ஞாயிறு, மே 11, 2014

மின்சாரக் கட்டணம்

யாராவது என்னைத்திட்டினால், எனக்கு உறுத்தும். மனக்கஷ்டம் கொள்வேன். மறந்துவிடுவேன்.

அதுவே நான் யாரையாவது திட்டினால்.. கோபம் தொடரும். வெறுப்பு வரும். எரிச்சல் வரும். எதுவும் செய்ய முடியாது என்னால்..

மூன்று மாதங்களுக்கு முன் நான் ஒரு பிரிட்ஜ் வாங்கினேன். செகண்ட் கிளாஸ் பிரிட்ஜ். செகண்ட் கிளாஸ் என்றால், லாரியில் இருந்து இறக்குகிறபோது சின்ன விரிசல் அதனில் கதவுகளில். அது உடனே சர்வீஸ் டிப்பார்ட்மெண்ட் பரிசோதனைக்குச் சென்று, பாதிவிலையில் விற்பனக்கு வந்தது.

இதுபோன்ற பொருட்களை அங்கே பணிபுரியும் நாங்களே, `நான் நீ’ என எடுத்துக்கொள்வோம். பணம் கூட முதலில் கொடுக்கத்தேவையில்லை. சம்பளம் கிடைக்கின்றபோது கொடுக்கலாம். ஆனால் invoice இஸ்ஷு செய்துவிடுவார்கள். நம் பெயரில்.

`சூப்பர் ஐஸ் பெட்டி, வாங்கிக்கோங்க. புதுசு பாதிவிலையில்.. கிடைக்காது. சர்வீஸ் ஒகே.. நல்ல பிரிட்ஜ்..’ என்று சர்வீஸ் டிப்பார்மெண்ட் ஊழியர்கள் சொல்லவே, போனால் வராது. விட்டால் கிடைக்காது என்று அதை நான் வாங்கிக்கொண்டேன்.

என்னிடம் ஏற்கனவே ஒரு பிரிட்ஜ் உள்ளது. இருபது ஆண்டு கால பிரிட்ஜ். பெரியது. அது இன்னும் நல்ல நிலையிலேயே உள்ளது. இப்போது இன்னொன்று கொஞ்சம் சிறியது. சரி பரவாயில்லை, பேரங்காடியில் offer விலையில் விற்கப்படுகிற சமையல் பொருட்களை கொஞ்சம் கூடுதலாக வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதற்கு இந்த பிரிட்ஜ்’ஐ பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டு வாங்கிவைத்துப் பயன்படுத்தி வந்தேன்.

நான் பிரிட்ஜ் வாங்கிய சமையத்திலா நாட்டில் மின்சாரம் விலையேற்றம் காணவேண்டும். !

என்ன கணக்கோ தெரியவில்லை, திடீரென்று இம்மாதம் மின்சாரக் கட்டணம், நாநூற்று இருபது ரிங்கிட் வந்துவிட்டது. கொடுமை. இவ்வளவு அதிகமாக வந்தே இல்லை. எப்போதும் இருநூறு ரிங்கிட்’ஐக் கூட தாண்டாது. இது என்ன புதிய கொள்ளை.! என்று நினைத்து, மின்சாரவாரியத்திற்கு அழைப்பு விடுத்துக்கேட்டால், `மின்சாரம் விலையேறிவிட்டது, இனி கட்டணம் அப்படித்தான் வரும். உங்களின் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது.’ என்று மட்டும் ஆலோசனை வழங்கினார்கள்.

பிறகு என்ன.? உன்னால் தான் இவ்வளவு உயர்வு. ஓயாமல் மைக்ரொவெவ் பயன்பாட்டினால்தான்..! ஓயாமல் சுடுநீர் கேத்தலை தட்டிக்கொண்டே இருப்பதால்தான்.. ! ஹிட்டரில் ஓயாமல் குளிப்பதால்தான்..! எல்லா விளக்குகளும், மின்விசிறிகளும் ஓயாமல் ஓடிக்கொண்டே இருந்தால்..! மழைகாலத்திலும் ஏர்கோண்ட் ஓடினால்..! லப்டாப், தொலைக்காட்சிப்பெட்டி, ஐயர்ன், வாஷிங்மிஷின், வஃகியூம், வானொலிப்பெட்டி என எல்லாவற்றையும் சொல்லிமுடித்த பின்.. நான் வாங்கிய புதிய பிரிட்ஜிக்கு வந்துவிட்டார்கள். `நீ தான் ரெண்டு பிரிட்ஜ் பாவிக்கிற.. அது எவ்வளவு கரண்ட் இழுக்கும் தெரியுமா? அம்மானாலத்தான் கரண்ட் அதிகமா ஏறுது.. என்று எல்லாப்பழியும் என் மேல் விழ, நான் வேலைக்காரியை உருட்ட, ஒரே அமளி சென்ற ஏப்ரல் மாத இறுதியில்.

எப்படி என்ன பிரச்சனை வந்தாலும் நான் தான் பொதிசுமக்கும் கழுதையாகிவிடுவேன் என் வீட்டில். என் தலையிலேயே விடியும் அனைத்தும். சரி இம்மாதம் எல்லாவற்றையும் குறைத்துவிடலாமே என்று பயன்பாட்டைக் குறைக்கப்போராடி வருகிறேன்.

இவ்வேளையில், என் கம்பனியில் ஏற்கனவே பணிபுரிந்த நபர் ஒருவர் கம்பனிக்கு வந்தார். பிரிட்ஜ் வாங்க. பிளாட் வீடு அவரின் வீடு. ஏற்கனவே உள்ள பிரிட்ஜ் கெட்டுப்போக, அது மிகவும் பழமையான பிரிட்ஜ் என்பதால், பழுதுபார்க்கமுடியாது, காரணம் அதனின் உபரிபாகங்கள் தற்போது விற்பனையில் இல்லை. ஆக பழுதுபார்ப்பது விரையம். புதிதாக வாங்கிக்கொள்ளுங்கள், என்று ஆலோசனை வழங்கவே, ஷொரூமுக்குள் வந்தார், புதிய பிரிட்ஜ் பார்க்க. எல்லாம் அதிக விலை. அவ்வளவு பணம் கொண்டுவரவில்லை. விலை குறைவாக இருந்தால் பரவாயில்லை.. என்ன இப்படி விலையேறிக்கிடக்கு சாமான்கள்.! மகளுக்கு கல்யாணம் வேறு வைத்திருக்கேன். பணம் போதாது என்று முனகிக்கொண்டே என்னிடம் வந்தார்.

என்ன பிரிட்ஜ் வேணும்.. நான் வேண்டுமானால் செகண்ட் கிளாஸ் எதும் ஸ்டோர்க் இருக்கா என்று கேட்டுப்பார்க்கிறேன், என்று கூறி அவர் வாங்க நினைக்கின்ற பிரிட்ஜ்’யைக் காட்டச்சொல்லிக் கேட்டேன். என்ன ஆச்சரியம், நான் வாங்கிய அதே பிரிட்ஜ்’ஐக் காட்டினார். எனக்கு தலையில் கொம்பு முளைத்தது. என்னிடம் உள்ளதை விற்றுவிட்டால்.!! மனதில் நினைத்தேன். சொல்லவில்லை. இருப்பினும் அந்த பிரிட்ஜ், செகண்ட் கிளாஸ் இருக்கிறதா என்று கேட்டு விசாரித்துச்சொன்னேன். இருந்தது. ஆனாலும் அதுவும் விலைதான். கொஞ்சம்தான் குறைத்தார்கள். இல்லேங்க.. முடியாது. அவ்வளவு பணம் இல்லேங்க.. ப்ப்ச்ச்.. என்று சலித்துக்கொண்ட அவரிடம், என்னுடைய பிரிட்ஜ் பற்றிய விவரத்தைச் சொன்னேன்.

வாங்கி மூன்றுமாதமே என்றாலும், நான் வாங்கிய விலையில் இருந்து இருநூறு ரிங்கிட் குறைத்துக்கொண்டே பேரம் பேசினேன். பாவம் ஏழை. அகமகிழ்ந்தார். அப்படியா.? நல்லவேளை கடைகளின் பக்கம் செல்லவில்லை. உடனே எடுத்துக்கொள்கிறேன். போன் நம்பர் கொடுங்க.. என்று உற்சாக வசனமெல்லாம் பேசிவிட்டு.. வீட்டு முகவரியைப் பெற்றுக்கொண்டு.. ஓ அங்கேயா வீடு.. வந்திருக்கேன் வந்திருக்கேன். டோல் தாண்டி, லெஃப்ட்ல ஏறி நேரா.. ஓ.. லாரி ஓட்டிக்கிட்டு அங்கே எல்லாம் வந்திருக்கேன். பெரிய வீடுகளாச்சே அது எல்லாம்.. புது ஏரியா.? நான் அங்கே வீடு வாங்கலாம்னு நினைச்சேன்.. லோன் கிடைக்கல.. அழகான எடங்க அது.. என்று பில்டாப் எல்லாம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அன்றிலிருந்து ஓயாத `மிஸ்ட் கால்’கள்.

என்ன.? என்று நாம் அழைத்துக்கேட்டால், நமது பணத்திலேயே.. என்ன மாடல் அந்த பிரிட்ஜ்? எப்போ வாங்கியது.? எப்போ வந்து எடுக்கலாம்.? எவ்வளவுக்கு வாங்கினீங்க? புதுசா இருக்கா? விலை இன்னும் கொஞ்சம் கொறச்சுக்கீங்களேன்.. என் நண்பனுக்கும் வேணுமாம் அதனால நானும் நண்பனும் வருவோம்..! ரெண்டு பேர்ல யாருக்கு பிடிக்கிதோ, அவங்க எடுத்துக்குவோம்.! பிரிட்ஜ்’யில் என்ன எல்லாம் வைப்பீங்க.? நாறுமா? சுத்தம் பண்ணிவையுங்க.. இன்னிக்கு வரோம்.. நாளைக்கு வரோம்.. வந்துக்கிட்டு இருக்கோம்.. லாரி வாடகை நூறுவெள்ளி கேட்கறாங்க.. அத நீங்க கொடுக்கறீங்களா? இப்ப நான் ஒண்டி வந்தா ..ஆரு ஒதவி செய்வா? என இப்படி ஓயாத டார்ச்சர்.

நேற்று மீண்டும் ஒரு மிஸ் கால். தொலைபேசியில் கிரேடிட் இல்லை. இருந்த கொஞ்ச பணத்திலேயும் அழைத்து, என்ன ? என்று கேட்டேன். நான் இப்போ வந்துக்கிட்டு இருக்கேன். பாதை தெரியாம தடுமாறுகிறேன். வழிகாட்டுங்க.. என்றார். எப்படி வழிகாட்டுவது.? கிரெடிட் வேறு தீர்ந்துபோனது. ஆன் லைன்ல இதுக்கென்றே மெனக்கட்டு டாப் ஆப் செய்துகொண்டு, அழைத்தேன்.

``எங்கே இருக்கீங்க?’’

``ஆஸ்பித்திரிக்கிட்டே ..’’

``ஐயோ, அங்கே ஏன் போனீங்க?’’

``நீங்கத்தான் லெஃப்ட்ல நுழையச்சொனீங்க ..அதான்.?’’

``எங்கே இருந்து லெஃப்ட்ல நுழைந்தீங்க? டோல் தாண்டிய பிறகா?’’

``டோல்’எ நான் பார்க்கவே இல்லியே..’’

``பிறகு ஏன் லெஃப்ட்ல நுழைஞ்சீங்க?’’

``அதாங்க சீலாப் ஆ நுழைஞ்சிட்டோம்..’’

``இப்போ எங்கே இருக்கீங்க?’’

``பாண்டார் புத்ரி சைன்போட் முன்னாடி..’’

``ஹூஹும்ம்.. அங்கே இருந்து இன்னும் பத்து கிலோமீட்டர் வரணும்.’’

``ஐய்யோ.. இன்னும் பத்து கிலோ மீட்டரா? லோரிக் காரன் கத்துவானே..”

``சரி சரி.. ட்ரை பண்ணுறேன்.”

ஆள் அழைக்கவே இல்லை. என்னாச்சு என்று மீண்டும் அழைத்தேன். எங்கேயாவது மாட்டிக்கொண்டால்..! அதற்குள் பிரிட்ஜில் உள்ள பொருட்களையெல்லாம் தூய்மை படுத்திக் காலியாக்கினேன்.

``எங்கே இருக்கீங்க?’’

``அட கண்டுபிடிக்கமுடியலங்க.. காரை திருப்பி டோல் கிட்ட வந்திட்டோம்.” யாருடனோ உரத்தகுர்லில் சிரித்துப்பேசிக் கொண்டே பதில் வந்தது. (கவனத்தில் கொள்ளவும்.. அவர் என்னிடம் முதலில், டோல் வரவே இல்லை என்றார். பிறகு லோரி ஓட்டுனர் கத்துவான்.. என்றார். இப்போது வேறுகதை.. இதுதான் நம்மவர்கள்.)

என்னால் அதற்குமேல் பொறுக்கமுடியவில்லை. என்னுடைய கிரேடிட் முப்பது வெள்ளி ஏறக்குறைய தீர்ந்த நிலையில்.. வறுமையில் வாடும் ஒருவருக்கு உதவ நினைத்து நான் வறுமையின் எல்லைக்கோட்டுக்கே வந்திடுவேன் போலிருக்கு.. முப்பது வெள்ளி முடிந்தாலும் பரவாயில்லை, பிரிட்ஜ் விற்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று முடிவுசெய்துகொண்டு, அழைப்புக் கொடுத்து `தாறுமாறாகத்’ திட்டித்தேர்த்தேன் அவனை.

கெட்டவார்த்தைகள் வராத குறைதான். அற்பர்கள்.

வாக்கு காக்கத்தெரியாதவர்கள் எல்லாம் மனிதர்களா? மடையர்கள்.