ஞாயிறு, டிசம்பர் 22, 2013

மு.அன்புச்செல்வனுக்கு கண்ணீர் அஞ்சலி

எழுத்தாளர் மு.அன்புச்செல்வன் எனக்கு ஏறக்குறைய இருபது ஆண்டு கால நண்பர்.

எழுத்துத்துறையில் அதிகமாக ஊக்கமூட்டியவர்.  பாராட்டிக்கொண்டே இருப்பார். `ஆஹா என்ன அற்புதமா எழுதறீங்க. பெரிய எழுத்தாளர் பாணிங்க இது. கலக்கறீங்க. உங்களின் படிவம் வந்தால் அதைத்தான் முதலில் வாசிப்பேன், தொடர்ந்து எழுதுங்க.. என்பார். (டூப்பு)

அன்று நான் எழுதிய பதிவுகளை இன்று வாசிக்க நேருகிறபோது, `ச்சே என்ன இப்படி இருந்திருக்கு நமது சிந்தனை.! இதுவா எழுத்து.? அப்படிப்பாராட்டினாரே ஆசிரியர் அன்புச்செல்வன்..’ என்றெல்லாம் யோசித்து உடனே அவரை அழைத்து `என்ன சார், இதுவா எழுத்து, அன்று ஒரேடியா ஐஸ் வைச்சீங்களே..?’ என்று கேட்கின்றபோது.. `ஹிஹிஹி’ என்று சிரிப்பார்.

எழுத்தில் ஆர்வம் இருக்கின்ற எந்த வாசகரையும் ஆசிரியர்கள் அவமதிக்கலாகாது. எழுத்து ஆர்வம் எல்லோருக்கும் வந்துவிடாது. எனக்குத்தெரிந்தது எழுத்து மட்டும்தான். இந்த எழுத்தும் வாசிப்பும் எனக்கு இல்லையென்றால் நான் என்றோ பைத்தியக்காரன் ஆகியிருப்பேன். எழுத்து என்னைக் குதூகலமாக வாழவைத்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பழக்கம் பயிற்சி எல்லோருக்கும் வரவேண்டும் என்பதால்தான், எழுத நினைக்கின்ற அத்தனை வாசக எழுத்தாளர்களையும் நான் உற்சாகமூட்டிக்கொண்டே இருக்கின்றேன்.’ என்பார்.

எழுதுகிறவர்களின் எழுத்துப்பிழைகளையும் கருத்துப்பிழைகளையும் அழகாகத் திருத்தி பிரசுரிப்பார். சில படைப்புகளை அப்படியே மாற்றிவிடுவார். ஒரு காலகட்டம் வரை அவரின் திருத்தம் எனக்குத் திருப்தியளித்தது. அதன்பிறகு, நமது கருத்துகளின் அநாவசியமாக கைவைக்கின்றார், நம் படைப்பில் நாம் இல்லை அவர்தான் இருக்கின்றார், என்கிற நெருடல் என்னைக் குடையவே படைப்புகளை அவருக்குக்கொடுப்பதைக் குறைத்துக்கொண்டேன். (சரியாக எழுதவராது என்பது வேறு விஷயம்..!)

சில பத்திரிகைகள் அவரை  மாறி மாறி பந்தாடியபோது, அவர் வேலை இல்லாமல் இருந்தார். அந்த மனவுளைச்சல் அவரை நோயாளியாய் ஆக்கியது. அப்போது அவருக்குக் கடுமையான மூச்சுத்திணறல் வியாதி வந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். TB யாக இருக்குமோ என்று கூட சோதனை செய்துகொண்டார்.

எப்போதும் சரளமாக தங்குதடையில்லாமல் உரையாடும் அவர் கொஞ்ச காலமாக பேசுவதற்குக்கூட முடியாமல் சதா இரும்பியவண்ணமாக இருந்தார். `போதுங்க செத்துவிடுவேன் போலிருக்கு.’ என்று சொல்லி, சிலவேளைகளில் அழைப்பை அவரே துண்டித்துவிடுவார். சரி, ஏன் தொந்தரவு செய்வானேன், என்று நினைத்து அழைக்காமல் விட்டு விட்டால், குறுந்தகவல் அனுப்பி கிண்டல் செய்வார்.. `விஜயா என்கிற தலைசிறந்த பெண் எழுத்தாளரைக் காணவில்லை, தேடிக்கொடுப்பவர்களுக்கு  தக்க சன்மானம் வழங்கப்படும்.’ என்று எழுதி அனுப்பிவைப்பார்.

பழகுவதற்க்கு இனிமையானவர். பேசுகிறபோதெல்லாம்.. அடிக்கடி எழுதுங்கள்.. என்று, எழுத்தில் ஆர்வமூட்டிக்கொண்டே இருப்பார். எதையாவது எழுதுங்கள். எழுத்தை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்பார். படைப்புகளைக் கேட்டு வாங்குவார். என்னமோ நாம் பெரிய எழுத்தாளர் போல..!

அவரிடம் நான் இறுதியாகப் பேசிய (குறுந்தகவல் வழி) வார்த்தை - சென்ற ஞாயிறு மலரில் (15/12/2013) வெளியான `வேலி மனிதர்கள்’ என்கிற சிறுகதையைப் பற்றியதுதான். ஒரு அற்புதமான சிறுகதை அது. நல்ல தேர்வு. கதை தேர்வில் உங்களை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை. என்கிற குறுஞ்செய்திதான் அது.

எப்போதும் குறுந்தகவல் அனுப்பினால், `இப்போதுதான் என் ஞாபகம் வந்ததா? இந்த விஜயா அடிக்கடி காணாமல் போய்விடுகிறார்..’ என்று கிண்டல் செய்கிற அன்புச்செல்வன், இந்த முறை என்னுடைய குறுந்தகவலுக்கு `tq' என்று மட்டும் பதில் அனுப்பியிருந்தார்.

அப்போது அவர் (19/12/2013) மருத்துவமனையில் இருந்துள்ளார் என்று, இன்று அவரின் மரணத்தின் போது (21/12/2013)  எனக்குத்தெரியவந்தது. முன்பெல்லாம் அடிக்கடி பேசுகிற நான், அன்றைய நாளில் ஒரு அழைப்பு கொடுத்துப்பார்த்திருக்கலாமே, என்று இறப்புச்செய்தி வந்தவுடன் மனங்கலங்கி வருந்தினேன்.

நிலையில்லா வாழ்வு, நம்மை மிகவிரைவாக நகர்த்திச்செல்கிறது. நேற்றுப்பார்த்தவர் இன்று இல்லை. நினைத்துப்பார்க்காததெல்லாம் நடக்கிறது. மேலும் அவருக்கு எழுபத்தொன்று வயது என்று இன்றைய பத்திரிகைகள் (22/12/2013) சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. குரலும் எழுத்தும்தான் அறிமுகம் அவருக்கு. இனிமயாகப் பேசுவதால் நாற்பது நாற்பத்தைந்து இருக்குமென்று நினைத்திருந்தேன். வயதைப்பற்றியெல்லாம் இருவரும் விசாரித்ததில்லை. அவரும் சொன்னதில்லை.

அவரின் மற்றொரு சிறப்பு, என்னுடைய எழுத்து இங்கே வந்துள்ளது.. அங்கே வந்துள்ளது. எனக்கு இந்த பட்டம் எல்லாம் கிடைத்துள்ளது, நான் இவ்வளவு எழுதியுள்ளேன், என் எழுத்தை வாசித்துப்பாருங்கள். நான் எழுதியதை வாசித்தீர்களா? என்று, இதுவரையிலும் கேட்டதில்லை. அவருடனேயான நட்பில் எனக்கு இதுதான் மிகப்பெரிய ஆச்சிரியம். எதை எழுதினாலும், என் படைப்பை வாசித்தீர்களா.? என்று கேட்டதே இல்லை. நாமே சொன்னாலும்.. ஹ்ம்ம் அது.. ஓ.. ஹ்ம்ம் என்று மழுப்பிவிடுவார்.

அவருடன் நட்பு பாரட்டுதலில், எனக்கு அவர் அனுப்பிய பரிசு, அவரின் மூன்று புத்தகங்கள். 1.விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்.(சிறுகதைகள்) 2. மு.அன்புச்செல்வனின் அரை நூற்றாண்டுச் சிறுகதைகள்.  3. திரைப்படங்களின் தாக்கங்கள். (கட்டுரைகள்)

இவைகளில் இரண்டு புத்தகங்களை முழுமையாக வாசித்துமுடித்துவிட்டு, சிறுகதைகளைப்பற்றிய எனது கருத்தினை அவரிடம் கூறுகையில். `பெரிய எழுத்தாளர் நீங்கள். என் புத்தகத்தை நீங்கள் தொட்டு வாசித்ததே நான் என் பிறப்புப் பலனை  அடைந்துவிட்டேன். கருத்துவேறு கூறுகின்றீர்களே, பயமாக இருக்கின்றது என்று கலாய்ப்பார். செம ரகளையாக இருக்கும்.

அன்றைய எனது எழுத்துகளை, நான் இப்போது வாசிக்கின்றபோது, அன்றைய என்னை இன்றைய நான் வெறுக்கிறேன். இன்னும் அழகாகச் சொல்லியிருக்கலாம். இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கலாம். இன்னும் வலிமையான வளமையான கருத்துக்களை நுழைத்திருக்கலாம் என்கிற ஆதங்கம் எனக்கு எப்போதும் வரும். அதனால் எனது எழுத்துகளை பாராட்டுகிறவர்களை விட, திட்டுகிறவர்கள் கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குகிறேன், என்பார்.

நான் நடந்து வந்த எழுத்துலக பாதை சுவாரஸ்யமானது. ஆனால் எழுத்தில் நான் இன்னும் கத்துக்குட்டியே, என்பார். இதை நான் தன்னடக்கம் என்று சொல்லமாட்டேன். அதுதான் உண்மையும் கூட.

அவரிடம் நான் முரண்படுகிற கருத்து, இன்னமும் எழுத்து என்றால், மு.வ, ந.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன், கல்கி, சாவி, சிவசங்கரி, ரமணிசந்திரன், அனுராதா ரமணன் போன்றோர்களின் எழுத்து பாணியைத்தான் எழுத்து என்பார். அவர்களைத்தவிர வேறு யாரையும் நான் வாசிக்கவேண்டும் என்கிற கட்டாயம் எனக்கில்லை. இன்றைய நவீன எழுத்து நவீனத்துவம் என்பதெல்லாம் சும்மா எழுத்தை வைத்து விளையாடும் சித்து விளையாட்டேயன்றி வேறில்லை. பொழப்பில்லாதவனுங்க. எழுத்துலகத்தை நாசம் செய்யறானுங்க. இதையெல்லாம் நவீன் மற்றும் பாலமுருகனிடமோ சொல்லிவிடாதீர்கள். எழுதியே சாகடிச்சிபுடுவானுங்க. யம்மயம்மா இலக்கிய உலகைப் படுத்தறானுங்கய்யா... ரத்தக்கொதிப்பே வருது. நான் கொஞ்ச காலம் வாழணும். என்பார் நகைச்சுவையாக.

படைப்புகள் என்று எடுத்துக்கொண்டால், வசீகரமிக்க எழுத்தாற்றல் கொண்டவர். பஞ்ச பாண்டவர்களின் கதைகளையும் இராமாயணத்தையும் நன்கு உள்வாங்கிக் கரைத்துக்குடித்துவிட்டு அதிலிருந்து சில பகுதிகளை கதைகளில் சேர்ந்து, சொந்த கற்பனைகளையும் கலந்து கதை வடித்துக் கொடுப்பதில் கில்லாடி எழுத்தாளர்.  மிக மிக அழகாக சிறுகதைகளை எழுதுவார். சோர்வில்லாத வாசிப்பினை கொடுக்கின்ற ஆற்றல் அவரின் எழுத்திற்கு உண்டு. எல்லாக்கதைகளும் பழய பாணிக்கதைகள்தான். ஆழ்ந்த வாசிப்பில்லாமல் மேலோட்டமாக கண்களை மேயவிட்டாலே புரிந்துகொள்ளலாம். இருப்பினும் அழகிய கதைகள்தான் அனைத்தும்.

வா மரணமே என்கிற அவரின் சிறுகதையில் எமனோடு பேசுவதைப்போல் ஒரு உரை வரும். அதில் `நீ சொல்லும் மரணத்தை நான் எப்போதே சந்தித்துவிட்டேன். இப்போது வெறும் கட்டையாக இருப்பத்தைத்தான் உணர்கிறேன். எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த கலைஞர் என்றைக்கோ வசனம் பேசியிருக்கின்றார். கனவுகளற்ற தூக்கம் போன்றது மரணம் என்றால் அதற்காக நான் ஏன் பயப்படவேண்டும். மரணம் என்பது விழிப்பில்லாத ஒரு நெடிய தூக்கம். மீண்டும் கண்விழித்துப்பார்க்கமுடியாத ஒரு மயக்க நிலை...’

ஆம், மயக்க் நிலையில்தான் உள்ளார் மு.அன்புச்செல்வன். மரணம் தழுவிக்கொண்டது என்கிறோம்.

அவர் அடிக்கடி எனக்கு நினைவுறுத்தும் வாசகம்...

`எழுத்தாளர்கள் விமர்சனங்களுக்கு மனச்சஞ்சலம் கொள்தல் கூடாது. அது நல்லனவையாக இருக்கட்டும் அல்லது தூற்றுதலாகவோ இருக்கட்டும்.. எழுதிக்கொண்டே இருங்கள்.. நல்ல கருத்துக்களைக் கொடுக்கமுடியாதவன், பன்னி என்பான் நாய் என்பான்... அவனை சமூதாயம் அடயாளங்கண்டுகொள்ளும்.. பதில் கொடுத்து நம் முகத்தில் நாமே காறி உமிழ்தல் மட்டும் கூடாது.’ 

பக்குவப்பட்ட பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளர் என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா என்ன.! இது ஒன்றே போதும். 


அவரின் மற்ற நூல்கள் -

ஒரு புதிய இலக்கை நோக்கி (செந்தூல் வரலாறு)
தவத்தின் வலிமை (சிறுகதைகள்)
தீபங்கள் (சிறுகதைகள்)
பிச்சைப் பாத்திரங்கள் (சிறுகதைகள்)
விலாங்குகள் (நாவல்)

எழுத்தாளருக்கு மரணமில்லை. அவர் என்றென்றும் அவரின் எழுத்தில் ஜீவித்திருப்பார். இருப்பினும் கடிதங்கள் மற்றும் படைப்புகளை அவருக்கு அனுப்புகின்றபோது இறுதியில் நான் அவருக்குச்சொல்லும் வாசகம். ..
``நன்றி சார்...’’

ஆனால் இன்று....  GOOD BYE சார். WILL MISS YOU FOREVER.



15 கருத்துகள்:

  1. ஆமாம் விஜி ஒரு நல்ல கதி சொல்லியை நாம் காணடித்துவிட்டோம்.

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் விஜி ஒரு நல்ல கதை சொல்லியை நாம் காணடித்துவிட்டோம்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் வருத்தமான பகிர்வு...
    சிறந்த படைப்பாளிக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்....
    அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
  4. படைப்பாளி அன்புச் செல்வனுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

    பதிலளிநீக்கு
  5. அன்புச்செல்வனுக்கு எழுதப்பட்ட மிகவும் பொருத்தமான, அதே வேலையில் சோக உணர்வும் இழையோட எழுதப்பட்டுள்ள அன்பான கண்ணீர் அஞ்சலிதான் இது. இதை எல்லா பத்திரிகைகளும் பிரசுரம் செய்வது ஒரு படைப்பாளிக்கு செய்யும் மரியாதை போலாகும்...அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்

    பதிலளிநீக்கு
  6. அண்ணனுக்கு அஞ்சலி. இதயத்தில் ஏறி அமர்ந்திருக்கும் சோகம் அகல நீண்ட நாள் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  7. அண்ணனுக்கு அஞ்சலி. இதயத்தில் ஏறி அமர்ந்திருக்கும் சோகம் அகல நீண்ட நாள் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  8. //எழுத்தாளருக்கு மரணமில்லை// நிஜம்தான்.... அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

    பதிலளிநீக்கு