செவ்வாய், ஜூன் 05, 2012

சேவை செய்வதில் ஆனந்தம்

வயதானவர்களைப் பாதுகாக்கின்ற அரிய பணியைச் செய்பவரா நீங்கள்.!
அப்படியென்றால் இங்கே நான் குறிப்பிடுவது, உங்களுக்குச் சரியாகப் படுகிறதா பாருங்கள்.

1. அவர்கள், நன்றாக நடமாடிக்கொண்டிருக்கும் போது சரியாகக்கூட குளிக்க மாட்டார்கள்கள். ஆனால், நாம் அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது, நல்லா தேய்த்துக்குளிப்பாட்டு, முதுகு தேய், அங்கே தேய், இங்கே தேய் என்று கட்டளை பிறப்பிப்பார்கள்.

2. நன்றாக இருக்கும் போது தலை வாரிக்கொள்ள மாட்டார்கள். நேரமிருக்காது. சோம்பேறித்தனம். தள்ளாடி தளர்ந்து உட்கார்ந்திருக்கும் போது, எண்ணெய் வைச்சு விடு, வகிடு எடு, அள்ளி முடி, கொண்டை போடு, பவுடர் போடு.. என்பார்கள்.

3. லோஷன் என்றால் என்ன வென்று கூட அறிந்திராத அவர்கள். நாம் போடுவதைப்பார்த்து விட்டால், எனக்கு கொஞ்சம் தடவி விடு, கால்கள் கைகள் காய்கின்றன என்பார்கள். ஒரு நாள் போட்டு விட்டால், தினமும் நமக்கு ஞாபகப்படுத்தி போடச்சொல்வார்கள். அப்படியே ஜாலியாக உட்கார்ந்திருப்பார்கள் நாம் போட்டு விடணும்.

4. கை கால்களின் நகங்களை ஆயிரத்தி தொள்ளாயிரத்தின் ஆரம்பத்தில் வெட்டியதாக இருக்கும். இப்போது, நகங்கள் கருத்து சிறுத்து காணப்படும், அதை நம்மிடம் காண்பித்து அவைகளை வெட்டிச் சுத்தம் செய்யச் சொல்வார்கள்.

5. அறவே நடக்க முடியாமல் என்றில்லை, நடக்க முடியும், இருப்பினும் உட்கார்ந்த இடத்திலேயே எல்லாமும் கொண்டு வந்து வைக்கவேண்டுமென்று சதா அழைத்த வண்ணமாக இருப்பார்கள். உதாரணத்திற்கு குடிக்க தண்ணீர், துடைக்க துண்டு, சளி வருது, எச்சில் வருது, கொசு கடிக்கிறது, எறும்பு கடிக்கிறது.. என.! சொரிந்து விடுவதற்குக்கூட நம்மை அழைப்பார்கள்.

6. வாழ்நாட்களில், வெந்ததைத் தின்று விதியே என்றிருந்தவர்களுக்கு, இப்போது, சாப்பிடவுடன், பால் வேண்டும், பழம் வேண்டும்.. சூப் வேண்டும்.. எல்லாவற்றையும் கொண்டு வந்து வைக்கவேண்டும் பிறகு எடுத்துச்சென்று சுத்தம் செய்யவேண்டும்.

7. சமைக்கின்ற கஞ்சியோ, சோறோ, குழம்போ, கூட்டோ பிடிக்கவில்லை என்றால், உடனே கடைகளில் எதையாவது வாங்கி வர வேண்டும். இல்லையென்றால் முகம் வாடிவிடும். பி.கு.. நன்றாக இருந்த போது கடை உணவுகளை சுத்தமாக நிராகரித்தவர்கள் இவர்கள்.

8. நேற்று சமைத்ததை, இன்று பரிமாறினால் முகம் நீளமாகும். சுடச்சுட ஒரு பிடி அரிசி கஞ்சி வைத்துக்கொடுத்தால் குறந்தா போவாய்ன்னு.. எங்கோ ஒரு மூலையியிலிருந்து தகவல் வரும். போன் எல்லாம் நல்லா குசுகுசு வென பேசுவார்கள். சொந்தமாக கைப்பேசி எல்லாம் வைத்துக்கொள்வார்கள். சொந்தமாக சமைத்துச் சாப்பிடும் போது, நான்கு அல்லது ஐந்து நாள் உணவுகளை (கெட்டுப்போனதாக இருந்தாலும்) பசிக்கு, ருசி பார்க்காமல் சாப்பிட்டவர்கள்தான் இவர்கள்.

9. உட்கார்ந்த இடத்திலேயே மலம் சிறுநீர்கழிப்பார்கள். அப்படி ஒன்றும் நிதானமில்லாமல் இல்லையே, சம்பவங்களை தேதி நாள் வருடம் போன்றவற்றோடு, அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அன்று நீ அப்படிச் செய்தாய்! இன்று நீ இப்படி செய்தாய்! என்று இடித்துக்கூறி பேச முடிகிறதே. ஆனால் மலம் மூத்திரம் வருவது மட்டும் தெரியாதாம். சரி, போயாச்சு, கழுவலாம் என்றால் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள். கொஞ்சம் அதட்டினால், அழுவார்கள்.

10. வீட்டிற்கு யாராவது வந்து, எதையாவது பேசிக்கொண்டிருந்தால், மெனகட்டு கட்டிலில் இருந்து எழுந்து வந்து சொந்தமாக தள்ளாடித் தள்ளாடி ஹாலில்அமர்ந்துக்கொள்வார்கள், ஆனால் அங்கிருந்து, சாப்பாட்டு மேஜைக்கு அழைந்தால், யாராவது கை கொடுத்து ஊன்றுகோலாக நின்று அழைத்துச்செல்ல வேண்டும். இல்லையேல், முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.

11. உணவை நாம் ஊட்டி விடவேண்டும், ஆளைக்கண்டு ஏய்ப்பார்கள். நாம் ஊட்டி விட்டால், அப்படியே வாயில் வைத்துக்கொண்டு, குமட்டி குமட்டி வாந்தி எடுப்பார்கள். அவர்கள் சொந்தமாகச் சாப்பிடும் காலத்தில் நடந்துக்கொண்டும் ஓடிக்கொண்டும் சாப்பிட்டவர்கள், இப்போது, நம் பொறுமையைச் சோதிக்கின்ற மாதிரி உட்கார்ந்திருப்பார்கள்.

12. குழந்தகளுக்கு போடுகின்ற பெம்பஸ் மாதிரி முதியவர்களுக்கும் உண்டு. அதைப்போட்டுப் பழகிவிட்டால், அவர்கள் அதற்கு அடிக்ட் ஆகிவிடுவார்கள். சோம்பேறித்தனம் வந்து விடும். ஏன்னா உட்கார்ந்த இடத்திலேயே எல்லாமும்.. சுலபமான வேலையாச்சே. அந்த பெம்பஸ் போடுவது பெரிய பாடு. முதியவர்கள் சரியாக ஒத்துழைக்காவிட்டால், அதைப்போகின்ற நமக்கு இடுப்பு கழன்று விடும். கிட்டத்தட்ட ஒருவருடமாகப் போட்டுக் கொண்டிருந்தாலும், சிலர் சரியாக ஒத்துழைப்பு நல்க மாட்டார்கள். நாமே புரட்டிப்போடனும், நாமே நகர்த்தனும்.. ஆத்திரமாக வரும். ஆனால் அதை அகற்றும் போது மட்டும் பட்டென்று கழற்றி எங்கேயாவது கடாசி விடுவார்கள்.

13. கடைசியாக, எவ்வளவு நல்லபடி சேவை செய்தாலும், திருப்தியடைவே மாட்டார்கள். எதாவது குறையிருக்கும் சொல்வதற்கு. உள்ளபடியே சேவை செய்பவர்கள் போற்றத்தக்கவர்கள். ஏற்றுக்கொள்கிறேன், எல்லோராலும் முடியாது.

உங்களின் மனைவியோ, சகோதரிகளோ அல்லது அம்மாவோ இது போன்ற சேவைகளில் ஈடுபட்டிருந்தால், அவர்களின் நிலைமையைப் புரிந்து நடந்துக்கொள்ளுங்கள். முடிந்தால், ஒரு பணிப்பெண்ணை அவர்களுக்காகவே நியமிக்கலாம். தொட்டதிற்கெல்லாம் அழைப்பார்கள். இல்லத்தரசிகளுக்கு நிச்சயம் இது ஒரு பாரமாகவே இருக்கும். குடும்பத்திற்கும், அவர்களின் சொந்த விருப்பங்களுக்கும் நேரமில்லாமல் செய்துவிடும் இந்த சேவை. இதனால் குடும்பங்களில் விரிசல் வரலாம். பிரச்சனைகள் எழலாம்.

சகித்துக்கொண்டும், மனத்திருப்தியோடும் செய்பவர்கள் தாராளமாக செய்யட்டும்... நீங்கள் வணங்கப் படவேண்டியவர்கள். இறைவனின் முழு ஆசி உங்களுக்கே. வாழ்க வளமுடன்.

நான் வேண்டுவதெல்லாம், அந்த நிலை வருவதற்குள் மரணம் என்னைத்தழுவ வேண்டும்.