திங்கள், செப்டம்பர் 03, 2012

திருடி திருடிதான்

இன்று காலையிலேயே ஒரு கிழவி வந்திருந்தாள். துப்புறவு பணி இண்டர்வியூ’விற்கு. அவளைப்பார்த்தாலே எனக்கு பற்றிக்கொண்டு வந்தது.

எல்லோருக்கும் எல்லாரையும் நேசிக்கும் மனப்பக்குவம் வந்துவிடாது. அதுவும் சில சம்பவங்களால் சிலரை முழுமையாக வெறுத்து விடுவது பெண்களின் தனிப்பட்ட சுபாவம்.

சிலர் நமக்குள் சில அருவருக்கும் சம்பவங்களை விட்டுச் சென்றிருப்பார்கள். எல்லோரையும் நேச்சிக்கிறேன் என்கிற உலக மகா சாந்த சொரூப வேலைகள் புத்தர் வேடம் போடுபவர்களுக்குப் பொருந்தலாம். நமக்கு அது சரி பட்டு வராது. பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லைதான்.

சரி, ஏன் அவளைப் பார்த்து வெறுக்கவேண்டும்? அதுவும் இண்டர்வியூவிற்கு வந்திருக்கும் ஒரு கிழவியைப்பார்த்து..! சொல்கிறேன், சொல்வதற்குத்தானே இந்த கதையை இப்படி ஆரம்பித்துள்ளேன். 

நான் வேலை செய்யும் இடம் ஒரு ஜாப்பானிய நிறுவனம். இங்கே பணிபுரியும்  ஜாப்பானியர்கள் பொதுவாகவே அவர்களின் தயாரிப்புப் பொருட்களைத்தான் பயன் படுத்துவார்கள். குறிப்பாக அவர்களின் பாரம்பரிய உணவுகளை ஹோட்டலின் மூலமாக ஆடர் செய்து  வரவழைந்து உண்பது. காலணிகள் உடைகள் பெரும்பாலும் அவர்கள் நாட்டின் தயாரிப்புகளையே உபயோகப்படுத்துவது என, எல்லாமும் அதிக விலையுள்ள பொருட்கள்.

நான் அடிக்கடி அவைகளைக் கண்டு வியப்பும் விருப்பமும் கொள்வேன். அழகாக இருக்கு, வித்தியாசமாக இருக்கு, என்பேன்.

என்னுடைய பழைய மேற்பார்வையார் ஒரு ஜப்பானியப் பெண்மணி. அன்பான அடக்கமான பெண்மணி.  சக ஊழியர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

அவரின் ஐந்து வருட பணி காலம் முடிந்து மீண்டும் அவரின் ஊருக்கே திரும்புகையில், மிக நெருக்கமாகக் கருதும் சிலருக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கிச்சென்றார். மற்றவர்களைவிட எனக்கு கொஞ்சம் விலை ஜாஸ்தியான `மஃக்’, அதாவது காப்பி, டீ குடிக்கும் ஒரு பெரிய குவளை. சாதாரண குவளையல்ல அது, சுடச்சுட ஊற்றிவைக்கும் காப்பி டீ ஆனது வெகு நேரமும் சூடாகவே இருக்கும். அது மட்டுமல்ல குளிர்பானத்தை ஊற்றி வைக்கும்போதும் அதுவும் குளிராகவே நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும். அப்பேர்பட்ட ஒரு பொருளை எனக்காக வாங்கித்தந்தாள். மலேசிய ரிங்கிட் எழுபத்தைந்து, அதனின் விலை. நானே கேட்டுக்கொண்டதால், விலையையும் சொன்னாள்.
அக்கிண்ணத்தை வீட்டிற்கு எடுத்துச்செல்லாமல், இங்கேயே வைத்துக்கொண்டு, என்னுடைய பழைய காப்பிக்கப்பை,  இங்கே  துப்புறவு பணிபுரியும் ஒரு இந்தோனீசியப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, இந்த புதிய மஃக்’ஐ காப்பி டீ கலக்கப் பயன் படுத்திக்கொண்டேன்.

இப்போது இண்டர்வியூவிற்கு வந்திருக்கும் இந்த கிழவியும் முன்பு இங்கேதான் துப்புறவு பணியில் இருந்தாள். என்னுடைய பழைய காப்பிக்கப்பை இவளிடம் கொடுக்காமல், மற்றொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டதற்காக முன்பே என்னிடம் கோபித்துக்கொண்டாள். இவளும் இந்தோனீசியப் பெண்மணிதான்.

``இந்த பழைய கப்பை நீ என்னிடம்  கொடுக்காமல் ஏன் அவளிடம் கொடுத்தாய்?” இந்த கேள்வியே எனக்கு ஒரு வித மன சஞ்சலத்தைக் கொடுத்தது. ஏற்கனவே உபயோகித்த ஒரு பொருளை மற்றவர்களிடம் கொடுப்பதே அநாகரிகமாகக் கருதும் நான், அவள் வாய்விட்டு இந்த கப்பை என்னிடம் கொடு என்று கேட்ட போதே எனக்கு ஒரு வித மனசங்கடம் வந்தது. இது எதற்கு? நான் உனக்குப் புதிதாக வாங்கித்தருகிறேன், என்று சொல்லியும், எனக்குக்கொடு என கேட்டு வாங்கி எடுத்துக்கொண்டாள். மேலும் அவள் என்னிடம் கொஞ்சம் நெருக்கமாகவே இருப்பாள். உடம்பு வலிக்கிறது என்றால், உடம்பு பிடித்து விடுவாள், காலில் சுளுக்கு என்றால், சுளுக்கு எடுப்பாள். இதற்கெல்லாம் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளவே மாட்டாள். ஆதனால் உணவு வாங்கச்சென்றால், அவளுக்கும் சேர்த்தே வாங்கிவருவேன். வீட்டில் சமைக்கின்ற, வாங்குகின்ற மிதமிஞ்சிய சில பலகாரங்களையும், பதார்த்தங்களையும் கொண்டுவந்து கொடுப்பேன். நான், என் மகள், உபயோகித்த சில நல்ல துணிமணிகள், காலணிகள், அழகுசாதனப்பொருட்கள் என எதுவாக இருந்தாலும் இவளிடம் கொண்டுவந்து கொடுப்பேன். ஆக, எதாவது வேண்டுமென்றால், வேண்டுமென்று மிக தைரியமாக என்னிடம் கேட்டு வாங்கிக்கொள்வாள். அப்படித்தான் இந்த பழைய காப்பி  கப்பையும் கேட்டு வாங்கிக்கொண்டாள். அவள் என்னிடம் இப்படி நெருங்கியிருப்பது அவளுடன் வேலை செய்யும் சிலருக்கு எரிச்சலை ஊட்டியிருக்கவேண்டும். இந்த கிழவிக்கும் அதுதான் எரிச்சல்.

``அவள் இந்தோனீசிய மாய மந்திரத்தில் கைத்தேர்ந்தவள், அவளின் கையால் காப்பி டீ கலக்கிக்கொடுத்தால், குடிக்காதே. நீயே பார், உனக்கு உடம்பு வலியென்றால், அவள் கைப்பட்டால் உடனே சரியாகிறதுதானே, அப்பவே தெரியவேண்டாமா அவள் எதோ ஒரு மந்திரத்தை கைவசம் வைத்திருக்கிறாள் என்று., உன் துணிமணிகளைக் கொடுக்காதே, மந்திரம் செய்துவிடுவாள். அவளின் அம்மா அப்பா எல்லோரும் இந்த கலையில் கைத்தேர்ந்தவர்கள். எங்களுக்கு நீண்ட நாள் இவர்களைப்பற்றி தெரியும்!  வீட்டிற்கெல்லாம் அழைத்துச்சென்றால் (சென்ற ஆண்டு தீபாவளிக்கு இவளை அழைத்துச்சென்று வீடு சுத்தம் செய்தேன்.) கணவனையே கைக்குள் போட்டுக்கொள்வாள், கவனம்..!’’ என எச்சரித்தாள் இந்த கிழவி.

எனக்கு இதுபோன்ற எச்சரிக்கைகள் பயங்கர எரிச்சலைத் தந்ததால், இவளிடம் பேசுவதையே குறைத்துக்கொண்டேன். இவளின் சொல் பேச்சைக் கேட்காமல், தொடர்ந்து அவளிடம் நட்பு பாராட்டியதால், இவளின் கடுங்கோபத்திற்கு ஆளாக நேரிட்டது.

அன்றைய பொழுதிலிருந்து, என்னுடைய இடம் வந்தால் சுத்தம் செய்யமாட்டாள், குப்பைக்கூடைய துப்புறப்படுத்தமாட்டாள், எனது மேஜை நாட்காலியை வஃக்யூம் போடமாட்டாள். நான் ஒரு வேலை சொன்னால் செய்யமாட்டாள், எனது பொருட்களை அங்கேயும் இங்கேயும் கடாசுவாள். நான் டாய்லட் சென்றுவந்தால், வேண்டுமென்றே நீரை வேகமாக உற்றி சுத்தம் செய்வாள், சிறிய துண்டு டிஷூ பேப்பர் கீழே கிடந்தாலும், தாறுமாறாக வாயிற்கு வந்தபடி திட்டுவாள். மோப் போடும்போது யார் நடந்துச்சென்றாலும் சும்மா இருப்பாள், நான் நடந்துச்சென்றால் மட்டும் சத்தம் போடுவாள்.. இப்படியே பல இன்னல்கள்.

ஒரு நாள் அவளின் காண்ட்ரெக்ட் பாஸ் வந்தான் (சீனன்) அவனிடம் இந்த கிழவி செய்யும் அட்டுழியங்களைச் சொன்னேன். அவனும் ஓர் இடத்தில் மறைந்துக்கொண்டு, உண்மையிலேயே இவள் இப்படிச்செய்கிறாளா என கண்காணித்து உறுதிபடுத்திக்கொண்டு, என் முன்னாலேயே அழைத்து எச்சரிக்கை செய்தான். நான் எங்களின் மேலதிகாரியிடம் புகார் கொடுத்தால், இவனுக்குத்தான் பிரச்சனை. நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன். ஆக, அவளை எச்சரித்து அனுப்பி, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.

அதிலிருந்து இன்னும் கூடுதல் அடாவடித்தனம் செய்து, எனது ஜப்பான் மேலாளர் பரிசாகக் கொடுத்த காப்பி கிண்ணத்தை எடுத்துக்கொண்டு காணாமல் போய்விட்டாள். அந்த அற்புத பரிசை அவள்தான் எடுத்தாள் என்பது உறுதி, பார்த்த சக பணியாளர்கள் சொன்னார்கள். நான் அதை பெரிசு படுத்தவில்லை. கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அப்படியே மறந்துப்போனேன். கிட்டத்தட்ட ஆறு மாதகாலங்கள் கழித்து இன்று இங்கே மீண்டும் வந்திருக்கின்றாள்.

இப்போது, இங்கே வேறு காண்ட்ரெக்ட்’காரர் இந்த துப்புறவு துறைக்கு முதலாளி. அவருக்கு இவளைப்பற்றிய விவரம் ஒன்றும் தெரியாததால், மேலும் ஏற்கனவே இவளுக்கு இங்கே வேலை செய்த அனுபவமும் இருப்பதால், வரச்சொல்லியிருக்கின்றார்.

விடுவேனா நான்.!? அவளின் திருட்டு வேலைகளைச் சொல்லி, வேலைக்கு எடுக்க வேண்டாமென்று எச்சரித்து விட்டேன்.

பாடின வாயும், திருடுன கையும் சும்மா இருக்காது.  திருடி திருடிதான். தயவுதாட்சனையே காட்டக்கூடாது.    

5 கருத்துகள்:

  1. மிகச் சரியான முடிவுதான்
    ஒரு கன்னத்தில் அடித்தால்
    மறுகன்னம் காட்டச் சொல்வதெல்லாம்
    கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்
    வேலியோடு போவதை மேலே விட்டுக்கொண்டு
    நாம் ஏன் அவஸ்தைப்படவேண்டும்
    வெளிப்படையான பகிர்வு பிடித்திருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அது சரி.
    அவள் திருடியாக இருந்தால் உங்கள் செயல் நியாயமானதே.

    பதிலளிநீக்கு
  3. திருடி திருடி தான் சபாஸ் சரியான தீர்ப்பு

    பதிலளிநீக்கு
  4. இப்படிப்பட்ட வயோதிபர்கள் சிலர் எல்லா இடங்களிலும் எல்லா ஊர்களிலும் இருக்கத்தான் செய்கிரார்கள் போல

    பதிலளிநீக்கு
  5. சில மனிதர்கள் இப்படித்தான்....

    விலகி இருப்பதே நமக்கு நல்லது.

    பதிலளிநீக்கு