ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

எலிஸ்பெர்த் (மாமிகதை)

மாமிகதை - 

மாமி எங்கள் வீட்டில் இருப்பதால், வார இறுதியில் உறவுகளின் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது.. ஒரு கூட்டம் வந்தது..

`அய்யோ அத்த.. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க. நீங்க நடந்துபோன எலிஸ்பெர்த் மஹாராணி போல் இருக்கும். ஊரே வேடிக்கைப்பார்க்கும். அவ்வளவு அழகு எங்கத்த. இப்போ பாருங்க காதுல கழுத்துல ஒண்ணுமே இல்ல.. ச்சே பார்க்கவே நல்லா இல்லெ. நகையெல்லாம் போட்டுட்டு எங்கத்த நடந்தா சாட்சாத் அம்மனை நேரில் பார்த்த மாதிரியே இருக்கும்...’

அத்த எங்கே பதில் சொல்வது.. அங்க ஒண்ணுமே முடியலையே.. இப்போதெல்லாம் ஒரே அமைதி. என்னான்னு தெரியல. பேசுவது கூட குறைந்துவிட்டது. பார்வை சரியாகத்தெரியவில்லை.. நாங்களே கொடுத்தால்தான் உண்டு. எதுவும் வாய்திறந்து கேட்பதில்லை.

மௌனமாக சிரித்துக்கொண்டே.. `இனி என்ன இருக்கு.. செத்தா எடுத்துப்போட்டிடுங்க...’ என்றார் மாமி.

`பின்னே..எடுத்துப்போடாம, வைச்சுக்கிட்டு என்ன பண்ணுவதாம்.. ஹிஹிஹி அத்த அத்த...’

ஜோக் அடிக்கறாங்களாம்.. வெறி வரல. யார் அழுதா இவர்களெல்லாம் வரவில்லை என்று..!!!

யாரும் வரவேண்டாமென்று சொன்னால் கேட்கிறாரா? அம்மாவைப் பார்க்க அவர்களுக்கு ஆசை யிருக்காதா? அம்மா மேல் பாசம் அவர்களுக்கெல்லாம்.. நல்லா வாழ்ந்தவங்க.

இப்போ அவருக்குத்தேவை பாசமா???? அது நாங்க கொடுப்போம்.. வராமல் இருந்தாலே கோடி புண்ணியம்.
சிலர் வந்துவிட்டு போனாலே.. கெட்ட வைஃப்ரேஷன் நீண்ட நேரம் சுற்றுகிறது வீட்டில்... என்னமோ மாதிரி இருக்கும்... உடலில் ஹூமோகுளோபின் குறைந்தது போல்..!

WARTS


ஃபேஷியலுக்குச் (முக ஒப்பனை) சென்றேன். வழக்கமாகச் செல்லும் இடத்திற்குச்செல்லாமல், இந்த முறை, முக ஒப்பனைக்கலையில் பட்டம் வைத்திருக்கும் நம்ம பெண் ஒருவரிடம் (மகள் மாதிரி) சென்றேன். தோழியின் மகள் அவள். தோழியைச் சந்திக்கும் போதெல்லாம், `ஒரு முறை அவளிடம் சென்று ஃபேஷியல் செய்துபார்.. உனக்கு நிச்சயம் பிடிக்கும் என்பாள்’. அதனால் இம்முறை அங்கே...

வேறொரு துறையில் படித்துப் பட்டம் வாங்கிய அவள், வேலை வேலை என்று அலையாமல், இந்த கலையை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு குடும்பத்தின் உதவியோடு சொந்தமாக ப்யூட்டி பார்லர் ஒன்றைத் திறந்து, சிலரை வேலைக்கு அமர்த்திக்கொண்டு, முழுநேரத்தொழிலாகச் செய்துவருகிறார் அப்பெண்.

வென்மையான ஆடையில் ஒரு மருத்துவரைப்போன்ற தோற்றத்தில் காட்சி கொடுத்தார் அப்பெண். ரொம்ப அழகு.

என் முகத்தில் கை வைத்தவுடன் சொல்லிவிட்டார், முகத்தில் நிறைய மருக்கள் இருக்கின்றன என்று.! என் கண்களுக்குத்தெரியாத அம் மருக்கள் அவர் கண்களுக்கு மட்டும் எப்படித்தெரிகிறதென்று கேட்டேன்.

பெரிய கண்ணாடியை முகத்திற்கு நேராகக் காட்டி, மருக்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்று காட்டினார். அதிர்ந்துதான் போனேன்..!! அதிகமான மருக்கள். எப்படி இவ்வளவு மருக்கள் எனக்கே தெரியாமல்.. !? சிலதுகள் பெரிதாகியிருந்தன.. சிலதுகள் சிறிது சிறிதாய்..

பெரிதாய் வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது... கே.ஆர்.விஜயா, சரோஜாதேவி போன்றோர்களுக்கு உள்ள அழகு மச்சம் போலவே இருந்தன. எனக்கும் அழகு மச்சங்கள் உள்ளன என்றே பெருமிதம் கொண்டிருந்தேன் இவ்வளவு நாளாக.... பார்த்தால்... மருவாம்..!!

ட்ரீட்மெண்ட் கொடுக்கவா ஆண்டி? கேட்டார்.

எப்படிம்மா, வலிக்காதா?

வலிக்காது, எறும்புக்கடிபோல் சுறுக் என்றுதான் இருக்கும்.. கொஞ்சம் பணம் செலவாகும், ஆனால் இனி அங்கே அந்த மரு வரவே வராது. என்றார்.

அழகாய் மிளிர வேண்டுமென்றால் - வலியையும் விலையையும் பார்க்கமுடியுமா?  சரி என்றேன்.

கண்களை மூடிவிட்டு, ஒரு கருவியின் உதவியோடு, எல்லாவற்றையும் சுட்டு எடுத்தார்.. முடி பொசுங்குவதைபோன்ற வாசனை வந்தது. வலிதான் - பொறுத்துக்கொண்டேன்.

மூன்று நாள்கள் கழித்து முகம் பளிச் என்று அழகாக இருந்தது. கரும்புள்ளிகள் இல்லை.. ஸ்மூத் ஆக இருந்தது.

முகத்தில் இருந்த  மருக்களை எடுத்ததிலிருந்து, யாராவது மருக்களோடு இருந்தால் - ஆலோசனை வழங்கலாம் போல் தோன்றுகிறது. மருக்களை எடுத்துவிட்டால், உங்களின் முகமும் பொலிவுடன் பளிச்சென்று இருக்குமே, முயலலாமே..! என்று சொல்லவேண்டும்போல் இருக்கிறது.

அந்தப் பெண்ணிடம் கேட்டேன், ஏன் இப்படி மருக்கள் என்றுமில்லாத அளவிற்கு அதிகமாகக் காணப்படுகிறது திடீரென்று..?

அவள் சொன்னாள்.. அதற்கு நிறைய ரீஸன் இருக்கிறது ஆண்டி. அதில் ஒன்று, வயது.!

“எனக்கொன்றும் அவ்வளவு வயதாகவிடவில்லை’’ - நினைத்தேன், ஆனால் சொல்லவில்லை.

அவளுக்கு நான் ஆண்டிதானே..!!
 

வெள்ளி, பிப்ரவரி 15, 2013

கஞ்சி (மாமி கதை)

`கஞ்சியே கொடுக்கறீங்களே.. நான் என்னாவேனோ, முருகா.! என்னால் கஞ்சி சாப்பிடமுடியவில்லை.’
வேலை முடிந்து வந்தவுடன் புகார்.

`உங்களுக்கு அதுதானே நல்லது. அரிசி சோறு இறைச்சி மீன் உங்களால் விழுங்க முடியவில்லை... கஞ்சியில் எல்லாமும் போட்டுத்தான் சமைக்கிறேன். மேலும் இருதயம் வீக்’ஆ இருக்கு..எண்ணெயில் பொரித்த சாப்பாடுகள் சரிப்பட்டுவராது. கவிச்சி சாப்பிடுவதால் உடமெல்லாம் அரிப்பு, இரவெல்லாம் தூங்காமல் அவதி படறீங்க...
மசால கொடுத்தால், வயிறு வலி.. அன்னிக்கு வந்ததுதானே வலி..!!?’

`எனக்கு அதெல்லாம் வராது..., எனக்கு ஒரு வியாதியும் இல்லே.. அள்ளிவிடாதே..’

`ஆமாமாம்..அள்ளிவிடறேன். சைவம் செய்தால் தொடமாட்டேன் என்கிறீர்கள்.. தயிர் சாதம் செய்தேன் தொடவேயில்லை... சாம்பார் சாதம் சாப்பிடும்போது, வாந்தி வருவதைப்போல் செய்தீர்களாம்..அவ சொன்னா.!!

`ம்ம் அவ சொல்லுவா.. எனக்கு சீனக்குத்தியோவ் வேணும்..’

`முடியாது.. அதில் ப்ளாச்சான் போடுவானுங்க.நல்லா இருக்கிற உடம்பு மீண்டும் அரிக்கும்.. தூங்காம அவதிப்படுவீங்க...’

`எனக்கு ஒண்ணும் வேணாம். பட்னியா படுத்துக்கறேன்..’

`கஞ்சிய முடுல்ங்கு முடுல்ங்கு பாட்டி.. ’ என்கிற குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது... வேலைக்காரி சாப்பாடு கொடுக்கிறாள் போலும்...
அவள் வேறு தமிழ் கற்றுக்கொண்டு வருகிறாள்...

என்ன செய்யலாம்???? மிடியல.....

புதன், பிப்ரவரி 13, 2013

இலையடி (மாமி கதை)

இது உண்மை -

மாமிக்கு, மோசமான மூச்சுத்திணறல் வந்து இழுத்துக்கோ பரிச்சிக்கோ என்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, வேலைக்காரி ஒரு ஐடியா கொடுத்தாள்.. 

மூன்று விதமான பச்சை இலைகளைக் கொண்டு, உடம்பில் அடித்தால் திணறல் நின்றுவிடும், பற்றிக்கொண்டிருக்கும் `சைத்தான்’ ஓடிவிடும் என்று. 

ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவில்லை என்கிறவர்களுக்கு... 

`இனி அடிக்கடி இப்படியாகும், இருதயமும் கிட்னியும் செயலிழக்கும் அறிகுறிகள் தெரிகிறது, பிள்ளைகள் பக்கத்தில் இருந்து அன்பாக அரவணித்துக்கொள்ளுங்கள், கொடுத்த மருந்துகளை தொடர்ந்து கொடுத்துவாருங்கள்...’ என்று ஆலோசனை வழங்கினார் மருத்துவர்.

அதன் படியே நானும் அவளும் மாமியின் அருகில் இருந்து போராடிக்கொண்டிருந்த போது அவள் இவ்வாலோசனையை வழங்கினாள்.

வெளியே சென்று வேப்பிலையை உடைத்தேன்.. மூன்று இலைகள் வேண்டாம், இந்த ஒரு இலை தான் எங்களின் தெய்வம் என்று சொல்லி கொண்டு உடைத்துவந்து..

`அம்மா, ஆத்தா வந்திட்டா.. இனி எல்லாம் சரியாயிடும் என்று சொல்லி, வேப்பிலையை உடல் முழுக்க அடித்தேன்.. அடித்தேன்.. பேய் ஓட்டுவதைப்போல்.....

என்ன ஆச்சிரியம், அப்படியே அமைதியானது மூச்சு.. சத்தமில்லாமல் சாதாரணமாக வந்தது... கைகளைப் பற்றிக்கொண்டு முத்தமிட்டார்.. `அம்மா, ஆத்தா மாரி மகமாயி என்னை காப்பாற்றிவிட்டாய் என்று...’

வேலைக்காரிக்கும் சந்தோசம்.. பாத்தியா நான் சொன்னேன் இல்லெ, அது சைத்தான்..எமன், உயிரை எடுக்கவந்திருக்கு, இலைகளைக்கொண்டு அடித்தால், ஓடிவிடும்..’ என்று பெருமைபொங்க மார்தட்டிக்கொண்டாள்.. 


இக்கதையை - வேடிக்கைபோல் நான் எழுதினாலும் அத்தருணத்தில் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது.! காரணம், மரண பயம் ஒருவரிடம் குடிகொள்ளும்போது, சம்பந்தப்பட்டவரின் முகபாவனைகள் மிகக்கொடூரமாக மாறுகிறது.. நாக்கு வெளியே தள்ளும், கண்விழிகள் பிதுங்கும், குமட்டல் வரும், கை கால்கள் விரைக்கும், வேர்க்கும், நகங்கள் நீலமாகும், முகம் வெளுக்கும், எப்படி செய்தாலும் திருப்தியடையாத நிலையே வரும் அவர்களுக்கு... ஐய்யோ நான் சாகப்போறேனா என்கிற முணகல் வரும்.. பேசவேண்டும் போல் இருக்கும் ஆனால் அவர்களால் பேசமுடியாது... நம்மை தெய்வமாகப் பார்ப்பார்கள். என்னைக்காப்பாற்று என்பதைப்போல் இருக்கும் அவர்களின் பார்வை. நீ மனது வைத்தால் நான் பிழைத்துக்கொள்வேன்... நீயே தெய்வம் என்பதைப்போல் நம் கைகளை இறுக்கிப்பிடித்துக்கொள்வார்கள். பரிதாபமான நிலை இது. தேவையா. !!!

உடல் தேறி, இப்போது கொஞ்சம் சுமார். இருப்பினும் அந்த மூச்சுத்திணறல் மீண்டும் வந்துவிடப்போகிறது என்கிற பயத்தில், எல்லாமும் முடித்து, குளிப்பாட்டி கஞ்சி கொடுத்து அறையில் தூங்க வைத்துள்ளோம்.. அறையில் அவர் தூங்கினாலும் சமையலறை ஜன்னலில் இருந்து நிலைமை எப்படி இருக்கிறது.., மூச்சுவாங்குகிறதா.. உயிர் இருக்கா, நிம்மதியாக தூங்குகிறாரா.. என எட்டி எட்டி நானும் என் வேலைக்காரியும் ஒருவர் மாற்றி ஒருவர் கண்காணித்து வருகிறோம்... 

`ச்ச்சே என்ன பழக்கம் இது? படுத்துத்தூங்குகிற என்னைய எட்டி எட்டிப்பார்க்கறது..! இங்கே என்ன அவுத்துப்போட்டுக்கிட்டு ஆடறாங்களாக்கும்.. கெட்ட பழக்கம் இப்படி எட்டி எட்டிப்பார்க்கறது.. நினைக்கிறீங்களா நான் தூங்கறேன்னு, எல்லாம் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. அவ (வேலைக்காரியை) என் கையால் அடி வாங்காமல் போகமாட்டாள்.. அதோட அவ இந்த வீட்ட விட்டு ஓடணும்.. நீயும் போடு ஜால்ரா.’ 

வேலைக்காரி கேட்டாள், அக்கா என்ன கோவமா யாரையோ திட்டுகிறார் பாட்டி.. என்ன கதை?
அப்படியே மொழிப்பெயர்த்தேன் இதை..

இருவரும் சத்தம் போட்டுச்சிரித்தோம். மாமிக்கு எரிச்சல் கூடிவிட்டது...

`இரு எம்மவன் வரட்டும்..’

ஹஹஹஹஹஹஹஹஹஹஹ...





சனி, பிப்ரவரி 09, 2013

ஆதாம்டீஸ்ட்


தமது ஐந்து வயது மகன் படிக்கும் பாலர் பள்ளிக்குக் காலையிலிருந்து அலைந்துகொண்டிருக்கும் தோழி, இப்போதுதான் அழைத்திருந்தாள். (படம் பார்க்கப்போகலாம் என்று ப்ளான் பண்ணியிருந்தோம் - இந்த பிரச்சனையால் அது நடக்கவில்லை..)

பள்ளியில் மகனுக்கும் (40கிலோ இருப்பான் - obesity child)  மற்றொரு மாணவிக்கும் சண்டையாம். இவரின் மகன் கோபத்தில் அந்தப் பெண் குழந்தையை எட்டி உதைத்து மிதித்துள்ளான்.

பெண் குழந்தை டீச்சரிடம் சொல்லி பிறகு தமது பெற்றோர்களிடமும் முறையிட்டுள்ளாள். நேற்றுநடந்த சம்பவம் இது. டீச்சர் அந்தப்பையனை கூப்பிட்டு மிரட்டி, ரோத்தான் அடி கொடுத்து கண்டித்துள்ளார். பையனின் பெற்றோரான என் தோழிக்கும் அவரின் கணவனுக்கும் தொலைப்பேசியின் மூலம் அழைத்துத் தகவல் சொல்லி கண்டிக்கச்சொல்லியுள்ளார்.

முடிந்துவிட்டது என்று நினைத்தால், இன்று காலையில் மாணவியின் பெற்றோர்கள் பள்ளிக்குப் படையெடுத்து டீச்சரை வாங்கு வாங்கு என்று வாங்கியிருக்கிறார்கள். (சொற்போர்தான்..) போலிஸ் ரிப்போர்ட் அப்படி இப்படி என பயமுறுத்தியுள்ளார்கள்.

கலவரமடைந்த ஆசிரியை, என் தோழியையும் அவரது கணவரையும் அழைத்து பெற்றோர்கள் இருவரையும் பேசவைத்துள்ளார். குழந்தையின் அம்மா வேதனையில், `பையனைக் கண்டியுங்கள் இல்லையேல் விபரீத முடிவு எடுக்கவரும்..’ என்று எச்சரித்து திட்டியிருக்கிறார்... டீச்சரும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளார் இருவீட்டாரையும்.. (செய்யத்தான் வேண்டும்..பாலர் பள்ளிகளின் கட்டணம் அப்படி இங்கே.. பல்கலைக்கழகமாவது பரவாயில்லை)

கதை இதுதான்..!!

ஆனால் என் தோழி என்னிடம் இச்சம்பவதைச் சொல்லும்போது, தன் மகன் செய்தது நியாயம் என்பதைப்போல் சொன்னாள்.

`அந்தப் பெண் குழந்தை அவனை எப்போதும்  ஆதாம்டீஸ்ட் செய்கிறாள்.. குண்டு குண்டு.. மொட்டை மொட்டை என்றும்..’

`பெத்தவங்களுக்கு அறிவு இல்லையா? இத போய் பெரிசு படுத்திக்கொண்டு..!!!’

`அந்த அம்மாகாரி டீச்சரையே வார்னிங் செய்கிறாள்..திமிறு...’

`எங்க வீட்டுக்காரருக்கு பயங்கர கோபம்.. செய்வதற்கு எவ்வளவோ வேலை இருக்கு.. இது ஒரு பிரச்சனையா? அறிவு கெட்ட ஜென்மங்கள் (அந்த பெண்குழ்ந்தையின் தாய் தந்தையர்களை)..

`சும்மா சும்மா அவனை குண்டு குண்டு என்றால், அவனுக்குக் கோபம் வராதா?..’

`இனிமேல் எதும் பிரச்சனையென்றால்.. விவரம் பெற்றோர்களுக்குப் போகாமல் டீச்சரே செட்டல் செய்யட்டும்.. அதான் பணம் வாங்குகிறார்களே.. அது கூட செய்யமுடியாதா?’

`மிதிக்கட்டும்.. இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. (சிரிக்கிறார்)..

இதுக்கு மேல் என்னால் தாங்கமுடியாது. எனக்கு எரிச்சல் வந்துவிட்டது.

அடி வாங்கியது உன் பிள்ளை என்றால் அதன் வேதனை தெரிந்திருக்கும் உனக்கு!. சின்ன வயதிலேயே உம்மவனுக்கு இவ்வளவு கோபம் வருதா? நாளை ஆண்பிள்ளைகளிடம் உன் மகன் கைவரிசையைக்காட்டும் போது, எல்லோரும் சேர்ந்து மிதி மிதி என்று மிதிப்பான்கள்..அப்போது சொல்லு, பள்ளி விவரம் எனக்கு வரவேண்டாம் டீச்சர் நீயே செட்டல் பண்ணுங்க என்று..ஒகே வா? கண்டித்துவை.. சின்னப்புள்ள கணக்கா உளறாதே என்றேன்...

படம் பார்க்க என்னோடு வரமாட்டாள் - அநேகமாக. நட்பை முறித்துக் கொண்டாலும் ஆச்சிரிப்படுவதற்கில்லை.

வியாழன், பிப்ரவரி 07, 2013

வால் பகுதி

`விரால் சூப் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது, வாங்கிட்டு வாம்மா.’ என்றார் மாமி. கேட்டு இரண்டு வாரமாகிவிட்டது.

இன்று அலுவலக அருகில் இரவுச் சந்தை. இந்த விரால் விவரம் சட்டென்று ஞாபகத்திற்கு வரவே, வரும் வழியில் அச்சந்தைக்குச் சென்றேன். அங்கே நம்மவர் ஒருவர், இதுபோன்ற ஆற்று சேற்று மீன்களை கணிசமான விலையில் விற்பனை செய்து வருகிறார். அவரிடம் உள்ள மீன்கள் அனைத்தும் உயிருடனேயே இருக்கும்.

பெரிய வாளியில் இருந்த விரால் ஒன்றினைக்காட்டி நிருத்துபபார்க்கச் சொன்னேன்... ஒன்றரை கிலோ வந்தது. கிட்டத்தட்ட நாற்பது ரிங்கிட். நிருவையில் நிற்கவேயில்லை அந்த விரால். இங்கேயும் அங்கேயும் குதித்தது.

கையில் வைத்திருந்த ஒரு இரும்புத்தடியினால் அதன் தலையில் ஓங்கி அடித்தார். சாகவில்லை. வாய் பகுதியை ஒரே வெட்டு வெட்டினார். துடித்தது. செவுல் செதில்கள் என எல்லாவற்றையும் சுத்தம் செய்தார். கழுவினார். துண்டு போட ஆரம்பித்தார். முதலில் வால் பகுதியில் ஒரு துண்டு.. பிறகு தொடர்ந்து ஒவ்வொரு துண்டாகப்போட்டார் .... பையில் போட்டுக்கட்டும் வரை வால் துண்டின் அதிர்வு நிற்கவேயில்லை. துடித்துக்கொண்டே இருந்தது அந்த வால்.

வீட்டிற்கு வந்தவுடன்..

`அம்மா, விரால் வாங்கிவந்துள்ளேன், சூப் செய்யவா? சொல்லிக்கொடுங்க, எனக்குத்தெரியாது..’ என்றேன்.

வேலைக்காரி மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள்..

`அப்ப நி நாங்கிஸ்?’

`காக்கா.. நென்னே, டாரி தாடி லெமாஸ், தாங்கான் காக்கி செமுவா கெபாஸ்.. சயா தக்கூட்..’

`யா கா..! அப்ப ஜடி?’

`தாக் தாவ்வு க்கா.. பாடன் டியா புன் டிங்கின் சாங்ஙாட்.’

`ஓ..ஒகே ஒகே, ஜங்கான் நாங்ஙிஸ்...’

அறைக்குள் நுழைந்தேன்..

`யம்மா, என்னாச்சு?’

`காலையிலிருந்து ஒருத்தி வந்து என்னிய கூப்படறாம்மா.. உயரமா இருக்கா.. என்னுடைய துணியெல்லாம் துவைக்கறா... நான் வரலே’ன்னு சொல்லிட்டேன்..’

`அப்படியா, யார் அது?’

`பைடுதல்லி மாதிரி இருக்கு..’

`ஓ..’

`வீடெல்லாம் நல்லா சுத்தமா கூட்டி, மேக் ஆப் போடும்மா..!’

`ஏன்?’

`ச்ச்சே, நாளைக்கு எல்லோரும் வருவாங்கதானே.. நல்லாவா இருக்கும்..!’

`ஏன் வரணும்? யாரும் வரமாட்டாங்க...’

`ஓ..ஓவ்வ்வ்.. ஒவ்வ் எவ்வ்வ்..ல்ல்ல்ல்ல்...லலால்லா.’ என்னமோ சொல்ல வாய் எடுத்தார்.. கண்கள் சொரூகின, கைகள் நடுங்கின, அப்போது அவரின் நாக்கு .. துடித்தது.

அது, துண்டு போடப்பட்ட மீனின் வால் பகுதி துடித்ததை எனக்கு ஞாபகப்படுத்தியது..

நல்லவேளை, அம்மாவை முதியோர் இல்லத்தில் விடவில்லை. அங்கே இருந்திருந்தால், இதுபோன்ற நிலையில் யார் பேச்சுத்துணைக்கு ஆதரவாய் இருந்திருப்பார்கள்..!! பிள்ளைகள் போல் வருமா?

புதன், பிப்ரவரி 06, 2013

மாமி கதை ( சிரி சிரி)

`இது யார் வீடு?’


`இது நம்ம வீடு.’


`ஓ..அம்மா வீடா?’


`ஆமாம்...’


`நீ இங்கேயே தூங்கும்மா.. நேரமாச்சு எப்படி வீட்டுக்குப்போவ?’


`சரி தூங்கறேன்..’


`உம் புருஷன் பேர் என்னா?’


`நட்ஷணா..’


`ஓ..நட்ஷணா பொண்டாட்டியா நீ..’

`ம்ம்..’

`எங்கே அவன்?’

`தோ, இப்பதானே மேலே போனார்..’

`ஓ, நட்ஷணா, வீடு வாங்கிட்டானா?’

`ம்ம், வாங்கிட்டார்..’

`நல்லா இருப்பானம்மா, எவ்ளோ கஷடப்பட்டான்.., இவ்வளவு பெரிய வீடு இருக்குமா, அவன் வீடு..?

`ஆங்..இவ்வளவு பெரிய வீடுதான்’

`அவனையும் இங்கேயே தூங்கச்சொல்லு..’

`சரி தூங்கச்சொல்றேன்..’

வேலைக்காரியைப்பார்த்து..`அப்போ இவ எங்கே தூங்குவா?’

`அவளும் .. இங்கேயே..’

`அவ..அங்க அங்க மூத்திரம் அடிக்கறாம்மா.. ஒரே நாத்தம்.. வுவக் வாந்தி வருது..’

வாய்விட்டு சிரித்துவிட்டேன்..`ஹஹஹ..அப்படியா?’

`சிரி, நல்லா சிரி.. கிட்டவா ஒரு விஷயம்.. மனசிலேயே வைச்சுக்க....
வீட்டுக்கு யாரோ வந்தாங்க.. அவகூட ரொம்ப நேரம் பேசினா.. இரெண்டுபேரும் நல்லா படுத்து தூங்கினாங்க.. நான் கூப்பிடறது கூட கேட்கல..’