வியாழன், ஏப்ரல் 05, 2012

தர்மம் தலை காக்கும்

நம்முடைய உதவி யாருக்காவது தேவைப்படுகிறது என்றால், நம்மிடம் அர்ப்பணிப்பு உணர்வு இருந்தாலேயொழிய இது சாத்தியப்படாது. கேட்பது பணமாகவோ, பொருளாகவோ, பசிக்கும் வேளையில் உணவாகவோ இருந்துவிட்டால், நம்மால் முடிந்ததை, மனமகிழ்ச்சியுடன் செய்யலாம். அதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் கேட்கின்ற உதவி வேறுவிதமாக இருந்து விட்டால், அந்த உதவியை நம்மால் நிச்சயமாக செய்ய முடியும் என்கிற சாத்தியங்களும் இருந்து விட்டால், தப்பிக்கின்ற முயற்சி என்பது, சம்பந்தப்பட்டவரின் மனதை நிச்சயம் இரணமாக்கும்.

``இதைச் செய்வதால் நீ என்ன குறைஞ்சா போவ!?’’ என்கிற கேள்விகளோடு கூப்பாடு போடுகிற சுற்றமும், `` இன்னிக்கு நீ செய்தால், நாளைக்கு அவர்களிடம் எதெனும் உதவி என்று வரும்போது, சுலபமாக கிடைக்கும், வாழ்க்கையே ஒருவருக்கு ஒருவர் உதவுவதில் தானே இருக்கு..’’ என்கிற நினவுறுத்தலுடன் சில சினேகங்கள்... நம்மைச் சுற்றி அறிவுரை மழையைப் பொழிந்துகொண்டு.

சரி, குறைந்தா போவாய் என்கிற வார்த்தையையாவது சகித்துக்கொள்ளலாம், ஆனால், நாம் செய்தால் பிறர் நமக்குத்திரும்பச் செய்வார்கள் என்பதில் உள்ள எதிர்ப்பார்ப்பு எவ்வளவு கேவலமானது.! உதவிகள் என்பது எதிர்ப்பார்த்தா செய்யப்படுவது? எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், மனதிருப்திடன் செய்யப்படுவதுதானே உதவி. எதிர்ப்பார்ப்பு இருந்து விட்டால், நான் எவ்வளவு செய்தேன்! பாரு இன்னிக்கு அவன் நல்லா இருக்கான், ஆனால் என்னைக்கண்டுக்கவே இல்லை, என்கிற ஏக்கம், குரூர சிந்தனைக்கு இட்டுச் செல்லும்தானே.!

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசும்போதெல்லாம், நாம் அவர்களுக்குச் செய்த உதவியை எதாவதொரு வழியில் சொல்லிக்காட்டி, ஞாபகப்படுத்த முயல்வோம்.  அதை அவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்க தவறிவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன், அவ்வளவுதான்.. நமக்கு என்ன மாதிரியான நன்றி கெட்ட செய்கைகளின் பாதகங்கள் நினைவுக்கு வருகிறதோ, அவற்றையெல்லாம் சாடைமாடையாகச் சொல்லி, அவர்களின் மனங்களை ரணமாக்குவோம். எங்கோ ஒரு மூளையில் யாருக்கோ நடந்த அல்லல் அசம்பாவிதங்களை இட்டுக்கட்டி, அதை இவர்களின் இதயத்தில் ஈட்டிபோல் பாய்ச்சிவோம். இதனாலேயே பேசிக்கொள்ளாமல் நிரந்தரமாக பிரிந்தவர்களும் உண்டு. நானும் அனுபவத்தில் பார்த்திருக்கின்றேன்.

உதவி என்று வரும் போது, முழுமனதுடன் செய்யவேண்டும் இல்லையேல் செய்யக்கூடாது, என்பதுவே எனது சித்தாந்தம்.

சரி, பிரச்சனைக்கு வருவோம்.

எனக்கு நன்கு அறிமுகமான அன்பர் ஒருவரின் மகளுக்கு, நான் வேலை செய்யும் கம்பனியின் அருகில் உள்ள கம்பனியில் வேலை கிடைத்துள்ளது. பெரிய விஷயம்தான், காரணம் எந்த ஒரு வேலை அனுபவமும் இல்லாமல், வெறும் பள்ளிச் சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டிருக்கும் அவளுக்கு, நல்ல சம்பளத்தில், இந்த சிறிய வயதில் (18), பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதென்பது சாதாரண விஷயமேயல்ல. அதிர்ஷ்டம்தான். மேலும் அவர்கள் கொஞ்சம் கஷ்டப்படும் குடும்பமும் கூட.

அந்த மகிழ்ச்சிகரமான செய்தியை முதன் முதலில் என்னோடுதான் பகிர்ந்து கொண்டார்கள். இந்தப் பகிர்தலுக்குப் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்றும் இருக்கவே செய்தது.

வேலை செய்யும் இடத்திற்கும் வீட்டிற்கும் பேருந்துப் போக்குவரத்து வசதியில் கொஞ்சம் சிக்கல் இருக்கின்றது. வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வதற்கும், வீட்டில் இருந்து வேலைக்கு வருவதற்கும் குறைந்தது இரண்டு பஸ்களை எடுக்கவேண்டியுள்ளது. இரண்டு பஸ்கள் எடுத்து, போக்குவரத்து சிக்கலில் மாட்டிக்கொண்டு, வேலைக்குச் சரியான நேரத்தில் வந்து சேர்வதற்கு, காலை ஆறு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுக்கிளம்பியாக வேண்டும். சொந்த வாகன வசதி இல்லாதவர்களுக்கு இந்த அலைச்சல் நரக வேதனைதான்.

ஆக, நிலைமை இப்படியிருக்கையில், என்னிடம் அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்னவாக இருக்குமென்பதையும் நான் ஓரளவு யூகித்துவிட்டேன். யூகித்தது வைத்ததைப்போலவே, அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பும் வந்தது.

மேலும் அந்த இடத்திலிருந்து, இங்கே வேலைக்கு வருவது நான் மட்டும்தான். நான் செல்லும் வழியில்தான் அவர்களின் வீடும் . பிறகு என்ன? கைப்புண்ணுக்கு கண்ணாடியா! அவர்களின் எதிர்ப்பார்ப்பு புரிந்த ஒன்றுதானே!.

``கார் ஓட்டிப்பழகி, லைசன்ஸ் எடுத்து, கார் வாங்கும் வரை, நீங்கள் கொஞ்சம் ஏற்றிக்கொண்டு செல்லமுடியுமா, என் மகளை.!?” தாயின் வேண்டுகோள் என்னிடம். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முடியாது, என்று சொல்லவும் முடியாது.
சரிங்க, நான் யோசித்துச் சொல்கிறேன், என்று சொல்லி தற்காலிகமாக விடுதலை வாங்கினாலும். தொடர் அழைப்பு, வேறு வழியில்லை அவர்களுக்கும்.. நிராகரிக்கமுடியாமல் நானும், சரி என்றேன்.

வேலை எட்டரைமணிக்கு, நான் தினமும் கிளம்பும் நேரமோ எட்டு மணிக்கு. இவளை ஏற்றிக்கொண்டு செல்லவேண்டும் என்பதால் இன்று ஏழு நாற்பத்தைந்திற்கே கிளம்பினேன். ஐந்து மையில்களுக்கு அப்பால் சென்ற பிறகு, பிரதான சாலையில் இருந்து, வேறொரு சிறிய சாலைக்குள் நுழைந்து, அவரிகளின் வீட்டிற்குச் சென்று, அவளை ஏற்றிக்கொண்டு, அடுத்த சுற்றில் வளைந்து, மீண்டும் அதே மெயிண்ட் சாலைக்கு வந்து பிறகு அலுவலகம் நோக்கிச்செல்லவேண்டும். காலை நேரம் கேட்கவாவேண்டும் சாலை நெரிசலை!?

நேற்று பேசிவைத்துக் கொண்டதைப்போல், அவர்களின் வீட்டு வரிசையில் முன்னே இருக்கும் ஒரு பஸ் ஸ்டாப்பில் அவள் நிற்கவேண்டும்;

நானும், விரைவாக சாலை நெரிசல்களையெல்லாம்  தாண்டிக்கொண்டு, ஆயிரத்தெட்டு சமிக்ஞை விளக்குகளையும் கடந்து,  அவசர அவசரமாக சென்றால், அவள் அங்கே காத்திருக்கவில்லை.! நேரமாவதால் படு டென்ஷன் ஆகிப்போனேன்.

வாகனத்தை அவளின் வீட்டிற்கே செலுத்தினேன். வீட்டின் முன் நிறுத்தி, பயங்கரமாக ஹாரன் செய்தேன் (என்னுடைய டென்ஷனின் வெளிப்பாடாக), ஒருவரும் வெளியே எட்டிப்பார்க்கவில்லை. உள்ளே சென்று கதவை படபட என தட்டினேன். யாரும் குரல்கொடுக்கவில்லை. கொஞ்ச நேரங்கழித்து, ஒரு பெண் கண்களைக் கசக்கிக்கொண்டு வெளியே எட்டிப்பார்த்தாள். பின்பு தலையை உள்ளே இழுத்துக்கொண்டாள். என் பொறுமையை அது சோதித்தது.

காரிலிருந்து இறங்கி மீண்டும் கதவைத்தட்டினேன், அவளேதான், ஜன்னலை மட்டும் திறந்து, என்ன? என்பதைப்போல் புருவங்களை உயர்த்தினாள். `எங்கே உன் தங்கை?’ கண்களை இரண்டுமுறை கசக்கி, சுயநினைவை வரவழைத்துக்கொண்டு, கொஞ்ச நேரம் என்னையே உற்று நோக்கிய பிறகு, பதில் சொன்னாள். `ஆங்..புதிய வேலைக்குப் போகிறாள் தங்கை, அம்மாவைவேறு ஆளையே காணோம், நான் நினைக்கிறேன் அம்மாவும் பஸ் ஸ்டாபிற்குக் கூடவே சென்றிருக்கணும் தங்கையை விட்டுவர ஆ ஆ ஆ.. (கொட்டாவி விட்டுக்கொண்டே).

காரில் ஏறி காரின் கதவை படார் என்று சாத்தினேன். கைப்பேசியை எடுத்தேன், ஒன்பது மிஸ்ட் கால். பதிலுக்கு நானும் அழைத்தேன், வாயிஸ் மெசெஜ் சென்றது. அநேகமாக இருவரும் சேர்ந்தாட்போல் அழைப்பதால், இந்த கோளாறு வரலாம் என்பதை யூகித்த நான் அழைப்பதை நிறுத்திவிட்டு, காரிலேயே அமர்ந்திருந்தேன். மணி காலை 8.20. அழைப்பு வந்தது.

எங்கே இருகீங்க?’ அவளின் அம்மா. `உங்க வீட்டின் முன்னாடி’ நான். `அய்யோ, நாங்க இங்கே நிற்கிறோம்’ அவளின் அம்மா. `நான், உங்களை எங்கே நிற்கச்சொன்னேன்?’ நான். `நாங்க அங்கேதான் நின்றோம், உங்களைக் காணோம், அதான் அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து, இந்த பஸ் ஸ்டாப்பிற்கு வந்தோம்’... அவளின் அம்மா. `எந்த பஸ் ஸ்டாப்?’ நான். ‘மூணாவது சந்தில் நுழைத்து, நேராக வந்தால், அங்கே இன்னொரு பஸ் ஸ்டாப் இருக்கும், அங்கேதான்’.. சரி வரேன், என்று கிளம்பினேன். மணி 8.25.

இருவரும் அங்கே காத்திருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் தாய் அசடு வழிந்தாள். மகள் தலையைக் குனிந்துக்கொண்டாள்.

வாகன நெரிசலில் மாட்டி, அலுவலகம் வந்து சேர மணி 8.45. இன்று தாமதம் தான்.  தாமதமென்றால், தாமதக் காரணம் சொல்லும் ஒரு பாரத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அலுவலகத்தின் சட்டம்.

வேலை முடிந்தவுடன் மீண்டும் அவளை ஏற்றிக்கொண்டு, அவளின் வீட்டில் விட்டுத்தான் செல்லவேண்டும். அவர்கள் வீட்டிற்குச் செல்லும், அந்தச் சாலையின் நெரிசலை எப்படி சமாளிப்பதென்று காலையிலிருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

இப்படி மன அழுத்தம் கொடுக்கின்ற விஷயங்களில், நம்மால் முயன்றும் மறுப்பு தெரிவிக்க இயலாமல் போகிற போது, உதவிகள் வெறும் சடங்காக நடைபெற்று, அது யாருக்கும் பயனளிக்காமல்தான் போகின்றன. முடியாது என்று முகத்தில் அறைந்தாட்போல் சொல்லிவிடலாம், இருப்பினும் எதோ ஒன்று தடுக்கிறதே..! 

உதவிகள் செய்யமுடியும் என்கிறபோது, அவைகள் நம் சுயநலம் பொருட்டு நிராகரிக்க முயலும்போது, நமது வாழ்வு ஒரு சோர்வு நிலையில் பயனற்றுத்தான் போகின்றது.

நம்முடைய உதவி யாருக்காவது தேவை என்றால், சகித்துக்கொண்டுதான் செய்யவேண்டுமா!? முடியாது என்று சொல்கிற அளவிற்கு நாம் கருணை இல்லாதவர்கள்.!?

தியாகமனப்பான்மை என்கிற போர்வையில், தர்மம் தலை காக்கும் என்கிற நம்பிக்கையில், வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கின்றது.  அல்லல்பட்டுக்கொண்டு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக