ஞாயிறு, டிசம்பர் 08, 2013

பூ என்னைப் பார்த்து சிரித்தது.

காலையிலிருந்து ஒரு விஷயம் என்னை நெருடிக்கொண்டே இருந்தது.

கீரை ஆய்கிறேன். மனம் லயிக்கவில்லை. மீன்களைக் கழுவி சுத்தம் செய்தேன் மனம் லய்க்கவில்லை. என்ன என்று சரியாகப் புரிபடவில்லை.

வாஷிங் மிஷின் அருகில் கொஞ்ச நேரம் நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன். உள்ளே வந்தேன், அடுக்கி வைத்துள்ள மங்கு பாத்திரங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை முகர்ந்துபார்த்தேன். அதில் ஒரே ஒரு மங்கு சரியாகக் கழுவாமல் இருந்ததால் ஒருவித முட்டை  வாடை வீசியது. அதை மீண்டும் எடுத்து அந்த நாற்றம் போகும் வரை கழுவினேன். ஓ இதுதான் அந்த நெருடல் போலிருக்கு என்று மீண்டும் வேலைகளில் மூழ்க எத்தனித்தேன்.

நெருடல் தொடர்ந்தது. ஒருவேளை உப்பு ஜாடியில் உப்பு முடிந்துவிட்டதால்தான் இந்த நெருடலோ, என ஏற்கனவே அலமாரியில்  வாங்கி வைத்திருந்த உப்பு பொட்டலத்தைப்பிரித்து ஜாடியை நிரப்பினேன்.

வேலைகள் தொடர்ந்தன. மீண்டும் என்னமோ நினைவுக்கு வர, குளிர்சாதன பெட்டியின் அருகில் சென்று அதைக்கொஞ்ச நேரம் முறைத்துப்பார்த்தேன். அங்கே வைக்கப்பட்டிருந்த காய்கறிகளின் பெட்டகத்தைச் சுத்தம் செய்தேன். வாங்கிய பச்சை மிளகாய்கள் காம்பு எடுக்காமல் அப்படியே வைக்கப்பட்டதால் காம்பு உள்ள சில மிளகாய்கள் அழுகி இருந்தது.  காய்கறிகள் அனைத்தையும் உள்ளிருந்து வெளியே எடுத்து மீண்டும் தூய்மைப் படுத்தி புதிய காகிதம் மாற்றி அவைகளை அடுக்கி வைத்தேன்.

சமையல் வேலைகள் தொடர்ந்தன. நெருடலும் தொடர்ந்தது. ச்சே என்ன இது..? தொலைப்பேசியை எடுத்தேன், தங்கையை அழைத்தேன், ``இன்னிக்கு மாயாஸ் போவியா, அரிசி வாங்கணும், போகும்போது சொல்லு நானும் வரேன்.”

நெருடலைப் பொருட்படுத்தாமல் சமையலில் மூழ்கினேன். வசிங் மிஷின் ஒரு பக்கம் `லொட..லொட..லொட’ என்கிற சத்தத்தைக் கொடுத்துக்கொண்டு தனது வேலையைச் செய்து கொண்டிருந்தது.

லப் டாப்’ஐ முடக்கி நாதஸ்வர இசையைத் தட்டிவிட்டேன். அவ்விசை கோவிலில் திருமண மண்டபத்தில் இருப்பதைப்போன்றதொரு சூழலைக்கொடுத்தது. நெருடல் விலகியிருந்தது. கொஞ்ச நேரம்தான் மீண்டும் மீண்டும் என்னமோ என்னை நெருட ஆரம்பித்தது.

நேரமாச்சு, சமையல் முடிந்ததா? ஒரு குரல் வந்தது. தோ ஆய்கிட்டே இருக்கு, என்று பதில் கொடுத்துவிட்டு சமையலை முடிக்கின்ற வேலைகளில் மும்முறமானேன்.

சமையல் முடியவும் மிஷினில் போட்ட துணிமணிகள் துவைத்துமுடிக்கவும் சரியாக இருந்தது. துணிகளை உலரவைக்க எடுத்தேன். நெருடல் குடையல் தொடர்ந்தது.

என்ன இன்று ஒரு மாதிரியாகவே இருக்கின்றதே. என்ன பிரச்சனை.? எல்லா வேலைகளையும் தூய்மையாக முடித்துவிட்டேனே.!? என்று மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டே துணிகளை உலர வைத்தேன். உலரவைத்த துணி ட்ரொலியை இழுத்து வெளியே வெயிலில் வைக்கின்ற தருணத்தில்போது எனது நெருடலுக்கு பதில் கிடைத்தது.

எனது ரோஜா செடி இருக்கின்ற இடத்தின் அருகில் ஒரு பூனை மலம் போயிருந்தது. அந்த மலம் இருக்கின்ற இடத்திற்கு நேராக எனது ரோஜா செடியின் அழகிய பூ ஒன்று விரிந்து வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்தது.

நேற்று மாலைமுடிந்து இரவு சந்திக்கின்ற வேளையில் எனது காரை எடுக்கின்றபோது அக்காட்சியினைப் பார்த்தேன். இருளாகிவிட்டது, நாளைக் காலை விடிந்தவுடன் இதை நான் சுத்தப்படுத்தவேண்டும் என்கிற சிந்தனையில் உறங்கச்சென்றதை மறந்தேபோனேன்..

யோசிக்க அவகாசம் கொடுக்காமல் உடனே அதைத்தூய்மை படுத்தி, அவ்விடத்தைக் கழுவி சுத்தம் செய்தபின்புதான் நெருடல் குடைச்சல் என்னை விட்டு அகன்றது.

அசிங்கத்தை நினைக்கவே வேண்டாம். அது இருந்தாலே போதும்... நெருடல் வரும்.

பூ என்னைப் பார்த்து சிரித்தது.

2 கருத்துகள்: