வெள்ளி, மார்ச் 29, 2013

கண்ணீர் விட்டேன்.

சென்ற செவ்வாய்க்கிழமை சித்தப்பா இறந்துவிட்டார். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று யாரும் சொல்லவேண்டாம். அனுதாபம்தான் இருப்பினும் கொடுத்துவைத்தவர், வாழ்வை அனுபவித்து, குழந்தைகளையெல்லாம் திருமணம் செய்துவைத்து விட்டு, அப்பா இல்லாத எங்களுக்கும், எல்லா நல்லது கெட்டதிலும் தூணாக துணையாக நின்று, குடும்பங்களின் ஒற்றுமையில் முழுபங்கேற்று, பொறுப்புள்ள ஒரு சித்தப்பாவாகவே (அப்பா - அப்படித்தான் அழைப்போம்)  திகழ்ந்தவர் அப்பா.

சந்தோசமாக வாழ்ந்து, நடமாடிக்கொண்டிருக்கும்போதே நோய் கொண்டுவிட்டது. தம் வலிக்கு தாமே கார் ஓட்டிச் சென்று மருத்துவமனையை அடைந்து, மருத்துவமனை வாசலிலேயே மயக்கமுற்று மரணமடைந்துள்ளார். 

நோயிற்கு நன்றி.! ஏன் நோயிற்கு நன்றி..!? 

சிலர்  படுத்தப்படுக்கையாகி நரகவேதனையில், மலம் மூத்திரம் போவதுகூட தெரியாமல், ருசி பசி அறியாமல், இரவு எது? பகல் எது என்பது கூட தெரியாமல், பலருக்குப் பாரமாகி இழுத்துக்கோ பறிச்சிக்கோ என்றிருப்பார்கள். வாழ்வதற்காக கோவில் சென்ற காலங்கடந்து, சாவிற்காக வேண்டிக்கொள்கிற  இக்கட்டான நிலைக்குக்கொண்டு வந்து விடுவார்கள்.

என் தோழி ஒருவளிடம், என் மாமி படும் நரகவேதனைகளைப் பற்றிப் பகிந்துகொள்வேன். (மாமிக்கு எண்பத்தைந்து வயது, என்னோடுதான் இருக்கின்றார் - வேலைக்காரி வைத்து பார்த்துக்கொள்கிறோம்.)  அவள் கொடுத்த ஒரு ஆலோசனையை நினைத்து, இரண்டு நாட்கள் சிரித்தேன்.

கடையில் விற்பனை செய்யும் கோத்தா பால் (milk in box), அதனின் ப்ரண்ட் பெயரோடு சொன்னாள். அப்பாலை வாங்கி மாரியம்மன் கோவிலில் கொடுத்து, சம்பந்தப்பட்ட முதியவரின் பெயரைச்சொல்லி ஆத்தாவிற்கு அபிஷேகம் செய்தால், வயதானவர்களுக்கு விரைவிலேயே விடுதலை வந்துவிடுமாம். அவர்களின் பாட்டிக்கு அப்படித்தான் செய்தார்களாம். மறுநாளே இறப்பு வந்துவிட்டதாம். (நகைச்சுவைதானே..!)

சித்தப்பாவின் மரணம் துயரம்தான். என் அம்மாவிற்கு பதினாறு வயது இருக்கும்போது, ஆலமரம் போன்ற பெரிய குடும்பத்தில் முதல் மருமகளாக வாழ்க்கைப்பட்டார்.  தாயிற்குப்பின் என் அம்மாதான் குடும்ப விளக்கு அங்கே. சித்தப்பா அத்தைகளோடு குழந்தைகளான நாங்களும் வளர்ந்தோம் அவ்வீட்டில். கூட்டுக்குடும்பமாக பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளோம்.

என் அப்பா சொல்வார், விவரம் தெரியும் வரை, அப்பாவை அண்ணன் என்றும், அம்மாவை அண்ணி என்றும், சித்தப்பா அத்தைமார்களை பெயர் சொல்லியும் அழைத்துவந்துள்ளோம் என்று.

இதனால் அப்பா குடும்பம் என்றால் மிக நெருக்கம். அவர்களுக்கு எதாவதென்றால் மனம் பதறும். தானாகவே நிகழும் நிகழ்வாக மனதிற்குள்ளேயே மாறியிருக்கும் நிலை அது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும், குடும்ப சிக்கல்கள் வந்தாலும், பின்னால் `நீ ச்சீ.. நான் ச்சீ..’ என்று துப்பிக்கொண்டாலும், எதாவதொன்று என்றால் கண்களில் நீர் பொலபொல வென வந்துவிடும்.

மேலும் இறந்துபோன இந்தச் சித்தப்பா என்பவர், எல்லா உறவுகளுக்குள்ளும் கொஞ்சம் நெருக்கமாய் இருப்பவர். திருமணமா? அவர்தான் வேட்டி ஜிப்பாவோடு, முதல் ஆள். மரணமா.? அவர்தான் காரியம் நடத்துவதற்கு, அதை எடு, இதை எடு, அடுத்தக்கட்ட வேலைகள் என்ன.! என்பதற்கு வழிகாட்டியாக இருப்பவர். (எழுதும்போதே நினைவுகள் கண்களைக் குளமாக்குகின்றன.)

காமாலை நோய். வயிறு பெரிதாகிக்கொண்டே வந்தது. உடல் மெளிந்துகொண்டே போனது. பற்கள் மஞ்சள், கண்கள் மஞ்சளைப்பூசிக்கொண்டது போறதொரு மஞ்சள். அப்படிப்பட்ட மஞ்சள். அந்த நோவுகளையெல்லாம் பொருட்படுத்தாமல், விருந்து விஷேசங்களுக்கு மக்கர் செய்து தாமதமாக வந்தாலும், ஆஜராகிவிடுவார் அப்பா.

எல்லா உறவுகளின் விஷேசங்களிலும் இருப்பார். மனதில் வைத்து பழிவாங்குதல் போன்ற அற்ப எண்ணங்கள் இல்லாதவர். மொத்தத்தில் மிக நல்ல மனிதர். இறப்பிற்கு வந்தவர்கள் கொடுத்த நற்சான்றிதழ் இது.

மருத்துவமனையும் மருந்தும் கையுமாக அலைந்துகொண்டிருந்தார். தொலைப்பேசியில் பேசிக்கொள்வோம். “உனக்காம்மா அழைத்தேன், தவறுதலாக அழைத்துவிட்டேன் போலிருக்கு. சரி அதுகிடக்கட்டும் கழுதை, அப்பாவ வந்து பார்க்கலையா? பணம் கிணம் இருந்தா கொடு. மருமகனுக்கு தெரியவேண்டாம்.. என்பார். மெனக்கட்டு பணம் எல்லாம் அனுப்பியதில்லை. பார்க்கும்போது அஞ்சோ பத்தோ கையில் கொடுப்போம். அவ்வளவுதான். இறந்துவிட்டார் என்பதற்காக அள்ளியள்ளி கொடுத்தோம் என்றெல்லாம் கதை விடுவது தேவையற்றது.

மருத்துவமனையில் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் என்கிற செய்தி வந்தவுடன், அப்பாவின் கைப்பேசிக்கு அழைத்தேன். அம்மாதான் எடுத்தார். அழுதுக்கொண்டே பேசினார்.  `உ..ங்...க....ப்ப்பா.. உங்...கப்பா... ந...ம்...ம..ல விட்டுட்டுட்டூ.. போயிடுவார்...ர்ர்..ர்ர்..ன்னு ப..ப..ய..ம்ம்மா இருக்கும்ம்ம்மா..’ என்றார். ஆறுதல் சொன்னேன். எனக்கு அழுகையே வரவில்லை. `இரவு ஆஸ்பித்திரிக்கு வரேன்ம்மா.’ என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தேன்.

பிறகு இரண்டு மணிநேரங்கழித்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதன் பிறகு தொடர் அழைப்பு.. உறவுகளுக்கு மத்தியில் தீப்போல் பரவியது செய்தி.
அன்றிரவே உறவுகளின் படையெடுப்பு. அந்த சிறிய விடே நிறைந்துவிட்டது.

அப்பாவின் வீடு ப்ளாட் வீடு. வீடு ஐந்தாவது மாடியில் உள்ளது. படியேறித்தான் போகவேண்டும். லிஃப்ட் இல்லை. செய்தி கேட்ட மறு நொடியில் பலர் அங்கே குவிந்துவிட்டனர். எனக்கு முன், என் தம்பி தங்கைகள் எல்லோரும் மிக விரைவாக சென்றுவிட்டார்கள். காரில் செல்லும்போதே, கண்ணீரோடுதான் சென்றேன். நம்மைப் பார்த்தவுடன் என்ன ரகளையாகுமோ என்கிற சிந்தனையில்..

நம்மவர்கள் உறவுகளோடு பின்னிப்பிணைபவர்கள். இதுபோன்ற துக்க நிக்ழ்வில், மிக நெருக்கமானவர்களோடு, நடந்தவற்றைச் சொல்லி அழுது மற்றவர்களையும் அழவைத்து விடுவார்கள்.

காரைவிட்டு இறங்கியவுடன், அப்பாவின் முகத்தைக் கண்டு கண்ணீர் விட வேகவேகமாக படியேறினேன். நான்காவது மாடியிலேயே கண்ணைக்கட்டியது. மூச்சு வாங்கியது. நிற்க மனமில்லை, தொடர்ந்தேன் வேக வேகமாக.. வீட்டு வாசலையடைந்தேன். என்னைப் பார்த்தவுடன், சின்னம்மா.. 

“வா விஜயா, நீ போன் பேசும் போது அப்பாவின் உயிர்போச்சு, ஆனால் டாக்டர்கள் அந்தச் செய்தியை என்னிடம் சொல்லவில்லை, எனக்குத்தெரிஞ்சு போச்சு.” என கதற ஆரம்பித்தார். நான் என்ன செய்வேன்.! எனக்குத்தான் மூச்சு வாங்குதே. புஸ் புஸ் புஸ்.. என மூச்சு விட்டேன். அழுகையே வரவில்லை. முகத்தை மூடிக்கொண்டு சமையலறை பக்கம் சென்று கொஞ்சம் நீர் பருகிவிட்டு வந்தேன். சுமாராக இருந்தது. அழுகை சுத்தமாக நின்றுபோனது. அமைதியாக வந்து தலைமாட்டில் அமர்ந்துகொண்டேன்.

அதன் பிறகு என் அம்மா வந்தார், என் அம்மாவைப்பார்த்தவுடன் கூட்டத்தில் சலசலப்பு.. `அக்கா வரார், அக்கா வரார்..’ என. அம்மா நுழைந்தவுடனும் அதே போல்தான்.  “அக்கா, பாருங்கக்கா உங்கள் செல்லக்கொழுந்தனை..” என்று கதறினார் சின்னம்மா. அம்மானாலும் அழ முடியவில்லை. விடுகிற மூச்சு, குறட்டையொலி போல் கேட்க ஆரம்பித்தது. திணறினார். கண்களில் நீரே வரவில்லை. அடுத்தடுத்து வருகிற அனைத்து உறவினர்களுக்கும் இதே நிலைதான். படியேறிய களைப்பில், மூச்சுத்திணறல் வந்து, கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என கேட்க ஆரம்பித்து விட்டனர். யாராலும் அழமுடியவில்லை.

முதலில் சந்திக்கின்ற தருணம், அழுகை வரவில்லை என்றால், அதன் பிறகும் வராது. சுதாகரித்துக்கொண்டு, மூச்சுவாங்குதல் நின்றவுடன் சாவகாசமாக அழலாம் என்றால், அதில் ஒரு வித நடிப்பு கலந்து விடும். ஆக, ஏறிய களைப்பில் நீர் பருகிவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்தனர் எல்லோரும். யாரும் அழவில்லை.

என் மற்றொரு சித்தப்பா மனைவி வந்தார். அவர் நன்றாக அழுகிறவர். அவர் அழுதால் எல்லோரும் அழுதுவிடுவார்கள். எல்லோரையும் அழவைத்துவிடுவார். மேலும், இறந்த இந்த சித்தப்பாவும் அவரும் உற்ற நண்பர்கள். அடித்து அடித்து விளையாடிக்கொள்வார்கள். அந்த சின்னம்மா வந்தால் இன்னும் ரகளையாகுமே என நாங்களும் காத்திருந்தோம். வந்தார். வந்தவர், நேராக சமையற்கட்டு பக்கம் சென்று என்னை அழைத்து, பெருவிரலை வாயின் பக்கம் வைத்து, சமிக்ஞையில் தண்ணீர் கேட்டார். 

தண்ணீர் குடித்து அமர்ந்த அவரிடம். “ம்மா ஒகே வா?” என்றேன்.

“ஒகேதான் புள்ள, என்னன்னமோ கற்பனை செய்து வந்தால், வாங்கின மூச்சில், கண்ணீரே வத்திப்போச்சு. மூச்சு எரைக்கிது, கால் கையெல்லாம் உதறுது.. எதுவுமே யோசிக்கமுடியல..” என்றார். ஆஸ்த்மா வியாதிக்காரர்களுக்கு வரும் மூச்சு போல், புஸ் புஸ் புஸ் என்று மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவருக்கு.

அப்போது நான் கண்ணீர் விட்டேன். சோகத்தில் அல்ல, துப்பட்டாவால் வாயை மூடிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக சிரித்ததால் வந்த கண்ணீர் அது. ஒரே மாதிரியான அனுபவம் 

எழவு வீட்டில் என்ன சிரிப்புன்னு யாரும் கேட்டுவிடக்கூடாது பாருங்க...!!

ஒரு அற்புதத் தத்துவம் மின்னியது- நம் உடம்பு சோர்வாக இருக்கும்போது, நம்மால், பிறருக்காக அழ முடியாது.


   

ஞாயிறு, மார்ச் 24, 2013

குழந்தை மனசு

பாலர் பள்ளி மாணவி ஒருவளிடம், அவளின் ஆசிரியர், happy family என்கிற தலைப்பைக்கொடுத்து படம் வரைந்து கொண்டுவரச் சொல்லியிருக்கின்றார். 

மாணவி வீட்டிற்கு வந்து, படம் வரைகிறார். கலர் அடிக்கிறார். குடும்பத்தில் அப்பா,அம்மா, அண்ணன் இவள் என நான்கு பேர்தான். ஆனால் அவள் ஐந்து பேரை வரைந்து கலர் அடிக்கின்றாள். 

அவளின் அம்மா வேலை முடிந்து வீடு திரும்பியவுடன், மகளின் புத்தகத்தை வாங்கி பரிசோதிப்பார். இந்த happy family படத்தைப்பார்த்தவுடன் ஒரே அதிர்ச்சி.

“என்ன நீ, நாம் நான்குபேர் கொண்ட குடும்பத்தில், ஐந்து பேரை வரைந்திருக்கின்றாய்?” என்று சொல்லி, ஐந்து பேரில் ஒருவரை அழித்துள்ளார்.

குழந்தை ஹிஸ்தீரியா வந்ததுபோல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அழ ஆரம்பிக்கிறது. புத்தகத்தையெல்லாம் விட்டு வீசுகிறது, நான் இனி பள்ளிக்குப் போகமாட்டேன். நீ ஏன் அந்த ஐந்தாவது நபரை அழித்தாய். வரை வரை மீண்டும் வரை என ஒரே கூச்சல்.

தாயிற்குக் குழப்பம்.! என்னாச்சு இவளுக்கு? யார் அந்த ஐந்தாவது நபர் என்று கேட்டதற்கு..

காக்கா, அவளும் நம் குடும்பம், அவர்தான் எனக்கு சோறு ஊட்டுகிறார். அவரையும் சேர்க்கவேண்டும் என அடம் பிடித்து, பழையபடி வரைந்து கொடுத்தவுடன்தான், குழந்தை அமைதியானாளாம்.

காக்கா - இந்தோனிசிய பணிப்பெண். (உண்மைக்கதை)

சனி, மார்ச் 23, 2013

மார்பகப்புற்று


நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாய சுகாதார பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

வேலைக்குச் செல்லும் அனைத்து ஊழியர்களுக்கும், ஆண் பெண் பேதமின்றி இந்த சலுகையை எங்களின் அரசாங்கம் இலவசமாக வழங்கியுள்ளது. வவுச்சர் வடிவில். ஐநூறு ரிங்கிட் பெருமானமுள்ள வவுச்சர் அது.

இன்று நான் சென்று வந்தேன். ப்பெஸ்மியர், மெமொஃக்ரம், இரத்தப்பரிசோதனை என அரை நாள் அதிலேயே கழிந்தது என் பொழுது.

பெயரில்லாமல் வந்த அந்த வவுச்சரை யாருக்காவது கொடுத்து விடலாம் என்றிருந்தேன், காரணம், நம் உடலை நம்மால் படிக்கமுடிந்தால், நோய் குறித்த அச்சம் தேவையில்லை என்றே தோன்றியது.. என் உடல் ஆரோக்கியம் குறித்த அபார நம்பிக்கையில் நான் எப்போதும்.

அந்த வவுச்சரை கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் பையிலேயே வைத்திருந்தேன். யாருக்குக்கொடுக்கலாம் என்கிற யோசனையில்..!!

இரண்டு நாட்களுக்கு முன், என் சக ஊழியரின் தாய் இறந்து விட்டார். தெரியும் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று, இருப்பினும் நோய் என்ன என்பது பற்றித்தெரியாது. எதோ கேஸ்ட்ர்க் வலியின் முற்றிய நிலை என்றார் தோழி. நிலைமை படு மோசமாகவே, அரசாங்க மருத்துவமனைக்குக் அழைத்துச்சென்றுள்ளார்கள். அங்கே கண்டுபிடிக்கப்பட்டது பிரச்சனை என்னவென்று.!

இறப்பிற்குச்சென்றேன்.. பிரச்சனை என்னவென்றால் மார்பகப்புற்றுநோய். நோய்க்கிருமிகள் மூளைக்குப்பரவி விட்டது. மோசமான நிலையில் உள்ளார் நோயாளி என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள்.

நோயாளி, பல கிளினிக் வாசல்கள் ஏறி இறங்கிய நிலையில், இதை ஏன் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கமுடியவில்லை?

சாதாரண சுகாதாரப் பரிசோதனையால் மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிக்கமுடியாது. முறையான பரிசோதனைக்குச்செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூற, இடித்துபோய் விட்டார் தோழியின் அப்பா. மரணமடைந்த மாதுவின் கணவர். தப்பு பண்ணிவிட்டேனே என வேதனையடைந்தார். கதறினார். (குடும்ப நண்பர்தான்)

இந்த செய்தி என்னை உறுத்தவே, கையில் உள்ள வவுச்சரை எடுத்துக்கொண்டு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டேன்.

தோழிகளே, ஒரு முறையாவது MAMMOGRAM பரிசோதனைக்குச்செல்லுங்கள். தோழிகளின் கணவன்மார்களே, மனைவிமார்களை அழைத்துச்சென்று முறையான பரிசோதனை செய்ய ஆவன செய்யுங்கள்.

ஆரோக்கியமே வளம்.

புதன், மார்ச் 20, 2013

மஹடி

“ விஜி, மஹடி செத்துப்போயிட்டானாம்.! உனக்குத் தகவல் எதும் வந்ததா?”

“மஹடி? யாரு அது?”

“என்னடா இது, உன் கிட்டத்தானே வந்து பேசிக்கிட்டு இருப்பான் எப்போதும்..”

“நான் கம்பனியின் Front Desk Manager, என்னிடம் பலர் பேசுவது, நான் அவர்களிடம் பேசுவது எல்லாம் சகஜம், மஹடி யாரு’லா?”

“ஐயோ எப்படிச்சொல்வேன்!! ம்ம்ம்ம் சுபாங்ப்ரெட் ப்ரோமொட்டர்.”

“ஓ..ப்ரோமொட்டர்..!? சுத்தம் போ.. அறவே தெரியாது, மீட்டிங்ன்னு சொல்லிக்கிட்டு வந்து, துபுதுபுன்னு நுழையுவானுங்க, மீட்டிங் முடிஞ்சவுடன்  ‘ஹை, பை’ சொல்லிட்டு கிளம்பிடுவானுங்க, எங்கே ஞாபகத்தில் இருக்கும்.!?”

“யா அல்லாஹ், அவன் நல்லா பேசுவான் உன்கிட்ட, பலமுறை பார்த்திருக்கேன்.. சரி சரி தெரியலன்னா விடு..” இடத்தைக் காலி செய்தான் ஷுல்.

இப்படி என்னைக் குழப்பிவிட்டுச் சென்றால் எப்படி..!? யாராக இருக்கும். வேலையில் கவனம் செலுத்தமுடியாமல், போவோர் வருவோரிடமெல்லாம் இதுபற்றிக்கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘ஆமாம் மஹடி செத்துட்டான்..! அடிக்கடி வருவான்... ! ஓ அவனா, ப்ரொமொட்டர்..! ம்ம் மீன் பிடிக்கப்போய் மூழ்கிட்டானாம்..! ஈப்போவிலேயே அடக்கம் பண்ணிட்டாங்களாம்..! அது நடந்து மூணு நாள் ஆச்சே, இப்போதான் தெரியுமா.? நல்ல பையன்.. இப்பதான் நிச்சயதார்த்தம் நடந்தது..! அவனுடைய அம்மா இறந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகலையே.. ! அழகா இருப்பான்... ! நல்ல எடுப்பான மூக்கு, மலாய்க்காரன் போலவே இருக்க மாட்டான்... ! மூக்கும் முழியுமா மாம்மா’க்காரன் போலவே இருப்பான்..!’ என, இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறிமுகத்தை வழங்கியபோதும், எனக்கு மட்டும் அவன் யாரென்றே தெரியவில்லை.

என்னிடமுள்ள பிரச்சனை இதுதான். போகிற போக்கில் ஒருவர் நட்பானால், அவரைப்பற்றிய விவரங்களைக் கேட்க மாட்டேன். பேசுவேன், அவர் யாரைப்பார்க்க வேண்டுகிறாரோ, அவரை வரவழைப்பேன். அந்த இடைவேளையின் போது, அன்று பத்திரிகையில் வந்துள்ள சில செய்திகளைப் பற்றியோ, பரபரப்பாகப் பேசப்படும் சில விவரங்களைப் பற்றியோ உரையாடுவோம்.. கொஞ்ச நேரம்.

சிலரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, பார்ப்பவர்களுக்கு அது நீண்ட நாள் பழகிய நட்புபோல் தோன்றலாம். ஆனால், நான் அந்நபரை அப்போதுதான் சந்தித்திருப்பேன். பெயர் சொல்லியிருப்பான்/ள், கேட்ட மறுநொடியில் மறந்தேபோவேன். என்னுடைய பலவீனம் இது.

மீண்டும் சந்திக்கின்ற சந்தர்ப்பம் வாய்க்கின்றபோது, அவர் எந்த நபரை சந்திக்கவிருக்கிறார் என்பதனை அறிந்து வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவரை நேராகச் சென்று சந்திக்க அனுமதி வழங்கிவிடுவேன். அவ்வளவுதான் என்னுடைய உறவு சிலரிடம் இங்கே.. வழிப்போக்கன் போல்.

ஆனால் மஹடி..!?  ஒரு ப்ரொமொட்டர், ப்ரொமொட்டர் என்றால் எங்களின் கம்பனி பணியாளர்தான் ஆனால் அவர்களுக்கு இங்கே கம்பனியில் வேலையில்லை. ஒரு குழுவாக தனியாகப்பிரிக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்பட்டு, எந்தெந்த பேரங்காடிகளில் எங்களின் நிறுவனப் பொருட்கள் விற்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அவர்கள் வேலைக்கு நியமிக்கப்படுவார்கள். அவர்கள், அங்கே வரும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் பொருட்களைப் பற்றிய விளக்கங்களைக் கொடுத்து, அவர்களிடம் அப்பொருட்களை அறிமுகம் செய்து விற்பனை செய்யவேண்டும். மாதச்சம்பளம் அலவன்ஸ் என்று ஒருபுறமிருந்தாலும், சுதந்திரமான வேலைச்சூழல், கூடுதல் கமிஷன், குறைந்தவிலையில் மின்சாரப்பொருட்கள் வாங்குவது, கஸ்டமர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்குச்சென்று குழந்தைகளை பள்ளியில் விடுவது, மீண்டும் பள்ளியில் இருந்து அழைத்துவருவது, மின்சார நீர் தொலைப்பேசி நெட் கட்டனம் போன்றவைகளை செலுத்துவது என..., வேலைகளுக்கிடையே சொந்த வேலைகளையும் செய்துகொள்கிற வசதிகளெல்லாம் இருப்பதால், இந்த ப்ரொமொட்டர் வேலை என்பது அவர்களுக்கு மிகவும் ஜாலியான வேலையாக அமைந்துவிடுகிறது.

கம்பனிக்கு மாதம் ஒருமுறைதான் வருவார்கள். சேல்ஸ் மீட்டிங்கில் கலந்துகொள்வதற்காகவும், மாதச்சம்பள ஸ்லீப் பெற்றுக்கொள்வதற்காகவும்.

அப்படிக்குழுவாக வரும் கூட்டத்தில் யாரைக்கண்டேன் நான்.!? வரும் அனைவரும் என்னிடம் அன்பாகவும் மரியாதையாகவும் பழகுவார்கள்/பேசுவார்கள்.  ‘அக்கா, அக்கா’ என்றும், ‘விஜி, விஜி’ என்றும்..

சிலவேளைகளில் ஜோக் எல்லாம் சொல்வார்கள், இடிஇடியென சிரிப்புச்சத்தம் கட்டடத்தையே உலுக்கும். நானும் சிரிப்பேன், வேறுவழி.!?

இதையெல்லாம் காண்பவர்கள், நான் அவர்களிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். இருப்பினும்,  எனக்கும் அவர்களுக்குமான தொடர்பு, தாமரை இலையின் தண்ணீர்தான்.

இப்படியெல்லாம் இருந்தபோதிலும், நம்மிடம் சிரித்து சிரித்துப் பேசிப்பழகிய ஒருவர், இறந்துவிட்டார் என்கிறபோது, அவர் யாராக இருக்குமென்று தெரிந்துகொள்கிற ஆர்வம் மண்டையைக் குடைந்தவண்ணமாகவே இருந்தது.

ஒருவர் உயிருடன் இருக்கும்வரை, அவர் நமது நெருங்கிய நட்பாக இல்லாதபட்சத்தில், அவர் யார்? எவர்? என்று அறிந்துகொள்கிற ஆர்வம் எனக்கு எப்போதுமே வராது. பேசினால் பேசுவேன். ‘ஹலோ.. ஹை.. பை’.. அவ்வளவுதான்.

வேலையிடத்தில் அதிகமானோர்களை தினமும் சந்திக்கின்ற நிர்பந்தம். என் வேலை அப்படி. என்ன செய்ய.!? சிலர் நம்மை மறவாமல், பல வருடங்கள் கழித்தும்,  ‘ஹாய் விஜி, இன்னும் இங்கேதான் இருக்கீங்களா.!?’ என்று உரிமையோடு பெயர் சொல்லி அழைத்து, நலம் விசாரிப்பார்கள். நமக்கு எத்தனைப்பிள்ளைகள், என்ன படிக்கின்றார்கள், கணவர் எங்கே வேலை செய்கிறார், போன்ற விவரங்களையும் நினைவில் வைத்துக்கொண்டு அக்கறையோடு விசாரிப்பார்கள். 

எனக்கு அவமானமாக இருக்கும். என் பெயரையும் சுற்றத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு, இவ்வளவு உரிமையோடு இவர்கள் நம்மை அழைக்கின்ற போது, நாம் மட்டும் ஏன் அவர்களின் பெயர்களையும் இதர நிகழ்வுகளையும்  நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. !?

‘ஹாய்.. ஊய்.. ஓய்.. ’ என அவர்களின் தொனிக்கு ஈடுகொடுத்து, உரிமையோடு கைக்குலுக்கி, ‘உங்களின் முகம் மனதில் அப்படியே பதிந்திருக்கு, மன்னிக்கவும், உங்கள் பெயர்?’ என அசடுவழிய கேட்பேன்.. இதுதான் என் நிலை. முகம் நினைவில் இருக்கும். பெயர் கொஞ்சங்கூட நினைவிலேயே இருக்காது.

இந்த இக்கட்டுச்சூழல்தான் மஹடி செத்துப்போயிட்டான் என்கிற விவரத்திலும்.

யார் இந்த மஹடி? எப்படி இருப்பான்? இவனா இருக்குமா.!? அவனா இருக்குமா..!?, என்னிடம் பேசுவானா? என்ன பேசுவான்? குரல் எப்படி இருக்கும்? கூட்டமாக வருவார்கள், நுழைந்தவுடன் கூச்சல் போடுவார்கள், சட்டாம்பிள்ளை, மாணவர்களை மிரட்டுவதைப்போல், மிரட்டுவேன். கைகளைக்கொண்டு வாய்களைப்பொத்திக்கொண்டு, சரி டீச்சர் என்று நக்கல் அடிப்பார்கள்.

அதில் யார் மஹடி? மாம்மா’க்காரன் (தமிழ் முஸ்லீம்களை அப்படித்தான் அழைப்பார்கள் இங்கே..) போல் யார் இருப்பா? குழப்பிக்கொண்டு எப்படிஎப்படியோ யோசிக்கின்றேன், யார் என்றே தெரியவேயில்லை. 

தெரியாமலேயே போகட்டுமே. தெரிந்தால், கூடுதல் கவலை வரும். அவன் என்னிடம் பேசியதெல்லாம் நினைத்துப்பார்த்து வருத்தம் கொள்வேன்.
யாராவது அவனின் புகைப்படத்தைக் காண்பித்தாலொழிய தெரிய வாய்ப்பு ஏற்படப்போவதில்லை. இதை அப்படியே விட்டுவிட வேண்டியதுதான்.

வருத்தப்படுவது தள்ளிப்போடப்பட்டாலும், என்றாவது ஒரு நாள் தெரியவரும்.. அப்போது என் மனம்..

“ஆ..அவனா..!” என்று துடிக்கலாம்.
“ஓ.. இவனா.!” என்று லேசான ஆச்சிரியதோடும் நிறுத்திக்கொள்ளலாம். பார்ப்போம்.!!
      

செவ்வாய், மார்ச் 19, 2013

குட் பை

நீ ஏன் வரவில்லை?
நீ வந்திருக்கலாமே.!
நீ ஏன் அழைக்கவில்லை?
நீ அழைத்திருக்கலாமே.!
நீ ஏன் பேசவில்லை?
நீயாவது தொடங்கியிருக்கலாமே.!
ஏன் குறுந்தகவல் கொடுக்கவில்லை?
அதை நீ செய்திருக்கலாமே செல்லம்.!
உனக்கு அன்பில்லை என்மேல்.!
அங்கே மட்டும் என்ன வாழுதாம்.!?
பை..
குட் பை..!!

ஞாயிறு, மார்ச் 17, 2013

பரதேசி

பாலாவின் பரதேசி திரைப்பட விமர்சனத்தை பலர் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.

யார் பக்கமும் நான் செல்லவில்லை, அவ்விமர்சனங்களை வாசிக்கவும் இல்லை. காரணம் சிலரின் விமர்சனம் நமது மூளையைச் சலவை செய்து, படம் பார்க்காமலேயே அப்படத்தின் மீது வெறுப்பை உமிழ்கிற தன்மையை நம்மிடம் விட்டுச்சென்று விடும்.

ஆக, படம் எப்படி இருக்கிறது என்பதனை நாமே  பார்த்துவிட்டு முடிவு செய்துகொள்ளலாம் என, நேற்று திரையரங்கிற்குச் சென்று பரதேசியைப் பார்த்துவிட்டு வந்தேன்.

வந்தேன் என்பதை விட, மனச்சுமையோடு வீடு திரும்பினேன் என்று சொல்லலாம். குளமாகும் கண்ணீரைத்துடைக்காமல் திரையரங்கை விட்டு வெளியேற முடியவில்லை. கண்கள் பனித்தவண்ணமாகவே இருந்தன. யாராவது பார்த்தால் என்னாவது..! என்கிற சிந்தனையில், விளக்கு எரிய ஆரம்பித்தவுடன் கண்களில் வழியும் நீரை மிகவிரைவாகத் துடைத்துக்கொண்டேன். இருப்பினும் அரங்கிலிருந்து வெளியேறும் அனைத்து ரசிகர்களும் மூக்கைச் சிந்தியபடிதான் வெளியேறினார்கள். ஒரு பெண், தேம்பித்தேம்பியே அழுதார். கணவர்/காதலன் அவரை அப்படியே அணைத்தபடி அரங்கை விட்டு வெளியே அழைத்து வந்தார்.

பாலாவின் படம் என்றாலே அது என்னை அதிகம் கவரும் (அவன் இவன் - படத்தைத்தவிர). சேது, இன்னமும் என்னைக் கவர்ந்த திரைப்படங்களில் முதல் நிலையிலேயே உள்ள ஓர் படம். அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால், நான் தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு நகரமாட்டேன்.

‘நான் கடவுள்’ என்கிற படத்தை பலர் மோசமாக விமர்சனம் செய்திருந்தார்கள்.  அவ்விமர்சனங்களைப் படித்துவிட்டு, திரையரங்கிற்குச் செல்லவில்லை, படத்தை நிராகரித்தேன். அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, மனவேதனை அடைந்தேன். இதுபோன்ற நல்ல படங்களை திரையரங்குகளில் கண்டுகளிக்காமல் தவறவிட்டிட்டோமே என.!?

எங்களின் தாத்தா உயிருடன் இருக்கும்போது, அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து, குளித்து முடித்து, சாப்பிட்ட பிறகு இரவில் நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “தாத்தா, தாத்தா ஜப்பான்கார காலத்துக் கதைகளைச் சொல்லுங்கள்..” என்று அவரைத்துன்புறுத்துவோம். தாத்தா அருமையாகக் கதைகளைச் சொல்பவர். ஒரு கதையை எங்கு ஆரம்பித்து எப்படி கொண்டுவந்து எங்கு முடிக்கவேண்டுமென்று நன்கு அறிந்துவைத்திருப்பவர் தாத்தா. இடையிடையே நகைச்சுவையைக் கலந்தும் சொல்வார். பாடல்களைப் பாடுவார். வாயால் இசைக்கருவிகளை வாசிப்பார். கைகளைத்தட்டுவார். எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். நாங்களெல்லாம் அப்படிச்சிரிப்போம். குதூகலிப்போம்.

பள்ளிப்பருவம் அது, அன்றைய காலகட்டத்தில் கதைகளை நகைச்சுவைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் கேட்டபோதிலும், அக்கதைகள் அனைத்தும் எங்களின் மூதாதையர்கள் ரத்தத்தை வேர்வையாகச் சிந்திய உண்மைச் சரித்திர சம்பவங்கள் என்பதனை உணர்ந்துகொள்கிற பருவம் வந்தபோது, மனம் பட்ட வேதனைகள் சொல்லிமாளாது.

காடுகளை அழித்தார்கள். தண்டவாளங்களைப் போட்டார்கள். சாலைகளைக் கட்டினார்கள். கல் உடைத்தார்கள். விடிய விடிய பால்மரம் சீவினார்கள். கட்டட வேலைகள் செய்தார்கள். துரைமார்களின் கக்கூஸ் கழுவினார்கள். அவர்களின் வீட்டுவேலைகளைச் செய்தார்கள். கைக்கட்டி கூலிக்காக மணிக்கணக்காக காத்துநின்றார்கள். போரில் மாண்டார்கள். போராட்டத்தில் மாட்டார்கள். அடி வாங்கினார்கள். மலேரியா வந்தது, மாண்டார்கள். காலரா வந்தது மாண்டார்கள். பசியால் மாண்டார்கள் என பல கதைகள் சொல்வார் தாத்தா. அதை அப்படியே பரதேசி திரைப்படத்தில் பார்த்தேன். மனம் கணத்தது.

பரதேசி ஒரு உண்மைக் கதை என்பதை, படம் ஆரம்பிக்கும்போது அலட்சியம் செய்ததை, படம் முடிகிறபோது மனபாரத்துடன் ஏற்றுக்கொண்டேன்.

பாலாவின் நடிகர்களின் தேர்வு அற்புதம்.

அதர்வா நடித்தாரா? இப்படி அழவைக்கின்றார்.! சிறந்த நடிகர் விருது அடுத்து உங்களுக்குத்தான். அப்பாதான் இல்லை பார்ப்பதற்கு.

அழகுப்பதுமை வேதிகாவிடம் இவ்வளவு திறமையா? எல்லாப் புகழும் பாலாவிற்கே.

கிராமம், செட் போடப்பட்டதுபோல் இருந்தாலும், அற்புத சூழலைக் கொடுத்தது.

ஏழ்மைச்சூழலிலும் மேலோர் கீழோர் என்கிற பாகுபாடுதான் நம் இனம் இந்த அளவிற்கு கொடுமைப் படுத்தலுக்கு ஆளாகியிருக்கின்ற அவலம். கொடுமை.

சிரிக்கச்சிரிக்கப்பேசி வளையில் விழவைக்கின்ற கபட நாடகத்தின் போது, நம் மக்களின் அப்பாவித்தனம் மனதைப்பிழிகிறது.

பணத்தை இப்படிக் காட்டிக்காட்டியே ஏமாற்றினால்தான் இவர்களை எப்போதும் நம் பக்கமே வைத்திருக்க முடியும் என்கிற போது, படம் பழிவாங்கும் படலமாக முடியவேண்டுமென்று மனம் ஏங்குகிறது.

கூலியைக் கொடுக்காமல், அதற்கு, இதற்கு, தாயத்து கட்டியதற்கு , மருத்துவச்செலவிற்கு, வாடகை, மளிகைசாமன் என பிடித்துக்கொண்டு துரத்துகிறபோது, ‘அடப்பாவிகளா’ என நம் மனமும் குமுறுகிறது. ‘ஏய், எவ்வளவு பேர் இருக்கிறீர்கள், ஒன்று சேர்ந்து அடித்து நொறுக்குங்கள்,’ என்று கத்தவேண்டும் போல் இருந்தது.

கால்களை விந்திவிந்தி நடக்கின்ற சில வேலையாட்களைப் பார்த்தபோது, ஏன் ஊனமாக இருப்பவர்களை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கின்றார்கள்.? என்று யோசிக்க, அது அங்கே நடந்த கொடுமையால் வந்தது என்று கதை பின்னால் வருகின்ற போது. ஆண்டவா, இது மட்டும் கற்பனையாக இருக்கவேண்டும் என்று மனம் துடிக்கின்றது.

மருத்துவம் பார்க்க வந்தவர்களும், ஆடிப்பாடி களித்து மதமாற்று வேலைகள் செய்கிறார்கள். நம்மவர்களின் நிலை..!!

இடைவேளை காட்சி வருகிற போது, அதற்குள் பாதி படம் வந்துவிட்டதா? இன்னும் என்னென்ன கஷ்டங்கள் வருமோ..! என்கிற பாதிப்பில் இருந்து மீளமுடியவில்லை.

இடைவேளை காட்சியின் போது காட்டப்படும் தவிக்கும்/துடிக்கும் கை ஒன்று ரசிகர்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறன.

குழந்தையின் விரல், தேயிலையை கிள்ளி ரத்தங்கட்டி இருப்பதைக் காட்டியபோது ஆரம்பித்த என் கண்ணீர்துளி இறுதிவரை கட்டுப்படுத்த முடியாமலேயே போனது.

இறுதிக்காட்சியின் அழுகை... நம்மிடம் ஒட்டிக்கொள்கிறது.

படம் அவார்ட்டுகளைக் குவிக்கும் நிச்சயமாக. சேது’விற்குப்பிறகு.

இதற்குமேல் நான் என்ன சொல்ல ..!!  பார்க்கவேண்டிய படம். தொடர்ந்து வந்த திரைப்படங்கள் நம்மை ஏமாற்றியபோது, பாலாவின் இந்தப்படம் அற்புதம் அற்புதம் அற்புதம்.

ஒரே ஒரு குறை - இளையராஜாவின் இசை இல்லை. பாலா படம் என்றால் இளையராஜாதானே இசை.. என்னாச்சு!??

இனி ப்ளாக்கில் வந்துள்ள விமர்சனங்களைப் படிப்பேன்.



வியாழன், மார்ச் 14, 2013

நகல்

என் நகலை
நான் விரும்பாதபோது
என்னை விரும்பாதவர்களை
நான் நிந்திக்க நினைப்பது
பக்கா அயோக்கியத்தனம்..

செவ்வாய், மார்ச் 12, 2013

சின்ன சின்ன

மணி பத்தாச்சு.. என்ன இன்னும் காணலையே..? வர நேரம்தானே...! மனதிற்குள் முணகிக்கொண்டே வாசலுக்கும் அறைக்கும் நடந்துகொண்டிருந்தாள் உஷா. எதாவதொரு ஹார்ன் சத்தம் கேட்டால், பட்டென்று கதவருகே ஓடிவருகிறாள்.

காலையிலிருந்து காத்துக்கொண்டிருக்கின்றாள். வழக்கம் போலவே விரைவாகக் குளித்தாள், உடல் முழுக்க கமகம சண்டல் பௌடர் பூசிக்கொண்டாள், கண்களில் லேசாக மை தீட்டிக்கொண்டாள், புருவத்தையும் தீட்டிக்கொண்டாள். உதட்டிற்கு, தெரிந்தும் தெரியாமல் இருப்பதைப்போன்றுள்ள லேசனா பிங்க் கலர் சாயம், உதட்டை பளபளப்பாக்கிக்கொண்டிருந்தது. முகத்தைப் பலமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

போட்டிருக்கின்ற உடை நன்றாக இல்லாததுபோல் தோன்றவே, அதை மாற்றுகிறாள். கொஞ்சம் அழகாக, புதிதாக அலமாரியில் மடித்து வைத்திருக்கும் சுடிதார் ஒன்றினை எடுக்கிறாள், அணிந்துகொள்கிறாள்..

கண்ணாடியின் முன் மீண்டும் தோன்றுகிறாள்.
கூந்தலை அள்ளி மேலே வைத்துக் கட்டுகிறாள். அதைக் கலைத்து ஒற்றை சடை பின்னிப்பார்க்கிறாள். பிறகு இரண்டுமே வேண்டாமென்று கூந்தலைக் கலைத்துவிட்டு முடியைக் கட்டாமல் விடுகிறாள்.. அலையலையென கூந்தல் அவளின் அழகிற்கு மெருகூட்டியது.

பொட்டு வைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறாள். முதலில் நேர் பொட்டு, பிறகு வட்டப்பொட்டு, பின் வர்ணப்பொட்டு என மாற்றி மாற்றி வைத்து அழகு பார்க்கிறாள். நெற்றியின் வகிடில் குங்கும்ம் ஒட்டிக்கொண்டிருப்பதைப் போல் செய்து அழகு பார்த்துக்கொண்டாள்.

இரண்டு காதுகளுக்கிடையில் சுருள் சுருளாய் முடிகள் இயற்கையாக விழுவதைப்போல் செயற்கையாகச் செய்துகொண்டாள்.

வாசலில் ஹார்ன் சத்தம் கேட்கிறது. விரைகிறாள் வாசலுக்கு, ஏமாற்றத்துடன் திரும்புகிறாள். மீண்டும் தொடர்கிறது ஒப்பனை.

கண்ணாடியின் முன், உடைகளைச் சரி செய்து பார்க்கிறாள். நெஞ்சை நிமிர்த்தி, மார்பின் அழகை ரசிக்கின்றாள். இந்த ப்ரா வேண்டாம், எடுப்பாக இல்லை, வேறொரு ப்ரா போட்டுப்பார்க்கலாமே.. ! உடைகளைக் கலைகிறாள், உள்ளாடைகளை மாற்றுகிறாள். கண்ணாடியின் முன் மீண்டும் எடுப்பாகத் தெரிந்த மார்பின் அழகை பக்கவாட்டில் நின்று ரசித்துப்பார்த்துக்கொள்கிறாள். குனிந்து உடையைக்கொஞ்சம் இறக்கி விட்டுக்கொண்டு, மார்பு கொஞ்சம் தெரியும் அளவிற்கு இழுத்துவிட்டாள்.., அதனின் அழகில் அவளே மயங்கவும், வெட்கம் வர, உடைகளைக்கொண்டு சரி செய்தாள், இருப்பினும் லேசாக மார்பகங்களின் அழகு வெளியே தெரியும்படியே விட்டு வைத்திருந்தாள்.

கை கால்களுக்கு க்ரீம் லோஷன்களைப் பூசி வழவழப்பாக்குகிறாள். இடையிடையே கடிகாரத்தை நோக்கிக்கொண்டு, காதுகளையும் தீட்டி, ஹார்ன் சத்தம் கேட்கிறதா, எனவும் பரிசோதித்துக்கொண்டாள்.

ஒரு பாடலையும் முணுமுணுக்கின்றாள்..

‘ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என் அழகிற்கு ஒருவன் துணைவருவான்.. ஒஹோ ஹோ ஓ.. அது நானல்ல, அது நானல்ல...

மீண்டும் ஒரு முறை வாசலுக்கும் அறைக்கும் நடக்கிறாள்.. என்ன இன்று? இன்னேரம் வந்திருக்கணுமே.. இன்னும் ஆளையே காணோமே..!?

ஹார்ன் சத்தம் கேட்கிறது.. விரைந்து ஓடுகிறாள் வாசலுக்கு. ச்சே, இப்படி ஓடினால், மூச்சு வாங்குமே.. ரிலெக்ஸா போகலாமே என்று கதவருகே கொஞ்ச நேரம் தம்மை சுதாகரித்துக்கொள்கிறாள். உடைகளை சரி செய்துகொண்டு, கதவைத் திறக்கிறாள்.

காய்க்கறிவேன் நின்றுக்கொண்டிருந்தது. அருகில் வியாபாரி ரவி.  

ஆண்டி, நீங்கள் கேட்ட, கொடுவாமீன் கிடைக்கல, முள்ளுவாளை கொண்டுவந்திருக்கேன், வேணுமா?மீன் வியாபாரி ரவிதான் கேட்டான், உஷாவிடம்.
          

திங்கள், மார்ச் 11, 2013

காணாமல்..

நான்
காணாமல்
போகப் போகிறேன்

உள்ளே இருக்கும்
வலி
என்னைக் களவு கொள்ளலாம்

போராட்டங்கள்
என்னைக் காவுகொள்ளலாம்

ஒரு துளி விஷம்
என் மேனி
நீலமாகலாம்..

போகிற வழியில்
தினக்காட்சி சாலையில்
நானும் சிக்கலாம்

முள் குத்தலாம்
மூச்சுத்திணறல் வரலாம்

காலையில் எழாமலேயே
போகலாம்..

தனிமை வேண்டி
நானே என்னை
மறைத்துக்கொள்ளலாம்

சில மிருகங்கள்
என்னைக் குதறலாம்

நீயும் காரணமாகலாம்

காரணமில்லாமலே
நான்
காணாமலும் போகலாம்

காட்சிகள் புதிது

யாரிடமாவது
மனம் விட்டுப்பேச வேண்டும்
யாரிடம் என்றுதான்
இதுவரையிலும் தெரியவில்லை.!

%%%%%

அதிகாலை நடைப்பயிற்சி
ஆயுள் கொஞ்சம்
தள்ளிப்போகிறது..!

%%%%%%

பூட்டி வைக்கப்பட்டுள்ள வீட்டிற்குள்
பாதுகாப்பாகவே இருக்கின்றன
மிருகங்கள்

%%%%%%

அதிகமான வலியின் போது
வேகமாகவே வெளியேறுகிறது
மலம்..

%%%%%

பாதைகள் மாறிவிடும்போது
காட்சிகள் அங்கே
புதிதுதான்..







சனி, மார்ச் 09, 2013

கருமூலம்

காலம் கடந்து
‘கரு’ நிற்பதில்லை
அது பிரசவித்து
பெரிதாகி
மனிதனாகி
மாண்டுபோகிறது

நிசப்தம்

படார் என்று
பக்கத்தில் விழுகிறது பாறாங்கல்
இதயம் நின்று..
பின் துடிக்கிறது

எழுதிப்பார்க்கிறேன்
உன் நினைவுகளை
பிழையில்லாமல் வருகிறது எழுத்து
கணினி என்னை ஏமாற்றுகிறது
சிலவேளைகளில் 
உன்னைப்போல்

தடார் என்று
கதவு சாத்திக்கொள்கிறது
இதயம் நின்று..
மீண்டும் துடிக்கிறது

தொடர்கிறது உன்நினைவுகள்
யாருமற்ற இந்த தனிமையில்

மீண்டும் ஒரு சத்தம் வரலாம்
துடிக்காமலும் போகலாம்
இந்த இதயம்..

வியாழன், மார்ச் 07, 2013

‘செஞ்சி வைச்சுட்டாங்க’

புருஷன் வேறு பெண் தேடிக்கொண்டால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
வீட்டில் குழந்தைக்கு சுகமில்லை என்றால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
மனைவி நோயாளியாயிட்டால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
இடி விழுந்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
வீட்டின் முன் தேங்காய் விழுந்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
கைகால்கள் குடைச்சல் வந்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
கண்ணாடி உடைந்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
பொண்டாட்டி ஓடிப்போனால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
எடுக்கற சம்பளத்தில் சமாளிக்கமுடியலன்னா
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
வாந்தி எடுத்தா
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
பக்கத்துவீட்டுக்காரர்கள் பேசவில்லை என்றால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
சத்தமாக குறட்டை விட்டால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
வயிற்றில் கட்டி வந்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
பிள்ளைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
வாகனம் எதிலாவது மோதினால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
பைத்தியம் பிடித்தால்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
கிறுக்கு பிடித்தாலும்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’
கட்டையில் போனாலும்
‘செஞ்சி வைச்சுட்டாங்க’

யாரோ ரொம்ப `ப்ரீயா’ இருக்காங்க
செஞ்சி செஞ்சி வைக்க..!!

அதுசரி
‘செஞ்சி வைச்சுட்டாங்க’ என்றால் என்ன?
சத்தியமா தெரியாதுங்க.. !


புதன், மார்ச் 06, 2013

சேகரித்த வார்த்தைகள்

காலையில் எழுந்தவுடன் முதல் நாள் ஏற்பட்ட சில அழுத்தங்கள் மனதைக்குடையவே, இன்று இவளை, இவனை, அவனை, அவளை நன்றாக நாக்கைப் பிடுக்கிக்கொள்வதைப்போல் கேட்கவேண்டுமென்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். எண்ணிய வார்த்தைகளையும் கோர்வையாக்கிக்கொண்டேன். சேகரித்த வார்த்தைகளை, மனதில் அசைபோடுகிறபோது அவை மோசமான கெட்டவார்த்தைகளோடுதான் உழன்றது. அலுவலகம், அன்னிய நபர்கள், குடும்ப உறுப்பினர்கள் என  சம்பந்தப்பட்டிருந்ததால், வார்த்தைகள் கொடுமையாக இல்லாமல் கடுமையானதாக கோர்த்துக்கொண்டேன்.

காலையில் எழுந்து, மாடியில் இருந்து கீழே இறங்கி வரும்போதே, பணிப்பெண் இன்னமும் மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள். நேற்றிலிருந்து, உருப்படியாக எந்த வேலையையும் செய்யாமல், அழுதமேனிதான். மாமி உணவுவேண்டாம் என்றாராம், அதனால், உணவு கொடுக்கவில்லையாம்...! காயப்போடப்பட்டிருந்த அரிசி வடம் மாலையும் இரவும் சந்திக்கின்ற வேளையில் நான் வேலைமுடிந்து வீட்டிற்கு வந்தபிறகும் வாசலில் காய்ந்துகொண்டிருந்தது..! மிஷினில் போடப்பட்டிருந்த துணிமணிகள் உலரவைக்கப்படவில்லை...! கடுமையான வெயிலில் வாடிப்போயிருந்த என் செல்லங்களுக்கும் நீர் பாயிச்சவில்லை..! குப்பைகள் வீசப்படாமல் இருந்த்து...!! ஓயாமல் போனிலேயே தொங்கிக்கொண்டிருந்தாள். தொலைப்பேசி மணி ஒலித்தவண்ணமாக..!!

யார்? என்ன பிரச்சனை? என்று விசாரிப்பது அநாகரீகமாகப் பட்டதால், அதை ஒரு பொருட்டாகக் கருதாமல், நான் வழக்கம்போல் என் வேலைகளை ஆரம்பித்தேன். வேலை முடிந்துவந்து வீட்டுவேலைகளைச் செய்வதைப் பார்த்த அவள், ஓடேடி வந்து, அதையும் இதையும் எடுத்தாள். ஒரு புன்னகையை மட்டும் வீசிவிட்டு வேலைகளைத் தொடர்ந்தேன். அவளே ஆரம்பித்தாள். என் தங்கையும் இங்கே மலேசியாவிற்கு வேலைக்கு வந்துள்ளாள். (இதைப்பற்றி ஏற்கனவே என்னிடம் பகிந்துள்ளாள்), ஒரே மாதத்தில் பல இடங்களில் இரண்டு நாள், மூன்று நாள் என வேலை செய்துவிட்டு எஜெண்டுகளிடம் ஓடிப்போய்விடுவாள். வேலை கஷ்டம், பிடிக்கவில்லை, தொலைப்பேசியைப் பிடுங்கிக்கொள்கிறார்கள், விடாமல் வேலைவாங்குகிறார்கள்.. என்கிற சாக்குப்போக்குகளைச் சொல்லி.. எப்பொழுதும் எஜெண்டுகளிடம் ஓடிவிடும் அவள், இந்த முறை தனியாளாக எங்கேயோ ஓடிவிட்டாளாம். ஒரு பருவப்பெண் யாருமே அறிமுகமில்லாத ஊரில், எங்கே போய் என்ன செய்வாளோ..! யாராவது எதாவது செய்துவிடுவார்களோ..! என்கிற அச்சம் அக்காகாரியான இவளுக்கு இருப்பது நியாம்தான். இருப்பினும் அதற்கு நாம் என்ன செய்யமுடியும்..! வேலை என்று வந்துவிட்டால், சில தியாகங்கள் செய்து, வேலையை நன்கு கற்றுக்கொள்ளும்வரை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இப்படி அவள் படும் அவஸ்தைகளை ஒரு கதையாகச் சொல்லிக்கொண்டு, நம் வீட்டு வேலைகளைச் செய்யாமல் சோர்ந்து சோம்பிக்கிடந்தால்.. கோபம் வராதா என்ன..!!

அழுத்திய மற்றொரு நிகழ்வு. வேலைக்காரிக்கு சம்பளம் கொடுக்கவேண்டும். இன்று என்ன தேதி? ஆறு. சம்பளம் நமக்குக்கிடைக்கும் நாள், முதல்தேதி. என் வீட்டு வேலைக்காரிக்கு சம்பளம் இருபத்திரண்டாம் தேதியே போட்டுவிடவேண்டும். அவள் அந்தத் தேதியில்தான் போடச்சொல்வாள். அவளின் அப்பா, அந்த நாளில் வெளியே டவுனுக்கு ஒருவேலையாகச் செல்வானாம், அதே நேரத்தில் இந்தப் பணத்தையும் பேங்கில் இருந்து எடுத்துக்கொள்வானாம்..

இந்த வேலைக்காரி ஒரு ஒப்பந்த அடிப்படையில் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டாள். எப்படியென்றால், மாமியை வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள், வேலைக்காரிக்குக் கொடுக்கப்படுகின்ற சம்பளம் இதர செலவுகள் அனைத்தும் மகன்கள் மூவரும் பங்கிட்டுத்தான் கொடுக்கவேண்டும். இதுதான் ஒப்பந்தம்.

ஒரு பங்கு எங்களுடையது. மற்றப்பங்குகளானது மற்ற இருவருடையது. மற்ற இருவரில் ஒருவரிடம் கேட்கவே வேண்டாம், சரியான நேரத்தில் வங்கியில் நுழைந்துவிடும் பணம். மற்ற ஒருவரிடம், மாதாமாதம் பேங்க் அக்கவுண்ட் நம்பரை எஸ்.எம்,எஸ் அனுப்பவேண்டும், போடுங்கள்/போட்டுவிட்டீர்களா? என கேட்கவேண்டும்.. என் கணவர் சொல்கிறார், விடு வேண்டாம், நாமே பார்த்துக்கொள்வோம்.. உனக்கு வெட்கமாக இல்லையா? ஓயாமல் அவர்களை நினைவுறுத்திக்கொண்டிருக்கிறாய், என்று. என்னால் முடியாது, அவர்களைச் சும்மா விடமுடியாது. எந்த ஒரு பொறுப்புகளையும் ஏற்காமல், பணத்தையும் சரியான நேரத்தில் வழங்காமல் இருக்கும் அவர்களை எப்படி விடுவது சும்மா.! மரியாதை கெட்ட ஜென்மங்கள். இன்று அழைத்து, மனதில் உள்ளவைகளை ஓட்டியே தீர்வேன்.. என்று உறுதியெடுத்துக்கொண்டிருந்தேன். மனதில் இவர்களைத் தாறுமாறாகத்திட்டுவதற்கும் சொற்கள் அடுக்கிக்கொண்டிருந்தேன்.

வேலையிடத்தில் ஒரு பிரச்சனை. இங்கே பணிபுரியும் ஒருவளுக்கும் எனக்கும் ஓயாமல் சண்டை. இந்தச் சண்டையில், அவளும் நானும் சேர்ந்து செய்கிற நேர்முக தேர்வு வேலைகளுக்கு முறையான ஒத்துழைப்பு நல்கமாட்டேன் என்கிறாள். அவள் கொடுக்கும் தகவல்களின் மூலமாகத்தான், எந்தெந்த டிப்பார்மெண்ட் மனேஜர்களுக்கு மெயில் அனுப்புவது, மீட்டிங் அறையை புக் செய்வது, எத்தனை மனேஜர்கள் கலந்துகொள்வார்கள், பாரங்களை நகல் எடுக்கவேண்டுமா.., எத்தனை மணிக்கு நேர்முகத் தேர்வு ஆரம்பம் போன்ற பொறுப்புகளில் நான் கவனம் செலுத்தமுடியும். இந்த சிக்கல்கள் வேறு என்னைக் குடைந்துகொண்டிருந்தது.  விவரம் கேட்டால், தொலைப்பேசியை துண்டிக்கின்றாள். எங்களின் அதிகாரிக்கு தகவல் சொன்னால், ஏற்கனவே எனக்கு நிறைய பிரச்சனைகள், தயவு செய்து என்னைத் தொல்லை செய்யாதே, நீங்கள் இருவரும் முதிர்நிலை ஊழியர்கள், படித்தவர்கள், அனுபவசாலிகள் உட்கார்ந்துப் பேசி முடிவெடுங்கள், என்கிறார். இனி பேச்சுக்கு இடமில்லை. அவளை உண்டு இல்லையென்று செய்கிறேன் பார் என கங்கணம் கட்டிக்கொண்டு, அதற்கும் தோதான வார்த்தைகளைக் கோர்த்துக்கொண்டிருந்தேன்.. இதற்கும் முடிவு கட்டவேண்டும். இதெல்லாம் மனதை பாரமாக்குகின்ற குப்பைகள்.

இப்படியே எண்ண அலைகள் மனதில் மோதிக்கொண்டிருந்தது.

வேலைக்கு வந்தாச்சு, மதிய உணவு வேளையும் வந்தாச்சு. வேலை கொஞ்சம் அதிகமிருந்ததால் திட்டமிட்ட எண்ணங்களைச் செயல்படுத்த இயலாமல் அவை உள்ளேயே தணலாக இருந்தது. அதை எரியூட்ட வந்தது ஒரு ஊதுகுழல்.

சக ஊழியர் ஒருவள் அழைத்தாள். `அக்கா கண்டீனுக்குச் சாப்பிட வறீங்களா? எனக்குத்துணையில்லை இன்று, தனியாளாக கண்டீன் போகக் கடுப்பாக இருக்கிறது.’ என்றாள். சரி வா, என்று இருவரும் சாப்பிடச்சென்றோம். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அங்கே புதிதாக வேலைக்கு வந்திருந்த சகபணியாளர் ஒருவர், நானும் சாப்பாடு எடுத்துக்கொண்டு, இங்கே வந்து உட்காரப்போறேன், காத்திருங்கள், என்று சொல்லி வரிசையில் உணவு எடுக்க நின்றுக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன், `இதோ வருதுபாருங்க.. மேனாமினுக்கி, பேஸ்புக்’கில் எல்லாமே ஆம்பள கூட்டலிகள். நாம போய் பேசினா கூட பேசமாட்டா. எப்பப்பார்த்தாலும் அழகழகா படம் பிடிச்சி போட்டுக்குவா.. நான் குளிக்கப்போறேன், நான் சாப்பிடப்போறேன், என் காதலன் வெலண்டையின் பரிசு ரோஜா கொடுத்தான், என ஓயாமல் எதையாவது போடுவாள். கமெண்டும் லைக்கும் வலுவா மாஸுக் பண்ணும். வேலைவெட்டியே இருக்காது போலிருக்கு.. இதே வேலையா இருப்பா பேஸ்புக்’கில். இப்பகூட பாருங்க, பக்கத்தில் வந்து உட்காருவா, எனக்கு மயக்கமே வரும்.. விதவிதமான பெர்ஃப்யூம் எல்லாம் போடுக்குவா. அய்யோ அப்பா. கிட்ட நிற்கவே முடியாது.’ 

வந்தது பாருங்க எனக்கு எரிச்சல், தணல் பற்றிக்கொண்டது.... 

`நீ இருக்கிற குண்டிற்கு உனக்கு பாய்ப்ரெண்ட் இல்லை, அவள் அழகி அவளுக்கு பாய்ப்ரெண்ட் இருக்கு. ரோஸ் கொடுக்கறானோ அதை அவள் பேஸ்புக்கில் போடறாளோ அது அவளின் விருப்பம். இதைப்பற்றி நீ ஏன் பின்னால் பேசுகிறாய்.? உங்க டிப்பார்மெண்டில்தானே வேலை செய்கிறாள், நேராகவே சொல்லவேண்டியதுதானே..! அவள் மேனாமினுக்கி என்கிறாயே, உன்னால் முடியுமா? முகத்தைக்கூட சரியாகக் கழுவாமல் தூங்குமூஞ்சியைத் தூக்கிக்கொண்டு வேலைக்கு வருகிறாயே, மேக் ஆஃப் போடுவதென்றால் உனக்கு அவ்வளவு இளக்காரமா? அவள் வேலைக்கு வரும் நிலையைப்பார்த்தால், ஒவ்வொருநாளும் அவளின் தூய்மை, அழகு, உடை உடுத்துதல், சிகை பராமறிப்பு போன்றவற்றிக்கு அவள் எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது ஒன்று அல்லது இரண்டுமணிநேரமாவது ஆகலாம். காலையில் இப்படிவேலைக்கு வர அவள் அதிகாலை எத்தனை மணிக்கு எழவேண்டும் தெரியுமா..! அது ஒரு கலை.. தமக்கான வாழ்வை ரசித்து வாழ்கிறாள். அது ஒண்ணும் தப்பு இல்லையே.!

பேஸ்புக்’கில் அப்படி ஆகனும்னா நீயும் நிறைய பிரெண்ட்ஸ் வைச்சுக்கோ. அவளுக்கு வேலை இல்லையென்றால், அவள் என்ன செய்கிறாள் என்று சதா நோட்டம் பார்க்கிறாயே, உனக்கு வேறுவேலை இல்லையென்றுதானே அர்த்தம்.! வேலை இருந்து அதை நீ நல்வழியில் அமல்படுத்துகிறாய் என்றால், நீ ஏன் இந்த வேவு தொழில் செய்யப்போகிறாய்.!!  அழகா உடுத்துவது தப்பு இல்லை, பேஸ்புக்’கில் சாப்பிடுகிறேன், குளிக்கிறேன், பாய்ப்ப்ரெண்ட் இதை வாங்கித்தந்தான், அதை வாங்கித்தந்தான் என்று போடுவதும் தப்பில்லை.. இப்படி ஒழுக்கமில்லாமல் யாரையாவது குறைசொல்லித்திரிவதுதான் கேடுகெட்ட செயல். திருந்துங்கடி.. இனி என்னை சாப்பிட அழைக்காதே.. என்று சொல்லி விருட்டென்று இடத்தைக் காலி செய்தேன்.

சேகரித்து வைத்த வார்த்தைகள் எல்லாமும் – காணாமல் போனது.                       

செவ்வாய், மார்ச் 05, 2013

மண்ணே உரமாக..

செடிகளுக்கு உரமிட்டேன்.

`என்ன செய்கிறாய் அக்கா, காலையிலேயே?’ கேட்டாள் வேலைக்காரி.

`உரமிடுகிறேன்..’

`அப்படியென்றால்?’

` பலவித கழிவுகளால் செய்யப்பட்ட பொருள் இது. சந்தையில் விற்பார்கள். ஒரு பாக்கெட் மூன்று ரிங்கிட் விதம்.. செடிகளுக்குப் போட்டால், செடிகள் செழிப்பாக வளரும்..’

`ஓ... எங்க ஊரில் (இந்தோனீசியாவில் ஒரு குக்கிராமம்) இப்படியெல்லாம் செய்யாமலேயே, செடிகள் செழிப்பாக வளரும்.’

திங்கள், மார்ச் 04, 2013

மொழி வேண்டாம்

நீண்ட நாட்களாக புத்தக அலமாரியை அலங்கரித்த எனது புத்தகங்கள் தூய்மைப்படுத்தாமல் தூசு மண்டிக்கிடந்தது.

என் வீட்டுப் பணிப்பெண்ணை அழைத்து, எல்லாவற்றையும் சுத்தம் செய்யலாம் வா, என்றேன்.

அவளை மட்டும் அந்த வேலையைச் செய்யச்சொல்லலாம்தான், தமிழ் மொழி தெரியாத அவள் தலை கீழாக எல்லாவற்றையும் அடுக்கிவிடுவாள். இன்றைய தூய்மைப் படுத்துதலின் நோக்கமும், ஏற்கனவே அவள் தனியாளாக தூய்மைப்படுத்துகிறேன் என எல்லாவற்றையும் `கசா முசா’ என்று அடுக்கிவைத்திருந்தாள். அவளுக்கு என்ன தெரியும், சொல்கிற வேலையைச் செய்கிறாள், அவ்வளவுதான்.

இன்று நானும் அவளுடன் சேர்ந்துகொண்டு அலமாரியை சுத்தப்படுத்த ஆயத்தமானேன்.

ஒவ்வொரு பகுதிகளாக புத்தகங்களை எல்லாம் அள்ளிக் கீழே போட்டுவிட்டு ஈரத்துணியால் தூய்மை படுத்திக்கொண்டிருந்தாள் இந்தோனீசியப் பணிப்பெண்.

கீழே உள்ள புத்தகங்களையெல்லாம் பொறுக்கிப்பொறுக்கி எதை எதை எங்கெங்கு வைக்கவேண்டுமோ அதையதை அங்கங்கு வைப்பதற்கு புத்தகங்களைத் தேர்வு செய்துகொண்டிருந்தேன்.

ஒரு வரிசையில் சைவசித்தாந்தம்/ஆன்மிகம். ஒரு வரிசையில் ஓஷோ. ஒரு வரிசையில் நாவல்கள், ஒரு வரிசையில் தத்துவங்கள், ஒரு வரிசையில் என்னை அதிகம் கவர்ந்த புத்தகங்கள், ஒரு வரிசையில் மொக்கைப்புத்தகங்கள், ஒரு வரிசையில் ஆங்கிலம் மலாய் புத்தகங்கள், ஒரு வரிசையில் இதழ்கள் என, புத்தகங்களை வகுத்துக்கொண்டிருந்தேன்.

“அக்கா, இவ்வளவு புத்தகங்கள் வைத்திருக்கின்றாயே.. எல்லாவற்றையும் வாசிப்பாயா?”

“ஆங்..நேரம் கிடைக்கும்போது நிச்சயம் வாசிப்பேன்..”

“எத்தனை வருடங்களாகச் சேகரிக்கின்றாய்?”

“பள்ளி படிக்கும் காலக்கட்டத்தில் இருந்து...”

“ம்ம்.. யா... நிறைய வாசிக்கின்றாய்..மலாய் மொழியில் இருந்தால் நானும் வாசிப்பேன்..”

“உனக்கு என்னமாதிரியான புத்தகங்கள் பிடிக்கும் என்று சொல்லு, வாங்கி வருகிறேன்..”

“ஓ யா.. ம்ம்ம்.. கார்ட்டூன் புத்தகங்கள் பிடிக்கும்..”

“ஓ.. அப்படின்னா, சுப்பு உடைய புத்தக அலமாரியைத்தான் நீ அலச வேண்டும்.. அங்குதான் அவன் கார்ட்டூன் புத்தகங்களை நிறைய வைத்திருக்கின்றான்.”

“ ம்ம்ம்.. யா..  இதில் எதெல்லாம் படித்துவிட்டாய்..? புன்னையோடு கேட்கிறாள்.

“ நாவல்கள் பெரும்பாலும் வாசிக்கப்பட்டது தான், ஓஷோ புத்தகங்கள் எல்லாமும் வாசித்துவிட்டேன்.. இன்னும் நிறைய..” என்று சொல்லிக்கொண்டே, வாசித்துவிட்ட சில புத்தகங்களை அவளிடம் காண்பித்தேன்.

“ ம்ம்..ரொம்ப பழைய புத்தக ஏடெல்லாம் கிழிந்துபோச்சு, அப்படியே வைத்திருக்கின்றாய்.. வீசவேண்டியதுதானே.!”

“ஹூஹும்.. அதுமட்டும் முடியாது..”

“ஓஷோ பார்ப்பதற்கு, ஓசாமா பின் லேடன் மாதிரியே இருக்கின்றார்..”

“ஆ..இருக்கலாம் தாடி வைச்சிருக்கார் இல்லெ..”

“ம்ம்ம்ம்...”

இப்படியே எங்களின் உரையாடல், மலாய்மொழியில் தொடர்கிறது.. வேலையின் நடுவே..!  இடையிடையே, இது என்ன புக்? அது என்ன புக்? இது எதைப்பற்றி? அது எதைப்பற்றி? சமையல் புத்தகம் இல்லையா? பைபள் இல்லையா? (அவள் கிறிஸ்டியன்) என்கிற கேள்விகள் வேறு.. சொல்லித்தான் ஆகவேண்டும் இல்லையேல் அவமதிப்பாகிவிடுமே.! சொல்லிக்கொண்டே வேலை நடந்தேறியது..

எல்லாப்புத்தகங்களையும் அடுக்கி முடித்தபிறகு, ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் மடியில் வைத்துக்கொண்டு, தூய்மைப் படுத்தும் வேலையெல்லாம் முடிந்து எழும்போது, நான் இதனின் படங்களைப் பார்த்துவிட்டு கொடுக்கிறேன் என்றால் திட்டுவாயா அக்கா,? என்று கேட்டாள்.

“ அட, இதில் என்ன இருக்கு..!! சரி, பார்.. பார்த்தவுடன் புத்தகத்தை இருந்த இடத்திலேயே வைத்துவிடு...”

அப்புத்தகத்திற்கு மொழி தேவையில்லை. மொழியின் அவசியமும் இல்லை. படங்கள் சொல்லும் ஆயிரம் கதைகள்

இன்றிரவு, அறைக்குள் விரைவாக நுழைந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாள் புத்தகத்தோடு, பணிப்பெண்.  



வெள்ளி, மார்ச் 01, 2013

உலகம் உருண்டை

அக்கா மகன் சொல்பேச்சு கேட்கமாட்டேன் என்கிறான், பள்ளியில் ஆசிரியருக்கு அவனைப்பிடிப்பதில்லை, கொடுக்கும் வீட்டுப்பாடங்களை சரியாகச் செய்வதில்லை..அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடுகிறான்.. பள்ளியில் படிக்கும் சக மாணவன் அவனின் அப்பாவிடம் சொல்கிறான். அவனின் அப்பாவும் என் தம்பியும் நண்பர்கள். அவர் தம்பியிடம் சொல்ல, தம்பி என்னிடம் தொலைப்பேசியில் அழைத்து விவரத்தைச் சொல்லி, உன் மகன் காலெஜ் லீவில் வீட்டிற்கு வந்தால் அவனை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றுகிறான், இவன் அவனுக்கு அண்ணன் தானே, காலெஜ் படிப்பவனும் பள்ளியில் பட்டிப்பவனும் ஒன்னா? நல்ல கோஸ் கிடைக்க அவன் பள்ளியில் நன்றாகப் படித்து நல்ல பெயர் எடுக்கவேண்டாமா..!!அறிவுரை கூறி கண்டிக்கச்சொல்லு, என்கிறான், இருவருக்கும் தாய் மாமனான என் தம்பி. நான் என் மவனிடம் அப்படியே சொல்கிறேன். என் மவன் அவனைச் சந்திக்கச்செல்லும் போது, இதை அவனிடம் சொல்கிறான்.. அக்கா மகன் பள்ளிக்குச் சென்று இந்த விவரத்தை குடும்பத்தில் போட்டுக்கொடுத்த நண்பரின் மகனை சில நண்பர்களுடன் வழிமறைத்து சட்டையைப்பிடித்து உலுக்கி, ஒழுங்கு மரியாதையா இரு..பிச்சி புடுவேன் பிச்சி என்றிருக்கிறான். அவன் அழுதுக்கொண்டே அவன் அப்பாவிடன் சென்றிருக்கிறான். விவரத்தை அறிந்த அவனின் அப்பா என் தம்பியிடன் முறையிட்டான். தம்பி எனக்கு அழைத்து விவரத்தைச் சொல்லி, என்ன நடக்கிறது..? தேவையா இது..! சொல்லிவை, என்றான். நான் என் மவனிடம் , ஐய்யா சண்டை வரும் போலிருக்கு என்ன சொன்னே நீ? என்றேன். உண்மையைச்சொன்னேன் (பாட்ஷா வசனம்) என்றான். மீண்டும் மகன் அக்கா மகனுக்கு இவ்விரத்தைச் சொல்ல, அவன், இரு இரு திங்கட்கிழமை வைச்சுக்கிறேன் அவனை என்கிறானாம்..
டேய் பசங்களா, ஆணியைப் புடுக்க வேண்டாம்.. பிஞ்சிடும் ஜாக்ரதை.. என்று சொர்ணக்கா லெவலில் ஒரு மிரட்டுப் போட்டுள்ளேன்.  பார்ப்போம் கதை மீண்டும் சுழல்கிறதா என்று...