திங்கள், ஜூன் 02, 2014

நூல் புடவை

திருமணம் ஒன்றிற்குச் சென்றுவந்தேன். எங்கேயாவது சென்று வந்தால், அங்கு ஏற்பட்ட அனுபவங்களை அசை போட்டுப்பார்ப்பதில் எனக்குப் பிரியம். பகிர்கிறேன் என்ன சிக்கல் என்பதனை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
மண்டம் நிறைந்து வழிந்தது. செம்மையான கூட்டம். மிகப்பெரிய பிரமுகர் திருமணம் போல் கோலாகலமாக நடைபெற்றது. (சாதாரண ஆட்கள்தான்)
பெரிய மண்டபம், ஆட்கள் உள்ளே நகர்ந்து செல்வதற்குக் கூட இடைவெளி இல்லாத மேஜை நாட்காலிகளின் வரிசைகள். தொந்தி பெரிதாக உள்ள ஆள் உள்ளே நுழைந்து இருக்கைகள் தேட எண்ணினால், வர்சையாக அமர்ந்திருக்கின்ற ஆட்கள் எழுந்து நகர்ந்து வழிவிடவேண்டும். அவர்களும் நகர்கின்றபோது, பின்னே அமர்ந்திருக்கிற மற்றவர்களும் எழவேண்டும். அவர் எழவேண்டுமென்றால் அருகில் சுற்றி இருக்கின்ற மற்றவரும் நகரவேண்டும். இப்படியே எல்லா தடைகளையும் தாண்டி உள்ளே ஓர் இடம் கிடைத்தால், மணமக்களைப் பார்க்கமுடியவில்லை.
சரி யார்தான் பொண்ணு? (நாங்கள் மாப்பிள்ளை வீட்டார்) என்று எழுந்து நின்றால், `எம்மா கொஞ்சம் வழிவிடுங்க..’ என்று எங்களை ஓட்டுவதற்கு வேறு ஒரு ஆள் பக்கத்தில்...
மண்டபம் முழுக்க டீம் லைட். பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கூட கண்களுக்கு மங்களாகத்தான் தெரிகிறார்கள்.
எங்கோ ஒரு மூலையில் உறவில் கொஞ்சம் நெருங்கி நட்பு பாராட்டும் ஒருவர் எங்களைப் பார்த்து கைதூக்கினால், அவரைச் சென்று நலம் விசாரித்துவிட்டு வரலாம் என்றால்.. நகரமுடியவில்லை.
பிறகு அவர்களே முட்டிமோதி, நாங்கள் இருக்கின்ற இடத்திற்கு வந்து கைகளைக் குலுக்கி நலம் விசாரித்து, என்னமோ கேட்கின்றார்கள், ஒன்றுமே விளங்கவில்லை. டாலிங்கு டம்பக்கு டாலிங்கு டம்பக்கு காதுகளைக் கிழிக்கின்றது.
கெட்டிமேளம் சத்தம் கேட்டது. தாலி கட்டியாச்சு. மொய் கொடுக்கலாம் என்று திரும்பினால் நீண்ட வரிசை.
முதலில் சாப்பிடலாமே என்று சாப்பாட்டு வரிசை பக்கம் திரும்பினால்.. ஆத்தா.. கூட்ட நெரிசல்.. வரிசை S வடிவில் நிற்கிறது. வாசலில் போடப்பட்ட அழகான மயில் ரங்கோலி கோலத்தை அழித்துக்கொண்டு வரிசை.
அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு இரண்டே இரண்டு சாப்பாடு கவுண்டர்தான் திறந்துவைத்திருகின்றார்கள். சிறிய வரிசைதான்போல, என்று நானும் என் மற்றொரு உறவுக்கார பெண்ணும் நிறக ஆரம்பித்து, உணவின் மணம் நாவில் எச்சியை வரவழைக்க, ஊறிய எச்சிலை இருவரும் மடக் மடக் என்று விழுங்கிக்கொண்டு காத்திருந்தோம்.. குறைந்தது நற்பத்தைந்து நிமிடங்கள் காத்திருந்த பின் உணவு கிடைத்தது.
அதை எடுத்துக்கொண்டு சாப்பிட உற்கார இடம் தேடினால், இடைத்தைப் பிடித்துக்கொண்டு `ஆள் இருக்கு..’ `ஆள் இருக்கு..’ என்று விரட்டினார்கள். மீண்டும் முன்னே எம்பி எம்பி சென்று இடம் பிடித்து அமர்ந்து ஒருவகையாகச் சாப்பிட்டு முடித்தோம்.
சரி, மொய் கொடுக்கலாமே என்று மேடைக்குச்சென்றால், கீழே இருந்து உறவுகள் நண்பர்கள் என வரிசை. என் உறவுக்காரப் பெண்.. வாங்க மேடைக்குப் போகலாம்.. ஒரு போட்டோவாவது பிடித்துக்கொள்வோம். நாம் வந்திருக்குக்கின்றோம் என்கிற அத்தாட்சி அதுதான். நம்மை யாரும் கவனிக்கவில்லை. நாளைக்கு, நீங்கள் கல்யாணத்திற்கு வரவில்லை என்று யாராவது சொன்னால், போட்டோ இருக்கு.. சாட்சிக்கு, என்றார்.
சரி போகலாமே என்றால்.. மேடைக்குச் செல்லுகையில் காலணிகளைக் கலற்றிவைத்துவிட்டு, ஏறிய படியிலேயே இறங்குகின்றார்கள், காலணிகளை எடுக்க.. நெரிசல் அங்கேயும்..
வா.வா.. வா.. என்றவரை நைஸாக முன்னே தள்ளிவிட்டு, அப்படியே நான் விலகிக்கொண்டேன்.
மேலே, மேளதாளங்கள் வாசிப்பவர்கள் ஒரு பக்கம். ஷூட்டிங் எடுப்பவர் ஒரு பக்கம். கையில் கைப்பேசியை வைத்துக்கொண்டு, அங்கேயும் இங்கேயும் மணமக்களை புகைப்படம் எடுப்பவர்கள் ஒரு பக்கம்.. மொய் பையைப் பிடித்துக்கொண்டு அது நிறைந்து வழிவதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பெற்றோர்கள் ஒரு பக்கம். பரிசுகளை அடுக்கத்திண்டாடும் பொண்ணு மாப்பிள்ளைகளின் உடன்பிறப்புகள் ஒரு பக்கம்.
வந்ததிற்கு நன்றி என்று சொல்வதற்கும்.. சாப்பிட்டுப்போங்கள் என்று சொல்வதற்கும் ஆள் இல்லை. மணமக்களின் பெற்றோர்கள் வேர்த்து விருவிருத்து செய்வதறியாமல்..
பெரிய குறை, நான் கட்டியிருந்த புடவையை யாரும் ரசிக்கவில்லை, தமிழ் நட்டில் வாங்கினேன். விலையுள்ள நூல் பட்டுப்புடவை அது.
:(((((((

2 கருத்துகள்:

  1. ஆகா, சாப்பிடுவதற்கும் மொய் வைப்பதற்குமே கடினமா

    பதிலளிநீக்கு
  2. பல திருமணங்களில் இது தான் நிலை - ஏண்டா போனோம் என்று நினைக்க வைத்துவிடும்!

    பதிலளிநீக்கு