திங்கள், பிப்ரவரி 17, 2014

காதலுக்கு எதிர்ப்பு

பெண்ணிற்கு நீ சரியான ஜோடிதான்
குடும்ப உறுப்பினர்கள்..
உன்னை மருமகனே என்பதற்கு
உன்னை மாமா என்பதற்கு
உன்னை சித்தப்பா என்பதற்கு
உன்னை பெரியப்பா என்பதற்கு
உன்னை மச்சான் என்பதற்கு
உன்னை மகனே என்பதற்கு
உன்னை பேரா என்பதற்கு
உன்னை கொழுந்தனே என்பதற்கு
உன்னை அண்ணா என்பதற்கு
நீ சரியான ஆளா?
ஆராய்ந்துகொண்டிருக்கின்றார்கள்
ஜாதி பார்க்கவில்லை
காதலுக்கு எதிரியும் அல்ல
ஆனாலும் திருமணம்  நடக்காமல் போகலாம்..

புதன், பிப்ரவரி 12, 2014

கவிதை, கேள்வி. விளக்கம்..

புரிகின்ற கவிதைகளை எல்லாம் நல்ல கவிதைகள் என்று யாரும் கொண்டாடுவதில்லை. அதேவேளையில் புரியாத கவிதைகள் அனைத்தும் நல்ல கவிதைகள் அல்ல என்கிற அறியாமை வட்டத்திற்குள் புகுந்துகொள்வதும் சரியில்லை.

எழுத்துவடிவில் சொல்லப்பட்ட புரியாத சில விஷயங்களில் எனது புரிதல் குறித்து, `என்னமோ சொல்லவருகிறார்களே, நமக்குத்தான் புரியவில்லை போலும்..’ என்று பலமுறை அதை மீள்வாசிப்பு செய்து, புரிய முயன்று தோற்று,எனது புரிதல் அறிவை நானே நொந்துகொண்ட அனுபவமும் உண்டு. கவனிக்க *மழுங்கிய நிலையிலான எனது புரிதல் அறிவு..*

கவிதை குறித்து எந்த முன்முடிவும் எடுக்காமல், நமது புரிதல் அறிவை நாமே ஆராய்ச்சி செய்வதில் தீவிரம் காட்டினால், எனக்குப் புரியாதது மற்றவர்களுக்கும் புரியாது, அல்லது, நான் புரிந்துகொண்டதுதான் மற்றவர்களுக்கும் புரியும் என்கிற நிருபர் கண்ணோட்டப் புரிதல் விலகும்.

செய்தி சேகரித்து, அதை அப்படியே எழுதி மக்களுக்கு விளங்க வைப்பதும், ஆழ்ந்த வாசிப்பில், சிக்கலான வாழ்க்கைச்சூழலில் சிக்குண்ட மனம் உதிக்கின்ற கவிதை அல்லது இலக்கியப் படைப்பு என்பதும் முற்றிலும் வேறானது. கடினமான படைப்பிலக்கிய வாசிப்பு என்று தனியொரு வாசகன் முயலாதவரை,அதுமாதிரியான முயற்சிகள் மேலும் தொடராதவரை, நவீன எழுத்து கவிதை குறித்த நாலாந்தர விமர்சனங்கள் நம் இலக்கியச்சூழலில் `எழுத்தாளர்கள்’ என்கிற முகமூடிகளால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். இதுபோன்ற கெடுபிடிகள் இலக்கிய உலகிற்கு அவசியம் என்றே தோன்றுகிறது. காரணம், இதுபோன்ற சிக்கல்கள் உருவாகின்றபோதுதானே, இவ்வளவு அழகான தெளிவான கலைப்படைப்புகள் உங்களின் (நவீன் மற்றும் வல்லின குழு) மூலமாக உயிர்ப்பெற்று ஜனிக்கிறது.

இக்கட்டுரையின் மூல சாரத்தை வெட்டியோ அல்லது இதில் குறைபாடுகள் உள்ளது என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டோ தர்க்கம் செய்ய யாராவது முன்வருவார்களா? வரத்தான் முடியுமா? (முடியும், வெட்டியாக மொண்ணையான கருத்துகளை முகநூலில் பதிவேற்றி, அதை விவாதிக்க `ஆமாம் சாமி’ போடுகிற கூட்டத்தைத் திரட்டி, தனிநபர் தாக்குதல் நடத்துவார்கள்.) `கடவுளின் மலம்’ என்கிற கவிதை நாறவில்லை. ஆனால், அக்கவிதை குறித்த விமர்சன எழுத்துக்களின் கீழ் நிகழ்த்தப்பட்ட தனிநபர் தாக்குதலில், உலகிற்கே படம்பிடித்துக்காட்டினார்கள்.. அவரவர் அறியாமையின் உச்சநிலையின் அடையாளங்களை..) என்னக் கொடுமை.!

நவீன கவிதை ஒன்றினை வாசிக்கின்றீர்கள். புரியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள்.? நான் இப்படிச் செய்து புரிந்துகொள்ள முயல்வேன்.

நம்மைச்சுற்றி நடந்த, நடக்கின்ற, மனதை உலுக்கிய அல்லது பாதித்த அரசியல் நிகழ்வையோ, அல்லது சமுதாய சீர்க்கேட்டு நிகழ்வையோ அல்லது எதாவதொரு அவலத்தையோ மனக்கண்முன் நிறுத்திக்கொண்டு.. கவிதையில் வருகிற வரிகளை அதே அர்த்தத்தில் தட்டையாக வாசித்து புரிந்துகொள்ளாமல், நடந்த அவலங்களோடு கொஞ்சம் மெனக்கெட்டு ஒப்பிட்டுப் பார்த்து உள்வாங்கி, பிறகு இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி வாசித்து,கவிதையின் உள்ளர்த்தக் கருத்துகளை விளங்கிக்கொள்ள முயல்வேன்.

புரிந்தபின் அதனின் மூலக்காரணம் வேறாகவும் இருக்கலாம் அல்லது நடந்த குறிப்பிட்ட நிகழ்வாகவும் இருக்கலாம். இருப்பினும் புரிதல் என்பது அங்கே ஒரே மாதிரியாகத்தான் நிகழும். இது வயப்பட, நாம், நம்மைச்சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை சுரணை உணர்வுடன் விழிப்புநிலையில் அணுக பழகிக்கொள்ளவேண்டும். இவ்வுணர்வு வருவதற்கு,பரவலான வாசிப்பு அனுபவமும் அவசியம் தேவைப்படுகிறது. இது என்னைப்போன்ற பாமரனுக்கும் சாத்தியம். ஆனால் நடப்பது என்னவென்றால்; இங்கே, நமது வாசிப்பின் விழிப்பு மற்றும் சுரணை உணர்வு என்பது, உள்ளூர் பத்திரிகை வாசிகள் ஜீரணிக்கமுடியாமல் வாந்தி எடுக்கின்ற உணர்ச்சிப்பூர்வ செய்திகளாலே தூண்டப்பட்டுகிறது. அதன்பின் நடப்பது என்ன? `நான் ச்சீ, நீ ச்சீ’ என நம்மை நாமே தூற்றிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வதுதான். நண்டுகதை என்பார்களே அதுபோல்.

# பி.கு- மறைமுகமாக அவலத்தைச்சொல்லுகின்ற கவிதைகளில் - எனது வாசிப்பு பெரும்பாலும்.. #

திங்கள், பிப்ரவரி 10, 2014

பண்ணையாரும் பத்மினியும்

நகைச்சுவைத் ததும்பும் வசனங்கள். சிரிப்புக்கு பஞ்சமில்லை. சோகமுமில்லை. எல்லோரிடமும் எதார்த்தமான நடிப்பு.

நாம் நினைப்பதைப்போல் அங்கே எதுவும் நிகழவில்லை.
திருப்புமுனை வரும் என்று ஏமாறுகிறோம்.

நான் இறந்தால்? என்கிற வசனம் வரும்போது, இசை பேசுகிறது. இறுதிவரை ஒண்ணும் நடக்கவில்லை.

வில்லியான மகளால் வில்லங்கம் வரும் என்றால், அதுவும் இல்லை.

வில்லன் உண்டு, சண்டையே போடவில்லை.

வளைந்து நெளிந்து வேகமாக ஓடும் பஸ் - என்னாகும் என்கிற நெருடல்.. திக் திக் என்கிறது.. ஒன்றும் நடக்கவில்லை.

அசம்பாவிதம் நடக்குமோ என்றால்..ஹுஹும் இல்லை.

காதல் கைகூடாதோ.. அப்படி எதுவும் இல்லை.

காருக்கு எதும் ஆபத்து..? இல்லையே..

அப்பாவி பண்ணையார்.. அவருக்கு என்னாகும்? ஒண்ணும் நடக்கவில்லை.

இறுதியில் குடும்பத்துடன் பயணம் - அப்போதும் இப்பாவிமனம் நினைக்கிறது..கூண்டோடு கைலாசமா? அதுவும் இல்லை.

இப்படி ஏமாற்றியபடியே நகர்கிறது `பண்ணையாரும் பத்மினியும்’ என்கிற திரைப்படம்.

இருப்பினும் சன்ஸ்பன்ஸ் இறுதிவரை தொடர்கிறது.

கடைசியாக ஒன்றுமட்டும் புரிகிறது. அடுத்தவனுக்கு எதாவது ஏடாகூடமாக நிகழவேண்டுமென்று நினைக்கின்ற நமது மனம், நம்மைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிக்கிறது..

திரையறங்கைவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்.

மனம் மட்டும் கிசுகிசுக்கிறது.. நல்ல படம்.

ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

நான் உள்ளே வரவா?

மாமிகதை :

மாமி படுக்கின்ற படுக்கையில் கரப்பான்பூச்சியைப் பார்த்துவிட்டாள் பணிப்பெண்.

காலையிலேயே படுக்கை, தலையணை, ரப்பர் விரிப்பு என எல்லாவற்றையும் உலர போட்டாள்.

மெத்தை தலையணை உலர்வதைக் கண்ட மாமி, `நான் தூங்கப்போகிறேன். இரவெல்லாம் உறக்கம் இல்லை. உடம்பில் அரிப்பு, இடுப்பு வலி, முதுகு வலி..’ என புலம்பிக்கொண்டே இருந்தார்.

நான் காலையில் கீழே இறங்கி வருகிறபோது.. `யம்மா, இவ அட்டகாசம் செய்கிறா.  எனக்குத்தூக்கம் வருது.’ என்றார்.
பணிப்பெண்ணிடம் `என்ன ஆச்சு.? மெத்தையைப்போடு, தூங்கட்டும்.’ என்றேன். அவள்.. `இப்போதுதான் வெயில் எட்டிப்பார்க்கிறது. கொஞ்ச நேரமாவது வெயில் படட்டுமே, தூங்குவதற்கு நன்றாக இருக்கும்.’ என்றாள். நியாயமாகவே பட்டது.

`சரி, அப்படியென்றால், இங்கே ஷோபாவில் படுத்துத்தூங்குங்கள்’ என்றேன். `ஈஸி சேரில்’ இருந்து சோபாவிற்கு அழைத்துச்சென்று படுக்கவைத்தோம்.
ஈஸி சேரில், இடுப்பு வலிக்கிறது. சோபாவில் சாய்ந்தால், முதுகு வலிக்கிறது. மீண்டும் புலம்பல். மணி காலை10.15. ஒன்பது மணிக்கு மெத்தை தலையணைகளைக் காயப்போட்டுள்ளாள் பணிப்பெண். ஏறக்குறைய ஒரு மணிநேரம்தான் ஆகிறது.

மகள் இறங்கிவந்தாள். மாமி தன் பேத்தியிடமும் அதே புலம்பல். பணிப்பெண்ணிற்கு கோபம் வந்தது. `பதினொரு மணிக்கு சாப்பாடு கேட்பாய் பாட்டி, கொஞ்ச நேரம் இரு.. எல்லோரிடமும் சொல்லாதே.’ என்று அதட்டினாள்.

நான் சமையல் வேலையை ஆரம்பித்தேன், பணிப்பெண் எனக்கு உதவி செய்துகொண்டிருந்தாள்.

கணவர் இறங்கிவந்தார். கணவரைக் கண்டவுடன். மீண்டும் புலம்பல். `எனக்கு உட்கார முடியல, நடக்க முடியல, எழுந்திரிக்க முடியல, அங்கே வலி, இங்கே வலி.. நான் தூங்கணும். படுக்கையெல்லாம் வெயிலில் வெளியே கிடக்கு.. வேலைக்காரி ரொம்ப மோசம்.’ என்று ஆரம்பித்துவிட்டார்.

கணவர் வெளியே கிடந்த மெத்தையை உள்ளே எடுத்துவந்து கட்டிலில் போட்டார். படார் என்று சத்தம். என்ன சத்தம் என்று எட்டிப்பார்த்தால், அவரே, அவரின் அம்மாவிற்கு படுக்கையை தயார் செய்கிறாராம். எப்படி? பணிப்பெண் தூங்குகிற மெத்தையை இழுத்துவந்து அம்மாவின் கட்டிலில் கிடத்தி, அலமாரியில் இருந்த மெத்தை விரிப்பை எடுத்து விரித்து மெனகட்டுக்கொண்டிருந்தார்...

பணிப்பெண் ஓடிவந்து, `அது என்னுடையது, பரவாயில்லை விடுங்கள், நான் போடுகிறேன்..’ என்று சொல்லி, மெத்தையைத்தட்டி, வாசனைப் பூச்சித்திரவம் அடித்து, பேன்;ஐ முடுக்கி விட்டு, மாமியை உள்ளே அழைத்துச்சென்றாள்.
உள்ளே படுக்கவைத்த சில நொடியில், மீண்டும் அழைத்தார் மாமி..

`நான் கொஞ்ச நேரம் வெளியே உட்காரவா?’

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், வயதானவர்களின் psychology’ஐ நாம் அறிந்துவைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் வயதானவர்களின் மேல் வெறுப்பே மிஞ்சும். கோபம் வரும்..

புரிந்துகொள்வோம் என்பதற்காகவேதான்...

என் தோழி, வயதான அவளின் அம்மாவை வைத்துப்பார்த்துக்கொண்டாள். சக்கரை வியாதின் காரணமாக அம்மாவிற்கு ஒரு கால் இல்லை. பணம், நகை வீடு எல்லாம் மகன்களுக்குக் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட ஒன்றுமில்லா நிலையில் தமது ஒரே மகளின் வீட்டில் தங்கியிருப்பதற்கு தாயிற்கு அவ்வளவாக இஷ்டமில்லை. இருப்பினும் வேறு வழியில்லை. மருமகள்களின் நிராகரிப்பு.

வீட்டிற்கு வருவோர் போவோர் எல்லாம், கால் இல்லாத குறையைச் சொல்லிச்சொல்லி அலுத்துக்கொண்டார்கள். ஒருமுறை அந்தம்மா சொல்லியுள்ளார். எனக்கு ஏன் கால் இல்லை இல்லை என்று சொல்கிறீர்கள்.? கால் இருக்கே. வலி என்பதால் அதை உள்ளே மடக்கி மறைத்து வைத்திருக்கிறேன், என்றார். அதற்கு மகள், `நல்லா துணியைத் தூக்கிட்டுப் பார், உள்ளே ஒன்றரை கால் தான் இருக்கு.’ என்றவுடன்.. அந்தத்தாயின் முகம் மாறியதை என்னால் இன்னமும் மறக்கமுடியாது.

புரிந்துகொள்ள கஷ்டம்தான். கோபம் வரும். கோபப்படலாம். அதேவேளையில் புரிந்துகொள்ளவும் வேண்டும்.

செவ்வாய், ஜனவரி 21, 2014

நான்

உன் எழுத்தில் இருக்கின்ற `நான்’னில் எனக்கு உடன்பாடில்லை. 
வாசகியாகிய நான், அதில் தெரிகிற`நான்’ஐ வாசிக்கின்றபோது, சோர்ந்துபோகிறேன். 
உன் `நான்’ என்னைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவனைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவளைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ அவர்களைச் சொல்வதாக இருக்கவேண்டும். 
உன் `நான்’ உயர்திணை மற்றும் அக்றிணையைச் சொன்னாலும் நான் பொறுத்துக்கொள்வேன்.
முழுக்க முழுக்க உன் `நான்’னில் நீயே மறைந்திருப்பதை நான் எப்படி ஏற்றுக்கொள்வது.?
உனது `நான்’ எதையும் பறைசாற்றாமல், `நான்..நான்’ என நீயே உன்னை வடித்துக்கொண்டிருப்பதால், நான் அதில் எதைக் கற்க.?
உனது `நான்’ சொல்லவரும் செய்திதான் என்ன?
உனது `நான்’னில் நான் என்ன தெளிவு கொள்ளமுடியும்.?
நீ கேட்கலாம், நீயும் எழுதுகிறாய், உனது `நான்’ என்ன சொல்லவருகிறது?
எனது `நான்’னில் நான் மட்டும் இருக்கமாட்டேன். நாசுக்காக நான் சொல்லும் `நான்’ நான் அல்ல. நீ.
நல்ல `நான்’ நீரோடைபோல், செல்கிற வழியெங்கும் பயிர்களைச் செழிக்கச்செய்யலாம்.
ஆனால், உனது நான்’னில் நீ மட்டுமே தெரிகிறாய்.
எதற்கு இந்த `நான்’...
விடு விடு..
வாசிக்கப்படுவாய்...
வாசகியாய் வேண்டுகிறேன்
நான்..

வியாழன், ஜனவரி 09, 2014

தேங்காய்கள்

தைபூசத் திருநாள் நெருங்கினாலே தேங்காய்களின் விலை கிடுகிடுவென ஏறும்.

அதுவும் இந்த முறை அனைத்துப்பொருட்களும் அதிக அளவில் விலையேற்றம் கண்டுள்ளதால், தைபூசத்திருநாளில் தேங்காய்களைக் குறிவைத்து அவைகளின் விலையையும் அதிக அளவில் ஏற்றிவிட்டார்கள். விளைப் பொருட்களின் பற்றாக்குறையால் அவைகளின் விலை, ஏற்றம் காண்கிறது என்பது ஒருபுறமிருந்தாலும், தைபூசத் திருநாளில் தெருவில் உடைப்பதெற்கென்றே பலகோடி தேங்காய்கள் தேவைப்படுவதால், தேங்காய்களின் விலை இரண்டு மடங்கிற்கு மேலாக உயர்வு கண்டு பக்தர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய பத்திரிகைச் செய்தியின் நிலவரப்படி, ஒரு தேங்காயின் விலை, சென்ற ஆண்டு ஒரு ரிங்கிட் இருபதுகாசு. இன்றைய விலை, இரண்டு ரிங்கிட் எண்பது காசு என உயர்வு கண்டுள்ளது. விலை உயர்ந்தால் என்ன..!?  நாங்கள் அவைகளை சாலையில் தெருவில் உடைத்து பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்வோம், என்பதிலிருந்து பின்வாங்கமாட்டார்கள் நம்மவர்கள்.

பண்டிகைக்காலமென்றாலே நமது இனத்தவர்கள் அதிக அளவில் பயிர்களையும் காய்கறிகளையும் தேவையில்லாமல் வீணடிக்கின்றனர் என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதன் பயன், பாதிப்பு, விலை யேற்றம், உணவுக்கு பயிர்கள் பற்றாக்குறை, விளை நிலங்கள் போதாமை என்பனவற்றைப் பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பயிர்களை நாசம் செய்து குதூகலிக்கின்ற பண்டிகைக் கொண்டாட்டங்கள் எல்லாமும் நம்மவர்களது என்றாகிவிட்டது.

சென்ற ஆண்டு நவராத்திரி விழாவின் போது நாங்கள் தமிழ் நாட்டில் இருந்தோம், தீபாவளி ஷாப்பிங் செய்துகொண்டு.

விஜயதசமி, ஆயுதபூஜை செய்கிற நாட்களில் பயிர்கள், வாழைக்கன்றுகள், தென்னங்குறுத்துகள், மா இலைகள், வெற்றிலை, தேங்காய்கள் என வெட்டி வீதியெங்கும் நாசம் செய்திருந்த கலாச்சாரத்தைக் கண்டு திடுக்கிட்டோம்.

ஒவ்வொரு வாகனத்திலும், வீடுகளிலும், தெருவிலும், கடைகளிலும் எங்கு பார்த்தாலும் கொலையுண்ட பயிர்கள், கழுத்து அறுக்கப்பட்ட வாழைக்கன்றுகள்,  வீசி எறியப்பட்ட தாணியங்கள், தேங்காய்கள் என குப்பைக்குவியல்களாக வீதியெங்கும். காண்பதற்கு வியப்பாகவே இருந்தது எங்களுக்கு. தமிழர்களாக இந்துக்களாகப் பிறந்திருப்பினும்  இவ்வளவு மோசமான முறையில் பயிர்களை நாசம் செய்கின்ற கலாச்சாரத்தை இதுவரையில் எங்கும் கண்டதில்லை. இங்கே மலேசியாவில் தமிழர்கள் வாழ்கிற சிறிய வட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் இவைகள் நடந்திருக்கலாம், அவை எங்களின் பார்வையில் படாமலும் இருந்திருக்கலாம். ஆனால்அங்கே (தமிழ்நாட்டில்), காண்கின்ற இடமெல்லாம் விழாக்கோலம் என்கிற பெயரில் பயிர்கள் நாசம் செய்யப்பட்டிருப்பதை ஜீரணித்துக்கொள்ளத்தான் முடியவில்லை.

பயிர்களை நாசம் செய்து விழாக்கோலம் காண்கிற இந்தக் கலாச்ச்சாரம் தற்போது இங்கேயும் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து பெரிய அளவில் முகாமிட்டு நாடு தழுவிய நிலையில் விரிவடைந்து வியாபார  நோக்கமாக மாறி வருவது கண்கூடு.

தமிழர்கள் இந்துக்கள் பண்டிகைகள் என்றால் எதாவதொரு பயிர் நாசம் செய்யப்படுவதென்பது இயல்பான ஒன்று என்றாகிவிட்டது. ஒருகாலத்தில் அவைகள் நல்ல நோக்கத்திற்காக அமல்படுத்தப்பட்டிருப்பினும் தற்போதைய சூழலில் பண்டிகைகளுக்குப் பயன்படுத்துகிற பயிர்கள் தாணியங்கள் பெரும்பாலும் வீதியில் வீசியெறிகிற உபயோகமற்ற பொருளாகவே மாறிவிட்டது. அப்படியில்லையேல் மரியாதை நிமித்தமாக பொட்டலங்கட்டி ஆற்றில் வீசியெறிவதும் உண்டு. என்னைப் பொருத்தவரையில் இரண்டுமே வீண் விரையம்தான். இது காலத்தின் கோலமேயென்றாலும், இந்த நவநாகரீக காலகட்டத்தில் மனிதர்கள் சுற்றுப்புற சூழலின் மகத்தும் புரியாமல் கற்கால மனிதர்கள் போல் அறியாமையில் உழல்வதுதான் சிக்கல் இங்கே.  

கூடியவிரைவில் பொங்கலை வரவேற்கக் காத்திருக்கின்றோம். அதற்குத்தயாரான நிலையில் ஆங்காங்கே கரும்புகளுக்கும் வேரோடு பிடுங்கிய மஞ்சள் செடிகளுக்கும், `ஆடர்கள்’ வேண்டி அழைப்புகள் ஒலித்தவண்ணமாகத்தான் இருக்கின்றன. சாங்கியத்திற்காவது வாசலில் கட்டிவைக்கவேண்டுமென்று வாங்கி, இரண்டு மூன்று நாட்கள் கழித்து வீதியில் குப்பைக்கூலங்களில் வீசி எறிவதைத்தவிர வேறொன்றும் சிறப்பாக நடந்துவிடாது.

கரும்பைக் கடித்து மென்று துப்புவதை யார் செய்கிறார்கள் இப்போதெல்லாம்.? மஞ்சள் இலை ஏன் கட்டுகிறோமென்பது கூட தெரியாத நிலையில், ஊரார் பார்த்து மெச்சுவதற்காகவே சில ஏற்பாடுகள் செய்யப்படுகிறன. சிலர் பொங்கலுக்குப் பொங்கிய பொங்கச்சோற்றைக்கூட சாப்பிட ஆள் இல்லாமல்/கிடைக்காமல் வீசிவிடுகிறார்கள்.  இனிப்பு கெடுதல் என்கிற கலாச்சரம் வேறு விஷவாயு போல் மிக வேகமாகப் பரவி விட்டது. பழத்தின் இயற்கையான இனிப்பு என்றாலும் கூட, “ஐய்யோ இனிப்பா? வேண்டாம்.” என்கிற நவநாகரீக சூழலில் நாம் சிக்குண்டுக்கிடக்கின்றோம்.

பண்டிகைகளின் மகத்துவத்தை மறந்து, உலகிற்கு நாம், நமது கலை கலாச்சாரங்களை விடாமல் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம் என்பதைப் பறைச்சாற்றுவதற்காகவே பலவிதமான பயிர்தாணிய விரைய வேலைகளில் ஈடுபட்டு சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறோம் என்கிற உணர்வில்லாமல் வாழ்ந்து வருகிறோம்.

தைப்பொங்கல்தான் வருடத்தின் முதல் பண்டிகை. அதற்குப் பிறகு வரிசையாக வரும் அனைத்துப்பண்டிகைகளிலும் எதாவதொரு பயிர் பலிகடா ஆகும் என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா.?

திருஷ்டி சுற்றிப்போடுவதிலும் மிளகாய் ,எலுமிச்சை, பூசணி, பூ என நம்மையறியாமலேயே பல விளைப்பொருட்களை விரையம் செய்துகொண்டிருக்கின்றோம்.

யோசிப்போம்...
    

புதன், டிசம்பர் 25, 2013

முரண்படுகிறேன்..

நிறைய படித்தவர்களை விட இலக்கியவாதிகள் உயர்ந்தவர்கள் என்று எப்படிச்சொல்கிறீர்கள் அம்மா.?.

எல்லா படித்தவர்களுக்கும் மனோத்தத்துவம் தெரியாது. ஆனால் இலக்கியவாதி என்பவர் உளவியல் அறிஞர். 

அப்படியென்றால் உங்களை நீங்கள் உளவியல் அறிஞர் என்கிறீர்களா அம்மா?

நான் இலக்கியவாதி இல்லையே..!

எழுதுகிறீர்கள்..?

எழுதுபவர்கள் எல்லோரும் இலக்கியவாதியா?

நீங்கள் சொல்வது அப்படித்தானே இருக்கு..!?

நான் சொல்வது உனக்கு விளங்கவேண்டுமென்றால், நீ ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருக்கவேண்டும்..!

அப்போ என்னிடம் ஆழ்ந்த வாசிப்பு இல்லையா? நான் ஒரு மருத்துவர்.

யாராக இருந்தாலும் இலக்கியவாதியிடம் நிறக முடியாது.

நீங்கள் முரண்படுகிறீர்கள் அம்மா.!

(உரைக்கு முற்றுப்புள்ளி...)