செவ்வாய், செப்டம்பர் 27, 2016

செரிமானம்

 
மூன்று தக்காளி, இரண்டு முள்ளங்கி, மூன்று உருளைக்கிழங்கு, அரை கிலோ ஆட்டிறைச்சி...
`ஏம்மா, எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமாக வாங்குறீங்க.?’ தலைக்குமேல் உயர்ந்த மகன் தன் தாயிடம் கேட்டுக்கொண்டே, தாய் தேர்ந்தெடுத்த காய்கறிகளை கூடையில் போட்டு தூக்கிக்கொண்டான்.
`மாசம் முடியுற வரைக்கும் காசு வேணுமே.. இருக்கிற நூறு ரிங்கிட்’ஐ செலவு செஞ்சுட்டா, அப்புறம் நாளைக்கு என்ன செய்யுறதா.!?’ .
`பேங்க்’ல இல்லியா..?’
`எடுக்கற சம்பளம், திங்கறதிக்கே பத்தல. இப்ப சாமான் விக்கிற வெலைய பாத்த இல்லெ,.. இதுல, பேங்க்’ல வேறு காசு இருக்குமா.!?’ தாய் சொல்லிக்கொண்டே, எதையோ மறந்து விட்டதாக, மீண்டும் காய்கறி அடுக்கியிருக்கின்ற பகுதிக்குள் நுழைகிறாள்.
`எங்கேம்மா..?’
`இரு இரு, இஞ்சி ரெண்டு துண்டு எடுத்திட்டு வரேன். நீ போய் வரிசையில் நில்லு..’
நெரிசலான அந்த பேரங்காடியில் பணம் செலுத்துகிற கவுண்டர் எல்லாம் நீண்ட வரிசையினைப் பிடித்து நின்றது.
மகன் கூடையினை வைத்துக்கொண்டு வரிசையில் நின்றான்.
வரிசையில் அவர்களுக்கு முன் நின்ற மலாய்க்கார பெண்மணியின் ட்ரொலியில் அடுக்கியிருந்த சாமான்களைப் பார்த்தால், அது ட்ரொலிக்கு மேலேயே நின்றது. மேலும் சில சாமான்கள் விலைப்பட்டியல் இடாமல் பிளாஸ்டிக் பைக்குள் மட்டும் போடப்பட்டிருந்தது. விலைப்பட்டியல் இல்லாததால், கவுண்டரில் உள்ள பெண்மணிக்கு ஸ்கேன் செய்வதற்குக் கடினமாக இருந்தது. எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். விலைப்பட்டியல் இல்லாத பொருட்களை மீண்டும் எடுத்துச்சென்று நிறுவையில் வைத்து விலையினை ஒட்டவேண்டும். தவறு அவளுடையதுதான், முதலிலேயே அதைச்செய்துவிட்டு கவுண்டருக்கு வரவேண்டும். இப்போது பாதி ஸ்கேன் செய்யப்படுகிறது மீதியை எடுத்துக்கொண்டுபோய் விலைப்பட்டியல் இட்டு மீண்டும் எடுத்துவரவேண்டும்.
எல்லோருக்கும் அவசரம், வரிசையில் அதிகம் பேர் காத்திருக்கின்றார்கள். தன்னுடையதை முதலில் கணக்குப் பண்ணி அனுப்பிவிட்டால் தேவலாம் என்கிற மாதிரி சலிப்புடன் நின்றார்கள் சிலர். ஒரு சீனர், `Apa pasal lambat ni.? Cepat lah sikit..’ என்று ஒரு கோகோ கோலா’வை கையில் ஏந்திக்கொண்டு முகத்தை உர்ர் என்று வைத்திருந்தார்.
`Tolong tunggu ye, biar yang ini habis dulu. கவுண்டர் பெண்மணி பவ்யமாக பதிலுரைத்தார்.
நாங்களும் விரைவாகச் செல்லவேண்டும், கொஞ்சம் முடித்துக்கொடுத்தால், தேவலாம்.. என்பதைப்போல் மகனுடன் நின்ற அந்தத்தாயும் வேண்டுகோள் விடுத்தாள்.
`ஏம்மா அவசரம். முடியட்டும் போலாம்.’ என்றார் மகன்.
`சமைக்கணும், வந்திருவாங்க..’ என்றாள் தாய்.
அவர்களின் பின்னால் இருந்த நம்மவர் ஒருவர், `ஏன் இந்த வரிசை நகரவேயில்லை.. ? Orang dah ramai, bukak lah counter sebelah. Leceh tunggu lama.. என்றார் சத்தமாக.
தடுமாறினாள் கவுண்டரில் உள்ள பெண். உதவிக்கும் சிலர் வந்தார்கள். அவள் வேலைக்குப்புதியவள் போலும். பதற்றமாகவே இருந்தாள். அனுபவசாலி ஊழியர்கள் அப்பெண்மணிக்கு சில வழிகாட்டிகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த சிலர் இன்னும் கூடுதல் எரிச்சல் அடைந்தார்கள்.
ஒருவகையாக முன்னே இருந்த பெண்மணி நகர்ந்தாள்.
தாய் மகன் முன்னே, நின்ற சீனரும் டாப் டுப் படார் தடார் என்று பொருளை வைத்துவிட்டு பணம் செலுத்திக் கிள்ம்பினான்.
மகன் கூடையில் இருந்த பொருட்களை வைக்க, தாய் தன்னிடமுள்ள நூறு ரிங்கிட்’ஐ அப்பெண்ணிடம் கொடுத்தாள்.
பொருட்களின் விலை, ரிம17..00 தான். மீதம் ரிம83.00 கொடுக்கவேண்டும், ஆனால் அவள் என்ன பதற்றத்தில் இருந்தாளோ தெரியவில்லை, ரிம133.00 ஆக திருப்பித்தந்தாள்.
பணம் அதிகமாக திருப்பித்தருகிறாள், என்பதைத் தாய் உணர்ந்துகொண்ட போதிலும், வாங்கிய பணத்தை விரைவாக தமது பர்ஸுக்குள் திணித்தாள்.
மகன் பார்க்கவில்லை என்று நினைத்தாள் போலும். ஆனால், காருக்குள் ஏறிய மகன் கேட்ட முதல் கேள்வி,
`யம்மா, பணம் கணக்குத்தெரியாமல் அதிகமா கொடுத்திட்டா போலிருக்கு,’ என்றான் .. தாயிற்கு தூக்கிவாரிப்போட்டது.
`ஆ..ஆ..ஒ..ஓ..அப்படியா. கவனிக்கலையே, இரு பார்க்கிறேன்.’ என்று பாவனை செய்துவிட்டு, அட, ஆமா.. கூட கொடுத்திட்டா..’ என்றாள் தடுமாறியபடி.
`சரி, இந்தா பில், விளக்கிச்சொல்லி அவளிடம் பணத்தைத் திருப்பிக்கொடுத்திடு,’ என்று காரில் இருந்தபடியே மகனை அனுப்பிவைத்தாள், மனதிற்குள் `எல்லா கருமம் பிடிச்ச குணமும் என்னோடு ஒழியட்டும்..’ என்றபடி...

1 கருத்து:

  1. சொல்லிச் சென்றவிதம்
    நேரடியாகப் பார்க்கிற உணர்வு தந்தது
    முடித்தவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு