வியாழன், ஜூலை 05, 2012

புறக்கணிக்கப்பட்ட மனது

பிரிய மனமில்லாததால்
பிரிந்து விடுவாயோ
என்கிற பய உணர்வால்
பிரிந்து செல்கிறேன் உன்னை.!

விலகிட மனமில்லாததால்
எங்கே விலகிவிடுவாயோ
என்கிற உளவியல் சிக்கலில்
விலகிச் செல்கிறேன் உன்னை.!

மறக்கவே முடியாததால்
மறந்துவிடுவாய்
என்கிற உணர்வுக்கொந்தளிப்பிலே
நானே மறந்து விட்டுச் செல்கிறேன் உன்னை.!

புறக்கணிப்பை தாங்கிக்கொள்ள
பக்குவமற்றவளாய்
புறக்கணித்து விட்டு செல்கிறேன் உன்னை

தவிக்கவிடுவதாய் நினைத்து
நித்தம் நித்தம் தவிப்பில் உழன்று
தவிப்பிலே கழிகிறது
புறக்கணிக்கப்பட்ட என் மனது





புதன், ஜூலை 04, 2012

வானொலி நாடகங்களும், நடக்கும் கூத்துகளும்

நம்ம ஊர் வானொலி நாடகங்களின் தரம் படு மோசமாகிக்கொண்டிருக்கிறன என்கிற புரிதல் நம்மில் எத்தனைப்பேருக்கு இருக்கின்றது..!? ஒரு காலத்தில் தமிழர்களின் வீடுகளில் கலைக்கட்டிய இந்நாடகத்துறை இப்போது வலுவிழந்து காணப்படுவது வருத்தத்திற்குரிய ஒன்று என்பது பலரின் மனக்குமுறல். 

இலக்கியத்தில் அறவே பரிச்சயம் இல்லாதவர்கள் இத்துறையின் உச்சபட்ச அதிகாரத்தில் இருந்துகொண்டுநிலைமையை படுமோசமாக்கிக்கொண்டிருப்பது வெளியே ரசிகர்களான எங்களுக்குப் புரிந்திருக்கும் வேளையில், உள்ளே தமிழ் துறையில் தலைமை வகிப்பவர்களுக்கு ஏன் புரியவில்லை என்பதுதான் இங்கே வியப்பு.!   

நாடகங்களை தயாரிக்கின்றார்களே, உலக அரங்கில் மிகபிரபலமாகப் பேசப்பட்ட நாடங்களை இவர்கள் பார்த்ததில்லை போலும். அல்லது எது நாடகமென்று சரிவர புரியவில்லைதான் போலும். ஷேக்ஸ்பியர் நாடகங்களை விடுங்கள், மௌலி, கே.பாலசந்தர், விசு, ஒய்.ஜி என இப்படிப் பலரின் சினிமா படங்கள் அனைத்தும் நாடகங்களே.! மக்களுக்கு அருமையான கருவைக் கொண்டுவரவில்லையா அந்நாடகங்கள்!இன்றுகூட திரையரங்குகளை அலங்கரிக்கும் அற்புதமான திரைப்படங்கள் அனைத்தும் நாடகங்களே. அதையும் எடுத்துக்கொள்ளலாமே துணையாக வழிகாட்டியாக.!

நம்முடைய நாடகங்கள் குறிப்பாக வானொலி நாடகங்கள் இன்னமும் அதன் கதைப்போக்கில் 1950திலேயே நின்றால் எப்படி? இன்றைய இளஞர்களின் கைகளிலே உலகம். உலகத்தை கைகளில் கைப்பேசியாக வைத்துக்கொண்டு உலவும் இளஞர்களுக்கு பாடமாக அமைகின்ற கதைகளுக்குப் பஞ்சமா என்ன?

இவர்களாகவே (வானொலி தயாரிப்பாளார்கள்) கதைத்தேர்வில் ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு, இதுதான், இப்படித்தான் நாடகம் இருக்கவேண்டுமென்கிற வரையறையை முதலில் தகர்த்தெறிந்து விசாலமாக பார்வைக்குள் வந்துவிடவேண்டும். சொல்லப்படும் கதைகள் தற்போதைய நாட்டு நிலவரத்தில் எம்மாதிரியான பங்குதனை வகிக்கின்றது என்பதனை ஆராயும் கதைக்குழு நமது வனொலியில் இருக்கின்றதா? அதற்காக புரிதல்தான் நமது வானொலி தயாரிப்பாளருக்கு இருக்கின்றதா?

ஒரிரு நாடகத்தில் நானும் பங்கேற்று அங்கே அரங்கேறும் நிகழ்வுகளைக் கண்காணித்தவள்  என்பதால்தான், இதை நான் இங்கே சொல்ல வருகிறேன். அதாவது, நாடகங்களை நல்ல முறையில் நடத்தப்பட வேண்டுமென்கிற அக்கறையில், நல்ல கதைகளைக்கொண்ட நாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விடுகிறார் தயாரிப்பாளர். வசனத்தில் சரியாக உச்சரிகவில்லை, பேசும்போது ஒலிகளை சரியாக ஒலிக்கவும். வசனத்தில் ஏற்ற இறக்கங்கள் அவசியம், அழும்போது கையில் இருக்கும் காகிதத்தைப் பார்க்கவேண்டாம், இது சரியில்லை.. அது சரியில்லை என நடிப்பவர்களை நடுங்கச் செய்வதில் வல்லவரான தயாரிப்பாளார், ஒன்றுமேயில்லாத கதைகளை மட்டும் எப்படி கட்டிக்கொண்டு அழுகிறார் என்பதுதான் இங்கே வினா.!

அடுத்த வினா உடனே வரும் சிலருக்கு.. ஏன் நம்ம தயாரிப்பாளருக்குக்குட வரலாம்.! நீ இவ்வளவு பேசுகிறாயே, உன்னால் ஒரு நாடகம் எழுத முடியுமா? என்னங்க அந்நியாயம் இது? இறந்தால்தான் இறப்பைப்பற்றி பேசமுடியுமென்றால், ஒருவரும் மரணம் குறித்து மூச்சு விட முடியாது தானே!? ஒரு ரசிகர் என்கிற பார்வையில் நமது கருத்துக்களைச் சொல்வதற்கு நமக்கு உரிமை இல்லையா? எழுதுகிறவர்கள்தான் கருத்து சொல்லவேண்டுமென்றல், தங்களின் வட்டத்தில் உள்ள அந்த பத்து பதினைந்து எழுத்தாளர்கள் மட்டுமே கருத்தைச் சொல்வதற்கு தகுதியானவர்கள் ஆகிறார்கள். அப்படிப்பார்த்தோமென்றால், அவர்கள் தைரியமாகத் தமது கருத்துதனைச் சொல்லுவார்களா என்ன? பணம் வாங்கிக்கொண்டு விசுவாசமில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்கிற அவச்சொல் அவர்களுக்கு வந்துவிடாதா, உங்களால்?!  

சரி அதை விடுங்க, என்னால் ஒரு நாடகத்தை எழுதித்தர முடியுமா என்றால்.....முடியாதுஏனென்றால் பணம் கொடுக்கின்றார்கள் என்பதற்காக, கற்பனையை மழுக்கடிக்கின்ற வேலைகளில் நான் ஈடுபடவே மாட்டேன். எனக்கென்று சுதந்திர எழுத்துச்சூழல் கைவசம் இருக்கின்றபோது, யாரோ ஒருவர் வகுத்துவிட்ட சட்ட விதிமுறை என்கிற வட்டத்திற்குள் பணத்திற்காக சோரம் போகும் செய்கையை ஒரு நல்ல எழுத்தாளன்  செய்யவேமாட்டான், நான் மட்டும் என்ன விதிவிலக்கா!. உங்களின் விதிமுறை கெடுபிடிக்கெல்லாம் கதைகள் எழுதினால், கற்பனை என்கிற குப்பைகளைக் கட்டிக்கொண்டு கழுதைபோல் பொதிசுமக்கவேண்டி வரும். அல்லது எதாவது ஒரு சினிமா அல்லது சீரியல் கதைகளை திருடி (வாழ்வே மாயம் திரைப்பட கதையைப் போல்) அதை அங்கேயும் இங்கேயும் கொஞ்சம் மாற்றி, நமது பெயரைப் போட்டுக்கொண்டு வானொலிக்கு அனுப்பி விடவேண்டியதுதான். தயாரிப்பாளர் என்ன கண்டு பிடிக்கவாப் போகிறார்.! (கேட்பவர்கள் எல்லோரும் கேணயர்கள் என்கிற நினைப்புதான்.) இது போன்ற அசிங்கமான வேலைகளையெல்லாம் நான் செய்ய மாட்டேன். இதற்கு அப்பார்பட்ட கதைகளை கிரகித்துக்கொள்ளும் ஆற்றலும் அங்குள்ளவர்களுக்கு இல்லை. மெனகட்டு எழுதினாலும், நம் சக்திதானே விரையம். தேவையா? அதுவும் அடுத்து யாருடைய கதை நாடக வடிவம் கொடுக்கப்படவேண்டும்! யாரெல்லாம் அதில் நடிக்கலாம், பணம் யாருக்கெல்லாம் பகிர்ந்தளிக்கப்படும் என்கிற நியதியெல்லாம் ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதுதானே.! இதில் நான் நுழைந்து என்ன கிழிக்கப்போகிறேன்.!?

எல்லா கதைகளையும் நான் குறை சொல்லவில்லை. சில நல்ல நாடகங்களும் அரங்கேறிய வண்ணமாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் பெரும்பாலும் குப்பைகளே. அடுத்த வினாவும் வரலாம், `நல்ல கதைகளுக்குக் காத்திருந்தால், கதைகள்/நாடகங்கள் வராது. வாரந்தோரும் வெளிவரும் நாடகங்கள் முற்றாக நிறுத்தப்படும் நிலை வரலாம். இது அபத்தமில்லையா?’  என்னங்க இது கூத்து? உங்கள் கைகளில் அதிகாரம் இருக்கின்றதுதகுந்த சன்மானம்வேறு வழங்குகிறீர்கள், என்னவேண்டுமானலும் செய்து இந்ததுறையை மேல் நிலைக்குக்கொண்டு வரமுடியாதா என்ன? கெடுபிடிகளை அதிகப்படுத்தினால், தற்போது எழுதிக்கொண்டிருக்கும் அதே எழுத்தாளர்கள் கூட நல்ல முறையில் தமது எழுத்துக்களை மெருகேற்றிக் கொண்டு வருவதற்கு முயல்வார்கள்தானே!? கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, அற்பத்தனமான காரண்ங்கள் முகஞ்சுழிக்க வைக்கின்றன பலவேளைகளில்.

இறுதியாக ஒரே ஒரு கேள்வி.. நிறைய பணவிரையம் செய்து, குறுநாடகப்போட்டி, சிறந்த நடிகர்/நடிகைகள் தேர்வுப்போட்டி, எழுத்தாளர் சங்கத்துடன் நடத்தி நாடுதழுவிய நிலையிலான பல போட்டிகள் என நடைப்பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நிலை என்ன? வானொலி நாடகத்துறை அவரகளை வரவேற்கிறதா?

(நீண்ட நாட்களுக்குப்பிறகு, இன்று நான் பத்திரிகைக்கு எழுதி அனுப்பிய ஓர் கடிதம்.. வந்தால் என்ன வராவிட்டால் என்ன.! )

செவ்வாய், ஜூலை 03, 2012

உணவு

வாடாத
கீரையாக வாங்கி
வதங்கிய பின்
சமைத்தேன்

நடையா இது நடையா?

வருடத்திற்கு ஒருமுறை, ஜூன் மாத இறுதியில் எங்களின் அலுவலகத்தில், சீருடை மற்றும் காலணிகள் கொடுப்பார்கள். (கம்பனி யூனிஃபோர்ம்)

பெண்கள் நாங்கள் அலுவலகத்திலேயே உலவுவதால், எந்த மாதிரியான காலணிகள் வேண்டுமென்று கேட்பார்கள். இரண்டு வகைகள் உண்டு, ஒன்று ஹை ஹில்’ஸ் மற்றது சாதாரணமானது.

நான் எப்போதும் ஹை ஹில்’ஸ்தான் எடுப்பேன் ஆனால் இந்த முறை சாதாரண shoe எடுத்துக்கொண்டேன்.

சென்றவாரம் கிடைக்கப்பெற்ற அந்த காலணியை நேற்றுதான் பார்த்தேன், புதிய காலணிகள் தான் இருப்பினும் அதன் அடியில் பிளவு பட்டிருந்தது. அலுவலகத்தில் முறையிட்டேன், என் அளவு காலணி ஸ்டாக் இல்லையாம்; ஆகையால் சொந்தமாக ரிப்பேர் செய்து பயன்படுத்திக்கொள் வேறுவழியில்லை, என்று சொல்லிவிட்டார்கள்.

அருகில் உள்ள ஒரு கடையில் ரிப்பேர் செய்யக் கொடுத்தேன். பதினைந்து நிமிடத்திற்குள் செய்து கொடுத்து விட்டார்கள். 

இரண்டு ஜோடி காலணிகளையும், அதாவது ஒரு ஜோடி இப்போ நான் அணிந்திருக்கும் ஹை ஹில்’ஸ், மற்றொரு ஜோடி புதியது சாதாரணமானது.  ஹில்’ஸ் தான் வித்தியாசம், ஆனால் பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரியே இருக்கும்.  இரண்டு ஜோடிகளையும் ஒன்றாக ஒரே இடத்தில் வைத்து விட்டேன்.

இன்று காலையில் காலணிகள் அடுக்கியிருக்கும் அலமாரியைத் திறந்து, கையில் அகப்பட்ட ஒரு ஜோடியை எடுத்து காரில் கடாசிவிட்டு (பெண்கள் நாங்கள், கார் ஓட்டும் போது காலணிகள் அணிவதை பெரும்பாலும் விரும்புவதில்லை) அலுவலகம் வந்துசேர்ந்தேன்.

கார் பார்க்கில் காரை வைத்துவிட்டு, காலணிகளை அணிந்துகொண்டு நடக்கையில், cat walk செய்ய முடியவில்லை, நடை ஏறி இறங்குகிறது.. என்னவென்று பார்த்தால், ஒரு பக்கம் ஹை ஹில், மற்றொரு பக்கம் சாதாரண ஷூ.!!

பாதிவழியில் கழற்றமுடியாதே, போட்டுக்கொண்டேதான் நடந்து வந்தேன். நல்ல வேளை நம்மவர்கள் யாரும் பார்க்கவில்லை; பார்த்திருந்தால் `நடையா இது நடையா, ஒரு நாடகமன்றோ நடக்குது’ என்கிற பாடலைப் பாடியிருப்பார்கள.

இன்று அலுவலகத்தில், பழய சிலிப்பர் (சண்டல்) ஒன்று ஸ்பேராக வைத்திருப்பேன், கழிவறைக்குப்போகும் பொது பயன்படுத்துவது.. அதுதான் உதவிக்கொண்டிருக்கிறது.!


திங்கள், ஜூலை 02, 2012

உடனே தோசை..

சமையல் குறிப்பு; 

சிலர் தோசை மாவு புள்ளித்தவுடன் தான் தோசை சுடுவார்கள். அதற்காக முதல் நாளே அரைத்துவைத்து மறுநாள்தான் சுடுவார்கள். 

உடனே அரைத்து உடனே புளித்து உடனே சுடவேண்டுமா? இதோ ஐடியா.. 

இதுபோன்ற ரகசிய சமையல் குறிப்புகளை பெரும்பாலும் பெண்கள் சொல்லிக் கொடுக்கமாட்டார்கள், ஆனால் நான் அப்படியல்ல.. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். 

காலையில் அரிசியையும் உளுந்தையும் சுத்தமாக கழுவி, பழைய சோறு, கொஞ்சம் உப்பு, வெந்தயம் சேர்த்து சரியான அளவோடு நீர் விட்டு ஊறவைக்கவும். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியதும், ஊற வைத்திருந்த அந்த கலவையே நுரை தள்ளிய நிலையில் இருக்கும். அதை அப்படியே கிரைண்டரில் அரைந்து வைத்து விட்டால், குளித்து விட்டு, குழம்பு வைப்பதற்குள் அது பதமாகி விடும். சுடச்சுட சுட்டு, மச்சானோடு சாப்பிடவும். 


ரெடிமெட் மாவு வாங்கி தோசை சுடுவதை தவிர்க்கவும்..

Clown

வட்டமான
சதுரமான
முக்கோண வடிவில்
முட்டை வடிவில்
உர் ரென்றும்
சிரிப்பும்
புன்னகையும்
ஏளனமும்
அலட்சியமும்
கோபமாக
கோரமாக
பலமுகங்கள்
நம்மைச்சுற்றி
கோமாளி
முகமூடியோடு



மறந்துவிடவும்


என் முகம் நினைவில் இருக்கா?
மறந்து விடவும்.

நான் யார் என்று தெரிந்திருந்தால்
தயவு செய்து மறந்து விடவும்.

இன்னார் மனைவி, மகள், தாய், மருமகள் என
எப்போதாவது நான் சொல்லியிருப்பேன்..
ப்ளீஸ் மறந்து விடவும்..

என்ன சொன்னேன், எப்படிச் சொன்னேன்..பேசினேனா?
என் குரல் கேட்டதுண்டா?
மறந்து விடவும்.

என் உயரம், எ(இ)டை, நிறம், பதவி,பட்டம்,
எதாவது உங்களுக்குத்தெரிந்திருந்தால்...
மறந்து விடவும்..

ஏதேனும் உளறல்கள், திட்டுதல்கள்,
கோபம், பந்தா பகட்டு..நிச்சயம் இருந்திருக்கும்..
மறந்து விடவும்.

நான் மறுபிறவி எடுக்கப்போகிறேன்,
எழுத்தால்,சொற்களால்..
என்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல்...