திங்கள், ஜனவரி 14, 2019

நட்பின் அத்தியாயம் - முற்றும்

இதை நான் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச்சொல்லவில்லை என்றால் நான் நன்றி கெட்டவள் ஆகிவிடுவேன். ஒருவரின் மறைவு
ஈடுகட்டமுடியாத இழப்பு என்பதற்கான அர்த்தத்தை இப்போது உணர்ந்து, அதைக் கொஞ்ச நாளாக அனுபவித்து வருகிறேன். நாம் நேசித்த ஒருவர் மண்ணைவிட்டு மறைந்துவிட்டால், அவரின் நினைவு வருகிறபோதெல்லாம், அவர் நமக்கு சுயநலமில்லாமல் செய்த சில செயல்கள் நம் முன் வந்து வந்து போகும்.
நட்பு என்றால், தினமும் கைக்கோர்த்து நடந்து சென்று உண்பது அரட்டை அடிப்பது ஊர் சுற்றுவது என்பதுதான் என்று பெருவாரியாக நினைக்கின்றபோதிலும், கிட்டத்தட்ட 18ஆண்டுகள் பார்க்காமல் சந்திக்காமல் தொலைத்தொடர்பின் மூலமாகவே நட்பு பாராட்டி உளமாற ரசனைகளைப் பகிர்ந்து, படித்ததை, பார்த்ததை அனுபவித்ததை, கேட்டதை நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் மனதில் எந்த ஒரு நெருடலும் இல்லாமல் உடனுக்குடன் பகிர்ந்து களிப்புறுகிற நட்பு நம்மில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்குமென்று எனக்குத்தெரியாது. ஆனால் நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. எனக்கு அப்படி ஒரு நட்பு இருந்தது ஆனால் இப்போது இல்லை. மரணித்துவிட்டார். சொல்லாமல் சென்றுவிட்டார்.
நோயாளியல்ல அவர். நோய்களுக்கு மருந்துசொல்லும் மருத்துவர். இருந்தபோதிலும் நோய் ஆள்பார்த்து வருவதில்லையே. அவரையும் தாக்கியது மாரடைப்பு. இறப்புச் செய்தியினைக்கேட்டு அவரின் மனைவிக்கு அழைத்தபோது சொன்னார், திடீர் மூச்சுத்திணறல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அசைவற்று, ஒருவாரத்திற்குப்பிறகு திரும்பிவரவேயில்லை, என்று. அன்று அவரின் மனைவிக்கு ஆறுதல் சொன்ன நான் ஆரம்பத்தில் தெளிவாகத்தான் இருந்தேன். கண்களில் ஒரு சொட்டு நீர்கூட வரவில்லை எனக்கு. மரணம் இயற்கை என்று மனதிற்குள் சொல்லிவிட்டு ஒரிரு வார்த்தைகளை முகநூலில் பகிர்ந்துவிட்டு, நான் எனது அன்றாட கடமைகளில் வழக்கமாக ஈடுபடத்துவங்கினேன்.
சில நாட்கள் சென்றது, எனது மகிழ்வு, சோகம், வாசிப்பு, எழுத்து, அறிவுப்பூர்வ கேள்வி, அறிவியல், மருத்துவம், இலக்கியம், நகைச்சுவை, பழைய சினிமா, காதல், வரலாறு, புத்தகம், ஆங்கிலம் என எதையொட்டிய தேடலாக இருந்தாலும் அங்கே டாக்டர் மட்டுமே வந்து நிற்கிறார். என்ன நடக்கிறது எனக்குள், என்கிற குழப்பத்தில் துவண்டுபோனேன். கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் எனது மனப்பூர்வ பகிர்வுகளில் டாக்டர் ஒருவர் மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததை உணரத்துவங்கினேன். உணர்ந்த மறுநொடி பயங்கரமான தனிமைக்குள் தள்ளப்பட்டேன். யாரிடமும் நான் மனதளவில் இவ்வளவு நெருக்கமாக இருந்தது கிடையாது. பெண் நட்பில்கூட இப்படி ஒரு நல்ல நட்பு எனக்கு இதுவரையிலும் இருந்ததில்லை. நிறைய நட்புகள் நமக்கு இருக்கலாம், இருந்தபோதிலும் யாரிடம் நாம் எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் பகிர்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதனை கூர்ந்து நோக்கினால் அங்கே ஒருவர் மட்டுமே இருப்பார். அப்படி இருந்த ஒர் நட்புதான் டாக்டர் ஜி.ஜான்சன்.
டாக்டர் அவர்களின் நட்பு 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் துவங்கியது. அப்போது, அவர் தமிழ்நேசன் பத்திரிகையில் மருத்துவ கேள்வி பதில் அங்கத்தை எழுதிக்கொண்டிருந்தார். அந்த அங்கத்தில் மருத்துவம் சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே இடமுண்டு என்கிறபோதிலும், அங்கு அச்சிடப்பட்டுள்ள அவரின் கைபேசிக்கு அழைத்துப்பேசினால், முகஞ்சுளிக்காமல் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் பதில் சொல்வார். விலாவரியாக மிகுந்த அக்கரையுடன் அன்புமிகுந்த பணிவுடன் இருக்கும் அவரின் பேச்சு. மெத்தப்படித்த ஒரு மருத்துவர் சாதாரண மக்களின் அழைப்பை ஏற்று அக்கரையுடன் பணிவாக பதிலளிக்கின்ற பாணி பிடித்திருந்ததால் அவருடனேயான நட்பை நான் தக்கவைத்துக்கொண்டு தொடர்ந்தேன்.
ஒருமுறை கேள்வி ஒன்றினை வைத்தபொழுது, இக்கேள்விக்கான பதிலை நான் பத்திரிகையில் இன்னும் பல உதாரணங்களோடு விளக்கமளிக்கின்றேன் விஜயா, இவ்வார நேசனை கண்டிப்பாக வாசியுங்கள் என்று கூற, அந்த வாரம் அனைத்து கேள்விகளும் வர, எனது கேள்வி விடுபட்டிருந்தது.
அதற்கான காரணத்தைக்கேட்க மீண்டும் அழைத்தபோது, அடுத்தவாரம் கண்டிப்பாக வரும் என்று சொல்ல, அடுத்தடுத்த வாரமும் வராமல் இருக்க… அதையொட்டிய அழைப்புகள் தொடர, பத்திரிகையின் நிலவரங்களை நகைச்சுவையாக சுட்டிக்காட்ட, நட்பு மலர்ந்தது எங்களுக்குள். இந்த நட்பு கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கடந்துகொண்டிருக்கின்றவேளையில், ஜொகூர்பாருவில் இருந்து இலக்கிய நிகழ்வு ஒன்றிற்கு, 2018 ஜூலை மாதம் என்று நினைக்கிறேன், தலைநகர் வந்திருந்தபோது, அழைப்பு விடுத்தார் சந்திக்க, வேலை நாட்களில் பணியிடத்திலிருந்து தலைநகர் செல்வது சாமானியமான செய்கை அல்ல, அதனால் அந்தச் சந்தர்ப்பமும் நழுவியது. அவரை நான் சந்தித்ததே இல்லை.
சிலரின் நட்பு நம்மை ஒன்றுமே செய்யாது. இருந்தார் மறைந்தார் என்று ஒரு நாள் அல்லது இரண்டு நாள் துக்கம் அனுசரித்துவிட்டு கடந்துவிடலாம். பெரும்பாலும் நட்பு என்கிறபோது, நட்பு என்றல்ல, என் அப்பாவின் மறைவைத்தவிர்த்து மற்ற யாரின் மறைவும் என்னை எதுவுமே செய்தில்லை. ஆனால் டாக்டர் ஜான்சனின் மறைவு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், ஒவ்வொருநாளும் அவரின் நினைவு இல்லாமல் பொழுது விடிவது இல்லை. எனக்கு ஏற்படுகிற அனைத்து அனுபவங்களையும், கேள்விகளையும், சந்தேகங்களையும் பக்குவப்பட்ட, கல்வியறிவில் சிறந்து விளங்கிய, உலக விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்த டாக்டரிடம் மட்டுமே பகிரவேண்டும் என்கிற எண்ணம் விடாமல் என்னைத் துரத்துகிறது. தினமும் பேசுவோம். நான் ஒரு கேள்வியினை வைத்திருக்க, அவர் அதற்கு பதில் கொடுத்து கூடுதல் விவரங்கள் பகிர, அந்த விவரங்களில் இருந்து வேறொரு தகவல்கள் உதிக்க, அப்படி உதிக்கின்ற தகவல்கள் எந்த அளவிற்கு நமது அடுத்தடுத்த தேடல்களைத் தூண்டிவிடும் என்பதை அவரின் நட்பின் வழி உணர்ந்துகொண்டேன்.
அவரைப்பற்றி சொல்லவேண்டுமென்றால்…
தனது மருத்துவப் பணியினை உளமாற நேசிப்பவர். இரவு பகல் பாராமல் உழைத்தார், எவ்வளவு நேரம் உழைத்தாரோ அந்த அளவிற்கு எழுதவும் வாசிக்கவும் செய்தவர். எப்போது பார்த்தாலும் எதையவது வாசித்துக்கொண்டேதான் இருப்பார். பெரிய பெரிய ஆங்கில நாவலாகட்டும் கடுகளவு வந்துள்ள வாசகர் கடிதமாகட்டும் அனைத்தையும் வாசிப்பார். ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவரும் அனைத்து தமிழ் பத்திரிகைகளையும் வாங்கி வாசித்துவிடுவார். 2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தரணிமைந்தன் என்கிற புனைப்பெயரில் பல சிறுகதைகளை விமர்சனம் செய்துவந்தபோது, அவர் வாசித்துவிட்ட சிறுகதைகளை என்னை வாசிக்கச்சொல்லி கருத்து கேட்பார். நான் வாசிக்க தாமதமானாலும் காத்திருந்து கதை எப்படி இருந்தது என்று கேட்பார். நன்றாக இல்லாத, ஒன்றுமே இல்லாத எழுத்துகளை, நான், இது கதையே அல்ல என்று சொல்லும் போது, எப்படிச் சொல்கிறீர்கள்.? ஏன் சொல்கிறீர்கள்.? எந்தப்பகுதி உங்களை அப்படிச்சொல்லவைத்தது.? புதிய எழுத்தாளர் என்பதாலா.? நீண்ட நாள் எழுதிய எழுத்தாளார் என்பதாலா.? என்றெல்லாம் கேட்பார். இருவரிடையே என்னமாதிரியான கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், எழுதுகிறபோது யார் மனதேனும் புண்பட்டுவிடுமே என்கிற நோக்கிலேயே விமர்சம் வைப்பார். அந்தப்பகுதியில் வந்த அனைத்து விமர்சனமும் எழுத வரும் புதிய வாசகர்களுக்கு உத்வேகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார். எழுத்தில் கன்னியம் காப்பதுபோலவே பேச்சிலும் யாரைப்பற்றியும் தரக்குறைவாக பேசாத பண்பும் என்னை அவரிடம் நெருங்க வைத்து நம்பகத்தன்மையை வளர்த்து நட்பில் தடுப்புச்சுவர் இல்லாமல் தைரியமாக அனைத்தையும் பகிர வழிவகுத்தது.
கணினி பயன்பாட்டில் பரிச்சயம் இல்லாமல் இருந்தவரை, கணினி யுகத்திற்கு (தமிழில் தட்டச்சு செய்வது, கைபேசியில் குறுந்தகவல் அனுப்புவது, முகநூலில் பதிவுகள் செய்வது புகைப்படம் ஏற்றுவது, வட்சாப் அனுப்புவது) அழைத்து வந்ததே நான் தான் என்று இந்த அடியேன் மார்தட்டிக்கொள்ளலாம். புத்தகப்புழுவாக இருந்த அவரை, கணினியின் பக்கம் தற்போதைய மாற்றங்களை நோக்கி (எனக்குப்புரிந்தவரையில்) நகரவைத்த எனக்கு அடிக்கடி புகழாரம் சூட்டுவார். அதை வஞ்சப்புகழ்ச்சியாக நான் புறக்கணித்தாலும், அவர் அதை மனதார சொல்வதாகச் சொல்வார்.
மெத்தப்படித்த அவர் கணினி பற்றிய போதனையின்போது பாலர்பள்ளி மாணவன் போல் ஆகிவிடுவார். குறிப்பு எடுத்துவைத்துக்கொண்டு நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் அதை மீண்டும் மீண்டும் செய்துபார்த்து விளக்கம் கேட்டு முழுமையாக புரிந்துகொண்ட பண்பைக் கண்டு வியந்துபோவேன். ஓஷோ சொல்வதைப்போல், மனிதன் எப்போதும் காலி கோப்பையாக இருக்கவேண்டும். அப்போதுதான் கற்றலின்போது காலிகோப்பையை நிரப்பிக்கொள்ளலாம், என்று. அதுபோலவே இறுதிவரை காலி கோப்பையாகவே இருந்தார் டாக்டர். தினமும் எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற தீராத வேட்கை அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். சிலவேளைகளில் நான் பிதற்றுவதை ஏற்கனவே அவர் எங்கேனும் வாசித்திருந்தாலும் சரி, அல்லது
அந்த விவரம் அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் சரி, நம் பேச்சினை இடைமறித்துப் பேசாமல் அமைதியாக முழுமையாக கேட்டுவிட்டு, மிகப் பணிவாக அதைப்பற்றிய மேல் விவரங்களை நம்மிடம் பகிர்கிற பாணியினை நானும் பழகவேண்டும் என்று நினைத்துக்கொண்ட நற்பண்பு அது. ஒன்றுமே தெரியாத அப்பாவிபோல் இருப்பார், அனைத்தும் அவருக்கு தெரிந்திருந்தாலும் கூட.
யாரைப்பற்றியும் அநாவசியமாக புறங்கூறும் மனிதரல்ல. பிடித்தவரை தூக்கிவைத்துக்கொண்டாட மாட்டார் அதேவேளையில் பிடிக்காதவரை வெறுத்துத் தூற்றித்திரியவும் மாட்டார். அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் புகைப்பிடித்துக்கொண்டே தேநீர் அருந்துவது. காரில் நீண்ட தூர பயணத்தின் போது மிக மிக பழைமையான (ஜிக்கி, AM ராஜா, கண்டசாலா, ராஜேஸ்வரி, தியாகராஜ பாகவதர், பானுமதி) அவர் பதிவு செய்து வைத்திருந்த பாடல்களை கேட்டுக்கொண்டே செல்வது பிடித்தமான ஒன்று. பயணத்தின்போது இடையே எனக்கும் அழைத்து, பாடலின் ஒலியை வேகமாக வைத்து, இந்தப்பாடலை கேட்டுப்பாருங்களேன், அற்புதம் ஆஹா.. என்று நம்மையும் ரசிக்கவைப்பார். எப்போதும் உற்சாகமாகவே இருப்பார். கவலையாக சோர்வாக இருந்ததை ஒருமுறைகூட கண்டதில்லை. அவரின் மூத்த மகன் காரில் அமர்ந்தவாக்கிலேயே மரணமுற்ற இரண்டு நாளுக்குபின் நான் யதார்த்தமாக அழைத்தபோது, முதலில் அந்த கவலையினை வெளிக்காட்டாமல் என்னிடம் எப்போதும்போலவே பேசிவிட்டு, கைப்பேசியினை வைக்கின்றவேளையில் இந்தச் சோகச்செய்தியினைப் பகிர்ந்தார். அதிர்ச்சிக்குள்ளான நான் அவருக்கு ஆறுதல் சொன்னபோது, ``அதைவிடுங்க.. என்ன செய்வது, என் மனைவிதான் பாவம்,’’ என்று பெருமூச்சுடன்.. ச்ச், என்கிற வார்த்தையில் அந்தச் சோகத்தைக் கடந்துசென்றார்.
வாசிப்பு மற்றும் எழுதுவது இறுதி மூச்சுவரை உயிர் துடிப்பாய் இருந்தவை அவரிடம். திண்ணையில் ‘தொடுவானம்’ தொடரை விடாமல் எழுதிக்கொண்டே வந்தார். தொடுவானமும் புத்தக வடிவில் வந்தது. அது அவரின் இரண்டாவது நூல். முதல் நூல் அவர் உயிராய் நேசித்த அவரின் மருத்துவ பணியின் சவாலை ரசித்து ரசித்து எழுதிய நாவல் `உடல் உயிர் ஆத்மா’. இரண்டு நாவல்களும் என்னிடம் உண்டு. உடல் உயிர் ஆத்மா நாவல் என்னைக்கவர்ந்தது காரணம் ஆன்மிகமும் விஞ்ஞானமும் கலவையாக வந்து அவர் சந்தித்த பல பிரபலங்களையும் இனைத்து நாவலாக்கியிருந்தார். தொடுவானம் – சுயசரிதை - வாசிப்பில் எனக்கு சோர்வினைத்தந்தது. அதை அவரிடமும் பகிர்ந்தேன்.
வள்ளுவனின் திருக்குறளை தினமும் ஒரு குறள் எடுத்து, அதே இரண்டு வரிகளில் தமிழில் உள்ளதுபோலவே அதன் அழகைச் சிதைக்காமல் ஆங்கிலப்படுத்திக்கொண்டிருந்தார். எனக்கு ஆங்கில அறிவு தமிழறிவை விட படுமோசம், அதை என்னிடம் காண்பித்து விளங்காத கடினமான சொற்களுக்கு விளக்கம் கொடுப்பார். விளங்கிக்கொள்வதற்கு ஆர்மூட்டுவார். குறளை தமிழில் உள்ளதுபோலவே அதே பாணியில் அதே நடையில் தாம் மட்டுமே ஆங்கிலப்படுத்திக்கொண்டிருப்பதாகச் சொல்லி மகிழ்ந்துகொள்வார்.
உள்ளூர் கவிஞர்களின் தமிழ் கவிதைகளை (அவருக்கு மிகவும் பிடித்தமான) ஆங்கிலப்படுத்தி வாசித்துக்காட்டி பரவசப்படுவார். அர்த்தம் அதே போல் உள்ளதா, என்றும் கேட்பார். கவிதை என்பது உணர்வு, எப்படி மொழிபெயர்த்தாலும் அதன் உள்ளடக்கம் வேறு கோணத்தில்தான் இருக்கும், அதனால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்பேன். அதில் முரண்படுவார். அப்படியென்றால் கவிதைக்கு விளக்கம் கொடுக்கமுடியாதா.? ஏன் கவிஞர்கள் புரியாத மொழிநடையில் எழுதுகிறார்கள்.? புரியாமல் எழுதி யாருக்கு என்ன சொல்லவருகிறார்கள்.? எது இலக்கியம் .? காமம் கலந்து எழுதினால் அது இலக்கியமா.? எது கவிதை.? பாரதியார்/பாரதிதாசன் போல் கவிதை எழுதிவிட்டார்களா அவர்கள்..? புரியாமல் எழுதி என்ன சாதிக்கப்போகின்றார்கள்.? என்று ஆவேசமாக பேசுவார். எனக்கு அது படு நகைச்சுவையாக இருக்கும்.
Leo Tolstoy யின் அன்னகரினா நாவலை மீள்வாசிப்பு செய்துகொண்டிருந்தபோது, அந்நாவல் புதிய வாசிப்பில் தமக்கு இன்னும் பல சுவாரஸ்யங்களைக் கொடுப்பதாகச் சொல்வார். அந்நாவல் கொடுக்கின்ற புதிய அனுபவங்களை என்னிடம் பகிர்ந்தவண்ணமாகவே இருந்தார். தினமும் நாவலின் முக்கிய அத்தியாயங்களை என்னிடம் பகிர்வார். அன்னகரினா நாவலை வாசிக்காமலேயே அந்தக் கதையின் கரு எனக்குப் பரிச்சயமானது.
ஆங்கிலப்பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும்படி அடிக்கடி வழிகாட்டுவார். ஆங்கில வாசிப்பு அவசியம் என்பார். தமிழ் முக்கியம் என்கிற கருத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பினும், ஆங்கிலமும் அதே அளவிற்கு முக்கியம் என்பதனையும் அடிக்கடி வலியுறுத்துவார். அவர் தினமும் வாசிக்கின்ற NST பத்திரிகையில் அடிக்கடி கட்டுரைகள் எழுதுவார். குறிப்பாக பொங்கல் வந்தால், பொங்கல் தமிழர் திருநாள், தை முதல்நாள் தான் நம்மவர்களின் புத்தாண்டு, என்பனவற்றைக் குறிப்பிட்டு திராவிடர் வரலாற்றுச்சான்றுகளோடு திராவிடர் தலைவர்கள் முன்மொழிந்த தைத்திருநாள் சான்றுகளை சாட்சிகளாக வைத்து தைப்பொங்கல்தான் நமது புத்தாண்டு என்று சொல்லி கட்டுரையினை முடித்திருப்பார். அது வாசகர் கருத்துப்பகுதியில் முக்கிய எழுத்தாக பிரசுரமாகும், நல்ல தலைப்புடன். இதை ஒவ்வொரு வருடமும் விடாமல் எழுதிக்கொண்டே இருப்பார். NST’யும் பிரசுரித்துக்கொண்டே இருக்கும். இந்த வருடத்தில் இருந்து அது வராது.
நான் பெரிய படிப்பு படித்தவன், எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒருநாளும் காட்டிக்கொண்டு பேசியதே இல்லை. அலோபதி மருந்து மாத்திரைகளைப் பற்றி கறாரான கருத்துகள் வைத்திருந்தாலும், நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம், தொடுசிகிச்சை போன்றவற்றைப்பற்றி கருத்து சொல்ல மாட்டார். இருக்கலாம்…!! என்று மௌனமாக நழுவிவிடுவார். படித்தவர் பண்பு அதுதானே.
நவம்பரில் தீபாவளி வரும், டிசம்பர் 20 ஆம் தேதி அவரின் பிறந்தநாள். டிசம்பர் 25 கிருஸ்த்துமஸ். பிறகு புத்தாண்டு போகி பொங்கல் என ஆண்டு இறுதியிலும் புத்தாண்டு பிறப்பிலும் பலவிதமான வாழ்த்துப்பரிமாற்றங்கள் வழி மீண்டும் உறவை புத்தாண்டு தொடக்கத்தில் புத்திப்பித்து நட்பிற்கு உயிர் கொடுப்போம்.
கடந்த தீபாவளிக்கு அவரின் தீபாவளிவாழ்த்து அழைப்பு வரவில்லை. வட்சாப் கூட அனுப்பிவைக்கவில்லை. தீபாவளி முடிந்த பத்தே நாட்களில் 16/11/2018யில் இறப்புச்செய்தி வந்தது. எல்லோருக்கும் வருவதுதானே என்று நினைத்தாலும் சிலரின் மறைவு ஈடுகட்டமுடியாத இழப்பு. நான் ஒரு நூலகத்தை, பொக்கிஷத்தை, வழிக்காட்டி அகராதியை இழந்து வாடுகிறேன். இனி இவர்போல் நட்பு எனக்கு வாய்க்காது. அதற்கு அவசியமும் இருக்காது. படித்தவற்றை பாராபட்சமில்லாமல் பகிர்கிற தன்மை எல்லோருக்கும் வந்துவிடாது. நமக்கு என்ன தேவையோ, எதையொட்டிய விவரத்தில் சந்தேகமோ, அதை யாரிமாவது கேட்டு, எங்கேயாவது வாசித்து நேரமெடுத்து நம்மிடம் பகிர்வார். அப்பேர்பட்ட பண்பு கொண்ட நல்ல நண்பர் டாக்டர் ஜி.ஜான்சன் எனக்கு 18 ஆண்டு கால நட்பாய் இருந்தது நான் செய்த பாக்கியம்.
இந்த நட்பு ஒரு வரம். அதன் அத்தியாயம் முடிந்துவிட்டது.
வெள்ளைமனம் கொண்ட வளர்ந்த குழந்தை டாக்டர் ஜி.ஜான்சன்…

1 கருத்து:

  1. நீங்கள் எழுதிய விதம் கொண்டே நிச்சயமாக நீங்கள் இருக்கும் வரையில் அன்றாடம் அவர் நினைவுகள் இல்லாது இருக்கமுடியாது என்பதைப் படிப்பவர்கள் உணரும்படியான அற்புதமான பதிவு.தங்கள் துயரை காலம் மட்டுமே படிப்படியாய் குறைக்க முடியும்..

    பதிலளிநீக்கு