வெள்ளி, மே 11, 2012

நீ அரை பைத்தியம் என்றால், நாங்கள் முழு பைத்தியம்

எங்கள் கம்பனி ஒரு sales and service நிறுவனம். இங்கே கஸ்டமர்கள் தங்களின் பழுதான மின்சாரசாதணங்களைப் பழுதுபார்க்கக் கொண்டுவருவார்கள். பழுது பார்ப்பது ஒரு புறமிருந்தாலும், spare parts கள் வாங்குவதற்கும் நிறைய கஸ்டமர்கள் வருவார்கள். மேலும், உள்ளே மற்ற மின்சார சாதணங்கள் அடுக்கி வைத்திருக்கும்  show room மிற்கும் வருகை புரிவார்கள்.


இப்படி தினமும் சந்திக்கின்ற கஸ்டமர்களில் பலர், படு சுவாரஸ்யமானவர்கள். அவர்களின் பேச்சுகளைக்கேட்டால், ஒரு நகைச்சுவை புத்தகமே எழுதலாம்.


இப்படித்தான் ஒரு கஸ்டமர், அவர் பழுதுப்பார்க்கக் கொண்டுவந்த வானொலி, எங்கள் கம்பனி தயாரிப்பில் மிக பழமையானது. இனி இதுபோன்ற  வானொலியை எங்கு தேடினாலும் கிடைக்காதாம். பல ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓர் கருவி அது.

அதனை அவர் கொண்டுவந்திருந்த போதே தெரிந்தது, அதனின் பழைமை. தொல்பொருள் காட்சிக்கூடத்திலிருந்த்து அபகரித்துக் கொண்டு வந்ததைப்போல் இருந்தது அப்பொருள். அதன் spare parts  கிடைப்பதில் சிரமம் இருப்பதால், (ஜப்பானில் கிடைக்கலாம், அது கூட உறுதியில்லை) பழுது பார்க்க முடியாது, மன்னிக்கவும் என்றிருக்கின்றார்கள். அவர் தமிழர், வீரமண்ணுக்குச் சொந்தக்காரராச்சே,  விடுவாரா? நான் ஒரு தமிழ் இளிச்சவாய் கிடைத்து விட்டேனா.. சும்மா விஜயகாந்த் கணக்கா `நான் இவனுங்களை என்ன செய்கிறேன் பார், என்னை என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்!, நான் நினைச்சேனா, இந்த கம்பனி இந்த இடத்திலேயே இருக்காது!, நீங்க ஒரு தமிழர் இங்கே வேலை செய்வதால்தான் கருணை காட்டுகிறேன்.! எங்க பெரியப்பா யார் தெரியுமா? எங்க சின்னத்தாத்தா யார் தெரியுமா? எங்க மாமா பொண்டாட்டி யார் தெரியுமா!..என..!

நம்முடைய சிந்தனையோ.. கடவுளே, இந்த மாதிரியான ஆட்களிடமிருந்து என்னைக் காப்பாற்று, என்கிற பிராத்தனையைத்தவிர வேறொன்றும் இருக்காது.


எங்கள் கம்பனியின் மின்சார சாதணங்களில் எதேனும் ஆபத்துகள் விளைவிப்பதைப்போன்ற அறிகுறிகள் தென்பட்டதென்றால், அவற்றை உடனே இங்கு கொண்டு வந்து, அதனின் ஆபத்து என்வென்று விளக்கமாக ஆதரத்தோடு நிரூபித்தால், அப்பொருளைத் திருப்பிக்கொடுத்து புதிதாக மாற்றிக்கொள்ளலாம். இந்த மாற்றம் உடனே நிகழாது, கொஞ்ச காலம் எடுக்கும். சும்மா கொடுத்துவிடுவார்களா என்ன.!

இங்கே அதைப் பரிசோதித்து, எந்த நிறுவனம் அப்பொருளைத் தயாரித்ததோ, அங்கே அதைத் திரும்பவும் அனுப்பி, அவர்களும் பரிசோதித்து அதற்கான காரணம் என்ன என்பதனை ஆராய்ந்து, சோதனைச் சான்றிதழை ஜாப்பானுக்கு அனுப்பி, அங்கே அவர்கள் அதை ஏற்றுக்கொண்ட பிறகே, இங்கே அதற்கான புதிய பொருள் வெளியாக்கப்படும். சில பொருட்களுக்கு இதுபோன்ற அப்ரூவல் கிடைக்கவே கிடைக்காது.

ஒருமுறை, கஸ்டமர் ஒருவர், அவரின் வீட்டில் உள்ள ஏர்கோண்ட், ஆன் செய்யும் போதெல்லாம் பயங்கர துர்வாடை வீசுவதாகச் சொல்லி, சதா தொலைப்பேசியின் வழி தொல்லை செய்தவண்ணமாகவே இருந்தார். இப்படி துர்வாடை வீச வாய்ப்பே இல்லை. என்ன மாடல்? எங்கே வாங்கினீர்கள்? போன்ற கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. பொறுமை இழந்த அவர் ஒரு நாள் எங்களின் அலுவலகத்திற்கு நேராக வந்துவிட்டார். அதன்பின், உண்மை நிலவரங்களைக் கண்டுவர, இரண்டு டெக்னிஷன்களை அனுப்பினார்கள். அவர்களின் வீட்டிற்குச் சென்று வந்த டெக்னிஷன்கள் சொன்ன கதைதான் இங்கே சுவாரஸ்யம்.

அந்த அறையே பயங்க துர்நாற்றமாம். குழந்தையின் மலம், சிறுநீர், அழுக்குத்துணிகளின் குவிப்பு, குப்பைகளின் சிதறல் என வீடே அசுத்தமாக இருந்ததாம்.. !! ஆக, பகலில் ஏற்படுகிற இந்த துர்நாற்றத்தை அந்த ஏர்கோண்ட் அப்படியே கிரகித்து வைத்துக்கொண்டு, இரவில் அவர்கள் அதை முடக்கிவிடும்போது, அந்தத் துர்நாற்றம் இரட்டிப்பாகி, அவர்களுக்கே திரும்பி விடுகிறதாகச் சொன்னார்கள். இதை அவர்களிடம்  சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா..! எவ்வளவோ போராடினார்கள். அவனும் பத்திரிகையில் எழுதி உங்களின் கம்பனி இமெஜ்யை பாழ்படுத்தப்போகிறேன் பார்’ என்கிற சவால் எல்லாம் விட்டான். எங்களின் கம்பனியில் பத்திரிக்கைத்துறையை  கவனிக்க ஒரு நிபுணரே வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் போது, இந்த பாச்சா எல்லாம் இவர்களிடம் பலிக்குமா என்ன.! அவனும் MD யிடம் பேசனும், மந்திரியை அழைக்கப்போகிறேன் என்றெல்லாம் மிரட்டல் விடுத்து, காணாமலே போனான்.


ஒரு கஸ்டமர், எங்களின் நிறுவனத்திற்கு அவன் வாங்கிய தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து விட்டான். பிரச்சனை என்னவென்றால், அந்த தொலைக்காட்சியை அவன் கடையில் வாங்கும்போது, 29’’ என்று சொன்னார்களாம். ஆனால் அவன் வீட்டிற்குச்சென்று அவன் வைத்திருக்கும் அளவுகோலில் அளந்து பார்க்கையில், அது 29’’ டீவி இல்லையாம். !

இங்கே உள்ள பலருக்கு, இந்த கேஸ் படு பயங்கர நகைச்சுவையை உண்டுபண்ணியது. ஆனாலும் கஸ்டமர் முன்னிலையில் சிரிப்பது தவறு என்பதால், எல்லோரும் அவனுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்கள், முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு. காரணம் இது போன்ற கேஸ்’ஐ இந்த வழக்காடு மன்றத்தில் இதுவரையில் இவர்கள் சந்தித்ததில்லை. நானோ சிரிப்பை அடக்க முடியாதா சூழலில் தத்தளித்துக்கொண்டிருந்தேன்... இந்த தர்மசங்கட நிலையில், எங்களின் சர்வீஸ் மானேஜர் ஒருவர், என் அருகில் வந்து, அவனிடம் ஒரு பேர்னோ சீடியைக் கொடுத்து அனுப்பி, அதை ஓடவிட்டு பார்க்கச்சொல்லலாம், டீவி வளரும் என்றார். நான் இடத்தை விட்டே காலி செய்துவிட்டேன். தேவையா.! சிரித்தால், புரிந்து விட்டது போலும் என்று நினைப்பார்களே.. வில்லங்கம்.


தான் வாங்கிச்சென்ற ரைஸ்கூக்கர், கத்திப்போல் கூர்மையான மூடியைக்கொண்டதால், அதைக் கழுவும் போது, தன் விரலையும் தமது மனைவியின் விரலையும் பதம் பார்த்துவிட்டதென்று சொல்லி,வெள்ளை பேண்டேஜ் ஒன்றை விரல்களில் சுற்றிக்கொண்டு (காயம் பட்டால், போடுவோமே அதுபோல்) வந்தார் மற்றொரு கஸ்டமர்.. அவரிடம்  ஒரு நீண்ட கடிதம் வேறு. அக்கடிதம், அவர் எங்களைச் சந்தித்து விட்டதாகச் சொல்லும் அத்தாட்சியாம்.. ! அந்த  ரைஸ் கூக்கரையும் கையோடு கொண்டுவந்திருந்தார்.

ரைஸ் கூக்கரை எங்களின் டெக்னிஷன்கள் துருவித்துருவித் தேடுகிறார்கள் அதில் அவர் சொன்ன அந்த மாதிரி கோளாறு எங்கும் தென்படவில்லை. சோதித்துப்பார்த்தார்கள், அவர்களின் கைகளை அது பதம் பார்க்கவும் இல்லை. இதில் ஒரு பிரச்சனையும் இல்லையே என்கிற ரிப்போர்ட்’டும் வந்தது.

அதை அந்த கஸ்டமர் காது கொடுத்துக்கேட்பதாய் இல்லை.வம்பிற்கு நின்றான்.

சரி, அந்த காயத்தைக்  காட்டுங்கள், என்றால், பேண்டேஜ்தான் பெரிசாக இருக்கின்றதே தவிர காயங்கள் எதுவுமேயில்லை. தக்காளி நறுக்கும் போது கத்தியின் கீறல் விரல்களில் லேசாக விழுமே, அது போன்ற ஒரு கீறல்தான். அதுகூட இந்த ரைஸ் கூக்கரால் தான் வந்தது என்றால் சந்தேகமே.! காயத்தை அவன் காட்டுகிற போது நான் தயார்நிலையில் இருந்தேன் சிரிப்பதற்கு.. இருப்பினும் அடக்கிக்கொண்டேன்.  இயலாமை வெளிப்படும்போது சிரித்தால் நிலைமை படு மோசமாகும் என்பது எனக்கும் தெரியுமே.

அவனைச் சமாளிக்கவே முடியாமல் திணறினார்கள் டெக்னிஷன்கள். அவர் சீனர் என்பதால், சீன மானேஜர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து சீன மொழியில் பயங்கரமாக சத்தம் போட. அவனும் மறுமொழியில் என்னன்னமோ சொல்லி சத்தம் போட, இடமே அமளிதுமளியானது.

மானேஜர் உள்ளே சென்றார், எங்களின் கம்பனியிலே மிகப்பெரிய புகைப்பட கருவி ஒன்றினை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார், வேண்டுமென்றே..! 70களில் பயன்பாட்டில் இருந்த அந்தக் கேமரா. இப்போது வெறும் காட்சிப்பொருள்தான் அங்கே. அதைத்தூக்கிகொண்டு, காயம் பட்ட உன் விரலைக் காட்டு, நான் புகைப்படம் எடுக்கப்போகிறேன், இந்தப் புகைப்படத்தை ஜப்பானுக்கு அனுப்பி, அவர்கள் ஏற்றுக்கொண்டால் உனக்கு மாற்றுப்பொருள் வழங்குவோமென்று, வித்தை காட்ட ஆரம்பித்தார்.. நான் ஓடியே போய் விட்டேன். கொடுமை இல்லையா..!? நீ அரை பைத்தியமென்றால் நாங்கள் முழு பைத்தியம், புரியுதா என்பதைப்போல் இருந்தது அந்த காட்சி.! அன்று அவர் நடத்திய நாடகத்தை சொல்லிச் சொல்லி அலுவலக ஊழியர்கள் அனைவரும் சிரித்தோம்..!!!


ஒரு நாள், கடுமையான மழையில் கடுப்பேறி வந்த ஒரு கஸ்டமர், காரைவிட்டு இறங்கும்போது, மழையில் நனையாமல் இருக்க, பார்க்கிங் தேடியுள்ளார். பார்க்கிங் கிடைக்காததால், நேராக எம்.டி’யின் அரைக்குள் நுழைந்து விட்டார். காவலாளிகள் எல்லோரும் உடனே வந்து அவனைப்பிடித்து,  வெளியே துரத்திவிட்டனர்.  அதிலிருந்து எம்.டி அறைக்குப்போகும் எல்லா குறுக்கு வழியும் மூடப்பட்டது. நேர்வழியில் சென்றாலும், நெம்டாக்  இருந்தால் தான் அந்த டிப்பார்ட்மெண்டிற்க்குள்ளேயே நுழைய முடியுமென்கிற சட்டமும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.


இப்படி இன்னும் பலவித கூத்துகள் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணமாகத்தான் உள்ளது எங்களின் கஸ்டமர் சர்வீஸ் நிறுவனத்தில். நினைவிற்கு வரும்போது நிச்சயமாக தொடர்ந்து பகிர்கிறேன்.

இரண்டு நாள்களுக்கு முன்பு கூட ஒரு அழைப்பு வந்தது.

``உங்களின் அலுவலக நேரம் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை.?’’ 

சொன்னேன்.. ``எட்டு முப்பதிலிருந்து, ஐந்து முப்பதுவரை!.’’

``அப்படியென்றால் சரி, நாளைக்கு நான் private part வாங்க வருகிறேன், bye.’’ என்றார்.




படித்துப்பாருங்கள்

சைவ சமய புராணங்களின் வரும் சமண வன்முறைகள் எல்லாம் கட்டுக்கதைகள் என்கிற சுவாரிஸ்யமான கட்டுரை, எழுத்தாளர் ஜெயமோகன் எனக்காக சுட்டிப்பகிர்ந்த சில சமண கட்டுரைகள் என, எனது தேடலுக்கு விருந்தாக அமைந்த சில அற்புதமான ஆய்வுத்தகவல்கள், என்னை ஆச்சிரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியது. இவற்றையெல்லாம் வாசிக்கும்போது, மிகப்பெரிய தகவல் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகப் பட்டாலும், காலகாலமாக நாம் பின்பற்றி வந்ததை, வருவதை போதிய புரிந்துணர்வு இல்லாதவர்களிடம் பகிர்ந்தோமென்று வையுங்களேன். அவ்வளவுதான். 

நம்பொருட்டு, இரவு பகல் பாராமல், ஆய்வுகள் பல செய்து, பலமாதிரியான புத்தகங்களைப் புரட்டி, பல இடங்களுக்கு நேராகச்சென்று, ஊண் உறக்கம் மறந்து, வருடக்கணக்காக நேரத்தை ஒதுக்கி, பல இன்னல்களைச் சந்தித்து, வாழ்வையே பொதுவில் அர்ப்பணிக்கிற இது போன்ற அரிய காரியத்திற்கு நமது பங்களிப்பு என்ன!? ஒண்ணுமே செய்ய வேண்டாம். வாசிப்போம் அவர்களை.   இதோ இங்கே இந்த லிங்க்’ஐ தட்டுங்கள். வாசியுங்கள். மதப்பேயை விரட்டியடிப்போம். மனதார நன்றி சொல்லுவோம். 

முதலில், திரு வேணுகோபால் அவர்கள், முகநூல் வழி பகிர்ந்த இந்த கட்டுரையை வாசியுங்கள், அதன் பின் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கேள்வி பதில் அங்கத்தில் எழுதிய சில பதிவுகளையும் வாசிக்கலாமே..!


பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய வரலாற்றை எழுத ஆரம்பித்த சில பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள், மதப்பூசலும், ரத்தம் பெருக்கெடுத்து ஓடி, சிலுவைப் போர்களால் நிரம்பிய மத்திய கால ஐரோப்பா பற்றிய அதே கருத்துச் சட்டகத்துடன், இந்தியாவிலும் இது போன்ற மதப்போர்கள் நடந்திருக்கும் என்று கற்பனை செய்தார்கள். இது அவர்களது பிரித்தாளும் கொள்கைக்கு வலு சேர்ப்பதாகவும் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, சுதந்திரத்திற்குப் பின் இந்திய வரலாற்றை எழுதிய இடதுசாரி வரலாற்றாசிரியர்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் சில தகவல்களைச் சேர்த்து ஆதாரமற்ற மதப்போர்களை உற்பத்தி செய்ய முற்படுகிறார்கள்.
இன்றைக்கு தமிழில் நவீன இலக்கிய ஏடுகள், சிற்றிதழ்கள், அறிவுஜீவித்தனமான சஞ்சிகைகள் இவற்றில் திரும்பத்திரும்ப திருஞானசம்பந்தர் வரலாற்றில் வரும் சமணர் கழுவேற்றம் பற்றி ஏராளமான ஜோடனைகளுடன் யாராவது ஒருவர் எழுதிக் கொண்டே இருக்கிறார். மதுரைக் கருகில் ஒரு ஊரில் எண்ணாயிரம் சமணர்களின் எலும்புகள் குவிந்துள்ளன, அவர்களை எரித்த சாம்பல் கூட இருக்கிறது என்றெல்லாம் சிறிது கூட அறிவியலுக்கும், பொதுப் புத்திக்கும் ஒவ்வாத வகையில் எழுதுகிறார்கள். எண்ணாயிரம் சமணர்களைக் கொன்று குவித்து, அந்த வன்முறை மூலம் வேத நெறியும், சைவ சமயம் பரவியதாக திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமே அதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.
இதற்கு இன்னொரு உள்நோக்கமும் இருக்கலாம். ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் இவற்றின் வரலாறு முற்றாக வன்முறையும், போர்களும் நிறைந்தது. ஆரம்பகாலத்தில் அதற்கு முன்பிருந்த புராதன மதங்களையும், இயற்கை வழிபாட்டாளர்களையும் கிறிஸ்தவம் வன்முறை மூலமே அழித்தொழித்தது. அதன் பின் ஐரோப்பிய காலனியாதியாக்கமும், கிறிஸ்தவ மிஷன்களும் இணைந்து ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளில் பழங்குடிகளை ஈவிரக்கமின்றிக் கொன்றார்கள். அரேபியப் பாலைவனத்தில் இஸ்லாமிய மதம் தோன்றியவுடன், ரத்தவெறி கொண்ட போர்கள், கொள்ளைகள், கட்டாய மதமாற்றங்கள் ஆகிய வன்முறைச் செயல்கள் மூலமே பெரும்பாலும் பல பகுதிகளில் பரவியது. இந்த மனிதப் படுகொலைகள் தெளிவாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ள. வரலாறு இந்த மதங்கள் மீது ஏற்றிவைத்துள்ள சுமை இது. எனவே, "மதச்சார்பற்ற" வரலாற்றில், இதனை ஈடுசெய்வதற்காக, இந்திய மண்ணிலும் பெரிய மதப்போர்கள் நடந்திருப்பதாக, வேண்டுமென்றே பொய்களையும், தங்கள் காழ்ப்புணர்வுகளையுமே வரலாறு என்ற பெயரில் திரித்துக் கூறுகிறார்கள்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
பாரத நாட்டில் சமய விவாதங்கள் தொன்று தொட்டு நிகழ்ந்து வந்தன. வேத, உபநிஷதங்களிலும் சரி, புராண, இதிகாச இலக்கியங்களிலும் சரி, சமண, பௌத்த சமய நூல்களிலும் சரி, ஏராளமான உரையாடல்களையும், வாத விவாதங்களையும் நாம் பார்க்கிறோம். இன்றைக்கு இந்து மதத்தின் முக்கியமான தத்துவ நூலான விளங்கும் பகவத்கீதை இத்தகைய ஒரு உரையாடல் வடிவிலேயே உள்ளது. இந்திய கலாசாரம் இன்று வரை பல கட்சிகள் ஜன்நாயக முறையில் உரையாடும், ஓயாது தர்க்கம் செய்யும் இயல்பை இத்தகைய சமய விவாதங்கள் மூலமே பெற்றது என்பது தெளிவு. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையான பேராசிரியர் அமர்த்யா சென் Argumentative Indians என்ற தமது நூலில் இதனை மிக விரிவாகவே குறிப்பிடுகிறார். எனவே பண்டைய இந்திய வரலாற்றில் மத மோதல்கள், பூசல்கள் பற்றிய எல்லா சித்திரங்களும், கருத்துத் தளத்தில் நிகழ்ந்தவற்றையே குறிக்கின்றன. இந்த வாதங்கள் முற்றி, சிறிய அளவில் நேரடி வன்முறையாக சிற்சில இடங்களில் நடந்திருக்கலாம். ஆனால் மதப் போர்களும் பெரும் வன்முறையும் நடந்த்தற்கான ஆதாரங்கள் இல்லவே இல்லை.
தமிழக சமணத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் சம்பந்தர் காலத்தில் அது தனது வலுவிழந்த, சீரழிந்த நிலையில் இருந்தது எனலாம். அதனால் தான் சம்பந்தர் அதனை வாதத்தில் எளிதாகவே வென்று விட முடிந்தது. சமணத் துறவிகள் சமூகத்தில் இருந்து மேலும் மேலும் விலகிச் சென்று தனிமையை (seclusion) நாடினர். காலப் போக்கில், இந்தத் தனிமைச் சூழல் பல மாந்திரீக, தாந்திரீக முறைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வழிவகுத்தது. பிற்காலச் சமணத்தில் தீர்த்தங்கரர் வழிபாட்டை விட அதிகமாக பரிவார தேவதைகள் மற்றும் யட்சிகள் வழிபாடு வலியுறுத்தப் பட்டது. இந்த தேவதைகள் மோட்சத்திற்காக அல்ல, லௌகீக வாழ்க்கைப் பலன்களுக்காகவே வணங்கப் பட்டனர். தமிழகத்தின் பல சமணக் கோயில்களில் பத்மாவதி, லலிதாட்சி ஆகிய யட்சிகளின் அழகு கொஞ்சும் சிலைகளை இன்றும் காணலாம். தமிழகத்தில் சமணம் வாழும் இன்றைய வடிவத்திலும், தீபங்குடி (தஞ்சை மாவட்டம்) போன்ற ஊர்களில் வாழும் சமணக் குடும்பங்கள் பெண்தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.
சமணர்களின் செயல்களாகப் பெரியபுராணம் கூறும் செய்திகள் மூலம் இது மேலும் உறுதியாகிறது. சம்பந்தர் பாண்டிநாட்டிற்கு வந்து சைவமடத்தில் தங்கியிருக்கையில், மந்திரத்தால் தீவைக்க முயன்றனர். பின்னர் அது பலிக்காமல் போகவே, உண்மையிலேயே தீமூட்டினர். மன்னனுக்கு வெப்பு நோய் பீடிக்க, பின்னர் மன்னன் நோய்தீர்ப்பவர் வெல்வார் என்ற போட்டிக்கும், பிறகு அனல் வாதம், புனல் வாதம் இவற்றிற்கும் சமணர் அறைகூவுகின்றனர். இதன் மூலம் ஆழ்ந்த சமய, தத்துவ விவாதத் தளத்திலிருந்து சமணம் வெகுவாக நகர்ந்து விட்டது புலனாகிறது. அதனால் தான், சைவம் மிக எளிதாகவே அதனை வென்று விட முடிந்தது.
பெரியபுராணத்தின் படி, வாதத்தில் தோற்றால் தங்களை வேந்தன் கழுவேற்றட்டும் என்று சமணர் தாமாகவே கூறுகின்றனர்.
அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத்
தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில்
வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே என்று சொன்னார்.

அவர்கள் வாதத்தில் தோற்றவுடன், மன்னன் மந்திரியாகிய குலச்சிறையாரைப் பார்த்து, இவர்கள் மடத்திற்குத் தீவைத்த குற்றமும் புரிந்தவராதலின், தண்டிக்கப் படவேண்டியவர்கள், அதனால் இவர்களைக் கழுவில் ஏற்றுக என்று ஆணையிடுகிறான். அரச நீதியில் தலையிடுவது முறையாகாது என்று கருதி சம்பந்தர் திருவருளைச் சிந்தித்து, வாளாவிருந்தார், அதாவது அமைதியாக இருந்தார். குலச்சிறையார் அரசன் இட்ட ஆணையை நிறைவேற்றினார். புராணம் சொல்வது இது தான்.
இதில் "எண்ணாயிரவர்" என்பது எண்ணிக்கையை அல்ல, ஒரு குழுவினரைக் குறிக்கிறது என்றே கொள்வதற்கு ஆய்வு நோக்கில் இடமிருக்கிறது. எண்ணாயிரவர், நாலாயிரவர், மூவாயிரவர் என்று வணிகர் கூட்டஙக்ளுக்குப் பெயர்கள் இன்றளவும் உள்ளன. கேரளத்தில் மூவாயிரவர் என்ற குடும்ப்ப் பெயரில் இன்று நான்கைந்து குடும்பங்களே உள்ள சமூகக் குழுக்கள் இருக்கின்றன. இத்தகைய ஒரு குழுவைச் சேர்ந்த சமண குருமார்கள் வாதில் தோற்றுப் போயிருக்கலாம்.
மேலும் "கழுவேற்றம்" என்பது ஒரு குறியீட்டுச் செயலாகவே இருக்கலாம். வாதம் நடக்கும் ஞான சபையில் ஒரு கழுமரம் இருக்கும். வாத்த்தில் தோற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் முகமாக, தங்கள் தோளில் இருக்கும் உத்தரீயத்தைக் கழற்றி அந்தக் கழுமரத்தில் வீசுவார்கள். அதாவது அவர்களது ஞானமும், பாண்டித்யமும் அங்கே வீழ்ந்து விட்டதாக இதற்குப் பொருள். அந்தக் காலகட்டத்துச் சூழலில், கற்றறிந்த ஒரு பண்டிதனுக்கு உயிர்போவதை விட அவமானகரமான ஒரு செயலாக இது கருதப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கேரளத்தில் ஒரு இருநூறு ஆண்டுகள் முன்பு கூட வாத சபைகளில் உத்தரீயத்தைக் கழற்றி வீசும் இந்த மரபு இருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது.
இன்னும் இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்திற்குரியவை.
ஒன்று, சம்பந்தர் காலத்திற்குப் பின்னும், தமிழகத்தின் பல பகுதிகளில், சமணக் கோயில்களும், மடங்களும் எந்த இடையூறும் இல்லாமல் இன்றுவரை செயல்பட்டு வருகின்றன.
இரண்டு, கழுவேற்றம் பற்றிய இந்தக் குறிப்பு சமணர்களது எந்த நூல்களிலும் இல்லை.

தத்துவமும் அது உருவாக்கும் வாழ்வியலும்:

அக்காலகட்டத்தில் பாரத நாடெங்கும் நடைபெற்ற சமய, தத்துவ விவாதங்களில் பிரபஞ்சம், சிருஷ்டி, ஜீவன், ஆன்மா, முக்தி ஆகிய கருத்தாங்கள் குறித்த விரிவான அலசல்கள் நிகழ்ந்தன. இதில் பிரபஞ்சம் தன்னாலேயே ஒரு வெடிப்பு (explosion) மூலம் உருவாயிற்று என்ற சாங்கியக் கோட்பாட்டை முதல் தளத்தில் வேதாந்த, சமண, பௌத்த தரப்புக்கள் அனைத்துமே ஏற்றுக் கொண்டன. அடுத்த தளத்தில், இந்தப் பருப்பொருள் மயமான, ஜடமான இயற்கையில் உயிர்ச்சக்தி (சைதன்யம்) புகுந்தது எவ்வாறு என்ற கேள்வியும் முன்வைக்கப் பட்ட்து. நம்மாழ்வாரின் வரலாற்றில் "செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்று எழுந்த கேள்வி இந்தத் தத்துவச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டது தான். அங்கு சமண, பௌத்த தரப்புகள் திணறி நின்றன. ஆனால் வேதாந்தம் பிரம்மம், பரம்பொருள் என்கிற அனைத்துமான ஒரு முழுமைத் தத்துவம் (Absolute) மூலம் இதற்கு விடைகாண முற்பட்டது. "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்பதே பதிலாக வைக்கப் பட்டது. "வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்" ஆன மெய்ப்பொருள் தர்க்க அறிவினால் அல்ல, உள்ளுணர்வும், அனுபூதியும் கூடிய நிலையில் உணரப் படுகிறது என்றும் வேதாந்தத் தரப்பு சொன்னது. சைவ சமயம், இதனையே சிவனது பிரபஞ்ச லீலையாக, அருள் விளையாட்டாகக் கண்டது.
சமண, பௌத்த தத்துவங்களின் "சூனியம்" என்ற வெறுமைக் கோட்பாடு மறுப்பும், விரக்தியும் சார்ந்த வாழ்க்கை நெறிகளை நோக்கி இட்டுச் சென்றது. அதற்கு மாற்றாக வேதாந்தமும், சைவ சமயமும் முன்வைத்த "பூரணம்" என்ற கோட்பாடு உயர்தத்துவ அளவில் நிறைவானதாகவும், அதே சமயம் வாழ்க்கையின் வர்ணஜாலங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதாகவும் இருந்து. "உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்" "அலகில் சோதியன்" ஆன பரம்பொருளை "நிலவுலாவிய நீர்மலி வேணியன்" ஆகவும் "அம்பலத்து ஆடுவான்" ஆகவும் காணும் சமய நெறியில், உயர்தத்துவமும், உணர்ச்சிமயமான பக்தியும், கவித்துவமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தன.

"குன்றெலாம் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருவையாறே"

என்பது சம்பந்தர் தேவாரம். இப்படி ஒவ்வொரு திருத்தலத்திலும் நதிகளையும், மலைகளையும், வயல்களையும், சோலைகளையும் உவகை பொங்க அவர் வர்ணித்துச் செல்வதன் காரணம் இவை அனைத்தும் அந்த பூரணத்தின் வெளிப்படுகளாகவே அவருக்குத் தோன்றுகின்றன.

"மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் செல்கதிக்கு யாதுமோர் குறைவிலை"

என்று வாழ்க்கையை இம்மை, மறுமை இரண்டிலும் சாரமுள்ளதாக சம்பந்தரின் பாடல் காண்கிறது. இசை, நடனம், சிற்பம் ஆகிய கலைகள், கோயில்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், களியாட்டங்கள் ஆகியவற்றால் நிரம்பிய சைவ சமயம் சமூகத்தில் மிகப் பெரிய சக்தியாக ஆனதில் வியப்பே இல்லை. காலப் போக்கில் இதுவே சமணம் தமிழகத்தில் தேய்ந்து மறையவும் காரணமாயிற்று.

எனவேசமணத்தின் மீதான சைவத்தின் வெற்றி தத்துவச் செழுமையாலும், அது உருவாக்கிய வாழ்வியல் நெறிகளின் முழுமையாலும் தான் நிகழ்ந்ததே அன்றி வன்முறையாலோ, ஆக்கிரமிப்பாலோ நிகழ்ந்தது அல்ல என்று உறுதியாகக் கூறலாம்.

இன்றைக்கு சமண சமயத்தவர்களுக்கிடையிலும், சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்த இந்துக்களுடையிலும் எந்தவிதமான மதப் பூசலோ, மோதலோ இல்லை. இந்தியா முழுவதும் சமணர்கள் விநாயகர், லட்சுமி, திருமால் முதலிய தெய்வ வடிவங்களை தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களோடு இணைத்து வைத்துப் பூசிப்பதையும், இந்துக்கள் சமணக்கோயில்களுக்குச் செல்வதையும் சகஜமாகப் பார்க்கிறோம். அகிம்சை, தர்மம், நீதிநெறிகள் ஆகிய துறைகளிலும் இரு மதங்கள் கொண்டும், கொடுத்தும், ஊடியும் வளர்ந்து செழித்திருக்கின்றன. எனவே, இந்தக் கட்டுரையின் நோக்கம் பழைய சமய, வரலாற்றுப் பூசல்களை மீட்சி செய்வதல்ல. மாறாக அவற்றைக் குறுக்கல்வாத நோக்குடனும், அரைகுறை தகவல்களுடனும் சித்தரித்து, அவற்றிலுருந்து ஒரு தீய வெறுப்பியல் களத்தை உருவாக்கும் போக்கினைச் சுட்டிக் காட்டி, அதனை விமர்சிப்பதே ஆகும்.

தொகுப்பு/பகிர்வு: வேணு. நன்றி

http://www.jeyamohan.in/?p=27254

நன்றி எழுத்தாளர் ஜெயமோகன்