புதன், டிசம்பர் 28, 2011

ஏன் பெற்றாய்?

ஏழெட்டு பிள்ளைகளை
ஏன் பெற்றாய்?

பரம ஏழை
இல்லை என்று தெரியும்
முடியாது என்று புரியும்
எந்த எதிர்காலத் திட்டமும் இல்லை
வருங்கால சேமிப்பும் இல்லை
ஓயாத கஷ்டமும்
பிச்சைக்கார புலம்பலும்..!!

ஏன் பெற்றாய்
வருடத்திற்கு ஒரு பிள்ளை?

பள்ளியில்
இலவச சத்துணவு உண்பதற்கும்
இலவச காலணிகளை வாங்குவதற்கும்
இலவச சீருடைகள் பெறுவதற்கும்
தீபாவளி பொங்கல்
இலவச பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதற்கும்
ஏழை மாணவர்களின் வரிசையில்
முதலில் நாங்களும்..!

ஏன் பெற்றாய்
நிறைய குழந்தைகளை?

ஆசைப்பட்டது நிறைவேறாது
பலகாரங்களும் பதார்த்தங்களும்
பாதி பாதியாய், திருப்தியில்லாமல்..
பானையில் சோறு காலியென்றால்
பசியோடு படுக்க வேண்டியது தான்
கோபம் பீறிடும்..
உங்களுக்கு வந்து பிறந்தோமே
எங்களுக்குத் தலையெழுத்தா..!?

ஏன் பெற்றாய்
இத்தனைக் குழந்தைகளை?

சிறுவயதிலேயே
கனமான வீட்டு வேலைகள்
கஷ்டமான காட்டுவேலைகள்
புகையைக் கக்கும்
கண்களைக் கலங்க வைக்கும்
முகத்தைக் கறுமையாக்கும்
விறகடுப்பில் நித்தம்
போராட்டமே..!

ஏன் பெற்றாய்
வதவத என பிள்ளைகளை?

பைப் அடியில்
வெயிலில் காய்ந்து
நெஞ்சு எலும்பு தெரிய
தோம்பு தோம்பாக
தண்ணீர் நிறைப்பது
அன்றாட கடமை..
படிக்கக்கூட நேரமில்லாமல்
ஓய்ந்து களைத்து...

ஏன் பெற்றாய்
எங்களை?

ஏக்கமாக இருக்கும்..
பொறாமையாக இருக்கும்
தனியாக, செல்லமாக, சுத்தமாக, சுதந்திரமா..
செல்வச் செழிப்பில் வளரும்
குடும்பத்தின் ஒரே பிள்ளையைப் பார்க்க..

ஏன் பெற்றாய்
இந்த கொடுமைகளை நாங்கள் அனுபவிக்க...
என் தாயே!!!

கோபம் வந்தது அன்று..!!!

ஆனால் இன்று!

பிரச்சனையென்றால்
நானிருக்கேன், கவலைப்படாதேன்னு
ஓடோடி வரும் தம்பிகள்..

அய்யோ என்ன வாழ்க்கை!?
என அலுத்துக்கொள்ளும் போது
ஆறுதலாய் வருடி அரவணைக்க அக்காள்..

படித்ததைப் பகிர்ந்துக் கொள்ள
தமிழைத்திருத்திக் கற்றுத்தர
கலகலப்பூட்டி மகிழ்வைத்தர
தரமான தங்கைகள்!

சோர்வின் போது
கும்மாளமடித்து
குதூகலிக்க வைக்கும்
கடைக்குட்டி..!

இப்போதைக்கு
வாழ்வின் சுவாரிஸ்யமே
தோள் கொடுத்துத் தூக்கி விடும்
உடன் பிறப்புகள் தான்.!

தாயே..
இப்போது உன் மேல் கோபமில்லை
எவ்வளவு போராட்டங்களை
நீ சந்தித்திருந்தாலும்..
நோய் நொடியில்லாமல்
கண்டிப்புடன்
கண்ணின் இமைபோல்
எங்களைக் காத்து வளர்த்து
கரை சேர்த்து விட்டாயே.. !

உன் பாதங்களை
முத்தமிடுகிறோம்

நன்றி அம்மா.!

(தமிழ் நேசன் 2007- அன்னையர் தின சிறப்பு இதழில் வந்தது)
நன்றி ப. சந்திரகாந்தம் - முன்னால் ஞாயிறு பொறுப்பாசிரியர்.






2 கருத்துகள்: