திங்கள், ஜூலை 22, 2013

மரியான்

மரியான் படம் பார்த்துவிட்டீர்களா? நான் பார்த்து விட்டேன். பாருங்க நன்றாகத்தான் இருக்கின்றது என்று சொல்லத்தான் ஆசை. இருப்பினும் அப்படத்தின் கரு அவ்வளவு அழுத்தமாக இல்லாததன் காரணத்தால் படம் பாருங்கள் என்று சொல்வதற்கு மனம்வரவில்லை.

கதை  : காதலியின் (பார்வதி) அப்பா பட்ட கடனை அடைப்பதற்கு, மகிழ்வாக மிக உல்லாசமாக  சுற்றித்திரிந்த பழக்கப்பட்ட மீன்பிடி தொழிலையும் அம்மாவையும் நண்பர்களையும் விட்டு சுடான் செல்கிறார் தனுஷ். அங்கே தீவிரவாதிகளால் பிணையாகப் பிடிக்கப்பட்டு பணம்கேட்டு துன்புறுத்தப்படுகிறார். காதலியை நினைத்து நினைத்து அந்த இக்கட்டான சூழலும் மகிழ்வாகவே நகர்கிறது மரியானுக்கு. காதலியின் பிரார்த்தனையின் பேரில் போராடி வருவதைப்போல் படம் முடிவடைகிறது.

மீன்பிடி கிராமத்தில் இருக்குவரை படம் அவ்வளவு அழகாக நகர்கிறது. சுடான் செல்கிறார், படம் எப்போது முடியுமென்று  நாட்காலியைத்  தேய்க்க ஆரம்பித்துவிடுகிறோம். சுருங்கக்கூறின் இடைவேளை வரை சூப்பர். அதன் பிறகு அவ்வளவாகக் கவரவில்லை.  

கதையின் கரு மனதில் நிற்கவில்லை. காதலிக்காகவே இவ்வளவும் என்று நினைக்கின்ற போது படம் ஒட்டமாட்டேன் என்கிறது.

தனுஷ் மற்றும் பார்வதி - படத்தின் நாயகர்கள்.

தனுஷ் மிகவும் மெலிந்து காணப்படும் தோற்றத்தில் வருகிறார். நம்ம வீட்டுப்பையன் ஒழுங்காகச் சாப்பிடாமல் உருகுலைந்து போவானே, அதுபோலவே இருந்தது தனுஷின் தோற்றம். தாடி மட்டும் இல்லையென்றால், முகத்தோடு ஒட்டிய சதை வயதான  தோற்றதைக் கொடுத்திருக்கும். இருப்பினும் மிக நெருக்கத்தில் முகத்தைக்காட்டுகிற காட்சிகள் வருகின்றபோது பொலிவற்ற முகம் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை. பாத்திரத்தோடு ஒன்றிவிட்டார் என்றும் சொல்லலாம், தோற்றத்திலும்.

நடிப்பு வழக்கமான நடிப்புதான். பரிதாபமாகவே இருந்தார். காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது `i am loving you' என்று சொன்ன ஆடுகளம் காட்சிபோல் மனதில் எதுவும் நிற்கவில்லை.
சமைத்து எடுத்துவா, என்று அப்புகுட்டனிடம் தூது சொல்லி காதலியையும், தாயையும் வரவழைத்து பார்வதியை (பனி) ஓட்டுவது நல்ல தமாஷ். இருப்பினும் பட்டென்று எல்லோரையும் கைநீட்டி அறையும்படி இருக்கின்ற காட்சிகள் இன்னமும் கவுண்டமணி செந்தில் பாணியிலான நகைச்சுவைக் காட்சிகளையே கண்முன் நிறுத்துகிறது.

சில காட்சிகளில் பார்வதி நிஜமாலுமே அடிவாங்குவதைபோல் அமைந்திருக்கின்றது. சினிமாவில் மிருகவதை தடை செய்யப்பட்டுவிட்டது ஆனால் இன்னமும் வன்புணர்வின் போது பெண்களின் புடவை ரவுக்கைகளை கிழித்துக் கீழே தள்ளி அட்டூழியங்கள் நிகழ்வதைப்போல் காட்டுகிற காட்சிகள் இன்னமும் நிறுத்தப்படாமலேயே இருக்கின்றது சினிமாவில்.

மிருகங்களைப் பாதுகாப்பதற்குக் கூட இயக்கங்கள் இருக்கின்றன. நடிப்புலகில் இருக்கின்ற பெண்களைப் பாதுகாக்க எதாவது இயக்கங்கள் இருக்கின்றதா தெரியவில்லை. காதலை அல்லது அன்பைப் பொழிய நினைக்கும் பெண்களை காதலன் அல்லது அப்பா அண்ணன் போன்ற நடிகர்கள், காட்சிகள் தத்ரூபமாக அமைய வேண்டுமென்பதற்காக நடிகைகளை நிஜமாகவே அடிக்கின்றார்களாம்; கேள்விப்பட்ட தகவல். அதுபோலவே மரியான் படத்தில்  ஒரு காட்சி. தனுஷ் பார்வதியின் கன்னத்தில் அறைவார், அந்த அறை நம் கன்னத்தில் விழுவதைப்போல் இருந்தது. காதல் இல்லை, அன்பும் இல்லை பின் எதற்கு அடிக்கின்றார்கள்.? அடிப்பதைப்போல் காட்டிவிட்டு பிறகு உருகி அன்பு, காதல், நேசம், பாசம் எல்லாமும் துளிர் விடுவதைப்போல் காட்டி எடுக்கின்ற காட்சிகளில் மட்டும் இன்னமும் அதே பழைய பாணி, நம் தமிழ் சினிமாவில் மட்டுமே.

பார்வதி - நல்ல நடிப்பை வழங்கியிருந்தார். முக பாவனைகளில் நவரசங்களை காட்டுவதில் கைத்தேர்ந்தவராகவே திகழ்கின்றார் பார்வதி. பூ பட நாயகி. ச்சூ ச்சூ மாரி என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள்.

யார் இந்த பார்வதி? எங்கேயோ பார்த்ததைப்போலவே இருக்கின்றாரே.! என்று யோசித்தபோது மகள்தான் சொன்னார், பூ பட நாயகி என்று. நீண்ட இடைவெளிக்கும் பிறகு தமிழ் படத்தில் தோன்றுகிறார் போலும். நவ்யா நாயரின் முகபாவனைகளை அப்படியே பிரதிபலிக்கின்றார்..!? அதட்டிப் பேசுகிற போதும், கண்களை உருட்டுகிற போதும், மிரளும்போதும், கொஞ்சு தமிழ் பேசுகின்ற போதும், உடல்வாகு என எல்லாவற்றிலும், கிட்டத்தட்ட தமிழ் சினிமா உலகம் மறந்துபோன நவ்யா நாயர்தான் கண்முன் தோன்றி மறைகிறார்.

தனுஷின் அம்மாவாக கமலா காமேஷின் இடத்தைப்பிடிக்க வந்துவிட்டார் அவரின் மகள் உமா. எதார்த்தமான நடிப்பு. நான் மிகவும் ரசித்த கதாப்பாத்திரம் என்றால் அது உமாரியாஸ் தான். அடுத்த அம்மா வேடத்திற்கு ஆள் தாயார் என்று நினைக்கிறேன். அதற்காக ரஜினி கமலுக்கு அம்மாவாக நடிப்பதென்பது -  பண்டரிபாய் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு அம்மா ஆனதைப்போல்தான் இருக்கும். இளம் நடிக நடிகைகளுக்கு அம்மா. ஒகே.

மற்ற பாத்திரங்கள் அனைத்தும் முதல் பாதி படத்திற்கு பொருந்தியே விடுகிறார்கள். இருப்பினும், சொல்லுங்கண்ணே சொல்லுங்க அண்ணாச்சி, அப்புக்குட்டி போன்றோர்களின் பாத்திரம் மனதில் ஓட்டாத அளவிற்கு தனுஷின் ராஜ்ஜியம். காட்சிக்குக் காட்சி தனுஷ் மட்டுமே தெரிகிறார். அவர் மட்டுமே பேசுகிறார் நடிக்கிறார். பிற்பகுதியில் வரும் சுடான் நடிகர்களாவது நடித்திருப்பது தெரிகிறது. நம் நடிகர்கள் கடலில் உள்ள மீன்களோடு மீன்களாகக் காட்டப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றனர்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இசை மற்றும் பாடல்கள். எல்லாப்பாடல்களும் அருமை. படம் பார்த்துவிட்டு காரில் வரும்போது, அனைவரும் ஆளுக்கொரு பாடலை முணுமுணுத்தபடியே திரும்பினோம். சுடான் பாடலும் காட்டுவாசிகள் பாடுவதைப்போல் மனதில் நிழலாடியபடியே இருந்தது.

மற்றுமொரு நிறைவைத்தந்த அம்சம் அந்த மீன்பிடி கிராமிய சூழல். அப்படியே அதனுள்ளேயே நுழைந்துவிட்டதைப்போல் இருந்தது. கிராமிய வீடுகள், மழைக்காட்சிகள், அம்மியில் மசாலா அரைப்பது, விறகடுப்பு பயன்பாடு, மீன் குழம்பு வைப்பது, மீன் பொரியல் செய்வது, குழம்பு ஊற்றி சோறுசாப்பிடுவது, தூக்குப்பானையில் சாப்பாடு தூக்கிச்செல்வது. நடிகநடிகர்கள் எதையாவது வாயில் போட்டு தின்றுக்கொண்டே இருப்பது- அப்படியே நிதர்சன சூழலாகவே படத்தில் அமைந்திருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் கணவர், நாளை மீன் குழம்பு வைக்கிறாயா? என்று கேட்கும் அளவிற்கு வாயில் எச்சில் ஊறவைக்கின்ற குழம்புக் காட்சிகள் அதிகம் படத்தில். ஏழைதான், கஷ்டப்படுபவர்கள்தான் இருப்பினும் உணவிற்கும் சாப்பாட்டிற்கும் பஞசமில்லை என்கிற ரீதியில் மனநிறைவைத்தருகிற முதல் பாதிப்படக் காட்சிகள்.

அழகாகக் கொண்டு சென்றார்கள் இருந்தபோதிலும் எப்படி முடிக்கின்றதென்று தெரியாத நிலையிலேயே படத்தைக் குழப்பியிருக்கின்றனர் இறுதியில்.

வில்லன் சொல்வார். மரியானுக்கு எதாவது பிரச்சனை என்றால் என்னிடம் சொல். நான் உதவுகிறேன். நாங்கள் அடித்துக்கொள்வோம் ஆனால் அவன் மேல் வேறு யாராவது கை வைப்பதை நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன், என்பார். அந்த வசனத்தின் போது அவரின் நயவஞ்சக குணம்  கொஞ்சங்கூடத் தென்படவில்லை. ஆக, அங்கே அந்த வில்லன் மாறி நல்லவனாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்.! அதன் பிறகு மரியான் வருவான் என்று கதாநாயகி துள்ளிக்குதிக்கின்ற போது, அவன் மீண்டும் வில்லனாகி அவளை பலாத்காரம் செய்வதைப்போல் எடுத்திருப்பது - காட்சிக்கு சரியாக பொருந்தவில்லை. அக்காட்சி மிகவும் செயற்கையாகவே இருந்தது.

காடுகளே இல்லாத பாலைவனத்தில் சிறுத்தைகள் எப்படி வந்ததன?  ‘தனுஷின் மனபிராந்தி’ம்மா, குருட்டுக் கேள்வி எல்லாம் கேட்காதிங்க’ என்றார் மகன். அதுசரி.

பாதிவழியிலேயே சுடான் திவிரவாதிகளில் ஒருவரை ஏன் சக தீவிரவாதி சுடுகிறான். அவன் என்ன சொன்னான்? இவனுக்குக்கோபம் வந்து சுடுகிறான்.?

எல்லோரையும் சர்வசாதாரணமாகச் சுட்டுவீழ்த்தும் தீவிரவாதிகள் தனுஷை மட்டும் ஏன் சுடவில்லை.?

இறுதிக்கட்டத்தில் எல்லாம் முடிந்து நாடு திரும்புகிற சூழலில், வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு விடுக்கும் தனுஷின் முகத்தில் ஏன் அவ்வளவு பெரிய கேள்விக்குறி? காதலிக்கு எதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதைப்போல் முடிக்கவிருந்த படத்தை, எதோ ஒரு காரணம் கருதி,  கதாநாயகர்களை உயிரோடு விட்டிருப்பதை நன்கு உணரமுடிகிறது. நன்றாக `ப்ளான்’ பண்ணி படத்தை முடிக்கவில்லை. கடின உழைப்பு அங்கே தென்படவில்லை.

இறுதியாக -  படத்தில் வருகின்ற ஒரு வசனம்- `சாதிக்க நினைக்கின்ற ஆண்களுக்கு பொம்பள வாடை இருந்துக்கிட்டே இருக்கவேண்டும்.’ அப்படியா? தெரியாதுப்பா எனக்கு...!

மரியான் படம் - பார்க்கலாம் ஒரு முறை.

மார்க்.. 32/50  :P