வியாழன், ஆகஸ்ட் 02, 2012

எனக்குள் சில ரகசியங்கள்..

எனக்குள் சில ரகசியங்கள் இருக்கின்றதாம்!

எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் பகிர்பவள் நான். இருப்பினும் என்னை நெருங்குபவர்கள், என்னிடம் பழகியவர்கள், என்னை நன்கு தெரிந்தவர்கள் என, எல்லோரும் என்னிடம் எதையோ  தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.!?

தொடர்ந்து என்னோடு நட்பாக இருப்பவர்களுக்குத்தெரியும், நான் யாரிடமும் எதையுமே மறைப்பதில்லை. என் நான்கு சுவர் நிகழ்வுகளையும் ரகசியங்களையும்  நட்பு வட்டங்களோடு பகீரங்கமாகப் பகிர்பவள், நான்.  

தினம் தினம், உடனுக்குடன், மனதில் தோன்றியதை, மனதார சொல்லி, மன சங்கடங்களையும், மகிழ்வு, பூரிப்புகளையும் எதாவதொரு சந்தர்ப்பத்தில், சதா, வெளிப்படுத்திய வண்ணமாக இருப்பவள்தான் நான். 

இதையும் தாண்டி, இனம்புரியாத தேடலை சந்தேகங்களாக என்னுள் விதைத்து விட்டுச்செல்லும், இந்த விந்தையான வினாச் சுற்றம், எதற்காக, என்னிடம் இல்லாத ஒன்றை , ரகசியமென்று முத்திரை குத்தி என்னை குழப்பிக்கொண்டிருக்கின்றது.!??

என்ன ரகசியம், எனக்கே தெரியாமல், எனக்குள்?  இன்று மட்டுமல்ல, நான் பூப்பெய்தியா நாள் தொட்டு, விடாமல் என்னை துரத்திப் பதம் பார்க்கும் வினா இது.!  

எனக்குள் எதோ ரகசியம் இருப்பதாக...

நான் பள்ளியில் பயில்கின்ற போது, என் புத்தகப்பையை அடிக்கடி திறந்துப்பார்ப்பார் அம்மா. என்னமோ செய்கிறாளே, குடும்ப மானத்தை வாங்கிவிடுவாளோ என.!

காலெஜ் காலகட்டத்தின் போது, பஸ் ஸ்டாப்பில் ஒளிந்துப்பார்த்தார் மாமா. நான் யாரிடம் பேசுகின்றேன், எவரோடு நட்பு வைத்துள்ளேன். என்ன மாதிரியான நட்புகள் எனக்கு, என்பதனை..!

நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் வேவு பார்க்க ஆள் அனுப்பினார் சித்தப்பா. இல்லாத பொல்லாத சண்டையெல்லாம் வந்துள்ளது சித்தப்பாக்களால். அடிப்பதற்குக்கூட தயாராய் இருந்தார்கள். இல்லாத ரகசியத்தை சொல் சொல் என்று, பலமுறை..

எனக்குள் எதோ ரகசியம் இருப்பதாக..

என் தோழிகள் கூட என்னைத் துருவிய வண்ணம். நல்ல ஆடை உடுத்தியிருக்கியே, யார் வாங்கிக்கொடுத்தா? புதிய கைப்பேசி; பாஸ் வாங்கிக்கொடுத்தாரா? ஆளே மாறிட்ட, என்ன சங்கதி? என, என்னுள் எதையோ தேடியபடி என்னை அணுகும் என் நட்புகள்.

என் அருகிலேயே இருந்தும், என்னிடம் தினமும் பேசுகின்ற என் தங்கைகள் தம்பிகள் கூட, எனது முகநூலின் பதிவுகளையும், வலைப்பூ பதிவுகளையும் சதா நோட்டமிடுகின்றார்கள். யாரிடமாவது நான் வரம்பு மீறுகின்றேனா என்பதனைக் கண்காணிக்கும் பார்வையாளர்களாகவும்.. சந்தர்ப்ப சூழ்நிலையின் போது, ஆதரங்களோடு கருத்துகளை வைப்பதற்காகவும், `ஆமாம், செய்தாள், நான் சாட்சி’ என்கிற வசனங்களை ஒப்புவிப்பதற்காகவும் இவர்களும் என்னோடு பயணித்து, என் ரகசியங்களை ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எப்போதாவது ஒரு நாள் அழைக்கும் என் பால்ய நண்பர்கள் கூட, எப்படி இருக்கின்றாய்; என்பதனைக் கேட்ட மறு வினாடி, பழய நட்புகளோடு இன்னும் பழக்கமிருக்கா, அவன் இன்னும் அழைப்பானா?  உன்னைப்பிரிய முடியாமல் அழுதானே..! இப்போதும் அழுவானா? மீண்டும் சந்திக்கப்போவதாகச் சொன்னாயே? எத்தனை முறை??? என்பதனை ஆரயவே  துவங்கிவிடுகின்றனர்..!

எனக்குள் எதோ ரகசியமிருப்பதாக...

பெருமதிப்பிற்குரிய என கணவனும், என்னிடம் எதையோ தேடிக்கொண்டிருக்கின்றார்.. தொலைப்பேசி அழைப்பில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதனையும்.. எனக்கு வந்திருக்கும் குறுந்தகவல்கள் என்ன மாதிரியானவை என்பதனையும், முகநூலில் யாரோடு அதிகம் பேசுகின்றேனென்றும், வெளியே சென்று வந்தால், யாரோடு? எவரோடு? ஏன்? எதற்கு? என்பதனையும், பெண்களின் நட்பு கூட எதோ ஒரு வித உறவில் முடிவதாக சினிமா மற்றும் ஏடுகள் சொல்வதால், அந்த நட்புகளையும் விளக்கெண்ணெய் கொண்டு ஆராய்வதையும், தொடர்கதையாய்..

எனக்குள் ஏதோ ரகசியமிருப்பதாக..!!?

அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் சந்தேகிக்கத் துவங்கியுள்ளார்கள், `என்ன புதிதாக சமஞ்ச பெண்மாதிரி வீட்டுக்கொள்ளேயே இருக்கின்றீர்கள்!? என்னதான் செய்வீர்களோ, உள்ளேயே புகுந்துக்கொண்டு..? நேற்று யாரிடமோ அதிக நேரம் போனில் பேசினீர்களே; யாரோடு? அம்ம்மா.. எவ்வளவு சத்தமான சிரிப்பு அது? என்ன ஜோக்.. என்னிடமும் சொல்லலாமே..!? என ஆராயத்துவங்கியுள்ளார்கள்.

என்ன ரகசியம்?

என்னிடம் எதோ ரகசியமிருப்பதாக..!?

இப்போது நானும் தேடத்துவங்கியுள்ளேன், என்னிடம் உள்ள அந்த ரகசியங்கள் என்ன என்பதனை..!

 

9 கருத்துகள்:

  1. மனித மனம் கண்ணுக்கு புலப்படாத ஒன்றை எப்போதும் தேடிக்கொண்டு திரிகிறது!

    எழுதப்பட்ட எழுத்து நடை நகைச்சுவையாகவும் இருக்கிறது சிந்திக்கக் தூண்டும் வகையிலும் இருக்கிறது! அருமை அக்கா!

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரி ஆழமானது,,, ஒட்டு மொத்த அர்த்தமே அழகாகி விடுகிறது,,, கடைசி வரி இல்லாமல் படித்தால் , வேறொரு அர்த்தம்தான் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கு நன்றி சகோ.. குறை நிறைகளை தாராளமாகச் சுட்டிக்காட்டுங்கள். நிச்சயம் நான் கருத்தில் கொண்டு, மாற்றங்கள் செய்வேன்.

      நீக்கு
  3. இது இந்த சமூகத்தாலும் ஊடகங்களாலும் வந்த வினை. பெண்களுக்குத்தான் வேதனை. வேறென்ன சொல்ல மேடம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்ய பாலா. எல்லாம் கலாச்சாரம் என்கிற வாடிக்கையாகிவிட்டது. வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.

      நீக்கு
  4. தேடுங்க நல்லா தேடுங்க - ரகசித்தை கண்டுபிடியுங்கள் அதையும் எப்பவும் போல் பகிந்து கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  5. அழகான ஆனால் மனம் நெருடும் பதிவு.பிறர்பேசுவதை எண்ணி கலங்காதீங்க தோழி.சில தருணங்கள்ள இப்படி சந்தர்ப்பங்கள் எனக்கும் முன்பு வாய்த்ததுண்டு.தேடிப்பாருங்கள்.நீங்;கள் அறிய உங்களை பற்றிய பல சுவையான விடயங்களை அறிவீர்கள்.இப்படியாய் உங்களை நோக வைத்தவர்களை :பிரிய எதிரிகள்" என்று சொல்லுங்கள்.இதனால் நிச்சயம் உங்களைபற்றி நீங்கள் அறிவீர்கள்.சந்திப்போம் சொந்தமே!

    பதிலளிநீக்கு
  6. பல பெண்களின் மன ஆதங்கத்தை இங்கே பகிர்ந்திருக்கிறீர்கள் தோழி. பெண் என்று வந்து விட்டாலே இப்படி யோசிப்பது தான் "தமிழ்ப் பண்பாடு". இது மாறும் போது தான் உண்மையான பெண் விடுதலை கிடைக்கும்.

    பதிலளிநீக்கு