சனி, ஜனவரி 24, 2015

ரசித்து நெகிழாமல்

ஐ-
ஏற்கனவே எழுத்தப்பட்ட விமர்சனங்களையெல்லாம் மாங்கு மாங்கு என நெட்டில், முகநூலில் வாசித்துவிட்டு படம் பார்க்கச்சென்றிருந்தீர்கள் என்றால், நிச்சயம் அந்தப்படம் உங்களுக்குப் பிடிக்காமல்தான் போகும்.
படம் பார்க்கப்போகிறபோது நமது பார்வை நமதானதாக மட்டும் இருக்கட்டுமே. நமக்குப்பிடித்திருந்தால் அது நம் ரசனையைப் பொருத்தது. நமக்கு பிடிக்குமா பிடிக்காத என்பது கூட அடுத்தவர் பார்க்கின்ற பார்வையில்தான் அமையுமென்றால் நமக்கென்று இருக்கின்ற அடையாளம் இல்லாமல் போகும்தானே. !
அடேயப்பா எவ்வளவு காரசாரமான விமர்சனங்கள் நெட்’இல்.
அவைகளையெல்லாம் வாசிக்கின்றபோது, அடக் கடவுளே, நாம் அவசரப்பட்டு ஐ- படத்தைப் புகழ்ந்து தள்ளிவிட்டோமே, என்கிற சிந்தனை எழாமல் இல்லை. நம் ரசனை குறித்து நாமும் வெற்கித் தலைகுனிகிற நிலைக்குத்தள்ளிவிடுகிறது அவ்விமர்சனங்கள்.
சரி அது கிடக்க்கட்டும். ஒரு திரைப்படத்தைப் பார்க்கின்றபோது அப்படத்தின் கதையினுக்குள் நாம் நுழையவேண்டும். நாம் ஒரு பாத்திரமாக அங்கே இணையவேண்டும். நடக்கின்ற நல்லது தீயதுக்கெல்லாம் நாம்தான் சாட்சி அங்கே. அப்போது அடாவடித்தனம் புரிந்து நாம் நல்லவர் என்று காட்சியகப்படுத்தியிருக்கின்ற நாயகனையோ அல்லது நாயகியையோ வில்லன் என்கிற தீயவன் துன்புறுத்துகிறபோது, அந்த வில்லனாகப்பட்டவன் எந்நிலையில் பழிவாங்கப்படுவான் என்கிற எதிர்ப்பார்ப்பு இல்லாமல் படம் பார்க்கமுடியாது.
மற்றவர்களைப் பற்றி தெரியாது ஆனால் நான் ஆழ்ந்த ரசிப்பில் இருக்கின்றபோது அங்கே நடக்கின்ற கிண்டல் கேலி பார்வைகள் வில்லன்களை குறிவைத்து எடுக்கப்பட்டிருந்தால் ரசிக்கத்தான் செய்வேன்.
உதாரணத்திற்கு இறுதிக்கட்டத்தில் சந்தானம் செய்கிற கேலிகிண்டல்கள் படத்தை முழுமையாகக் கண்டு ரசித்து நெகிழாமல் அந்த இறுதிக்காட்சியை மட்டும் பார்த்திருந்தேன் என்றால், எனக்கும் சங்கரின் மேல் கடுமையான கோபம் வந்திருக்கும். நோய்வாய்ப்பட்டிருப்பவர்களையும் ஊனமானவர்களையும் ஏன் இப்படி நையாண்டி செய்திருக்கின்றார் என. ஆனால் காட்சிகளை அணுவணுவாக ரசித்து அதில் மூழ்கித் திளைத்திருக்கின்ற நமக்கு அக்காட்சிகளாகப்பட்டது குதூகலத்தையே கொண்டு வந்தது.
அதர்மம் தர்மத்திடம் தோற்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு கடை நிலை ரசிகனுக்கு எப்போதும் இருக்கின்ற ஒன்றுதான்.. அது நாவலாகட்டும் சினிமாவாகட்டும்.
அடுத்து, விளம்பர நடிகையின் மேல் சாதாரண ஆண்மகனுக்கு பார்த்த மாத்திரத்திலேயே காதல் பொங்கிவருகிறது என ஒரு குற்றச்சாற்று.
காதலைப்பொருத்தவரை, சினிமா என்றைக்குமே அப்பட்டமான பொய்களைத்தான் புகுத்திவருகிறது. சேரியில் வாழும் பரம ஏழை மீது கோடிஸ்வரிஅல்லது கோடிஸ்வரன் காதல் கொண்டு திருமணம் நடப்பதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம். நிஜவாழ்வில் 0.001%தான். அதை அழகாகச் சொல்லவில்லையா நம் சினிமா? ஏற்றுக்கொள்கிறோம்தானே நாம்.!
அடுத்து கொளுந்துவிட்டு எரிகிற ஒரு பிரச்சனை, திருநங்கைகள் அவமதிக்கப்பட்டுவிட்டார்கள் படத்தில். நானும் கூனிக்குறுகினேன் நகைச்சுவை என்கிற பெயரில் சந்தானம் செய்கிற ஆரம்ப கட்ட கலாட்டாவில். அது மட்டுதான் குறையாக இருந்தது எனக்கு. இருந்தபோதிலும் திருநங்கையான அந்நடிகை, நான் இதுமாதிரியான காட்சிகளின் நடிக்கமாட்டேன். இதுபோன்ற வசனங்களை வைக்காதீர்கள் என கட்டளை பிறப்பித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை.? சங்கர் படமென்றால், உலக ரசிகர்களால் ரசிக்கப்படுகிற ஒரு படமாக அமையும் என்பதால், தமது பக்களிப்பை உலகமே கண்டு ரசிக்கவேண்டும் என்பதற்காக, தம்மைச் சார்ந்தவர்கள் கேவலப்பட்டாலும் பரவாயில்லை என அந்தப் பிரபல ஒப்பனைக் கலைஞர் அப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதுதான் கண்டிக்கத்தக்கது.
சரி உனக்கு என்ன வந்தது.? நீ ஏன் இந்தப் படத்திற்கு இப்படிப் பாடுபடுகிறாய்.? என்றால், படம் பார்த்துவிட்டு நல்ல படம் என விமர்சனம் எழுதிவிட்டேன். அது தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது என்கிற நினைவுறுத்தல் சில முகநூல் நண்பர்களால் என் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனால்தான் இதை எழுதுகிறேன். இதனால் எனக்கு ஒன்றுமில்லை. எனது ரசனை எப்போதும் சரியானதாகத்தான் இருக்கும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில் நான் எப்போதும்...