ஞாயிறு, டிசம்பர் 22, 2013

கண்களையாவது திறந்துவை..

ரிஷிமூலம் கதைக்கு - கதையை விட ஜெயகாந்தன் எழுதிய முன்னுரை இருக்கே.., ஒவ்வொரு வரியும் தத்துவம். எல்லாவற்றையும் எழுதவேண்டும்போல் தேன்றினாலும் சில இங்கே உங்களின் பார்வைக்கு.. :-

1965தில் கடுமையான விமர்சனத்திற்குள்ளான ரிஷிமூலத்திற்கு ஜெயகாந்தன் எழுதிய விளக்கம் இது. படித்துப்பாருங்கள். அற்புதம். நம்முடைய தற்போதைய நிலவரத்திற்கு பதில் சொல்வதைப்போல் உள்ளது.

1. இந்தக் கதையை எழுதியதின் மூலம் ஒரு நல்ல கதை எழுதி இருக்கின்றேன் என்பதைத்தவிர நான் இந்தச் சமுதாயத்தை உயர்த்திவிட்டதாகவோ கெடுத்து விட்டதாகவோ நம்பவில்லை. அப்படிப்பட்ட நோக்கம் எதுவும் கதை எழுதுகிறவன் என்ற முறையில் எனக்குக்கிடையாது. இந்தச் சமூதாயத்தை உயர்த்துகிற பணியில் எல்லா மனிதர்களுக்கு என்ன பங்கு உண்டோ அந்தப்பங்கு எனக்கும் உண்டு.

2. நான் கண்டதை - அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப் பட்டதை, நான் கேட்டதை - அதாவது வாழ்க்கை எனக்குச்சொன்னதை நான் உலகத்திற்குத் திரும்பவும் காட்டுகிறேன். அதையே திரும்பவும் உங்களிடம் சொல்கிறேன்.
அது அற்பமாக அசிங்கமாக கேவலமாக அல்லது அதுவே உயர்வாக உன்னதமாக எப்படி இருந்தபோதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்.?

3. நான் எந்தக் கொள்கைக்கும் எந்தக்கூட்டத்திற்கும் எப்போதும் தாலி கட்டிக்கொண்டதில்லை.

4. எத்தனையோ சமூதயப்பிரச்சனைகள் இருக்க, இதை ஏன் நீ எழுதவேண்டும் என்று கேட்கிறார்கள். நான் எழுதியதைப்பற்றி விமர்சனம் செய்ய வந்தவர்கள் நான் எழுதாததைப்பற்றி கேள்விகள் எழுப்புவது என்ன விமர்சன ஞானம் என்று எனக்குப்புரியவில்லை.

5. தங்கள் அரை வேக்காடு படிப்பாற்றலையும், தாங்கள் தழுவி இருக்கும் கொள்கைகளின் மேல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற வெறி மயக்கத்தையும் தமுக்கடித்து ஊரறியச் செய்யவேண்டுமென்று நினைக்கிறவரக்ள் தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு தமுக்கு இல்லாததால் ஜெயகாந்தன் என்று முரசத்தை ஓங்கி முழங்குகிறார்கள். எனக்கு இதில் மகிழ்ச்சியே. ஆனால் இந்த முரட்டு விமர்சகர்களில் பலர் கொட்டிக் கொட்டி முழக்குவது தங்கள் குருட்டுத் தனத்தைத்தான்.

6. நான் சமூதாயத்தை உயர்த்துவதற்காக இலக்கியம் படைக்கிறேன், சோஷலிஸமே எனது லட்சியம். புரட்சி ஓங்குக. தொழிலாளி வர்க்கம் ஜிந்தாபாத்.! நான் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் மக்களுக்காகவே என்றெல்லாம் எனக்கு நானே கட்டியம் கூறிக்கொண்டு ராஜநடை போட்டு வருவது என்னைப்பொறுத்தவரை ஒரு கோமாளித்தனமே.

7. மனோதத்துவமும் இலக்கியம் அதிகத் தொடர்புடையன. பிராய்டும் கூடத் தன்னுடைய சில ஆராய்ச்சி முடிவுகளுக்கு அனுசரணையான சான்றுகளை இலக்கிய ஆசிரியரின் நூல்களிலிருந்தே எடுத்துக்காட்டுவான்.

8. சமூதாயம் என்னைத்தூக்கி எறிந்துவிடும் என்கிற பயம் எனக்கு இல்லை. என்னை எதிர்த்து வருகிற கூக்குரல்களில் தூக்கி எறியப்படப்போகிற ஒரு சமுதாயத்தின் மூர்க்கமான அலறலையே நான் கேட்கிறேன்.

9. உண்மையாக இலக்கியம் படைக்கிற தகுதி உடைய எவனும் நான் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக எழுதுகிறேன் என்கிற வாக்குமூலத்துடன் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

10. பாலுணர்ச்சிப் பிரச்ச்னைகளை அடிபப்டையாகக் கொண்டு நான் கதை எழுதுகிறேன் என்பது இன்னொரு தாக்குதல். பாலுணர்ச்சி பிரச்சனை என்பது வெறும் படுக்கை அறைப் பிரச்சனை அல்ல. அதுவும் ஒரு சமுதாயப் பிரச்சனைதான்.

11. பாலுணர்வுப்பிரச்சனை என்பது ஏதோ பணக்கார வர்க்கத்துப்பிரச்னை என்று எண்ணுவது வடிகட்டிய பாமரத்தனம். பாலுறவு பற்றிய ஆரோக்கியமான கண்ணோட்டமில்லாத தனி மனிதன் வளர்ந்த மனிதனாக மாட்டான். அப்படிப்பட்ட சமுதாயம் வளார்ந்த சமுதாயம் ஆகாது.

12. ஒரு மனநோயாளியின் மன உணர்வுகளைத் தன்னிலையில் இருந்து எழுதுவதன் மூலம் விமர்சகர்களையே அதை என் நிலை என்று நான் எண்ண வைத்துவிட்டேன் என்றால் என் எழுத்தின் வலிமைக்காக நான் கர்வம் கொள்கிறேன்.

13. கதையின் நாயகன் ஒரு மன நோயாளி. ஒரு மனநோயாளியின் மனசுக்குள்ளே நிகழ்கின்ற சம்வாதங்கள் , தர்க்கங்கள், சுய மறுப்புகள் சுய தரிசனங்கள் எவ்வளவு அற்புதமாக நிகழ்கின்றன என்பதைக் காணும்போது இவன் இப்படி ஆனதிற்கு நாம் வருத்தம் கொள்ளுதல் வேண்டும். மூடத்தனமான சமூக குடும்பக் கட்டுகளும் தனக்குத்தானே போட்டுக்கொள்கிற கட்டுகளும் சமுதாயப் பிரச்சனை அல்லவா.?

14. இன்று நம் சமுதாயமே ஒரு மடமாகவும் ஒவ்வொரு தனிமனிதனும் பாதிச் சாமியாராகவும் வேஷம் போடுகிற பண்பாடு வளர்ந்து வருவதை நான் காண்கிறேன். எனவே இங்கே  SEX ஒரு பிரச்சனையாகிறது. இப்படிப்பட்ட கட்டுகளினாலும் இந்தச் சமுதாயத்தில் சிறந்த தனி மனிதர்கள் உருவாக முடிவதில்லை. கல்வியும் பொருளாதார அந்தஸ்தும் இருந்தும்கூட மனவளம் படைத்த மனிதர்கள் இங்கே உருவாவதற்குச் சிரமங்கள் உள்ளன.

15. சிறந்த தனி மனிதர்களை உருவாக வாய்ப்பற்ற சமுதாயம் சிறந்த சமுதாயம் ஆகாது. செக்கு மாடுகளை உற்பத்தி செய்யும் சமுதாயம் தேங்கி அழிகிற சமுதாயம்.

16. நான் உன்னில் ஓர் அங்கம்தான் ஆனால் நான் உன்னோடு அழிகிற அங்கம் அல்ல..

17. நீ என்னைத்தூக்கி எறிந்துவிடுவாய் என்ற அச்சுறுத்தலுக்கு நான் பயப்படமாட்டேன். என்னிடம் யாரும் சமுதாயப்பூச்சாண்டி காட்ட வேண்டாம்.

18. இந்தச் சமுதாயத்தை என் எழுத்து கெடுத்துவிடும் என்ற குற்ற உணர்வு எனக்கு இல்லை. புதிதாகக் கெடுப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை. எனது எழுத்துகளைப் பாடப்புத்தமாக வைக்கச்சொல்லி நான் மனு போடவில்லை. எனது எழுத்துகளுக்கு அந்தத்தகுதி இல்லை என்று நான் சொல்லவில்லை. உங்கள் பள்ளிக்கு  அந்தப் பக்குவம் இன்னும் வரவில்லை.

19. இங்கே தமிழில் படிப்பதற்கு ஒன்றுமில்லை. சாரமற்ற வம்புகளும் சத்தில்லாத பொழுதுபோக்குக் குப்பைகளும் மலிந்து வருகிறது.  இனி எல்லாவற்றையும் ஆங்கிலத்தில்  தான் கற்கவேண்டும். (அப்போ நீ ஏன் தமிழில் எழுதுகிறாய்? என்று கேட்டால் அதற்கும் அவர் பதில் கொடுக்கிறார்.)

20. அறிவை, மனசைத் திறக்காவிட்டாலும் பரவாயில்லை. கண்களையாவது திறந்துவை. 

4 கருத்துகள்: