திங்கள், ஜூன் 10, 2013

குள்ளநரிகள்

என்னை எனக்கு அதிகம் பிடிக்கும். ஏன் தெரியுமா? என்னால் முடியாத, என் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத, என் தகுதிக்கு மீறிய, எனக்குத் தொல்லை தரக்கூடிய, எனக்குப்பிடிக்காத எதையும் நான் வரவேற்க மாட்டேன். தைரியமாக நிராகரிப்பேன். யார் யாருக்காகவோ கண்ட அல்பங்களையெல்லாம் நெஞ்சில் மலமாகச் சுமக்க என்னை நான் என்றுமே அனுமதித்ததில்லை.

நல்ல பெயர் வாங்க வேண்டுமென்பதற்காக சிலர் சுற்றிவளைத்து சுற்றிவளைத்து எதையோ சொல்லவருவார்கள். நான் மட்டும், முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும்.

பலரின் தட்டிக்கழித்தலில் தமக்கு சுயநலம் இல்லை என்பதைப்போல காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள். தமது சுயநலப்போக்கு எங்கே வெளியே தெரிந்துவிடுமோ என்றெண்ணி, அற்ப காரணங்களுக்கு வெட்டி வியக்கியானம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

சில மனித ஜென்மங்கள் நன்றி கெட்ட ஜீவன்கள். கையில் பசை இருக்கும் வரை பிடுங்கித்தின்னு உடல் வளர்த்து கொழுத்து, இல்லாதபோது விலகி நின்று வேடிக்கைப் பார்ப்பதோடல்லாமல், தம்மால் முடியாத சில காரியங்களை பிறர் செய்யும் படி பணித்து அதற்கான ஆலோசனைகள் வக்கனையாக வழங்கி இரட்டை வேடம் தரித்து எல்லாவற்றிலும் ஜெயிக்க நினைப்பார்கள்.

சிலவற்றைப் பகிரலாம் என்று தோன்றினாலும் இந்த குள்ளநரிகளின் செயல்பாடுகள் குறித்து நினைக்கின்ற போதே இதயத்தின் துடிப்பு அதிகரிக்கின்றது.

எப்படியெல்லாம் வேடமிடுகிறார்கள்.! இது நாடகம்தான் என்று நமக்குத் தெள்ளத்தெளிவாய் தெரிகின்றபோது, நான் நன்றாக நடித்துவிட்டேன் என்று இறுமார்ந்திருக்கிற மலந்தின்னிப் பன்னிகளால் என்றுமே   மனவுளைச்சல்தான். 

கைப்புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப்போல சிலர் நமக்குக்கொடுக்கின்ற காயங்களுக்கு விளக்கமே தேவையில்லை. அது நிகழும்போதே அதற்கான பலாபலன்கள் உடனே தென்படத்துவங்கிவிடும்.

வாக்கு காப்பதில் நம்மவர்களுக்கு நிகர் நம்மவர்கள்தான். நிகழாது என்று தெளிவாகத் தெரிகின்றபோது வாக்குகளை வாரி வாரி வழங்குவார்கள், அதைக்கேட்கின்ற சில கூர்கெட்ட சாம்பிராணிகள் `ஆஹா..இவர் போல் வருமா. ரொம்ம்ம்ப நல்லவர்ர்ங்க..’ என்று அகமகிழ்வாரகள்.அதுவே நிகழ்க்கூடிய சாத்தியமெல்லாம் இருக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்களேன், வாக்கு மீண்டும் மாறும். பேச்சு மாறும். நியாயங்கள் அநியாயமாக மாறும். நாட்டு அரசியலைவிட வீட்டு அரசியல் கொடுமையானது. ஒவ்வொரு வீட்டிலும் கெட்ட சர்வதிகாரிகள் உள்ளனர். தமது தரப்பு நியாயங்களை மட்டும் வெட்டியாய் பேசிக்கொண்டு.. பக்கிகள்.

நான் யாரிடமாவது கதை சொன்னால், ஆரம்பத்திலிருந்துதான் வருவேன். என்ன நடந்தது என்றால்....., என்று ஆரம்பித்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் வரிசையாகச் சொல்வேன். ஒருவரிடம் சொல்வது மற்றவரிடம் மாறுபடாது. ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உண்மையல்லவா, அதித ஞாபகச்சக்தியெல்லாம் அங்கே தேவையே இல்லை. 

நிதானமாக எல்லாவற்றையும் கேட்க, சிலருக்குப் பொறுமையே இருக்காது. `என்னடா இது, இப்படி இவளிடம் மாட்டிக்கொண்டோமே..’, என்று வருத்தம் கொள்பவர்களும் உண்டுதான்.

கதைகளைக் கேட்பவர்கள், அங்கே நடந்துவிட்ட முடிவை மட்டுமே எதிர்ப்பார்ப்பார்கள். இக்கதையால் நான் என்ன சொல்லவருகிறேன் என்பதைத்தெரிந்து கொள்ள மட்டுமே ஆவலாய் இருப்பார்கள். நானோ முடிவை மட்டும் சொல்லாமல், நடந்தவற்றையெல்லாம் சொல்லி ‘பூசிங்’ செய்வேன். முடிவைச்சொல்லாமல், அதை அவர்களே யோசிக்கும்படியும் வைத்துவிடுவேன்.

ஆனால் ஒருபோதும் என் தரப்பில் அநியாயமான நியாயங்கள் இருப்பதைப்போல் சொன்னதே கிடையாது. போகிறபோக்கில் சம்பவங்களில் இருக்கின்ற `நான்’ என்ன செய்தேன், என்பதை மட்டும் நியாயப்படி சொல்வேன். அதன் நியாய அநியாயத்தை, கேட்பவரே முடிவு செய்யட்டும். 

சிலர் உருகி உருகி கதை சொல்வார்கள், கேட்கிற நமக்குத்தெரிந்து விடும், `அட தடிமாடே, பிரச்சனையே நீதானே, எருமை..’ என்று மனதிற்குள் முனகிக்கொள்வோமே, அதுபோல்தான், சொல்கிற கதையை யாராவது கேட்டுவிட்டு முடிவுசெய்து கொள்ளட்டும் நம் தரப்பு நியாய அநியாயத்தை. !

நாம் என்ன நியாயமா கேட்கிறோம்? கேட்கின்ற அனைவரும் உலகத்தின் தலைமை நீதிபதியா என்ன..? மனதில் உள்ளதை வெளியே கொட்டினால், பாரம் கொஞ்சம் குறையுமே.. அதற்குத்தான் இந்த உளறல்கள்.

தமது இரண்டு கைகளையும் ஏந்திகாட்டி, “ இந்தக் கைகளால் எவ்வளவு உதவி செய்திருப்பேன். இந்தக் கைகளால் எவ்வளவு ஆக்கிப்போட்டிருப்பேன். இந்தக் கைகளால் எவ்வளவு கொடுத்திருப்பேன். இந்தக் கைகளால் எப்படியெல்லாம் வளர்த்திருப்பேன் ஆனால் இன்னிக்கு எனக்கு ஒருவேளை சோறு போட யாருமில்லை..” என்கிறார் ஒரு வயதான அம்மா. மக்களைப்பெற்ற மகராசி.  

தூ...தூ..தூ