புதன், செப்டம்பர் 24, 2014

சுமங்கலி

குடும்பமாகப் பழகிய எனது பழைய நண்பர் ஒருவரின் அம்மா இறந்துவிட்டார். இரண்டு மாதங்கள் கழித்து இன்றுதான் அத்துயர சம்பவத்தை என்னிடம் பகிர்ந்தார் என் நண்பர்.

``அடப்பாவி, ஏன் என்னிடம் சொல்லவில்லை.? அம்மா.. அடக்கடவுளே நல்ல மனுஷி அவங்க..அழகி, என்னாச்சு.? இளமையா இருப்பாங்களே.. ஏன் திடீர்ன்னு..?’’ என்று திட்டிக்கொண்டே அழ ஆரம்பித்துவிட்டேன்.

``அய்யோ அழாதிங்க விஜயா... சாரி சாரி.. நுரையீரல் கன்சர். வந்ததும் தெரியல, வீழ்ந்ததும் தெரியல.. எங்களாலே நம்ப முடியல.. சாரி..’’ என்று சமாதானம் சொன்னார்.

``என்னிடம் ஏன் சொல்லல.? பேராக்கில் இருந்தால் என்ன கெடாவில் இருந்தால் என்ன.! எப்படியாவது வந்திருப்பேனே..! கண்ணிலேயே இருக்காங்களே.. மங்களகரமான அழகி. அம்மா..’’ என்று கேவினேன்.

``இல்லை விஜயா.. நீங்க, பிள்ளைகளின் பட்டமளிப்பு விழா, விருந்து, மகளின் தேர்வு, என ஒரே மகிழ்வாக இருந்த காலகட்டம் அது.. இத்துயர சம்பவத்தைப் பகிர எனக்கு மனசு வரல..’’ என்றார்.

``இதெல்லாம் காரணமா..? ’’ அழுதுகொண்டே, என்னால் பேசமுடியவில்லை.

நான் முன்பு வேலை செய்த இடத்தில் என்னோடு வேலை செய்த நண்பர், பின்பு என் குடும்ப நண்பரானார். கணவருக்கு நண்பராகி. மனைவி என் தோழியாகி,  குழந்தைகளும் நண்பர்களாகி, என் மாமி மாமனாரும்நண்பர்கள் ஆனார்கள்.

ஒருமுறை பேராக்கில் நடைபெற்ற உறவுக்காரர் ஒருவரின் திருமண வைபவத்திற்குச் சென்றிருக்கையில், அங்கே இவர்களையும் சந்திக்க நேர்ந்தது.! யார், எப்படிப்பழக்கம்? என்று விசாரிக்கின்ற போது, ஒரு வகையில் தூரத்து உறவும் ஆனார்கள். அன்றிலிருந்து, நாங்கள் பேராக்கிற்குச் செல்கிறோம் என்றால், எங்களை வரவேற்க நண்பரின் அம்மாவும் அப்பாவும் காத்துக்கிடப்பார்கள். விதவிதமான சமையல்களைச் செய்து வைத்துக்கொண்டு. `கண்டிப்பாக வரணும்.இவ்வளவு தூரம் வந்துவிட்டு, இங்கே வரலன்னா, நான் கோவிச்சுக்குவேன்..’ என்று உத்தரவு போடுவார்.

இன்னொரு சிறப்பு என்னவென்றால்,  அவர்களின் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்துவிட்டார்கள். பெரிய பதவியில் உள்ளவர்கள் அவர்கள்.  கொஞ்சம் வசதியான குடும்பமும் கூட. கணவன் மனைவி இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல் ஒற்றுமையாக இருப்பார்கள். ஒன்றாகச்சேர்ந்தே ஊர் உலகமெல்லாம் சுற்றுவார்கள். அடுப்படி வேலைகள் தொடங்கி எடுபிடி வேலைகள் வரை அனைத்தையும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்தே செய்வார்கள்.நான் கூட அடிக்கடி என் நண்பரிடம் சொல்வேன்.. `பாருங்க புதுப்பொண்ணு மாப்பிள்ளை மாதிரி ஜிம்முன்னு இருக்காங்க இன்னமும்,’ என்று.

கோலாலம்பூர் வரும்போதெல்லாம்.. நான் எப்படி இருக்கேன்? என்று தவறாமல் கேட்பாராம் அம்மா. நானும் தொலைப்பேசியில் அழைக்கின்ற போதெல்லாம், புதுப்பொண்ணும் மாப்பிள்ளையும் எப்படி இருக்கின்றார்கள்? என்று தவறாமல் விசாரிப்பேன்.

அவரின் முகம் என் கண்முன்னே வந்து வந்து செல்கிறது. சோகம் கவ்வுகிறது. இருப்பினும் பிரார்த்தனை செய்து மனதை சாந்தப் படுத்தினேன்.

இதை யாரிடமாவது பகிர்ந்தால், மனதின் பாரம் குறையுமே என்று நினைத்து என் தோழிக்கு அழைத்தேன். அவளும் நானும் ஒருமுறை நண்பரின் வீட்டிற்கு மதிய உணவிற்குச் சென்றிருக்கையில் அம்மா இருந்தார். முருங்கைக்கீரை, முருங்கைக்காய் சாம்பார் என அவரின் சமையலை ஒரு பிடிபிடித்தோம் அப்பாதான் பரிமாறினார்.

அம்மா வந்துள்ளார், என்றால், அலுவலகத்திற்கு அழைப்பு வரும் மதிய உணவு நேரத்தின் போது. ``வரச்சொல் சாப்பிட, ’’ என்று உரிமையோடு அழைப்பார் அம்மா. அது ஒரு காலம்.

தோழியிடம் இத்துயரச் செய்தியினை பகிர்ந்தேன். அவளும் அதிர்ந்தாள். அதிர்ந்த அவள் ஒரு வார்த்தையை உதிர்த்தாள்.. நல்ல சாவு. சுமங்கலியாகச் சென்றுவிட்டார்.

இது எனக்கு இன்னும் வேதனையாக இருந்தது. சுமங்கலியாகச்செல்வது ரொம்ப முக்கியம் நம்மவர்களுக்கு .! இதுபோன்ற சிந்தனையில் இருந்து என்றுதான் விடுதலையோ.?

அம்மாவிற்குப்பிறகு அப்பா என்னசெய்வார்.? அம்மாதானே அவருக்கு உலகம்.! இன்னேரம் அப்பா என்ன செய்துகொண்டிருப்பார்.? தனியாக,?மருமகளுடன்? மகளுடன்? பேரப்பிள்ளைகளுடன்.? வெளிநாட்டில்? எங்கே இருப்பார். ? அவரை நினைக்க வேதனை இன்னும் கூடுகிறது.


3 கருத்துகள்:

  1. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  2. சுமங்கலியாகச் சாவது நல்ல சாவு என்று நம் முன்னோர்களை நம்ப வைத்து சாமாதானம் சொல்லி ஏமாற்றியது ஒரு கூட்டம். அதை இன்றும் நம்பிக்கொண்டிருப்பது முட்டாள்தனம். கணவன் உழைப்பை குடும்பம் நம்பி வாழ்ந்த காலத்தில் அவன் முதலில் இறந்துவிட்டால் அவள் விதவைக் கோலம் பூண்டு வாழ்நாளைக் கழிக்கவேண்டும் என்ற பழக்கத்தையும் நம் மக்களிடையே பரப்பி வழக்கிலும் கொண்டுவந்ததும் அதே கூட்டம்தான். அதற்கு கணவனுக்கு முன்பே பொய் விடுவது எவ்வளவோ நல்லது என்றுகூட இந்த எண்ணம் தோன்றியிருக்கலாம்.அதைவிட மற்றொரு பயங்கரமான தண்டனையும் மணமான பெண்களுக்கு தலைமேல் இருந்தது. கணவனே கண்கண்ட தெய்வமாதலால் அவன் இறந்ததும் அவனுடைய சிதையில் உடன்கட்டை ஏறி உயிருடன் வெந்து சாவது! இது எவ்வளவு பெரிய கொடுமை! இதிலிருந்து தப்புவதற்கும் ஒரே வழி சுமங்கலியாக சாவதுதான் நல்ல சாவு ! ( நல்ல வேளையாக இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டதால் அவர்கள் உடன்கட்டை ஏறுவதை கொலை என்று கூறி தடைசெய்து சட்டம் இயற்றினர். )இல்லையேல் ..சாதி அமைப்பு போல் .உடன்கட்டை ஏறும் பழக்கம் இன்றும் இருந்தால் ....? நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.! பல பெண்கள் திருமணமே வேண்டாம் என்று மறுத்து விடுவார்கள். ஆகவே அருமையாக எழுதும் அன்பு விஜயா. இது போன்று இன்னும் அநேக மூட நம்பிக்கைகளிலிருந்து இன்றும் படித்து பட்டம் பெற்றவர்கள்கூட விடுபட முடியாமல் அதை வாழையடி வாழையாக கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு வளர்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள்! அந்தோ பரிதாபம்!...அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    பதிலளிநீக்கு