ஞாயிறு, டிசம்பர் 08, 2013

படைப்புலகில் சோதனை

இலக்கியம் – போதிப்பது சித்தாந்தம் சொல்வது அல்ல. அது வாசிக்கப்படுகிற தனிமனிதனை சிலநொடி சிந்திக்கவைப்பது.

ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற வறைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்களால் ஒரு போதும் சிறந்த படைப்புகளைக் கொடுக்கமுடியாது.

அதற்காக http://vallinam.com.my/version2/?p=789 தயாஜி எழுதியது சிறப்பான சிறுகதை என்று நான் சொல்லமாட்டேன். அம்மாதிரியான கருவைத்தொட்டு எழுதுவதற்கு `தில்’ வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பித்த விதம் கவர்கிறது,சொல்லப்பட்ட அவலம் நெருடுகிறது, அதனால்தான் வல்லினத்தில் பிரசுரமாகியிருந்த அச்சிறுகதையை `அருமை வாழ்த்துகள்’ என எனது முதல் பின்னூட்டத்தைப் பதிவு செய்தேன்.

இருந்தபோதிலும் படைப்பு மண்டையைக் குடையவே ஆரம்பித்தது.நவீன் சொல்லியிருக்கின்ற கருத்துக்களை அனைத்தும் அருமை. அப்படிப்பார்க்கையில் ஒரு படைப்பாளியாகப்பட்டவன், நவீன் சொல்லியிருக்கின்ற அனைத்து இலக்கியங்களையும் வாசித்தாலேயொழிய தெரிந்திருந்தாலேயொழிய இக்கருத்தையொட்டிய செம்மையான படைப்பினை சீர்த்தூக்கிப் பார்த்து வழங்க இயலாது என்று சொன்னால் அது மிகையல்ல.

அப்படி எந்த ஒரு பரந்த வாசிப்பு அனுபவமும் இல்லாமல் இதுபோன்றதொரு கருவைத்தொட்டு படைப்பினைப் படைக்கப்படுகிறபோது அது வெறும் வக்கிர சிந்தனையின் வெளிப்பாடாகவே பரிணமிக்குமே தவிர நுண்ணறிவு சமாச்சாரங்கள் அங்கே ஒருபோதும் இருக்காது. இக்கதையில் வரும் சில இடங்களின் சம்பவங்களில் எனது வாசிப்பு அனுபவமும் அப்படித்தான் இருந்தது.

ஒரு வாசகன் எந்நிலையில் இப்படைப்பினை ஏற்பான், எப்படி இப்படைப்பாகப்பட்டது மனித அவலங்களை அகற்றி வாசகனின் அக இருளைப்போக்கும், என்கிற ரீதியில் மிக மிகத்தெளிவாக படைப்பினை நகர்த்திச்செல்வது ஒரு படைப்பாளியின் கடமை. அதாவது, படைப்பு போதனையாகவும் இல்லாமல், அனுபவித்ததை அக்குஅக்காக மனதில் அல்லாடும் ஆசைகளோடும் இச்சைகளோடும் சொல்வது போலவும் இல்லாமல் கவனமாகப் பார்த்து நகர்த்துவது படைப்பாளியின் புத்திகூர்மையில் இருக்கின்றது.

எல்லா எழுத்தாளர்களாலும்.. அதாவது எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பேர்போடுபவர்களாலும் இதுபோன்ற கருவைத்தொட்டு அவ்வளவு எளிதாக எழுதிவிடமுடியாது. அதற்கென்று சில கோட்பாடுகள் தெரிந்தவர்கள், கொள்கைப் பிடிப்பாளர்களால் மட்டுமே எழுதி அவலங்களை வெளியே சொல்ல முடியும். அதில் ரசனையும் ஊடாட வேண்டும்…

ஒரு படைப்பாளி இக்கருவை கையில் எடுக்கின்றபோது, படைப்பாளியின் பார்வையாகப் பட்டது, முதிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அந்த முதிர்ச்சி தயாஜியின் படைப்பில் இல்லை. முதிர்ச்சி என்றால்? என்று கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம்.

இலக்கியம் படைப்பது சுலபமானதல்ல என்கிற சிந்தனை நம்மைக் குடைந்துகொண்டே இருப்பது அவசியம்.

பூ என்னைப் பார்த்து சிரித்தது.

காலையிலிருந்து ஒரு விஷயம் என்னை நெருடிக்கொண்டே இருந்தது.

கீரை ஆய்கிறேன். மனம் லயிக்கவில்லை. மீன்களைக் கழுவி சுத்தம் செய்தேன் மனம் லய்க்கவில்லை. என்ன என்று சரியாகப் புரிபடவில்லை.

வாஷிங் மிஷின் அருகில் கொஞ்ச நேரம் நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன். உள்ளே வந்தேன், அடுக்கி வைத்துள்ள மங்கு பாத்திரங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை முகர்ந்துபார்த்தேன். அதில் ஒரே ஒரு மங்கு சரியாகக் கழுவாமல் இருந்ததால் ஒருவித முட்டை  வாடை வீசியது. அதை மீண்டும் எடுத்து அந்த நாற்றம் போகும் வரை கழுவினேன். ஓ இதுதான் அந்த நெருடல் போலிருக்கு என்று மீண்டும் வேலைகளில் மூழ்க எத்தனித்தேன்.

நெருடல் தொடர்ந்தது. ஒருவேளை உப்பு ஜாடியில் உப்பு முடிந்துவிட்டதால்தான் இந்த நெருடலோ, என ஏற்கனவே அலமாரியில்  வாங்கி வைத்திருந்த உப்பு பொட்டலத்தைப்பிரித்து ஜாடியை நிரப்பினேன்.

வேலைகள் தொடர்ந்தன. மீண்டும் என்னமோ நினைவுக்கு வர, குளிர்சாதன பெட்டியின் அருகில் சென்று அதைக்கொஞ்ச நேரம் முறைத்துப்பார்த்தேன். அங்கே வைக்கப்பட்டிருந்த காய்கறிகளின் பெட்டகத்தைச் சுத்தம் செய்தேன். வாங்கிய பச்சை மிளகாய்கள் காம்பு எடுக்காமல் அப்படியே வைக்கப்பட்டதால் காம்பு உள்ள சில மிளகாய்கள் அழுகி இருந்தது.  காய்கறிகள் அனைத்தையும் உள்ளிருந்து வெளியே எடுத்து மீண்டும் தூய்மைப் படுத்தி புதிய காகிதம் மாற்றி அவைகளை அடுக்கி வைத்தேன்.

சமையல் வேலைகள் தொடர்ந்தன. நெருடலும் தொடர்ந்தது. ச்சே என்ன இது..? தொலைப்பேசியை எடுத்தேன், தங்கையை அழைத்தேன், ``இன்னிக்கு மாயாஸ் போவியா, அரிசி வாங்கணும், போகும்போது சொல்லு நானும் வரேன்.”

நெருடலைப் பொருட்படுத்தாமல் சமையலில் மூழ்கினேன். வசிங் மிஷின் ஒரு பக்கம் `லொட..லொட..லொட’ என்கிற சத்தத்தைக் கொடுத்துக்கொண்டு தனது வேலையைச் செய்து கொண்டிருந்தது.

லப் டாப்’ஐ முடக்கி நாதஸ்வர இசையைத் தட்டிவிட்டேன். அவ்விசை கோவிலில் திருமண மண்டபத்தில் இருப்பதைப்போன்றதொரு சூழலைக்கொடுத்தது. நெருடல் விலகியிருந்தது. கொஞ்ச நேரம்தான் மீண்டும் மீண்டும் என்னமோ என்னை நெருட ஆரம்பித்தது.

நேரமாச்சு, சமையல் முடிந்ததா? ஒரு குரல் வந்தது. தோ ஆய்கிட்டே இருக்கு, என்று பதில் கொடுத்துவிட்டு சமையலை முடிக்கின்ற வேலைகளில் மும்முறமானேன்.

சமையல் முடியவும் மிஷினில் போட்ட துணிமணிகள் துவைத்துமுடிக்கவும் சரியாக இருந்தது. துணிகளை உலரவைக்க எடுத்தேன். நெருடல் குடையல் தொடர்ந்தது.

என்ன இன்று ஒரு மாதிரியாகவே இருக்கின்றதே. என்ன பிரச்சனை.? எல்லா வேலைகளையும் தூய்மையாக முடித்துவிட்டேனே.!? என்று மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டே துணிகளை உலர வைத்தேன். உலரவைத்த துணி ட்ரொலியை இழுத்து வெளியே வெயிலில் வைக்கின்ற தருணத்தில்போது எனது நெருடலுக்கு பதில் கிடைத்தது.

எனது ரோஜா செடி இருக்கின்ற இடத்தின் அருகில் ஒரு பூனை மலம் போயிருந்தது. அந்த மலம் இருக்கின்ற இடத்திற்கு நேராக எனது ரோஜா செடியின் அழகிய பூ ஒன்று விரிந்து வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்தது.

நேற்று மாலைமுடிந்து இரவு சந்திக்கின்ற வேளையில் எனது காரை எடுக்கின்றபோது அக்காட்சியினைப் பார்த்தேன். இருளாகிவிட்டது, நாளைக் காலை விடிந்தவுடன் இதை நான் சுத்தப்படுத்தவேண்டும் என்கிற சிந்தனையில் உறங்கச்சென்றதை மறந்தேபோனேன்..

யோசிக்க அவகாசம் கொடுக்காமல் உடனே அதைத்தூய்மை படுத்தி, அவ்விடத்தைக் கழுவி சுத்தம் செய்தபின்புதான் நெருடல் குடைச்சல் என்னை விட்டு அகன்றது.

அசிங்கத்தை நினைக்கவே வேண்டாம். அது இருந்தாலே போதும்... நெருடல் வரும்.

பூ என்னைப் பார்த்து சிரித்தது.