வியாழன், ஜூன் 14, 2012

பிரபலமாகிப்போன சொல் வழக்கங்கள்

இந்துக்கள் மத்தியில் மூடப்பழக்க வழக்க முறைகளைக் கடைப்பிடிப்பதென்பது, உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் தவிக்க இயலாத ஒன்றுதான்.  பழமையில் பாரம்பரியத்தில் உள்ள எதைக் கட்டிக் காக்கின்றார்களோ இல்லையோ முக்கியமாக மூட நம்பிக்கை மூட பழக்கவழக்கங்களை விடாமல் தொன்று தொட்டு வழிவழியாக கட்டிக்காத்து தமது சந்ததிகளுக்கு விட்டுச் செல்கின்றனர். பல விஷயங்கள் பொக்கிஷமாக இருந்தாலும் சில விஷயங்கள் இன்னமும் தலைவலிதான்.

மூட நம்பிக்கை என்பதனை ஆய்வுகள் செய்துக்கொண்டே போனால், அதன் முடிவில் அற்புதமான விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கப்பெறலாம். உதாரணத்திற்கு; அசர, ஆலமரத்தைச் சுற்றினால் குழந்தை பாக்கியம், வேப்பமரத்தில் பேய், இரவில் உணவுகளை எடுத்துச்செல்லும் போது கரித்துண்டு வைப்பது, இரவில் நகங்களை வெட்டுவது, வீடு பெருக்குவது, தை மாதத்தில் விஷேசங்கள், ஆடியில் தள்ளிவைப்பது, சித்திரையில் குழந்தை வேண்டாம், இடது கையால் எதையும் கொடுக்காதே பெறாதே.. என இப்படி இன்னும் அடிக்கிக்கொண்டே போகலாம். இவைகளை ஆராய்ந்தால், கண்கள் அகல விரிகின்ற அளவிற்கு அற்புதமான அறிவியல் விளக்கங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நமது முன்னோர்கள்  மூடர்கள் அல்ல என்பதனை இதன் மூலமாகவும் அறிந்துக்கொள்ளலாம்.

இதையும் தாண்டி சில மூட வழக்கங்கள், பேச்சு வழக்கில் வழிவழியாக வந்து ஒட்டிக்கொண்டு, பாட்டன் முப்பாட்டன் காலந்தொட்டு இன்று இந்த நவநாகரீக காலத்திலும் தொடர்ந்து கடை பிடித்து, பிரபலமாகி நமக்கு நகைப்பை ஏற்படுத்திய வண்ணம்!.

இதற்கும் அர்த்தங்கள் உண்டு, உண்மை உண்டு என்று விளக்கங்கள் கொடுக்க நேரலாம், அப்படியே கொடுக்க நேர்ந்தாலும் அவை நகைப்புக்குரியதாகவே இருக்குமென்பது என் கணிப்பு.

அவற்றில் சிலவற்றை இங்கே நான் பட்டியலிட்டுள்ளேன். இது குறித்து என் தோழிகள் சிலரிடம் விசாரித்தேன். பலர், இரவில் நகம் வெட்டுவது, வெள்ளிக்கிழமை பணம் கொடுப்பது, சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, புது வீட்டில் பூசணி, எழுமிச்சை கட்டுவது, இறப்பு நடந்துவிட்டால் கோவிலுக்குச் செல்லாமல் இருப்பது, வேப்பமரத்தை சுற்றுவது, அரச மரத்தைச்சுற்றுவது போன்றவற்றைத்தான் உதாரணம் சொன்னார்களேயொழிய, நான் கேட்கவிருப்பதை யாருமே புரிந்துக்கொள்ளவில்லை. ஆக, நானே யோசித்து யோசித்து சிலவற்றை இங்கே.!


* கொள்ளு சாப்பிட்டால், குதிரை போல் வேகமாக ஓடலாம்.

* உடும்பு இறைச்சி, இடுப்பு வலிக்கு நல்லது.

* நண்டு சூப் குடித்தால், சளி பிடிக்காது

* பப்பாளி சாப்பிட்டால் கர்ப்பம் கலையும்

* அன்னாசிப்பழம் கர்ப்பவதிகள் சாப்பிடக்கூடாது

* பால் சுறா மீன் சாப்பிட்டால், தாய்மார்களுக்கு பால் சுறக்கும்.

* மாதவிடாய் சமையத்தில், பெண்கள் நாயிற்கு சோறு போட்டால் வயிறு அதிகமாக வலிக்கும்.

* புதிதாகக வயதுவந்த பெண்பிள்ளைகள் ஆண்களைப் பார்த்தால், முகப்பருக்கள் வரும்.

* கண்கள் துடித்தால், வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள்

* மூக்கு அரித்தால், யாரோ நம்மை கோள் பேசுகிறார்கள்.

* புரை ஏறினால், யாரோ நம்மை நினைக்கின்றார்கள்.

* காக்கா வலிப்பு வந்தால் சாவி கொத்தைக் கொடுப்பது.

* தும்மல் வந்தால் ஆயுசு நூறு

* புதிய செருப்பை நமது பற்களால் முதலிலே கடித்து விட்டால், அது நம்மைக் கடிக்காது

* மருதாணி சிவந்தால், புருஷனுக்கு அன்பு அதிகம்

* சிகப்பு ஆடை அணிந்தால் மாடு முட்டும்

* வெற்றிலை போட்டு சிவந்தால் கோழி முட்டும்

* அரிசி சாப்பிட்டால் திருமண நாளில் மழை பெய்யும்

* பாம்பு படம் எடுக்கும்

* தலைப்பிரசவத்தில் பிறந்த பிள்ளையைத் தான் இடி மின்னல் தாக்கும்

* தவறு செய்துவிட்டால், துண்டு போட்டுத்தாண்டனும்

* போகும் போது, எங்கே போறீங்க? ன்னு கேட்கக்கூடாது

* சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டால் இளமைத்துள்ளலோடு வலம் வரலாம் (ப்பச்ச்... குருவி செத்துப்போகும்)

* கண்ணாடி உடைத்தால், சகுனம் சரியில்லை

* மலத்தில் காறி உமிழ்ந்தால் தொண்டை கட்டிக்கொள்ளும்

* மிளகை நெருப்பில் போட்டால், முகப்பருக்கள் உதிரும்

 * நாய் பூனை மலங்களை வாரி விசி சுத்தம் செவ்வோர் வைக்கும் குழம்பு மணக்கும்

* காய்ந்த மிளகாயில் திஷ்டி கழிப்பது

இன்னும் இருக்கலாம், கடல்தாண்டி வந்த எங்களுக்கே இவ்வளவு தெரிந்திருக்கும்போது,  அங்கேயே உள்ள (தமிழ் நாடு) உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கனும்.!!! தெரிந்தால் சொல்லுங்கள்/பகிருங்கள்.