வெள்ளி, ஜூலை 19, 2013

இலக்கியதிற்கு பால் பேதங்கள் தேவையற்ற ஒன்று


முதலில் இவைகளைப் படியுங்கள் : -
  • கள்ளக்காதலனுடன் தாய் சல்லாபம், அதைப்பார்த்துவிட்ட மகனை காதலனும் அந்தத்தாயும் கொலை செய்தனர்.
  • கணவர் தமது மனைவியை மாதவிடாய் காலகட்டத்தின் போது உடலுறவு கொள்ள அழைத்ததால்- மனைவி அவனை விவாகரத்து செய்தாள்.
  • குழந்தையை பால்வல்லுறவு செய்துவிட்டு, அதனின் பிறப்புறுப்புக்குள் நீண்ட குச்சியினைச் சொரூகிய காமுகன். 
  • வாய்வழி புணரும்போது கணவன் தனது விந்துவை மனைவியின் வாயினுள்ளே விட்டதால் போலிஸில் புகார் செய்தாள் மனைவி.
  • தமது மகளின் நிர்வாணப்புகைப்படங்களை நெட்டில் ஏற்றிய தாய்.
  • காதலர்கள் தாங்கள் உடலுறவு கொண்ட வீடியோ நிகழ்வை வலைத்தலத்தில் பதிவேற்றி அம்பலப்படுத்தினர்.
  • பள்ளி ஆசிரியை தமது மாணவனுடன் உடலுறவு கொண்டார். ஆசிரியர் மாணவியின் மார்பகத்தைத் தடவினார்.
  • மின்தூக்கியில் எழுபத்தைந்து வயது மூதாட்டி வன்புணர்வு.
  • எதிர்வீட்டு மாடியில் துணிகளை உலரவைத்த இல்லத்தரசியிடம் தமது விரைத்த குறியைக்காண்பித்த காமுகன், மனநோயாளி என்று போலிஸில் ஒப்படைப்பு...
  • காலநேரமில்லாமல் சதா ஆபாசப்படங்களை பார்த்து, பலமுறை விந்துவை வெளியேற்றியபடியே இருந்த மாணவன் கணினியின் அருகிலேயே பிணமாகக்கிடந்தான்.
  • திருட்டுத்தனமாக காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட பள்ளிமாணவி, துரதிர்ஷ்டவசமாக கர்ப்பம் தரிக்க, அதை ஏற்றுக்கொள்ள முடியாத காதலன் (அவனும் மாணவனே) அவள் வயிற்றில் வளரும் சிசுவைக் கொல்வதற்கு கர்ப்பவதியான காதலியின் வயிற்றில் கத்தியால் குத்தினான்..
  • அக்காள் தங்கை என இருவரையும் மறைமுகமாகக் காதலித்து இருவருடனும் பலமுறை உடலுறவு கொண்ட வெளியூர்வாசி கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். காரணம், பெண் பிள்ளைகள் இருவரும் பதினாறு வயதிற்குக்கீழ்ப்பட்டவர்கள்...
  • தந்தையே தாம் பெற்ற மகளிடம் பலமுறை உடலுறவுகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டது போதாமல், தமது  தங்கைகளின் மீதே கைவைக்கப் பார்ப்பதைப்பொறுக்க முடியாத அப்பெண் அவனை போலிஸில் பிடித்துக்கொடுத்தாள்.
  • தமது மார்பகங்களை பெரிதாக்குவதற்கு முயன்ற பெண், அறுவை சிகிச்சையின் போது மரணம். 
  • இன்றைய செய்தி, பன்னிரெண்டு வயது பள்ளிமாணவியை ஆசிரியை வேசி (prostitute ) என்று திட்டினார். பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். 

இவையெல்லாம் கட்டுக்கதைகளோ அல்லது நானே எனது மன அரிப்புகளைப் போக்கிக்கொள்வதற்காகவோ எழுதப்பட்டவையல்ல. அனைத்தும் பலரும் கையில் ஏந்தித் திரிகிற பலவிதமான நாளேடுகளில் (தமிழ்,மலாய் ஆங்கிலம்) பதிவாகியிருக்கின்ற திடுக்கிடும் உண்மைச் செய்திகள்.

இப்படிச் செய்திகளில் வருகிற ஆபாசங்களைத் தொகுத்து சமூதாய சீர்திருத்தக் கருத்துகளாக தமது படைப்புகளில் எதாவதொரு பாத்திரங்கள் செய்வதுபோலவும் அல்லது நடக்கின்ற அவலங்களை நேரிடையாக சொல்வதுபோலவும், இடைச்செருகலாக படைப்புகளில் புகுத்துகின்றபோது, அங்கே அப்படைப்பாளியாகப்பட்டவன் பொதுவில் வக்கிரபுத்தி கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான்.

இது நமது நாட்டில் மட்டுமல்ல, உலகமுழுக்க வியாப்பித்திருக்கின்ற நமது இனத்தில் புரையோடிக்கிடக்கின்ற நோய். நல்ல படைப்பாளிகள் உருவாவதற்கு பெரிய முட்டுக்கட்டை இந்த வெட்டியான புரட்சி சிந்தனை. எதாவதொரு வகையின் சமூகக்காவலர்கள் என்கிற பெயரில் திடிரென முளைத்து, படைப்புகளில் இருக்கின்ற ஆழத்தைப் புரிந்துகொள்ள முயலாமல், அதைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள் இத்தகைய வெட்டிப் `புரட்சியாளர்கள்’.

இந்தக் கணினி யுகத்தில் அனைத்தும் விரல்நுணியில் வந்துவிட்ட தெளிவு இல்லாமல், இன்னமும் பழையகால சிந்தனையிலேயே மூழ்கி, கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் எதிர்க்கின்ற கட்டபஞ்சாயத்து ஆசாமிகள் தமிழ் இலக்கிய உலகில் அதிகம். என்ன பாவம் செய்தார்களோ நமது எழுத்தாளர்கள்.!

இன்னமும் இலக்கியமென்றால், சங்க இலக்கியங்களை மனனம் செய்து வைத்துக்கொண்டு நாபிசகாமல் மேடையில் தூயதமிழில் முழங்குவதையும், ஆங்கிலச் சொற்களைத் தமிழ் படுத்தி தமது படைப்புகளில் புகுத்தி, கதைகள் கட்டுரைகள் (அது ஒரு உருப்படாத கருவாக இருப்பினும்..) வடிப்பதையும், தட்டையாக ஒரே பாணியில் உலக ஒழுங்களைச்சொல்லி, தாமே உலக ஒழுக்கத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பவன், என்று சொல்லி முடிவடைகிற   படைப்புகளைத்தான் இலக்கியமென்று  உச்சத்தில் வைத்து, பரிசுகளை வழங்கி போற்றிக்கொண்டிருக்கின்றார்கள். புதியபாணியில் எதையாவது முயலலாம் என்றால், அறவே இலக்கிய வாசிப்பு இல்லாதவர்கள் அங்கே நீதிபதிகளாக அமர்ந்துகொண்டு, எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு, தாம் தேர்ந்தெடுத்த படைப்புகளே சிறப்பானதாகப் பிரகடனப்படுத்தி எல்லா ஏடுகளிலும் விளம்பரம் செய்துவிடுகிறார்கள்.

அப்படி விளம்பரப்படுத்தப்படுகிற படைப்பாளியாகப்பட்டவன், தாம் தான் சிறந்த படைப்பாளி என்கிற வட்டதிற்குள் நுழைந்துகொண்டு, அடுத்துவருகிற சிறந்த வித்தியாசமான படைப்புகளில் குறைகள் இருப்பதாகச் சொல்லி, தமது பாணியில் இக்கதையோ கட்டுரையோ சேரவில்லை என்கிற ஆதங்கத்தை பொதுவில் வைத்து, புதிய பாணி எழுத்துகளை நிராகரிக்கத்துவங்கிவிடுகிறான். தாம் எழுதுகிற பாணியே சிறப்பானதாக அவன் நினைக்கையில், கதையென்றால் இந்தந்த கூறுகளைக்கொண்டவைகளாகத்தான் இருக்கவேண்டுமென்று அவனாகவே சில சட்டத்திட்டங்களை உருவாக்கிக்கொண்டு, படைப்புகள் இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டும், இப்படித்தான் முடிக்கவேண்டுமென்று பாடம் நடத்தத் துவங்கிவிடுகிறான்.

எல்லாக்கதைகளையும் `பாட்டி வடை சுட்டு, காக்கா தூக்கிச்சென்றது. இடையில் அதையும் நரி பிடுங்கிச்சென்றது - இறுதியில் ஒரு நீதி. இன்னமும் இப்படி முழுமையாக முடிவடைகிற கதைகளையே சிறந்த கதைகளாக நினைத்துக்கொண்டிருக்கின்றார்... !?

இவை இன்று நேற்று நடப்பவையல்ல, பல ஆண்டுகளாக மலேசிய இலக்கியச்சூழலில் புறையோடிக்கிடக்கும் ஒருவழிச் சிந்தனைதான் இது. படைப்பாளி எப்படி யோசிக்கின்றான் என்பதைப்பற்றிய அக்கறையெல்லாம் யாருக்கும் கிடையாது. தம்மிடம் குடிகொண்டிருக்கின்ற `ஒழுக்கசீல’ நிலையையும், தமது சிந்தனையையும் அப்படைப்பாளி பிரதிபலிக்கவில்லையென்றால், அவன் நிச்சயம் படைப்பாளியாக இருக்க முடியாது என்பதுதான் இங்கே பல சட்டாம்பிள்ளைகளில் தீர்க்கமான முடிவு.

இந்த அவலம் இன்னமும் மலேசிய இலக்கியச்சூழலில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனை. தமிழ்நாட்டு எழுத்தாளர்.. வேண்டாம் அவர் இப்போது உலக எழுத்தாளர், சாருவின் படைப்பில் காமரசம் சொட்டுகிறதென்று ஒரு பேராசிரியர் மேடையில் முழங்கிய போது நான் அதிர்ந்துபோனேன். சாருவின் எழுத்துகளை முழுமையாக ஆழமாக வாசிக்காத பட்சத்தில், நாலந்தர வாசக எழுத்தாளர்கள் கொண்டிருக்கின்ற கருத்தையே ஒரு பேராசிரியரும் கொண்டிருக்கின்ற போது, எப்படி அவரை இலக்கிய ஜாம்பவான் என்று எற்றுக்கொள்வது?

இவர் போன்ற மெத்தப் படித்தவர்களின் கைகளில்தான் இலக்கியம் இருப்பதான ஓர் நிலை இங்கே உருவாகி விட்டதே, அதை எப்படிக்கலைவது.? வாசிப்பில் அவர்களாகவே ஒரு தேடலை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு புரிகின்ற படைப்புகளை மட்டும் சிறந்த இலக்கியமாகவும், புரியாத சிக்கலான எழுத்துகளை, அவ்வளவாக சிறக்கவில்லை என்றும் சர்வசாதரணமாக சொல்லிச்சென்று விடுகின்றனரே.! என்ன செய்வது? பல்கலைக்கழக பேராசியர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் நம்பி தற்போதைய இலக்கியம் உலகம் நகர்ந்துகொண்டிருக்கின்ற பட்சத்தில் இலக்கியத்திற்கான சட்டதிட்டங்களை உருவாக்குகின்ற பொறுப்பினை ஏற்கின்ற நிலை அவர்களுக்கு ஏற்படுகிற போது, மாணவர்களுக்குப்
 புள்ளிகள் வழங்குகிற  அட்டவணையின்படியே இலக்கிய படைப்புகளையும் ஆராயத்துவங்கிவிடுகின்றனர்.

கடந்த வார சனிக்கிழமை, பெண் எழுத்தாளர்களின் இலக்கியத்தொகுப்பு நூல் ஒன்றின் வெளியீட்டு விழாவில் மதிப்பிற்குரிய இலக்கியவதி முனைவர் கிருஷணன் மணியம்  அவர்கள், `தமிழ்நாட்டு பெண் படைப்பாளிகள் வரம்பு மீறி எழுதுகிறார்கள். தமது அவயங்களை வெளிப்படையாக படைப்புகளின் வழி `இந்தா பார்’ என்று காட்டிக்கொள்கிறார்கள். நம் நாட்டில் அப்படி யாரும் இதுவரையில் எழுதியதில்லை. அது நமது கலாச்சாரமும் அல்ல, நமது பாணியும் அல்ல, நம் சமூதாயம் அதை ஏற்றுக்கொள்ளாது.’ என்று அக்கூட்டத்தில் பேசியிருக்கின்றார்.

நான் கேட்கிறேன் ஐய்யா, நீங்கள் இங்கே குறிப்பிட்ட வரம்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம்தான் என்ன? எந்த தமிழ்நாட்டுப்பெண் எழுத்தாளர் வரம்பு மீறி தமது படைப்புகளைப் படைத்திருக்கின்றார்? அந்த வரம்பு மீறிய படைப்பு என்பது எதுவென்று உதாரணம் காட்ட முடியுமா? எந்த இடத்தில் அந்தப் பெண் படைப்பாளி  வரம்பு மீறினார்? பெண் தமது அவயங்களைச் சொல்வது வரம்பு மீறுதல் ஆகுமா? இலக்கியத்திற்கும் இலக்கியவாதிகளுக்கும் வரம்பு வைப்பதற்கு நீங்கள் யார்? மேலே நான் குறிப்பிட்ட சில உதாரணங்கள் பத்திரிகைகளில் வந்துள்ளதே -அப்படியென்றால் பத்திரிகைகள் வரம்பு மீறுகின்றனவா? அதை ஏன் ஐய்யா நீங்கள் தட்டிக்கேட்கவில்லை?  மலேசிய தமிழ் படைப்பாளிகளிடம் மட்டும் எதற்கு ஓயாமல் இந்த சட்டாம்பிள்ளைத்தனம்?

அதே நிகழ்வில் மலேசிய எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு பெ.இராஜேந்திரன் அவர்கள் பேசுகையில், பெண் படைப்பாளிகளுக்கு மலேசிய எழுத்தாளர் சங்கம் தொடந்து பரிசுகளை வழங்கிவருவது, ஆண் படைப்பாளிகளின் பெருந்தன்மையையே காட்டுகிறதென்கிற மிக கேவலமான கூற்று ஒன்றினை அதுவும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவான பெண்குல மாணிக்கங்களின் முன்னிலையிலேயே சொல்லியிருக்கின்றார். அந்நிகழ்ச்சிக்குச் செல்லாத நான், தங்கை திருமதி யோகி சந்துரு அவர்கள் தமது முகநூலில் பகிர்ந்திருந்த வீடியோ பதிவின் மூலமாக அந்நிகழ்வினை ஓரளவு பார்த்துக்கேட்டு, அதிர்ந்துபோனேன்.  உலகத்தின் எந்த மூளையிலும் பெண் படைப்பாளிகளை இது போல் யாரும் கேவலப்படுத்த முடியாது. பெண்களிடம் படைப்பாற்றலே இல்லை, எதோ பிச்சைப் போடுவதைப்போல் பரிசுகளையும் அங்கீகாரங்களையும் வழங்கிவருவதைப்போல் இருந்த இவரின் பேச்சு நிஜமாலுமே பேரதிர்ச்சி. இந்த மனோபாவ சிந்தனையைக்கொண்டவர்தான் இன்றைய மலேசிய இலக்கிய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.! இவர்கள்தான் சிறந்த படைப்புகளை அடையாளாங்கண்டு இலக்கியத்துறையை வளார்க்க நினைப்பவர்கள் இங்கே.

தவறு எழுத்தாளர் சங்கத்துத்தலைவர் மேல்தான் என்றாலும் அவரிடம் கையேந்தி பிச்சை கேட்கிற  பெண் படப்பாளிகளின் மாதர்குல தலைவிகளை என்னவென்று சொல்வது. ! வாசிப்புத்திறன், எழுத்துத்திறன், சிந்திக்கும்திறன் அற்ற பெண் படைப்பாளிகள் சிலர் சிபாரிசுவேண்டி பரிசுகள் வேண்டி, அங்கீகாரம் வேண்டி, மண்டியிட்டார்களோ என்னவோ தெரியவில்லை.! எதற்கு இந்த விபரீத ஆசையெல்லாம்.!?  அங்கீகாரம்.. எழுத்தாளர் என்கிற அங்கீகார ஆசை. எழுத்தாளர் ஆவது அவ்வளவு எளிதான காரியமா என்ன.!?

இதுபோன்ற மேடைகளில் பரிசுகளைப் பெற்றுவிட்டால், எழுத்தாளர் சங்கத் தலைவர் தங்களை அங்கீகரித்து விட்டால், பெண், ஒரு படைப்பளி என்று தலைநிமிர்ந்து பரிணமிக்கத்துவங்கி விடுவாளோ.! பெண் படைப்பாளி என்று சொல்லிக்கொண்டு ஆண்களின் உதவியை நாடித்தானே பரிசு அங்கீகாரமெல்லாம் தேடுகிறீர்கள்.? பிறகு எதற்கு மலேசிய பெண் படைப்பாளிகளின் எழுத்துகள் என இலக்கியத்தை பால் பிரிவினைக்குள் கொண்டுவந்து கூறுபோடுவானேன்.!

இலக்கியத்தில் பால் பேதம் பார்ப்பதை ஏன் விட்டொழிக்கமாட்டேன் என்கிறார்கள் இந்தப்பெண்கள்?. பெண் படைப்பாளிகள், பெண் படைப்புகள் என்று தேடித்தேடி அறிமுகம் செய்து, அவர்களிடம் படைப்புகளை வாங்கி `மலேசியப்பெண்படைப்பாளிகள்’ என்று முத்திரையினைக் குத்தி, அதற்கு ஒரு விழா எடுத்து, ஐந்தாறு பெண்களைத்திரட்டி நாங்கள் சாதனை படைக்கின்றோமென்று கூவித்திரிகிற போக்கிற்கு என்றுதான் விடிவோ.

இலக்கியம் எல்லா எல்லைகளையும் தாண்டி, தமிழ் இலக்கியம் என்கிற ஒரே குடையின் கீழ்   இணைவதே சிறப்பென்று பல இலக்கியப் படைப்பாளிகள் முழங்கிக்கொண்டிருக்கின்ற வேளையில், இன்னமும் பழைய பஞ்சாங்கம் பாடுகிற பெண்படைப்பாளிகள் மாறுவதாகத் தெரியவில்லை.

பழைய இலக்கியங்கள் பல, எழுதியது ஆணா, பெண்ணா அலியா? என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமலேயே, அந்த எழுத்தின் போதனைகளையும் தமிழின் அழகினையும் கல்விக்கூடங்கள் கற்று ஆராய்ந்து போதித்து வருகின்றார்கள். இங்கே பால் பேதங்களுக்கு அவசியம் ஏற்பட்டதே இல்லை.

எழுதுகிற ஒருவர் ஆணா பெண்ணா என்று உங்களுக்குத்தனிப்பட்ட முறையில் அறிமுகமாகும்போதுதானே, அவர் பெண் படைப்பாளி அல்லது அவர் ஆண் எழுத்தாளர் என்று அறிந்துகொள்ள முடிகிறது.!?  அதுவே தாம் யார் என்று பொதுவில் காட்டிக்கொள்ளாமலேயே பல படைப்புகளை எழுத்திதள்ளிய எத்தனையோ எழுத்தாளர்கள், பெண் பெயரிலேயே அல்லது ஆண் பெயரிலோ எழுதிவருகிறார்களே,  அவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பிர்கள்? எதை வைத்து இது ஆண் எழுத்து அல்லது பெண் தான் எழுதியிருப்பாள் என்கிற முடிவிற்கு வருவீர்கள், மாதர்குல மாணிக்கங்களே?

எழுத்தாளருக்கு எழுத்துதான் அறிமுகம்.  அவன் ஆணா அல்லது பெண்ணா என்பதெல்லாம் தேவையற்ற அலசல். மாறுங்கள் இல்லையேல் மாற்றப்படுவீர்கள்.