் மாலை இருப்பினும், யாருக்கும் மாலை பொ(ப)ன்னாடை என்று அணிவித்து, வருகையாளர்களின் நேரத்தைக் கொள்ளையடிக்காமல், சொத்தப்பல் பேச்சுகளால் இலக்கிய ஆர்வலர்களின் கழுத்தில் `கத்தி’ போடாமல், நிகழ்வின் நோக்கம் மட்டுமே அரங்கேறியது, வல்லினம் முழுக்க முழுக்க இளஞர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது புலப்பட்டது.

மேடையில் நூல் குறித்த விமர்சனத்தில் அ.பாண்டியன், தினா, விஜயா, யோகி, பூங்குழலி போன்றோர்கள் ரத்தினச்சுறுக்கமாக புத்தகத்தில் தாம் ரசித்த விடயத்தைத் தொட்டு உரையாற்றினார்கள். எல்லோரும் ஒரே மாதிரியான கருத்தினைக் கொண்டிராமல், தத்தம் பார்வையில் வெவ்வேறு கோணத்தில் புத்தகத்தைப்பற்றி பேசியது சிறப்பாகவே இருந்தது. குழலி இன்னும் கொஞ்சநேரம் பேசியிருக்கலாம் என்கிற ஏக்கத்தை உண்டு பண்ணியது அவரின் தெளிவான பேச்சு. நல்ல பேச்சாளராவதற்கான தகுதி அனைத்தும் அமையப்பெற்ற பெண் அவர்.

கே.பாலமுருகன்

புத்தகம் குறித்து, அதனின் நூலாசிரியர்கள் பேசுகிறபோது, கே. பாலமுருகன் தமது உரையினை நகைச்சுவை ததும்ப வழங்கியிருந்தார். நகைச்சுவை பேச்சுதான் என்றாலும் அவரின் உரை சிந்தனையைத்தூண்டியது. 

யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்கிற சூழல் இப்போது புற்றீசல் போல் பரவி வருவது கண்கூடு என்றார். கவிஞராக இருப்பது எவ்வளவு சிரம்ம் என்பதனையும் ரசிக்கும்படி சொல்லியிருந்தார். போட்டோவிற்கு போஸ் கொடுக்கின்ற போதுகூட கேமராவை நேராகப் பார்க்கக்கூடாது என்கிற கொள்கை உள்ள கவிஞர்களின் நிலைமையினை மிக வருத்தத்துடன் தெரிவிக்கின்றபோது, அவரின் உடல்மொழி நல்ல நகைச்சுவை. 

கவிதை எழுதுவதற்கு எதாவது ஒரு நிகழ்வு கவிஞர்களுக்குத் தேவைப்படுகிறது. பௌர்ணமி என்றால், கவிதை. தீபாவளி என்றால், கவிதை. விநாயகர் சதூர்த்தி என்றால் கவிதை. நாட்டில் எதாவது நிகழ்ந்தால், கவிதை. பசியில் வாடினால் கவிதை. காதல் வந்தால் கவிதை, தெய்வ சிந்தனை தோன்றினால், கவிதை., என பத்திரிகைகள் அதனின் தரம் காணாமல் கவிதைகள் என்கிற பெயரில் படைக்கப்படுகிற அத்தனை எழுத்துகளையும் வதவதவென்று பிரசுரித்து, அப்படி எழுதுகிறவர்களையும் ஊக்கமூட்டிவருகிறார்கள். இது தவறு. இதனால் எந்த நன்மையும் சமுதாயத்திற்கு வந்து விடப்போவதில்லை, என்கிற ஆதங்கத்தை பகீரங்கமாக வெளிப்படுத்தினார்.

மேலும் தமது எழுத்து குறித்து சொல்கையில், தாம் ஒரு ஆசிரியர் என்பதால், அச்சூழலின் செயல்பாடுகளை, குறிப்பாக, குழந்தைகளை எந்த ஒரு வெளிநடவடிக்கைகளிலும் ஆர்வம் கொள்ளவைக்காமல் படி, படி, படி என்று பாடபுத்தகங்களை மட்டுமே கட்டி ஆள்கிற துயரங்களைப் பொறுக்க முடியாமல், அவ்வாதகங்கத்தை தாம் கவிதைகளின் வழி மட்டுமே வெளிக்கொணர இயலும் என்று தமது உரையில் வெளிப்படுத்தி முற்றுப்புள்ளிவைத்தார். 

ம.நவீன்

மலேசிய இலக்கியச்சூழலில் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக்கொள்ளும் ம.நவீன் மேடையேறினார். அவரின் உரையை நன்கு ரசித்தேன். கொஞ்சம் `சீரியஸா’கவே தமது உரையினை வழங்கினார். அவரும் கவிதை நூல் வெளியிட்டிருப்பினும் (வெறிநாய்களுடன் விளையாடுதல்), கவிதை குறித்த அறிமுகத்தை சுறுக்கமாக முடித்துக்கொண்டு, தாம் வாசித்து நெகிழ்ந்த இலக்கியச் சிதறல்களை அரங்கில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொண்டார். 

இலக்கியம் எல்லாக் கட்டமைப்புகளையும் உடைத்தெறிகிற பணியினைச் செய்வதுதான். ஏற்கனவே புனிதம் என்கிற போர்வையில் செல்லரித்து துருப்பிடித்த விடயங்களைப் பூசிமெழுகிற வேலைகளை இன்னமும் எழுத்துலகம் செய்துகொண்டிருப்பது இலக்கிய உலகின் அவலம். ஏன் இலக்கியம் படி(டை)க்கவேண்டும்? இலக்கியம் நம்மை என்ன செய்யும்.? ஏன் நல்ல படைப்பாளிகள் உருவாக வேண்டும்.? எது நல்ல இலக்கியம்.? இலக்கியம் என்பது.... !? என்று ஆரம்பித்து, சில நல்ல சிறுகதைகளை உதாரணமாகக் காட்டி, தமது பேச்சுதனை சுவாரஸ்யமாக நகர்த்திச்சென்றார். 

அதில் ஜெயமோகனின் யானைக்கதையும் வந்தது. புழுக்களைக் கண்டு அருவருக்கின்ற நாம், புழுக்களும் எதோ ஒரு ஜந்துவின் குழந்தைகளே, என்பதனை என்றாவது உணர்ந்துள்ளோமா.!? குழந்தைகளில் கூட, நன்கு அழகாக மொழுமொழு என்று பொம்மைக் குட்டியைப் போன்று இருக்கின்ற குழந்தைகளைத்தான் நாம் கொஞ்சி மகிழ்கின்றோம். என்றாவது கருப்பாக அசிங்கமாக இருக்கின்ற குழந்தைகளை நாம் நமது கணினியிலோ அல்லது கைப்பேசி ஸ்கிரீனிலோ ரசிப்பதற்காக வைத்திருக்கின்றோமா? குழந்தைகளைக் கொஞ்சுவதாக இருந்தால் எல்லாம் குழந்தைகள்தானே, ஏன், கொஞ்சுவதில் நாம் பாகுபாடு காட்டுகிறோம்.! புழுக்களும் ஒரு பூச்சியின் குழந்தைகள்தானே. ஏன் அருவருக்கின்றோம்.? என்கிற கேள்விக்கணைகள், என்னை என்னவோ செய்தது. யோசித்துப்பார்க்காத ஒரு கரு. யானைக் கதையில் வருகிற ஒரு பகுதியைக் குறிப்பிட்டு, இக்கருத்தை மேற்கோள் காட்டி பகிர்ந்துகொண்டார் நவீன்.

அடுத்ததாக சு.வேணுகோபாலின் ஒரு சிறுகதை. (தலைப்பு சொல்லவில்லை). அக்கதையினை அவர் சொல்லிமுடிக்கின்றபோது, எனது உரோமங்கள் சிலிர்த்தன. புனிதம் என்று கட்டமைக்கப்பட்ட கோட்பாட்டை, திரைமறைவில் யாருக்கும் தெரியாமல் சுயநலனுக்காக எப்படிவேண்டுமானாலும் உடைத்தெறியலாம் என்கிற நியதியில் முடிவடைகிற சிறுகதை அது. இது எங்கோ யாரோ செய்கிற காரியம்தான். ஆனால், அதைப் படைப்பாளியாகப்பட்டவன் எழுத்தின் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிற வேலையினை மட்டும் செய்துவிடக்கூடாது. வாசகன் கெட்டுவிடுவான். குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகும். இதுதான் நம்நாட்டு இலக்கியச்சூழலில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கட்டபஞ்சாயத்து நியாயம்.! 

சு.வேணுகோபால் நம் நாட்டு படைப்பாளியா அல்லது தமிழ்நாட்டுப் படைப்பாளியா? என்பது தெரியவில்லை. இங்கே இதுபோன்ற கதைகள் வந்தால், புத்தகத்தை நெருப்பில் போட்டுவிடுவார்கள். ஆக, இதுபோன்ற கதைகள் வந்துள்ளது என்றால், நிச்சயம் அவர் தமிழ்நாட்டு படைப்பாளியாகத்தான் இருக்கவேண்டும். நன்றி, நல்ல எழுத்தாளரையும் இவ்வேளையில் அறிமுகம் செய்துவைத்தமைக்கு.!

நிகழ்விற்குச் சிறப்புச் சேர்த்த்து ஜெயமோகனின் உரை.

கவிதை மாலை நிகழ்விற்கு, கவிதை குறித்த அவரின் உரையினை, திருவிளையாடல் புரணத்தில் நக்கீரன் தருமி விவகாரத்தில் ஆரம்பித்து, திருவள்ளுவர், பாரதி, பிரமிள் என்று தொடர்ந்தார். மிக ஆழமான பொருள் பதிந்த உரையாகவே அது எனக்குப்பட்டது. அவ்வுரையை நான் எனது கைப்பேசியில் recording செய்தும், கரகரப்பு ஓசையுடன் சரியாகப் பதிவாகாதது எனது துர்ப்பாக்கியம். ஆழமாக பேசப்பட்ட உரையினை, எனது பாணியில் சொல்வதற்கு முயல்கிறேன். காப்பி பேஸ்ட் வசனமும் எனக்கு வராது என்பதும் எனது `பாக்கியம்’.!

வள்ளுவரின் வரிகள் அனைத்தும் கவிதைகளே. அவர் சொல்லிச்சென்ற இருவரிகள் இன்னமும் பலகோணத்தில் பாடம் போதித்தவண்ணமாகத்தான் உள்ளது. 

நாலுவரி கவிதையினை எழுதிவிட்டு செத்துப்போங்கள் பரவாயில்லை. அதை யாராவது என்றாவது பேசுவார்கள்.! 

கவிதைகளில் வாழ்க்கை, தத்துவம், போதனை, காதல், அறிவுரை, வாக்குமூலம் என எல்லாம் சொல்கிறீர்களா? என்னாலும் அப்படியெல்லாம் யோசிக்கமுடியும். எனக்கு அது வேண்டாம். 

தமிழில் உங்களுக்கு அனைத்து எழுத்துக்களும் தெரியும். முனைவர் பட்டமெல்லாம் வாங்கியிருக்கலாம். ஆயிரம் ஆய்வுகள் செய்திருக்கலாம். பாண்டித்துவம் மிக்கவராகவும் நீங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கவிதை உங்களுக்குப்புரிந்துவிடுமா என்றால் அது சந்தேகம்தான். காரணம் கவிதைக்கென்று இன்னொரு மொழிவடிவம் உள்ளது. அதன் உணர்வு என்பது வேறு. அதன் உலகமும் வேறு. 

எல்லாக் காலகட்டத்திலும் கவிதை என்றாலும் கவிஞர்கள் என்றாலும் சாமானிய மக்களின் மத்தியில் ஒரு பயம் இருந்துவருவது கண்கூடு. எல்லா இடங்களிலும் கவிதை குறித்த பேச்சுவார்தைகள் மிக எளிதாகவே நடைபெறும், டீக்கடை பார் என, ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி கண்டு மோதலில் முடிவடைவதைத்தான் நாம் பார்க்கமுடியும். காரணம் கவிதை குறித்த புரிதலில் ஒத்துப்போகுதல் என்பது சாத்தியமில்லாதது... இங்கே பிரமிள் கவிதகளை உதாரணமாகக் காட்டினார். எனக்கு பிரமிள் கவிதைகள் என்றாலே உதறல் வந்துவிடும். எழுத்து வடிவில் இருப்பதை விழுந்து விழுந்து வாசிக்கின்ற போதே புரியாது. ஜெயமோகன் அவற்றை மனனம் செய்து ஒப்பிக்கின்றபோது.. சுத்தம்.!

முடிவில், இவரின் இந்த உரை குறித்து கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேட்கலாம், என்றதிற்கு, “கேள்விகள் வேண்டாம். இங்கே நான் சொன்ன அனைத்தும், உடனே புரியுமா என்றால், அது சந்தேகம்தான்.! அதைப்பற்றி நிதானமாக யோசிக்கின்றபோதுதான், வினா எழலாம். ஆக, உடனே கேள்விகள் கேட்டு பதில் கொடுப்பதென்பது, சரிப்பட்டு வராது.” என்று சொல்லி நிராகரித்தார். நிஜம்தாம். நம்மைப் புரிந்துவைத்திருக்கின்ற ஓர் படைப்பாளி அவர்.

ஜெயமோகன் அவர்களின் புத்தகங்களை விட, அவரின் ப்ளாக்’ஐ அடிக்கடி சென்று வாசிப்பேன். சிறந்த எழுத்தாளர். எழுத்தில் அவரின் பாணியை யாராலும் பின்பற்ற முடியாது. வாசகியான நான் தினமும் அவரின் ப்ளாக் பக்கம் எட்டி எட்டிப் பார்க்கின்ற பட்சத்தில், தொடர்ந்து அவரின் படைப்புகளை எல்லாம் விடாமல் முழுமையான வாசித்து முடிக்கமுடியாமல் திணறி திண்டாடுவேன். ஒரு நாள் விட்டு மறு நாள் சென்றால், வாசிக்காமல் விட்ட விடயங்கள் மலிந்து விடும் அங்கே. அப்பேர்பட்ட படைப்பாளி அவர். நிமிடத்திற்கு ஒரு பதிவு. அவரின் எழுத்துதானா அல்லது அவரின் பேச்சுகளை அவரின் உதவியாளர்கள் கடகடவென தட்டச்சு செய்து ப்ளாக்கில் பதிவேற்றி விடுகிறார்களா.? என்பது தெரியவில்லை. அவ்வளவு பதிவுகள் அங்கே. எல்லாமும் எளிமையான முறையில் சுலபமாக புரியும்படியே இருக்கும். அப்பேர்பட்ட எழுத்தாளரை, சிந்தனையாளரை, சினிமா பிரபலத்தை மிக அருகில் அவரின் பக்கத்திலேயே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிற பாக்கியம் கிடைத்ததில் பெருமை கொள்கிறேன். இந்த வாய்ப்பினை ஏற்படுத்திகொடுத்த வல்லினத்திற்கு நன்றி.

முழுக்க முழுக்க தம்பி தயாஜியின் அறிவிப்பில் சோர்வில்லாமல் நகர்ந்த அற்புத நிகழ்வு இது. இவ்வேளையில் அவருக்கும் என் வாழ்த்துகள்.


இம்மாதம் நான்கு கவிதைப் புத்தகங்கள் என் கைவசம்.

முகநூல் நண்பர் R.K. குரு (லஷ்மிகாந்தன்) அவர்களின் – தமிழுக்கு ஆட்கள் தேவை என்கிற புத்தகம். தற்போது எனது வாசிப்பில்.

ப.ராமு – எனது பழைய நண்பர். அவரின், சிணுங்கும் சிறகுகள் என்கிற கவிதைப் புத்தம்.

கே.பாலமுருகனின் – தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் என்கிற கவிதைப் புத்தகம்.

 ம.நவீன் – வெறிநாய்களுடன் விளையாடுதல் என்கிற புத்தகமும்....

எல்லாவற்றையும் வாசித்தபின்பே, அதையொட்டிய கருத்துப்பகிர்தலை முகநூலிலோ அல்லது ப்ளாக்கிலோ பகிர்வேன். கவிதை மாதம் இது எனக்கு.